Friday, June 29, 2007

மேக்கப் மகிமை

மேக்கப் போடுறதுக்கு முன்னாடி



மேக்கப் போட்டதுக்குப் பின்னாடி



என்னையக் கேட்டா கமலஹாசன் செஞ்சதெல்லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமில்லைன்னுதான் தோணுது. உள்குத்து ஒன்னுமில்லை ரஜினி ரசிகர்களே. மனசறிஞ்சு சொல்றேன்.

இன்னைக்கு எங்க அலுவலகத்துல இந்த மின்னஞ்சல்தான் பெரிய பேச்சு.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, June 23, 2007

மாமாமாமாமாமாமாமா இப்பிடி இருக்கனும்!

மாமாமாமாமாமாமாமான்னா புரியலையா...ஒரு மா ரெண்டு மா....அட எட்டுமா...அட எட்டுமா இப்பிடி இருக்கனும்! அதாங்க தலைப்பு. நம்மளப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனுமாமே. அமெரிக்காவுல கொத்தனார் கூப்டாக....கொல்கத்தாவுல நிர்மலா கூப்டாக....எங்கெரகம்னு அலப்பர செய்யாம ஒத்துக்கிட்டேன். :) இல்லைன்னா கூப்புடாம விட்டுருவாகய்யா! :))))) சரி. ஒவ்வொன்னாப் பாப்பமா?

1. பொறப்பு: இப்பல்லாம் பிள்ளைக ஆசுப்பித்திரியிலதான் பொறக்காங்க. எங்க சமயத்துல அட...80க்கு முன்னாடி இருந்துச்சே அந்த எழுவதுலதாங்க. பொறந்தது ஆசுப்பித்திரியா வீடாங்குற கேள்வி ரொம்ப சகஜம். சிலரு வீடும்பாங்க. சிலரு டாக்டரு ஆசுப்பித்திரிலம்மாக. நான் ரெண்டையுஞ் சொல்வேன். ஆமா. பொறந்தது டாக்டரம்மா வீட்டுல்ல. தூத்துக்குடியில கோயில்பிள்ளை டாக்டரம்மான்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க வீட்டுலதான் நான் பொறந்தேன். ஆனா பாருங்க...அந்த டாக்டரம்மாக்கு ஒரு கை கெடையாது. அதுனால என்ன...திறமைய ஊனமா நிப்பாட்ட முடியும்! இதுல எனக்குப் பெருமைதாங்க.

2. தடுப்பூசி: கொழந்த பொறந்தப்ப...தடுப்பூசி போடுவாங்கள்ள...அது எனக்கும் போட்டாங்க. வழக்கமா எல்லாரும் நொட்டாங்கைல போட்டா...எனக்கு வலக்கைல போட்டாங்க. ஒடனே அழுதிருக்கேன். எங்க பாட்டி...வழக்கமா ஊசி போட்டா தேச்சு விடுவாகள்ளன்னு தேச்சு விட்டுட்டாங்க. அந்த ரெக்கு புண்ணாயிருச்சு. அதுனால பாருங்க. இன்னமும் தழும்பு பெருசா இருக்கும். இங்க நெதர்லாந்து வந்தப்புறம்....காசநோய் பரிசோதனை செய்வாங்க. கண்டிப்பா செய்யனும். அரசாங்க உத்தரவு. அப்ப தடுப்பூசி போட்ட தழும்பக் காட்டுன்னாக. நான் வலது கையக் காட்டுனேன். நொட்டாங்கைல இல்லையேன்னு கேட்டாங்க. அவங்களுக்கும் இந்தக் கதையச் சொல்ல வேண்டியதாப் போச்சு. எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.

3. நெத்திக்கண்ணும் மச்சமும்: என்னடா நெத்திக்கண்ணுன்னு கேக்கீங்களா? ஆமாங்க. நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம். பொறந்ததுல இருந்தே இருக்குது. மொகத்தப் பாத்தா தெளிவாத் தெரியும். இருக்கங்குடி...மாசார்பட்டீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? தெரியலையா? அது தூத்துடி மாவட்டமா...விருதுநகர் மாவட்டமான்னு சரியாத் தெரியலை. இருக்கங்குடி விருதுநகர் மாவட்டந்தான். ஆனா மாசார்பட்டி தெரியலை. அங்க பஸ்சுல எறங்கி உள்ள ரெண்டு மூனு கிலோமீட்டரு நடந்தா வரும் கைலாசரம்..அட கைலாசபுரம். சின்னப் பட்டிக்காடு. எங்க இருந்த காடுகரைகளைக் கொஞ்ச வருசம் என்னோட தாத்தா பாட்டி பாத்துக்கிட்டிருந்தாக. அப்ப ஒரு வருசம் அந்தூருத் திருவிழா. எங்கக் குடும்பமே போயிருந்தோம். அப்ப திண்ணைல உக்காந்திருந்தப்பா வந்தாரு ஒரு கிளி சோசியரு. என்னவோ என்னையப் பிடிச்சு இழுத்து உக்கார வெச்சிட்டாக. அவரு என்ன சொன்னாரு நெனவில்லை. ஆனா என்னோட வலது தோள்பட்டைல மச்சமிருக்கனும்னு சொன்னாரு. என்னை வளத்தது எங்க அத்தை. அவங்க இல்லைன்னு சாதிக்காங்க. சொசியக்காரரும் சாதிக்காரு. சிட்டைல எழுதீருக்குன்னு காட்டுறாரு. சட்டையக் கழத்துன்னு பாத்தா உண்மையிலேயே மச்சம். சோசியத்த நான் நம்ப மாட்டேன். ஆனா இந்த நிகழ்ச்சி அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு.

4. இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் தமிழ்ப் பாட்டுக ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடிச்ச பாடகி இசையரசி பி.சுசீலான்னு எல்லாருக்கும் தெரியும். அதான் வலைப்பூவே இருக்கே. அது மாதிரி பிடிச்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கும் ஒரு வலைப்பூ தொடங்கனும். மொதல்ல இசையரசி வலைப்பூவை நிலைநிறுத்திக்கிருவோம். இசைஞானியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இசைப்புயலும்தான். ஒருமுறை படிக்கையில் சென்னை வந்திருந்தேன். விடுமுறைக்காலம். ஏதோ ஒரு படம்....ஹா...ராஜபார்ட் ரங்கதுரை. அந்தப் படம் வீட்டுல எல்லாரும் பாத்துக்கிட்டிருந்தோம். அதுல ஒரு பாட்டு. மதனமாளிகைன்னு தொடங்கும். அதுல பாருங்க. நாயகரு மேடையில பாடுவாரு. அதக் கேட்டுக் கதாநாயகி அப்படியே கனவுல போயிரனும். டி.எம்.எஸ் மொதல்ல மதன மாளிகையில் மந்திரமாலைகளால்...அப்படீன்னு நாடக பாணியில் இழுவையாப் பாடுவாரு....ஒடனே..அன்பே அன்பே அன்பேன்னு நாயகி கற்பனைக்குப் போயிருவாங்க. அது இசையரசி குரல்ல. அந்தப் பாட்டு என்னவோ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மெல்லிசை மன்னரைப் பாத்தாத்தான் ஆச்சுன்னு அடம் பிடிச்சு...டைரக்டரியில அவரு நம்பரத் தேடிப் பிடிச்சு...வீட்டுல இருந்த பொடிசுகளாப் போய் சாந்தோம்ல இருக்குற அவரு வீட்டுல பாத்துட்டு வந்தோம். அப்ப ஏது கேமரா கீமரால்லாம். அவர் கிட்ட என்ன கேக்குறதுன்னு கூடத் தெரியலை. பாக்கனும்னு வந்தோம்னு சொல்லீட்டு...ரெண்டு வார்த்த பேசீட்டு வந்துட்டோம். ம்ம்ம்...இப்பன்னா கூட ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்.

5. மொதமொதல் மெயில் ஐடி ஹாட்மெயில்தான். அதுதான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருந்தேன். திடீர்னு பாத்தா யாஹூவுக்கு மாறியிருந்தேன். அதுல ரெண்டு மூனு ஐடி வேற. நாளாக ஆக...ஹாட்மெயில் ஐடி காணாமப் போயிருச்சு. அக்கவுண்ட் தானா மூடிக்கிச்சு. அந்த ஐடி இப்ப இல்லவேயில்லை. திடீர்னு பாருங்க நண்பி ஒருத்தி..டேய்...ஒனக்கு இன்விடேஷன் அனுப்புறேன்னு சொன்னா...ஏய். ஒனக்குதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே..திரும்பவும் எதுக்கு இன்விடேஷன்னு கேட்டேன். "டேய்"னு சாமியாடீட்டு..புதுசா ஜிமெயில்னு ஒன்னு வந்திருக்கு. ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னா. என்னடா கருமம்...ஏற்கனவே ஒன்னு இருக்கே...இன்னொரு ஐடியான்னு நெனச்சேன். சரி இருக்கட்டும்னு தொறந்து வெச்சா...இப்ப ஜிமெயில்தான். யாஹூ மறந்தே போச்சு.....ம்ம்ம்...இப்போதைக்கு ஜிமெயில். நாளைக்கு என்ன மெயிலோ!

6. புத்தகங்கள் நெறைய படிப்பேன். தமிழும் ஆங்கிலமும். வேற மொழிகள் எழுதப் படிக்கத் தெரியாதே. ஹாரி பாட்டர் கதை ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி லார்டு ஆஃப் தி ரிங்ஸ். நாலஞ்சு வாட்டி புத்தகத்தப் படிச்சாச்சு. இன்னமும் ஒவ்வொரு வாட்டி படிக்கும் போதும்..ஒவ்வொன்னு புதுசாயிருக்குது. படத்தை ஏழெட்டு தடவைக்கு மேலப் பாத்தாச்சு. இன்னமும் ஆவல் தீரலை. காவியம்யா காவியம். அதுல பேசுறதுக்கு ஒரு புது மொழியையே உருவாக்கீருக்காருய்யா ஜே.ஆர்.ஆர்.டோல்கியன். என்ன எழுத்து! என்ன கற்பனை! அடடா!

7. சொரியாசிஸ் (psoriasis) அப்படீங்குற நோயைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த நோய் எனக்கு உண்டு.

8. விமானப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலில் நான் விமான நிலையத்திற்குள் நுழைந்தது பெங்களூரில்தான். வேலைக்கு வந்த பிறகு டெல்லிக்கு ஒரு பயிற்சிக்காக சென்ற பொழுதுதான் முதல் விமானப் பயணம். பிறகு பலமுறை விமானம் ஏறியாச்சு. ஆனாலும் ரொம்பவும் ரசிச்ச விமானப் பயணம் பிரசில்ஸ்ல இருந்து ரோம் போனதுதான். ஸ்விஸ் வழியா போச்சு. வேணுக்குமுன்னே வண்டிய ஆல்ப்ஸ் மலை மேல கூடி ஓட்டுனாங்க. ஜன்னல் வழியா பாக்கனுமே...அடடடா! அட்டடடடா! ஸ்விஸ் போகனுமப்போய். அனேகமா ஆகஸ்ட் மாசம். முருகன் சொன்னாப் போகலாம். எல்லாம் அவன் விருப்பம். அதே மாதிரி கிரீஸ், இத்தாலி, எகிப்து, ஆஸ்த்திரியா, பின்லாந்து, நார்வே...அட பல ஊருக இருக்குங்க. அங்கெல்லாம் போகனும்.

எட்டு போட்டாச்சுங்க. அடுத்து எட்டு பேரைக் கூப்புடுனமாமே.

1. சிவிஆர்
2. பக்காத்தமிழன் கோப்ஸ்
3. மை ஃபிரண்டு
4. யோகன் ஐயா
5. ஜோசப் சார்
6. குமரன்
7. காபி
8. மலேசிய மாரியாத்தா


அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 19, 2007

எம்.ஆர்.ராதா பாடிய தேவாரம்

எம்.ஆர்.ராதா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அருமையான குணச்சித்திர நடிகர். நகைச்சுவை..எதிர்மறை...அட...என்ன படங்க அது...பார் மகளே பார்...அதுல நட்டுவாங்கனாரா வருவாரே....சூப்பருங்க அது.

அவரு வயசானப்புறம் முருகன் படத்துல நடிச்சாலும் அருமையான நடிப்பு. அப்ப வந்த ஒரு படந்தான் பஞ்சபூதம். அஞ்சு வில்லன்கள்ள அவரும் ஒருத்தர்.

அந்தப் படத்துல இவரு பாடுற தேவராந்தான் சூப்பர் காமெடி. இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ்னாலும்...எம்.ஆர்.ராதா எம்.ஆர்.ராதாதான்...பரமேஷ்வரா...பரமேஷ்வரா.... :)

நீங்களும் கேட்டு ரசிங்க. சிரிங்க. :-)))))



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 18, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

முன்கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.

இப்பொழுது பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்த பொன்னுச்சாமியைப் பார்ப்போமா?

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6

தேவின் ஞாபகம் - 7

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

"ஐயா பெரியவரே! ஏதாச்சும் ஜோடா குடிக்கிறீகளா? ரொம்ப நேரமா காத்திருக்காப்புல இருக்கு. வேண்டப்பட்டவக யாரும் வர்ராங்களா?"

பொன்னுச்சாமி நிமிர்ந்து பார்த்தார். "இல்லப்பா" என்று வாயைத் திறந்து சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி மறுத்தார்.

"சரிய்யா...வெயில்ல ஏன் கருவாடாக் காயுறீக? இங்க பெஞ்சுல வந்து உக்காருங்க."

இந்த முறை சோமு சொன்னதைப் பொன்னுச்சாமி கேட்டுக் கொண்டார். மெள்ளப் போய் பெஞ்சில் உக்கார்ந்தார். வெற்றிலைக் குதப்பலைக் கம்போரமாகத் துப்பி விட்டு, "தம்பி ஒரு ஜோடா குடு" என்று கேட்டார்.

தான் கேட்கும் போது மறுத்து விட்டு இப்பொழுது பெரியவர் கேட்கிறாரே என்று சோமு வியந்தாலும் பேசாமல் சோடாவை உடைத்துக் கொடுத்தான். முதலில் சோடாவால் வாயைக் கொப்புளித்து விட்டு...மிச்சத்தை மடமடவெனக் குடித்தார்.

"எம்புட்டு?" என்று ஒரு ரூவாய்க் காசை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு "சரியாப் போச்சு" என்று சொல்லி பெட்டியில் போட்டுக் கொண்டான் சோமு.

"ரொம்ப தேரமா இருக்கீக. யாரு வர்ரது? சொந்தக்காரவுகளா?" கேட்கத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டான் சோமு.

"ஆமாந்தம்பி. நம்ம மருமகப் பிள்ளை வர்ராரு. வெளிநாட்டுல இருந்து.வர்ராரு. அதான்." அவரது குரலில் மகிழ்ச்சியை விட எதிர்பார்ப்புதான் இருந்தது.

"அப்ப ஒங்க பொண்ணு வரலையா?"

ஒன்றும் பேசாமல் வெறும் முகத்தோடு சோமுவைப் பார்த்தார். திரும்பவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டார். அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் வந்து போயின. பலர் இறங்கிப் போயினர். ஏறிப் போயினர். ஆனால் பொன்னுச்சாமி எதிர்பார்த்தவர் வரவில்லை. வந்தாலும் அவரால் கண்டுபிடிக்க முடியாதுதான். கடித உறைக்குள் இருந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தார். காவேரிதான்....குழந்தையாகக் குமரியாகப் பார்த்த மகளை பெண்ணாகப் பார்த்து பூரித்தார். கையில் குழந்தை. அடுத்து நிற்பதுதான் மாப்பிள்ளை. நல்ல வாட்டசாட்டம். ஆனா பார்த்த ஞாபகம் இல்லையே. திரும்பவும் சாலையைப் பார்த்தார்.

அவருடைய காத்திருப்பு வீணாகவில்லை. அவர் எதிர்பார்த்த மருமகன் பேருந்தில் வரவில்லை. காரில் வந்தான். அடையாளம் கண்டுபிடிக்கப் பெரியவர் சிரமப்படவில்லை. அவர் உட்கார்ந்திருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு கட்சிக் கொடி. அந்தக் கொடிக்கம்பத்துக்குப் பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர்தான் படத்தில் இருந்தவர் என்று உடனே தெரிந்து கொண்டார்.

உடனே படக்கென்று எழுந்தார். லேசான தள்ளமாட்டம். வந்தவரை நோக்கி நடந்தார். ஒருவரையொருவர் எதிர்பார்த்தவர்கள்தானே. வந்தவர் பெரியவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். "மாமா. நாந்தான் வினோத். உங்க மருமகன். நல்லாயிருக்கீங்களா?"

என்னவோ தெரியவில்லை. பெரியவர் குழைந்து போயிருந்தார். வினோத்தை உற்று உற்றுப் பார்த்தார். குபுக்கென்று ஏதோ ஒன்று பொங்கிப் பெருகி கண்ணில் வழிந்தது. ஓ! அன்பு. காவேரி படிக்கப் போன பிறகு தனிமையிலேயே கழிந்தது. ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. காய்ச்சல் வந்து காய்ந்த பொழுதுகளில் கூட கக்கூசுக்குத் தனியாகப் போகும் அவல நிலை. அப்படியெல்லாம் பட்டவருக்குத் திடீரென்று உறவுகள் வருகின்றன.

"நல்லா இருக்கேய்யா! நீங்க சவுரியந்தான? காவேரியும் பிள்ளையும் வரலையா?"

பொன்னுச்சாமியின் கைகளைப் பற்றினான் வினோத். "வந்திருக்காங்க மாமா. அவங்க கிட்ட கூட்டீட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன். வாங்க. கார்ல ஏறுங்க."

கடவுள் மட்டுமல்ல தயக்கம் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அந்தத் தயக்கம் பொன்னுச்சாமியை கொஞ்சம் தடுமாற வைத்தது. இருந்தாலும் கையைப் பிடித்து வினோத் அழைக்கும் பொழுது...அவரால் மறுக்க முடியவில்லை. மகளையும் பேத்தியையும் பார்க்கக் காரில் ஏறினார்.

தொடரும்....

=====================================================================

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக ஒன்பதாவது பகுதியை எழுத சிறில் அலெக்சை அழைக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 07, 2007

ஜெயலலிதாவை இன்னமுமா கைது செய்யலை?

சமீபத்துல எல்லாரும் இதத்தானய்யா பேசுறாங்க. அந்தம்மா தப்பு செஞ்சாங்கன்னு இவரு சொல்றாரு. தப்புன்னா தேர்தல்ல நிக்க முடியாமப் போறது மட்டுந்தான் தண்டனையா? சட்டத்தை ஏமாத்துனதுக்கு வழக்குப் போட மாட்டாங்களா? சிபிஐ விசாரணைதான் இப்ப வெக்குறாங்களே. அத வெச்சுட்டா போதுமாமே. சட்டம் தன் கடமையைச் செய்யுமே. அதுக்கப்புறம் யாரும் அதைப் பத்திப் பேச வேண்டாம். ஏன்னா சிபிஐ விசாரணை வெச்சா...என்ன நடக்குதுன்னு பொருத்திருந்துதான் பாக்கனும்.

ஜெயலலிதா கொடநாட்டுல மட்டுமா அரமனை வெச்சிருக்கப் போறாரு. உண்மையிலே தூண்டித் துருவுனா எல்லா ஊர்லயும் இருக்கும். ஆனாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவரைக் கைது செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஏன்னா...அதை வெச்சு எப்படி அனுதாப அலை உருவாக்கனும்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்னு கருணாநிதிக்கும் தெரியும். அதுனால அந்த முடிவை எடுப்பாங்கன்னு நெனைக்கலை. எடுத்தாலும் தப்பில்லைங்குறதுதான் என்னோட கருத்து.

தேர்தல்ல நிக்க விடாமச் செய்றது ஒரு விதத்துல ஜெக்கு பயங்கர அடிதான். ஆனா அதுதான் அவருக்கு ஒரு விதத்துல வசதியும் கூட. ஏற்கனவே ஒரு நிழல் முதல்வர வெச்சி அவங்க அரசாட்சி செஞ்சாச்சு. எதுன்னாலும் பழியை அவர் மேல போட்டுட்டு இவங்க நிம்மதியா இருக்கலாம். இவங்கள என்னதான் செய்றது? என்ன தண்டனை குடுத்தாலும் அத அவங்களுக்கு வாகா வளைச்சுக்கிறாங்களே!

ஆனா இன்னொரு பிரச்சனை இருக்கு. ஏற்கனவே இந்தம்மாவுக்கு எப்ப எதச் சொல்லனும்னு தெரியாது. செய்யனும்னும் தெரியாது. தப்பித்தவறி இந்தக் கைது அவங்களுக்கு ஒரு அனுதாப அலைய உருவாக்கீச்சிருச்சுன்னு வெச்சுக்குங்க...அடுத்து அவங்கதான் முதல்வர். நம்ம மக்களைப் பத்தி நமக்கு நல்லாத் தெரியுமே. உடனே சும்மாயிருப்பாங்களா? ஏற்கனவே சபதம் செஞ்சிருக்காங்களே...ஒடனே பழிக்குப் பழி. அதை எப்படிப் பயன்படுத்திக்கனும்னு கருணாநிதிக்கும் தெரியும். இப்பிடி எல்லாமே சங்கிலித் தொடராவே போய்க்கிட்டிருக்குமோ!

அடப்போங்கப்பா....அரசியல்வாதிகளே இப்படித்தான். என்னவோ பொலம்பனும்னு தோணிச்சு. எங்க போய்ப் பொலம்புறது. உங்க கிட்டதான வந்து உரிமையோட பொலம்ப முடியும்!