Monday, September 24, 2007

காதல் குளிர் - 1

"ஏய் ப்ரகாஷா......லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் சொல்லலாம்னு வந்தேன்."

ப்ரகாஷா என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

"ஹே! ரம்யா....வா வா உக்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு ப்ரயாணம்?"

அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்....வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.

ப்ரகாஷாவும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் குளிரில் வேறு மாதிரி. ப்ரகாஷா கன்னட மகா. ரம்யா தமிழச்சி.


வேலையில் சேரும் பொழுதுதான் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்....ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.

ரம்யா ப்ரகாஷாவின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன திடீர்னு டெல்லி?" திரும்பவும் ரம்யாவைக் கேட்டான்.

"அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே....அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இண்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?" கேட்டு விட்டு ப்ராகாஷின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"என்னது?" அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. இண்டர்வியூ ஞாயித்துக்கெழமை. ஆனா எனக்கு வியாழக் கெழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?" திரும்பவும் ப்ரகாஷாவின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"ஏன்?" மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சப்யாவும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இண்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு ஞாயித்துக்கெழம இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?" முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான். அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். "நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)"

"ஏய்...என்ன பாத்துக்கிட்டேயிருக்க.... பொறாமையா இருக்கா? நான் போய் சப்யாவையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி....எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்....." சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா.


யாரிந்த சப்யாவும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ப்ரகாஷாவோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். ச்ப்யாவின் முழுப்பெயர் சப்யாசாச்சி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள். இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.

எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி..ப்ரகாஷாவும் சரி...நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.

தொடரும்...

இந்தக் கதையில் இதே நடிகர்களை நினைவில் வைத்துப் படியுங்கள். இந்தக் கதைக்காகப் படங்களைத் தேடுக் கொடுக்கும் தேவ், ராம், சிவிஆருக்கு என்னுடைய நன்றிகள். கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதினால் அந்தப் படத்தினை எனக்கு நீங்களும் அனுப்பலாம்.

Sunday, September 09, 2007

பி.மு பி.பி

என்னனு பாக்குறீங்களா? இதுவும் கி.மு கி.பி மாதிரிதான். ஆனா ஈழம் தொடர்பானது. பிராபகரனுக்கு முன்பு. பிரபாகரனுக்குப் பின்பு.

அதுக்குள்ள பிமு பிபி பத்திப் பேச வேண்டிய நேரம் வந்திருச்சான்னு கேக்காதீங்க. ஆனா யோசிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. என்ன யோசனைன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒன்னு. இந்தக் கட்டுரை ஒரு வெளியாள் சிந்தனைங்குற மனசுல வெச்சுக்கிட்டுப் படிங்க. எந்த வண்ணமும் பூசாம இப்பிடிப்பட்ட சமயத்துல என்ன நடக்கும்னு யோசிங்க. அதப் பின்னூட்டமா போடுங்க. நாகரீகமான பின்னூட்டமா இருக்கனும். தனிநபர்த் தாக்குதலாவோ இனத்தாக்குதலாவோ இல்லாம இருந்தா நல்லாருக்கும்னு கேட்டுக்கிறேன்.

இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்னு எல்லாருக்கும் தெரியும். குறைந்த பட்சம் அப்படித்தான்னு நெறையப் பேரு நெனச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு நெலமை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நாளைக்கு? பிரபாகரன் ரொம்ப நாளைக்கு இருப்பாருன்னு வெச்சுக்குவமே. அதுக்குள்ள ஈழப் பிரச்சனை தீந்திருச்சுன்னா நல்லது. இல்லைன்னா?

ஏன் சொல்றேன்னா....அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா.....ஆளு மாறிக்கிட்டே இருந்தாலும் யாராவது தலைவர்னு இருந்துக்கிட்டேயிருக்காங்க. அதுக்குக் காரணம் அரசியல்+ஜனநாயகம். நல்லது செய்றாங்களோ கெட்டது செய்றாங்களோ.....பண்டாரநாயக, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கே...இப்ப மகிந்த ராஜபக்ஷன்னு ஒருத்தர் இருந்துக்கிட்டேயிருக்காங்க. இப்ப இருக்குற மகிந்த போனாலும் அடுத்து ஒரு மந்திரிகா வர்ரதுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் நெறைய இருக்கு. ஆனா....இந்தப் பக்கம்?

ஏற்கனவே கருணாஸ் அது இதுன்னு பிரிஞ்சி போயி பிரச்சனைகள் வேற இருக்குது. இந்த நிலையில அடுத்த கட்டத் தலைவரா யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? அதுக்கான வழிமுறைகள் என்ன? அதுபத்தி எதுவுமே வெளிப்படையாத் தெரியலையே. இப்படி இருக்குறதால சாதக பாதக அம்சங்கள் என்னென்ன? சாதகத்துலயும் பாதகத்துலயும் எது நெறைய?

ஆக பிபின்னு யோசிச்சா....இந்தப் பக்கம் என்ன நடக்கலாம்னு தெளிவாத் தெரியாத நெலை. கூட்டணிப் பூசலாகலாம். நாலஞ்சுக் குழுவாகலாம். இப்ப எதுக்குற மாதிரி எதுக்க முடியாமப் போகலாம். அதுவே சிங்களப் பேரினவாதத்தைத் நிலைநிறுத்த அடுத்தடுத்த சிங்களத்தலைவர்கள் வந்துக்கிட்டேயிருப்பாங்க. ஆனா இங்க? தெளிவில்லாத நிலைதான் தோணுது. இதைத்தான் சிங்கள அரசாங்கமும் இனவாதிகளும் எதிர்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதுக்காக முயற்சிகளும் செய்வாங்க. அது எவ்ளோ பலன் தருமோ தெரியாது. ஆனா எத்தனை நாளைக்கு? கண்டிப்பா என்னால பிபிய தமிழர்களுக்கு நல்ல விதமா இருக்கும்னு நெனைக்க முடியலை. ஈழத்தமிழர்கள் நல்லாயிருக்கனும்னு நெனைக்கிறது உண்டுதான். ஆனா இந்த விஷயத்துல?

மக்களே ஒங்க கருத்துகளைச் சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, September 08, 2007

தமிழ் ஊடு கேளுங்க....

ஊடு கட்டி அடிக்கப் போறதா பயந்துக்கிறாதீங்க....ஊடுன்னா தெரியுந்தானே...மந்திரம் மாந்திரீகம் மாதிரி. அப்படித் தமிழ்ல ஊடு கட்டி அடிச்சா எப்படியிருக்கும்?

சுசீலா ராமன்னு ஒரு தமிழ்ப் பொண்ணுதான்...இப்பிடி ஊடு கட்டி அடிச்சது. அதுவும் பாரீஸ்ல. கூட யார்னு நெனைக்கிறீங்க? கோவை கமலா. சேது படத்துல "கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா"ன்னு பாடுனாங்களே. அவங்கதான். கே.பி.சுந்தராம்பாள் மாதிரிப் பாடுவாங்களே...அவங்கதான். அவங்களும் சுசீலா ராமனும் ஊடு கட்டி அடிச்சதுதான் இந்தத் தமிழ் ஊடு. பாரீஸ் மக்களுக்கு இப்பிடி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

உள்ளபடிக்கு இத முருகனருள்ளதான் போட்டிருக்கனும். ஆனாலும் மகரந்தத்துல போட்டாச்சு. மக்களே. கேட்டு ரசிச்சி...உங்க கருத்துகளை அள்ளி விடுங்க பாக்கலாம். வேலவா.............!!!!!!!!!!!!!!



அன்புடன்,
கோ.இராகவன்