Thursday, November 30, 2006

ராகவன் நிறுத்திய தேர்தல்

பெரிய இரும்புக் கதவுக்கு முன்னாடி ரொம்பப் பேரு கூட்டமா இருந்தாங்க. சன், ஜெயா, விஜய், ராஜ் அது இதுன்னூ ஊர்ப்பட்ட டீவிக்காரங்க கூட்டம் வேற. ஆனா இரும்புக் கதவு மூடியிருக்கு. அதுக்குப் போலீஸ் காவல் வேற. அப்பத்தான் ராகவனோட கார் வருது. சர்ருன்னு பின்னாடியே ரெண்டு காருக. ஒடனே இரும்புக் கதவு தெறக்குது. ஆனா வந்த மூனு காருகளத் தவிர வேற யாரும் உள்ள நொழைய முடியலை. காருங்க உள்ள போனதும் கதவு மூடிருது.

காருக்குள்ள இருந்து இறங்குனது ராகவந்தான். உருண்ட மொகம். மொட்டைத்(அல்லது சொட்டை) தலை. கண்ணாடி வேற. கார்ல இருந்து எறங்கி விடுவிடுன்னு உள்ள போறாரு. போனவரு உள்ள ஏற்கனவே இருந்தவங்களையெல்லாம் கூட்டி வெச்சித் தேர்தலைத் தள்ளி வெச்சிட்டதா சொல்றாரு.

ஏனாம்? தேர்தல்ல கலந்து கிட்ட வேட்பாளர்கள்ள கிட்டத்தட்ட எல்லாக் கட்சீல இருந்தும் பலர் கொலயாயிருக்காங்களே! அமைச்சர் உட்பட. அப்புறம் எப்படித் தேர்தலை நடத்துறதாம்?

என்ன படிக்கிறவங்களுக்குக் கிறுகிறுங்குதா? எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சி உப்புப் போட்டு சோடா ஊத்தி பௌன்ஸ் குடிக்கனும் போல இருக்கா? இதப் படிக்கிற ஒங்களுக்கே இப்படியிருக்குன்னா...படத்தப் பாத்த எனக்கு எப்படி இருக்கும்! அதாங்க சிவப்பதிகாரம் படந்தான். அதுல இப்பல்லாம் படத்துல முக்கிய பாத்திரங்களுக்கு ராகவன்னு பேரு வெக்கிறது ஒரு ஃபாஷன் போல. இந்தப் படத்துல தேர்தல் ஆணையருக்குப் பேரு ராகவன். அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கியப் பாத்திரம் நானு.

படத்தப் பாத்துட்டு "ஏதாவது செய்யனும்னு" முடிவோடதான் இந்தப் பதிவைப் போடுறேன். ஏன்னா கதாநாயகரு ஏதாவது செய்யனும்னு சொல்லித்தான் படத்த முடிச்சி வெக்கிறாரு.அதுல பாருங்க இந்தக் கதாநாயகருதான் அத்தன பேரையும் கொன்னது. அதுலயும் எல்லாரும் இருக்குற எடத்துல கையில கத்திய தெளிவாக் காட்டிக்கிட்டே போயி....."கொலை வாளினை எடடா"ன்னு பாவேந்தர் பாட்டோட பின்னணியில ஒவ்வொருத்தரையா குத்திக் கொல செஞ்சிட்டு...நின்னு நிதானமா...சாவகாசமா நடந்து போய் தப்பிக்கிறாராம். அதுவும் ஒன்னு ரெண்டு இல்ல...கிட்டத்தட்ட அறுவதுக்கும் மேல.

ஏன் எதுக்குங்குறதுதான் கதை. ஆனா அதச் சொன்ன விதம் இருக்குதே...நமக்கே "கொலை வாளினை எடடா"ன்னு தோணும். அந்த அளவுக்குச் செஞ்சிருக்காங்க. அதுலயும் பாரதிதாசனோட அந்தப் பாட்டுக்கு இசையமைச்ச விதம் இருக்குதே...அடடா! அதப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டுத்தான் அப்பவே அவரு "கொலை வாளினை எடடா"ன்னு எழுதீட்டாரோ என்னவோ. பாவேந்தரோட பாட்டுகள் திரைப்படத்துல இவ்வளவு மோசமா இசையமைக்கப்பட்டது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். துன்பம் நேர்கையில் பாட்டு இத்தன வருசத்துக்கு அப்புறமும் கேக்க எவ்வளவு இனிமையா இருக்கு. மெல்லிசை மன்னர் இசையமைச்ச "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாட்டு. அப்புறம் கலங்கரை விளக்கத்துல வருமே "சங்கே முழங்கு சங்கே முழங்கு"ன்னு மெல்லிசை மன்னர் இசையில சீர்காழியும் இசையரசி பி.சுசீலாவும் பாடுவாங்களே. அப்புறம் சங்கர்-கணேஷ் கூட "சித்திரச் சோலைகளை உம்மை இங்கு திருத்த இப்பாரினிலே எத்தனை எத்தனை வீரர்கள் இரத்தம் சொரிந்தனரோ"ன்னு அருமையாத்தாங்க போட்டிருந்தாரு. வித்யாசாகருதான்.......சிவப்பதிகாரத்துல இப்பிடி.....ஏன் வித்யாசாகர்? பாட்டு புரியலையா? காதிலா வரிகளே விழாத அளவுக்கு இரைச்சல்.

சரி. இந்தப் பாட்டுதான் இப்பிடி. மத்த பாட்டுங்க? படத்தோட மொதப் பாதியில ரகுவரன் அவரோட பட்டிக்காட்டுக்கு வர்ராரு. அவரோட நாட்டுப்புறப் பாட்டு ஆய்வுக்கு உதவுற மாதிரி விஷாலும் அந்த ஊருக்கு வர்ராரு. அப்ப ரகுவரனோட மகளுக்கு விஷால் மேல காதல் வருது. இதுதாங்க இடைவேளை வரைக்கும் நடக்குது. அதுவே இழு இழுன்னு இழுத்ததுன்னா...பாட்டுங்க அழு அழுன்னு அழுத்துதுங்க. வெங்கலத் தொண்டை, பாரித் தொண்டை, கீரித் தொண்டை, வெள்ளித் தொண்டைன்னு ஒவ்வொரு தொண்டையும் விளக்குறப்போ நமக்கே தொண்டத் தண்ணி வத்திப் போகுது. உள்ளபடி சொன்னா நல்லா செஞ்சிருக்க வேண்டிய காட்சி அது.

அப்புறம் அறுவடைக்கு ஒரு பாட்டு. டி.கே.கலா குரல்ல தொடங்குது. உண்மையிலே நல்ல குரல். நாட்டுப் பாட்டுக்குப் பொருத்தமான பிருகாக் குரலு. ரகுமான் கூட இவர "குளிச்சா குத்தாலம்", "எதுக்குப் பொண்டாட்டி", "செங்காத்தே"ன்னு நாலஞ்சு பாட்டுக்கும் மேலையே குடுத்திருக்காரு. "போய் வா நதியலையே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை"ன்னு பழைய பாட்டெல்லாம் பாடியிருக்காரு. அப்படி அனுபவமுள்ள பாடகர வெச்சிப் பாட வெச்சும் அந்தப் பாட்டு கேக்க முடியலைங்குறதுதான் ரொம்ப வருத்தம். அத விட ஒரு கரகாட்டப் பாட்டு இருக்குதப்பா....ஷர்மிலியும் இன்னொரு பொண்ணும் சேந்து ஆடுறாங்க....பாத்தா கிளுகிளுப்பு வரலை...பயந்தான் வந்தது. வித்யாசாகர் பட்டிக்காட்டுப் பாட்டுன்னா அவ்வளவு லேசாப் போச்சு ஒங்களுக்கு. டைரக்டர் கரு.பழநியப்பன் அவர்களே...உங்களுக்குந்தான்.

ரெண்டு மூனு காதல் பாட்டுகள் வேற. சில்மிஷியேன்னு ஒரு பாட்டு. பா.விஜய்தான் இத எழுதீருக்கனும். கேக்க ஓரளவுக்குச் சுமாரா இருந்துச்சு. ஆனா பாக்க. ம்ம்ம்...அற்றைத் திங்கள் வானத்துலன்னு ஒரு பாட்டு. அதாவது தேன் இருப்பது தேன் கூட்டிலே...பால் இருப்பது பசுமடியிலேன்னு அடுக்கிக்கிட்டே போறாரு. அற்றைத் திங்கள்னா அன்றைய நிலா. அன்றைய நிலா வானத்திலேன்னா..இன்றைய நிலா எங்கேன்னு தெரியலை! கவிஞர்களே உங்களத் திட்டுறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. கொஞ்சம் புதுமையா சிந்திங்க. இல்லைன்னா பழைய பாட்டுகளப் போல எழுதீருங்க. ஏன்னா ஒங்களை விட நல்லா எழுதுறவங்கள பல தமிழ் மன்றங்கள்ளையும் வலைப்பூக்கள்ளயும் சந்திச்சிருக்கேன்.

கதாநாயகரு விஷாலு. நாலாவது படமாம். ஆனா வாயில தமிழ் விலையாடுது. காதுக்குள்ள கோணூசி போகாத குறைய தீர்த்து வைக்குறாரு. அது சரி...தமிழர்களே தமிள் நல்லாப் பேசும் போது இவரு தமில் பேசலாம். தப்பில்லை. நடிப்பு....மொறச்சு மட்டுந்தான் பாக்கத் தெரியும்னு நெனைக்கிறேன். மத்தவங்க என்ன சொல்றாங்களோ தெரியலையே.

என்னடா படத்தப் பத்தி இப்பிடி சொல்லிக் கிட்டே போறானே...நல்லதே இல்லையான்னு கேக்குறீங்களா? இருக்குங்க. ரெண்டு இருக்கு. கஞ்சா கருப்பும் கதாநாயகியும். ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா ரெண்டு பேருக்கும் நடிப்புக்கு வாய்ப்பே இல்லை. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

இந்தப் படத்துக்குப் போகனும்னு ஒரு நண்பர் கூப்பிட்டப்போ சிலப்பதிகாரம்னு என்னோட காதுல விழுந்தது. அதெல்லாம் எடுக்க மாட்டாங்களேன்னு நெனச்சப்போ சிவப்பதிகாரம்னு அவரு திருத்தினாரு. சிவப்பான அதிகாரமாம். படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!

Wednesday, November 22, 2006

பிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி

நான் காலைல வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியாவைப் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல வந்த ஒரு செய்தி ரொம்பவும் ஆச்சரியமா இருந்ததால சொல்லலாம்னு மயிலாரக் கூப்பிட்டேன். "மயிலாரே....ஒரு சேதி தெரியுமா?"

"ஓ தெரியுமே!" எந்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இல்லாம பதில் வருது. எனக்குன்னா கடுப்பு. விட்டுற முடியுமா?

"என்ன தெரியுமே! நான் என்ன சொல்லப் போறேன்னு ஒங்களுக்குத் தெரியுமோ?"

"தெரியுந் தெரியும். பிச்சாலஜி பத்தித்தான சொல்லப் போற"

அடடா! இவருக்கு எல்லாம் தெரிஞ்சி போகுது. அது சரி..எனக்கு முன்னாடியே பேப்பரப் படிச்சிருப்பாரு.

"அப்ப ராகவா! நீ யாரு? எந்த ஊரு? இப்ப என்ன நெனைக்கிற...எப்பப்ப எப்படியெப்படி முழிய மாத்துவங்குறதெல்லாம் தெரியும். அதுனால நேரடியா வழிக்கு வா! எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு! ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா?"

இனி என்னதான் செய்ய முடியும். நானும் தொடங்குனேன். "இந்த பிச்சாலஜி (bitchology) ரொம்பப் புதுமையா இருக்கே. ரஷ்யாவுல அதுக்குப் பள்ளிக்கூடமெல்லாம் தொடங்கீருக்காங்களாமே!"

"ஆமாமா...இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள. அப்படி நினைக்கிறப்போ...நெனச்ச மாதிரி உள்ளவங்களையே பார்க்கவோ பழகவோ நேர்ந்ததுன்னா.....அப்ப அவங்களோட ஈடுபாட்டத் தன் மேல கொண்டு வர்ரதுங்குறதுதான் பிச்சாலஜி (bitchology). சிலருக்கு அது தானா வருது. சிலருக்குத் தெரியிறதில்ல. அப்படித் தெரியாதவங்களுக்குத்தான் இந்தப் பள்ளிக்கூடம்."

"ஆமாம் மயிலாரே. பேப்பருலயும் அப்படித்தான் போட்டிருக்கு. ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். அதுனால இருக்குற நல்ல பசங்கள எப்படிக் கவர்ந்து அவங்களை தங்களையே கலியாணம் செய்ய வெக்கிறதுன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்ராங்களாம்.

விளாடிமிர் ரக்கோவ்ஸ்கி(Vladimir Rakovsky)ங்குறவரும் அவரோட மனைவியான யெவ்ஜெனியா(yevjenia)வும் இந்தப் பள்ளிக்கூடத்த தொடங்கீருக்காங்களாம். இவங்க பேரச் சொல்லும் போதே வாய்க்குள்ள வெண்ணெய்ய திணிச்சாப்புல இருக்குதே!"

மயிலார் சொய்ங்குன்னு பறந்து வந்து பக்கத்துல உக்காந்தாரு. "அடுத்து நானே சொல்றேன். வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டுந்தான் வகுப்பு. அதுவும் இரவுப் பாடசாலைதான். இதுனால ரொம்பப் பேரு பலனடைஞ்சிருக்காங்க."

"நீங்க சொல்றதப் பாத்தா ஒங்க மேலேயே எனக்குச் சந்தேகமா இருக்கு. மயிலாருக்குத்தான் பாஸ்போர்ட்டு விசாவே தேவையில்லையே. ராத்திரியோட ராத்திரியா ரஷ்யாவுக்கு ஷண்ட்டிங் அடிக்கிறீங்களா" எனக்கு இவரு மேல சந்தேகந்தான் எப்பவும். சடசடன்னு றெக்கைய அடிச்சிக்கிறாரு. உண்மையச் சொன்னா ஒடம்பு சிலுக்குது போல.

"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி யாரும் தப்பாச் சொல்லக் கூடாதுன்னு விளாடிமிர் சொல்றாரு. ஆண்களைக் கவர்ரது எப்படீங்குறதுல உள்ள புத்தம்புதிய பல வழிமுறைகளை அவங்க சொல்லித் தர்ராங்களாம். இந்த விவரங்கள் தெரியாம பெண்கள் வீணாகப் போயி தொந்தியும் தொப்பையுமா உள்ளவங்களொட வாழ வேண்டி வந்துருமேன்னு வருத்தப்பட்டுதான் இந்த மாதிரி பள்ளிக்கூடம் இருக்குதாம்.

அதுவுமில்லாம ஒரு பெண் சிறந்த பிச்சாகுறதுக்கு (bitch) மிகுந்த தன்னம்பிக்கையும், நடத்தையும் அறிவும் வேணுமாம். ஒரு ஸ்மார்ட்டான பொண்ணுதான் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதப் பெற முடியுமாம்."

சொல்லீட்டு எங்கயோ கெளம்புனாரு. "எங்க போறீங்க?"

"போகும் போதே கேட்டுட்டியா? சரி. இதெல்லாம் நமக்கு ஒன்னும் பண்ண முடியாது. சரி. சொல்றேன். கேட்டுக்கோ. ரஷ்யாவுல இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு தேர்வு வெப்பாங்கள்ள...அதுல தியரி முடிஞ்சதாம். பிராக்டிகர் பரிச்சைக்கு நான் தேர்வாளராப் போகனும். அவ்வளவுதான்...வரட்டா?"

ஆகா...இவரு மேல சந்தேகப் பட்டது சரியாத்தான் இருக்கும் போல. நல்லாயிருந்தாச் சரிதான். ரஷ்யாவுல என்னவெல்லாம் நடக்குது. நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.

"என்ன முனுமுனுக்குற?"

"ஒன்னுமில்லைய்யா...பொம்பளப் புள்ளைகளுக்கு எத்தனையெத்தனையோ பள்ளிக்கூடங்க...ஆம்பளப் பசங்களுக்கும் அப்படியே........................"

(மக்களே...செய்தியை இந்தச் சுட்டியில் படித்துக் கொள்ளுங்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 15, 2006

சீனியம்மா - வடக்க சூலம்

அகத்திக்கீடைய ஆஞ்சிக்கிட்டிருந்தா சீனியம்மா. அப்பப் பாத்துப் பக்கத்துல உக்காந்தான் அழகரு. அழகுப் பேரன். ஐயனாரு கோயிலு பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கான். கொளக்கட்டாங்குறிச்சிச் தலக்கட்டுக எல்லாம் வரி வாங்கி பெரிய ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பெரிய கம்மாய் பக்கத்துல இருக்குற ஐயனாரு கோயில்லதான் கொடை. ரொம்ப காலமா நடக்காம இருந்து இந்த வாட்டி நடக்குது. அதுக்குத்தான் ஊருல இருந்து வந்திருக்கான் அழகரு.

"ஐயாளம்மா, அகத்திக்கீரையோட அரட்டையா?" கிண்டலாத்தாங் கேட்டான். சீனியம்மா விடுமா? "ஆமாய்யா...ஆஞ்ச கீர போட்டுத்தான் காஞ்ச பயகளத் தேத்தனுன்னா அரட்டைன்னு பாக்க முடியுமா? செரட்டைன்னு பாக்க முடியுமா?"

வழிஞ்சான். பின்ன. வேலைக்குப் போன எடத்துல கண்டதத் தின்னு காஞ்சி போயில்ல வந்திருக்கான். அப்பிடியே பேச்ச மாத்துனான். "சரி. ஊரு கூப்புட யாரு போறது? செவலார்பட்டிக்கு ஆரு போறா? இப்பயே சொல்லி விட்டாத்தான பொழுது சாய வருவாக."

செவலார்பட்டிலதான் சீனியம்மா கூடப்பொறந்த கெங்கம்மாளக் குடுத்திருக்கு. அந்தம்மாவுக்கும் புள்ள குட்டீன்னு குடும்பம் பெருசு. சம்பந்தங்காரங்க பங்காளிகன்னு பெரிய வீடு. ஊர்ப் பொங்கலுன்னா சொல்லியனுப்பனுமா இல்லையா? அதத்தான் அழகரு கேக்கான்.

"அப்பெல்லாம் நானே ரெண்டு எட்டுல செவலாருபட்டி போயிருவேன். இல்லைன்னா...வண்டி கெட்டுனா...நானே பத்திக்கிட்டு நெம்மேனி வரைக்கும் போயிருவேன். சூலங் கீலமுன்னு பாக்க மாட்டேன். இப்ப எங்க? அதான் மோட்டார் சைக்குளு இருக்கு. எளவட்டங்க படக்குன்னு போயிட்டு வந்துர்ரீக." பழைய கதைய நெனச்சு அலுத்துக்கிட்டா சீனியம்மா.

"அதென்னம்மா சூலம்? அத ஏன் பாக்கீக? வெவரஞ் சொல்லுங்களேன்"னு கேட்டான். இவனுக்கு ஒரு மண்ணுந் தெரியாது. ஊருக்குள்ள இருந்து கிருந்து படிச்சிருந்தா என்னைக்கு எங்க சூலம்னு தெரிஞ்சிருக்கும்.

"என்ன அழகரு! இப்பிடிக் கேட்டுட்ட. அப்பெல்லாஞ் சூலம் பாக்காம ஒரு எட்டு வெக்க மாட்டோமுல்ல. இந்த கெழமைக்கு எந்தப் பக்கஞ் சூலமுன்னு இருக்கு. அத மீறிப் போக முடியுமா? போனாலுஞ் சூலஞ் சும்மா விடுமால? ஆனா எந்தச் சூலமும் என்னய ஒன்னுஞ் செஞ்சிக்கிற முடியாது. நாஞ் சூலத்துக்கே சூலம்." சொல்லைலயே சீனியம்மாளுக்குப் பெருமிதந்தான்.

"அட! என்ன இந்தப் போடு! அதென்ன கத? அதையுஞ் சொல்லுங்களேங் கேக்கேன்."

"ம்ம்ம்....ஒனக்குச் சொல்லாமலாய்யா. கண்டிப்பாச் சொல்றேன்." பேரங் கேட்டதும் ஒத்துக்கிட்டா. "அப்ப எனக்கும் ஒன்னோட ஐயாளய்யாவுக்கும் முடிச்சி ஒரு மூனு வருசம் இருக்கும். ஒங்கப்பாவுக்கு ரெண்டு வயசு. அப்ப செவலார்பட்டியில ஒன்னோட சின்னப்பாட்டிக்குப் பேறுகாலம். எங்கம்மா இல்ல. நாந்தான் அக்கா. காலைல பாத்து சேதி வந்திருச்சு. இடுப்பு வலின்னு. நடந்தா நேரம் ஆகுமுன்னு சடக்குன்னு வண்டியப் போட்டுக்கிட்டுத் தனியாப் பொறப்பட்டேன். அவரு வயலுக்குப் போகனுமில்ல.

அன்னைக்கு சூலம் எந்தப் பக்கமுன்னு பாக்கல. வடக்க சூலமாம். நாந் தெரியாம ஒன்னோட ஐயாளய்யா கிட்ட சொல்லிக்கிட்டு வண்டியப் பத்துனேன். வடக்கதான போகனும். பெரிய கம்மா தாண்டி ஊர்க்கெணறு தாண்டிப் போறேன். அப்ப வந்து நிக்குதய்யா. கருகருன்னு நெடுநெடுன்னு. சூலந்தான். முண்டக்கட்டையா நிக்கி. பாக்கவே திக்குன்னு இருக்கு. ஒத்தப் பொம்பள என்ன செய்ய முடியும். பதட்டந்தான். சூலமோ கண்ணாமுழி ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சி என்னையப் பாக்குது.

அங்கன ஒரு காக்கா குருவி கூட இல்ல. நாயக் கூடக் காணோம். சூலம் இருக்குறப்ப வருமா? நாந்தான் போயி மாட்டிக்கிட்டேன்.

சூலம் வாயத் தொறந்து, "இன்னைக்கு வடக்க சூலம்னு தெரியாதா? ஏன் வந்த? ஒன்னய என்னமுஞ் செஞ்சிர வேண்டியதுதான்"னு மெரட்டுச்சு. உர்ர்ர்ர்ர்ருன்னு உறுமல் வேற. பாதகத்தி நானு. ரெண்டு வேப்பிலையாவது போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. ஆனாலும் விடல. "ஐயா! தெரியாம செஞ்சிட்டேன். கூடப் பொறந்தவளுக்குப் பேறுகாலம். அக்கான்னு ஒத்தையா நாந்தான். அதான் பொழுது கெழம பாக்காமப் பொறப்புட்டேன்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கு சூலம்.

திரும்பத் திரும்ப "இன்னைக்கு வடக்க சூலம். வடக்க சூலம்"ங்கு. நானும் பாத்தேன். நேரமாகுதேன்னு கடுப்பு வேற. எரிச்சல்ல, "யெய்யா....வடக்க சூலமுன்னு வடக்க பாக்க நிக்க வேண்டியதுதான? ஏன் இப்பிடி தெக்க ஆட்டிக்கிட்டு நிக்கீரு? ஒமக்கே மூள கொழம்பீருச்சா"ன்னேன்.

சூலமுங் கொழம்பீருச்சு. வடக்க சூலமுன்னா வடக்க பாக்கனுமா தெக்க பாக்கனுமான்னு அதுக்கே ஒரு சந்தேகம். அதான் சாக்குன்னு கூடக் கொஞ்சம் பேசிக் கொழப்பிச் சூலத்த வடக்கப் பாத்து நிக்க வெச்சிட்டு நாஞ் செவலார்பட்டிக்குப் போயிட்டேன். பேறுகாலமுஞ் சரியா நடந்து முருகம் புண்ணியத்துல கதிரேசு பொறந்தான். நாலஞ்சு நாளு இருந்துட்டு திரும்பப் பொறப்பட்டேன்.

அன்னைக்கு பாத்து வடக்க சூலமாம். குளக்கட்டாங்குறிச்சி தெக்குலதான இருக்குன்னு யாரும் கண்டுக்கல. எனக்கும் நெனப்பில்லை. ஊருக்குத் திரும்ப வந்தாத்தான சீருக்குச் செய்ய முடியுமுன்னு வண்டீல ஏறி வந்தேன். வந்தா வடக்க பாத்து நிக்குது சூலம். என்னையப் பாத்ததும் அடையாளந் தெரிஞ்சிக்கிறிச்சி சூலத்துக்கு.

"இன்னைக்கு வடக்க சூலம். அதான் வடக்க பாத்து நிக்கேன். வசமா மாட்டிக்கிட்டியா"ன்னு கும்மரிச்சம் போடுது. எனக்குக் கலங்கிப் போச்சு. கையுங் காலும் ஓடல. மாடுகளும் படபடங்குதுக.

அப்பச் சொல்லுச்சு சூலம். "இங்க பாரு பிள்ள. இன்னைக்கு வடக்க சூலம். ஒன்னுஞ் செஞ்சிராம இருக்கனுமுன்னா ஒழுங்காத் திரும்பப் போயிரு. இல்லையின்னா ஒனக்குச் சூலம் பொறக்க வெச்சிருவேன்"னு மெரட்டுச்சு.

நானும், "யெய்யா! என்னமுஞ் செஞ்சிராதீக. நாந் திரும்பியே போயிர்ரேன். நீங்க விட்டுருங்க"ன்னு கெஞ்சுனேன். சூலமும் ஒத்துக்கிருச்சு. நானும் வண்டியில திரும்பி உக்காந்துக்கிட்டு மாட்டக் கொளக்கட்டாங்குறிச்சிக்கே பத்துனேன்.

சூலத்துக்கு ஆங்காரங் கூடி, "ஏய்......திரும்பிப் போறேன்னு இங்குட்டே போறயே...என்ன திமிரு...ஒன்னய.."ன்னு பாஞ்சு வந்துச்சு.

இப்ப நானும் சுதாரிச்சிக்கிட்டேன். "இந்தா! ரொம்ப மெரட்டாதீரும். திரும்பிப் போகச் சொன்னீருன்னுதான திரும்பிப் போறேன். நேராவா போறேன். அப்புறம் எதுக்கு இந்தப் பாடு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன்.

சூலந் தெகச்சிப் போச்சி. காச்சு மூச்சுன்னு கத்துச்சு. ஆனா என்னைய ஒன்னுஞ் செய்ய முடியல. சொன்ன வாக்கு மாற முடியுமா? நானும் இதுதாஞ் சமயமுன்னு வண்டியப் பத்திக்கிட்டு வந்துட்டேன். இதாய்யா நடந்துச்சு.

மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான். "ஐயாளம்மா.....மீறிப் போனா சூலம் பொறக்க வெப்பேன்னு மெரட்டுச்சே சூலம்...இதே ஆம்பிளையா இருந்தா என்ன செஞ்சிருக்கும்?"

"அட....அதுவும் ஒரு கததான். பன்னீரு கத அப்பிடித்தான் ஆச்சு."

"அதென்ன...சொல்லுங்க" கத கேக்குற ஆவல்ல கேக்கான் அழகரு.

ஆனா சீனியம்மா விடல. "மொதல்ல குளிஞ்சிட்டு செஞ்சிட்டுச் சாப்புட்டதும் செவலார்பட்டிக்குப் போயிட்டு வா. கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 13, 2006

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

முந்திய பாகத்திற்கு இங்கே செல்லவும்.

"தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

"திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

Photobucket - Video and Image Hosting

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

Monday, November 06, 2006

02. மாட்டுத்தாவணி மகாத்மியம்

முதல் பாகத்தை இங்கே படிக்கவும்.

தலைப்பு வைக்கும் போது கேடிசி பிஆர்சி தூத்துக்குடீன்னு ஏன் வெச்சிருக்கேன்னு மொதல் பதிவுல சொல்லலையே. இப்பச் சொல்லீர்ரேன்.

கேடிசி = கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன். தூத்துக்குடி திருநவேலி மாவட்டத்துக்காரங்களுக்கு நல்லா நினைவிருக்கும். நாகர்கோயில்காரங்களும் கண்டிப்பா பாத்திருப்பாங்க.

பிஆர்சி = பாண்டியன் ரோட்வேஸ் கார்ப்பரேஷன். இது மதுர மாவட்டம். விருதுநகரு மாவட்டத்துக்கும் இதுதான். ஆகையால தெக்கில இருக்குறவங்களுக்கு இந்த ரெண்டுமே கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இப்பல்லாம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்தானே. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்.

இந்த வண்டிகள்ள அவங்கவங்களுக்கு ஒரு நிறத்துல ஓட்டுன காலங்களும் உண்டு. பிஆர்சின்னா பச்ச வண்டி. கேடிசின்னா காவி வண்டி. சென்னையில பல்லவன் செவப்பு வண்டி. இப்படி இருந்தது. இப்ப எல்லாம் ஒன்னாயிருச்சு. ரொம்ப நாள் கழிச்சுத் தூத்துக்குடிக்குப் போனதால பழைய நெனைவுகளுக்குத் தக்க பழைய பேர்களப் போட்டுக்கிட்டேன். :-) அதையும் நம்ம நண்பர்கள் ஜோவும் தாணுவும் கண்டுபிடிச்சிட்டாங்களே!

சரி. நம்ம கதைக்கு வருவோம். விடியக்காலைல ரெண்டரைக்கு செல்பேசி எழுப்பி விட்டது. வாடிபட்டிய நெருங்கீருந்தோம். பேரப் பாத்ததுமே சிங்காரவேலன்ல "வாடிப்பட்டி வம்சம்"னு கமல் பாடுறது நினைவுக்கு வந்துச்சு. வெளிய நல்லா மழ பேஞ்சிருந்தது தெரிஞ்சது. அதென்னவோ தமிழ் நாட்டுல மழ பேஞ்சா ஒரு மகிழ்ச்சிதான். பஸ்சுல கூட வந்தவரும் மதுரைல எறங்கனுமாம். அவரு டிரைவர் கிட்ட போயி வண்டிய மாட்டுத்தாவணிக்கு விடச்சொல்லிக் கேட்டாரு.

நாங்க உக்காந்திருந்தது கடைசி வரிசை. இருந்தாலும் டிரைவரு சொன்னது காதுல விழுந்தது. "டிரைவருக்குப் பதிலா நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன்"னு சொன்ன கண்டெக்டருதான் அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பாருங்க......டிரைவர்னா நாய் மாதிரி இருக்கனும்னு அவரு தப்பா நெனைச்சிருக்காரு போல. "நீங்க இப்பிடிக் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒங்கள ஏத்திரூக்கவே மாட்டேன்"ங்குற கொஞ்சம் கூடுதலான மரியாதை(!)யோடு குலைச்சாரு....சேச்சே.....சொன்னாரு. கடைசியில பெரிய மனசு வெச்சி ஒருவழியா எங்களையெல்லாம் ஆரப்பாளையத்துல ரோட்டு மேலயே எறக்கி விடச் சம்மதிச்சாரு. "என்ன தாராள மனசு. இவருக்கு இருவது ரூவா குடுத்திருந்தா மாட்டுத்தாவணிக்கே போயிருப்பாருன்னு யாரோ கிண்டலடிச்சாங்க." குடுத்திருக்கலாமோ!!!!!

நான் ஆரப்பாளையத்துல எறங்காம அந்த வண்டியிலயே திருநவேலி போயிருந்தா அங்கிருந்து முக்கா மணி நேரத்துல தூத்துக்குடி போயிருந்திருக்கலாம். ஆனா விதி யார விட்டது?

ஆரப்பாளையம் மெயிண்ரோட்டுல எறங்கி அப்படியே உள்ள நடந்தா ஆரப்பாளையம் பேருந்து நெலையம். இப்பல்லாம் நாட்டுல நெறைய இலவசங்களாகிப் போச்சு. அதுலயும் நிவாரண நிதிகளப் பத்திச் சொல்லவே வேண்டாம். பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக் கூட்டம். நிக்க ஒதுங்க எடமில்லை. மாட்டுத்தாவணிக்குப் போற வண்டியோ அந்நேரத்துக்கே பொங்கலோ பொங்கல்னு பொங்கி வழியுது. தீபாவளிக்குப் பொங்கல். என்ன செய்றது? ஆட்டோக்காரனோ எம்பது ரூவா கேக்குறான். அன்னைக்குத்தான வாழ்வு. நாங்கூட போயிரலாமோன்னு நெனச்சேன். ஆனா கூட வந்தவங்க விரும்பலை. சரீன்னு திறமையெல்லாம் காட்டி நாங்களும் பஸ்சுக்குள்ள எங்களத் திணிச்சிக்கிட்டோம்.

திடீர்னு வழியில டிரைவரு "படியில இருக்குறவங்க உள்ள நெருக்கிக்கிங்க. வெளிய இருக்காதீங்க"ன்னு சொன்னாரு. காரணத்தையும் அவரே சொன்னாரு. ஒரு குறுகலான பாலம். ஒரு பஸ்தான் போக முடியும். படியில நின்னு வெளியில தொங்குனா கண்டிப்பா எங்கையாவது ஏதாவது இழுத்து வெச்சிரும். இதுக்கு முன்னாடி அப்படி ஆயிருக்கும் போல. அதான் அவரும் அறிவுருத்துனாரு. நல்லாயிருக்கனும் அந்த டிரைவரு.

ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா. அவ்வளவு கூட்டம். தூத்துக்குடி பஸ் நிக்கிற எடத்துக்குப் போனா அங்க எந்த பஸ்சும் இல்லை. நாகர்கோயில், திருநவேலி, ராசபாளையம், செங்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தேனி, கோட்டூர் (இந்த ஊரு சாத்தூர்ல இருந்து இருக்கங்குடி வழியா போனா வர்ர ரொம்ப ரொம்ப சின்ன ஊரு) அப்படீன்னு எல்லா ஊருக்கும் வண்டிக வருது. போகுது. தூத்துக்குடி அரவத்தையே காணம்.

"ஏண்டி ஒங்கூரு வண்டி இப்பிடிக் கழுத்தறுக்குது" ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தி தூத்துக்குடி. இன்னொருத்தி வேற ஊரு போல. இவள வண்டியேத்தீட்டுப் போகலாம்னு அவ காத்திருந்தான்னு நெனைக்கிறேன். "பேசாம அருப்புக்கோட்டைக்குப் போறியா?". அத விட வேற வினையே வேண்டாம்னு நெனச்சேன். நல்லவேள அந்தப் பொண்ணும் அந்த யோசனைய ஏத்துக்கலை. தூத்துக்குடி மக்கள்ளாம் இங்குட்டும் அங்குட்டும் திரும்பித் திரும்பிப் பாக்காங்க. ஒவ்வொரு பக்கமும் வர்ர வண்டியெல்லாம் எந்தூருன்னு பாக்காங்க. நானுந்தான்.

அங்க ஒரு கடைல, "அண்ணே தூத்துடி வண்டி எத்தன மணிக்கு"ன்னு கேட்டேன். அவரும் ஒடனே, "ஏழு மணிக்கு"ன்னு சொல்லீட்டு டீயாத்துறத தொடர்ந்தாரு. ஆத்துன டீயில ஜீனிக்குப் பதிலா என்னையப் போட்டு ஆத்துன நெலமை எனக்கு. ஏழு மணிக்கு இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே. அப்ப பத்து மணிக்குத்தானா தூத்துடின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசாம கோயில்பட்டி போயிரலாம்னு நெனச்சேன். திருநவேலி நாகர்கோயில் போற வண்டியெல்லாம் கோயில்பட்டி வழியாப் போகும். கோயில்பட்டியில எறங்குனா அங்கிருந்து ஒன்னேகால் மணி நேரந்தான் தூத்துக்குடி.

அப்படியே வருத்தத்தோட அந்த வண்டிங்க வர்ர பக்கமாப் போனேன். காலை நேரம். குளிரு வேற. அவசரமா ஒன்றாம் எண்ணுக்குப் போக அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்துக்குள்ள தெரியாம நொழைஞ்சிட்டேன். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னொரு வாட்டி அதுக்குள்ள நுழையனும்னா நீல் ஆம்ஸ்ட்ராங் கிட்ட டிரஸ் வாங்கீட்டு வந்துதான் நொழையனுங்குற மாதிரி இருந்துச்சு. என்ன செய்ய...ஆத்திரத்தைத்தான அடக்கலாம்........

இப்படி செஞ்சிட்டியே முருகான்னு வெளிய வந்து பாத்தா அங்க திருச்செந்தூர் வண்டி நின்னது. ஆனா டிரைவரும் கண்டெக்டரும் எறங்கீட்டாங்க. கண்டிப்பா வண்டி தூத்துக்குடிக்குப் போகும்ன்னு டிரைவர்கிட்ட உறுதி படுத்திக்கிட்டேன். அப்படியே முருகனே வண்டியோட நின்ன பூரிப்பு எனக்கு. உக்கார எடமில்லை. இருக்கட்டும். அதுனால என்ன. நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன். அளவுக்கு மீறி ஆசப்பட்ட ஆம்பளையும் அளவுக்கு மீறி கோவப் பட்ட பொம்பளையும் உருப்பட்டதில்லைன்னு ஏதோ சினிமாவுல எல்லாம் சொல்றாங்களாம். சினிமாவுலதான ரொம்ப வருடங்களா கதாநாயகி கையப் பிசுக்கிக்கிட்டே கதாநாயகர்கள் நல்ல கருத்தெல்லாம் சொல்றாங்க. அதுனால நானும் இந்த உதவி செஞ்சதே போதும்னு முருகனுக்கு நன்றி சொல்லீட்டு ஏறி நின்னேன்.

அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........