கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.
ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். அதே நேரத்தில்......
பாகம் - 3
ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.
ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.
அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.
ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.
சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!
குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.
அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.
பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண். அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.
"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."
தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."
தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"
"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"
தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.
என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.
தொடரும்
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்