Tuesday, June 24, 2008

தங்க மரம் - 17

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 17

தங்கமரத்தைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி மூவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. வெள்ளைவெளேரென்ற மண்மலையும் அதன் உச்சில் தகதகவென மின்னும் தங்கமரமும் அழகோ அழகு. அவர்களிடம் அண்டி விவரித்தது போல மரகத இலைகள் மெல்லிய தென்றலில் அழகாக அசைய...அவைகளின் ஊடே பவழ மொட்டுகள் நாங்களும் இருக்கிறோம் என்றோம் என்று சொல்ல...மாணிக்கக் காய்களும் வைரக்கனிகளும் பார்வையை மாற்ற விடாமல் கவர்ந்தன. அப்பொழுது கதிரவன் சொன்னான்.

"சித்திரை... நான் பிடிமாவின் மீது ஏறிச் சென்று கனியைக் கொய்து வருகிறேன். இப்பொழுது இங்கு யாரும் இல்லை. ஆகையால் விரைந்து பறித்து விட்டு அண்டியின் வயிற்றுவழியில் திரும்பச் சென்று விடுவோம்."

ஆனால் சித்திரை வேறொன்றைக் குறித்து வைத்திருந்தான். "கதிரவா, நான் பறக்கும் படியில் வருகையில் இருட்டில் வந்தோம். படி நின்றவுடன் காலை எடுத்து வைத்ததும் நாம் வெளிச்சத்திற்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் இருட்டுக்குள் எப்படிப் போவது என்ற வழியே தெரியவில்லையே!"

சித்திரை சொன்னதைக் கேட்டு இருவருக்கும் திக்கென்றது. அவர்கள் குடலுக்குள் அண்டி போவது போல ஒரு உணர்வு.

கதிரவன் முதலில் சுதாரித்தான். "ஆமாம். உண்மைதான். ஆனால் அதற்காக நேரம் கடத்த வேண்டாம். படக்கென்று நான் சென்று கனியைக் கொண்டு வருகிறேன். பிறகு யோசிப்போம் மற்றவற்றை." சொல்லிக் கொண்டே பிடிமாவின் மீது ஏறி, "பிடிமா தங்கமரத்திடம் செல்" என்றான்.

ஆனால் பிடிமாவால் பறக்க முடியவில்லை. பலவகையில் முயன்றும் பிடிமாவால் பறக்க முடியாமல் போனது. பிடிமாவின் பறக்கும் ஆற்றல் பூமியில் செயல்படவில்லை. பிடிமா தன்னிலையை விளக்கியதும் அவள் மீதிருந்து குதித்தான் கதிரவன். குதித்த வேகத்தில் விடுவிடுவென்று மண்மலையில் கால் புதையப் புதைய ஏறினான். விரைவில் உச்சிக்குச் சென்று வைரக் கனியைப் பறிப்பதற்காக கையை வைத்தான். ஆனால்... மண்மலை கிடுகிடுவென்று ஆடியது. சரேல் சரேல் என இரண்டு பெரிய நச்சுப்பாம்புகள் மண்மலைக்குள் இருந்து எழும்பிச் சீறின.

கனியோடு இரண்டு மூன்று இலைகளையும் கொத்தோடு பறித்தவன் மண்மலையில் தரதரவென உருண்டான். சித்திரையும் பிடிமாவும் கத்தினார்களே ஒழிய... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சின்னப் பாம்புகள் என்றால் கம்பெடுத்து அடிக்கலாம். பிடிமாவும் தும்பிக்கையால் தூக்கி விசிறலாம். ஆனால் இவையோ முப்பதடி நீளம். அதிலொன்று கதிரவனைக் குறிவைக்க மற்றொன்று சித்திரையையும் பிடிமாவும் குறிவைத்தது.

"பொம்மைகளே" அண்டி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வந்தவள் முதல் பாம்பைப் பிடித்துப் பிதுக்கத் தொடங்கினாள். அதன் வாயிலிருந்து நஞ்சு கொழகொழவென்று ஊதா நிறத்தில் கொட்டியது. பல்வலி மனிதர்களுக்கே வேதனை தருவது. அதில் நஞ்சை வைத்திருக்கும் பாம்பிற்கு? நச்சுப்பல்வலி தாளாமல் காஆஆஆஆஆஆய் என்று ஓலமிட்டது நாகம். கூட்டாளிக்கு ஆபத்து என்றதும் அடுத்த நாகம் கதிரவனை விட்டுவிட்டு அண்டியின் மீது தாவியது.

அதை வலக்கையால் பிடித்தாள் அண்டி. இரண்டு நாகங்களும் கழுத்து நசுக்கப்பட்டு ஓலமெழுப்பின.

"பொம்மைகளே.. இப்படியா விளையாட்டுத்தனமாக இருப்பது! பாருங்கள்..எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டீர்கள். நான் என்ன செய்வேன்! நீங்கள் முதலில் ஓடுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த நாகங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்."

அண்டி பொம்மைகளைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப் பட்டுக் கூறினாள். ஆனால் உண்மையிலேயே அவளது நிலைதான் மிகப் பரிதாபமாக இருந்தது. இரண்டு நாகங்கள். அதுவும் முப்பதடி நீளமுள்ள நச்சு நாகங்கள். அண்டி வீராங்கனைதான். ஆனால் நஞ்சின் முன் என்ன செய்ய முடியும். நாகங்கள் கக்கிய நஞ்சைத் தொடாமல் தவிர்த்து வந்தாள். ஆனால் கக்கும் பொழுது எழும் சாரல் அவளை லேசாக மயக்கியது. அதுதான் சமயமென்று இரண்டு நாகங்களும் அவள் காலைச்சுற்றி இழுத்தன. எப்படியாவது விசத்தை மிதிக்க வைத்து விட வேண்டும் என்றுதான்....

அண்டியின் பிடியோ லேசுமாசாக இல்லை. முதலில் பிடிபட்ட பாம்பின் நச்சுப்பல்லே பிதுங்கிக் கீழே விழுந்தது. விசப்பையும் கிழிந்து நஞ்சு கொட்டியது. வேதனையில் கதறிக் கதறி உயிர் விட்டது அந்த நாகம். ஆனால் இரண்டாம் நாகம் அவள் காலை இழுப்பதில் சற்று வெற்றி கண்டு நஞ்சைத் தொட வைத்தது. சுரீல் என்று விரலைத் தொட்ட நஞ்சு பரபரவென காலில் ஏறியது. ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள் அண்டி. தான் மாண்டாலும் நாகத்தைக் கிழித்து விட வேண்டும் என்று தனது வலிமையெல்லாம் திரட்டி அதன் வாலைப் பிடித்தாள். பிடித்த வாலை நகத்தால் கீறிக் கிழித்தாள். அந்த கிழிசலையே பிடித்து இழுத்து டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று நாகத்தை இரண்டாகக் கிழித்துப் போட்டாள்.

"பொம்மைகளே... இனிமேல் உங்களுக்கு நாகத்தால் கெடுதி இல்லை. விரைந்து செல்லுங்கள். மிக விரைந்து...." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நஞ்சு தலைக்கேறி முழுவுடலும் நிறம்மாறி மாண்டாள் அண்டி.

பார்த்துக் கொண்டிருந்த மூவரும் பேச்சடைத்துப் போயிருந்தார்கள். யாரிடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தார்களோ...அவள் வழியாகவே தங்கமரத்திற்கு வழி தெரிந்து...அந்த மரத்தையும் அடைந்து ....அங்கு சிக்கிக் கொண்ட ஆபத்தில் இருந்து அவளாலேயே காப்பாற்றப்பட்டு...அதற்காக அவளே உயிரை இழந்து.....ச்சே என்று ஆனது அவர்களுக்கு.

இவர்கள் வயிற்றில் போகும் பொழுதே அண்டிக்கு வயிறு கலங்கியது. என்னவோ என்று எழுந்து பார்த்தவளுக்கு விவரம் விரைவிலேயே புரிந்து போனது. அதனால் பொம்மைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று விரைந்து வந்தாள்.

அட்டகாசப் பேர்வழியானாலும் அண்டிக்கும் அன்புண்டு என்று புரிந்ததன் பலன் அவர்களின் கண்களில் கண்ணீராகப் பெருகியது. ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவரோ! சிறிதுசிறிதாக மனதைத் தேற்றிய அவர்களுக்கும் அடுத்த பிரச்சனை நினைவிற்கு வந்தது. அதாவது எப்படி வெளியே செல்வதென்று.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அங்குமிங்கு நடந்தார்கள். அப்படி நடந்தவர்கள் கண்ணில் பட்டதுதான் தணலேரி. நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த ஏரியை எப்படிக் கடப்பது என்பதே யோசனை. ஆனால் எதிர்பாராத உதவி அப்பொழுது வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, June 17, 2008

தங்க மரம் - 16

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பாகம் - 16

அண்டியின் குகையிலேயே நாம் மூவரை விட்டு வந்துவிட்டோமே. அதுவும் தங்கமரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழிகளில் ஒன்றைத் தெரிந்த கொண்ட மூவரை. அண்டி சொன்னதைக் கேட்டதில் இருந்தே மூவருக்கும் ஒரே சிந்தனை. அதுவும் தங்கமரத்தை அடைவதை அல்ல. அண்டியின் கச்சையின் முடித்து வைக்கப்பட்டிருக்கும் திறவுகோலை அடைவதற்கே சிந்தனை.

எவ்வளவு சிந்தித்தாலும் மூவருக்கும் தோன்றிய ஒரே வழி...அண்டி தூங்கும் பொழுது திருடுவது என்பதுதான். அண்டி தூங்கத் தொடங்கினால் அவளை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது என்று அங்கு தங்கிய ஒரு இரவிலேயே புரிந்து விட்டது. ஆனால் அவளது குறட்டையொலிதான் காதுகளைக் கம்பியால் குடைந்தது.

அண்டி தூங்கிய பிறகு வேறுவழியில்லாமல் அவளது அறைக்குள் நுழைந்தார்கள். நுழையும் பொழுதே கப்பென்று கெட்ட வாடை மூக்கில் ஏறியது. காதையாவது பஞ்சை வைத்து அடைக்கலாம். மூக்கை? காரியத்தை முடிக்க வேண்டுமே. திருடும் பொறுப்பு சித்திரைக்குப் போனது. கதிரவன் என்னதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் குசும்புகளில் சித்திரையை அடித்துக்கொள்ள முடியாது. பிடிமா சித்திரையைத் தூக்கிக் கொண்டு அண்டியின் கச்சையின் அருகில் பறந்தது. பிடிமாவின் மீதிருந்து சரியாகக் கச்சையில் குதித்தான். குதித்த வேகத்தில் அண்டி எழுந்து விடுவாளோ என்று அச்சம். ஆனால் அதற்கெல்லாம் அண்டி அசைவதாகத் தெரியவில்லை.

அவள் மீது இறங்கியதுமே சித்திரைக்கு வயிற்றைப் பிரட்டியது. குளித்தறியாத அண்டியின் கச்சையில் ரோஜா வாடையா எழும்பும்!!!! வேறு வழியில்லாமல் மூக்கையும் மூச்சையும் பிடித்துக் கொண்டு கச்சைக்குள் நுழைந்தான். அந்த ஒரு நொடியிலேயே உலகத்தின் எந்த நாற்றத்தையும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற அதிபயங்கர திறமையைப் பெற்றான் சித்திரை.

திறவுகோலைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஓரடி நீளமுள்ள இரும்புத் திறவுகோலை ஒருவழியாகக் கச்சைக்கு வெளியே இழுத்து வந்தான். அலும்பு தெரிந்தாலும் நேரத்தைக் கடத்த விரும்பாமல் அண்டியின் வயிற்றை நோக்கி நடந்தான். பிடிமாவின் மீது ஏறிய கதிரவும் அண்டியின் வயிற்றுக்கே வந்து விட்டான். அருகில் இருந்து பார்க்கையில்தான் அண்டியின் வயிற்றோடு சேர்ந்த பூட்டு தெளிவாகத் தெரிந்தது. மூவரும் சுற்றி நின்று கிணற்றுக்குள் பார்ப்பது போலப் பார்த்தனர். கதிரவன் சைகை காட்டியதும் சித்திரை திறவுகோலைப் பூட்டில் நுழைத்துத் திருகினான். கிர்ர்ர்ர்ர்ரென்று துருப்பிடித்த ஓசையோடு பூட்டு திறந்தது.

கரகரவென வயிற்றின் நடுவில் பூட்டு இருந்த இடத்தில் ஒரு குழி திறந்தது. உள்ளே ஒரே இருட்டு. ஆனால் முதற்படி மட்டும் கண்ணில் திறந்தது. நல்ல பெரிய படி. பிடிமாவே நிற்கலாம். கதிரவன் குசுகுசுவெனச் சொன்னான்.

"சித்திரை..படிகள் ஒன்றும் பெரிதாக இருக்கின்றன. இது போல எத்தனை படிகள் இருக்குமோ தெரியாது. முதலில் நான் இறங்குகிறேன். பிறகு பிடிமா இறங்கட்டும். பின்னால் திறவுகோலை எடுத்துக் கொண்டு நீயும் வா." சொன்னவன் முதற்படியில் இறங்கி நின்றான்.

நின்ற அடுத்த நொடியில்தான் விபரீதம் புரிந்தது. படி தானாக நகரத் தொடங்கியது. படக்கென்று வேகம் பிடித்து இருளுக்குள் மறைந்தது. பிடிமாவும் சித்திரையும் அதிர்ந்து போனார்கள். ஆனால் உடனே மற்றொரு படி அங்கு தோன்றியது. அது படிக்கட்டு அல்ல...நகரும் படி என்று புரிந்து கொண்டனர் இருவரும். நேரம் கடத்த விரும்பாமல் பிடிமா அடுத்த படியில் இறங்கினாள். அதுவும் விர்ரென்று உள்ளே நகன்றது. அடுத்த படியில் இறங்கினான் சித்திரை. இருட்டுக்குள் படி வழுக்கியது. எங்கோ பாதாளத்திற்குள் இறங்குவது போல அப்படியொரு வேகம். ஆனால் சுற்றிலும் என்ன இருக்கிறது என்றே தெரியாத இருட்டு. எங்கோ படியின் வேகத்தால் கதிரவன் கத்தும் ஒலியும் பிடிமாவின் பிளிறலும் கேட்டுத்தான் அவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இன்ன குறிப்பிட்ட திசையில்தான் சென்றது என்றில்லை. கண்ட பக்கமும் படி சரக்சரக்கென்று திரும்பியது. வலது பக்கமே போவது போல இருக்கும். திடீரென வெடுக்கென்று இடப்பக்கம் திரும்பி படக்கென்று கீழே இறங்கும். ஒவ்வொரு சமயம் மேலே எழும்பும்...ஆனா எழும்பிய பிறகு தட்டை யாரோ நழுவ விட்டது போல படியும் விழும். முதலில் மூவரும் கத்திக்கதறினாலும் நேரம் செல்லச் செல்ல பழகி விட்டது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் விழுந்து விடுவார்களோ என்ற அச்சமும் தேவையில்லாமல் போனது. ஏனென்றால் ஓரிடத்தில் படி தலைகீழாகத் திரும்பிச் சென்றது. ஆனால் அவர்களும் கீழே விழவில்லை. அவர்களிடமிருந்த பொருட்களும் உடைகளும் கூடக் கீழே விழவில்லை. படியைப் பொருத்தவரையில் நேராகவே நிற்பது போன்ற நிலை.

எவ்வளவு நேரம் என்று கணக்கிட முடியாத நேரம் இந்தப் விசித்திரப் பயணம் தொடர்ந்தது. படுவேகத்தில் சென்று கொண்டிருந்த கதிரவனின் படி திடீரென்று நின்றது. ஒரு நொடியில் நின்றதும் தடுமாறினான் கதிரவன். பின்னாடியே பிடிமாவின் படியும் வந்து இடித்துக் கொண்டு நின்றது. அடுத்து இரண்டு மூன்று நொடிகளில் திறவுகோலோடு வரும் சித்திரையின் படியும் நிலைக்கு வந்தது. ஆனாலும் இருள் விலகவில்லை. கதிரவன் துணிச்சலோடு காலை எடுத்து வைத்தான்.

அடுத்த நொடியே அவன் ஒளிநிரம்பிய ஓரிடத்தில் அவன் இருந்தான். ஆனால் எங்கிருந்து வந்தோம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் நிரம்பிய புது இடத்தில் இருந்தான். அப்படியே பிடிமாவும் சித்திரையும் கூட வந்து விட்டார்கள். இருட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்குக் கண்களைக் கூசியது. இடுக்கிக் கொண்டு பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு முதலில் தெரிந்தது தங்கமரம்.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Saturday, June 14, 2008

தசாவதாரம் விமர்சனம்

ஹறி ஓம் நாறாயணாய நமக

இனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும் திரு.தாமரைநகையானாகிய கமல்ஹானசன் நடித்த தசாவதாரம் திரைப்படமானது கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் நாள்தோறும் அல்லலுற்று அழுது தொழுது பயனில்லாமல் போயிருந்ததுமான பாவப்பட்ட பொழுதுகளில் தொடங்குகிறது.

நம்பிராஜன் பாத்திரத்தில் வீரம் கொப்புளிக்க நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆளுடைப்பிள்ளையாரைப் போலச் சிறுவனுக்கு வேடமிட்டுக் கல்லெறிய வைத்த கமலின் சிந்தனை சமயவொற்றுமை என்பதேயன்றி வேறொன்றில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணரும் வகையில் இருப்பதை மறுக்கவே முடியாது. அஞ்சும் எட்டும் ஒன்றுதான் என்ற நற்பண்பு எல்லாரும் பழக வேண்டியதேயானாலும் உயிரே போனாலும் அஞ்செழுத்தைச் சொல்ல மாட்டேன் என்று ஆவேசம் கொண்டு எட்டெழுத்தை முழங்குவது தான் அஞ்சாம்படை இல்லை என்று காட்டத்தான் என்பதையும் படம் பார்க்கும் அனைவரும் குற்றமற உணர்வர்.

முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.

இப்படிப் பட்ட புளகாங்கிதங்களோடும் தொடங்கிய படம் பலப்பல நாடுகளுக்கும் செல்கிறது. நாம் திரையில் பார்த்துப் பலகாலங்கள் ஆகியிருக்கும் கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜெயப்பிரதா மற்றும் ரேகா ஆகியோரை இந்தப் படத்தில் மீண்டும் காண முடிகிறது. இந்தப் படத்தின் சிறப்பே அதனுடைய தொடர்ச் சங்கிலிதான். தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கி உத்தமன் உலகளந்தது போல தொடர்பு விட்டுவிடாமல் செல்வதுதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு முடிவே கிடையாது என்று இறுதியில் நமக்குத் தெரியும் பொழுது இறைவனின் அருளுக்கும் முடிவே கிடையாது என்ற உண்மை புலப்படும்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் சென்ற காகுந்தன் இந்நாளில் சுனாமியாக வந்து உலகைக் காத்த உன்னதச் சித்திரம் தசாவதாரம், உண்மையிலேயே சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது... அந்தக் கோயிலைப் பெயர்த்தெடுத்து வேறொரு சமயத்தைச் சார்ந்த யாரோ கடலில் போட்டிருக்கக் கூடும் என்ற எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்க விஞ்ஞானியின் கிருமி பாமை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மெரினாபீச் வரையில் பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு அசினோடு ஓடிக்கொண்டேயிருப்பதுதான் கதை. கடைசியில் கடவுளே காப்பாற்றுவதுதான் கதை. இந்தக் கதையில் அலங்காரமாக பத்து கமல்கள் இருப்பதுதான் தசாவதாரம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கமல் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது போல பலராம் நாயுடுவும் பூவராகனுமே பார்க்கின்றவர்கள் மனதில் திருப்பதி வெங்கடேசர் தாடைக் கற்பூரம் போல ஒட்டிக் கொள்கிறார்கள். பலராம் நாயுடு காமெடி கலக்கல் என்றால் பூவராகன் நேர்மைக் கலக்கல்.

பாட்டி கமலும் நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குரலும் பேச்சும். வில்லனாக வரும் ஃப்ளெச்சர் கமலிம் நடிப்பும் அருமை. அந்த அப்பாவி முஸ்லீம் இளைஞன் கமலும் மனதில் நிற்கிறார். இருந்தாலும் நம்மை ராமபாணம் பட்ட அசுரர்கள் போல எரிச்சல் பட வைப்பது விஞ்ஞானி கமல்தான். சிலபல இடங்களில் ஹைபர் டென்ஷன் அசின் அந்த எரிச்சல்களைக் குறைக்கிறார் என்பதும் உண்மை.

இசையா? யாரோ ஹிமேஷ் ரேஷமைய்யாவாம். அவரைப் படத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான நம்பிராஜனின் இடத்தில் வைத்துப் பார்க்கப் பலர் விரும்பியிருப்பார்கள். அத்தனை அலுப்பூட்டும் இசை. முகுந்தா பாடல் மட்டும் தேவலாம். பேசாமல் தேவிஸ்ரீ பிரசாத்தையே பின்னணியோடு பாடல்களுக்கும் இசையமைக்கச் சொல்லியிருக்கலாம். அட... தேவையாவது கூப்பிட்டிருக்கலாம். ஹிந்தி ரசிகர்களை மனதில் வைத்து ரேஷமைய்யாவை அழைத்து வந்திருக்கிறார்கள். அதே போலப் பாடல் காட்சிகளும் அலுப்போ அலுப்பு. எழுந்து வெளியே போய்விடலாமா என்ற அளவிற்கு. அது தெரிந்துதானோ என்னவோ பாடல்களுக்கு நடுவில் சில கதைக்காட்சிகளையும் காட்டி நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் செய்கிறார்கள்.

ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அமெரிக்க வில்லன் கமல், ஜப்பான் கமல் மற்றும் ஜார்ஜ் புஷ் தவிர்த்து அனைத்து கமலுக்கும் விஷ்ணுவின் பெயர்கள்தான். அதுவும் இல்லாமல் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். கமல் ஏறும் லாரிகள் படகுகள்...அதிலெல்லாம் ராமானுஜம், ஸ்ரீராமஜெயம், கோவிந்தசாமி...இப்பிடி விஷ்ணுவின் பெயர்கள் இருக்கும். அதாவது கமல் விஷ்ணு சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் அல்லவா. ஆகையால் அந்தப் பெயர்கள் வருவது பொருத்தமாகவும் பார்க்கின்றவர்களை மெய்சிலிரிக்க வைக்கவும் செய்யும். அதிலும் ரயிலில் இருந்து விழும் விஷ்ணு சிலை ஆற்று மணலில் நட்டுக்குத்தலாக நிற்கும் பொழுது பின்னணி இசையோடு நமக்கு மெய்சிலிர்க்கிறது. இராம நாராயணா! என்று உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.

கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருந்த கமல்..கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஹி ஹி. இரண்டுக்கும் பொருல் வெவ்வேறு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சில கமல் ரசிக நண்பர்கள் அந்த வசனத்தைச் சொல்லி பேரானந்தத்தோடு மகிழ்ந்தது புன்னகைக்க வைத்தது. அதே போல கருணாநிதி ஜெயலலிதா காட்சிகளும் காமெடியே. படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார்.

படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.

மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான். ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.

தசாவதாரம் வெற்றிப்படமாக அமைய எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, June 10, 2008

தங்க மரம் - 15

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

பாகம் - 15

ககன் தொடர்ந்து கதையைச் சொன்னான்.

"கஜன் என்ற பறக்கும் ஆனை மிகவும் அறிவாளி. வந்ததும் முதலில் காட்டில் சில ஆனைகளைச் சந்தித்துப் பழக்கமாக்கிக் கொண்டது. வெளியூரில் இருந்து வந்ததும் உள்ளூரில் பழக்கம் உண்டாக்கிக் கொள்வதைப் போல. அந்த வழியாகத்தான் இருவர் கஜனுக்குப் பழக்கமானார்கள். அவர்களின் பெயர்கள் செங்கோமான் மற்றும் இளங்கோ.அவர்கள் நல்லவர்களாக இருக்கக் கண்டு தான் வந்த காரணத்தைக் கஜன் அவர்களிடம் சொன்னது. அதாவது உனது தாயார் குடுத்தனுப்பிய மாயக்கோலும் பெட்டியும் வைத்து. அவர்களும் உதவுவதாக உறுதி கூறினார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நான் தனியாக இருந்து எப்படி ஊழுவாயனை எதிரிப்பது அழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தோன்றியதெல்லாம் ஒரே திட்டந்தான். எங்கள் அரசர் பூரசிடமிருந்து திருடிய மந்திரக்கோலை திரும்பவும் எடுத்துக் கொண்டால் ஊழிவாயனின் ஆற்றல் அழிந்து விடுமல்லவா. திரும்ப எப்படி எடுப்பது?

பூரசு மன்னரின் மந்திரக்கோல் பூகன்களுக்குச் சொந்தமான தங்கமரத்தின் கிளைகளை ஒடித்து உருக்கிச் செய்யப்பட்டது. அந்தத் தங்கமரத்தின் பூவோ கனியோ ஒருவரிடம் இருந்தால் அவரை மந்திரக்கோல் எதிர்க்காது. ஏனென்றால் அவை தாய்மரத்து உறவுகள். இந்தத் திட்டத்தோடு தங்கமரத்தை நோக்கிச் சென்றேன்.

தங்கமரத்தை அடையும் வழி பூகன்களுக்கே தெரியும். ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவிதமான காவல்கள் உண்டு. அத்தனை வழிகளும் எனக்குத் தெரியாது என்றாலும் ஒன்றிரண்டு மட்டும் தெரியும். அவற்றில் மிகவும் எளிதான வழி குண்டக்குழியில் இறங்குவது. அருகிலுள்ள காட்டின் நடுவில் சிறிய மலையுச்சியில் ஒரு குண்டக்குழி உள்ளது. அந்தக் குழியில் எப்பொழுது நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அந்த நெருப்பில் குதித்தால் முப்பது நிமிடங்களில் தங்கமரத்தை அடைந்து விடலாம். அதாவது தணலேரியில் கரையேறலாம்.

ஆனால்...அந்த முப்பது நிமிடங்களும் நெருப்பின் சூடு குதிப்பவரை வாட்டும். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் எந்த ஆபத்தும் நேராது. முப்பது நிமிடம் முடிந்ததும் வேதனை பறந்து விடும். திரும்பி வருவதற்கும் அதே வழிதான். எங்கள் இனத்தைக் காப்பதற்காக இந்த ஒரு மணி நேரச் சித்திரவதையை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து காட்டிற்குள் நுழைந்தேன்.

அப்பொழுதுதான் கஜன், செங்கோமான் மற்றும் இளங்கோ ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் ஊழிவாயனைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்கள். எப்படியோ எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கஜன் பூமியில் இருந்தாலும் உனது தாய் லிக்திமா அதனோடு தகவல் தொடர்பு வைத்திருந்தார். ஆகையால் தங்கமரத்தைப் பற்றிய செய்தியை அவரிடம் சொன்னேன். அவருக்கும் அந்தத் திட்டம் நல்ல திட்டமாகவே பட்டது. நான் தனியாள் இல்லை என்ற தெம்போடு மூவரையும் அழைத்துக் கொண்டு மலையேறினேன்.

நால்வரும் குண்டக்குழியில் குதித்தோம். நெருப்பு சுட்டது. தசை வலித்தது. தாள முடியாத வேதனை. தணியாத தண்ணீர்த் தாகம். ஆனால் எங்களுக்கும் எங்கள் பொருள்களுக்கும் எந்த அழிவும் உண்டாகவில்லை. முப்பது நிமிட மரணவேதனைக்குப் பிறகு தணலேறியில் இருந்தோம். ஒருவழியாகக் கரையைப் பற்றி ஏறினோம். அங்கே யாரும் ஏற முடியாத மண்மலை. ஏறினால் வழுக்கும். அந்த மலைமீதுதான் தங்கமரம் இருந்தது.

அந்த மரத்தின் அழகை எழுத்தில் வடிக்கவே முடியாது. பார்த்த எவராலும் விவரித்துச் சொல்லவே முடியாது. பசும்பொன்னிறத்து மரத்தில் மரகத இலைகள் பலபச்சை நிறங்களில் துளிர்த்து தடித்து அசைந்தாடும். அந்த மரகத இலைகளின் ஊடாக பவழ மொட்டுகள் முழித்துக்கொண்டிருக்கும். அந்த மொட்டுகள் மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த மரத்தை அடைந்த எங்களுக்கு அப்பொழுதுதான் ஊழிவாயனின் அறிவு புரிந்தது. ஆம். தங்கமரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்குக் காவல் வைத்திருந்தான்.

அதுவும் இரண்டு நச்சுநாகங்களின். முப்பதடி நீளமுள்ளவை அந்தப் பாம்புகள். அவைகளின் பற்கள் நஞ்சில் ஊறியூறி நீலமானவை. அந்தப் பல்லால் கடிக்க வேண்டும் என்ற தேவையில்லை. பட்டாலே போதும் பரலோகம்தான். அந்த இரண்டு நாகங்களும் மரத்தைச் சுற்றி மண்மலையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்ததும் நான் சற்றுப் பயந்து பின்வாங்கினேன். பின்னால் இருந்த தணலேரியை நான் கவனிக்காமல் அதில் தடுமாறி விழுந்தேன். அது முப்பது நிமிடம் என்னை உள்ளே இழுத்துக் குண்டக்குழியில் திரும்பவும் தள்ளியது. அவர்கள் மூவரையும் அங்கேயே விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் சுடுநெருப்பின் வேதனையையும் பாராமல் திரும்பவும் குதித்தேன். ஆனால் தங்கமரத்தில் அருகில் அந்த மூவரும் இருக்கவில்லை. ஆனால் இரண்டு நச்சுநாகங்கள் மட்டும் வெறியோடு ஊர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து திரும்பவும் பூகனூரில் வந்து இருக்கிறேன். அடிக்கடி தங்கமரத்திற்குச் செல்வேன். ஆனால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தத்தோடு திரும்பி வருவேன். இதுதான் நீ கேட்ட கேள்விகளுக்கான விடை."

சொல்லி முடித்த ககனின் முகத்தில் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையின் வலி தெரிந்தது. அப்பொழுது தனிமா கேட்டாள். "ககன் என்னைத் தங்கம்ரத்திற்கு அழைத்துச் செல்வாயா?"

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, June 05, 2008

பிரியாணி - 2

ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறனும். அதுவும் குடும்பத்தோட. அந்த வீடு பெருசுன்னாலும் அந்த வீட்டுக்குல பெரும்பகுதி அப்பாவோட அலுவலகம். அங்க தெனமும் காலைல வேலைக்கு வருவாங்க. சாந்தரம் போயிருவாங்க. அவங்களுக்கு யாருக்குமே தெரியக் கூடாது. வெளியவும் வரமுடியாது. இப்பிடி ரெண்டு வருசம் இருக்கனும். தெரிஞ்ச ஒரு நபர் மட்டும் வீட்டுக்கு வேண்டியதைத் திருட்டுத்தனமா கொண்டு வந்து குடுப்பாரு. அதுகூட அளவாத்தான் இருக்கும். வயசோ 13-14க்குள்ள. அதுலயும் பொண்ணு வேற. என்ன பண்றது?

நாஜிகளைப் பத்திக் கேள்விப்பட்டவங்களுக்கும் நிறைய புத்தகம் படிக்கிற ஆர்வம் இருக்குறவங்களுக்கும் நான் சொல்ல வர்ரது புரிஞ்சிருக்கும். ஆமா. ஆனா பிராங்க். அந்தப் பொண்ணோட பேரு. ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண். அங்க நாஜிகளின் தொல்லையால நெதர்லாந்து தப்பிச்சு வந்த குடும்பம். ஆம்ஸ்டர்டாமில் ஒரு உணவுப் பொருள் தொழிலை உருவாக்கி வாழத் தொடங்குறாங்க. அப்பத்தான் வருது இரண்டாம் உலகப்போர். ஜெர்மனிக்காரங்க ஆம்ஸ்டர்டாமைப் பிடிச்சிர்ராங்க. யூதர்கள் எல்லாரும் நாட்டை விட்டுப் போயிரனும்னு சொல்றாங்க. இத நெதர்லாந்து மக்கள் ஒத்துக்கலை. ஆனால் ஜெர்மானிய ராணுவம் வெச்சதே சட்டம்.

வேற வழியில்லாம இந்த ஒளிஞ்சு வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாரு ஆனாவின் அப்பா. கொஞ்சம் கூடச் சத்தமே வரக்கூடாது. ஏன்னா பகல்ல கீழ வேலை செய்றவங்க. இரவுல அமைதி. கொஞ்சம் சத்தம் போட்டாக்கூட வெளிய தெரிஞ்சு போகும் வாய்ப்பு உண்டு. ரெண்டு வருசம் இப்பிடி வாழ்க்கை. ஆனா அப்புறம் ஜெர்மனிக்காரங்களுக்குத் தெரிஞ்சு போகுது. அப்புறம் என்ன...பிடிச்சிக் குடும்பத்த ஜெர்மனிக்குக் கொண்டு போயிர்ராங்க. அங்க போய் குடும்பத்தைப் பிரிச்சி சிறைகளில் அடைச்சுக் கொடுமை படுத்துறாங்க. அதுல எல்லாரும் இறந்து போயிர்ராங்க. அப்பா ஓட்டோ பிராங்கைத் தவிர. போருக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பி வர்ரவர் கிட்ட ஒரு டைரியைக் குடுக்குறாங்க அவங்களுக்கு ரெண்டு வருஷமா உதவிய பெண்மணி.

ஆனாவோட 13வது வயதுல அவர் கொடுத்த பரிசு அந்த டைரி. இரண்டு வருட வாழ்க்கைல நடந்ததையெல்லாம்...தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம்.... அந்த டைரியில் அன்பா, ஆசையா, கோவமா, இயலாமையா, வெறுப்பா, அகிம்சையா... பலவிதங்கள்ள பதிஞ்சு வெச்சிருக்கா அந்தப் பொண்ணு. கைதுக்குப் பிறகு அந்த அறையிலிருந்து உதவி செய்த பெண் சேகரிச்சுப் பத்திரமா வெச்சிருந்து குடுத்திருக்காங்க. அந்த டைரியை வாங்குன ஒரு தந்தையோட மனநிலையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பப்பா! அத டைரியாவா பாத்திருப்பாரு? அந்த மக பொறந்தப்ப கைல எப்படி வாங்குனாரோ.. அப்படித்தான வாங்கீருப்பாரு. பாவம்யா அந்த மனுசன். வாங்கருனவரு அதைப் புத்தகமாப் பதிப்பிச்சாரு. ஆனா பிராங்கின் டைரி என்ற பெயரில் மிகப் பிரபலம் பெற்றது அந்தப் புத்தகம். இப்ப அந்த வீடு ஆம்ஸ்டர்டாம்ல ஒரு கண்காட்சியா இருக்கு. சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டா.

கீழ்க்கண்ட சுட்டிகள்ள போய்ப் பாருங்க. இன்னும் நெறைய விவரங்கள் கெடைக்கும்.

http://en.wikipedia.org/wiki/Anne_Frank
http://www.annefrank.org/

http://en.wikipedia.org/wiki/The_Diary_of_a_Young_Girl

************************************************************

இங்க நெதர்லாந்துல வேலை நிறுத்தப் போராட்டமாம். அதுவும் பேருந்துகள். எதுக்கு வேலை நிறுத்தம்? சம்பளம் கூட்டத்தான். வேற எதுக்கு இருக்கும்!!!! ஆனா பாருங்க அவங்க வேலை நிறுத்தம் பண்ணனும்னு முடிவெடுத்த நேரம் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பரிச்சை நடக்குற நேரம். ஜூன் 1ல இருந்துதான் எல்லாப் பள்ளிக்கூடமும் விடுமுறை. அப்ப எப்படிப் போராட்டம் பண்றது!

லீவு இன்னும் விடலை. இப்பப் போராட்டமும் பண்ணனும். பிள்ளைகளுக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அதுக்கு என்ன செய்யனும்!!!!! செஞ்சாங்களே!

அதாவது காலைல ஆறு மணில இருந்து ஒம்பது மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். அதே போல மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். ஆனா அப்ப யாருக்கும் பயணச்சீட்டு குடுக்கப்பட மாட்டாது. அதாவது காசு குடுக்க வேண்டாம். (நம்மதான் புத்திசாலியாச்சே! ஏற்கனவே பாஸ் வாங்கி வெச்சிருக்கோமே!!!!). மத்த நேரத்துல எல்லாம் பேருந்துகள் ஓடாது. டிராம், மெட்ரோ பயன்படுத்திக்க வேண்டியதுதான்.

இப்ப ஜூன் ஒன்னாந் தேதி வந்துருச்சுல்ல. ஆகையால முழு அடைப்பு பேருந்துகளுக்கு. டிராம்+மெட்ரோவே சரணம். போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.

************************************************************

எத்தனையோ வள்ளி திருமணம் பாத்திருப்பீங்க. இந்த வள்ளிதிருமணம் பாருங்க. வயித்து வலி நிச்சயம். எஸ்.எஸ்.சந்திரன் முருகனாகவும் மனோரமா வள்ளியாவும் ஓமக்குச்சி நரசிம்மன் நாரதராகவும் உசிலைமணி பிள்ளையாராகவும் நடிச்சிருக்காங்க. Youtubeல இந்தப் பாடலை வலையேத்தியிருக்கும் வெல்லூர் விஜயகுமார் embedding disable செய்து வைத்திருக்கிறார். ஆகையால் இந்தச் சுட்டியை அழுத்திப் பாடலைப் பாருங்கள். சிரிப்பும் இலவசமாக வயிற்றுவலியும் உறுதியாகக் கிடைக்கும். இளையராஜாவின் பாடல்கள் நகைச்சுவையோடு ரீமிக்ஸ் செய்யப்பட்டு இளையராஜாவும் பி.எஸ்.சசிரேகாவும் பாடியிருக்கிறார்கள்.

http://uk.youtube.com/watch?v=pghHNdpt4I0



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 02, 2008

தங்க மரம் - 14

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 14

அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் மூவரும் பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள். திடுதிடுவென்று உள்ளே ஓடி வந்த அண்டி எதையோ கீழே போட்டாள். ஏதோ மரத்தை வெட்டி வீழ்த்தியது போல பேரோசை.

"பொம்மைகளே...இதோ உங்களுக்காக கனிகள். வாருங்கள். உண்ணுங்கள்."

அண்டியின் அழைப்பு கேட்ட பிறகே துணிச்சலோடு வெளியே வந்தார்கள். அங்கே ஒரு பெரிய மாமரத்தையும் பலா மரத்தையும் வேரோடு பிடுங்கி வந்து போட்டிருந்தாள்.

"சாப்பிடுங்கள் பொம்மைகளே. நீங்கள் சாப்பிடும் அழகை நான் பார்க்க வேண்டும்."

அண்டியின் அன்புக்கட்டளையைத் தட்ட முடியாமல் மாம்பழங்களைப் பறித்து உண்டார்கள். பிடிமா பலாப்பழத்தைப் பிடுங்கிக் கால்களால் நசுக்கி உடைத்து உண்டாள். வயிறு நிறைந்தவுடன் மிச்சப்பழங்களைப் பிறகு உண்பதாகக் கூறிவிட்டார்கள். பொம்மைகள் சாப்பிடும் என்பதைப் பார்த்த அண்டிக்கு ஆனந்தமோ பேரானந்தம். இந்த பொம்மைகள் முன்பே கிடைத்திருந்தால் நிறைய மரங்களைப் பிடுங்கியிருக்கலாமே என்று வருத்தப்பட்டாள்.

அண்டியின் மகிழ்ச்சியைக் கண்ட கதிரவனும் சித்திரையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். வாயைக் கிண்டினால் ஏதாவது கிடைக்குமல்லவா.

"அண்டி...(சித்திரையைக் காட்டி) இந்தப் பொம்மை உளறுகிறது. நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று தொடர்பே இல்லாமல் சொன்னான்.

"அப்படியா? அந்தப் பொம்மை என்ன உளறியது?"

சிரித்துக் கொண்டே சொன்னான் கதிரவன். "இப்பொழுது எங்களுக்குப் பசிக்கிறது என்று மரம் பிடுங்கிக் கொண்டு வந்தாயே... அந்த மரத்து மாம்பழங்கள் தங்கம் போல மின்னியது என்றேன் நான். இல்லை... பலாப்பழங்கள்தான் பொன்னாக ஒளிவீசியது என்கிறது இந்தப் பொம்மை. நீயே சொல். பலாப்பழங்களா ஜொலிக்கின்றன?"

கதிரவன் சொன்னது இடியோசை போலச் சிரித்தாள். "ஹா ஹா ஹா... இதெல்லாம் ஜொலிப்பா? இந்தக் கனியெல்லாம் கனியா? தங்கமரத்துக் கனியே சிறப்பாக ஒளிரும். பார்த்தாலே கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு அழகாக ஒளிரும்."

எதையோ சொல்லி வைக்க தங்கமரத்திற்கே குறிப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சித்திரை பேசினான்.

"அண்டி.. நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் பொம்மை என்பதால் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். தங்கத்தில் மரம் இருக்குமா? அதை எப்படி நம்புவது?"

பொம்மைகள் தங்கமரத்தைப் புரிந்து கொள்ளமல் நம்ப மறுக்கிறார்களே என்று அண்டிக்கு வருத்தம் வந்தது. "பொம்மைகளே நான் உண்மையைச் சொல்கிறேன். நம்புங்கள். உண்மையிலேயே தங்கமரம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க தங்கம். அந்த மரத்தில் மரகத இலைகள் துளிர்த்து.. பவழ மொட்டுகள் பூக்கும். அந்தப் பவழ மொட்டுகளோ மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த வைரக் கனியின் ஜொலிப்பிற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. இதுதான் உண்மை."

அடுத்து கதிரவன் கேட்டான். "நீ பொய் சொல்ல மாட்டாய் அண்டி. நான் உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. தங்கமரம் என்று ஒன்று இருக்குமானால்... அது எங்கே இருக்கிறது?"

"ஓ அதுவா... தணலேரிக்கு அருகில் உள்ள ஏறாத மண்மலையில் உள்ளது."

"சரி. ஆனால் அங்கு செல்வதற்கு வழி இருக்க வேண்டுமே?"

பொம்மைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தனக்கு விடை தெரிந்திருக்கிறதே என்று பெருமகிழ்ச்சி அண்டிக்கு. இவ்வளவு சிறப்பாக யாருமே இதுவரை பேசவில்லையே என்று லேசான வருத்தம் கூட எழுந்தது. ஆனாலும் தன்னுடைய அறிவைக் காட்டும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அண்டி. "இருக்கிறதே. இதோ என் வயிற்றில். என்னுடைய வயிற்றின் தொப்புளுக்குள் இருக்கிறது தணலேரிக்குச் செல்லும் வழி.

உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனார்கள் மூவரும். சித்திரைதான் கேட்டுவிட்டான். "ஆகா.. உன் வயிற்றுக்குள் வழியா? அதுவும் தொப்புளுக்குள்ளா? அதை எப்படித் திறப்பது? யாராவது வழியைத் திறக்கிறேன் என்று வயிற்றைக் கிழித்து விட்டால்?"

"ஹா ஹா ஹா.. ஐயோ பொம்மை... இப்பிடி முட்டாளாக இருக்கிறாயே! அதனால்தான் நீ பொம்மை. இதோ அங்கிருக்கும் கதவைத் திறப்பதற்குத் திறவுகோலை இங்கே இடுப்பிடில் கட்டி வைத்திருக்கிறேனே." கச்சையில் கட்டியிருந்த சாவியையும் காட்டிக் கொடுத்து விட்டது அண்டி.

விவரங்களைத் தேவையான அளவு தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் தூங்கப் போனார்கள் மூவரும். எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த பொழுது.. இங்கே என்று தானே வந்து நின்றால்....அந்த இன்பம்தான்.

------------------------

நாம் ககனையும் தனிமாவையும் நீருக்கடியில் பூகனூரிலேயே விட்டுவிட்டோம். தனிமா ககனிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தொடங்கனினான் ககன்.

"தனிமா, நீ எப்படி தண்ணீரில் விழுந்து பூகனூருக்குள் நுழைந்தாயோ.. அதே போலத்தான் உன்னுடைய தந்தையாகிய ஊழிவாயனும் நுழைந்தார். அவரிடம் அளப்பறிய சக்தி இருந்தது. அவருடைய பெருமைமிகு தோற்றம் அவரை எங்கள் பூகமன்னர் பூரசு நண்பராக்கிக் கொண்டார். அவரைப் பூகனூரிலேயே தங்க வைத்து கவனித்துக் கொண்டார். வந்த புதிதில் ஊழிவாயரும் ஒழுங்காகத்தான் இருந்தார். ஆனால் விரைவிலேயே அவருடைய ஆற்றல் குறையத் தொடங்கிவிட்டது. அதற்காக மன்னர் பூரசு மிகவும் வருந்தினார். ஆனாலும் ஊழிவாயனை மிகவும் மதிப்பாக நடத்தினர். பூகன்கள் பூமிக்கு நடுவில் சென்று குழம்பு எடுக்கும் துறையை அப்படியே அவர் பொறுப்பிலும் கொடுத்தார். ஆனால் அது ஊழியருக்குத் திருப்தி கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் ஒரு தவறு செய்தார். ஆம். பூரசு மன்னரின் மந்திரக்கோலை திருடிக் கொண்டார். அத்தோடு நில்லாமல் மன்னரைச் சிறையிலும் அடைத்து விட்டார். பூகன்கள் அனைவரும் இனிமேல் ஊழிவாயனின் அடிமை என்றும் எதிர்த்து எதுவும் செய்தால் பூரசுக்கு ஆபத்து என்றும் மிரட்டினார். வேறு வழியில்லாமல் எல்லாரும் ஊழிவாயருக்கு அடிமையானோம். நானும் சில நண்பர்களும் தப்பித்து ஓடினோம். ஆனால் குண்டரப் பறவைகளை ஏவி எங்களை அழித்தார். என்னைத் தவிர நண்பர்கள் அனைவரும் மாண்டனர். நானும் மாண்டதாகவே ஊழியர் நினைத்துக் கொண்டார்.

ஏரிக்கு நடுவில் பூமியைக் கிழித்து...அந்தக் குழம்பு பீய்ச்சி அடித்து...ஒரு கூம்புமலையை உருவாக்கினார். அதை அவருக்கான இடமாக்கி அரசு செய்தார். அப்படியிருக்கையில்தான் உன்னுடைய தாயாரான லிக்திமா அனுப்பிய பறக்கும் ஆனை கஜன் வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்