தேர்தல் முடிஞ்சிருச்சி. முடிவுகளும் தெரிஞ்சிரிச்சி. இப்ப என்ன பண்றது? இந்த முடிவுகள்ள இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னு அலசிப் பாக்க வேண்டியதுதானே.
மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.
தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.
இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.
மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.
சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.
இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.
பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.
அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.
இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.
மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!
மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.
ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.
கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.
மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்