சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஆம்பல் யார்? ஏன் சுரேஷ்களோடு மட்டும் ஆர்க்குட் நட்பு. அதிலும் ஒவ்வொரு சுரேஷுக்கும் ஒரு ஆம்பல் ஐடி? அதெப்படி ஒரு ஆம்பல் புரொபைலில் மட்டும் மனைவி அஞ்சலியின் புரொபைல்? மைக்ரோசாப்ட் நுழைவுத் தேர்வை விட கடினமான கேள்விகள் சுரேஷின் மூளைக்குள் மணியடித்தன.
விக்கிரமாதித்தன் கதைகள் படித்திருக்கின்றீர்களா? கதைக்குள் கதை. அந்தக் கதைக்குள் கதை என்று போகும். சுரேஷின் மூளைக்குள் திட்டம். திட்டத்துக்குள் திட்டம். அந்தத் திட்டத்துக்குள் திட்டம் என்று வலை விரிந்தது.
முதல் திட்டம் உடனே செயலானது. ஆர்க்குட்டில் சுரேஷ் என்று இன்னொரு புரொபைல் உருவாக்கினான். படம் போடவில்லை. தன்னைப் பற்றிய தகவல்களை மாற்றிக் கொடுத்தான். வலையை விரித்து வைத்துவிட்டு தேனையும் தெளித்து வைத்துவிட்டு வண்ணத்துப்பூச்சிக்குக் காத்திருந்தான்.
வந்தது வண்ணத்துப் பூச்சி. ஆம்பல்தான். ஆனால் புது புரொபைல். அவளுடைய படத்தோடு.
"ஹாய் சுரேஷ். ஒர் ஹாய் சொல்லலாம்னு வந்தேன்." இதுதான் ஸ்கிராப் புக்கில் ஆம்பல் எழுதியிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பதில் அனுப்பாமல் மூன்றாம் நாள் இப்படி எழுதினான். "ஹாய்".
பத்தே நிமிடத்தில் மறுமொழி. "ஒரு ஹாய் சொல்லவா ரெண்டு நாள் :)))))))))))))))))))))))))))))))))"
உடனே மறுமொழிந்தான். "இல்ல நீங்க யார்னு தெரியாது. அதான்....யோசிச்சுச் சொன்னேன். :)" ஸ்மைலியைக் கடைசியாகச் சேர்க்க மறக்கவில்லை.
இப்படி அப்பாவி போல நடித்தான். இவன் அப்பாவியாக ஆக அவள் அடிப்பாவியானாள். விரைவிலேயே ஒரு நட்பு உருவாகி விட்டது. அட நட்பு மாதிரி. இவன் நடிக்கிறான் என்று நமக்குத் தெரியுமே. அவள் கதைதான் தெரியாது.
நினைவிருக்கிறதா? பழைய சுரேஷிடம் ஒரு கதை சொன்னாளே.....பணக்கார அப்பா..சித்தி....சித்திக்குத் தம்பி...தம்பிக்கு நாற்பது வயசு....நாற்பது வயசுக்குக் கல்யாணம்...கல்யாணத்திற்கு ஆம்பல்..ஆம்பலுக்குச் சொத்து என்று. அந்தக் கதையை இங்கே சொல்லவில்லை. வேறொரு கதை.
"சுரேஷ், நம்ம பழகி ஒரு வாரம் ஆயிருக்குமா? ஆனா நெருங்கிய நட்பாயிட்டோம். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். எனக்கு வாழப்பிடிக்கலை சுரேஷ். வாழப்பிடிக்கலை. I am a corporate. நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சொத்து. எல்லாமே இருக்கு. ஆனா அதை விட உள்பகை நெறைய இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு நம்மள வேலை வாங்குறதான்னு பெரிய பெருச்சாளிகள் நெனைக்கிறாங்க. ஷேர்களை எல்லாம் பிராடு பண்ணி திருடப் பாக்குறாங்க. அதுவுமில்லாம பேங்க் அக்கவுண்ட் கூட ஹாக் பண்ண முயற்சி செய்றாங்க. என்னோட லாக்கரைக் கூட யாரோ திறக்கு முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு. இப்பல்லாம் சாப்பிடவே பயமா இருக்கு. எதையாவது கலந்திருவாங்களோன்னு. உங்களைத் தனியா பாத்துப் பேசனும். வருவீங்களா? நீங்க நல்லா பழகுறது எனக்குக் கொஞ்ச சந்தோஷமாவது இருக்கு" கொஞ்ச சந்தோஷத்தில் கொஞ்சல் தெரிந்தது.
இங்கே இந்தக் கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க...பழைய புரொபைல் கதையும் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே அந்தக் கதை. இங்கே இந்தக் கதை. மர்மம் தெரியும் வரை அவனும் விடுவதாக இல்லை.
அப்பொழுதுதான் அவனுக்குக் கிடைத்தது வாய்ப்பு. ஆம். இந்தியாவிற்கு வேலை தொடர்பாக ஒரு மாதம் செல்ல. ஆம்பலைச் சந்திப்பதென்றே முடிவு செய்தான். அஞ்சலியையும் சந்திக்கப் போவது அப்பொழுது தெரியாது.
தொடரும்...
அடுத்த பாகத்தை எழுத காதல் இளவரசன் ஜியை அழைக்கிறேன். காதல் இளவரசன் ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.:)
Showing posts with label சங்கிலித் தொடர். Show all posts
Showing posts with label சங்கிலித் தொடர். Show all posts
Saturday, November 24, 2007
Subscribe to:
Posts (Atom)
