Monday, December 25, 2006

பொய் - விமர்சனம்

கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்.

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது முன்பு. இன்று அவர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற ஆவல்தான் படத்தைப் பார்க்கத் தூண்டியது.

தொடக்கமே தமிழ் மயம். வள்ளுவனார் என்று ஒரு தமிழ்/அரசியல் தலைவர். ரொம்பவும் நல்லவர். அவருக்குக் கம்பன் என்று ஒரு மகன். அவந்தான் கதாநாயகன். எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா. அப்பாவுக்கும் மகனுக்கும் ஆகாது. லேசாக அபூர்வ ராகங்கள் வாடை. "அம்மா! இன்னைக்கு எந்தக் கடவுள் அருள் குடுப்பாரும்மா?" என்று மகன் கேட்கும் பொழுது "முருகன் குடுப்பாரு"ன்னு அம்மா சொல்லும் போது நமக்குப் புல்லரிக்குது. ஆனா அதுக்கப்புறம் வெறும் அரிப்புதான். புல்லைக் காணோம். புலியைக் காணோம் என்று ஓட வேண்டிய நிலை.

அப்பாவிடம் இருந்து கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க இலங்கைக்குப் போகிறார் கதாநாயகன். கொழும்பு வரவேற்கிறது. அழகான ஊர். மிகவும் அழகான ஊர். பெரிய பெரிய புத்தர் சிலைகள். இத்தனை அழகை வைத்துக் கொண்டிருக்கும் தீவில் அமைதி மட்டும் இல்லை...ம்ம்ம்ம்...சுனாமியின் சில வடுக்களைக் காட்டுகிறார்கள். நெஞ்சம் உண்மையிலேயே கனக்கிறது.

2006வது இலங்கைக்குப் போவோம் என்ற விருப்பம் பொய்யால்தான் நிறைவேறியது. அரைகுறையாய். புறப்படுகையில் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லி அம்மா ஒரு உண்டியலைக் கொடுக்கிறார். அந்த உண்டியலில் அவன் திரும்பி வருகையில் காசே இருக்கக் கூடாதென்று விரும்புகிறது அந்த அம்மாவின் மனம். ஆனால்..மகன் அங்கு போனதிலிருந்து பொய் பொய்யாகச் சொல்ல வேண்டிய நிலை.

அதற்குக் காரணம் அவனது புது அப்பா. தனது அடையாளத்தை மறைக்க தன்னுடைய பெயர் பாரதி என்றும் தந்தையார் திருநெல்வேலிப் பக்கம் என்றும் அவர் வாயில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் விழுமென்றும் புழுகி வைக்கிறான். அந்தத் தந்தை கற்பனையில் உண்மையாய் வருகிறார். காதலிக்கச் சொல்கிறார். அதற்கு ஐடியாக்களை அள்ளி விடுகிறார். அந்தத் தந்தையாக நெல்லை தூத்துக்குடிப் பேச்சுப் பேசி நடித்திருப்பது கே.பாலச்சந்தர். அந்தத் தந்தையும் விதியும் விளையாடும் பாம்புக்கட்ட தாயம் விளையாட்டுதான் கதாநாயகனின் காதல். கொஞ்சம் புதுமையான சிந்தனை. ரசனைக்குரிய சிந்தனையும் கூட. விதியாக வருவது பிரகாஷ்ராஜ். ஒவ்வொரு முறையும் விதி காய்களை உருட்டி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கும் பொழுது....தந்தை பாலச்சந்தரும் காய்களை உருட்டி மகனுக்கு புதுப்புதுத் திட்டங்களை அள்ளி விடுகிறார்.

முதல் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக நம்மைக் கட்டிப் போடுவது வசனங்கள். நல்ல வசனங்கள் கூட. ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது. கதாநாயகனுக்கு ள வராது. வள்ளுவனார் என்ற தந்தையின் பெயரை வல்லுவனார் என்று உச்சரித்துத் திட்டு வாங்கிக் கொள்ளும் அவன் பின்னாளில் ள உச்சரிக்கக் கற்று ள ள ள என்று பாடும் நிலா பாலுவின் குரலில் பாடும் பொழுது...தியேட்டரில் புண்ணியம் செய்த பாதி பேர் ஏற்கனவே வெளியேறி விட்டிருந்தார்கள்.

விதி கதாநாயகியின் பள்ளிக்கூடக் காதலனைக் கொண்டு வருகிறது. அவரது கோணல் நடனங்களும் கொண்ணைப் பேச்சும்....முருகா....முருகா! அதை விடக் கொடுமை கதாநாயகனுக்கு இலங்கையில் அறிமுகமாகும் பெங்காலி நண்பன். பானர்ஜி என்று சொல்லிக் கொள்ளும் அவரிடம் கொஞ்சம் கூட பெங்காலித் தன்மை தெரியவில்லை. இந்திதான் பேசுகிறார். நமஸ்தே என்கிறார். வங்காளிகள் நமோஷ்கார் என்று வணங்குவார்கள். பெங்காலி பாரி என்று மட்டும் அவரது வீட்டுக்குப் பெயர். பாரி என்றால் வங்கத்தில் வீடு என்று பெயர். கொல்கத்தாவில் இருக்கும் காளிகோயிலுக்குக் காளிபாரி என்றுதான் பெயர். படத்தில் தேவையில்லாத பல பாத்திரங்களில் இதுவும் ஒன்று.

நளதமயந்தியில் நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். தேவையில்லாத இன்னொரு பாத்திரம். இவரும் காதலைப் பற்றி வசனங்கள் பேசி நம்மையும் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பச் சொல்லி அடம் பிடிக்கிறார். ஆனாலும் படத்தின் முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற நமது பொறுமை பூமாதேவியின் பொறுமையை விடப் பெரியது என்று சொல்ல எந்த ரிக்டர் ஸ்கேல் வேண்டுமோ! உல்லூக்கா பட்டா! இதுதான் அவர் வாயில் அடிக்கடி வரும் பேச்சு! அதே மாதிரி கதாநாயகி அடிக்கடி சொல்வது சம்ஜே. கே.பி...கதாநாயகிகள் இன்னமும் இப்படி எதையாவது திரும்பத் திரும்பச் சொல்வது அலுப்பாக உள்ளது.

காதலும் கல்யாணமும் பல பெண்களின் முன்னேற்றத்திற்கும் லட்சியத்துக்கும் தடையாக உள்ளது என்ற கருத்து கதாநாயகிக்கு. ஆகையால் கஷ்டப்பட்டு கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட பொழுது ஒரு வரம் கேட்கிறார். ஆம். காதலையே விட்டுக் கொடுக்கும் படி. அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறுமாம். அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும். கதாநாயகியும் கதாநாயகனும் fine என்ற சொல்லை வைத்து பேசும் பொழுது இருகோடுகள் படத்தில் வரும் file-life வசனம் நினைவுக்கு வருகிறது. ஆனால்.....இந்தப் படத்தைப் பார்க்க வந்ததற்கு நமக்குத்தான் fine போடுவார்களோ என்று பயம் எழாமல் இல்லை.

உய்யோ! இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார் ரேணுகா. இவரது பாத்திரத்தை இன்னமும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். ஆனால் அதுக்கி விட்டிருக்கிறார்கள். இவரது பிளாஸ்டிக் சிரிப்புக் கணவருக்குச் சிரிப்பது ஒன்றுதான் படத்தில் வேலை. படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள். இவர் மட்டும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். அழுது கொண்டே பேசக் கூடாதா?

மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இன்னும் பல இசையமைப்பாளர்களும் கவியரசர், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கே.பிக்குக் காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்கள் அவை. ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அம்மாவாக நடிக்கும் அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கும் மகனாக நடிக்கும் உதய்கிரணுக்கும் உள்ள அந்த பாசப் பிணைப்பு. நாடகத்தனம்தான். ஆனால் படத்தில் அது ஒன்றுதான் ஆறுதல். ஆனால் அந்த ஆறுதலும் ஆறிப் போகும்படி அவரை மாடியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்று விடுகிறார்கள். அதே போல படம் முடிகையில் கதாநாயகனையும் நாயகியையும் கொன்று விடுகிறார்கள். என்ன மனசய்யா உமக்கு. மரோசரித்ராவில் சரி. இன்றுமா!

மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன். ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். படத்தில் ஆங்காங்கே வரும் தமிழ். பொய்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்த்த காதல் பயக்குமெனின் என்று கற்பனை அப்பா பாலச்சந்தர் சொல்லும் புதுக்குறள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரியைச் சொல்வதற்காக இந்தப் படத்தின் கதையைச் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்க நுழைவுச் சீட்டு நான் வாங்கும் பொழுது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று புரியாமல் போனது வேதனைதான்.

"இறைவா இது நியாயமா?" இது படம் முடியும் பொழுது ஒலிக்கும் பாடல். நமது மனதுள்ளும்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 19, 2006

விடுதலை தந்த ஓவியம்

விடுதலை என்ற தலைப்பில் தேன்கூடும் தமிழோவியமும் நடத்திய போட்டியில் நீங்கள் எனக்கு...இல்லையில்லை..என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு வாங்கித் தந்தீர்கள் அல்லவா. அதற்காக தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக இருக்கப் பணித்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில பதிப்புகளை இட்டுள்ளேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அருட்பெருங்கோவைத் தெரிந்திருக்கும் அனைவருக்கும். காதலை வாங்கி முத்தம் கொடுக்கிறவர். கவிதைப் பித்தன். அதிலும் மையல் ததும்பும் கவிதைகளை அள்ளித் தெளிக்கின்ற கவிஞர். காதற் குளியல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைக் குளியல் இங்கே.

நான் எழுதிய வலைப்பதிவுகளில் சிறந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது. அனைத்தும் எனது பூக்கள். பாகுபாடு கிடையாது. ஆகையால்தான் ஐம்பது நூறுக்கெல்லாம் பதிவு போடவில்லை. என் பிள்ளைகள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். ஆனாலும் படிக்கின்றவர்களின் பார்வையில் சில பதிவுகள் என்ற வகையில் சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தப் பாரு....ஆமாங்க நான் எடுத்த சில புகைப்படங்கள். உங்கோளோடு இங்கே பகிர்கிறேன்.

காதல்...மனிதனுக்கு மட்டும் வருமா? விலங்குகளுக்கும் வருமா? இங்கே ஒரு காட்டிற்கே வந்திருக்கிறதே! படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க மயக்கும் என்பதற்கு உத்திரவாதம்.

அடுப்படியில் வந்திருக்க வேண்டிய குறிப்பு இது. அசைவக் குறிப்பு. பெயர் கோசணி. இங்கே கிடைக்கும். இது என்னுடைய கண்டுபிடிப்பு. என் நண்பர்கள் பலர் மெச்சிய குறிப்பு.

ஜிரா என்றால் தமிழ் இல்லாமலா? முருகன் இல்லாமலா? இதோ...திருக்குற்றாலக் குறவஞ்சி....இங்கே.

வாய்ப்பளித்த தமிழோவியத்திற்கும் தேன்கூட்டிற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

நூர்ஜஹானூர்

எல்லாரும் படம் காட்டுறாங்க. நான் காட்டக் கூடாதா? இதோ...போன வாரத்துக்கு முந்துன வாரம்...அதாங்க டிசம்பர் 2ம் 3ம் நொய்டா ஆக்ரான்னு சுத்துனப்ப எடுத்த படங்கள் இங்க.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹான் தனது தந்தை தாயாரோடு தூங்குமிடம். தாஜ்மஹாலை விட மிகவும் அழகானது.

Photobucket - Video and Image Hosting
பளிங்கினால் ஒரு மாளிகை...அதில் பளிங்கினால் ஒரு பலகனி. பளிங்கைக் குடைந்து செய்திருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹானோட கல்லறைக்கு உள்ளே இருந்து வெளியே எடுத்தது...

Photobucket - Video and Image Hosting
நாந்தான். ரொம்ப அமைதியா இருந்த இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருந்தது.

Photobucket - Video and Image Hosting
மிகச் சிறப்பான கலை வேலைப்பாடுகள். நானூறு ஆண்டுகள் பழமையானவை. வெள்ளைக்கல்லில் பலநிறக் கற்களைப் பதித்த அழகுப் படங்கள்.

Photobucket - Video and Image Hosting
அதே வேலைப்பாடுதான். ஆனால் ஒரு செடி. என்ன அழகு! இது ஓவியமல்ல. கல்லில் கல்லைப் பதித்தது.

Photobucket - Video and Image Hosting
அலுக்காமல் சலிக்காமல் இன்னொன்று

Photobucket - Video and Image Hosting
ஒளி ஓவியம்னு சொல்றாங்கள்ள...அது இதுதான். :-)

Photobucket - Video and Image Hosting
யமுனையில ஒட்டகம். இன்னொரு ஒளி ஓவியம். ஒரு காலத்தில் காதலின் சின்னமான யமுனை இப்பொழுது கூவம் போலத்தான் இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting
நொய்டாவில் ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் வீடு...அடடே! அரண்மனை. இவரு ஆக்ராவுக்கு அடிக்கடி போயிருப்பாரு போல. எல்லாம் பளிங்குக் கல்லாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 07, 2006

04. புதுக்கிராமம்

முந்தைய பதிவு

தூத்துக்குடியில புதுக்கிராமம்னு சொன்னா எத்தன பேருக்குத் தெரியுமோ இல்லையோ New Colonyன்னு சொன்னா பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். பழைய பஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம். மொத்தத்துல ஊருக்கு நடுவுல இருக்குற இருக்குற ஒரு தெரு. அந்தத் தெருவுக்குப் பக்கத்துல இருக்குறது சுப்பையா வித்யாலயப் பள்ளிக்கூடங்க இருக்கு. பள்ளிக்கூடங்கன்ன...மூனு பள்ளிக்கூட்டம் அந்த எடத்துல இருக்கு. ஒன்னு பெண்களுக்கானது. இன்னொன்னு ஆண்களுக்கானது. இன்னொன்னு சின்னப் பசங்களுக்கானது.

இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. அதுல அப்ப பேபி கிளாஸ் இருந்துச்சு. சின்னப்பசங்களுக்கு bun fun runன்னு சொல்லிக் குடுக்குற எடம். அதுக்கு நான் தெனமும் ரிச்சாவுல போயிட்டிருந்தேன். காலைல கொஞ்சம் படிப்பு. சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் உடற்பயிற்சி. அப்புறம் வீட்டுக்குப் போயிர வேண்டியதுதான். ஒரு நாள் வழக்கமா வர்ர ரிச்சா வரலை. சண்முகவேல்னு ஒரு ரிச்சாக்காரர் இருந்தாரு. அவருதான் அப்பக் குடும்ப ரிச்சாக்காரர். அவரக் கூப்புட்டு அத்த சுப்பையா வித்யாலயத்துல என்னைய எறக்கி விடச் சொன்னாங்க. அவரும் எறக்கி விட்டாரு. ஆனா சாந்தரமா வழக்கமா வர்ர ரிச்சாவுல நான் வீட்டுக்கு வரலை. கேட்டா நான் பள்ளிக்கூடத்துலயே இல்லைன்னு ரிச்சாக்காரர் சொல்லீட்டாரு. அத்த பதறியடிச்சிக்கிட்டு சண்முகவேல் கிட்ட ஓடீருக்காங்க. அவரும் பள்ளிக்கூடத்துலதான் விட்டேன்னு அழுத்திச் சொல்லவும் ரிச்சாவ பள்ளிக்கூடத்துக்கு விடச் சொன்னாங்க.

சண்முகவேல் ரிச்சாவ சின்னப்பசங்க பள்ளிக்கூடத்துக்குக் கூட்டீட்டுப் போயிருக்காரு. அங்க என்னைய யாருன்னு தெரியாம கண்டுபிடிக்க முடியாம...விழாமேடைல ஏத்தி உக்கார வெச்சிருந்திருக்காங்க. நானும் பேசாம டிபன் பாக்ஸ்ல இருந்ததச் சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கி எந்திரிச்சி முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். அப்பத்தான் அத்தைக்கு உயிரே திரும்ப வந்திருக்கு. பொம்பளப் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துல பேபி கிளாஸ் இருக்குன்னு சண்முகவேலுக்குத் தெரியலை. இப்ப அந்த பேபி கிளாஸ் இல்ல.
Photobucket - Video and Image Hosting
இப்படியெல்லாம் நடந்த புதுக்கிராமம் முக்குதான் புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். புதுக்கிராமத்துல ரெண்டு பஸ்ஸ்டாப். ஒன்னு பெருமாள் கோயில் ஸ்டாப். அடுத்தது புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். பெருமாள் கோயிலு வீட்டுப் பக்கத்துல. அதுல பஸ் ஏறி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் போகனும். நாப்பது காசு டிக்கெட்டு. ஆனா புத்துக்கிராம முக்குக்குப் போனா முப்பது காசுதான். பத்துகாசு மிச்சம் பிடிக்க முக்கு வரைக்கும் நடந்து போவேன். அப்ப 3A பஸ்சும் கட்டபொம்மன் பஸ்சுந்தான் வரும். 3A தனியார் பஸ். கட்டபொம்மன் செவப்பு பஸ்சு.

அந்த பஸ்ஸ்டாப்புலதான் ராதாக்காவும் ஏறுவாங்க. எனக்கு கணக்குப் பாடம் ஒழுங்கா வரலைன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க வீட்டுல இருந்து நைட்டு கெளம்புறப்போ மணி பாக்கச் சொன்னாங்க. எனக்கு நின்ன எடத்துல இருந்து கண்ணு சரியாத் தெரியலை. ஆனாலும் தெரியலைன்னு சொல்லக் கூடாதுன்னு என்னவோ ஒளறுனேன். ஒடனே அவங்க என்னைய இன்னமும் ரெண்டு மூனு படிக்கச் சொன்னாங்க. அப்புறம் என்னோட கண்ணுல பவர் இருக்கு...அதுனாலதான் ஒழுங்கா படிக்க முடியலைன்னு சொன்னாங்க. நம்மதான் அறிவாளியாச்சே. பவர் இருந்தா நல்லா தெரியனுமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டேன்.

இப்படியெல்லாம் கேக்குற அறிவைக் குடுத்த புதுக்கிராமத்துல பையத் தூக்கீட்டு நடக்குறப்போ மொதல்ல கண்ணுல பட்டது சிவசாமி கடை. அந்தக் கடையில ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டான டீச்சராம். அவங்களப் பாத்தாலே பயங்க பயப்படுவாங்களாம். எனக்கும் பயம்தான். கடையில இருந்த பலகைல என்னைய அத்த ஏத்தி உக்கார வெச்சிருந்தாங்க. அப்ப அந்த ஆண்டாள் டீச்சரும் கடைக்கு வந்து, "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன். அவங்களுக்குக் கண்டிப்பா அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கனும். ஆனா காட்டிக்கலை. நல்லவேளை அத்தை அதுக்குக் கோவிச்சுக்கலை.

எங்களுக்கு சொந்தமில்லைன்னாலும் வேண்டப்பட்டவங்க அந்தத் தெருவுல இருந்தாங்க. அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் அடிக்கடி பண்டமாற்று நடக்கும். நாந்தான் தூதுவர். எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டுக்குப் கொஞ்சம் பக்கத்துலயே பிள்ளையார் கோயில். அப்புறம் தள்ளிப் போனா எண்ணக் கட. அங்கிருந்து கொஞ்ச தூரத்துல அவங்க வீடு. நான் வீட்டிலிருந்து பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக் கட வரைக்கும் நடுத்தர வேகம். எண்ணக் கடையில இருந்து அவங்க வீடு வரைக்கும் படுவேகம். ஏன் தெரியுமா?

அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க. அடுத்து விழுப்புரத்துல மின்சார எஞ்சின் மாத்துவாங்க. சென்னை வரைக்கும் அது சர்ர்ர்ருன்னு ஓடும். இதத்தாங்க நான் அவங்க வீட்டுக்குப் போறப்பச் செய்றது. திரும்பி வரும் போது...போனதுக்கு நேர்மாறா வருவேன். மொதல்ல வேகம். அப்புறம் நடுத்தரம். அப்புறம் மெதுவா!

அன்புடன்,
கோ.இராகவன்