Wednesday, June 22, 2005

முருங்கைக் கீர சமாச்சாரம்

முருங்கக் கீர சாமாச்சாரம் பெரிய சமாச்சாரம். பல கலியாணங்களுக்குக் காரணமான சாமச்சாரம்.

கதைக்கு வருவம். பாரியும் பாரி மகள்களும் ஔவையாரு மேல எம்புட்டு பாசமா இருந்தாகன்னு தெரியுமுல்ல. ஔவையாரு ஊரூரா கோயிலு கோயிலா சுத்துற கெழவி. அப்படி சுத்திகிட்டு இருக்கைல, பாரி எறந்து போனான். இந்தப் பிள்ளைக நடுத்தெருவுக்கு வந்திருச்சி. பாவம். ஊருல இருக்க முடியாம காட்டுக்கு வந்துட்டாக. அங்க இருந்த ஒரு பழைய குடிசைல ஒண்டிக்கிட்டு கெடச்சத பொங்கிட்டும் தின்னுகிட்டும் இருந்தாக. இருந்தது மூணு சீல. கட்டுறது ரெண்டு பேரு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டாங்க.

இந்த வெவரம் தெரியாத ஔவையாரு அந்தக் காட்டுப் பக்கமா வந்தாரு. மழ வேற வந்திருச்சி. இந்தம்மா என்ன தேருலயா ஊரு சுத்துது. நடந்துதான போகனும். மழைக்கு ஒதுங்கிக்கிற எடமில்லாம தவிச்சது. அப்பத்தாங் கண்ணுல பட்டது குடிச. உள்ள பாத்தா இந்தப் பிள்ளைக. ஔவையாரப் பாத்ததும் ரெண்டு பிள்ளைகளூக்கும் கண்ணுல தண்ணியா ஊத்துது. நடந்ததெல்லாங் கேட்டு இந்தக் கெழவி ரொம்பவும் தவங்கிப் போச்சி. அப்புறமா ஔவையாருக்கு இருந்த ஒரு மாத்துச் சீலயக் குடுத்தாக. அதியமானு கொடுத்த நெல்லிக்காயி இன்னமு யாராரோ கொடுத்த என்னென்னமோ சாமனமெல்லாம் இந்தப் பிள்ளைக குடுத்த பழய சீலைக்கு ஈடாகாதுன்னு ஒரு பாட்டு பாடிச்சி. அப்புறமேட்டு பசிச்சது. அரிசியில்ல. கம்பில்ல. கேப்பயில்ல. குருதேலியில்ல. காட்டுல அந்தமானிக்கு முருங்கமரங்க நெறயா இருந்திச்சி. போயி எலய பிடிங்கிட்டு வந்து நல்லா ஆஞ்சி வெஞ்சனமா வெச்சிக் குடுத்தாக. ஔவையாரும் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு பாட்டு சொல்லுச்சாம்.

வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் சொரிந்த கையார்

வெய்யதாய் - நல்லா கொதிக்கக் கொதிக்கவுமில்லாம ஆறிப்போயிமில்லாம வெதுவெதுன்னு

நறுவிதாய் - நல்லாக் கமகமன்னு இருந்துச்சாம்

வேண்டளவுந் தின்பதாய் - வேணுங்கறம்புட்டு திங்கலாமுல. இன்னமும் வேணுமுன்ன மரத்துல பறிச்சிக்கிறது

நெய்தான் அளாவி - நல்ல நல்லெண்ணெய விட்டு

நிறம் பசந்த - பச்சப் பசேலுன்னு இருக்குற கீரய

பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் - தின்னா வயித்தக் கெடுக்காத நல்லா சத்துள்ள சாப்பாடுன்னு சொல்லி அமுதத்த கொடுத்தாகளே

கடகம் சொரிந்த கையார் - கையில வளவி மாட்டீருக்குற இந்த பிள்ளைக.

அப்புறமா தின்ன கீரைக்கு நன்றி செய்யுறதாச் சொல்லி அந்தப் பிள்ளைகளுக்குக் கொல்லி மல அரசங் கூட கலியாணம் முடிச்சி வெச்சிச்சி ஔவையாரு கெழவி.

இப்பப் புரிஞ்சதா முருங்கைக் கீர சமாச்சாரம்.

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

said...

கலக்குங்க ராகவன்., பாரி மகளிர் மேல் அவ்வையாரின் பாசமும் போற்றத் தக்கது.

said...

முருங்கைக்கா சமாச்சாரம்னு உற்சாகத்தோட உள்ளே வந்தா இலக்கியச் சுவையை தந்து திக்குமுக்காட வச்சுட்டீரே!கலக்குங்க