Monday, April 21, 2008

தங்க மரம் - 10

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்

பாகம் - 10

கஜன் ஆலோரின் அரச ஆனை. அறிவிலும் செயலிலும் மற்ற ஆனைகளையெல்லாம் கட்டிக்காக்கும் சிறந்த ஆனை. ஆகையால்தான் அதை பூமிக்கு அனுப்ப முடிவெடுத்தாள் லிக்திமா. மாயப்பெட்டியிலும் மாயக்கோலிலும் இதுவரை நடந்தவைகளை ஒலியொளிப்படமாகப் பதிவு செய்து, கஜனுக்கு உதவுமாறு வேண்டுகோள் வைத்தாள். அந்த வேண்டுகோள் வைத்த கடைசிப் பகுதியைத்தான் கதிரவனும் சித்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதையைப் படிக்கின்ற அனைவருக்கும் வரும் ஐயம் இவர்கள் இருவருக்கும் வந்தது. இவையெப்படி அவர்கள் தந்தையார்களிடம் கிடைத்தனவென்று! தந்தையோ ஆனைப்பிரியர் என்று தெரியும். அதனால் எப்படியோ கஜன் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நினைத்தார்களே தவிர..அவர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

ஆனால் ஒன்று. அவர்களுக்குக் கடமை புரிந்து போனது. முத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆலோருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழம்பித்தான் போனார்கள்.

திடீரென்று சடசடவென்று பேரோசை எழுந்தது. என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன்னரே ஏதோவொன்று மரத்தில் விழுந்து...கிளைகளையெல்லாம் ஒடித்துக் கொண்டு பொத்தடீர் என்று மண்ணில் விழுந்தது. பாஆஆஆஆஆம் என்ற பிளிறல் வேறு கேட்டது. ஆம் பிடிமாதான் அங்கு வந்து விழுந்திருந்தாள். ( பூமியின் சுற்றுவட்டத்திற்குள் நுழைந்ததும் தனிமாவும் பிடிமாவும் கீழே விழுந்ததை நினைவில் கொள்க)

ஆலமரத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தார்கள். ஒலியொளிக்காட்சியும் கீழே விழுந்து லிக்திமா வேண்டுகோள் விடுக்கும் காட்சி அதில் தெரிந்தது.
பிடிமாவின் இறக்கையைக் கண்டதும் அது ஆலோரின் ஆனையாகத்தான் இருக்க வேண்டும் என்று நண்பர்களுக்குப் புரிந்தது. ஒருவேளை கஜனாகவே இருக்குமோ என்று நினைத்தார்கள். ஆனால் விழுந்த ஆனை மிகவும் இளமையாக இருப்பதால் குழம்பினார்கள்.

தட்டுத்தடுமாறிக் கிடந்த பிடிமாவைக் கதிரவனும் சித்திரையும் எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால் பிடிமாவே இறக்கைகளை விரித்து எழுந்து விட்டது. அடி சறுக்கிய ஆனை எழாது என்ற தமிழ்ப் பழமொழியைப் பிடிமா பொய்யாக்கி விட்டதே என்று இருவருக்கும் திகைப்பு. எழுந்ததும் நன்றி சொல்ல முனைந்த பிடிமாவின் கண்களில் முதலில் பட்டது வட்டவடிவமான திரையில் தெரிந்த லிக்திமாதான். பிடிமாவின் மகிழ்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆமாம். தனிமாவைக் காணவில்லை. தனிமா இல்லாத தனிமை பிடிமாவைக் கலவரப்படுத்தியது.

நிலமையை ஓரளவு புரிந்து கொண்டார்கள் நண்பர்கள் இருவரும். ஆகையால் பிடிமாவைச் சமாதானப் படுத்த முனைந்தார்கள். அதே நேரத்தில் தனிமா வேறொரு இடத்தில் வேறொரு சந்திப்பில் இருந்தாள். ஆம். ஒரு பூகனுடன்.

காற்று மண்டலத்தில் சர்ரென்று இழுக்கப்பட்ட தனிமா எங்கு விழுகிறோம் என்று தெரியாமலே ஒரு குளத்தில் விழுந்தாள். விழுந்தவள் எந்தத் தரையையும் தட்டாமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் போய்க்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரம் கழித்து அடித்தரையைத் தட்டினாள். அந்த இடத்தில் சின்னச்சின்ன மலைகள் இருந்தன. மலை என்பதை விட பெரிய பெரிய மேடுகள் என்று சொல்லலாம்.

என்ன செய்வது என்று எழுந்து நின்ற தனிமாவிற்கு அந்த மேட்டில் இருந்த ஒரு பொந்து தெரிந்தது. சற்றுக் குனிந்து நிமிர்ந்து பொந்துக்குள் நுழைந்தவளுக்கு பெரும் வியப்பு. பொந்துக்கு வெளியிலோ நிறைய நீர். பொந்துக்கு உள்ளேயோ ஒரு சொட்டு நீர் இல்லை. அழகிய சிறிய அரண்மனை போல இருந்தது. உள்ளே பிடிமா இருக்கிறாளா என்றுதான் முதலில் பார்க்கத் தோன்றியது. ஆனால் பிடிமாவோ கண்ணில் படவில்லை. வேறு யாரும் இருப்பது போலக்கூடத் தெரியவில்லை. இந்த இடத்தைப் பற்றி எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பொந்து அரண்மனைக்குள் நுழைந்தாள். ஓரிடத்தில் நிறைய நாற்காலிகள் கற்களில் செதுக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பார்த்தால் பொழுது போக்கும் இடம் போல இருந்தது. ஆனால் போக்கத்தான் யாரும் இல்லை. சரியென்று களைப்பினால் அங்கிருந்த நாற்காலியொன்றில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே கண்கள் செருகின.

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்" என்ற ஓசையைக் கேட்டுப் படக்கென்று விழித்தவள் கண்முன்னே நின்று கொண்டிருந்தது ஒரு பூகன். கையில் பளபளப்பான வேலைப்பாடமைந்த தங்கக்கத்தியை வைத்து தனிமாவைக் குறி பார்த்துக்கொண்டிருந்தது.

ஏதோ சொல்வதற்காக தனிமா வாயைத் திறந்தாள். அதற்குள் அந்த பூகன் அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளி கத்தியை அவள் கழுத்துக்குக் குறி வைத்தது. தனிமா சுதாரித்துக் கொண்டாள். மனதினாலேயே அந்த பூகனைக் கீழே பிடித்துத் தள்ளினாள். துள்ளிப் போய் தொலைவில் விழுந்தது அந்தப் பூகன். படக்கென்று கத்தியை அவள் மேல் வீசி விட்டு..தானும் பாய்ந்தது. ஆனால் தனிமா மனதினாலேயே அந்தக் கத்தியைப் பாதி வழியில் நிறுத்தினாள். பாய்ந்த பூகனையும் வழியிலேயே நிப்பாட்டினாள். தப்பிக்க முடியாத பூகன் அந்தரத்தில் தத்தளித்தது. அந்தரத்தில் நின்று கொண்டிருந்த தங்கக் கத்தியை தன்னிடம் வரவழைத்தாள் தனிமா. அதைப் பார்த்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக





அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Sunday, April 13, 2008

தங்க மரம் - 9

நண்பர்களே இந்தியப் பயணம் மற்றும் பல காரணங்களால் இந்தத் தொடர் சற்றுத் தடைபட்டுப் போனது. இனிமேல் தொடர்ந்து ஓடும். :) சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 9

ஆலோரின் அரண்மனையில் அவசரக்கூட்டம். ஆலோரின் அரசி, லிக்திமா, விண்டா மற்றும் மெரிமா ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர். அனைவருக்கும் நிலமையின் தீவிரம் புரிந்திருந்ததால் ஒருவித அமைதியில் இருந்தனர். அரசிதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். தேவதைகள் அமைதியாக இருக்குமானால் மக்களைக் காப்பாற்ற அரசியே பேச்சைத் தொடங்கினாள்.

"ஆலோரின் தேவதைகளே... ஆதிதான் ஆலோரைப் படைத்த தெய்வம் என்று அனைவரும் அறிவோம். அப்படியிருந்தும் தேவதைகளாகிய உங்களை வணங்கி வாழ்ந்து வந்தோம். இன்று உங்களுக்குள்ளேயே பிரச்சனை. ஒன்று முத்தைக் காப்பாற்ற முடியாமல் மூன்று தேவதைகள் இருந்தும் தொலைத்தது. இரண்டாவது நிலமகனாகிய சாண்டாவிற்கு மாற்றாக யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்பது."

குறுகுறுத்து லிக்திமா அமைதியாக இருக்கையில் பொங்கினாள் மெரிமா. "அரசி. இந்த நாற்காலியில் வெறும் அறுபது ஆண்டுகள் இருந்து விட்டு அனைத்தும் அறிந்தவர் போல் பேச வேண்டாம். தேவதைகளானாலும் ஆலோரின் மூத்த மக்கள் நாங்கள். எங்களில் மிகப் பெரியவர் சாண்டா. அவருடைய வலையில் வீழ்ந்த காரணத்தினால் எங்களை அவமதித்துப் பேச வேண்டாம். சாண்டாவைப் போல நாங்களும் விலகிப் போனால் ஆலோர் என்னாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடமையையும் பொறுப்பையும் அறிந்தே இங்கு இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்."

பேச்சு வேறுவிதமாகப் போவதைக் கண்டு அதைத் தடுக்க விரும்பினாள் லிக்திமா. "மெரிமா.. அமைதி கொள். நீயின்றி அமையாது உலகு. உனது சினம் அழிவையே உண்டாக்கும். அது நன்றன்று." அரசியை நோக்கிச் சொன்னாள். "அரசி. பொறுமை. இங்கு அனைவருமே ஆலோரின் நலம் விரும்புகின்றவர்களே. நமக்குள்ளே பிளவு உண்டாக வேண்டிய நேரமல்ல இது. எதிர் வரும் சோதனை தரப்போகும் வேதனையிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனையை யோசிப்போம். என்னிடம் ஒரு வழி இருக்கிறது. அனைவரும் சற்றுக் கவனமாகக் கேளுங்கள்."

அனைவரிடம் ஒரு பரபரப்பும் அதை மீறிய ஆர்வமும் எழுந்தது. ஆற்றலரசியின் திட்டம் என்னவென்று ஊன்றிக் கேட்டார்கள்.

"முத்தைக் கண்டுபிடிப்பது அவசியமே என்றாலும் முதலில் ஆலோரின் பொறுப்பு பெரியது. மண்மகன் என்று சாண்டாவிற்கு மட்டுமே பெயர். ஆனால் இப்பொழுது அது தனிமாவிற்கும் பொருந்தும். உண்மையிலேயே மண்ணின் மகள் அவள். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பு அவளது பிஞ்சுத் தோள்களில். அதை அவள் செய்ய வேண்டியதற்கான ஆற்றலை என்னிடமிருந்தே பெறுவாள். அத்தோடு மெரிமாவும் விண்டாவும் சிறுது ஆற்றலை வழங்கினால் அனைத்தும் நலமாகவே நடக்கும்.

இரண்டாவது பிரச்சனை முத்து. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கொண்டு சென்றது சாண்டா. சாண்டாவை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. அரசி என்ற முறையில் நீயோ அல்லது கடவுள் என்ற வகையில் ஆதியோதான் குற்றத்திற்குத் தண்டனை வழங்க முடியும். முத்தைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மட்டுமே நாம் இப்பொழுது பார்க்க முடியும். அதற்கு முதலில் முத்து எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும்."

இரண்டு கைகளையும் பாத்திரம் ஏந்துவது போலப் பிடித்தாள் லிக்திமா. உள்ளங்கையில் ஒளிப்பந்து ஒன்று தோன்றியது. மெல்லிய வெள்ளொளியாக இருந்தது அடர்ந்து பொன்னொளியானது. அது சுழன்று சுழன்று ஒரு பாத்திரமாகி ஒளி வீசியது. லிக்திமா கையை எடுத்த பிறகும் அந்தப் பொற்பாத்திரம் அந்தரத்தில் சுழன்று கொண்டேயிருந்தது."

லிக்திமா மெரிமாவைப் பார்த்துச் சொன்னாள். "நீர்மகளே.... இளநீரை அதில் நிரப்பு."

மெரியா தனது இரண்டு கைகளையும் சேர்த்து பாத்திரத்தில் காட்டினாள். மெழுகு இளகுவது போல இளகி அவள் கையிலிருந்து பாத்திரத்தில் நீரொழுகியது. தூய கண்ணாடி நீர் மிக மெலிதாக அழகாக பாத்திரத்தில் நிரம்பியது. ஆனாலும் வெற்றுப் பாத்திரமாகவே தெரிந்தது.

தன்னுடைய தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தாள் லிக்திமா. பொறிப்பொறியாக வண்ண நெருப்புத் துகள்கள் தெறித்தன. பிடுங்கப்பட்ட முடி நெருப்பு இழையாக ஜொலித்தது. அதை பாத்திரத்தில் போட்டாள் லிக்திமா. விண்டாவைப் பார்த்து, "விண்டா, வழி-வளியை பாத்திரத்தில் விடுக" என்றாள்.

ஹம்ம்ம்ம்ம்ம்மென்று மூச்சுக்காற்றை பாத்திரத்தில் விட்டான் விண்டா. நீரும் அதில் ஜொலிக்கும் இழையும் பாத்திரத்தின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுழன்றன. பாத்திரத்திலிருந்து ஒரு மெல்லிய நீர்த்திரை கிளம்பி விரிந்தது. அதில் பலப்பல அண்டங்கள் வரைபடமாகத் தெரிந்தன. லிக்திமா இட்ட நெருப்பு இழை ஒவ்வொரு அண்டமாக அதன் மீது நகண்டது.

"மூவரும் நன்றாகக் கேளுங்கள். இந்த இழையானது உலகம் முழுவதும் உள்ள அண்டங்களைத் தேடும். முத்தில் என்னுடைய ஆற்றல் இருப்பதால் அது எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும். ஆனால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சற்று நாளாகும். கண்டுபிடித்த உடன் அந்த அண்டமும் அதிலுள்ள கிரகமும் இந்தத் திரையில் ஒளிரும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்கலாம்."

லிக்திமா சொல்லி நாட்கள் வாரங்களாயின..வாரங்கள் மாதங்கள் ஆன ஒரு சமயத்தில் இழை ஒரு கிரகத்தைத் தொட்டு ஒளிர்ந்தது. அது பூமி. அங்கு அனுப்புவதற்கு லிக்திமா தேர்ந்தெடுத்தாள் கஜனை. அவனோடு ஒரு சிறிய மாயப்பெட்டியையும் மாயக்கோலையும் கொடுத்தனுப்பினாள். (இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).

தொடரும்...