Tuesday, November 27, 2007

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!

என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப் பெண்களேன்னு ஒங்களைப் பெருமையால்ல கூப்புடுறேன். சந்தோஷப் படுங்க. அப்படிக் கூப்புட்டு உங்களுக்கு எழுதுனதுதான் இந்தக் கடிதம். ஆகையால அடுத்த அருங்குணமான அச்சத்தோடு இந்தக் கடிதத்தைப் படிங்க.

ஆமா...வீட்டோட மருமகளாப் போகலாமா? அது சரிதானா? மூன்றாவது அருங்குணமான நாணத்தோட அதக் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. வீட்டோட மருமகனாப் போறதுங்குறது ஒவ்வொரு ஆம்பளைக்கும் எவ்வளவு கவுரவக் கொறைச்ச்சலா இருக்கு. அதக் கிண்டல் செஞ்சு எத்தனையெத்தனை நகைச்சுவைகள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளையும் ஒரு பெருமை இருக்கு பாத்தீங்களா! அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை? அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?

இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான். நீங்க ஏங்க ஆம்பளைங்களத் திமிர் பிடிச்சவன்னு சொல்ல மாட்டேங்குறீங்க? மடமைக் குணம் நல்லாவே வேலை செய்யுது போல.

இப்பல்லாம் வீட்டுக்கு வர்ர குலமகள்...அட இப்படியெல்லாம் சொன்னாத்தான ஒங்களுக்குப் பெருமையா இருக்கும். அப்பத்தான கேள்வி கேக்க மாட்டீங்க. வீட்டை விளங்க வைக்க வந்தவள்..குலமகள்...தெய்வம்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு. இதையே வீட்டுக்கு வந்த குலமகன்..விளங்க வைக்க வந்தவன்...தெய்வம்னு சொல்லிப் பாருங்க... ஒரு பய கட்டிக்க வர மாட்டான். அது சரி. அவன் மானஸ்தன். நீங்கள்ளாம் வெறும் நாணஸ்தர்கள்தானே.

வீட்டுக்கு வர்ர மருமகள் வேலைக்கும் போனா இப்பல்லாம் சந்தோஷப் படுறாங்களாம். வீட்டு வேலையும் பாத்து....சம்பாதிச்சும் போட ஒரு இளிச்சவாய் கெடைச்சா சந்தோஷப் படாம யார் இருப்பா? அப்படி இளிச்ச வாய்னு நேரடியாச் சொல்லாமத்தான் மகாலட்சுமின்னு சொல்லீர்ராங்க. நீங்க என்னடான்னா ஒங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் செஞ்சு படையலா பொங்கலும் பஞ்சாமிர்தமும் வெச்சாப்புல குளுந்து போய் சிரிச்சிக்கிட்டே எல்லா வேலையும் பாக்குறீங்க.

குடும்ப விளக்கு நீங்கதானாமே? விளக்குன்னா ஏத்தி வைக்கனும்ல....அதான் ஏத்தி வைக்கிறாங்க. எதை? வீட்டுப் பொறுப்பை. அட பொறுப்பை ஏத்துக்குறதும் செய்றதும் நல்லதுதானே. மாமனார் மாமியார் மனங்கோணாம நடந்துக்கிறனுமாமே குடும்ப விளக்கு. ஒங்க அப்பாம்மா மனங்கோணாம ஒங்க கணவரு நடந்துக்குவாரான்னு கேட்டீங்களா? கணவனோட தம்பி தங்கச்சிங்களைப் பாத்துப் படிக்க வைக்கனுமே....ஒங்க தம்பி தங்கச்சிங்கள ஒங்க வீட்டுக்காரர் பாத்துக்குவாரா?

ஆமா...இன்னோன்னு கேக்கனும்னு நெனச்சேன். எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும். என்னது? இப்பப்ப மாறிக்கிட்டு வருதா? வேலை பாக்குறவங்க வெவ்வேற ஊர்ல நாட்டுல இருக்காங்களா? அப்படியா...ரொம்ப சந்தோசம். அப்படி வெளியூர்லயோ வெளிநாட்டுலயோ வேல பாக்குற ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்க பொட்டி தூக்குறாங்களா? இல்ல வெளிநாட்டுல வேலை பாக்குற பொம்பளைங்களுக்கு ஆம்பிளைங்க பொட்டி தூக்குறாங்களா? அட...என்ன இருந்தாலும் நீங்க புகுந்தவங்கதான. அதுக்காச்சும் பயிர்ப்புன்னு ஒன்னு வேணும்ல.

என்னது? காலம் மாறுமா? கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருதா? ஹி ஹி. முந்தி வீட்டு வேலை மட்டுந்தான். இப்ப வீட்டு வேலை. அலுவலக வேலை ரெண்டும். அதுல கணவனார் வேற ஊர்ல நல்ல வேலை கெடைச்சிப் போகனும்னு வெச்சுக்கோங்க...நீங்க உங்க வேலையத் தியாகம் செஞ்சுக்கிட்டு பின்னாடியே போகனும். தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும். இல்லைன்னா...குடும்பம் என்னத்துக்காகுறது! குடும்பத்திற்காக உழைத்து உழைத்து மெழுகாக உருகும் பெண்மணி அவள் கண்மணீன்னு பட்டம் கெடைக்காதுல்ல.

என்னவோ சொல்வாங்களே...ஆங்....நாற்றாங்கல்ல இருந்து எடுத்து வயல்ல நட்டாத்தான் நெல் செழிக்கும்னு. அது மாதிரி பெண்கள் பிறந்தது ஓரிடம். நெல் போலச் செழிப்பது ஓரிடம்னு பெருமையாச் சொல்வாங்கள்ள. நெல்லுக்கு ஒரே எடத்துல வளர்ர தெறமை இல்லை. வளந்தா ஒழுங்கா நெல்லு குடுக்காது. அது மாதிரித்தான் நீங்கன்னு சொன்னா...அதக் கூடப் பெருமையா ஏத்துக்கிட்டு...அடடா என்ன பெருந்தன்மை..என்ன பெருந்தன்மை... பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஆகையால...பெண்களே வெட்கம் சூடு சொரணை ஆகிய தீய பண்புகளை ஆண்களுக்குக் கொடுத்து விடுத்து...மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க மென்மை என்னும் பெண்மை என்னும் அருங்குணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, November 26, 2007

காதல் குளிர் - 10

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"என்னது ப்ரகாஷாவைக் காணமா? என்ன சொல்ற?" தூக்கக் கலக்கத்திலும் கடுகடுத்தான் சப்யா.

"ஹலோ...என்ன கடுகடுப்பு? காணம்னு சொல்றேன்." பதில் கடுகடுப்பு சித்ராவிடமிருந்து.

"சரி... மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்."

"அதான் இங்க இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அங்கயே இருக்கு. எனக்கென்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு சப்யா?"

சப்யாவையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. "ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேப்போமே"

"ம்ம்ம்ம்... கேக்கலாம். இரு நானே கேக்குறேன்." லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு வந்தாள்.

"என்னது கேக்காம... கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?"

சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு சப்யாவின் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா. கிசுகிசுக்குரலில் சொன்னாள்.

"ப்ரகாஷாவும் உள்ளதான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்."

"ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு?"

"ஐயோ...மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா....தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை."

நறுக்கென்று கொட்டினான். "மண்டு....ஒடனே அதான் நெனப்பா ஒனக்கு....நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா தொணைக்குப் படுத்திருப்பான்."

சப்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள். "ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். ரம்யாவையும் ப்ரகாஷாவை மட்டும் நம்பீருவேனா?"

சித்ராவை அணைத்துக் கொண்டான் சப்யா. நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். "அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்." சித்ராவின் நெற்றியை எச்சில் படுத்தினான். "சரி.. இப்ப என்ன செய்யலாம்?"

"அட...ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ப்ரகாஷாவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்."

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ப்ரகாஷா வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.

"சப்யா, என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?" அவனே சப்யாவைக் கேட்டான்.

"புது பிரஷ்ஷா...வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்." பெருமிதத்தோடு எழுந்தான் சப்யா.

பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் சித்ரா. "அந்த பிரஷ் அன்னைக்கு ஒங்க காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே. புது பிரஷ் வீட்டுல இல்ல." புரிந்து கொண்டு வழிந்தான் சப்யா. "ஆமா ப்ரகாஷா...அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. வா..கடைக்குப் போகலாம்."

சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.

"என்னடி...இப்ப ஒடம்பு எப்படியிருக்கு?"

கேட்ட சித்ராவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ஏய்...நான் சித்ரா. ப்ரகாஷா இல்ல." சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.

"ஆமா....என்னடி இது? நேத்து சாந்தரந்தான் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?"

தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.

"அடிப்பாவி. வெச்சாக் குடுமி...செரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?"

ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. "நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டுத்தான் வெளிய போனான். போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு."

"நடந்ததெல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா?"

"போக மாட்டான்" ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.

"எப்படிச் சொல்ற?"

"தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து சாந்தரம் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ப்ரகாஷா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு."

"என்னது....உன்னோட ப்ரகாஷாவா? ம்ம்ம்ம்...நல்லாரு தாயே." சிரித்துக்கொண்டே ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தொடரும்....

இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை படித்துப் பாராட்டி நிறைகுறைகளை எடுத்துச் சொன்ன நீங்கள் அடுத்த பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பின் குறிப்பு

ரம்யாவின் காதில் ப்ரகாஷா சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.

சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென

- மொழிபெயர்ப்பாளர் (ப்ரகாஷாவின் ரம்யா)

Saturday, November 24, 2007

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 4

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்


ஆம்பல் யார்? ஏன் சுரேஷ்களோடு மட்டும் ஆர்க்குட் நட்பு. அதிலும் ஒவ்வொரு சுரேஷுக்கும் ஒரு ஆம்பல் ஐடி? அதெப்படி ஒரு ஆம்பல் புரொபைலில் மட்டும் மனைவி அஞ்சலியின் புரொபைல்? மைக்ரோசாப்ட் நுழைவுத் தேர்வை விட கடினமான கேள்விகள் சுரேஷின் மூளைக்குள் மணியடித்தன.

விக்கிரமாதித்தன் கதைகள் படித்திருக்கின்றீர்களா? கதைக்குள் கதை. அந்தக் கதைக்குள் கதை என்று போகும். சுரேஷின் மூளைக்குள் திட்டம். திட்டத்துக்குள் திட்டம். அந்தத் திட்டத்துக்குள் திட்டம் என்று வலை விரிந்தது.

முதல் திட்டம் உடனே செயலானது. ஆர்க்குட்டில் சுரேஷ் என்று இன்னொரு புரொபைல் உருவாக்கினான். படம் போடவில்லை. தன்னைப் பற்றிய தகவல்களை மாற்றிக் கொடுத்தான். வலையை விரித்து வைத்துவிட்டு தேனையும் தெளித்து வைத்துவிட்டு வண்ணத்துப்பூச்சிக்குக் காத்திருந்தான்.

வந்தது வண்ணத்துப் பூச்சி. ஆம்பல்தான். ஆனால் புது புரொபைல். அவளுடைய படத்தோடு.

"ஹாய் சுரேஷ். ஒர் ஹாய் சொல்லலாம்னு வந்தேன்." இதுதான் ஸ்கிராப் புக்கில் ஆம்பல் எழுதியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பதில் அனுப்பாமல் மூன்றாம் நாள் இப்படி எழுதினான். "ஹாய்".

பத்தே நிமிடத்தில் மறுமொழி. "ஒரு ஹாய் சொல்லவா ரெண்டு நாள் :)))))))))))))))))))))))))))))))))"

உடனே மறுமொழிந்தான். "இல்ல நீங்க யார்னு தெரியாது. அதான்....யோசிச்சுச் சொன்னேன். :)" ஸ்மைலியைக் கடைசியாகச் சேர்க்க மறக்கவில்லை.

இப்படி அப்பாவி போல நடித்தான். இவன் அப்பாவியாக ஆக அவள் அடிப்பாவியானாள். விரைவிலேயே ஒரு நட்பு உருவாகி விட்டது. அட நட்பு மாதிரி. இவன் நடிக்கிறான் என்று நமக்குத் தெரியுமே. அவள் கதைதான் தெரியாது.

நினைவிருக்கிறதா? பழைய சுரேஷிடம் ஒரு கதை சொன்னாளே.....பணக்கார அப்பா..சித்தி....சித்திக்குத் தம்பி...தம்பிக்கு நாற்பது வயசு....நாற்பது வயசுக்குக் கல்யாணம்...கல்யாணத்திற்கு ஆம்பல்..ஆம்பலுக்குச் சொத்து என்று. அந்தக் கதையை இங்கே சொல்லவில்லை. வேறொரு கதை.

"சுரேஷ், நம்ம பழகி ஒரு வாரம் ஆயிருக்குமா? ஆனா நெருங்கிய நட்பாயிட்டோம். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். எனக்கு வாழப்பிடிக்கலை சுரேஷ். வாழப்பிடிக்கலை. I am a corporate. நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சொத்து. எல்லாமே இருக்கு. ஆனா அதை விட உள்பகை நெறைய இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு நம்மள வேலை வாங்குறதான்னு பெரிய பெருச்சாளிகள் நெனைக்கிறாங்க. ஷேர்களை எல்லாம் பிராடு பண்ணி திருடப் பாக்குறாங்க. அதுவுமில்லாம பேங்க் அக்கவுண்ட் கூட ஹாக் பண்ண முயற்சி செய்றாங்க. என்னோட லாக்கரைக் கூட யாரோ திறக்கு முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு. இப்பல்லாம் சாப்பிடவே பயமா இருக்கு. எதையாவது கலந்திருவாங்களோன்னு. உங்களைத் தனியா பாத்துப் பேசனும். வருவீங்களா? நீங்க நல்லா பழகுறது எனக்குக் கொஞ்ச சந்தோஷமாவது இருக்கு" கொஞ்ச சந்தோஷத்தில் கொஞ்சல் தெரிந்தது.

இங்கே இந்தக் கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க...பழைய புரொபைல் கதையும் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே அந்தக் கதை. இங்கே இந்தக் கதை. மர்மம் தெரியும் வரை அவனும் விடுவதாக இல்லை.

அப்பொழுதுதான் அவனுக்குக் கிடைத்தது வாய்ப்பு. ஆம். இந்தியாவிற்கு வேலை தொடர்பாக ஒரு மாதம் செல்ல. ஆம்பலைச் சந்திப்பதென்றே முடிவு செய்தான். அஞ்சலியையும் சந்திக்கப் போவது அப்பொழுது தெரியாது.

தொடரும்...

அடுத்த பாகத்தை எழுத காதல் இளவரசன் ஜியை அழைக்கிறேன். காதல் இளவரசன் ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.:)

Tuesday, November 20, 2007

பெருமிகு தமிழ்ப் பண்பாட்டின் இன்னொரு முகம்

இந்த வீடியோவைப் பாருங்க. நம்மூரு ஆளுங்கதான். என்ன சொல்றதுன்னே தெரியலை...

அடுத்தவன் சோத்துல திங்க வெக்கமா இல்லை...எப்படிடா காசு குடுன்னு வெக்கமில்லாம கேக்குறீங்க? சீச்சீ மானங்கெட்ட மடையங்களா! வரதட்சண வாங்குன ஒவ்வொரு கணவனும் கண்ண மூடிக்கோங்க. இல்லைன்னா வெக்கமாயிருக்கும்.

இந்தச் சுட்டிக்குப் போங்க வெவரம் புரியும்.

வெறுப்புடன்,
கோ.இராகவன்

Monday, November 19, 2007

காதல் குளிர் - 9

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடியது. என்ன செய்வதென்று யாருக்கும் தோன்றவில்லை. பெராவை வைத்துக் கொண்டும் பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.

அப்பொழுதுதான் ப்ரகாஷாவிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. முந்நூற்று ஐம்பது ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.

விதி...அல்லது கடவுள்...எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் பிரகாஷாவை ஒட்டிக்கொண்டு...சாய்ந்து கொண்டு...கட்டிக்கொண்டு....அட. அதே ரம்யாதான். அப்பொழுது நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.

ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் அடங்காமல் அவன் அணைப்பிலே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால்...இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். சரி. எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பேர் காதல்தானா!

ஆட்டோ ஜக்கடிஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

"ரம்யா இல்லே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். சப்யா பாத்துக்கோ" சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ப்ரகாஷா. அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.

வண்டியில் பிரகாஷாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் சித்ரா கேட்டாள்.

"ஏய்....எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே."

"அத ஆட்டோலயே விட்டுட்டேண்டி."

"ஆட்டோலயா?"

"ஆமா. அத வாங்குனதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை....அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்."

சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் ரம்யா. படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் பதினொன்னரை மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. சப்யா ஹீட்டர்களைத் துவக்கினான்.

ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். "என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?"

"வாந்தி வர்ர மாதிரி இருக்கு." லேசாக உமட்டினாள்

அந்நேரம் பெரா அழத் தொடங்கினான். தூக்கத்திற்குத்தான். ப்ரகாஷாவிடம் சொன்னாள் சித்ரா. "டேய். பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கீட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி." வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே போனான் அவன். பெராவின் அழுகை கூடியது.

சித்ராவை ரம்யா அழைத்தாள். "ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன்.

ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுத்தாள். சித்ராவும் சப்யாவும் பெராவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்கள்.

தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சப்யாவை எழுப்பினாள். "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."

-----------------------------------------------------
பின்குறிப்பு

சித்ரா எப்பொழுதோ மனதில் எழுதி மறந்து போன கவிதை

விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்


தொடரும்

Sunday, November 18, 2007

பாட்டு கண்டுபிடிங்க பாக்கலாம்?

ரெண்டு பாட்டு தர்ரேன். கேளுங்க. ஆனா தெலுங்குல உந்தி. அந்தத் தெலுங்குப் பாட்டுகள் தமிழ்லயும் உந்தி. அது என்னென்ன பாட்டுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம். ஆனா போட்டி அவ்ளோ லேசாவா இருக்கும். 1975லிருந்து 1980க்குள் வந்த பாட்டுகள் ஒங்களுக்குத் தெரியும்னா இந்த ரெண்டு பாட்டடயுமே கண்டுபிடிச்சிரலாம். ஒன்னு பெரிய நடிகரோட படம். இன்னோன்னு பெரிய இயக்குனரோட படம்.

இப்ப மொதப் பாட்டு. இது எல்.ஆர்.ஈஸ்வரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்லயும் பாலு உண்டு. ஆனா ஈஸ்வரி கிடையாது. இன்னொரு பிரபல ஆண் பாடகர். தமிழில் ஒரு போட்டிப் பாட்டு இது.


அடுத்தது இந்தப் பாட்டு. இசையரசியும் பாலுவும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்ல இசையரசி இல்லை. பாலுவின் தனிக்காட்டு ராஜாங்கம். இந்தப் பாட்ட லேசாக் கண்டுபிடிச்சிருவீங்கன்னு நெனைக்கிறேன்.


இங்க குடுத்துருக்குற ரெண்டு பாட்டுமே...தெலுங்குல ஒரே படத்துல வருது. சிம்ஹ பாலுடு அப்படீங்குற படம். என்.டி.ராமாராவ் நடிச்சது.

ரெடி. ஸ்டார்ட்...1...2....3

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 12, 2007

காதல் குளிர் - 8

சென்ற பகுதி இங்கே

ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.

காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.

அவனுடைய கெட்ட நேரம்...சட்டென்று ஒரு மொபெட் குறுக்கே..........அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் அந்த வேகத்தில் கீஈஈஈஈஈச்சென்று கருப்புக்கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத்தூக்கத்தில் இருந்த சப்யா, சித்ரா, ப்ரகாஷாவும் எழுந்து விட்டார்கள்.

ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.

கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகரவிடவில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியேயில்லாமல் கார் மண்ணில் ஒதுங்கியது.

போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.

ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.

அதற்குள் சப்யாவும் சித்ராவும் ஃபெராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறங்கினார்கள்.

ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச்சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.

ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.

"ஒங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?" இந்தியில் கேட்டார் ஒருவர். ப்ரகாஷாதான் இந்தியில் பேசினான். "அது வாடகைக்காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?"

"ஆஸ்பித்திரிக்கு. ஒங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல."

அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார். "அடடா...இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்...எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா" என்று ஒருவர் குரல் குடுக்க..அனைவரும் மண்ணை அள்ளிப் போட்டனர்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ப்ரகாஷா, சப்யாவையும் சித்ராவையும் அழைத்தான். கூட வரச்சொன்னான். ரம்யாவையும் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.

எந்த ஊரென்று தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். பெரா வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.

அங்கிருந்த ஒருவரிடம் ப்ரகாஷா டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, "இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்."

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்...டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம். ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் வரத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?

பின்குறிப்பு

ப்ரகாஷாவின் டையில் இருந்து திருடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட காதல் கவிதை...அதாவது ப்ரேம கவிதே...எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.

வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை


தொடரும்...

Monday, November 05, 2007

காதல் குளிர் - 7

சென்ற பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க முடிந்தது. ஆனால் அழும் அம்மாவை. வேண்டாம் மகனே என்று சொல்லி அம்மா அழுதால்.... நினைப்பதற்கே அவனுக்கு அசிங்கமாக இருந்தது. அந்த அசிங்க நினைப்பே அவன் வாயையும் மூடி வைத்தது.

"என்னடா அமைதியாயிட்ட?" கேட்ட ரம்யாவைப் பாவமாகப் பார்த்தான் ப்ரகாஷா. முகத்தில் குழப்பமும் கவலையும் கூட்டணி அமைத்திருந்தன.

"பாத்தியாடா....அப்படி ஒரு நெலமை வந்தா என்ன முடிவை நீ எடுப்பன்னு உன்னால யோசிச்சுக்கூடப் பாக்க முடியலை. அதுனாலதான் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குற. சப்யா காதலைச் சொன்னதும் சித்ரா ஒத்துக்கிட்டா. ஏன்? சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."

சப்யாவிற்கும் சித்ராவுக்கும் ரம்யா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் ப்ரகாஷா ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

ரம்யா அவனது கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினாள். அவள் தொட்டது கங்கு கன்னத்தில் பட்டது போல இருந்தது அவனுக்கு. படக்கென்று நிமிர்ந்தான். "டேய். நீ நல்லவன். அதுல எந்தச் சந்தேகமும் எனக்கு இல்ல. உன் மேல உண்மையான அன்பு எனக்கும் இருக்கு. ஆனால் காதல் வரனும்னா...உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

"ரம்யா...உனக்கு இப்ப பதில் இல்ல. எனக்குத் தெரியலை. ஆனா நன் ப்ரீத்தி நிஜா. அது நிஜா ஆகுத்தே. இனி இது பகே பேசலை. பேச வேண்டாம்."

தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ. ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?

சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர். ரம்யா தாஜ்மகால் பொம்மைகள் வாங்க விரும்பினாள். அழகாக பளிங்குக் கற்களில் செய்திருந்த தாஜ்மகால்கள் ஈர்த்தன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டுமே. ப்ரகாஷாதான் பேரம் பேசினான். யோசித்து யோசித்து ஒன்று..இரண்டு...மூன்று..நான்கு என்று வாங்கினாள். அட்டைப்பெட்டியில் காகிதச்சுருகளை வைத்துக் கட்டிக் குடுத்தார்கள். வாங்கிக் கொண்டு டாக்சியை நோக்கி நடந்தார்கள்.

கே.ஆர்.எஸ் சிரித்துக் கொண்டே வரவேற்றான். "ஆயியே சாப். முடிஞ்சதா? அடுத்து எங்க போகனும்?" மணி நான்குதான் ஆகியிருந்தது. வேறெங்கும் போவார்கள் என்று நினைத்துக் கேட்டான்.

அன்றைய திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தான் சப்யா. அதற்கு முன் அலைந்த களைப்பில் முதலில் டீ குடித்தார்கள்.

காரில் ஏறப் போகையில் ரம்யா உள்ளே உட்கார கதவைத் திறந்தான் ப்ரகாஷா. "நான் முன்னாடி உக்கார்ரேன் ப்ரகாஷா. வரும் போது பேசீட்டே வந்ததால ஊரெல்லாம் பாக்கலை. இப்பப் பாத்தாத்தானே உண்டு. இதுக்காகன்னு எப்ப வரப் போறோம்." சொல்லிக் கொண்டே முன்னால் ஏறினாள் ரம்யா. ஏறியவளைப் பார்த்துச் சிரித்தான் கே.ஆர்.எஸ். அவனைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தாள்.

சப்யாவும் சித்ராவும் பின்னாடி ப்ரகாஷாவோடு உட்கார்ந்து கொண்டார்கள். ரம்யா ப்ரகாஷா விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வேறொரு நல்ல சமயமாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வர விரும்பினார்கள்.

தன்னோடு உட்காராமல் முன்னாடி சென்று ரம்யா உட்கார்ந்தது ப்ரகாஷாவுக்கு வலித்தது. என்னென்ன அவன் மனதில் ஓடின என்பதே அவனுக்குப் புரியாத அளவுக்கு வேகமான சிந்தனைகள். வீடு வர இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகும். அதுவரை இப்படித்தான் சிந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறானா? அதற்கு அப்புறமும் சிந்திக்காமலா இருக்கப் போகிறான்?

ஆனால் ஒன்று. நடந்த நிகழ்ச்சி அவனுக்குள் எதையோ மாற்றி விட்டது. அது என்னவென்று அவனுக்கும் புரியவில்லை. பழைய ப்ரகாஷா இல்லை அவன். காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ரம்யாவின் மனதிற்குள் வேறு விதமான சிந்தனைகள். சற்று அதிகமாகவே பேசி விட்டோமோ என்றும் கூட யோசித்தாள். ஆனாலும் அவளது கேள்விக்கு விடை கிடைக்காதது ஏமாற்றமாகவே இருந்தது. "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை என்ற அப்பட்டமான உண்மை கசந்தது.

இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

தொடரும்