Monday, December 17, 2007

நஒக - மஞ்சனத்தி

இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.

எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.

இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.

கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.

சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?

மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.

மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?

இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.

இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?

ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.

அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.

இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.

என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 14, 2007

கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.




மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.



கொலுவை உன்னாடே -- தஞ்சை சரபோஜி மகாராஜா மணிபவழத் தெலுங்கில் எழுதிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் இசையரசியும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பானுப்பிரியாவின் நடனம் மிக அழகு. இதைக் கண்டிப்பாகப் பாருங்கள். இதுவும் ஸ்வர்ண கமலம் படம்தான்.


நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.



நீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.



நல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.



கர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.



அன்புடன்,
கோ.இராகவன் (ஜிரா)

Thursday, December 06, 2007

பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

நண்பர்களே, இந்தக் கதை ஒரு மீள்பதிவு. தோழர் தேவ் கேட்டுக்கொண்டதற்கிணங்க. :) படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Monday, December 03, 2007

காதல் குளிர் - 11

விமானம் வானத்தில் மிதந்தது. அதில் ரம்யாவும் ப்ரகாஷாவும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ப்ரகாஷாவின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் ப்ரகாஷாவோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறு.

அவளது ரோஜாக் கைகளை கைக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். "ரம்யா....I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு.....ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?" கைக்குளிருந்த ரோஜாப்பூக்களை முத்தமிட்டான்.

ப்ரகாஷாவின் கைகளை இதழால் நனைத்தாள். "டேய். நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்...நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னுதான் தோணுச்சு. அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது.......... நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உக்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உண்யைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்."

ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. "ரம்யா....எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?"

"தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே distrubed-ஆ இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஓடனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே....அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்...உன்னோட வாசம்... உன்னோட சுவாசம்....எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு...எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் சொல்லுச்சு. ஒங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ப்ரகாஷாவாயிட்ட.

அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்.....உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது...முத்தத்துக்குப் பதில் முத்தம்...அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well....I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்....உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது."

ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட....அதென்ன...அப்படித்தான் பூ பூக்குமா? ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ப்ரகாஷாவின் விரலைக் கடித்து விட்டாள்.

"டேய்....இது பிளேன்....எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். ஒங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. ஒங்கம்மா அழுதா என்னடா செய்வ?" போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....சொல்றேன். அம்மா அழுதா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....We are ready to accept them as they are. But why cant they accept us as we are? Just because i love you, I dont deserve to be hated. Certainly I will not be happy to start my life without her blessing. She has to understand me and accept us. If she is not understanding, I will assure her my love and affection to her. Also I will be waiting till she understands me. And I will nurture the confidence in her heart by promising the open doors for her and appa. I want them...but I cant loose you. I will gain you first and then my parents soon after that."

"இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா."

"என்ன மாமாவா?"

"ஆமாண்டா மாமா...." முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.

"மாமா எல்லா பேடா....ப்ரகாஷான்னு கூப்டு. அது போதும்."

"மாமா வேண்டாமா...சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா...அப்பா அம்மா இருக்குறப்பவும் ப்ரகாஷான்னுதான் கூப்புடுவேன்."

"சரி...சரி....கூப்டா சரிதான்." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே...ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.

"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"

"Thatz fine madam."

"Thank you" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.

தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.

பின்குறிப்பு

எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு


இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 27, 2007

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!

என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப் பெண்களேன்னு ஒங்களைப் பெருமையால்ல கூப்புடுறேன். சந்தோஷப் படுங்க. அப்படிக் கூப்புட்டு உங்களுக்கு எழுதுனதுதான் இந்தக் கடிதம். ஆகையால அடுத்த அருங்குணமான அச்சத்தோடு இந்தக் கடிதத்தைப் படிங்க.

ஆமா...வீட்டோட மருமகளாப் போகலாமா? அது சரிதானா? மூன்றாவது அருங்குணமான நாணத்தோட அதக் கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. வீட்டோட மருமகனாப் போறதுங்குறது ஒவ்வொரு ஆம்பளைக்கும் எவ்வளவு கவுரவக் கொறைச்ச்சலா இருக்கு. அதக் கிண்டல் செஞ்சு எத்தனையெத்தனை நகைச்சுவைகள். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளையும் ஒரு பெருமை இருக்கு பாத்தீங்களா! அந்தப் பெருமைலயும் சூட்டுலயும் சொரணைலயும் கொஞ்சங்கூடவா ஒங்களுக்கு இல்லை? அதெப்படி வெக்கமில்லாம ஒரு வீட்டோட போய்த் தங்கிக்கிட்டு அங்கயே வேலையையும் செஞ்சு...சமைச்சுப் போட்டு...துணி துவைச்சு அது இதுன்னு இருக்க முடியுது? சாப்புடுறதுக்குச் சோறு கெடைக்குதுன்னா? இல்ல "எல்லா" விஷயத்தையும் கவனிச்சுக்க ஒரு ஆம்பளை கிடைக்கிறதாலயா?

இதையே ஒரு ஆம்பளைகிட்ட கேட்டுப் பாருங்க. வாங்கய்யா...சோறு கிடைக்கும். "எல்லா" விஷயமும் கிடைக்கும். வீட்டோட வந்து இருங்கன்னு கூப்புடுங்க. ஒங்களைத் திமிர் பிடிச்சவன்னு சொல்வான். நீங்க ஏங்க ஆம்பளைங்களத் திமிர் பிடிச்சவன்னு சொல்ல மாட்டேங்குறீங்க? மடமைக் குணம் நல்லாவே வேலை செய்யுது போல.

இப்பல்லாம் வீட்டுக்கு வர்ர குலமகள்...அட இப்படியெல்லாம் சொன்னாத்தான ஒங்களுக்குப் பெருமையா இருக்கும். அப்பத்தான கேள்வி கேக்க மாட்டீங்க. வீட்டை விளங்க வைக்க வந்தவள்..குலமகள்...தெய்வம்னு சொன்னா உங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு. இதையே வீட்டுக்கு வந்த குலமகன்..விளங்க வைக்க வந்தவன்...தெய்வம்னு சொல்லிப் பாருங்க... ஒரு பய கட்டிக்க வர மாட்டான். அது சரி. அவன் மானஸ்தன். நீங்கள்ளாம் வெறும் நாணஸ்தர்கள்தானே.

வீட்டுக்கு வர்ர மருமகள் வேலைக்கும் போனா இப்பல்லாம் சந்தோஷப் படுறாங்களாம். வீட்டு வேலையும் பாத்து....சம்பாதிச்சும் போட ஒரு இளிச்சவாய் கெடைச்சா சந்தோஷப் படாம யார் இருப்பா? அப்படி இளிச்ச வாய்னு நேரடியாச் சொல்லாமத்தான் மகாலட்சுமின்னு சொல்லீர்ராங்க. நீங்க என்னடான்னா ஒங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் செஞ்சு படையலா பொங்கலும் பஞ்சாமிர்தமும் வெச்சாப்புல குளுந்து போய் சிரிச்சிக்கிட்டே எல்லா வேலையும் பாக்குறீங்க.

குடும்ப விளக்கு நீங்கதானாமே? விளக்குன்னா ஏத்தி வைக்கனும்ல....அதான் ஏத்தி வைக்கிறாங்க. எதை? வீட்டுப் பொறுப்பை. அட பொறுப்பை ஏத்துக்குறதும் செய்றதும் நல்லதுதானே. மாமனார் மாமியார் மனங்கோணாம நடந்துக்கிறனுமாமே குடும்ப விளக்கு. ஒங்க அப்பாம்மா மனங்கோணாம ஒங்க கணவரு நடந்துக்குவாரான்னு கேட்டீங்களா? கணவனோட தம்பி தங்கச்சிங்களைப் பாத்துப் படிக்க வைக்கனுமே....ஒங்க தம்பி தங்கச்சிங்கள ஒங்க வீட்டுக்காரர் பாத்துக்குவாரா?

ஆமா...இன்னோன்னு கேக்கனும்னு நெனச்சேன். எவனாவது கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை விட்டு வர்ரானா? நீங்க மட்டும் ஏங்க கல்யாணம்னா அப்பாம்மாவை விட்டுட்டு அவன் பின்னாலயே போகனும். என்னது? இப்பப்ப மாறிக்கிட்டு வருதா? வேலை பாக்குறவங்க வெவ்வேற ஊர்ல நாட்டுல இருக்காங்களா? அப்படியா...ரொம்ப சந்தோசம். அப்படி வெளியூர்லயோ வெளிநாட்டுலயோ வேல பாக்குற ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்க பொட்டி தூக்குறாங்களா? இல்ல வெளிநாட்டுல வேலை பாக்குற பொம்பளைங்களுக்கு ஆம்பிளைங்க பொட்டி தூக்குறாங்களா? அட...என்ன இருந்தாலும் நீங்க புகுந்தவங்கதான. அதுக்காச்சும் பயிர்ப்புன்னு ஒன்னு வேணும்ல.

என்னது? காலம் மாறுமா? கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருதா? ஹி ஹி. முந்தி வீட்டு வேலை மட்டுந்தான். இப்ப வீட்டு வேலை. அலுவலக வேலை ரெண்டும். அதுல கணவனார் வேற ஊர்ல நல்ல வேலை கெடைச்சிப் போகனும்னு வெச்சுக்கோங்க...நீங்க உங்க வேலையத் தியாகம் செஞ்சுக்கிட்டு பின்னாடியே போகனும். தேவைப்பட்டா அங்க ஒரு வேலையத் தேடிக்கனும். இல்லைன்னா...குடும்பம் என்னத்துக்காகுறது! குடும்பத்திற்காக உழைத்து உழைத்து மெழுகாக உருகும் பெண்மணி அவள் கண்மணீன்னு பட்டம் கெடைக்காதுல்ல.

என்னவோ சொல்வாங்களே...ஆங்....நாற்றாங்கல்ல இருந்து எடுத்து வயல்ல நட்டாத்தான் நெல் செழிக்கும்னு. அது மாதிரி பெண்கள் பிறந்தது ஓரிடம். நெல் போலச் செழிப்பது ஓரிடம்னு பெருமையாச் சொல்வாங்கள்ள. நெல்லுக்கு ஒரே எடத்துல வளர்ர தெறமை இல்லை. வளந்தா ஒழுங்கா நெல்லு குடுக்காது. அது மாதிரித்தான் நீங்கன்னு சொன்னா...அதக் கூடப் பெருமையா ஏத்துக்கிட்டு...அடடா என்ன பெருந்தன்மை..என்ன பெருந்தன்மை... பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஆகையால...பெண்களே வெட்கம் சூடு சொரணை ஆகிய தீய பண்புகளை ஆண்களுக்குக் கொடுத்து விடுத்து...மிகவும் பெருமை வாய்ந்த பண்புகளாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நற்குணங்களோடு மகாலட்சுமியாகவும் சரசுவதியாகவும் இருந்து....குடும்ப விளக்காகவும் பொறுமையின் சிகரமாகவும் அடிமைத் திலகமாகவும் இருந்து வரும்படி அனைத்து சாதி மத இன இந்திய ஆண்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க மென்மை என்னும் பெண்மை என்னும் அருங்குணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, November 26, 2007

காதல் குளிர் - 10

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"என்னது ப்ரகாஷாவைக் காணமா? என்ன சொல்ற?" தூக்கக் கலக்கத்திலும் கடுகடுத்தான் சப்யா.

"ஹலோ...என்ன கடுகடுப்பு? காணம்னு சொல்றேன்." பதில் கடுகடுப்பு சித்ராவிடமிருந்து.

"சரி... மொபைல்ல கூப்புடு. வெளிய வாக்கிங் போயிருப்பான்."

"அதான் இங்க இருக்கே. நேத்து அவன் மெடிக்கல் ஷாப் போனப்புறம் பாத்தேன். டேபிள்ளயே வெச்சிட்டுப் போய்ட்டான். அது அங்கயே இருக்கு. எனக்கென்னவோ அவன் திரும்பி வந்தானோன்னே தெரியலை. பயமாருக்கு சப்யா?"

சப்யாவையும் கவலை கொஞ்சம் கட்டிப்பிடித்தது. "ரம்யா கிட்ட சொல்லீட்டுப் போயிருப்பானோ? அவ கிட்ட கேப்போமே"

"ம்ம்ம்ம்... கேக்கலாம். இரு நானே கேக்குறேன்." லேசாகத் திறந்திருந்த கதவைத் தள்ளியவள் அப்படியே திரும்பவும் மூடிவிட்டு வந்தாள்.

"என்னது கேக்காம... கதவ மூடீட்டு வந்துட்ட? தூங்குறாளா இன்னும்?"

சத்தம் போடாதே என்று சைகை காட்டி விட்டு சப்யாவின் கையைப் பிடித்து கிச்சனுக்குள் கூட்டிச் சென்றாள் சித்ரா. கிசுகிசுக்குரலில் சொன்னாள்.

"ப்ரகாஷாவும் உள்ளதான் தூங்குறான். அதான் கதவை திரும்பவும் மூடீட்டேன்."

"ஓ உள்ளதான் தூங்குறானா? அதுக்கு ஏன் இந்த கிசுகிசுப்பு?"

"ஐயோ...மெதுவாத்தான் பேசேன். தூங்குறான்னா....தூங்குறான். புரிஞ்சிக்கோடா மரமண்டை."

நறுக்கென்று கொட்டினான். "மண்டு....ஒடனே அதான் நெனப்பா ஒனக்கு....நம்மள மாதிரியே எல்லாரையும் நெனச்சா எப்படி? உள்ள சும்மா தொணைக்குப் படுத்திருப்பான்."

சப்யாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு காதருகில் சொன்னாள். "ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான். அவன் நெஞ்சுல தலைய வெச்சு இவளும் கட்டிப் புடிச்சிக்கிட்டு தூங்குறாளா? ஜீன்ஸ் ஏன் தரைல இருக்கு? ரம்யாவோட டாப்சும்தான். வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா? இந்த விஷயத்துல என்னையவே நம்ப மாட்டேன். ரம்யாவையும் ப்ரகாஷாவை மட்டும் நம்பீருவேனா?"

சித்ராவை அணைத்துக் கொண்டான் சப்யா. நினைக்கும் பொழுதே அவனும் காதல் டிரெயினுக்கு டிக்கெட் எடுத்தான். "அப்படியா சொல்ற. இருக்கும். இருக்கும்." சித்ராவின் நெற்றியை எச்சில் படுத்தினான். "சரி.. இப்ப என்ன செய்யலாம்?"

"அட...ஒன்னுமே தெரியாதோ என்னோட ஷோனோர் பங்ளா ராஜாவுக்கு. அவங்களா வெளிய வரட்டும். கடைக்குப் போகனும்னு நீ ப்ரகாஷாவை வெளிய கூட்டீட்டுப் போ. அவனே ஏதாச்சும் சொல்வான். எங்கிட்ட காட்டுன பேச்சுத் திறமைல கொஞ்சத்த அவன் கிட்ட காட்டு. சரியா? நான் ரம்யாவை ஒரு வழி பண்றேன்."

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ப்ரகாஷா வெளியில் வந்தான். எதுவும் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. சித்ரா குடுத்த டீயைக் குடித்தான்.

"சப்யா, என்னோட பிரஷ் காணோம். ஹொசா பிரஷ் வாங்கனும். வர்ரியா கடைக்குப் போகலாம்?" அவனே சப்யாவைக் கேட்டான்.

"புது பிரஷ்ஷா...வீட்டுலயே இருக்கே. எப்பவுமே ரெண்டு ஸ்பேர் பிரஷ் வெச்சிருப்போம். இரு எடுத்துட்டு வர்ரேன்." பெருமிதத்தோடு எழுந்தான் சப்யா.

பெட்ரூமுக்குள் நுழையப் போனவனை முறைப்போடு தடுத்தாள் சித்ரா. "அந்த பிரஷ் அன்னைக்கு ஒங்க காக்கா வந்தப்ப குடுத்துட்டேனே. புது பிரஷ் வீட்டுல இல்ல." புரிந்து கொண்டு வழிந்தான் சப்யா. "ஆமா ப்ரகாஷா...அன்னைக்கு சித்தப்பா வந்தப்போ சித்ரா எடுத்துக் குடுத்துட்டா. வா..கடைக்குப் போகலாம்."

சொல்லி வைத்த மாதிரி அவர்கள் வெளியே சென்றதும் ரம்யா வெளியே வந்தாள். அவள் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத மகிழ்ச்சி அவள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்து போனது. மறைக்க மறைக்க வெளியே தெரிந்தது.

"என்னடி...இப்ப ஒடம்பு எப்படியிருக்கு?"

கேட்ட சித்ராவை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள். "ஏய்...நான் சித்ரா. ப்ரகாஷா இல்ல." சிரித்துக் கொண்டே சொன்னாள் சித்ரா.

"ஆமா....என்னடி இது? நேத்து சாந்தரந்தான் அவ்ளோ பேசுன? என்னென்னவோ கேட்ட. கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி? என்னாச்சு? எல்லாமே முடிஞ்சிருச்சா?"

தலையை ஆட்டி ஆமாம் என்றாள் ரம்யா.

"அடிப்பாவி. வெச்சாக் குடுமி...செரச்சா மொட்டையா? இப்ப அவங்க அம்மா அழ மாட்டாங்களா? அழுதா என்ன செய்வ?"

ரம்யாவின் வெட்கப் பனி விலகியது. "நீ கேக்குறது சரிதான். நேத்து அவன் எலக்ட்ரால் கொண்டு வந்து குடுத்தான். குடிச்சப்புறம் பக்கதுல கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டுத்தான் வெளிய போனான். போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. அவனையும் உள்ளயே இருக்கச் சொன்னேன். அவன் இருக்குறது பாதுகாப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு."

"நடந்ததெல்லாம் சரிதான். எந்த நம்பிக்கைல இப்பிடி செஞ்ச? அவன் விட்டுட்டுப் போய்ட்டான்னா?"

"போக மாட்டான்" ரம்யாவின் குரல் பெல்ஜியன் வைரமானது.

"எப்படிச் சொல்ற?"

"தெரியாதுடி. அவனை நான் நம்புறேன். நேத்து சாந்தரம் அவனை என்னால நம்ப முடியலை. ஆனா இப்ப முடியுது. நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதுக்கு நானே பொறுப்பு. என்னோட ப்ரகாஷா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு."

"என்னது....உன்னோட ப்ரகாஷாவா? ம்ம்ம்ம்...நல்லாரு தாயே." சிரித்துக்கொண்டே ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தொடரும்....

இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை படித்துப் பாராட்டி நிறைகுறைகளை எடுத்துச் சொன்ன நீங்கள் அடுத்த பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

பின் குறிப்பு

ரம்யாவின் காதில் ப்ரகாஷா சொன்ன கன்னடக் கவிதை. மொழி மாற்றப்பட்டு உங்களுக்காக.

சர்க்கரை நோயாளிக்கும் பரிந்துரைப்பேன்
முத்தத்தை விருந்தென
தித்தித்தாலும் மருந்தென

- மொழிபெயர்ப்பாளர் (ப்ரகாஷாவின் ரம்யா)

Saturday, November 24, 2007

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 4

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்


ஆம்பல் யார்? ஏன் சுரேஷ்களோடு மட்டும் ஆர்க்குட் நட்பு. அதிலும் ஒவ்வொரு சுரேஷுக்கும் ஒரு ஆம்பல் ஐடி? அதெப்படி ஒரு ஆம்பல் புரொபைலில் மட்டும் மனைவி அஞ்சலியின் புரொபைல்? மைக்ரோசாப்ட் நுழைவுத் தேர்வை விட கடினமான கேள்விகள் சுரேஷின் மூளைக்குள் மணியடித்தன.

விக்கிரமாதித்தன் கதைகள் படித்திருக்கின்றீர்களா? கதைக்குள் கதை. அந்தக் கதைக்குள் கதை என்று போகும். சுரேஷின் மூளைக்குள் திட்டம். திட்டத்துக்குள் திட்டம். அந்தத் திட்டத்துக்குள் திட்டம் என்று வலை விரிந்தது.

முதல் திட்டம் உடனே செயலானது. ஆர்க்குட்டில் சுரேஷ் என்று இன்னொரு புரொபைல் உருவாக்கினான். படம் போடவில்லை. தன்னைப் பற்றிய தகவல்களை மாற்றிக் கொடுத்தான். வலையை விரித்து வைத்துவிட்டு தேனையும் தெளித்து வைத்துவிட்டு வண்ணத்துப்பூச்சிக்குக் காத்திருந்தான்.

வந்தது வண்ணத்துப் பூச்சி. ஆம்பல்தான். ஆனால் புது புரொபைல். அவளுடைய படத்தோடு.

"ஹாய் சுரேஷ். ஒர் ஹாய் சொல்லலாம்னு வந்தேன்." இதுதான் ஸ்கிராப் புக்கில் ஆம்பல் எழுதியிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பதில் அனுப்பாமல் மூன்றாம் நாள் இப்படி எழுதினான். "ஹாய்".

பத்தே நிமிடத்தில் மறுமொழி. "ஒரு ஹாய் சொல்லவா ரெண்டு நாள் :)))))))))))))))))))))))))))))))))"

உடனே மறுமொழிந்தான். "இல்ல நீங்க யார்னு தெரியாது. அதான்....யோசிச்சுச் சொன்னேன். :)" ஸ்மைலியைக் கடைசியாகச் சேர்க்க மறக்கவில்லை.

இப்படி அப்பாவி போல நடித்தான். இவன் அப்பாவியாக ஆக அவள் அடிப்பாவியானாள். விரைவிலேயே ஒரு நட்பு உருவாகி விட்டது. அட நட்பு மாதிரி. இவன் நடிக்கிறான் என்று நமக்குத் தெரியுமே. அவள் கதைதான் தெரியாது.

நினைவிருக்கிறதா? பழைய சுரேஷிடம் ஒரு கதை சொன்னாளே.....பணக்கார அப்பா..சித்தி....சித்திக்குத் தம்பி...தம்பிக்கு நாற்பது வயசு....நாற்பது வயசுக்குக் கல்யாணம்...கல்யாணத்திற்கு ஆம்பல்..ஆம்பலுக்குச் சொத்து என்று. அந்தக் கதையை இங்கே சொல்லவில்லை. வேறொரு கதை.

"சுரேஷ், நம்ம பழகி ஒரு வாரம் ஆயிருக்குமா? ஆனா நெருங்கிய நட்பாயிட்டோம். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். எனக்கு வாழப்பிடிக்கலை சுரேஷ். வாழப்பிடிக்கலை. I am a corporate. நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சொத்து. எல்லாமே இருக்கு. ஆனா அதை விட உள்பகை நெறைய இருக்கு. ஒரு சின்னப் பொண்ணு நம்மள வேலை வாங்குறதான்னு பெரிய பெருச்சாளிகள் நெனைக்கிறாங்க. ஷேர்களை எல்லாம் பிராடு பண்ணி திருடப் பாக்குறாங்க. அதுவுமில்லாம பேங்க் அக்கவுண்ட் கூட ஹாக் பண்ண முயற்சி செய்றாங்க. என்னோட லாக்கரைக் கூட யாரோ திறக்கு முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகமா இருக்கு. இப்பல்லாம் சாப்பிடவே பயமா இருக்கு. எதையாவது கலந்திருவாங்களோன்னு. உங்களைத் தனியா பாத்துப் பேசனும். வருவீங்களா? நீங்க நல்லா பழகுறது எனக்குக் கொஞ்ச சந்தோஷமாவது இருக்கு" கொஞ்ச சந்தோஷத்தில் கொஞ்சல் தெரிந்தது.

இங்கே இந்தக் கதை இப்படி ஓடிக்கொண்டிருக்க...பழைய புரொபைல் கதையும் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே அந்தக் கதை. இங்கே இந்தக் கதை. மர்மம் தெரியும் வரை அவனும் விடுவதாக இல்லை.

அப்பொழுதுதான் அவனுக்குக் கிடைத்தது வாய்ப்பு. ஆம். இந்தியாவிற்கு வேலை தொடர்பாக ஒரு மாதம் செல்ல. ஆம்பலைச் சந்திப்பதென்றே முடிவு செய்தான். அஞ்சலியையும் சந்திக்கப் போவது அப்பொழுது தெரியாது.

தொடரும்...

அடுத்த பாகத்தை எழுத காதல் இளவரசன் ஜியை அழைக்கிறேன். காதல் இளவரசன் ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.:)

Tuesday, November 20, 2007

பெருமிகு தமிழ்ப் பண்பாட்டின் இன்னொரு முகம்

இந்த வீடியோவைப் பாருங்க. நம்மூரு ஆளுங்கதான். என்ன சொல்றதுன்னே தெரியலை...

அடுத்தவன் சோத்துல திங்க வெக்கமா இல்லை...எப்படிடா காசு குடுன்னு வெக்கமில்லாம கேக்குறீங்க? சீச்சீ மானங்கெட்ட மடையங்களா! வரதட்சண வாங்குன ஒவ்வொரு கணவனும் கண்ண மூடிக்கோங்க. இல்லைன்னா வெக்கமாயிருக்கும்.

இந்தச் சுட்டிக்குப் போங்க வெவரம் புரியும்.

வெறுப்புடன்,
கோ.இராகவன்

Monday, November 19, 2007

காதல் குளிர் - 9

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. இருட்டும் குளிரும் மட்டுமே கூடியது. என்ன செய்வதென்று யாருக்கும் தோன்றவில்லை. பெராவை வைத்துக் கொண்டும் பயந்து போயிருக்கும் ரம்யாவை வைத்துக் கொண்டும் விழித்தார்கள். தங்குவதற்கு ஒரு விடுதியும் இல்லை.

அப்பொழுதுதான் ப்ரகாஷாவிற்கு அந்தத் திட்டம் தோன்றியது. அவர்கள் வந்த ஆட்டோவிடம் போனான். மதுராவிற்கு ஆட்டோ வருமா என்று கேட்டான். ஒப்புக்கொள்ளாத டிரைவரிடம் பேசிச் சரிக்கட்டினான். அறுபது கிலோமீட்டர் தொலைவு. முந்நூற்று ஐம்பது ரூபாய்களுக்குப் பேரம் பேசி ஆட்டோவை மதுராவுக்குத் திருப்பினான்.

விதி...அல்லது கடவுள்...எப்படி விளையாடுகின்றார் பார்த்தீர்களா? நான்கு மணி வாக்கில் ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார விரும்பாமல் முன்னால் சென்று உட்கார்ந்தாள் ரம்யா. ஆனால் இப்பொழுது கிடுகிடு ஆட்டோவின் பின்னால் பிரகாஷாவை ஒட்டிக்கொண்டு...சாய்ந்து கொண்டு...கட்டிக்கொண்டு....அட. அதே ரம்யாதான். அப்பொழுது நொந்து பாடிக்கொண்டிருந்த ப்ரகாஷாவின் உள்ளம் இப்பொழுது காதற் சிந்து பாடிக் கொண்டிருந்தது.

ரம்யாவின் நிலையோ வேறுவிதம். படபடப்பும் பயமும் அடங்காமல் அவன் அணைப்பிலே அடங்கியிருந்தாள். இதே நெருக்கத்தில் அவள் இதற்கு முன்பும் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால்...இன்றைய நெருக்கத்தில் வேறு எதையோ உணர்ந்தாள். சரி. எதையோ உணர்ந்தார்கள். அதுக்குப் பேர் காதல்தானா!

ஆட்டோ ஜக்கடிஜக்கடியென ஒருவழியாக மதுராவிற்குள் நுழைந்தது. பெரிய பட்டிக்காடு அது. கோயில் உள்ள ஊர். புகழ் பெற்ற ஊர். ஆனால் பட்டிக்காடு போல இருந்தது. பெட்டிக்கடைகளும் மஞ்சள் பல்புகளும் அழுது வடிந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையம் என்பது நான்கே பேருந்துகள் நிற்கக் கூடிய இடமாகவே இருந்தது. அதிலும் இருந்தது ஒரே ஒரு பேருந்து. பெரிய வேன் என்று சொல்லலாம். அதுவும் வேறொரு ஊருக்கு. டெல்லிக்கோ நொய்டாவிற்கோ எதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.

"ரம்யா இல்லே இரு. பத்து நிமிசத்துல வர்ரேன். சப்யா பாத்துக்கோ" சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் எதையோ சொல்லி அழைத்துச் சென்றான். சரியாகப் பத்து நிமிடத்தில் ஒரு ஜீப்போடு வந்தான். இரண்டாயிரம் ரூபாய்க்குப் பேசி முடித்திருந்தான். ஏனென்றால் வேறு ஒரு வண்டியும் இல்லை. அதுவுமில்லாமல் ஏற்கனவே எட்டரை மணியாகியிருந்தது. தங்க நல்ல இடமும் இல்லை. ஆகையால் எப்படியாவது நொய்டா போவதுதான் நல்லது என்று முடிவு செய்தான் ப்ரகாஷா. அதனால்தான் வண்டியைப் பிடித்து வந்தான்.

வண்டியில் பிரகாஷாவின் மடியில் படுத்துக் கொண்டாள் ரம்யா. அப்பொழுதுதான் சித்ரா கேட்டாள்.

"ஏய்....எங்கடி நீ வாங்குன தாஜ்மகால்? அந்தப் பைய மட்டும் காணோமே. மித்ததெல்லாம் இருக்கே."

"அத ஆட்டோலயே விட்டுட்டேண்டி."

"ஆட்டோலயா?"

"ஆமா. அத வாங்குனதுனாலதான் இப்படியெல்லாம் ஆச்சோன்னு தோணிச்சு. அதான் ஆட்டோலயே விட்டுட்டேன். என்ன இருந்தாலும் அது காதல் கல்லறை....அதுனால எனக்குப் பிடிக்கலை. அந்தத் தாஜ்மகால் எனக்கு வேண்டாம். அதுனாலதான் ஆட்டோலயே வெச்சிட்டேன்."

சொல்லி விட்டு தூங்கிவிட்டாள் ரம்யா. படபடப்பு லேசாகக் குறைந்தது போல இருந்தது. தலைவலி மட்டும் லேசாக இருந்தது. ஒருவழியாக நொய்டா வந்து சேர்ந்தார்கள். அதுவும் பதினொன்னரை மணிக்கு. வெளியே குளிர் கும்மியடித்துக் கொண்டிருந்தது. சப்யா ஹீட்டர்களைத் துவக்கினான்.

ரம்யா தொண்டையத் தடவிக்கொண்டு எதுக்களித்தாள். "என்னடி மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு?"

"வாந்தி வர்ர மாதிரி இருக்கு." லேசாக உமட்டினாள்

அந்நேரம் பெரா அழத் தொடங்கினான். தூக்கத்திற்குத்தான். ப்ரகாஷாவிடம் சொன்னாள் சித்ரா. "டேய். பக்கத்துத் தெருவுல மெடிக்கல் ஷாப் இருக்கு. எலக்ட்ராலும் அவாமினும் வாங்கீட்டு வா. போக ரெண்டு நிமிஷம். வர ரெண்டு நிமிஷம். பட்டுன்னு வந்துரு. இந்தா சாவி." வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே போனான் அவன். பெராவின் அழுகை கூடியது.

சித்ராவை ரம்யா அழைத்தாள். "ஏய். நீங்க போய்ப் படுங்க. எனக்கு இப்பத் தேவலை. அவன் வந்ததும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கிறேன். இப்ப உள்ள போய்ப் படுக்கிறேன்.

ரம்யா அவள் அறைக்குச் சென்று கதவைச் சும்மா மூடிக்கொண்டு படுத்தாள். சித்ராவும் சப்யாவும் பெராவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்கள்.

தூங்கிக் காலையில் எழுந்த சித்ராவிற்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சப்யாவை எழுப்பினாள். "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."

-----------------------------------------------------
பின்குறிப்பு

சித்ரா எப்பொழுதோ மனதில் எழுதி மறந்து போன கவிதை

விடிவது என்றால் என்ன?
உனது நிழல்
என் மீது படிவதுதான்
இல்லையென்றால் மடிவதுதான்


தொடரும்

Sunday, November 18, 2007

பாட்டு கண்டுபிடிங்க பாக்கலாம்?

ரெண்டு பாட்டு தர்ரேன். கேளுங்க. ஆனா தெலுங்குல உந்தி. அந்தத் தெலுங்குப் பாட்டுகள் தமிழ்லயும் உந்தி. அது என்னென்ன பாட்டுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம். ஆனா போட்டி அவ்ளோ லேசாவா இருக்கும். 1975லிருந்து 1980க்குள் வந்த பாட்டுகள் ஒங்களுக்குத் தெரியும்னா இந்த ரெண்டு பாட்டடயுமே கண்டுபிடிச்சிரலாம். ஒன்னு பெரிய நடிகரோட படம். இன்னோன்னு பெரிய இயக்குனரோட படம்.

இப்ப மொதப் பாட்டு. இது எல்.ஆர்.ஈஸ்வரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்லயும் பாலு உண்டு. ஆனா ஈஸ்வரி கிடையாது. இன்னொரு பிரபல ஆண் பாடகர். தமிழில் ஒரு போட்டிப் பாட்டு இது.


அடுத்தது இந்தப் பாட்டு. இசையரசியும் பாலுவும் பாடியிருக்காங்க தெலுங்குல. தமிழ்ல இசையரசி இல்லை. பாலுவின் தனிக்காட்டு ராஜாங்கம். இந்தப் பாட்ட லேசாக் கண்டுபிடிச்சிருவீங்கன்னு நெனைக்கிறேன்.


இங்க குடுத்துருக்குற ரெண்டு பாட்டுமே...தெலுங்குல ஒரே படத்துல வருது. சிம்ஹ பாலுடு அப்படீங்குற படம். என்.டி.ராமாராவ் நடிச்சது.

ரெடி. ஸ்டார்ட்...1...2....3

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 12, 2007

காதல் குளிர் - 8

சென்ற பகுதி இங்கே

ஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.

காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும் கே.ஆர்.எஸ்சின் கவனம் ரம்யா மேல் இருந்தது. வடக்கத்திய ஆலூ சாட்டுகளையும் வெளிநாட்டு பர்கர்களையுமே பார்த்திருந்த அவனுக்குத் தென்னாட்டுத் தேங்காய்ச்சாதம் புதுமையாகத் தெரிந்தது. அந்தப் பார்வையில் காரோட்டுவதில் இருந்த கவனம் சிதறியது.

அவனுடைய கெட்ட நேரம்...சட்டென்று ஒரு மொபெட் குறுக்கே..........அந்த மொபெட்டின் பின்னால் பெரிய கேனில் பெட்ரோல் வேறு. அந்த மொபெட் குறுக்கே வருவதைப் பார்த்துதான் கத்தினாள் ரம்யா. கே.ஆர்.எஸ் சுதாரித்து பிரேக்கை அழுத்தினான். அந்தப் பெரிய சாலையில் அந்த வேகத்தில் கீஈஈஈஈஈச்சென்று கருப்புக்கோடுகளைத் தேய்த்தது கார். சத்தத்திலும் பரபரப்பிலும் அரைத்தூக்கத்தில் இருந்த சப்யா, சித்ரா, ப்ரகாஷாவும் எழுந்து விட்டார்கள்.

ஆனாலும் நடந்ததைத் தடுக்க முடியவில்லை. கார் மொபெட்டில் பின்னால் இடிப்பதைப் பார்த்தாள் ரம்யா. அடுத்த நொடியில் மொபெட் சாய்ந்தது. ஓட்டிக்கொண்டிருந்த முகம் தெரியாதவர் மேலே தூக்கி வீசப் பட்டார். கீழே விழுந்த மொபெட் காருக்கடியில் சிக்கிக்கொண்டு காரின் வேகத்தைத் தடுத்தது. அதற்குள் தூக்கி வீசப்பட்ட நபர் காருக்குப் பின்னால் சென்று சொத்தென்று விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. சாலையைப் பெட்ரோல் கழுவியது.

கே.ஆர்.எஸ் காரை வேகமாக ஓட்டித் தப்பிக்க நினைத்தான். ஆனால் காரில் சிக்கிக்கொண்ட மொபெட் காரை நகரவிடவில்லை. அதற்குள் பெருங்கூட்டம் கூடி காரை மறித்தார்கள். வேறு வழியேயில்லாமல் கார் மண்ணில் ஒதுங்கியது.

போத்தீஸ் ஆடித்தள்ளுபடிக் கூட்டம் போல காரைச் சுற்றிக் கூட்டம். ஒருவன் படக்கென்று கதவைத் திறந்து ரம்யாவை வெளியே இழுத்தான். ஆனால் காரை அவள் ஓட்டவில்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று பேர் கே.ஆர்.எஸ்சை வெளியே பிடித்து இழுத்தார்கள். குனிய வைத்து தரும அடிகளை அள்ளி வழங்கினார்கள் அந்தக் கலியுக வள்ளல்கள்.

ரம்யா இழுபடுவதைப் பார்த்ததும் ப்ரகாஷா படக்கென்று இறங்கி வந்தான். ரம்யா ஓடிப் போய் அவனிடம் ஒட்டிக்கொண்டாள். அவள் தன்னிலையிலேயே இல்லை என்று சொல்லலாம். அவள் கண் முன்னால் மொபெட்டில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்தது. பயம். உடம்பு வெடவெடவென நடுங்கியது.

அதற்குள் சப்யாவும் சித்ராவும் ஃபெராவைத் தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். அவர்கள் பைகள் அனைத்தையும் இறங்கினார்கள்.

ஆனால் இவர்களை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை. செமையாக கவனிப்பதற்குக் கே.ஆர்.எஸ் இருக்கும் பொழுது இவர்களைக் கவனித்து என்ன செய்ய! அதற்குள் ஒருவர் கார்ச்சாவியை கே.ஆர்.எஸ்சிடமிருந்து பிடுங்கி காரில் ஏறினார். கே.ஆர்.எஸ்சையும் உள்ளே ஏற்றினார்கள். கீழே விழுந்திருந்தவரையும் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு ஓட்டினார்கள்.

ரோட்டில் இருந்த ரத்தத்தைப் பார்த்ததும் ரம்யாவிற்குக் கண்ணைக் கட்டியது. ப்ரகாஷாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மறுகையில் இருவருடைய பைகள் வேறு.

"ஒங்க காரா இது? எங்கயிருந்து வர்ரீங்க?" இந்தியில் கேட்டார் ஒருவர். ப்ரகாஷாதான் இந்தியில் பேசினான். "அது வாடகைக்காரு. நொய்டால இருந்து வர்ரோம். இப்ப கார எங்க கொண்டு போயிருக்காங்க?"

"ஆஸ்பித்திரிக்கு. ஒங்க கார் இல்லையா அது? வாடகையா? அப்ப நீங்க கெளம்பீருங்க. டிரைவரத்தான் பிடிச்சாச்சுல்ல."

அதற்குள் அதே ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர்...பெட்ரோல் வழுக்கி விழுந்தார். "அடடா...இது சபிக்கப்பட்ட ரோடு போல இருக்கே. ஏய்...எல்லாரும் மண்ண அள்ளிப் போடுங்கடா" என்று ஒருவர் குரல் குடுக்க..அனைவரும் மண்ணை அள்ளிப் போட்டனர்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய ப்ரகாஷா, சப்யாவையும் சித்ராவையும் அழைத்தான். கூட வரச்சொன்னான். ரம்யாவையும் கூட்டிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் நடந்தார்கள்.

எந்த ஊரென்று தெரியவில்லை. பேரும் தெரியவில்லை. ஏதோ பட்டிக்காடு என்று மட்டும் புரிந்தது. ஆக்ராவிலிருந்து வருகின்ற பேருந்துகள் எல்லாம் அப்படித்தானே வர வேண்டும். வந்தன. ஆனால் எந்தப் பேருந்தும் நிற்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் குளிரத் தொடங்கிவிடும். பெரா வேறு நசநசக்கத் தொடங்கியிருந்தான்.

அங்கிருந்த ஒருவரிடம் ப்ரகாஷா டெல்லி செல்ல பஸ் கிடைக்குமா என்று கேட்டான். அவர் சிரித்து விட்டு, "இங்க எங்க பஸ்சு? அதோ ஆட்டோ இருக்கு பாருங்க. ஷேர் ஆட்டோ. அதான எங்களுக்கு பஸ்சு. அதுல போனா பக்கத்தூரு போகும். அங்க பஸ்சுக நிக்கும்."

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினான். அது ஷேர் ஆட்டோ. உள்ளே கொஞ்ச பேர் உட்காரலம். வெளியே பின்னாடி பார்த்துக் கொண்டும் கொஞ்ச பேர்...டிரைவருக்குப் பக்கத்திலும் கொஞ்ச பேர் உட்காரலாம். ஒருவழியாக எல்லாரும் உட்கார்ந்து கொண்டார்கள். தடதடவென ஆடிக்கொண்டே ஆட்டோ பக்கத்தூருக்குக் கிளம்பியது. ப்ரகாஷாவை இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ரம்யா. கொஞ்சம் பேதலித்த நிலை. வெறும் பயம்தான்.

வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள் வரத் தொடங்கியிருந்தது. பேர் தெரியாத ஊரிலிருந்து பேர் தெரியாத ஊருக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார்கள். நொய்டா போனார்களா?

பின்குறிப்பு

ப்ரகாஷாவின் டையில் இருந்து திருடப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட காதல் கவிதை...அதாவது ப்ரேம கவிதே...எதுவும் புரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.

வானில் நிலவு
நிலவில் காதல்
கைகளில் நீளமில்லை


தொடரும்...

Monday, November 05, 2007

காதல் குளிர் - 7

சென்ற பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க முடிந்தது. ஆனால் அழும் அம்மாவை. வேண்டாம் மகனே என்று சொல்லி அம்மா அழுதால்.... நினைப்பதற்கே அவனுக்கு அசிங்கமாக இருந்தது. அந்த அசிங்க நினைப்பே அவன் வாயையும் மூடி வைத்தது.

"என்னடா அமைதியாயிட்ட?" கேட்ட ரம்யாவைப் பாவமாகப் பார்த்தான் ப்ரகாஷா. முகத்தில் குழப்பமும் கவலையும் கூட்டணி அமைத்திருந்தன.

"பாத்தியாடா....அப்படி ஒரு நெலமை வந்தா என்ன முடிவை நீ எடுப்பன்னு உன்னால யோசிச்சுக்கூடப் பாக்க முடியலை. அதுனாலதான் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குற. சப்யா காதலைச் சொன்னதும் சித்ரா ஒத்துக்கிட்டா. ஏன்? சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."

சப்யாவிற்கும் சித்ராவுக்கும் ரம்யா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் ப்ரகாஷா ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

ரம்யா அவனது கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினாள். அவள் தொட்டது கங்கு கன்னத்தில் பட்டது போல இருந்தது அவனுக்கு. படக்கென்று நிமிர்ந்தான். "டேய். நீ நல்லவன். அதுல எந்தச் சந்தேகமும் எனக்கு இல்ல. உன் மேல உண்மையான அன்பு எனக்கும் இருக்கு. ஆனால் காதல் வரனும்னா...உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் கஷ்டம். ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்?"

"ரம்யா...உனக்கு இப்ப பதில் இல்ல. எனக்குத் தெரியலை. ஆனா நன் ப்ரீத்தி நிஜா. அது நிஜா ஆகுத்தே. இனி இது பகே பேசலை. பேச வேண்டாம்."

தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ. ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?

சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரும் கிளம்பி வெளியே வந்தனர். ரம்யா தாஜ்மகால் பொம்மைகள் வாங்க விரும்பினாள். அழகாக பளிங்குக் கற்களில் செய்திருந்த தாஜ்மகால்கள் ஈர்த்தன. ஆனால் பேரம் பேசி வாங்க வேண்டுமே. ப்ரகாஷாதான் பேரம் பேசினான். யோசித்து யோசித்து ஒன்று..இரண்டு...மூன்று..நான்கு என்று வாங்கினாள். அட்டைப்பெட்டியில் காகிதச்சுருகளை வைத்துக் கட்டிக் குடுத்தார்கள். வாங்கிக் கொண்டு டாக்சியை நோக்கி நடந்தார்கள்.

கே.ஆர்.எஸ் சிரித்துக் கொண்டே வரவேற்றான். "ஆயியே சாப். முடிஞ்சதா? அடுத்து எங்க போகனும்?" மணி நான்குதான் ஆகியிருந்தது. வேறெங்கும் போவார்கள் என்று நினைத்துக் கேட்டான்.

அன்றைய திட்டப்படி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தான் சப்யா. அதற்கு முன் அலைந்த களைப்பில் முதலில் டீ குடித்தார்கள்.

காரில் ஏறப் போகையில் ரம்யா உள்ளே உட்கார கதவைத் திறந்தான் ப்ரகாஷா. "நான் முன்னாடி உக்கார்ரேன் ப்ரகாஷா. வரும் போது பேசீட்டே வந்ததால ஊரெல்லாம் பாக்கலை. இப்பப் பாத்தாத்தானே உண்டு. இதுக்காகன்னு எப்ப வரப் போறோம்." சொல்லிக் கொண்டே முன்னால் ஏறினாள் ரம்யா. ஏறியவளைப் பார்த்துச் சிரித்தான் கே.ஆர்.எஸ். அவனைக் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்தாள்.

சப்யாவும் சித்ராவும் பின்னாடி ப்ரகாஷாவோடு உட்கார்ந்து கொண்டார்கள். ரம்யா ப்ரகாஷா விஷயத்தைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். வேறொரு நல்ல சமயமாகப் பார்த்துப் பேசி முடிவுக்கு வர விரும்பினார்கள்.

தன்னோடு உட்காராமல் முன்னாடி சென்று ரம்யா உட்கார்ந்தது ப்ரகாஷாவுக்கு வலித்தது. என்னென்ன அவன் மனதில் ஓடின என்பதே அவனுக்குப் புரியாத அளவுக்கு வேகமான சிந்தனைகள். வீடு வர இன்னும் மூன்று மணி நேரங்கள் ஆகும். அதுவரை இப்படித்தான் சிந்தித்துக் கொண்டே இருக்கப் போகிறானா? அதற்கு அப்புறமும் சிந்திக்காமலா இருக்கப் போகிறான்?

ஆனால் ஒன்று. நடந்த நிகழ்ச்சி அவனுக்குள் எதையோ மாற்றி விட்டது. அது என்னவென்று அவனுக்கும் புரியவில்லை. பழைய ப்ரகாஷா இல்லை அவன். காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை. அவர் மட்டும் கண்ணில் பட்டால் அவரைச் சப்பாத்தி மாவு பிசைந்திருப்பான். என்ன செய்வது..கடவுள் எல்லாருக்கும் எப்பொழுதும் கண்ணில் தெரிவதில்லையே. ஏதோ அவருக்கு நல்ல நேரம்.

ரம்யாவின் மனதிற்குள் வேறு விதமான சிந்தனைகள். சற்று அதிகமாகவே பேசி விட்டோமோ என்றும் கூட யோசித்தாள். ஆனாலும் அவளது கேள்விக்கு விடை கிடைக்காதது ஏமாற்றமாகவே இருந்தது. "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ஆனால் சொல்லவில்லை என்ற அப்பட்டமான உண்மை கசந்தது.

இப்படி ஒவ்வொரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்கையில் கார் நொய்டாவை நோக்கி விரைந்தது. அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா.

தொடரும்

Tuesday, October 30, 2007

காதல் குளிர் - 6

சென்ற பகுதிக்கு இங்கே செல்லவும்.

ஓ ஆமோர்
பூ வண்ணம்
சஜோனி கோ
போல மின்னும்

சித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே மெட்டுதான். தாஜ்மகால் இருவரையும் காதல் காலத்திற்கே அழைத்துச் சென்றது. அதான் டூயட் தொடங்கி விட்டார்கள்.

"ஸ்டாப் ஸ்டாப்... என்ன நடக்குது இங்க? ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா? நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா?" வேறு யார்? ரம்யாதான்.

"ஏண்டி....நாங்க டூயட் பாடுனா ஒனக்கென்னடி? ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி?" சித்ரா விடுவாளா.

"என்னது காதலர்களா? இது யாரு? ஒங்க பையன். இவனை எங்க கைல குடுத்துட்டு... காதலர் வேஷமா? அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது?"

மனைவியானாலும் காதலிதானே. உதவிக்கு வந்தான் சப்யா. "ஹே ரம்யா...நான் கோலங்கள் அரசி எல்லாம் பாக்குறேன். எனக்குத் தமிழ் படிக்கவும் தெரியும். அ ஆ எல்லாம் படிப்பேன். மொதல் மொதலா...நான் சித்ரா கிட்ட தமிழ்லதான் காதலைச் சொன்னேன். தெரியுமா? அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......"

"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா."

பிரகாஷாவுக்குச் சின்ன குழப்பம். ரம்யா என்ன தன்னையும் காதலைத் தமிழில் சொல்லச் சொல்கிறாளா என்று. அதையும் சொல்லி விட்டான். "ஓ ஆமாவா. ரம்யா நான் உன்னே காதலிக்கிறே"

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு...இன்னொரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு...குனிந்து ப்ரகாஷா சொன்னது உண்மையிலேயே அழகாக இருந்தது. ரம்யாவிற்கும் அது பிடித்திருந்தது. ஒரு நொடி யோசித்தாள். "காதலிக்கிறே" என்பதில் ன் விட்டு விட்டதைக் கிண்டலடித்து பேச்சைத் திசை திருப்பலாமா எனவும் யோசித்தாள். அடுத்த நொடியே வேறு முடிவெடுத்தாள். சித்ராவும் சப்யாவும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவுமில்லாமல் ப்ரகாஷாவையும் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

"சரி. ப்ரகாஷா... உக்காரு." சப்யாவையும் சித்ராவையும் உட்காரச் சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தாள். எல்லாரும் இருக்கையிலேயே பிரச்சனையைத் தீர்த்து விடவும் முடிவு செய்தாள். சப்யாவும் சித்ராவும் ப்ரகாஷாவும் அவள் வாழ்க்கையில் பாகம்தானே.

"ப்ரகாஷா... காதலிக்கிறேன்னு சொன்ன. நானும் காதலிக்கனும்னு எதிர்பார்க்குற. காதலிக்கிறதுன்னா நான் என்ன செய்யனும்?"

மலையாளக் கலைப்படம் பார்ப்பது போல இருந்தது சப்யாவிற்கும் சித்ராவிற்கும். ஆனாலும் இந்தக் கூத்தையும் பார்த்துவிடுவோம் என்று இருந்தார்கள். ப்ரகாஷா பேசினான். அவனுக்காக. தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.

"ரம்யா... காதல்னா...என் மேலே ப்ரீத்தியா இருக்கனும்."

"ம்ம்ம்...ப்ரீத்தி. அதாவது அன்பு. இப்ப ஒன் மேல எனக்கு அன்பில்லைன்னு நெனைக்கிறயாடா?" அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

அதே கண்களுக்கே பதில் சொன்னான். "இருக்கு. அன்பு இருக்கு. ப்ரீத்தி இருக்கு. ஆனா அது மட்டும் போதாது. அம்ருதம் வேணும். அம்ருத பாத்ரமும் வேணும். ப்ரகாஷா வேற...ரம்யா வேற இல்ல. ரெண்டும் ஒன்னுதான்னு வேணும். மதுவேனோ திருமணமோ கல்யாணமோ....பேரு என்னவும் இருக்கட்டும். ஆனா வேணும்."

இதை அவன் சொல்லட்டும் என்றுதானே காத்திருந்தாள் ரம்யா. "ம்ம்ம்...கல்யாணம். உனக்கும் எனக்கும். ம்ம்ம்..."

சித்ராவால் பொறுக்க முடியவில்லை. "என்னடி யோசிக்கிற. பாரு அவனும் மனசுல இருந்ததச் சொல்லீட்டான். அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா?"

"அவனுக்குத் தமிழ் சரியா வராதது ஒரு பிரச்சனையே இல்லை சித்ரா. அவனுக்குத் தமிழே வரலைன்னாலும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். அதுல பேசிக்கிறோம். ஆனா எல்லாருமே ஒன்னு யோசிக்கலை. ப்ரகாஷா யாரு? எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா? நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ?"

சித்ராவிற்கு பொந்தில் இருக்கும் எலியில் வால் தெரிந்தது. அமைதியானாள்.

"சரி. ப்ரகாஷா....நீ வேலைக்கு வரும் போது..ஒங்கப்பா என்ன சொல்லி அனுப்பினாரு? மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா? எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா? அவர் ஒத்துக்குவாரா?"

ப்ரகாஷா ஒன்றுமே பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரிந்தால்தானே....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.

ரம்யா தொடர்ந்தாள். "ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார். எங்க வீட்டுல தயார். எங்க வெச்சி கழுத்தை நீட்டனும்னு மட்டும் நீ சொன்னாப் போதும். ஆனா... ஒத்துக்கலைன்னா...என்ன செய்வ?"

"ரம்யா....சரியாதான் கேக்குற. அப்பா ஒப்பு கொண்டரே கல்யாணம். ஒப்பு கொண்டில்லானாலும் கல்யாணம். நான் கண்டிப்பா ஒன்னையக் கல்யாணம் பண்ணுவேன் ரம்யா. என்ன நம்பு." கெஞ்சினான். முதலில் ஆங்கிலத்தில் ஆசையோடு காதலைச் சொன்னான். பின்னர் கம்பீரத்தோடு தமிழில் சொன்னான். இப்பொழுது கெஞ்சலாகச் சொல்கிறான். எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.

"சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா? ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற?"

தொடரும்...

Monday, October 22, 2007

காதல் குளிர் - 5

சென்ற பாகத்திற்கு இங்கே சுட்டவும்.

ரம்யா அமைதியாக ப்ரகாஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அமைதி ப்ரகாஷாவின் அமைதியைக் குலைத்தது. ஏற்கனவே ஒருமுறை சொல்லி விட்ட துணிவில் மறுபடியும் சொன்னான்.

"ரம்யா, I love you"

"loveனா என்னடா" அந்த டாவில் கொஞ்சல் இருந்தது.

"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."

"ம்ம்ம்ம்ம்." யோசித்தாள் ரம்யா. என்ன சொல்வதென்று தெரியாமல். ஒத்துக்கொள்ளவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அப்படிச் சொல்வது அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் "ஏதோ ஒன்னு" தடுத்தது. அத்தோடு ப்ரகாஷாவின் குடும்பச் செல்வாக்கும் அவளுக்கு ஒரு தடுப்பாகத் தெரிந்தது. யோசித்து யோசித்துச் சொன்னாள்.

"டேய். ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் கூட இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதிதான். சப்யா யாரோ! சித்ரா யாரோ! இருந்தாலும் அவங்கள்ளாம் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதியாயிட்டாங்க. அவங்க இல்லாம என்னால என்னோட வாழ்க்கைய நினைக்க முடியாது. அது மாதிரி நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு மறுக்க முடியாத பகுதி. ஆனா வாழ்க்கையே நீதான்னு சொல்றதுக்கு.......தெரியலைடா....நீ வேணும். எனக்கு வேணும். ஆனா எந்த அளவுக்கு வேணும்னு எனக்குப் புரியலை. ஆனா ஒன்னு....எனக்கு ஒங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ....அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன். அது நட்பானாலும் சரி... காதலானாலும் சரி...வேற எதுன்னாலும் சரி....நானே கேட்டு எடுத்துக்குவேன். அதோட எனக்கு வேற யார் மேலையும் காதல் கிடையாது. You are obviously special for me."

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "வாடா.....அந்தப் பக்கம் போகலாம்."

என்னதான் செய்வான் ப்ரகாஷா. ஒருவேளை ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான். ஆனால் ரம்யா கதவை மூடவில்லையே. அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதென்ன "Obviously Special"? உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது "I love you"தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ? கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே.

இதையெல்லாம் யோசித்துதான் ப்ரகாஷா ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து...அவளையே காதலையும் சொல்ல வைக்க முடிவு செய்தான். இனிமேல் அழப்போவதில்லை அவன். பாவம் ரம்யா. அவள்தான் அழப்போகிறாள்.

"OK. சரி ரம்யா. உன்னோட இஷ்டம்." அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நடந்தான். இத்மத் உத் தௌலா அவர்கள் காதல் ஸ்விட்ச்சை இயக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஏய்...என்னடி...ரொம்ப நேரமா குசுகுசுன்னு....நாங்க மூனு பேரும் இங்க இருக்கோம்." சித்ராதான் ரம்யாவையும் ப்ரகாஷாவையும் அழைத்தான்.

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு? என்னடா...சரிதானே?" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.

அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..." அவளது வலது கையில் கிள்ளி விட்டான். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ"வென்று கத்திக் கொண்டே...."என்னக் கிள்ளீட்ட...என்னக் கிள்ளீட்ட" என்று அவனது நெஞ்சில் படக்கென்று குத்தினாள். அவன் மட்டும் மிதமா? அவளை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு...கிறுகிறுவெனச் சுற்றினான்.

அவள் கத்திய கத்தில்...அங்கிருந்த அதிகாரி ஓடிவந்து விட்டார். "க்யா ஹோரா ஹே". வந்தவர் சித்ராவின் கையிலிருந்த ஃபெராவைப் பார்த்து விட்டு ஏதோ குடும்பத்தினர் விளையாட்டு என்று பேசாமல் திரும்பி விட்டார்.

"சரி. விளையாண்டது போதும். வாங்க. அடுத்து எல்லாரும் ஆக்ரா கோட்டைக்குப் போகலாம். நேரமாச்சு." சப்யா அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களை நியாபகப் படுத்தினான்.

காரில் ஏறுகையில் ரம்யாவிற்கு முந்தி ப்ரகாஷா ஏறி பின் சீட்டின் நடுவில் உட்கார்ந்தான். "ஏய்...அது என்னோட இடம்....நகரு...நகரு" என்று வம்படித்தாள் ரம்யா.

"ஹே....இது நின் காரா? வாடகே கார். எங்கயும் உக்காருவேன்." ப்ரகாஷா அடம் பிடித்தான். ரம்யா விடுவாளா? அவள் படக்கென்று காருக்குள் ஏறி ப்ரகாஷாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். ப்ரகாஷா ரம்யாவைத் தள்ள....ரம்யாவோ அவனை இறுகப் பிடித்துக் கொண்டு ஒட்டிக்கொள்ள.... ஒரே தள்ளுமுள்ளுதான்.

"ஆப்கோ ஷாதி ஹோகய்.. ஹி ஹி" கே.ஆர்.எஸ் மூக்கு நுழைந்தது.

"சாதியுமில்ல...பேதியுமில்ல...." கோபத்தில் முணுக்கினாள் ரம்யா. இவன் எவன் குறுக்கே வருவதென்று.

"நீங்க மொதல்ல ஆக்ரா ஃபோர்ட் போங்க" டிரைவரை விரட்டினான் சப்யா. அவர்கள் குதூகலத்தில் கே.ஆர்.எஸ் மூக்கை நுழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "சரி. மொதல்ல உக்காருங்க. நம்ம சண்டையை போற எடத்துல வெச்சுக்கலாம்."

அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்.

தொடரும்....

Monday, October 15, 2007

காதல் குளிர் - 4

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"ஆப்கா நாம் கியா ஹேய்" ஹிந்தியில்..இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் ரம்யா பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.

"மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா." சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பையைப் ப்ரகாஷாவை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.

அடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."

மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சப்யா வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.


பின்னாடி சீட்டில் ப்ரகாஷா வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள...ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். "புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே" என்று பொய்யழுகை அழுத சப்யாவின் தலையில் சித்ரா "நறுக்"கினாள். கலகலப்பாகத் அவர்களது ஆக்ரா பயணம் தொடங்கியது.

டிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது? பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்....சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்.

"சார். ஒரு உதவி"

சப்யா ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

"ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."

"இது வேறையா?"

"என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். ஆகையால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்."

"சரி...அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே."

"ஆமா சார். அதுவுமில்லாம ஆக்ரா ஊருக்குள்ள நான் சின்னச் சின்ன ரோடு வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்."

ரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ப்ரகாஷாவும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.

அந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சப்யா சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ப்ரகாஷா ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமான இருந்தாள்.

ஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். "மொதல்ல எங்க போறது சார்?"

"இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்." சப்யா எங்கெங்கு போக வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தான்.

இத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.


ரம்யாவிற்கும் ப்ரகாஷாவிற்கும் வாய்ப்புக் குடுத்து சப்யாவும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ப்ரகாஷாவின் துணையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"டேய்....என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள."

"முட்டாளா..இது மனே இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு."

"ஓ...அப்படியா? நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா? அதான் இங்க கட்டீருக்காங்க"

"இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க."

"ஆகா...இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்."

"ஹா ஹா ஹா..இன்னொந்து சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல்ஸ் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துலே இருக்குல்ல."

"ம்ம்ம்......" ப்ரகாஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை "என்னவோ செஞ்சு" வைத்தன. ப்ரகாஷா சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ரம்யா. I love you."

தொடரும்...

Tuesday, October 09, 2007

சூனியமான நண்பன்

விவாஜியோட கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவிதை இது.

சனி உன்னைப் பிடிச்சிருக்குன்னு
தெரு முக்கு ஆசாரி சொன்னாரே
கேட்க மறுத்தது உன்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா நீ என்னப் பாத்த

நான் ஒங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
ஒன்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டேன்!
ஒன்னோட கடங்கார அட்டையெல்லாம்
ஒன் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டேன்!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
எனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நானே குடிக்கிறதால
எப்பவுமே ஒனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நீ போறத
யாரும் சொல்லாம எனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
மாட்டிக்கிறன்னு எவனுக்கும் தெரியாது

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பேன்!
மாசக் கடைசி ஆகி நீ என்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பேன்!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
அப்பவும் உன்னாலதான பரோட்டா பார்சல் தூக்குனேன்
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே யோகம்டா.

உன் நட்பு வேணாமுன்னு யாருடா சொல்வா?
நீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் பெரிய "Salute"டா!
போகும் போது மறக்காம சொல்லி அனுப்புடா
நட்பத் தூக்கீட்டு நானும் வந்துர்ரேண்டா!

Monday, October 08, 2007

காதல் குளிர் - 3

முந்தைய பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

"ஒன்ன மாதிரி பொண்ணுதான்" ப்ரகாஷா யோசிக்கவேயில்லை.

"என்னது...என்ன மாதிரி பொண்ணா?" சின்னதாய் ஒரு மகிழ்ச்சி மழை ரம்யாவுக்குள். ஆனால் மண்டு அதை ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை.

"என்ன மாதிரிப் பொண்ணா....ம்ம்ம்ம்ம்....என்னையே ஒன்னால சமாளிக்க முடியலை...இதுல என்ன மாதிரி வேற....ஆனா இன்னொரு கண்டிஷனை மறந்துட்டியே."

"என்ன கண்டிஷன்?" ப்ரகாஷாவிற்கு எதையாவது விட்டு விட்டோமா என்று திடீர்ச் சந்தேகம்.

"ஆமா. பொண்ணு பெரிய எடத்துப் பொண்ணா இருக்கனும். பொண்ணு கவுடா பொண்ணா இருக்கனும். அப்பத்தான ஒன்னோட ஸ்டேடசுக்குப் பொருத்தமா இருக்கும். இல்லைன்னா ஒங்கப்பாம்மா ஒத்துக்குவாங்களா? கனக்புராவச் சுத்தி இருக்குற நெலமெல்லாம் ஒங்களோடதானே. நீ வேலைக்கு வந்ததே ஒங்கப்பாவுக்குப் பிடிக்கலை. ஒன்னோட தொந்தரவு தாங்காமத்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு வேலையப் பாருன்னு விட்டு வச்சிருக்காரு. போதாததுக்கு நீ இங்க வேலைக்கு வந்ததுமே டொம்லூர்ல வீடு. ஆபீஸ் போக வரக் காரு. அப்படியிருக்குறப்போ பொண்ணும் நல்லா வசதியா இருந்தாத்தான வீட்டுல ஒத்துக்குவாங்க."

ரம்யா கேட்ட கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. சந்திர கவுடாவின் செல்வாக்கு கனக்புரா வட்டாரத்தில் மிகப் பிரபலம். நல்ல நிலம் நீச்சு விவசாயம் பணம். ஊர்க்கட்டுமானம்.....சங்கம்..இத்யாதி இத்யாதி...வீட்டிற்கு கடைசிப் பிள்ளையான ப்ரகாஷா படித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இருக்கின்ற நிலத்தையும் பண்ணைகளையும் சொத்துகளையும் பார்த்துக் கொள்ளாமல் வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பிய பொழுது கனக்புராவையே ஆத்திரத்தில் குலுக்கி விட்டார். வேறு வழியில்லாமல் நான்கைந்து வருடங்கள் கெடு குடுத்து அனுப்பி வைத்தார். திருமணம் முடிவானதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கனக்புரா வந்து விட வேண்டும் என்பதும் அவருக்கும் ப்ரகாஷாவின் அண்ணன் சுரேஷாவிற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கட்டளை. இது ப்ரகாஷாவிற்கும் தெரிந்ததுதான். ஆனால் அவனுக்கு ஊரில் உட்காரவும் விருப்பமில்லை. வேலை செய்ய வேண்டும். தானாக வீடு வாசல் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நாலு இடங்களுக்குப் போக வேண்டும். நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பவனைக் கனக்புராவிற்குள் கட்டிப் போடலாமா? நமக்குத் தெரிகிறது. சந்திரகவுடாவுக்குத் தெரியலையே.

"என்னடா யோசனைக்குள்ள போயிட்ட. நான் சொன்ன கண்டிஷன் சரிதானே." பொய்ப் பெருமிதம் பொங்க அவனைப் பார்த்தாள். பார்த்ததும் முகம் மாறினாள்.

"டேய்...சாரிடா. I didnt mean to hurt you. நீ அதுக்காக இப்படியெல்லாம் வருத்தப் படாத. உன்னைய இப்பிடிப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை."

ப்ரகாஷா சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டான். "ஹே முட்டாளா....சும்மா யோசனே. You didnt hurt me. மொதல்ல சாப்டு."

டெல்லியில் விமானம் தரையிறங்கும் போது குளிராக இருப்பதாக அறிவித்தார்கள். இருவரும் குளிரை அனுபவித்தபடியே வெளியே வந்தார்கள். சப்யா ஏற்பாடு செய்திருந்த டாக்சிச் சக்கரங்கள் நொய்டாவை நோக்கிச் சுற்றின. பின் சீட்டில் ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்தபடி தூங்கி விட்டாள் ரம்யா. எப்படித்தான் தூங்கினாளோ? இவனால்தான் தூங்க முடியவில்லை. பின்னே...காதலிக்கும் பெண்...தோளில் சாய்ந்து நிம்மதியாகத் தூங்குகிறாள். இவனுடைய மனம் மட்டும் தூங்கவில்லையே. அவள் சாய்ந்திருப்பது அவன் தோள் என்பதால்தான் அவள் நிம்மதியாகப் பாதுகாப்பாகத் தூங்குகிறாள் என்பது அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை. மண்டு + மண்டு...இவர்களுக்குக் காதல்தான் குறைச்சல். ரம்யாவின் கதகதப்பு டெல்லிக் குளிரை விரட்டி விட்டுக் காதல் குளிரை மூட்டியது. சப்யா சித்ரா வீடு வரும்வரையிலும் என்னென்னவோ நினைத்து நினைத்துத் தவித்தான்.

"ஏஏஏஏஏஏஏஏ கழுத...." வீட்டிற்குள் நுழைந்த ரம்யாவைகச் சித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். "பார்த்து எவ்ளோ நாளாச்சு. ஆராமாயிருக்கியா(நல்லாருக்கியா)?" ப்ரகாஷாவைப் பார்த்து "பாரோ...ஆராமா?" என்றும் கேட்டாள்.

ரம்யாவிற்கு சித்ராவைப் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளோடு துள்ளித் துள்ளி பெங்களூரையே கதிகலக்கிய சித்ரா இப்பொழுது பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தாள். "நீ வெயிட் போட்டிருக்கடீ." முதல்முதலாக தன்னுடைய தோழியை ஒரு அம்மாவாகப் பார்க்கிறாள் அல்லவா.

ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த இடத்தில் ஆனந்தச் சூறாவளி வீசியது. அந்தப் புயலில் நான்கு பெரிய திமிங்கிலங்கள் விளையாடின. பெங்களூரில் இருந்து சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவர்கள் குழந்தை ஃபெராமியருக்கும் (Faramir) வாங்கி வந்த உடைகளையும் பரிசுகளையும் கடை விரித்தனர். என்ன பெயர் என்று பார்க்கின்றீர்களா? சப்யாவும் சித்ராவும் Lord of the Rings என்ற புத்தகத்தின் பரம ரசிகர்கள். அதில் வரும் ஃபெராமியர் பாத்திரம் இருவருக்கும் பிடித்ததால் அந்தப் பெயரையே மகனுக்கும் வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிப் பேசித்தான் இருவருக்குமே காதலே வந்தது.

"சரிடீ. நேரமாச்சு. மொதல்ல எல்லாரும் போய்த் தூங்குங்க. காலைல சீக்கிரம் எந்திரிச்சுக் குளிச்சிக் கெளம்பனுமே..." சித்ரா அனைவரையும் விரட்டினாள்.

"என்னது? சீக்கிரம் எந்திரிச்சிக் கெளம்பனுமா? எங்க கெளம்பனும்?" பக்பக்கினாள் ரம்யா.

"ஹே ரம்மீ...ப்ரகாஷா சொல்லலையா? சித்ராவும் ப்ரகாஷாவும் படா பிளான் போட்டாங்களே. என்னம்மா ரம்மீக்கு ஒன்னுமே தெரியாதா?"

பொங்கினாள் ரம்யா. "சப்யா...அவங்கதான் சொல்லலை. நீ சொல்லீருக்கலாமே. ப்ரகாஷா கூட வர்ரான்னு நீயும் சொல்லலை. டாக்சியோட மொபைல் நம்பர் குடுக்க ஃபோன் பண்ணீல்ல. அப்ப சொல்லீருக்கலாம்ல. இப்ப சித்ரா ப்ரகாஷா மேல பழி போடுறியா?"

"சரண்டர். சரண்டர். சரண்டர் ரம்மீ. ப்ரகாஷா...நீயே ஹேண்டில் பண்ணுப்பா."

"ரம்யா.... ஒனக்கு தாஜ்மஹல் பாக்க தும்ப நாள் ஆஷை இருக்குல்ல. நானும் போயிருக்கேன். சப்யாவும் சித்ராவும் போயிருக்காங்க. ஆனா நீ போகலை. ஒனக்காகத்தான் தாஜ்மஹல் பாக்க பிளான் பண்ணேன். சித்ரா சப்யா ஒத்துக்கினாங்க. அதான்."

"சரி. சரி. எனக்காகத்தான் எல்லாரும் தாஜ்மகால் போறோமாக்கும். எனக்காக இப்பிடி ஒரு திட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி மிஸ்டர்.ப்ரகாஷா. எனக்குத் தெரியாமலே எனக்குப் பிடிச்சதுக்குத் திட்டம் போடுறது. ம்ம்ம்ம்ம். போற போக்குல என்னோட கல்யாணம் தேனிலவுன்னு எல்லாத்துக்கும் எனக்குப் பாத்த மாப்பிள்ளை மாதிரி நீயே திட்டம் போடுவ போல."

ப்ரகாஷாவின் வாயில் ஒரு கிலோ அல்வா. தித்திப்புக்குத் தித்திப்பு. பேச முடியாமல் வாயும் ஒட்டிக்கொண்டது.

"ஏண்டீ. ப்ரகாஷாவுக்கு என்ன கம்மி? அழகில்லையா? அறிவில்லையா? துட்டு இல்லையா? He is handsome and hot. அவன் மாப்பிள்ளையா வந்தா ஒத்துக்க மாட்டியா?" சித்ரா வேண்டுமென்றே வாயைக் கிண்டினாள். அவளுக்கு ரொம்ப நாளாகவே ரம்யாவின் மேல் சந்தேகம். கழுதை....ஆசையை மனதுக்குள் வைத்துக் கொண்டு பேச மாட்டேன் என்கிறாளோ என்று. அதுவும் ஒருவிதத்தின் உண்மைதானே. ப்ரகாஷா மேல் தனக்குத் தோன்றும் உரிமைக்குக் காதல் என்று பெயர் என்று ரம்யாவுக்குப் புரிந்து விட்டால் போதுமே. அதுவுமில்லாமல் ரம்யாவின் வீம்பு வேறு.

"என்னது...ப்ரகாஷாவை கல்யாணம் செஞ்சுக்கனுமா? நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் பா. அப்படித்தான் நான் நெனைக்கிறேன். டாக்சீல வீட்டுக்கு வரும் போது கூட...ப்ரகாஷா தோள்ளதான் சாஞ்சு தூங்கீட்டு வந்தேன். எனக்குள்ளயோ ப்ரகாஷாக்குள்ளயோ அந்த மாதிரி ஆசை இருந்தா அப்படி வந்திருக்க முடியுமா? சொல்லு ப்ரகாஷா?" ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் வாயில் இருந்த அல்வாவானது பிரசவ நடகாய லேகியமாகியது. இப்பொழுதும் பேச முடியவில்லை.

"அதுவுமில்லாம ப்ரகாஷா எவ்ளோ பெரிய எடம். அவன் கன்னடம். நான் தமிழ்."

"சித்ரா தமிழ். நான் பெங்காலி." முடுக்குச் சந்தில் ராக்கெட் ஓட்டினான் சப்யா.

"சரி. சரி....இதப் பத்தி இப்பப் பேச வேண்டாம். எனக்குத் தூக்கம் வருது. காலைல எந்திரிக்கனும்." பேச்சை வெட்டினாள் ரம்யா. அவளால் உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. தாங்க முடியாத உணர்ச்சிகள் எழும் பொழுது அவைகளை அனுபவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள், அந்த உணர்ச்சிகளை அடக்கி விடுவார்கள். அல்லது அந்த உணர்ச்சிகளே தங்களுக்கு இல்லை என்று ஏமாற்றிக் கொள்வார்கள். ரம்யா அதைத்தான் செய்தாள். சித்ராவும் சப்யாவும் இதைப் பற்றித் திரும்பவும் எதுவும் சொல்வார்கள் என்று ஒரு நொடி நினைத்தால். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயடைத்து நின்றிருந்ததைப் பார்த்து விட்டு அவளுடைய ஏமாற்றத்தையும் மறைத்துக் கொண்டு அவளுக்கென்று சித்ரா ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் "குட் நைட்" சொல்லி விட்டு தூங்கப் போனாள்.

ப்ரகாஷாவின் மனதில் இருந்த ஏமாற்றத்தை சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவனது முகம் டீவி போட்டுக் காட்டியது. ப்ரகாஷாவின் முதுகில் மெதுவாகத் தட்டினான் சப்யா. "Dont worry Prakasha. It will work. She is still Kid. Now go to sleep. Itz too late. Good night."

ஹாலில் இருந்த பெரிய சோபா அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் வசதியாக படுத்துக் கொண்டான் குளிருக்கு இதமாகக் கம்பளி போர்த்துக் கொண்டாலும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் அவன் கண்களில் திறந்தன. "தூத்தூ....கண்டு அள பாரது (சீச்சீ ஆம்பள அழக்கூடாது)" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தூங்கிப் போனான்.

தொடரும்...

Monday, October 01, 2007

காதல் குளிர் - 2

சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.

பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.

"எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.

"தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.

ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.

நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. "என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு...."

மொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். "ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்."

"இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?"

"ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?"

"நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்."

ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.

"நீ எங்கடா இங்க?" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.

நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். "எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா? நீ எங்க இங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா?" பெருமையாகக் கேட்டான்.

பொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ! சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா? நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்."

உள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.


அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.

சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

"ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு..." ஆட்டோ கதையைச் சொன்னாள்.

"ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்."

"சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்."

"அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்." பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.


ரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...

"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.

"ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா."

"என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்."

"மரமா? என்ன மரம்?"

"ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்."

"மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு." தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.

"அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்."

"பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

தொடரும்...

Monday, September 24, 2007

காதல் குளிர் - 1

"ஏய் ப்ரகாஷா......லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் சொல்லலாம்னு வந்தேன்."

ப்ரகாஷா என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

"ஹே! ரம்யா....வா வா உக்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு ப்ரயாணம்?"

அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்....வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.

ப்ரகாஷாவும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் குளிரில் வேறு மாதிரி. ப்ரகாஷா கன்னட மகா. ரம்யா தமிழச்சி.


வேலையில் சேரும் பொழுதுதான் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்....ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.

ரம்யா ப்ரகாஷாவின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன திடீர்னு டெல்லி?" திரும்பவும் ரம்யாவைக் கேட்டான்.

"அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே....அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இண்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?" கேட்டு விட்டு ப்ராகாஷின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"என்னது?" அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. இண்டர்வியூ ஞாயித்துக்கெழமை. ஆனா எனக்கு வியாழக் கெழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?" திரும்பவும் ப்ரகாஷாவின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"ஏன்?" மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சப்யாவும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இண்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு ஞாயித்துக்கெழம இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?" முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான். அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். "நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)"

"ஏய்...என்ன பாத்துக்கிட்டேயிருக்க.... பொறாமையா இருக்கா? நான் போய் சப்யாவையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி....எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்....." சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா.


யாரிந்த சப்யாவும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ப்ரகாஷாவோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். ச்ப்யாவின் முழுப்பெயர் சப்யாசாச்சி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள். இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.

எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி..ப்ரகாஷாவும் சரி...நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.

தொடரும்...

இந்தக் கதையில் இதே நடிகர்களை நினைவில் வைத்துப் படியுங்கள். இந்தக் கதைக்காகப் படங்களைத் தேடுக் கொடுக்கும் தேவ், ராம், சிவிஆருக்கு என்னுடைய நன்றிகள். கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதினால் அந்தப் படத்தினை எனக்கு நீங்களும் அனுப்பலாம்.

Sunday, September 09, 2007

பி.மு பி.பி

என்னனு பாக்குறீங்களா? இதுவும் கி.மு கி.பி மாதிரிதான். ஆனா ஈழம் தொடர்பானது. பிராபகரனுக்கு முன்பு. பிரபாகரனுக்குப் பின்பு.

அதுக்குள்ள பிமு பிபி பத்திப் பேச வேண்டிய நேரம் வந்திருச்சான்னு கேக்காதீங்க. ஆனா யோசிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. என்ன யோசனைன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒன்னு. இந்தக் கட்டுரை ஒரு வெளியாள் சிந்தனைங்குற மனசுல வெச்சுக்கிட்டுப் படிங்க. எந்த வண்ணமும் பூசாம இப்பிடிப்பட்ட சமயத்துல என்ன நடக்கும்னு யோசிங்க. அதப் பின்னூட்டமா போடுங்க. நாகரீகமான பின்னூட்டமா இருக்கனும். தனிநபர்த் தாக்குதலாவோ இனத்தாக்குதலாவோ இல்லாம இருந்தா நல்லாருக்கும்னு கேட்டுக்கிறேன்.

இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்னு எல்லாருக்கும் தெரியும். குறைந்த பட்சம் அப்படித்தான்னு நெறையப் பேரு நெனச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு நெலமை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நாளைக்கு? பிரபாகரன் ரொம்ப நாளைக்கு இருப்பாருன்னு வெச்சுக்குவமே. அதுக்குள்ள ஈழப் பிரச்சனை தீந்திருச்சுன்னா நல்லது. இல்லைன்னா?

ஏன் சொல்றேன்னா....அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா.....ஆளு மாறிக்கிட்டே இருந்தாலும் யாராவது தலைவர்னு இருந்துக்கிட்டேயிருக்காங்க. அதுக்குக் காரணம் அரசியல்+ஜனநாயகம். நல்லது செய்றாங்களோ கெட்டது செய்றாங்களோ.....பண்டாரநாயக, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கே...இப்ப மகிந்த ராஜபக்ஷன்னு ஒருத்தர் இருந்துக்கிட்டேயிருக்காங்க. இப்ப இருக்குற மகிந்த போனாலும் அடுத்து ஒரு மந்திரிகா வர்ரதுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் நெறைய இருக்கு. ஆனா....இந்தப் பக்கம்?

ஏற்கனவே கருணாஸ் அது இதுன்னு பிரிஞ்சி போயி பிரச்சனைகள் வேற இருக்குது. இந்த நிலையில அடுத்த கட்டத் தலைவரா யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? அதுக்கான வழிமுறைகள் என்ன? அதுபத்தி எதுவுமே வெளிப்படையாத் தெரியலையே. இப்படி இருக்குறதால சாதக பாதக அம்சங்கள் என்னென்ன? சாதகத்துலயும் பாதகத்துலயும் எது நெறைய?

ஆக பிபின்னு யோசிச்சா....இந்தப் பக்கம் என்ன நடக்கலாம்னு தெளிவாத் தெரியாத நெலை. கூட்டணிப் பூசலாகலாம். நாலஞ்சுக் குழுவாகலாம். இப்ப எதுக்குற மாதிரி எதுக்க முடியாமப் போகலாம். அதுவே சிங்களப் பேரினவாதத்தைத் நிலைநிறுத்த அடுத்தடுத்த சிங்களத்தலைவர்கள் வந்துக்கிட்டேயிருப்பாங்க. ஆனா இங்க? தெளிவில்லாத நிலைதான் தோணுது. இதைத்தான் சிங்கள அரசாங்கமும் இனவாதிகளும் எதிர்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதுக்காக முயற்சிகளும் செய்வாங்க. அது எவ்ளோ பலன் தருமோ தெரியாது. ஆனா எத்தனை நாளைக்கு? கண்டிப்பா என்னால பிபிய தமிழர்களுக்கு நல்ல விதமா இருக்கும்னு நெனைக்க முடியலை. ஈழத்தமிழர்கள் நல்லாயிருக்கனும்னு நெனைக்கிறது உண்டுதான். ஆனா இந்த விஷயத்துல?

மக்களே ஒங்க கருத்துகளைச் சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, September 08, 2007

தமிழ் ஊடு கேளுங்க....

ஊடு கட்டி அடிக்கப் போறதா பயந்துக்கிறாதீங்க....ஊடுன்னா தெரியுந்தானே...மந்திரம் மாந்திரீகம் மாதிரி. அப்படித் தமிழ்ல ஊடு கட்டி அடிச்சா எப்படியிருக்கும்?

சுசீலா ராமன்னு ஒரு தமிழ்ப் பொண்ணுதான்...இப்பிடி ஊடு கட்டி அடிச்சது. அதுவும் பாரீஸ்ல. கூட யார்னு நெனைக்கிறீங்க? கோவை கமலா. சேது படத்துல "கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா"ன்னு பாடுனாங்களே. அவங்கதான். கே.பி.சுந்தராம்பாள் மாதிரிப் பாடுவாங்களே...அவங்கதான். அவங்களும் சுசீலா ராமனும் ஊடு கட்டி அடிச்சதுதான் இந்தத் தமிழ் ஊடு. பாரீஸ் மக்களுக்கு இப்பிடி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

உள்ளபடிக்கு இத முருகனருள்ளதான் போட்டிருக்கனும். ஆனாலும் மகரந்தத்துல போட்டாச்சு. மக்களே. கேட்டு ரசிச்சி...உங்க கருத்துகளை அள்ளி விடுங்க பாக்கலாம். வேலவா.............!!!!!!!!!!!!!!



அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 16, 2007

தஸ்லீமாவைத் தாக்கியது சரியா?

தஸ்லீமாவைத் தெரியாதவர்கள் கிடையாது என்று சொல்லும் நிலைக்கு அவரது எதிர்ப்பாளர்கள் அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தருகிறார்கள். சமீபத்தில் அவர் தாக்கப்பட்டார். ஐதராபாத்தில்.

அவர் என்ன சொன்னார் என்று இன்னும் படிக்கவில்லை. நேரமின்மையின் காரணமாகவே அது. ஆனால் தாக்கப்பட்டார் என்று தெரிந்தும் வலைப்பூ பரபரப்பாக இல்லாமல் இருந்தது வியப்புதான். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது. வலைப்பு அல்லோகல்லோலப் பட்டது. சிவசேனை அட்டகாசங்களும் வலைப்பூக்களில் பரவலாகப் பேசப்பட்டது. சிவசேனையின் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதைக் கண்டித்ததும் சரிதான்.

ஆனால் தஸ்லீமா தாக்கப்பட்டது? நமது அமைதி வியப்புதான். அவர் கருப்பைச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியதாகக் கேள்விப்படுகிறேன். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் பெரியாரும் அதே போன்ற...அல்லது அதே கருத்தைச் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். (முதலில் பெரியார் சொன்னதையும் தஸ்லீமா சொன்னதையும் படிக்க வேண்டும்.)

தஸ்லீமா தாக்கப்பட்டது சரியா தவறா என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதோ நீங்களே சொல்லுங்கள். ரகசிய வாக்கெடுப்புதான். தஸ்லீமா சொன்னதையும்...அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் பின்னணியை மட்டும் வைத்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவன் இவனை அடித்த பொழுது எங்கே போனோம். இவனை அவன் கடித்த போது எங்கே போனோம் என்ற கேள்விகள் சண்டைகள் வேண்டாம். அதெல்லாம் நடக்கும் பொழுது அதற்கென்று ஓட்டெடுப்பு வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்தச் சூழ்நிலையை மட்டும் வைத்து, உங்கள் வாக்கை அளியுங்கள். பின்னூட்டத்தில் எதையும் சொல்ல விரும்பினால் அதையும் சொல்லுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்

Friday, August 03, 2007

பூங்கா - கவிதை

கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை. இன்று தன்னைத்தானே என் வழியே பிரசவித்துக் கொண்டது ஒரு கவிதை. அந்தக் கவிதை இங்கே.



பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்
எனது பூங்கா
வரப்பில்லாதது
பொறுப்பில்லாதது
நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்
பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்


தாயுமானவனாக,
கோ.இராகவன்

Sunday, July 22, 2007

ஹாரி பாட்டரும் இனவெறியும்



ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?
ஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க?
நடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா?
விடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா?
சிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியலையா? அப்ப நீங்க இந்தப் பதிவைப் படிக்கனும். விடை தெரியும்னாலும் இந்தப் பதிவைப் படிச்சு நான் சொன்னது சரிதான்னு சொல்லனும். பதிவுக்குப் போவோமா?

என்னடா ஹாரி பாட்டர்ல இனவெறின்னு பாக்குறீங்களா? ஆமா. கதைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. விளக்கமாச் சொல்றேன்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி மொதப் புத்தகம் வந்துச்சு. ஒன்னு...ரெண்டு..மூனுன்னு...இப்பக் கடைசிப் புத்தகம் ஏழாவது பாகமா வந்திருக்கு. ஜே.கே.ரௌலிங் அப்படீங்குற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதுன கதைதான் இது.

கதையோட மையக்கருத்தே இனவெறிக்கு எதிராகப் போராடுறதுதான். ஆமா. அதப் படிக்கிறவங்களுக்கு இந்த உலகத்துல நடந்த நடக்குற இனவெறிப் படுகொலைகள் கண்டிப்பா நினைவுக்கு வரும். நல்லாக் கவனமாக் கேளுங்க. கதைச் சுருக்கத்தத் தெளிவாச் சொல்றேன்.

நம்மள்ளாம் சாதாரண மனிதர்கள்தானே. இதுல நம்மளப் போல மனிதர்கள் சிலருக்கு மந்திரஜாலமெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவங்களால நெறைய ஜாலங்கள் செய்ய முடியும். இப்ப ரெண்டு இனம் இருக்குதா? மந்திரம் தெரிஞ்ச இனம். தெரியாத இனம். தெரிஞ்ச இனத்துக்கு wizard communityன்னு பேரு. தெரியாதவங்களுக்கு mugglesனு பேரு.

இந்த mugglesஐ விட wizardsக்கு நெறைய சக்தி இருக்குதான. அந்தச் சக்தியை சாதாரண மனிதர்களுக்கு எதிராப் பயன்படுத்தாம அமைதியா வாழனும்னு wizard communityல ஒரு கூட்டம் நெனைக்குது. அதுவுமில்லாம muggles இனத்தோட கலப்புத் திருமணமும் செஞ்சுக்கலாம்னும் அவங்க நெனைக்குறாங்க.

ஆனா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்களுக்கு இனவெறி. wizard ரத்தம் எப்படிச் சாதாரண ரத்தத்தோட கலக்கலாம்னு நெனைக்கிறவங்க அவங்க. muggles எல்லாம் கீழானவங்க. அவங்க இருந்தா என்ன..இல்லைன்னா என்னனு இவங்க நெனைக்கிறாங்க. அவங்கள அப்பப்ப கொல்றது..கொடுமைப் படுத்துறதுன்னு இருக்காங்க. அதுவுமில்லாம கலப்புத் திருமணம் செஞ்சவங்க கொழந்தைங்களும் wizard/witchஆ இருந்தா அவங்களையும் வெறுக்குறாங்க. தங்களை Pure Blood அப்படீன்னு அழைக்கிறாங்க. அப்படிச் சுத்த ரத்தக் கல்யாணத்துல பொறக்காத wizard/witch குழந்தைகளை Mud Bloodன்னு கேவலமாச் சொல்வாங்க.

இப்பிடி wizard community ரெண்டா பிரிஞ்சிருக்குறப்போ நடக்குறதுதான் ஹாரி பாட்டர் கதை. ஒரு கெட்டவன் வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான். ஒரு கூட்டத்தச் சேத்துக்கிட்டு கொடுமைகளச் செய்றான்.

ஹோக்வர்ட்ஸ் (Hogwards) பள்ளிக்கூடத்துல இந்தப் பிள்ளைங்க படிக்கனும். மொத்தம் ஏழாண்டுப் படிப்பு. சரியா பதினோரு வயசுல சேந்து பதினெட்டு வயசுல படிச்சு முடிச்சு வெளிய வருவாங்க. அந்தப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா ஒரு நல்லவர் இருக்காரு. டம்பிள்டோர் (Dumbledore)னு பேரு. அவரு கெட்டவனுக்கு எதுராப் போராட ஒரு கூட்டத்த உருவாக்குறாரு. அதுல ரெண்டு பேரு ஜேம்ஸ் மற்றும் லில்லி. அவங்களுக்கு ஒரு குழந்தைதான் ஹாரி பாட்டர்.

நம்மூர்ல ஜாதகம் எழுதுறாப்புல அவங்க Prophecy எழுதுறாங்க. அதாவது இந்தக் குழந்தை என்னாகும்னு. அதுல இந்தக் கொழந்தையால வோல்டேமார்ட்டுக்குக் கெடுதீன்னு சொல்லுது. இதத் தெரிஞ்சிக்கிட்டு அவன் இவங்களக் கொல்ல வர்ரான். ஜேம்சையும் லில்லியையும் கொன்னுட்டு பாட்டரைக் கொல்லப் போறான். அப்பத்தான் அந்த அதிசயம் நடக்குது. ஆமா. அந்தக் கொழந்தை தப்பிச்சிருது. ஆனா வோல்டேமார்ட் சக்தியெல்லாம் இழந்து ஒன்னுமில்லாமப் போயிர்ரான். கதை தொடங்குறதே அங்கதான்.

அந்த அனாதைக் குழந்தை இப்ப ரொம்பப் பிரபலமாயிருது. டம்பிள்டோர் அத லில்லியோட அக்கா வீட்டுல வளர்க்க விட்டுர்ராரு. அவனுக்குப் பதினோரு வயசு ஆகைல ஹாக்வோர்ட்ஸ் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான். மொத்தம் ஏழு வருசம்னு சொன்னேனே. ஒவ்வொரு வருசத்துல நடக்குறதும் ஒவ்வொரு புத்தகம். இப்ப ஜூலை 21 2007ல வந்தது ஏழாவது புத்தகம்.

அந்தப் பள்ளிக்கூடத்துல ரான் (Ron) மற்றும் ஹெர்மயானி(Hermione) அப்படீன்னு ரெண்டு நண்பர்கள் கிடைக்குறாங்க. சக்தியெல்லாம் இழந்த வோல்டேமார்ட் திரும்பவும் சக்தி பெற்று உருவம் பெற்று ஹாரிபாட்டரைக் கொன்னுரனும்னு விரும்புறான். மொத மூனு புத்தகத்துலயும் மூனு விதமா முயற்சி செய்றான். ஆனா தோல்விதான். ஆனா நாலாவது புத்தகத்துல அவனுக்கு வெற்றி. முழு உருவம் வந்துருது. அஞ்சுல அவன் திரும்ப வந்தத மக்கள் நம்ப மாட்டேங்குறாங்குறாங்க. ஆனா அந்தப் புத்தகம் முடியுறப்போ மக்களுக்கு உண்மை தெரிஞ்சிருது. ஆறாவது புத்தகத்துலயும் ஏழாவது புத்தகத்துலயும் கடுமையான சண்டைகள். உயிரிழப்புகள். அப்பப்பா! கடைசில நல்லவன் வெற்றி பெறுவதுதான் கதை.

அட இவ்வளவுதானான்னு நெனச்சிராதீங்க. இத ஏழு புத்தகத்துல சொல்லனுமே. எத்தனை பாத்திரங்கள் அதுக்குத் தேவை. எவ்வளவு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தேவை. மாயாஜாலம்னு முடிவெடுத்தாச்சு. சொன்னதையே திரும்பச் சொல்லாம எவ்வளவு சொல்லனும். இதையெல்லாம் நல்லா செஞ்சிருக்காங்க ஜே.கே.ரௌலிங்.

இனவெறிக் கொடுமைகளை அவங்க விவரிக்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் சமயத்துல நாஜிகள் செஞ்ச வம்புகள் நினைவுக்கு வரும். அத வெச்சுத்தான் எழுதீருப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஏழாவது புத்தகத்துல வோல்டேமார்ட் ஆளுங்க எல்லாத்தையும் பிடிச்சிருவாங்க. அப்ப Pure Blood இல்லாதவங்கள்ளாம் அரசாங்கத்துக்கிட்ட பதிவு செய்யனும். அவங்களுக்கு மந்திரதந்திரம் தெரிஞ்சாலும் சொல்லக் கூடாது. பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்துனா கொல்றது. இந்த மாதிரியெல்லாம் படிக்கும் போது நம்ம நாட்டுலயும் வெளிநாடுகளிலும் நடந்த/நடக்குற கொடுமைகள் நினைவுக்கு வரும்.

புத்தகத்தோட வெலை கூடதான். ஒத்துக்க வேண்டியதுதான். அதே நேரத்துல புத்தகம் வந்ததுமே அதோட மின்பதிப்பும் கிடைச்சிருது. Technology has improve soooooooooo much. :))) ஆகையால வாங்குற கூட்டம் கொடுத்த காசு போதும். மத்தவங்க டௌன்லோடு பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.

ஆனா புத்தகத்தைப் படிக்க முயற்சி செஞ்சு பாருங்க. அப்பத்தான் அதுல இருக்குறது புரியும். படம் பாருங்க. ஆனா புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. படிச்சா விட முடியாது. அந்த அளவுக்கு ஈர்க்கும். சனிக்கிழமை காலைல ஒம்பது மணிக்கு புத்தகத்த வாங்குனேன். ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும் தூங்கீட்டு புத்தகத்தப் படிச்சு முடிச்சாச்சு. அந்த அளவுக்கு புத்தகம் என்னை மட்டுமில்ல...ரொம்பப் பேரை ஆட்டுவிச்சிருக்கு. படிக்காமலேயே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா....ஒன்னுமில்லை...போய் சாப்புடுங்கன்னு சொல்வேன்.

ஏழாவது புத்தகத்தப் பத்தி இந்தச் சுட்டியில பாருங்க. அதுல பல சுட்டிகள் இருக்கு. ஒவ்வொன்னும் நெறைய தகவல்கள் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆறாவது புத்தகம் வந்த பொழுது நான் எழுதிய பதிவு இங்கே.

இந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.









அன்புடன்,
கோ.இராகவன்