Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Sunday, March 15, 2009

பிரியாணி - 4

பிரியாணி கிண்டி ரொம்ப நாளாச்சுன்னு. இப்பிடியே விட்டா பிரியாணி அண்டாவுல இறால் வளப்புல எறங்கனுமோன்னு தோணி... ஒரு பதிவு போட்டாச்சு.

சமீப காலத்துல ரொம்பப் பாதிச்சது ஈழம் தொடர்பான தமிழக இந்திய அரசியல்வாதிகளின் கேடுகெட்டத்தனமான அணுகுமுறைதான். மனசெரிஞ்சி சொல்றேன். ஒங்களுக்குக் கொஞ்சமாச்சும் தமிழ்மான உணர்வுன்னு ஒன்னு இருந்தா... காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீங்க. அதுக்காக விஜயகாந்துக்குப் போடுங்கன்னு சொல்லலை. ஒங்கொங்க தொகுதியில இந்தக் கட்சிகளைத் தவிர்த்த வேட்பாளர்களில் பொருத்தமா யாருக்காச்சும் போடுங்க. போதுங்க. எத்தனை நாளைக்குத்தான் கட்சியப் பாத்து..சாதியப் பாத்து... மதத்தப் பாத்து ஓட்டுப் போடுவீங்க? கட்சி, மத, சாதீயப் பாசங்கள்ள மாட்டிக்கிட்டீங்கன்னா... அதுலருந்து வெளிய வரவே முடியாது.

ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை வெச்சுப் பாக்குறப்போ... எந்தவித"மான" மாற்றமும் அதிகுமல... சேச்சே அதிமுகல தெரியலை. காங்கிரஸ் கட்சி தன்னோட முடிவுல ஒரே உறுதியா இருக்குறாப்புல இருக்கு. ஈழத்துல எத்தாலி போனாலும் இத்தாலியம்மன் விடாப்பிடியா இருக்காங்க போல. நம்ம மட்டும் ஏன் விட்டுக் குடுக்கனும்? தமிழகத்துல காங்கிரஸ் கட்சி ஒரு இடத்துல கூட வெற்றி பெறக்கூடாது இந்த முறை.

திமுக.... அடப்பாவிகளா.... மத்தவங்க மேலையெல்லாம் எப்பவும் இருக்குற கோவந்தான். ஒங்க மேல இருக்குறது அறச்சீற்றம். ஏற்கனவே ஒங்க குடும்ப அரசியலக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கோம். நாளிதழ், தொலைக்காட்சி, சிமிண்ட்டு, திரைப்படம்... இப்பிடி தமிழ்நாட்டுத் தொழில்வளத்தையே குடும்பத்துக்குள்ள முடக்குனது மட்டுமில்லாம..... ஈழம் தொடர்பா அந்தக் காங்கிரசோட சேந்துக்கிட்டு ஆடுற ஆட்டம் இருக்கே......ஒங்களுக்கு போன தேர்தல்லயே பாதிப் பாடம் நடத்தியாச்சு. மீதிப் பாடம் இந்தத் தேர்தல்லதான்.

சரி... பிரியாணில அரசியல் மிளகாய் கூடிருச்சி. அடுத்து ஒரு சந்தேகத்துக்கு வருவோம். ஒரு வலைப்பூவில் இடும் பின்னூட்டத்தைப் பிரசுரம் செய்யும் உரிமை அந்த வலைப்பூவின் சொந்தக்காரருக்கு உண்டு. ஒத்துக்கிறேன். ஆனால் பின்னூட்டத்தை எழுதியவர்.. தன்னுடைய கருத்தைச் சொல்ல... மறுக்கப்பட்ட அந்தப் பின்னூட்டத்தைத் தன்னுடைய வலைப்பூவுல இடலாம்ல. அதத்தான் இங்க பண்றேன்.

உடன்பிறப்பின் இந்தப் பதிவில் நானிட்ட முதற்பின்னூட்டம்.

அரசியல்கட்சீன்னு வந்துட்டாலே... இப்படிப்பட்டக் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. இவங்கள நம்பி கொஞ்சம் ஏழ பாழைங்க கட போட்டுக் காசு பாத்தத நெனச்சிச் சந்தோஷம். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுன்னு நெனைக்கிறேன்.

ஆனா அதிமுகவுக்குன்னு விசேசக் காட்சிகள் இருக்கு. குறிப்பா அந்த மொதப் படம். கால்ல விழுந்து கும்புடுறது. தன்னுடைய காலில் விழுகின்றவனைப் புன்னகையோடு ரசிக்கும் பாங்கு....அவரது மனநிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.

அது கிடக்க. மானமுள்ளவன் அதிமுகவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததுதானே. ஈழத்துக்கான உண்ணாவிரதம் ஒரு நாடகம். ஜெயலலிதா தான் ஒரு நடிகை என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார். ஆனால் இந்த முறை மிக அசிங்கமாக.

இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அதே பதிவில் வேறொரு கருத்துக்குப் பதிலளித்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நானிட்ட பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. அவருடைய உரிமையை மதிக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய உரிமையை இங்கே நிலைநாட்டிக்கொள்கிறேன். ஆம். அந்தப் பின்னூட்டம் இங்கே.

// உடன்பிறப்பு said...

//// நந்தா said...
பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கெல்லாம் அதிமுக அப்படி பண்ணலையா, அம்மா பண்ணா மட்டும் சும்மா இருக்கீங்க கலைஞர்னா மட்டும் கேள்வி கேக்குறீங்க//

நன்றி நந்தா, இப்போ நீங்களே பாருங்க, நம்ம பத்ரி வந்து அ.தி.மு.க. உண்ணாவிரதத்துல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குமா, மற்ற கட்சிகள் உண்ணாவிரதத்துல நடக்காதா என்று கேட்கிறார். இது மாதிரி கேட்கிறவர்கள் எல்லா கட்சி சார்பாகவும் இருக்கிறார்கள் //

நண்பரே... இத்தகைய வாதங்கள்தான்... அதிமுக எதிர்ப்பு என்ற எங்களைப் போன்றவர்கள் நிலையைத் திமுக ஆதரவு என்று மாற்றாமல் இருக்கிறது.

அதிமுகவோடு ஒப்பிட்டு...அவங்க பண்றாங்க...நாங்களும் பண்றோம்னு நெனைக்கிறதுதான்...ரெண்டு கட்சிகளிடமிருந்தும் எங்களைச் சம தூரத்தில் தள்ளி வைக்கிறது.

இப்படிச் சொல்வதனால் அதிமுகவை நான் ஆதரிக்கிறேன் என்பது பொருளாகாது. முன்பு திமுகவிற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் இன்றைய திமுகவின் மேல் மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. இதை இந்தப் பதிவில் சொன்னது உங்கள் மனதைப் புண்படுத்துமானால் மன்னிக்க. ஏனென்றால் இது கட்சி சார்பற்ற ஒரு சராசரித் தமிழனின் வயிற்றெரிச்சல்.


சரிங்க... ரொம்ப அரசியல் பேசீட்டோம். ஏதாச்சும் சினிமா பத்திப் பேசலாமா? சினிமான்னாலே ஒரு இதுதான். அதுலயும் சிலுக்கு சுமிதான்னா கேக்கவே வேண்டாம். தமிழகத்துல அப்படியொரு கனவுக்கன்னி இனிமே அவ்வளவு லேசுல வர முடியாது. மலையாளத்துல அவங்க நடிச்ச பாட்டு ஒன்னு. இளையராஜா இசையில். நல்ல பாட்டு. ஆகையால எல்லாருமே பாத்து ரசிக்கலாம்.




அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Sunday, September 09, 2007

பி.மு பி.பி

என்னனு பாக்குறீங்களா? இதுவும் கி.மு கி.பி மாதிரிதான். ஆனா ஈழம் தொடர்பானது. பிராபகரனுக்கு முன்பு. பிரபாகரனுக்குப் பின்பு.

அதுக்குள்ள பிமு பிபி பத்திப் பேச வேண்டிய நேரம் வந்திருச்சான்னு கேக்காதீங்க. ஆனா யோசிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. என்ன யோசனைன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒன்னு. இந்தக் கட்டுரை ஒரு வெளியாள் சிந்தனைங்குற மனசுல வெச்சுக்கிட்டுப் படிங்க. எந்த வண்ணமும் பூசாம இப்பிடிப்பட்ட சமயத்துல என்ன நடக்கும்னு யோசிங்க. அதப் பின்னூட்டமா போடுங்க. நாகரீகமான பின்னூட்டமா இருக்கனும். தனிநபர்த் தாக்குதலாவோ இனத்தாக்குதலாவோ இல்லாம இருந்தா நல்லாருக்கும்னு கேட்டுக்கிறேன்.

இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்னு எல்லாருக்கும் தெரியும். குறைந்த பட்சம் அப்படித்தான்னு நெறையப் பேரு நெனச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு நெலமை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நாளைக்கு? பிரபாகரன் ரொம்ப நாளைக்கு இருப்பாருன்னு வெச்சுக்குவமே. அதுக்குள்ள ஈழப் பிரச்சனை தீந்திருச்சுன்னா நல்லது. இல்லைன்னா?

ஏன் சொல்றேன்னா....அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா.....ஆளு மாறிக்கிட்டே இருந்தாலும் யாராவது தலைவர்னு இருந்துக்கிட்டேயிருக்காங்க. அதுக்குக் காரணம் அரசியல்+ஜனநாயகம். நல்லது செய்றாங்களோ கெட்டது செய்றாங்களோ.....பண்டாரநாயக, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கே...இப்ப மகிந்த ராஜபக்ஷன்னு ஒருத்தர் இருந்துக்கிட்டேயிருக்காங்க. இப்ப இருக்குற மகிந்த போனாலும் அடுத்து ஒரு மந்திரிகா வர்ரதுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் நெறைய இருக்கு. ஆனா....இந்தப் பக்கம்?

ஏற்கனவே கருணாஸ் அது இதுன்னு பிரிஞ்சி போயி பிரச்சனைகள் வேற இருக்குது. இந்த நிலையில அடுத்த கட்டத் தலைவரா யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? அதுக்கான வழிமுறைகள் என்ன? அதுபத்தி எதுவுமே வெளிப்படையாத் தெரியலையே. இப்படி இருக்குறதால சாதக பாதக அம்சங்கள் என்னென்ன? சாதகத்துலயும் பாதகத்துலயும் எது நெறைய?

ஆக பிபின்னு யோசிச்சா....இந்தப் பக்கம் என்ன நடக்கலாம்னு தெளிவாத் தெரியாத நெலை. கூட்டணிப் பூசலாகலாம். நாலஞ்சுக் குழுவாகலாம். இப்ப எதுக்குற மாதிரி எதுக்க முடியாமப் போகலாம். அதுவே சிங்களப் பேரினவாதத்தைத் நிலைநிறுத்த அடுத்தடுத்த சிங்களத்தலைவர்கள் வந்துக்கிட்டேயிருப்பாங்க. ஆனா இங்க? தெளிவில்லாத நிலைதான் தோணுது. இதைத்தான் சிங்கள அரசாங்கமும் இனவாதிகளும் எதிர்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதுக்காக முயற்சிகளும் செய்வாங்க. அது எவ்ளோ பலன் தருமோ தெரியாது. ஆனா எத்தனை நாளைக்கு? கண்டிப்பா என்னால பிபிய தமிழர்களுக்கு நல்ல விதமா இருக்கும்னு நெனைக்க முடியலை. ஈழத்தமிழர்கள் நல்லாயிருக்கனும்னு நெனைக்கிறது உண்டுதான். ஆனா இந்த விஷயத்துல?

மக்களே ஒங்க கருத்துகளைச் சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்