Monday, December 25, 2006

பொய் - விமர்சனம்

கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்.

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது முன்பு. இன்று அவர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற ஆவல்தான் படத்தைப் பார்க்கத் தூண்டியது.

தொடக்கமே தமிழ் மயம். வள்ளுவனார் என்று ஒரு தமிழ்/அரசியல் தலைவர். ரொம்பவும் நல்லவர். அவருக்குக் கம்பன் என்று ஒரு மகன். அவந்தான் கதாநாயகன். எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா. அப்பாவுக்கும் மகனுக்கும் ஆகாது. லேசாக அபூர்வ ராகங்கள் வாடை. "அம்மா! இன்னைக்கு எந்தக் கடவுள் அருள் குடுப்பாரும்மா?" என்று மகன் கேட்கும் பொழுது "முருகன் குடுப்பாரு"ன்னு அம்மா சொல்லும் போது நமக்குப் புல்லரிக்குது. ஆனா அதுக்கப்புறம் வெறும் அரிப்புதான். புல்லைக் காணோம். புலியைக் காணோம் என்று ஓட வேண்டிய நிலை.

அப்பாவிடம் இருந்து கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க இலங்கைக்குப் போகிறார் கதாநாயகன். கொழும்பு வரவேற்கிறது. அழகான ஊர். மிகவும் அழகான ஊர். பெரிய பெரிய புத்தர் சிலைகள். இத்தனை அழகை வைத்துக் கொண்டிருக்கும் தீவில் அமைதி மட்டும் இல்லை...ம்ம்ம்ம்...சுனாமியின் சில வடுக்களைக் காட்டுகிறார்கள். நெஞ்சம் உண்மையிலேயே கனக்கிறது.

2006வது இலங்கைக்குப் போவோம் என்ற விருப்பம் பொய்யால்தான் நிறைவேறியது. அரைகுறையாய். புறப்படுகையில் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லி அம்மா ஒரு உண்டியலைக் கொடுக்கிறார். அந்த உண்டியலில் அவன் திரும்பி வருகையில் காசே இருக்கக் கூடாதென்று விரும்புகிறது அந்த அம்மாவின் மனம். ஆனால்..மகன் அங்கு போனதிலிருந்து பொய் பொய்யாகச் சொல்ல வேண்டிய நிலை.

அதற்குக் காரணம் அவனது புது அப்பா. தனது அடையாளத்தை மறைக்க தன்னுடைய பெயர் பாரதி என்றும் தந்தையார் திருநெல்வேலிப் பக்கம் என்றும் அவர் வாயில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் விழுமென்றும் புழுகி வைக்கிறான். அந்தத் தந்தை கற்பனையில் உண்மையாய் வருகிறார். காதலிக்கச் சொல்கிறார். அதற்கு ஐடியாக்களை அள்ளி விடுகிறார். அந்தத் தந்தையாக நெல்லை தூத்துக்குடிப் பேச்சுப் பேசி நடித்திருப்பது கே.பாலச்சந்தர். அந்தத் தந்தையும் விதியும் விளையாடும் பாம்புக்கட்ட தாயம் விளையாட்டுதான் கதாநாயகனின் காதல். கொஞ்சம் புதுமையான சிந்தனை. ரசனைக்குரிய சிந்தனையும் கூட. விதியாக வருவது பிரகாஷ்ராஜ். ஒவ்வொரு முறையும் விதி காய்களை உருட்டி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கும் பொழுது....தந்தை பாலச்சந்தரும் காய்களை உருட்டி மகனுக்கு புதுப்புதுத் திட்டங்களை அள்ளி விடுகிறார்.

முதல் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக நம்மைக் கட்டிப் போடுவது வசனங்கள். நல்ல வசனங்கள் கூட. ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது. கதாநாயகனுக்கு ள வராது. வள்ளுவனார் என்ற தந்தையின் பெயரை வல்லுவனார் என்று உச்சரித்துத் திட்டு வாங்கிக் கொள்ளும் அவன் பின்னாளில் ள உச்சரிக்கக் கற்று ள ள ள என்று பாடும் நிலா பாலுவின் குரலில் பாடும் பொழுது...தியேட்டரில் புண்ணியம் செய்த பாதி பேர் ஏற்கனவே வெளியேறி விட்டிருந்தார்கள்.

விதி கதாநாயகியின் பள்ளிக்கூடக் காதலனைக் கொண்டு வருகிறது. அவரது கோணல் நடனங்களும் கொண்ணைப் பேச்சும்....முருகா....முருகா! அதை விடக் கொடுமை கதாநாயகனுக்கு இலங்கையில் அறிமுகமாகும் பெங்காலி நண்பன். பானர்ஜி என்று சொல்லிக் கொள்ளும் அவரிடம் கொஞ்சம் கூட பெங்காலித் தன்மை தெரியவில்லை. இந்திதான் பேசுகிறார். நமஸ்தே என்கிறார். வங்காளிகள் நமோஷ்கார் என்று வணங்குவார்கள். பெங்காலி பாரி என்று மட்டும் அவரது வீட்டுக்குப் பெயர். பாரி என்றால் வங்கத்தில் வீடு என்று பெயர். கொல்கத்தாவில் இருக்கும் காளிகோயிலுக்குக் காளிபாரி என்றுதான் பெயர். படத்தில் தேவையில்லாத பல பாத்திரங்களில் இதுவும் ஒன்று.

நளதமயந்தியில் நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். தேவையில்லாத இன்னொரு பாத்திரம். இவரும் காதலைப் பற்றி வசனங்கள் பேசி நம்மையும் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பச் சொல்லி அடம் பிடிக்கிறார். ஆனாலும் படத்தின் முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற நமது பொறுமை பூமாதேவியின் பொறுமையை விடப் பெரியது என்று சொல்ல எந்த ரிக்டர் ஸ்கேல் வேண்டுமோ! உல்லூக்கா பட்டா! இதுதான் அவர் வாயில் அடிக்கடி வரும் பேச்சு! அதே மாதிரி கதாநாயகி அடிக்கடி சொல்வது சம்ஜே. கே.பி...கதாநாயகிகள் இன்னமும் இப்படி எதையாவது திரும்பத் திரும்பச் சொல்வது அலுப்பாக உள்ளது.

காதலும் கல்யாணமும் பல பெண்களின் முன்னேற்றத்திற்கும் லட்சியத்துக்கும் தடையாக உள்ளது என்ற கருத்து கதாநாயகிக்கு. ஆகையால் கஷ்டப்பட்டு கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட பொழுது ஒரு வரம் கேட்கிறார். ஆம். காதலையே விட்டுக் கொடுக்கும் படி. அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறுமாம். அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும். கதாநாயகியும் கதாநாயகனும் fine என்ற சொல்லை வைத்து பேசும் பொழுது இருகோடுகள் படத்தில் வரும் file-life வசனம் நினைவுக்கு வருகிறது. ஆனால்.....இந்தப் படத்தைப் பார்க்க வந்ததற்கு நமக்குத்தான் fine போடுவார்களோ என்று பயம் எழாமல் இல்லை.

உய்யோ! இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார் ரேணுகா. இவரது பாத்திரத்தை இன்னமும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். ஆனால் அதுக்கி விட்டிருக்கிறார்கள். இவரது பிளாஸ்டிக் சிரிப்புக் கணவருக்குச் சிரிப்பது ஒன்றுதான் படத்தில் வேலை. படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள். இவர் மட்டும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். அழுது கொண்டே பேசக் கூடாதா?

மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இன்னும் பல இசையமைப்பாளர்களும் கவியரசர், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கே.பிக்குக் காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்கள் அவை. ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அம்மாவாக நடிக்கும் அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கும் மகனாக நடிக்கும் உதய்கிரணுக்கும் உள்ள அந்த பாசப் பிணைப்பு. நாடகத்தனம்தான். ஆனால் படத்தில் அது ஒன்றுதான் ஆறுதல். ஆனால் அந்த ஆறுதலும் ஆறிப் போகும்படி அவரை மாடியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்று விடுகிறார்கள். அதே போல படம் முடிகையில் கதாநாயகனையும் நாயகியையும் கொன்று விடுகிறார்கள். என்ன மனசய்யா உமக்கு. மரோசரித்ராவில் சரி. இன்றுமா!

மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன். ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். படத்தில் ஆங்காங்கே வரும் தமிழ். பொய்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்த்த காதல் பயக்குமெனின் என்று கற்பனை அப்பா பாலச்சந்தர் சொல்லும் புதுக்குறள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரியைச் சொல்வதற்காக இந்தப் படத்தின் கதையைச் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்க நுழைவுச் சீட்டு நான் வாங்கும் பொழுது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று புரியாமல் போனது வேதனைதான்.

"இறைவா இது நியாயமா?" இது படம் முடியும் பொழுது ஒலிக்கும் பாடல். நமது மனதுள்ளும்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 19, 2006

விடுதலை தந்த ஓவியம்

விடுதலை என்ற தலைப்பில் தேன்கூடும் தமிழோவியமும் நடத்திய போட்டியில் நீங்கள் எனக்கு...இல்லையில்லை..என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு வாங்கித் தந்தீர்கள் அல்லவா. அதற்காக தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக இருக்கப் பணித்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில பதிப்புகளை இட்டுள்ளேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அருட்பெருங்கோவைத் தெரிந்திருக்கும் அனைவருக்கும். காதலை வாங்கி முத்தம் கொடுக்கிறவர். கவிதைப் பித்தன். அதிலும் மையல் ததும்பும் கவிதைகளை அள்ளித் தெளிக்கின்ற கவிஞர். காதற் குளியல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைக் குளியல் இங்கே.

நான் எழுதிய வலைப்பதிவுகளில் சிறந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது. அனைத்தும் எனது பூக்கள். பாகுபாடு கிடையாது. ஆகையால்தான் ஐம்பது நூறுக்கெல்லாம் பதிவு போடவில்லை. என் பிள்ளைகள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். ஆனாலும் படிக்கின்றவர்களின் பார்வையில் சில பதிவுகள் என்ற வகையில் சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தப் பாரு....ஆமாங்க நான் எடுத்த சில புகைப்படங்கள். உங்கோளோடு இங்கே பகிர்கிறேன்.

காதல்...மனிதனுக்கு மட்டும் வருமா? விலங்குகளுக்கும் வருமா? இங்கே ஒரு காட்டிற்கே வந்திருக்கிறதே! படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க மயக்கும் என்பதற்கு உத்திரவாதம்.

அடுப்படியில் வந்திருக்க வேண்டிய குறிப்பு இது. அசைவக் குறிப்பு. பெயர் கோசணி. இங்கே கிடைக்கும். இது என்னுடைய கண்டுபிடிப்பு. என் நண்பர்கள் பலர் மெச்சிய குறிப்பு.

ஜிரா என்றால் தமிழ் இல்லாமலா? முருகன் இல்லாமலா? இதோ...திருக்குற்றாலக் குறவஞ்சி....இங்கே.

வாய்ப்பளித்த தமிழோவியத்திற்கும் தேன்கூட்டிற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, December 18, 2006

நூர்ஜஹானூர்

எல்லாரும் படம் காட்டுறாங்க. நான் காட்டக் கூடாதா? இதோ...போன வாரத்துக்கு முந்துன வாரம்...அதாங்க டிசம்பர் 2ம் 3ம் நொய்டா ஆக்ரான்னு சுத்துனப்ப எடுத்த படங்கள் இங்க.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹான் தனது தந்தை தாயாரோடு தூங்குமிடம். தாஜ்மஹாலை விட மிகவும் அழகானது.

Photobucket - Video and Image Hosting
பளிங்கினால் ஒரு மாளிகை...அதில் பளிங்கினால் ஒரு பலகனி. பளிங்கைக் குடைந்து செய்திருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting
நூர்ஜஹானோட கல்லறைக்கு உள்ளே இருந்து வெளியே எடுத்தது...

Photobucket - Video and Image Hosting
நாந்தான். ரொம்ப அமைதியா இருந்த இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருந்தது.

Photobucket - Video and Image Hosting
மிகச் சிறப்பான கலை வேலைப்பாடுகள். நானூறு ஆண்டுகள் பழமையானவை. வெள்ளைக்கல்லில் பலநிறக் கற்களைப் பதித்த அழகுப் படங்கள்.

Photobucket - Video and Image Hosting
அதே வேலைப்பாடுதான். ஆனால் ஒரு செடி. என்ன அழகு! இது ஓவியமல்ல. கல்லில் கல்லைப் பதித்தது.

Photobucket - Video and Image Hosting
அலுக்காமல் சலிக்காமல் இன்னொன்று

Photobucket - Video and Image Hosting
ஒளி ஓவியம்னு சொல்றாங்கள்ள...அது இதுதான். :-)

Photobucket - Video and Image Hosting
யமுனையில ஒட்டகம். இன்னொரு ஒளி ஓவியம். ஒரு காலத்தில் காதலின் சின்னமான யமுனை இப்பொழுது கூவம் போலத்தான் இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting
நொய்டாவில் ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் வீடு...அடடே! அரண்மனை. இவரு ஆக்ராவுக்கு அடிக்கடி போயிருப்பாரு போல. எல்லாம் பளிங்குக் கல்லாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 07, 2006

04. புதுக்கிராமம்

முந்தைய பதிவு

தூத்துக்குடியில புதுக்கிராமம்னு சொன்னா எத்தன பேருக்குத் தெரியுமோ இல்லையோ New Colonyன்னு சொன்னா பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். பழைய பஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம். மொத்தத்துல ஊருக்கு நடுவுல இருக்குற இருக்குற ஒரு தெரு. அந்தத் தெருவுக்குப் பக்கத்துல இருக்குறது சுப்பையா வித்யாலயப் பள்ளிக்கூடங்க இருக்கு. பள்ளிக்கூடங்கன்ன...மூனு பள்ளிக்கூட்டம் அந்த எடத்துல இருக்கு. ஒன்னு பெண்களுக்கானது. இன்னொன்னு ஆண்களுக்கானது. இன்னொன்னு சின்னப் பசங்களுக்கானது.

இதுல பொண்ணுங்க பள்ளிக்கூடம் மட்டும் இப்பவும் நல்லா போய்க்கிட்டு இருக்கு. அதுல அப்ப பேபி கிளாஸ் இருந்துச்சு. சின்னப்பசங்களுக்கு bun fun runன்னு சொல்லிக் குடுக்குற எடம். அதுக்கு நான் தெனமும் ரிச்சாவுல போயிட்டிருந்தேன். காலைல கொஞ்சம் படிப்பு. சாப்பாடு. அப்புறம் தூக்கம். மாலையில் உடற்பயிற்சி. அப்புறம் வீட்டுக்குப் போயிர வேண்டியதுதான். ஒரு நாள் வழக்கமா வர்ர ரிச்சா வரலை. சண்முகவேல்னு ஒரு ரிச்சாக்காரர் இருந்தாரு. அவருதான் அப்பக் குடும்ப ரிச்சாக்காரர். அவரக் கூப்புட்டு அத்த சுப்பையா வித்யாலயத்துல என்னைய எறக்கி விடச் சொன்னாங்க. அவரும் எறக்கி விட்டாரு. ஆனா சாந்தரமா வழக்கமா வர்ர ரிச்சாவுல நான் வீட்டுக்கு வரலை. கேட்டா நான் பள்ளிக்கூடத்துலயே இல்லைன்னு ரிச்சாக்காரர் சொல்லீட்டாரு. அத்த பதறியடிச்சிக்கிட்டு சண்முகவேல் கிட்ட ஓடீருக்காங்க. அவரும் பள்ளிக்கூடத்துலதான் விட்டேன்னு அழுத்திச் சொல்லவும் ரிச்சாவ பள்ளிக்கூடத்துக்கு விடச் சொன்னாங்க.

சண்முகவேல் ரிச்சாவ சின்னப்பசங்க பள்ளிக்கூடத்துக்குக் கூட்டீட்டுப் போயிருக்காரு. அங்க என்னைய யாருன்னு தெரியாம கண்டுபிடிக்க முடியாம...விழாமேடைல ஏத்தி உக்கார வெச்சிருந்திருக்காங்க. நானும் பேசாம டிபன் பாக்ஸ்ல இருந்ததச் சாப்பிட்டு ஜம்முன்னு தூங்கி எந்திரிச்சி முழிச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன். அப்பத்தான் அத்தைக்கு உயிரே திரும்ப வந்திருக்கு. பொம்பளப் பிள்ளைங்க பள்ளிக்கூடத்துல பேபி கிளாஸ் இருக்குன்னு சண்முகவேலுக்குத் தெரியலை. இப்ப அந்த பேபி கிளாஸ் இல்ல.
Photobucket - Video and Image Hosting
இப்படியெல்லாம் நடந்த புதுக்கிராமம் முக்குதான் புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். புதுக்கிராமத்துல ரெண்டு பஸ்ஸ்டாப். ஒன்னு பெருமாள் கோயில் ஸ்டாப். அடுத்தது புதுக்கிராமம் பஸ்ஸ்டாப். பெருமாள் கோயிலு வீட்டுப் பக்கத்துல. அதுல பஸ் ஏறி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் போகனும். நாப்பது காசு டிக்கெட்டு. ஆனா புத்துக்கிராம முக்குக்குப் போனா முப்பது காசுதான். பத்துகாசு மிச்சம் பிடிக்க முக்கு வரைக்கும் நடந்து போவேன். அப்ப 3A பஸ்சும் கட்டபொம்மன் பஸ்சுந்தான் வரும். 3A தனியார் பஸ். கட்டபொம்மன் செவப்பு பஸ்சு.

அந்த பஸ்ஸ்டாப்புலதான் ராதாக்காவும் ஏறுவாங்க. எனக்கு கணக்குப் பாடம் ஒழுங்கா வரலைன்னு அவங்க சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க வீட்டுல இருந்து நைட்டு கெளம்புறப்போ மணி பாக்கச் சொன்னாங்க. எனக்கு நின்ன எடத்துல இருந்து கண்ணு சரியாத் தெரியலை. ஆனாலும் தெரியலைன்னு சொல்லக் கூடாதுன்னு என்னவோ ஒளறுனேன். ஒடனே அவங்க என்னைய இன்னமும் ரெண்டு மூனு படிக்கச் சொன்னாங்க. அப்புறம் என்னோட கண்ணுல பவர் இருக்கு...அதுனாலதான் ஒழுங்கா படிக்க முடியலைன்னு சொன்னாங்க. நம்மதான் அறிவாளியாச்சே. பவர் இருந்தா நல்லா தெரியனுமேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்டேன்.

இப்படியெல்லாம் கேக்குற அறிவைக் குடுத்த புதுக்கிராமத்துல பையத் தூக்கீட்டு நடக்குறப்போ மொதல்ல கண்ணுல பட்டது சிவசாமி கடை. அந்தக் கடையில ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டான டீச்சராம். அவங்களப் பாத்தாலே பயங்க பயப்படுவாங்களாம். எனக்கும் பயம்தான். கடையில இருந்த பலகைல என்னைய அத்த ஏத்தி உக்கார வெச்சிருந்தாங்க. அப்ப அந்த ஆண்டாள் டீச்சரும் கடைக்கு வந்து, "என்ன ராகவா எப்படியிருக்க"ன்னு கேட்டாங்க. எனக்கு என்ன தோணுச்சோ தெரியலை....பட்டுன்னு அவங்க கன்னத்துல அடிச்சிட்டேன். அவங்களுக்குக் கண்டிப்பா அதிர்ச்சியாத்தான் இருந்திருக்கனும். ஆனா காட்டிக்கலை. நல்லவேளை அத்தை அதுக்குக் கோவிச்சுக்கலை.

எங்களுக்கு சொந்தமில்லைன்னாலும் வேண்டப்பட்டவங்க அந்தத் தெருவுல இருந்தாங்க. அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் அடிக்கடி பண்டமாற்று நடக்கும். நாந்தான் தூதுவர். எப்படிப் போவேன் தெரியுமா? வீட்டுக்குப் கொஞ்சம் பக்கத்துலயே பிள்ளையார் கோயில். அப்புறம் தள்ளிப் போனா எண்ணக் கட. அங்கிருந்து கொஞ்ச தூரத்துல அவங்க வீடு. நான் வீட்டிலிருந்து பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக் கட வரைக்கும் நடுத்தர வேகம். எண்ணக் கடையில இருந்து அவங்க வீடு வரைக்கும் படுவேகம். ஏன் தெரியுமா?

அப்பல்லாம் தூத்துக்குடியில இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் போகும். தூத்துக்குடியிலிருந்து கரி எஞ்சின். மணியாச்சி வரைக்கும். அங்க தூத்துக்குடி பெட்டிகளையும் திருநவேலி பெட்டிகளையும் இணைச்சு டீசல் எஞ்சின் போடுவாங்க. அடுத்து விழுப்புரத்துல மின்சார எஞ்சின் மாத்துவாங்க. சென்னை வரைக்கும் அது சர்ர்ர்ருன்னு ஓடும். இதத்தாங்க நான் அவங்க வீட்டுக்குப் போறப்பச் செய்றது. திரும்பி வரும் போது...போனதுக்கு நேர்மாறா வருவேன். மொதல்ல வேகம். அப்புறம் நடுத்தரம். அப்புறம் மெதுவா!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, November 30, 2006

ராகவன் நிறுத்திய தேர்தல்

பெரிய இரும்புக் கதவுக்கு முன்னாடி ரொம்பப் பேரு கூட்டமா இருந்தாங்க. சன், ஜெயா, விஜய், ராஜ் அது இதுன்னூ ஊர்ப்பட்ட டீவிக்காரங்க கூட்டம் வேற. ஆனா இரும்புக் கதவு மூடியிருக்கு. அதுக்குப் போலீஸ் காவல் வேற. அப்பத்தான் ராகவனோட கார் வருது. சர்ருன்னு பின்னாடியே ரெண்டு காருக. ஒடனே இரும்புக் கதவு தெறக்குது. ஆனா வந்த மூனு காருகளத் தவிர வேற யாரும் உள்ள நொழைய முடியலை. காருங்க உள்ள போனதும் கதவு மூடிருது.

காருக்குள்ள இருந்து இறங்குனது ராகவந்தான். உருண்ட மொகம். மொட்டைத்(அல்லது சொட்டை) தலை. கண்ணாடி வேற. கார்ல இருந்து எறங்கி விடுவிடுன்னு உள்ள போறாரு. போனவரு உள்ள ஏற்கனவே இருந்தவங்களையெல்லாம் கூட்டி வெச்சித் தேர்தலைத் தள்ளி வெச்சிட்டதா சொல்றாரு.

ஏனாம்? தேர்தல்ல கலந்து கிட்ட வேட்பாளர்கள்ள கிட்டத்தட்ட எல்லாக் கட்சீல இருந்தும் பலர் கொலயாயிருக்காங்களே! அமைச்சர் உட்பட. அப்புறம் எப்படித் தேர்தலை நடத்துறதாம்?

என்ன படிக்கிறவங்களுக்குக் கிறுகிறுங்குதா? எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சி உப்புப் போட்டு சோடா ஊத்தி பௌன்ஸ் குடிக்கனும் போல இருக்கா? இதப் படிக்கிற ஒங்களுக்கே இப்படியிருக்குன்னா...படத்தப் பாத்த எனக்கு எப்படி இருக்கும்! அதாங்க சிவப்பதிகாரம் படந்தான். அதுல இப்பல்லாம் படத்துல முக்கிய பாத்திரங்களுக்கு ராகவன்னு பேரு வெக்கிறது ஒரு ஃபாஷன் போல. இந்தப் படத்துல தேர்தல் ஆணையருக்குப் பேரு ராகவன். அவரு முக்கியப் பாத்திரமோ இல்லையோ...படத்தப் பாத்து எழுந்திரிச்சி ஓட முடியாம முக்கியப் பாத்திரம் நானு.

படத்தப் பாத்துட்டு "ஏதாவது செய்யனும்னு" முடிவோடதான் இந்தப் பதிவைப் போடுறேன். ஏன்னா கதாநாயகரு ஏதாவது செய்யனும்னு சொல்லித்தான் படத்த முடிச்சி வெக்கிறாரு.அதுல பாருங்க இந்தக் கதாநாயகருதான் அத்தன பேரையும் கொன்னது. அதுலயும் எல்லாரும் இருக்குற எடத்துல கையில கத்திய தெளிவாக் காட்டிக்கிட்டே போயி....."கொலை வாளினை எடடா"ன்னு பாவேந்தர் பாட்டோட பின்னணியில ஒவ்வொருத்தரையா குத்திக் கொல செஞ்சிட்டு...நின்னு நிதானமா...சாவகாசமா நடந்து போய் தப்பிக்கிறாராம். அதுவும் ஒன்னு ரெண்டு இல்ல...கிட்டத்தட்ட அறுவதுக்கும் மேல.

ஏன் எதுக்குங்குறதுதான் கதை. ஆனா அதச் சொன்ன விதம் இருக்குதே...நமக்கே "கொலை வாளினை எடடா"ன்னு தோணும். அந்த அளவுக்குச் செஞ்சிருக்காங்க. அதுலயும் பாரதிதாசனோட அந்தப் பாட்டுக்கு இசையமைச்ச விதம் இருக்குதே...அடடா! அதப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டுத்தான் அப்பவே அவரு "கொலை வாளினை எடடா"ன்னு எழுதீட்டாரோ என்னவோ. பாவேந்தரோட பாட்டுகள் திரைப்படத்துல இவ்வளவு மோசமா இசையமைக்கப்பட்டது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன். துன்பம் நேர்கையில் பாட்டு இத்தன வருசத்துக்கு அப்புறமும் கேக்க எவ்வளவு இனிமையா இருக்கு. மெல்லிசை மன்னர் இசையமைச்ச "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாட்டு. அப்புறம் கலங்கரை விளக்கத்துல வருமே "சங்கே முழங்கு சங்கே முழங்கு"ன்னு மெல்லிசை மன்னர் இசையில சீர்காழியும் இசையரசி பி.சுசீலாவும் பாடுவாங்களே. அப்புறம் சங்கர்-கணேஷ் கூட "சித்திரச் சோலைகளை உம்மை இங்கு திருத்த இப்பாரினிலே எத்தனை எத்தனை வீரர்கள் இரத்தம் சொரிந்தனரோ"ன்னு அருமையாத்தாங்க போட்டிருந்தாரு. வித்யாசாகருதான்.......சிவப்பதிகாரத்துல இப்பிடி.....ஏன் வித்யாசாகர்? பாட்டு புரியலையா? காதிலா வரிகளே விழாத அளவுக்கு இரைச்சல்.

சரி. இந்தப் பாட்டுதான் இப்பிடி. மத்த பாட்டுங்க? படத்தோட மொதப் பாதியில ரகுவரன் அவரோட பட்டிக்காட்டுக்கு வர்ராரு. அவரோட நாட்டுப்புறப் பாட்டு ஆய்வுக்கு உதவுற மாதிரி விஷாலும் அந்த ஊருக்கு வர்ராரு. அப்ப ரகுவரனோட மகளுக்கு விஷால் மேல காதல் வருது. இதுதாங்க இடைவேளை வரைக்கும் நடக்குது. அதுவே இழு இழுன்னு இழுத்ததுன்னா...பாட்டுங்க அழு அழுன்னு அழுத்துதுங்க. வெங்கலத் தொண்டை, பாரித் தொண்டை, கீரித் தொண்டை, வெள்ளித் தொண்டைன்னு ஒவ்வொரு தொண்டையும் விளக்குறப்போ நமக்கே தொண்டத் தண்ணி வத்திப் போகுது. உள்ளபடி சொன்னா நல்லா செஞ்சிருக்க வேண்டிய காட்சி அது.

அப்புறம் அறுவடைக்கு ஒரு பாட்டு. டி.கே.கலா குரல்ல தொடங்குது. உண்மையிலே நல்ல குரல். நாட்டுப் பாட்டுக்குப் பொருத்தமான பிருகாக் குரலு. ரகுமான் கூட இவர "குளிச்சா குத்தாலம்", "எதுக்குப் பொண்டாட்டி", "செங்காத்தே"ன்னு நாலஞ்சு பாட்டுக்கும் மேலையே குடுத்திருக்காரு. "போய் வா நதியலையே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை"ன்னு பழைய பாட்டெல்லாம் பாடியிருக்காரு. அப்படி அனுபவமுள்ள பாடகர வெச்சிப் பாட வெச்சும் அந்தப் பாட்டு கேக்க முடியலைங்குறதுதான் ரொம்ப வருத்தம். அத விட ஒரு கரகாட்டப் பாட்டு இருக்குதப்பா....ஷர்மிலியும் இன்னொரு பொண்ணும் சேந்து ஆடுறாங்க....பாத்தா கிளுகிளுப்பு வரலை...பயந்தான் வந்தது. வித்யாசாகர் பட்டிக்காட்டுப் பாட்டுன்னா அவ்வளவு லேசாப் போச்சு ஒங்களுக்கு. டைரக்டர் கரு.பழநியப்பன் அவர்களே...உங்களுக்குந்தான்.

ரெண்டு மூனு காதல் பாட்டுகள் வேற. சில்மிஷியேன்னு ஒரு பாட்டு. பா.விஜய்தான் இத எழுதீருக்கனும். கேக்க ஓரளவுக்குச் சுமாரா இருந்துச்சு. ஆனா பாக்க. ம்ம்ம்...அற்றைத் திங்கள் வானத்துலன்னு ஒரு பாட்டு. அதாவது தேன் இருப்பது தேன் கூட்டிலே...பால் இருப்பது பசுமடியிலேன்னு அடுக்கிக்கிட்டே போறாரு. அற்றைத் திங்கள்னா அன்றைய நிலா. அன்றைய நிலா வானத்திலேன்னா..இன்றைய நிலா எங்கேன்னு தெரியலை! கவிஞர்களே உங்களத் திட்டுறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. கொஞ்சம் புதுமையா சிந்திங்க. இல்லைன்னா பழைய பாட்டுகளப் போல எழுதீருங்க. ஏன்னா ஒங்களை விட நல்லா எழுதுறவங்கள பல தமிழ் மன்றங்கள்ளையும் வலைப்பூக்கள்ளயும் சந்திச்சிருக்கேன்.

கதாநாயகரு விஷாலு. நாலாவது படமாம். ஆனா வாயில தமிழ் விலையாடுது. காதுக்குள்ள கோணூசி போகாத குறைய தீர்த்து வைக்குறாரு. அது சரி...தமிழர்களே தமிள் நல்லாப் பேசும் போது இவரு தமில் பேசலாம். தப்பில்லை. நடிப்பு....மொறச்சு மட்டுந்தான் பாக்கத் தெரியும்னு நெனைக்கிறேன். மத்தவங்க என்ன சொல்றாங்களோ தெரியலையே.

என்னடா படத்தப் பத்தி இப்பிடி சொல்லிக் கிட்டே போறானே...நல்லதே இல்லையான்னு கேக்குறீங்களா? இருக்குங்க. ரெண்டு இருக்கு. கஞ்சா கருப்பும் கதாநாயகியும். ரெண்டு பேருமே நல்லா நடிச்சிருக்காங்க. ஆனா ரெண்டு பேருக்கும் நடிப்புக்கு வாய்ப்பே இல்லை. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

இந்தப் படத்துக்குப் போகனும்னு ஒரு நண்பர் கூப்பிட்டப்போ சிலப்பதிகாரம்னு என்னோட காதுல விழுந்தது. அதெல்லாம் எடுக்க மாட்டாங்களேன்னு நெனச்சப்போ சிவப்பதிகாரம்னு அவரு திருத்தினாரு. சிவப்பான அதிகாரமாம். படம் பாத்தவன் கண்ணுல காதுல மூக்குல கழுத்துல சிவப்பா வழிஞ்சதே அந்தச் சிவப்பதிகாரம் போல!

Wednesday, November 22, 2006

பிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி

நான் காலைல வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியாவைப் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல வந்த ஒரு செய்தி ரொம்பவும் ஆச்சரியமா இருந்ததால சொல்லலாம்னு மயிலாரக் கூப்பிட்டேன். "மயிலாரே....ஒரு சேதி தெரியுமா?"

"ஓ தெரியுமே!" எந்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இல்லாம பதில் வருது. எனக்குன்னா கடுப்பு. விட்டுற முடியுமா?

"என்ன தெரியுமே! நான் என்ன சொல்லப் போறேன்னு ஒங்களுக்குத் தெரியுமோ?"

"தெரியுந் தெரியும். பிச்சாலஜி பத்தித்தான சொல்லப் போற"

அடடா! இவருக்கு எல்லாம் தெரிஞ்சி போகுது. அது சரி..எனக்கு முன்னாடியே பேப்பரப் படிச்சிருப்பாரு.

"அப்ப ராகவா! நீ யாரு? எந்த ஊரு? இப்ப என்ன நெனைக்கிற...எப்பப்ப எப்படியெப்படி முழிய மாத்துவங்குறதெல்லாம் தெரியும். அதுனால நேரடியா வழிக்கு வா! எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு! ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா?"

இனி என்னதான் செய்ய முடியும். நானும் தொடங்குனேன். "இந்த பிச்சாலஜி (bitchology) ரொம்பப் புதுமையா இருக்கே. ரஷ்யாவுல அதுக்குப் பள்ளிக்கூடமெல்லாம் தொடங்கீருக்காங்களாமே!"

"ஆமாமா...இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள. அப்படி நினைக்கிறப்போ...நெனச்ச மாதிரி உள்ளவங்களையே பார்க்கவோ பழகவோ நேர்ந்ததுன்னா.....அப்ப அவங்களோட ஈடுபாட்டத் தன் மேல கொண்டு வர்ரதுங்குறதுதான் பிச்சாலஜி (bitchology). சிலருக்கு அது தானா வருது. சிலருக்குத் தெரியிறதில்ல. அப்படித் தெரியாதவங்களுக்குத்தான் இந்தப் பள்ளிக்கூடம்."

"ஆமாம் மயிலாரே. பேப்பருலயும் அப்படித்தான் போட்டிருக்கு. ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். அதுனால இருக்குற நல்ல பசங்கள எப்படிக் கவர்ந்து அவங்களை தங்களையே கலியாணம் செய்ய வெக்கிறதுன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்ராங்களாம்.

விளாடிமிர் ரக்கோவ்ஸ்கி(Vladimir Rakovsky)ங்குறவரும் அவரோட மனைவியான யெவ்ஜெனியா(yevjenia)வும் இந்தப் பள்ளிக்கூடத்த தொடங்கீருக்காங்களாம். இவங்க பேரச் சொல்லும் போதே வாய்க்குள்ள வெண்ணெய்ய திணிச்சாப்புல இருக்குதே!"

மயிலார் சொய்ங்குன்னு பறந்து வந்து பக்கத்துல உக்காந்தாரு. "அடுத்து நானே சொல்றேன். வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டுந்தான் வகுப்பு. அதுவும் இரவுப் பாடசாலைதான். இதுனால ரொம்பப் பேரு பலனடைஞ்சிருக்காங்க."

"நீங்க சொல்றதப் பாத்தா ஒங்க மேலேயே எனக்குச் சந்தேகமா இருக்கு. மயிலாருக்குத்தான் பாஸ்போர்ட்டு விசாவே தேவையில்லையே. ராத்திரியோட ராத்திரியா ரஷ்யாவுக்கு ஷண்ட்டிங் அடிக்கிறீங்களா" எனக்கு இவரு மேல சந்தேகந்தான் எப்பவும். சடசடன்னு றெக்கைய அடிச்சிக்கிறாரு. உண்மையச் சொன்னா ஒடம்பு சிலுக்குது போல.

"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி யாரும் தப்பாச் சொல்லக் கூடாதுன்னு விளாடிமிர் சொல்றாரு. ஆண்களைக் கவர்ரது எப்படீங்குறதுல உள்ள புத்தம்புதிய பல வழிமுறைகளை அவங்க சொல்லித் தர்ராங்களாம். இந்த விவரங்கள் தெரியாம பெண்கள் வீணாகப் போயி தொந்தியும் தொப்பையுமா உள்ளவங்களொட வாழ வேண்டி வந்துருமேன்னு வருத்தப்பட்டுதான் இந்த மாதிரி பள்ளிக்கூடம் இருக்குதாம்.

அதுவுமில்லாம ஒரு பெண் சிறந்த பிச்சாகுறதுக்கு (bitch) மிகுந்த தன்னம்பிக்கையும், நடத்தையும் அறிவும் வேணுமாம். ஒரு ஸ்மார்ட்டான பொண்ணுதான் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதப் பெற முடியுமாம்."

சொல்லீட்டு எங்கயோ கெளம்புனாரு. "எங்க போறீங்க?"

"போகும் போதே கேட்டுட்டியா? சரி. இதெல்லாம் நமக்கு ஒன்னும் பண்ண முடியாது. சரி. சொல்றேன். கேட்டுக்கோ. ரஷ்யாவுல இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு தேர்வு வெப்பாங்கள்ள...அதுல தியரி முடிஞ்சதாம். பிராக்டிகர் பரிச்சைக்கு நான் தேர்வாளராப் போகனும். அவ்வளவுதான்...வரட்டா?"

ஆகா...இவரு மேல சந்தேகப் பட்டது சரியாத்தான் இருக்கும் போல. நல்லாயிருந்தாச் சரிதான். ரஷ்யாவுல என்னவெல்லாம் நடக்குது. நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.

"என்ன முனுமுனுக்குற?"

"ஒன்னுமில்லைய்யா...பொம்பளப் புள்ளைகளுக்கு எத்தனையெத்தனையோ பள்ளிக்கூடங்க...ஆம்பளப் பசங்களுக்கும் அப்படியே........................"

(மக்களே...செய்தியை இந்தச் சுட்டியில் படித்துக் கொள்ளுங்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 15, 2006

சீனியம்மா - வடக்க சூலம்

அகத்திக்கீடைய ஆஞ்சிக்கிட்டிருந்தா சீனியம்மா. அப்பப் பாத்துப் பக்கத்துல உக்காந்தான் அழகரு. அழகுப் பேரன். ஐயனாரு கோயிலு பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கான். கொளக்கட்டாங்குறிச்சிச் தலக்கட்டுக எல்லாம் வரி வாங்கி பெரிய ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பெரிய கம்மாய் பக்கத்துல இருக்குற ஐயனாரு கோயில்லதான் கொடை. ரொம்ப காலமா நடக்காம இருந்து இந்த வாட்டி நடக்குது. அதுக்குத்தான் ஊருல இருந்து வந்திருக்கான் அழகரு.

"ஐயாளம்மா, அகத்திக்கீரையோட அரட்டையா?" கிண்டலாத்தாங் கேட்டான். சீனியம்மா விடுமா? "ஆமாய்யா...ஆஞ்ச கீர போட்டுத்தான் காஞ்ச பயகளத் தேத்தனுன்னா அரட்டைன்னு பாக்க முடியுமா? செரட்டைன்னு பாக்க முடியுமா?"

வழிஞ்சான். பின்ன. வேலைக்குப் போன எடத்துல கண்டதத் தின்னு காஞ்சி போயில்ல வந்திருக்கான். அப்பிடியே பேச்ச மாத்துனான். "சரி. ஊரு கூப்புட யாரு போறது? செவலார்பட்டிக்கு ஆரு போறா? இப்பயே சொல்லி விட்டாத்தான பொழுது சாய வருவாக."

செவலார்பட்டிலதான் சீனியம்மா கூடப்பொறந்த கெங்கம்மாளக் குடுத்திருக்கு. அந்தம்மாவுக்கும் புள்ள குட்டீன்னு குடும்பம் பெருசு. சம்பந்தங்காரங்க பங்காளிகன்னு பெரிய வீடு. ஊர்ப் பொங்கலுன்னா சொல்லியனுப்பனுமா இல்லையா? அதத்தான் அழகரு கேக்கான்.

"அப்பெல்லாம் நானே ரெண்டு எட்டுல செவலாருபட்டி போயிருவேன். இல்லைன்னா...வண்டி கெட்டுனா...நானே பத்திக்கிட்டு நெம்மேனி வரைக்கும் போயிருவேன். சூலங் கீலமுன்னு பாக்க மாட்டேன். இப்ப எங்க? அதான் மோட்டார் சைக்குளு இருக்கு. எளவட்டங்க படக்குன்னு போயிட்டு வந்துர்ரீக." பழைய கதைய நெனச்சு அலுத்துக்கிட்டா சீனியம்மா.

"அதென்னம்மா சூலம்? அத ஏன் பாக்கீக? வெவரஞ் சொல்லுங்களேன்"னு கேட்டான். இவனுக்கு ஒரு மண்ணுந் தெரியாது. ஊருக்குள்ள இருந்து கிருந்து படிச்சிருந்தா என்னைக்கு எங்க சூலம்னு தெரிஞ்சிருக்கும்.

"என்ன அழகரு! இப்பிடிக் கேட்டுட்ட. அப்பெல்லாஞ் சூலம் பாக்காம ஒரு எட்டு வெக்க மாட்டோமுல்ல. இந்த கெழமைக்கு எந்தப் பக்கஞ் சூலமுன்னு இருக்கு. அத மீறிப் போக முடியுமா? போனாலுஞ் சூலஞ் சும்மா விடுமால? ஆனா எந்தச் சூலமும் என்னய ஒன்னுஞ் செஞ்சிக்கிற முடியாது. நாஞ் சூலத்துக்கே சூலம்." சொல்லைலயே சீனியம்மாளுக்குப் பெருமிதந்தான்.

"அட! என்ன இந்தப் போடு! அதென்ன கத? அதையுஞ் சொல்லுங்களேங் கேக்கேன்."

"ம்ம்ம்....ஒனக்குச் சொல்லாமலாய்யா. கண்டிப்பாச் சொல்றேன்." பேரங் கேட்டதும் ஒத்துக்கிட்டா. "அப்ப எனக்கும் ஒன்னோட ஐயாளய்யாவுக்கும் முடிச்சி ஒரு மூனு வருசம் இருக்கும். ஒங்கப்பாவுக்கு ரெண்டு வயசு. அப்ப செவலார்பட்டியில ஒன்னோட சின்னப்பாட்டிக்குப் பேறுகாலம். எங்கம்மா இல்ல. நாந்தான் அக்கா. காலைல பாத்து சேதி வந்திருச்சு. இடுப்பு வலின்னு. நடந்தா நேரம் ஆகுமுன்னு சடக்குன்னு வண்டியப் போட்டுக்கிட்டுத் தனியாப் பொறப்பட்டேன். அவரு வயலுக்குப் போகனுமில்ல.

அன்னைக்கு சூலம் எந்தப் பக்கமுன்னு பாக்கல. வடக்க சூலமாம். நாந் தெரியாம ஒன்னோட ஐயாளய்யா கிட்ட சொல்லிக்கிட்டு வண்டியப் பத்துனேன். வடக்கதான போகனும். பெரிய கம்மா தாண்டி ஊர்க்கெணறு தாண்டிப் போறேன். அப்ப வந்து நிக்குதய்யா. கருகருன்னு நெடுநெடுன்னு. சூலந்தான். முண்டக்கட்டையா நிக்கி. பாக்கவே திக்குன்னு இருக்கு. ஒத்தப் பொம்பள என்ன செய்ய முடியும். பதட்டந்தான். சூலமோ கண்ணாமுழி ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சி என்னையப் பாக்குது.

அங்கன ஒரு காக்கா குருவி கூட இல்ல. நாயக் கூடக் காணோம். சூலம் இருக்குறப்ப வருமா? நாந்தான் போயி மாட்டிக்கிட்டேன்.

சூலம் வாயத் தொறந்து, "இன்னைக்கு வடக்க சூலம்னு தெரியாதா? ஏன் வந்த? ஒன்னய என்னமுஞ் செஞ்சிர வேண்டியதுதான்"னு மெரட்டுச்சு. உர்ர்ர்ர்ர்ருன்னு உறுமல் வேற. பாதகத்தி நானு. ரெண்டு வேப்பிலையாவது போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. ஆனாலும் விடல. "ஐயா! தெரியாம செஞ்சிட்டேன். கூடப் பொறந்தவளுக்குப் பேறுகாலம். அக்கான்னு ஒத்தையா நாந்தான். அதான் பொழுது கெழம பாக்காமப் பொறப்புட்டேன்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கு சூலம்.

திரும்பத் திரும்ப "இன்னைக்கு வடக்க சூலம். வடக்க சூலம்"ங்கு. நானும் பாத்தேன். நேரமாகுதேன்னு கடுப்பு வேற. எரிச்சல்ல, "யெய்யா....வடக்க சூலமுன்னு வடக்க பாக்க நிக்க வேண்டியதுதான? ஏன் இப்பிடி தெக்க ஆட்டிக்கிட்டு நிக்கீரு? ஒமக்கே மூள கொழம்பீருச்சா"ன்னேன்.

சூலமுங் கொழம்பீருச்சு. வடக்க சூலமுன்னா வடக்க பாக்கனுமா தெக்க பாக்கனுமான்னு அதுக்கே ஒரு சந்தேகம். அதான் சாக்குன்னு கூடக் கொஞ்சம் பேசிக் கொழப்பிச் சூலத்த வடக்கப் பாத்து நிக்க வெச்சிட்டு நாஞ் செவலார்பட்டிக்குப் போயிட்டேன். பேறுகாலமுஞ் சரியா நடந்து முருகம் புண்ணியத்துல கதிரேசு பொறந்தான். நாலஞ்சு நாளு இருந்துட்டு திரும்பப் பொறப்பட்டேன்.

அன்னைக்கு பாத்து வடக்க சூலமாம். குளக்கட்டாங்குறிச்சி தெக்குலதான இருக்குன்னு யாரும் கண்டுக்கல. எனக்கும் நெனப்பில்லை. ஊருக்குத் திரும்ப வந்தாத்தான சீருக்குச் செய்ய முடியுமுன்னு வண்டீல ஏறி வந்தேன். வந்தா வடக்க பாத்து நிக்குது சூலம். என்னையப் பாத்ததும் அடையாளந் தெரிஞ்சிக்கிறிச்சி சூலத்துக்கு.

"இன்னைக்கு வடக்க சூலம். அதான் வடக்க பாத்து நிக்கேன். வசமா மாட்டிக்கிட்டியா"ன்னு கும்மரிச்சம் போடுது. எனக்குக் கலங்கிப் போச்சு. கையுங் காலும் ஓடல. மாடுகளும் படபடங்குதுக.

அப்பச் சொல்லுச்சு சூலம். "இங்க பாரு பிள்ள. இன்னைக்கு வடக்க சூலம். ஒன்னுஞ் செஞ்சிராம இருக்கனுமுன்னா ஒழுங்காத் திரும்பப் போயிரு. இல்லையின்னா ஒனக்குச் சூலம் பொறக்க வெச்சிருவேன்"னு மெரட்டுச்சு.

நானும், "யெய்யா! என்னமுஞ் செஞ்சிராதீக. நாந் திரும்பியே போயிர்ரேன். நீங்க விட்டுருங்க"ன்னு கெஞ்சுனேன். சூலமும் ஒத்துக்கிருச்சு. நானும் வண்டியில திரும்பி உக்காந்துக்கிட்டு மாட்டக் கொளக்கட்டாங்குறிச்சிக்கே பத்துனேன்.

சூலத்துக்கு ஆங்காரங் கூடி, "ஏய்......திரும்பிப் போறேன்னு இங்குட்டே போறயே...என்ன திமிரு...ஒன்னய.."ன்னு பாஞ்சு வந்துச்சு.

இப்ப நானும் சுதாரிச்சிக்கிட்டேன். "இந்தா! ரொம்ப மெரட்டாதீரும். திரும்பிப் போகச் சொன்னீருன்னுதான திரும்பிப் போறேன். நேராவா போறேன். அப்புறம் எதுக்கு இந்தப் பாடு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன்.

சூலந் தெகச்சிப் போச்சி. காச்சு மூச்சுன்னு கத்துச்சு. ஆனா என்னைய ஒன்னுஞ் செய்ய முடியல. சொன்ன வாக்கு மாற முடியுமா? நானும் இதுதாஞ் சமயமுன்னு வண்டியப் பத்திக்கிட்டு வந்துட்டேன். இதாய்யா நடந்துச்சு.

மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான். "ஐயாளம்மா.....மீறிப் போனா சூலம் பொறக்க வெப்பேன்னு மெரட்டுச்சே சூலம்...இதே ஆம்பிளையா இருந்தா என்ன செஞ்சிருக்கும்?"

"அட....அதுவும் ஒரு கததான். பன்னீரு கத அப்பிடித்தான் ஆச்சு."

"அதென்ன...சொல்லுங்க" கத கேக்குற ஆவல்ல கேக்கான் அழகரு.

ஆனா சீனியம்மா விடல. "மொதல்ல குளிஞ்சிட்டு செஞ்சிட்டுச் சாப்புட்டதும் செவலார்பட்டிக்குப் போயிட்டு வா. கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 13, 2006

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

முந்திய பாகத்திற்கு இங்கே செல்லவும்.

"தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

"திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

Photobucket - Video and Image Hosting

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

Monday, November 06, 2006

02. மாட்டுத்தாவணி மகாத்மியம்

முதல் பாகத்தை இங்கே படிக்கவும்.

தலைப்பு வைக்கும் போது கேடிசி பிஆர்சி தூத்துக்குடீன்னு ஏன் வெச்சிருக்கேன்னு மொதல் பதிவுல சொல்லலையே. இப்பச் சொல்லீர்ரேன்.

கேடிசி = கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன். தூத்துக்குடி திருநவேலி மாவட்டத்துக்காரங்களுக்கு நல்லா நினைவிருக்கும். நாகர்கோயில்காரங்களும் கண்டிப்பா பாத்திருப்பாங்க.

பிஆர்சி = பாண்டியன் ரோட்வேஸ் கார்ப்பரேஷன். இது மதுர மாவட்டம். விருதுநகரு மாவட்டத்துக்கும் இதுதான். ஆகையால தெக்கில இருக்குறவங்களுக்கு இந்த ரெண்டுமே கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இப்பல்லாம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்தானே. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்.

இந்த வண்டிகள்ள அவங்கவங்களுக்கு ஒரு நிறத்துல ஓட்டுன காலங்களும் உண்டு. பிஆர்சின்னா பச்ச வண்டி. கேடிசின்னா காவி வண்டி. சென்னையில பல்லவன் செவப்பு வண்டி. இப்படி இருந்தது. இப்ப எல்லாம் ஒன்னாயிருச்சு. ரொம்ப நாள் கழிச்சுத் தூத்துக்குடிக்குப் போனதால பழைய நெனைவுகளுக்குத் தக்க பழைய பேர்களப் போட்டுக்கிட்டேன். :-) அதையும் நம்ம நண்பர்கள் ஜோவும் தாணுவும் கண்டுபிடிச்சிட்டாங்களே!

சரி. நம்ம கதைக்கு வருவோம். விடியக்காலைல ரெண்டரைக்கு செல்பேசி எழுப்பி விட்டது. வாடிபட்டிய நெருங்கீருந்தோம். பேரப் பாத்ததுமே சிங்காரவேலன்ல "வாடிப்பட்டி வம்சம்"னு கமல் பாடுறது நினைவுக்கு வந்துச்சு. வெளிய நல்லா மழ பேஞ்சிருந்தது தெரிஞ்சது. அதென்னவோ தமிழ் நாட்டுல மழ பேஞ்சா ஒரு மகிழ்ச்சிதான். பஸ்சுல கூட வந்தவரும் மதுரைல எறங்கனுமாம். அவரு டிரைவர் கிட்ட போயி வண்டிய மாட்டுத்தாவணிக்கு விடச்சொல்லிக் கேட்டாரு.

நாங்க உக்காந்திருந்தது கடைசி வரிசை. இருந்தாலும் டிரைவரு சொன்னது காதுல விழுந்தது. "டிரைவருக்குப் பதிலா நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன்"னு சொன்ன கண்டெக்டருதான் அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பாருங்க......டிரைவர்னா நாய் மாதிரி இருக்கனும்னு அவரு தப்பா நெனைச்சிருக்காரு போல. "நீங்க இப்பிடிக் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒங்கள ஏத்திரூக்கவே மாட்டேன்"ங்குற கொஞ்சம் கூடுதலான மரியாதை(!)யோடு குலைச்சாரு....சேச்சே.....சொன்னாரு. கடைசியில பெரிய மனசு வெச்சி ஒருவழியா எங்களையெல்லாம் ஆரப்பாளையத்துல ரோட்டு மேலயே எறக்கி விடச் சம்மதிச்சாரு. "என்ன தாராள மனசு. இவருக்கு இருவது ரூவா குடுத்திருந்தா மாட்டுத்தாவணிக்கே போயிருப்பாருன்னு யாரோ கிண்டலடிச்சாங்க." குடுத்திருக்கலாமோ!!!!!

நான் ஆரப்பாளையத்துல எறங்காம அந்த வண்டியிலயே திருநவேலி போயிருந்தா அங்கிருந்து முக்கா மணி நேரத்துல தூத்துக்குடி போயிருந்திருக்கலாம். ஆனா விதி யார விட்டது?

ஆரப்பாளையம் மெயிண்ரோட்டுல எறங்கி அப்படியே உள்ள நடந்தா ஆரப்பாளையம் பேருந்து நெலையம். இப்பல்லாம் நாட்டுல நெறைய இலவசங்களாகிப் போச்சு. அதுலயும் நிவாரண நிதிகளப் பத்திச் சொல்லவே வேண்டாம். பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக் கூட்டம். நிக்க ஒதுங்க எடமில்லை. மாட்டுத்தாவணிக்குப் போற வண்டியோ அந்நேரத்துக்கே பொங்கலோ பொங்கல்னு பொங்கி வழியுது. தீபாவளிக்குப் பொங்கல். என்ன செய்றது? ஆட்டோக்காரனோ எம்பது ரூவா கேக்குறான். அன்னைக்குத்தான வாழ்வு. நாங்கூட போயிரலாமோன்னு நெனச்சேன். ஆனா கூட வந்தவங்க விரும்பலை. சரீன்னு திறமையெல்லாம் காட்டி நாங்களும் பஸ்சுக்குள்ள எங்களத் திணிச்சிக்கிட்டோம்.

திடீர்னு வழியில டிரைவரு "படியில இருக்குறவங்க உள்ள நெருக்கிக்கிங்க. வெளிய இருக்காதீங்க"ன்னு சொன்னாரு. காரணத்தையும் அவரே சொன்னாரு. ஒரு குறுகலான பாலம். ஒரு பஸ்தான் போக முடியும். படியில நின்னு வெளியில தொங்குனா கண்டிப்பா எங்கையாவது ஏதாவது இழுத்து வெச்சிரும். இதுக்கு முன்னாடி அப்படி ஆயிருக்கும் போல. அதான் அவரும் அறிவுருத்துனாரு. நல்லாயிருக்கனும் அந்த டிரைவரு.

ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா. அவ்வளவு கூட்டம். தூத்துக்குடி பஸ் நிக்கிற எடத்துக்குப் போனா அங்க எந்த பஸ்சும் இல்லை. நாகர்கோயில், திருநவேலி, ராசபாளையம், செங்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தேனி, கோட்டூர் (இந்த ஊரு சாத்தூர்ல இருந்து இருக்கங்குடி வழியா போனா வர்ர ரொம்ப ரொம்ப சின்ன ஊரு) அப்படீன்னு எல்லா ஊருக்கும் வண்டிக வருது. போகுது. தூத்துக்குடி அரவத்தையே காணம்.

"ஏண்டி ஒங்கூரு வண்டி இப்பிடிக் கழுத்தறுக்குது" ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தி தூத்துக்குடி. இன்னொருத்தி வேற ஊரு போல. இவள வண்டியேத்தீட்டுப் போகலாம்னு அவ காத்திருந்தான்னு நெனைக்கிறேன். "பேசாம அருப்புக்கோட்டைக்குப் போறியா?". அத விட வேற வினையே வேண்டாம்னு நெனச்சேன். நல்லவேள அந்தப் பொண்ணும் அந்த யோசனைய ஏத்துக்கலை. தூத்துக்குடி மக்கள்ளாம் இங்குட்டும் அங்குட்டும் திரும்பித் திரும்பிப் பாக்காங்க. ஒவ்வொரு பக்கமும் வர்ர வண்டியெல்லாம் எந்தூருன்னு பாக்காங்க. நானுந்தான்.

அங்க ஒரு கடைல, "அண்ணே தூத்துடி வண்டி எத்தன மணிக்கு"ன்னு கேட்டேன். அவரும் ஒடனே, "ஏழு மணிக்கு"ன்னு சொல்லீட்டு டீயாத்துறத தொடர்ந்தாரு. ஆத்துன டீயில ஜீனிக்குப் பதிலா என்னையப் போட்டு ஆத்துன நெலமை எனக்கு. ஏழு மணிக்கு இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே. அப்ப பத்து மணிக்குத்தானா தூத்துடின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசாம கோயில்பட்டி போயிரலாம்னு நெனச்சேன். திருநவேலி நாகர்கோயில் போற வண்டியெல்லாம் கோயில்பட்டி வழியாப் போகும். கோயில்பட்டியில எறங்குனா அங்கிருந்து ஒன்னேகால் மணி நேரந்தான் தூத்துக்குடி.

அப்படியே வருத்தத்தோட அந்த வண்டிங்க வர்ர பக்கமாப் போனேன். காலை நேரம். குளிரு வேற. அவசரமா ஒன்றாம் எண்ணுக்குப் போக அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்துக்குள்ள தெரியாம நொழைஞ்சிட்டேன். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னொரு வாட்டி அதுக்குள்ள நுழையனும்னா நீல் ஆம்ஸ்ட்ராங் கிட்ட டிரஸ் வாங்கீட்டு வந்துதான் நொழையனுங்குற மாதிரி இருந்துச்சு. என்ன செய்ய...ஆத்திரத்தைத்தான அடக்கலாம்........

இப்படி செஞ்சிட்டியே முருகான்னு வெளிய வந்து பாத்தா அங்க திருச்செந்தூர் வண்டி நின்னது. ஆனா டிரைவரும் கண்டெக்டரும் எறங்கீட்டாங்க. கண்டிப்பா வண்டி தூத்துக்குடிக்குப் போகும்ன்னு டிரைவர்கிட்ட உறுதி படுத்திக்கிட்டேன். அப்படியே முருகனே வண்டியோட நின்ன பூரிப்பு எனக்கு. உக்கார எடமில்லை. இருக்கட்டும். அதுனால என்ன. நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன். அளவுக்கு மீறி ஆசப்பட்ட ஆம்பளையும் அளவுக்கு மீறி கோவப் பட்ட பொம்பளையும் உருப்பட்டதில்லைன்னு ஏதோ சினிமாவுல எல்லாம் சொல்றாங்களாம். சினிமாவுலதான ரொம்ப வருடங்களா கதாநாயகி கையப் பிசுக்கிக்கிட்டே கதாநாயகர்கள் நல்ல கருத்தெல்லாம் சொல்றாங்க. அதுனால நானும் இந்த உதவி செஞ்சதே போதும்னு முருகனுக்கு நன்றி சொல்லீட்டு ஏறி நின்னேன்.

அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........

Tuesday, October 31, 2006

தேன்கூட்டு விடுதலைக்கு நன்றி

மொதல்ல எல்லா நண்பர்களுக்கும் நன்றி. விடுகதை கதையைப் படிச்சுக் கருத்து சொல்லீட்டு அதுக்காக வாக்களித்த அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி. எனக்கு வாக்களிக்காதவங்களுக்கும் நன்றி. ஏன்னா உங்களுக்குப் பிடிச்சதுக்கு வாக்களிச்சிருப்பீங்க இல்லையா. அதுக்குதான்.

முதல் பரிசை வென்ற லக்கிலுக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மூன்றாம் பரிசு பெற்ற சுதர்சனனுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே வெற்றிக்கு முதற்படி. ஆகையால் நாம் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.

போட்டியைச் சிறப்பாக நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கும் எனது வாழ்த்துகள் நன்றிகள். இது போன்ற போட்டிகள் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது என்பதில் ஐயமில்லை. தொடரட்டும்.

இதுவரைக்கும் இந்தப் போட்டியில கலந்துகிட்டதில்லை. போன மொற போட்டி முடிஞ்சப்புறம் நடந்த சிலபல நிகழ்ச்சிகளால நான் போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு செஞ்சேன். கலந்துகிட்ட மொதவாட்டியே பரிசு கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. எல்லாப் புகழும் முருகனுக்கே. (வழக்கமாச் சொல்றதுதானங்கிறீங்களா...என்ன செய்ய...அப்படியே பழகீருச்சி.)

இன்னைக்கு (31 அக்டோபர் 2006) காலைல கந்தரநுபூதி பதிச்சிட்டு ஆபீசுக்கு ஓடலாம்னு வந்தேன். அப்ப கொத்ஸ் ஆன்லைன்ல இருந்தாரு. அவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ மக்ரூனு, அல்வா, பிட்டுன்னு இனிப்புகளா வந்துச்சு. ஆபீசுக்குக் கெளம்புறேன்னு சொன்னப்போ "have a sweet morning"னு வாழ்த்துனாரு.

ஆபீசுக்கு வந்தா வேலை...வேலை..வேலை....திடீர்னு ஒரு செல்பேசி. "ஜீரா"ன்னு. வேறயாரு? இளாதான். வாழ்த்துகள் அப்படீன்னாரு. என்னத்துக்குய்யான்னு கேட்டேன். அப்பத்தான் விவரம் சொன்னாரு. வாழ்த்துச் சொன்ன மொத ஆளு அவருதான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி பெயரிலேயே வெட்கத்த வெச்சிருக்குற ஷைலஜா செல்பேசினாங்க. அவங்களும் வாழ்த்துச் சொன்னாங்க. அதே சமயம் சுதர்சனோட மயில் வந்துச்சு. ஆனா வேலை நெறைய இருந்ததால மயிலார அப்புறம் அனுப்பலாம்னு முடிவு செஞ்சேன்.

அப்புறம் வலைப்பூவுக்கு வந்து பாத்தா, யெஸ்பா...அதாங்க பாலபாரதி, துளசி டீச்சர், ஆவி அண்ணாச்சி, வெட்டிப்பயல், ரவி கண்ணபிரான்னு வாழ்த்துப் பின்னூட்டங்கள். அத்தோட லிவிங் ஸ்மைல் வித்யா. அவங்களுடைய வாழ்த்து நான் கதையில ஓரளவாவது இயல்பாச் சொல்லீருக்கேங்குற நம்பிக்கையைக் குடுத்தது. நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

இந்தக் கதைல பலர் கேட்ட கேள்விகள் ரெண்டே ரெண்டு. ஒவ்வொன்னுக்கும் எனக்குத் தெரிஞ்ச விடைகளைச் சொல்லி இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்.

கேள்வி 1. சசிக்குமார் சசிகலாவாக மாறுவது விடுதலையா? சிறையா? இதுதான் வழியா? ரயில்தானா வரவேண்டும்! நல்ல வேலை செய்வது போல வரக்கூடாதா?

விடை 1. சசிகலாவிற்கு வேறுவழியே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதை ஊகத்தின் பேரில்தானே சொல்ல முடியும். பிடிக்காத உடையையே நம்மால் போட்டுக்கொள்ள முடியாத பொழுது...பிடிக்காத உடம்பை எப்படிப் வைத்துக்கொள்வது? அதனால்தான் நிறைய திருநங்கைகள் இந்த விடுதலையை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.

ரயிலிலா இருக்க வேண்டும் என்பதும் நல்ல கேள்வி? ரயிலில் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ரயிலில் அவர்களும் பயணம் போகிறவர்களாக இருக்கலாமே. உட்கார்ந்து கொண்டே இருக்கப் பிடிக்காமல் கதவோரம் நின்றிருக்கலாமே! அதை படிப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டேன்.

கேள்வி 2. அதென்ன எல்லா போட்டிகளிலும் திருநங்கைக் கதை ஒன்று வந்து விடுகிறதே!

விடை 2. எல்லாப் போட்டிகளிலும் ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கதை வந்து விடுகிறதே. அது ஏன் உறுத்தவில்லை? காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுநீரோட்டத்தில் (mainstream) கலந்திருக்கிறார்கள். ஆகையால் நமக்கு உறுத்துவதில்லை. கதையில் வருகின்ற பெற்றோர்களைப் போல உண்மையிலும் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவதுதான் நடக்கிறது. ஆக திருநங்கைகளை இன்னும் பொதுநீரோட்டத்தில் நாம் சேர்த்துக்கொள்ளவில்லை.

பொதுநீரோட்டத்தில் புதிதாகச் சேரவரும் ஒரு திருநங்கை தன்னுடைய உணர்வுகளைத்தான் முதலில் அள்ளிக்கொட்ட முடியும். ஏனென்றால் அப்பொழுதுதான் மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து மகிழ்ச்சி பொங்க எழுது...வேறு ஏதாவது எழுது என்பதெல்லாம் கவைக்குதவாது. அவர்களுக்கு விளம்பரம் தேவையோ இல்லையோ.....அவர்களை எழுத விடுங்கள்....குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்த தேன்கூடு + தமிழோவியம் குழுவினருக்கு எனது நன்றி. போட்டியில் கலந்து கொண்ட வாக்களித்த கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, October 26, 2006

01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி

எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.

அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.

டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.

திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.

இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.

பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.

வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.

இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?

தொடரும்....

Friday, October 06, 2006

தென்னைமரத்தில் 9/11 பெங்களூரில் நெரி

நெரி கட்டீருச்சுன்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா? தூத்துக்குடி மாவட்டத்துல பதவளை கட்டீருக்குன்னு சொல்வாங்க. கைகால்ல எங்கையாவது புண்ணு வந்தா பக்கத்துல எங்கையாவது கட்டிகட்டிக்கிரும். அதத்தான் நெரி கட்டுறதுன்னு சொல்வாங்க. தென்னமரத்துல தேள் கொட்டுனா பனமரத்துல நெரி கட்டுச்சாங்குற சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த மாதிரி ஒரு தகவல்தான் நான் சொல்லப் போறது.

மூனு வாரத்துக்கு முன்னாடி ஒரு coferenceல் கலந்து கொண்டிருந்தேன். அலுவலகப் பணி தொடர்பாதான். நெறைய மென்பொருள் நிறுவனங்களில் இருந்தெல்லாம் ஆளுங்க வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச மென்பொருளியல் பத்தி எடுத்து விட்டுக் கிட்டு இருந்தாங்க. மொதல்ல பெரிய பெரிய ஆளுங்க. பல முன்னணி நிறுவனங்கள்ள இருக்குற முன்னணி ஆளுங்க நாலஞ்சு பேருங்க மேடையில பல தகவல்களைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஜம்முன்னு லேப்டாப்கள வெச்சிக்கிட்டு விதவிதமா படம் காட்டிக்கிட்டு இருந்தாங்க.

அப்ப திடீர்னு ஒரு அறிவிப்பு. ஒருத்தர மேடைக்குக் கூப்பிட்டாங்க. ரொம்ப எளிமையா இருந்தார். நல்லாப் படிச்சவருன்னு தெரிஞ்சது. ஆனா ஆளப் பாத்தா அடிச்சிப் போட்ட மாதிரி நொந்து நூலாகி அந்து அல்வாவாகியிருந்தாரு. அவரு இந்த conference நடத்துற அமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருந்தாரு. அந்த அமைப்பு லாபம் கருதி நடத்தும் அமைப்பு இல்லை. அதற்குக் கண்டிப்பாக நிதி தேவை. ஆனா இவர் ஏன் ஒரு லட்சம் கொடுக்கனும்?

அதையும் அவரே சொன்னாரு. அவரோட பெயரைச் சொல்லலை நான். அவர் ஒரு ஏழைக் குடும்பத்துல இருந்து முன்னுக்கு வந்தவர். அவரோட அப்பா வீடுவீடா டீத்தூளு வித்துக்கிட்டு இருந்தவராம். இவருதான் வீட்டுல ரெண்டாவது. இவருக்கு ஒரு அக்கா. அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க. கடைசியா ஒரு தம்பி. இவருக்கும் இவரு தம்பிக்கும் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வயசுக்கும் மேலயே வித்யாசம். இவரு படிக்கிறதுக்காக இவருக்கு இவங்க அக்கா படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனாங்க. இவரும் படிச்சாரு. நல்லாவே படிச்சாரு. வெளிநாடெல்லாம் போனாரு. குடும்பமும் முன்னேறிச்சு. மாசத்துக்கு முப்பது நாளும் ஏரோப்பிளேன்ல பறக்குற அளவுக்குப் பெரிய ஆளானாரு. தங்கச்சி தம்பிகள படிக்க வெச்சாரு. எல்லாரும் நல்லா வந்தாங்க.

கடைசித் தங்கச்சியும் தம்பியும் மென்பொருள் துறைக்குள்ள நொழைஞ்சாங்க. அதுலயும் அந்தத் தம்பி ஷஷாங்க் ரொம்பவே புத்திசாலியாம். அண்ணனுக்கும் அவனுக்கும் வயசு வேறுபாடு நிறைய இருந்தாலும், வெளிநாட்டுல இருந்தாலும் நல்ல நெருக்கமா இருந்து தெரிஞ்சிக்க வேண்டிய உலக நடப்புகளத் தெரிஞ்சிக்கிட்டு நல்லா படிச்சானாம். Wipro நிறுவனத்துல வேலை கெடச்சு நல்ல வேலையும் செஞ்சானாம்.

அவனுக்கும் வெளிநாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு வந்தது. அவன் வேல பாக்குற கம்பெனியில இருந்து. அமெரிக்கா அவனையும் வரவேற்றது. அவன் அங்கு சென்ற நிறுவனம் WTC கட்டடத்தில் இருந்தது. அவன் தலையெழுத்து. அந்த 9/11 கோரச்சம்பவம் நடந்தது. ஷஷாங்கின் கதை அத்தோடு முடிந்தது. ஆனால் அவனது குடும்பத்தின் கதை?

செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தாராம் அவனது தாய். அத்தோடு சரி. இன்னும் மனநிலை தெளியாமல் ஒரு நடைப்பிணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அறுபதுகளில் இருக்கும் அவரது தோற்றம் தொன்னூறுகளில் இருப்பவரைப் போல மாறிவிட்டது. தந்தையோ எப்படியோ உயிரைப் பிடித்துக் கொண்டு மனைவிக்காக இருக்கிறார்.

இவரால் அதற்கு மேல் தாய் தந்தையரை விட்டு இருக்க முடியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி விட்டார். ஒரு நல்ல நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் நிம்மதி? ஷஷாங்கை உலகிலிருந்து அழிக்கத் தீவிரவாதம் என்ற ரப்பர் இருந்தது. ஆனால் இவர்கள் மனதிலிருந்து அழிக்க எந்த ரப்பரையும் எந்த மதத்து ஆண்டவனும் அருளவில்லை. அவன் ஓரிறைவனாக இருந்தாலும் சரி. முப்பத்து முக்கோடி தேவர்களாயும் அவர்களுக்கும் மேலான ஆதிசிவனாக இருந்தாலும் புத்தனாய், அருகனாய் எத்தனை பேரானாலும் சரி.

ஷஷாங்க் எங்கெல்லாம் மகிழ்ந்திருந்தானோ, ஷஷாங்கோடு எவையெல்லாம் தொடர்புடையனவோ அங்கெல்லாம் ஷஷாங்கின் பெயரில் ஏதாவது செய்யத் தொடங்கினார்கள். அவன் படித்த பள்ளிக்கு வகுப்பறைகள். கல்லூரியில் வகுப்பறைகள். அவன் பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை. அவன் பணி செய்த மென்பொருள் தொடர்பான உதவிகள். அந்த வகையில்தான் ஒர் லட்ச ரூபாய் நிதியுதவி. இப்படி ஷஷாங்கோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் தேடித் தேடி ஷஷாங்கைத் தேடிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்ப்பது மட்டுமே என்று வலைப்பூ வரைக்கும் வந்துவிட்ட நிலையில், அடுத்தவனைச் சொன்னியா...என்னயச் சொல்ல வந்துட்ட போன்ற எண்ணங்களுமே.......அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!

ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறிப்பாக தங்கள் மதமே சிறந்தது என்று நம்புகின்ற மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது மதமே சிறந்ததாக இருக்கட்டும். உங்களது மதத்தை அமைதி வழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு உள்ள குற்றவாளிகளை ஆதரிக்காதீர்கள். அடுத்தவன் ஒழுங்கா என்று கேட்பது மிக எளிது. நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம். நான் சொல்ல வந்தது என்னவென்று எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன்.

வேதனையுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை

உருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.

"ஹே! போண்டாவாலா! இதர் ஆவோ!" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. "போண்டா தின்னும் போண்டா" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.

இப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.

அந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். "எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா! நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது!" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.

"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே....." மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ! வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே! அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். "பானி தேதோ" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.

வெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.

அந்த அப்பா ஒரு நாள் சொன்னார். "சீச்சீ! மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்."

லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ! கல்யாணம் ஆயிருக்குமோ! குழந்தைகளும் ஆகியிருக்குமோ! பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது!

பக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். "ஏடி! சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா!" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, September 27, 2006

சீனியம்மா - சிறுகதை

"ஏல சீனி. இப்ப எப்பிடியிருக்கு? சவுரியந்தானா?" சீனியம்மாவிடம் கேட்டது மாரியம்மா.

சீனியம்மா சென்னைக்குப் போயி கண்ணு ஆப்புரேசன் செஞ்சிட்டு வந்துருக்குல்ல. அதான் ஊருல எல்லாரும் வந்து பாக்காக. புதூரு கொளக்கட்டாங்குறிச்சிதான் சீனியம்மாவுக்குச் சொந்தூரு. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்க நாலாரமும் வெளாத்திகொளமும் போயிருக்கும். வடக்க அருப்புகோட்ட. கெழக்க சாத்தூரு. இதத் தாண்டி எங்க போயிருக்கு. அதான் இப்பச் சென்னைக்குப் போயிட்டு வந்துருக்கே.

"இப்ப நல்லாத் தெரியுது மாரி. ஒரு வாரத்துக்கு டாக்குடரு மூடுன மானிக்கி இருக்கனுன்னு சொல்லீருக்காரு. தோட்டந் தொரவு போய்ப் பாக்க முடியாது. இப்பிடி வீட்டுக்குள்ளயே கெடக்க வேண்டியிருக்கு." சொகமா அலுத்துக்கிருச்சி சீனியம்மா.

"அட இதென்ன பச்சத்துணி போட்டுல்ல மூடீருக்கு. இதத் தொறக்கக் கூடாதாக்கும்......" இழுவ எசக்கிதான். வேறாரு.

"இவ ஒரு இவ. பெரிய படிச்ச டாக்குடரு சொன்னா சும்மாவா இருக்கும். கூரில்லாமக் கேக்கியே? நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக? சாத்தூரு டாக்குடரு கிட்டதாம் போகனும். ஆனாலும் பட்டணம் பட்டணந்தேன்." பெருமதான் சீனியம்மாவுக்கு. பின்னே மகன் வயுத்துப் பேரன் அழகருதான கூட்டீட்டுப் போயி பெரிய ஆசுப்பித்திரீல கண்ணு மருந்து காட்டி ஆப்புரேசன் செலவு செஞ்சது. மாரி மகன் அருப்புக்கோட்ட மில்லுல சூப்பருவைசருதான. எசக்கிக்கு மகதான். அவளையும் உள்ளூருல குடுத்துருக்கு. இவுக எங்க பட்டணம் போயி.....அந்தப் பெருமதான் நம்ம சீனியம்மாவுக்கு.

"இந்தால...பட்டணம் நாங்க எங்க பாக்க? என்னென்ன பாத்தன்னு சொல்லு. கேட்டுக்கிருதோம்." மாரியம்மா எறங்கி வந்துருச்சி. வெவரம் கேக்குறதுல்ல ரொம்பக் கெட்டிக்காரி மாரி.

"அதயேங் கேக்க மாரி. நம்மூருல பஸ்சு வர்ரதே பெரிய பாடு. அங்கன எங்கன பாத்தாலும் பிளசருதாம் போ. சர்ரூ சர்ரூன்னு போகுது. அழகரு வீட்டுலதான் தங்கீருந்தேன். கூடக் கூட்டாளிக ரெண்டு பயலுக. பாட்டி பாட்டீன்னு பாசமாக் கூப்புட்டானுக. கூட வேல பாக்குற பயலுகளாம். நல்லபடியாப் போயிருந்தா பொங்கிப் போட்டுருப்பேன். பாவம் கெளப்புக் கடைலயே எப்பவும் திங்கானுக. நம்ம சொருணந்தான் ரெண்டு நாளைக்குச் செஞ்சு போட்டா. (சொருணம் அழகரப் பெத்தவ. சீனியம்மாவோட மகன் வெள்ளச்சாமியக் கட்டுனவ.) நல்லாருக்கு நல்லாருக்குன்னு ருசிச்சி ருசிச்சி சாப்புட்டானுக. பாவம் யாரு பெத்த புள்ளைகளோ!"

"அது கெடக்கட்டும். ஆசுபித்திரி எப்பிடி? வீட்டுக்குப் பக்கத்துலயா?" எசக்கிக்கு வந்த சந்தேகம்.

லேசா முக்கி மொணங்குச்சு சீனியம்மா. "க்கூம். ஆசுபித்திரி ஒரு மூலைல. வீடு ஒரு மூலைல. புதூருலயிருந்து நாலாரம் போயி அங்கேருந்து வெளாத்திகொளம் போயி இன்னும் தெக்கால போற தூரம். கொஞ்சம் போனா குறுக்குச்சாலயே வந்துரும் போல. அம்புட்டு தூரம். அதுவும் ஆட்டோவுல கூட்டீட்டுப் போனான். ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டீருச்சு. லேசா கக்க வந்தது. கண்ண மூடிட்டுப் பல்லக் கடிச்சிட்டுப் போயிட்டேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆசுபித்திரி மாரி. அஞ்சாறு மாடியிருக்கும். அடேங்கப்பா...நிமுந்து பாத்தா கழுத்து வலிக்கு. உள்ள போனா ஆளு வெச்சித் தரையத் தொடச்சிக்கிட்டே இருக்காங்க. அப்பிடித் தொடைக்கங்காட்டிதான் தரை வழுவழூன்னு இருக்கு. ஆசுபித்திரி நடத்துறவக வெளிநாட்டுக்காரக போல. ஏன்னா அழகரு அவுககிட்ட இங்குலூசு பேசுனான். அவுக கிட்டப் பேசப் பயந்து கிட்டுத்தேன் நானு தலையத் தலைய ஆட்டுனேன். அதுவும் அவகளுக்குச் சிரிப்புதாம் போ.

அங்கன ஒருத்தி எந் தண்டட்டியப் புடிச்சிப் பாக்கா. என்னவோ பட்டிக்காட்டன் முட்டாய்க் கடையப் பாத்தாப்புல.

அத விடு. அங்க ஒரு பெரிய தெராசு இருக்காத்தா. ஒரே வேளைல நாலஞ்சு பேர நிப்பாட்டி நிறுக்கலாம். அத்தாம் பெருசு. அடிக்கடி அதுல ஆளுகள எட போட்டுப் பாத்தாக. நாம் போனதுங் கூட மொதல்ல என்ன எட பாத்தாக. ரெண்டு நாளு கழிச்சிப் பொறப்படும் போதும் எட பாத்துத்தான் விட்டாக. அவ்வளவு பதமா எதமா பாத்துக்கிட்டாக. எட பாக்கைல அப்பிடியே ஜிவ்வுங்குது. பெரிய தராசுல்ல. நான் அழகரு கையப் பிடிச்சிக் கிட்டேன்.

அங்கனயே ரூம்புல சாப்பாடு. உள்ளயே படுக்கச் செய்ய வசதி. பளபளக் கக்கூசு. பெரிய பதவிசாத்தா....."

மாரியம்மாவும் எசக்கியும் இதெல்லாங் கேட்டுக் கெறங்கிப் போனாக. சீனியம்மா சொன்னத வெச்சிப் பாத்தா ஆசுபித்திரி கட்டபொம்மங் கட்டுன அரமண கெணக்கா இருக்கனுமுன்னு நெனச்சிக்கிட்டாக. அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.

ரெண்டு பேருங் கொஞ்ச நேரம் சீனியம்மாகிட்ட பேசீட்டுப் பொறப்பட்டாக. அப்பப் பாத்து வந்தான் அழகரு. வட்டக் கெணத்துல குளிச்சிட்டு துண்டக் கெட்டிக்கிட்டு வந்தான். திண்ணைல வெச்சிக் கெழவிக அவனப் பிடிச்சிக்கிட்டாக.

"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.

"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, September 18, 2006

பெங்களூரில் ராகவனைச் சந்தித்தேன்

ஆமா...சென்னையிலேயே சந்திச்சிருக்க வேண்டியது. எப்படியோ தட்டிப் போயிருச்சு. பெங்களூர் வந்தப்புறம் சந்திக்க வாய்புக் கிடைச்சது. அதாவது சனிக்கிழமை செப்டம்பர் 16ம் தேதி இரவு. அதுவும் நண்பர்களோட. எங்கன்னு கேக்குறீங்களா? PVR Cinemasலதான். வேட்டையாடு விளையாடு படத்தச் சென்னையில இருக்கும் போதே பாத்திருக்க வேண்டியது. எப்படியோ நேரமில்லாமத் தள்ளிப் போச்சு. இங்க பெங்களூர்ல போன வாரம் முயற்சி செய்து முடியாமல் இந்த வாரம் சனிக்கிழமை இரவுக் காட்சிக்குப் போக முடிந்தது.

டி.சி.பி ராகவன் பாத்திரத்தில் கமல். படம் தொடங்கும் போதே ராகவன் தொல்லை தாங்க முடியலைன்னு ஒருத்தர் சொல்ற மாதிரிதான் தொடங்குது. வலைப்பூவுல இருந்து யாரும் வசனம் எழுதீருக்கீங்களா என்ன? ஹா ஹா ஹா! பொதுவாவே ராகவன்னு பேரெல்லாம் தமிழ்ப் படத்துல பாக்க முடியாது. ராஜாதான் நெறைய பயன்படுத்துன பேர்னு நெனைக்கிறேன். ஆகையால படம் பாக்கும் பொழுது என்னையுமறியாம ராகவன் பாத்திரத்தோட கொஞ்சம் ஒன்றீட்டேன்னுதான் சொல்லனும். அதுலயும் கூட வந்தவங்க செஞ்ச வம்பு இருக்கே! அப்பப்பா! :-)

டி.சி.பி ராகவன் வீட்டுலயும் வாரம் ஒரு வாட்டி கறி எடுக்குறாங்க. ஹி ஹி. நம்ம வீட்டுலயுந்தான். எவ்வளவு பெரிய ஒத்துமை. அத விட அவரு வீட்டுல பூஜையறையில நடுநாயகமா முருகன் படம். அதுவும் வள்ளி தெய்வானையோட நிக்குற பெரிய படம். :-) நான் கவனிச்சதது போலவே கூட இருந்த நண்பர்களும் பாத்துட்டு எங்கிட்ட சொன்னாங்க. புல்லரிச்சுப் போச்சுங்க எனக்கு. :-)

டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை. அதுல பாருங்க டி.சி.பி ராகவன் கையில தொட்டில் கட்டியிருக்கிற காட்சியில எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சென்னையில இருந்தப்போ நான் கட்டிக்கிட்டிருந்தேனே! அந்த நெனப்புதான்.

சவால்லாம் பயங்கரமா விட்டுச் சண்டை போடுறாரு டி.சி.பி. நமக்கு அதெல்லாம் ஆகாதுங்க. என்னத்தச் சண்ட போட்டு....ஆனா ஒன்னு....Raghavan's Instinctன்னு சொல்றாரு பாருங்க....அது நமக்கு அப்பிடியே பொருந்தும். என்னோட வாழ்க்கையில பலவாட்டி நான் அனுபவிச்சதுதான் அது. அதெல்லாம் சொல்லலாந்தான். ஆனா அடுத்தவங்களும் தொடர்புள்ள நிகழ்ச்சிகள். அதுனால சொல்ல விரும்பலை. அதுனால டி.சி.பி ராகவனுக்கு அந்த instinct வேலை செய்ற காட்சிகள்ள எனக்கு ஒரு மாதிரி ஈரப்படுக்கையில படுத்திருந்த மாதிரி இருந்தது. ஆனா நேரா கருத்துக்கு வர்ர அவருடைய வழக்கம் எனக்கும் உண்டு. எல்லாருக்கும் உண்டுன்னு எல்லாரும் சொல்வாங்கன்னு நெனைக்கிறேன்.

இன்னொரு ஒத்துமை. எனக்குக் கயல்விழிங்குற பேரு ரொம்பப் பிடிக்கும். தமிழில் பிடிச்ச பேர்கள்ள அதுதான் முதலிடம்னே சொல்லலாம். ஒரு பெண்குழந்தையக் குடுத்துப் பேர் வெக்கச் சொன்னா மொதல்ல அந்தப் பேரத்தான் வெப்பேன்.

நமக்கும் டிசிபிக்கும் கொஞ்சம் வேறுபாடுகளும் இருக்குது. அவருக்கு மீசை இருக்குது. என்னைய விட பெரிய தொப்பை வெச்சிருக்காரு. போலீஸ் பாத்திரம்னு அப்படி இருந்திருக்கலாம். காரு ஜீப்பு ஓட்டுறாரு. எனக்குத் தெரியாதே. பைக்குதான் தெரியும். கதவையெல்லாம் என்னால மோதி ஒடைக்க முடியும்னு தோணலை. அதே போல கழுத்தத் திரிகிக் கொல்ல முடியுமான்னும் தெரியலை. கறி கோழி திம்பேன்னாலும் ஒரு கோழியக் குடுத்து வெட்டுன்னு சொன்னா இன்னைக்கு இருக்குற ஜிராவால செய்ய முடியும்னு தோணலை.

படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு மிகச் சிறப்பு. அவர் இருக்கும் காட்சியில் ராகவன் இருப்பதே தெரியவில்லை. ஜோதிகாவும் ராகவனை பன்னுக்குள் சாசேஜை வைத்து ஹாட் டாக் போல கபலபக்கி விடுகிறார். கமலும் ராகவன் என்ற பெயரினாலோ என்னவோ அடக்கி வாசித்திருக்கிறார் போல. :-) ஆனால் அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது. வெள்ளை ரோஜா படத்தில் போலீஸ் சிவாஜி மனோரமாவை விசாரணைக்கு அழைத்து வரச் சொல்வார். அந்தக் காட்சியில் மனோரமாவின் அரசாங்கந்தான். சிவாஜி அமைதியாக இருந்து மனோரமாவிற்கு பெயர் வாங்கிக் கொடுப்பார். அந்த மாதிரி நடித்திருந்தார் டி.சி.பி.

வில்லன்களைச் சொல்லாமல் விட முடியுமா? ஒரு வில்லனைக் கொஞ்சமும் யோசிக்காமல் கதாநாயகனாகவே போடலாம். அவ்வளவு நன்றாக இருக்கிறார். நடிக்கிறார். நல்ல வாய்ப்பு கிடைக்க எனது வாழ்த்துகள். நான் இளாவைத்தான் சொல்கிறேன். அமுதன் கொஞ்சம் அளவுக்கு மீறிய சேட்டை. பார்க்கும் பொழுதே எரிச்சல் வருகிறது. அதுதான் அந்தப் பாத்திரத்திற்குத் தேவை என்று நினைக்கிறேன். இரண்டு bi-sexual ஆண்களை வில்லனாகப் போட்டுப் படமெடுப்பது தமிழுக்குப் புதிது.

கமலினி....கமல் இனி வாய்ப்புக் குடுப்பாரா என்று தெரியவில்லை. பின்னே....முத்தக் காட்சியே படத்தில் இல்லையே! ஆனாலும் அழகாய்த் தோன்றி அடக்கமாய் நடித்து படக்கென்று போய் விடுகிறார். அதனால்தானோ என்னவோ கதாநாயகியின் மொத்த எடையையும் ஜோதிகா வாங்கிக் கொண்டு மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார். இனிமெல் திரைப்படத்தில் நடிக்க மாட்டாராம். நல்லது. அது அப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன். அதுதான் அவரது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது.

பாடல்கள் எல்லாமே நன்றாக எழுதப் பட்டிருக்கிறது. தாமரை! உங்களைத் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று வருந்தாதீர்கள். நல்ல குலாப்ஜாமூன் எப்பொழுதாவது ஒருமுறை கிடைத்தாலும் நாவிலும் நெஞ்சிலும் நிற்கும். ஆனால் உங்களின் பாடல் ஒன்று வடக்கத்திப் பாடகர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறது. கேட்கும் பொழுது வருத்தமாக இருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ். வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவெ.....சூப்பரப்பு! ஆனாலும் நீங்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள்.

கடைசியாக கௌதமுக்கு சில வரிகள். நல்ல முயற்சி கௌதம். படம் வெற்றிப்படம்தான். ஐயமில்லை. படத்தை நானும் ரசித்தேன். ஆனால் எப்படி UA கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. A+ கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவு வன்முறை. பலகாட்சிகளில் திரையிலிருந்து கண்களை விலக்க வேண்டியிருந்தது. படத்தில் ஜோதிகாவைக் கொன்று விடுவீர்களோ என நினைத்தேன். நல்லவேளை...என்னுடைய சாபத்திலிருந்து தப்பினீர்கள். :-)

வெண்ணிலவே பாடலைத் திரையில் மிகவும் ரசித்தேன். அந்த வெள்ளைக்கார மாணவர்கள் தமிழில் பாடுவது ரொம்பவும் இயல்பாகவும அழகாகவும் இருந்தது. அந்தப் பாடலின் முடிவில் தன்னையுமறியாமல் டி.சி.பி ராகவன் ஆராதனாவை (ஜோதிகாவை) உள்ளத்தில் ஈர்த்துக் கொள்வது மிகவும் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. ரசித்தேன்.

அதே போல டி.சி.பி தன்னுடைய காதலை ஆராதனாவிடம் சொல்லும் காட்சியும் மிக அழகு. தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு செல்லும் ஆராதனாவின் முகபாவங்களும் நடிப்பும் புதுமை. இனிமை. ஆராதனா வெளிப்படுத்திய காதலின் எடை கயல்விழி காட்டும் காதலை விட மிக இயல்பாக வந்திருக்கிறது. அதிலும் ஆராதனா தன்னுடைய தங்கையிடம் ராகவனுடன் நடத்திய உரையாடலை விவரிக்கும் கட்டம். அப்பப்பா! நமக்குள் திக்திக்தான்.

கௌதம், படம் முடிகையில் எனக்கு ஒன்று தோன்றியது. எல்லாரும் இந்தப் படத்தைக் காக்க காக்க -2 என்று சொல்கிறார்கள். அது தப்பு. இதுதான் காக்க காக்க - 1. காக்க காக்கவிற்கு முன்னோடி. இதன் தொடர்ச்சிதான் காக்க காக்க கதை. ஏன் இப்படி நினைக்கிறேன் தெரியுமா? படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். ஜோதிகாவின் மகள் ஜோதிகாவைப் போலவே இருப்பதும் சரிதானே! இது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையோ!

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, September 09, 2006

2. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ரெண்டு

தாமதத்துக்கு மன்னிக்கவும். என்ன பண்றது. அடுத்த பாகம் போட வேண்டிய பொழுதுதான் சென்னைய விட்டுக் கெளம்பி பெங்களூர் வர வேண்டியதாப் போச்சு. வந்த மொத வாரம் வேலை நெறைய. அதாங்க காரணம். ஆனாலும் போன வாட்டி போட்டிருக்க வேண்டிய படங்களை இந்த வாட்டி போட்டிருக்கேன்.



முதல் பாகத்த இங்க பாத்தீங்க. இப்ப ரெண்டாம் பாகத்துக்கு வருவோம்.

நவீன நாடகங்கள் எனக்குப் புரியாது என்று பெருமை பேசுகின்ற தமிழர் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருந்தாலும் அவ்வப்பொழுது ஆசை உந்த பார்த்து விடுவது உண்டு. பெங்களூரில் ஆங்கில கன்னட நாடகங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு தமிழ் நாடகங்களைப் பார்க்கக் கிடைக்கவில்லை. மூன்று மாதங்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நிலை வந்த பொழுது நாடகங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடிவயிற்றில் விழுங்கிய அத்தனை இட்டிலிகளுக்கு அடியிலும் ஒளிந்து கொண்டிருந்தது.

கூத்துப்பட்டறை பற்றி எல்லாரும் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். நவீன நாடகங்களுக்குப் பெயர் போனவர்கள். பொன்னியின் செல்வனை மேடையேற்றியவர்கள். என்.முத்துசாமி அவர்களின் உழைப்பாலும் முயற்சியாலும் 1977ல் தொடங்கி தமிழ் நாடக உலகில் புதுமலர்ச்சியும் முயற்சியும் கொண்டு வந்தவர்கள். இன்னும் நிறைய சொல்லலாம். நாடகத்தையும் நடிப்பையும் கற்றுக் கொள்ளச் சிறந்த இடங்கள் என ஐந்து இடங்களை UNESCO தேர்ந்தெடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் கூத்துப்பட்டறையும் இருப்பது அதன் உழைப்பாலும் பங்களிப்பாலும். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலிருந்து நடிகர்கள் வந்து மூன்று மாதங்கள் கூத்துப்பட்டறையில் தங்கி பயிற்சி பெறுவார்கள்.

பரமார்த்த குரு கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் Contenstine Jospeh Beski எழுதியதாகக் கருதப் படுவது. தேம்பாவணி என்னும் நூலும் இவர் எழுதியதாக் கருதப் படுவதே. இவர்தான் எழுதினார் என்றுதான் சிறுவயதில் பள்ளியில் படித்திருக்கிறேன். ஆனால் பல தமிழாராய்ச்சி நூல்களைப் புரட்டிய பொழுது இவரு எழுதாமல் இவருக்கு ஆசானாக இருந்த சுப்ரதீபக் கவிராயர் எழுதியிருப்பாரோ என்று பலர் கருதுகின்றனர். ஆனாலும் இவர் எழுதவில்லை என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் அவரால் எழுதப்பட்டது என்று கருதப்படுவது என்று நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கிருத்துவ மதப் பிரச்சாரத்திற்காக இத்தாலியிலிருந்து இந்தியா வந்தவர் இவர். ஒன்றை நம்பினால் இன்னொன்றை மறுப்பது என்பதுதானே பொதுவான உலக வழக்கு. அந்த வகையில் கிருத்துவத்தை நம்பிய அவர் அப்பொழுதைய தென்னிந்திய மக்களின் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து எழுதியதாகக் கருதப்படுவதே பரமார்த்த குரு கதைகள். வைரத்தையும் தங்கத்தையும் நக்குவதைக் காட்டிலும் சிறந்த நகைச்சுவைக் கதைகள் அவை.

இந்த பரமார்த்த குரு கதையும் கூத்துப்பட்டரையும் இணைந்தால் என்ன கிடைக்கும்? மாலைப் பொழுதை நல்லவிதமாகப் பொழுது போக்கினோம் என்று மனநிறைவைத் தரும் நல்ல நாடகமும் அதனால் பல சுவையான நினைவுகளும் வலைப்பூக்களிலும் மன்றங்களிலும் சில பல பதிவுகளும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் பதிவுகளில் ஒன்றுதான் நான் தருவது. இப்பொழுது நீங்கள் படிப்பது.

இருட்டில்தான் எல்லாம் தொடங்குகிறது என்கிறார்கள் திருமணமானவர்கள். நாடகம் பார்க்கிறவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். டிஜிட்டல் கேமிராவை வைத்துக் கொண்டு நானும் தயாராக இருந்தேன்.

ஓ பகிரியா ஓ பகிரியா
லம்பயி கரியோ லொவீயா
க்வாக் க்வாக் க்வாக்
ஓ பகிரியா ஓ பகிரியா

பின்னாடியிருந்து சத்தம் வந்தது. டொண்ட்ட டக்க டொண்ட்ட டக்க என்று தாளவொலி. தலையில் வட்டக் கொண்டை. அதைச் சுற்றிலும் பூச்சரம். மழுமழு முகம்.நெற்றியில் வட்டமாய்க் கருப்புப் பொட்டு. இளஞ்சிவப்பு அரிதாரமுகமும் அடர் சிவப்பு வாயும். முழுக்கைச் சட்டை. முக்காப் பாவாடை. ஜிலுஜிலுவென பாடிக் கொண்டே இறங்கி வந்தாள் சோலை. இரண்டு பக்கமும் ரசிகர்களைப் பார்த்துப் பாடிக் கொண்டே வந்தவள்.....கருத்த மச்சானாக கட்டழகாக உட்கார்ந்திருந்த ஒருவர் பக்கத்தில் ஆசையோடு உட்கார்ந்து பாடுகிறாள். பார்வையால் அவனைப் பருகிக் கொண்டே மேடைக்குப் போகிறாள்.

தன்னைச் சோலை அறிமுகம் செய்து கொள்கிறாள். "நான் அவனா அவளான்னு பாக்குறீங்களா? அவன்ல இருக்குற ன்னோட நடுவுல இருக்குற சுழி போயி கோடு வந்து அவளாயிருச்சு." இருபொருள் பட அவளது பாலியல் மாற்றத்தை விளக்குகிறாள். கூஊஊஊஊஊச்! இதுதான் சோலைக்கு ரொம்பப் பிடித்தது. அதென்னது! அட! அதையெல்லாம் வெளிப்படையாச் சொல்வாளா என்ன? :-)

இந்தச் சோலைதான் பரமார்த்த குருவோட ஆசிரமத்துல குருவுக்கும் சீடர்களுக்கும் எடுபடியா உதவியா இருக்குறது. இவளோட பார்வையிலதான் நாடகம் தொடர்ந்து நடக்கப் போகுது!

கூஊஊஊஊஊச்! (நானில்லை. சோலை)

தொடரும்...

Sunday, August 27, 2006

1. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ஒன்னு

வெயிலும் வெக்கையும் கொளுத்தும் ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமையிலே சென்னையிலே பல திட்டங்கள் போட்டு ஒன்றும் நடக்காமல் என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கக் கண்டார் ஜி.ரா என்று அன்போடு(!) நண்பர்களால் அழைக்கப்படும் கோ.இராகவன். அதாவது ஆகஸ்டு 20ம் தேதி.

காலையிலிருந்து பல வேலைகளில் மாட்டிக் கொண்டு ஜிரா பிழிந்து எடுக்கப் பட்ட கரும்பு போல இருந்த ஜி.ரா பைக்கை எடுத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் விரைய வேண்டியதாயிற்று. கூடவே படபடவென றெக்கையை அடித்துக் கொண்டு தோகையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயிலாரும் பறந்தார்.

ஒன்வே டூவேக்களிலெல்லாம் நுழைந்து திருப்பங்களில் நெளிந்து பன்றிமலைச் சித்தர் ஆசிரமம் வழியாகச் சென்று சடக்கென்று நுழைந்த இடம் Alliance Francaise. தமிழை விட ஃபிரெஞ்ச்சை ஒழுங்காகத் தமிழர்கள் பலர் உச்சரிக்கும் கலைவளர்க்கும் புண்ணிய பூமி அது. தீடீரென்று பாரீசுக்குள் நுழைந்தது போல இருந்தது என்று பொய் சொல்ல மனமில்லாததால் நேரடியாக சொல்ல வந்ததிற்கு வருகிறேன்.

போண்டாவும் பாசந்தியும் இல்லாமல் வலைப்பதிவர்கள் சந்திக்க முடியுமா என்று பட்டி மன்றம் வைக்க வேண்டியிதில்லை என்று நிருபிக்கவோ என்னவோ எஸ்.பாலபாரதியும், அருளும், ப்ரியனும், ஜி.ராவும் AF வாசலில் கூடினார்கள். கூடவே சாட்சியாக மயிலார்.

யார் யார் யார் என்று தெரியாமல் அரிமுகமாக இருக்காமல் படக்கென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆடு கிடைக்குப் போகும். இல்லையென்றால் பிரியாணியாக கடைக்குப் போகும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? இதில் மாபெரும் சதி இருக்கும் என்று எல்லாரும் நினைப்பதற்கு வாய்ப்பிருப்பதால் அப்படியே அனைவரும் நினைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பின் நவீனத்துவத்திலிருந்து எக்ஸிஸ்டென்ஷியலிசம் வழியாக மரபுக்கவிதைக் காவியங்களுக்குள் நுழையும் வழிமுறைகளைப் பற்றியெல்லாம் பேசத் தெரியாயதாலோ என்னவோ நேராக அனைவரும் டீ குடிக்கப் போனார்கள். டீ என்பது தமிழா என்று கேட்கும் அறிவு அதி ஜி.ராவுக்கு அந்நேரம் இல்லாததால் அனைவரும் நிம்மதியாக டீ குடித்தார்கள்.

இவர்கள் டீ குடித்த வேளையில் மயிலார் ஜி.ராவின் காதில் போய் "நேரமாச்சு. வர்ரியா...நான் போகட்டுமா? நீ வேணா இவங்க கிட்ட வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இரு" என்று மெதுவாகக் கேட்டது எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது. பாபா(அதாங்க பாலபாரதி)வும் அப்படியே சமாளித்துக் கொண்டு "ஓ! போலாமே...நேரமாச்சு" என்று சமாளித்தார். அந்த அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒழுங்காக வரவில்லை. ஆனாலும் கொடுக்கிறேன். யாரையாவது கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே எல்லார் கையிலும் நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு நுழைய இடம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் சிகப்பு நிற போஸ்டரைப் பார்த்துக் கொண்டே இரண்டு மாடிகளைத் தாண்டி அரங்கத்துக்குள் நுழைந்தோம். நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம். ஆனால் வசதியாக இருந்தது. மேலே ஏறியிருப்பது மேடை என்பதைப் பொய்யாக்கி மேடையை கீழே வைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்ப்பது போல ஒரு அமைப்பு.

ஆளாளுக்கு இருந்த இடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் அடித்துப் பிடித்து அமர்ந்தோம். குற்றம் காணின் அதை உரக்கச் சொல்வோம் என்பது போல "எனக்கு மறைக்குது...ஒனக்கு இடிக்குது" என்று குரலெழுப்பிக் கொண்டனர் சிலர். ஆனாலும் நாகரீகத்தில் உச்சியில் இருக்கும் நாம் மறைக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர் பலர். மயிலார் தோகையை நன்றாக விரித்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் மட்டும் யாரும் மறைக்கிறது தோகையை மடக்குங்கள் என்று சொல்லவேயில்லை.

சரி. என்னதான் நடக்கப் போகிறது. நாடகம்தான். வேறென்ன. உலகமே ஒரு நாடகமேடையாம். அப்படியானால் இது நாடகத்தில் நாடகமா? கதைக்குள் கதை மாதிரி.

தொடரும்....

(படம் போடுறதுல சின்ன பிரச்சனை....சாந்தரம் வீட்டுக்குப் போயி படத்தப் போடுறேன்)

Monday, August 14, 2006

சென்னையில் பரமார்த்த குரு

பரமார்ந்த குரு சென்னைக்கு வருகிறார். ஆம். வருகின்ற ஞாயிறு, அதாவது ஆகஸ்டு மாதம் 20ம் தேதி 2006ம் ஆண்டு.

ஆமாம். நம்புங்கள். தன்னுடைய சீடர்களோடு கும்மாளம் போட்டு நம்மையும் மகிழ்விக்க வருகிறார். அதுவும் இரண்டு முறை.

கூத்துப்பட்டறை எல்லாருக்கும் தெரியும். அவர்கள் பொன்னியின் செல்வனை மேடை வடிவமாக்கியவர்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருந்து கொண்டு இதெல்லாம் பத்திரிகையில் படிப்பதோடு முடிந்து போனது. அப்படியிருக்க இந்த மூன்று மாத சென்னைப் பயணத்தில் இரண்டு முறை மேடைக் கச்சேரியில் திரையிசை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறை பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியாது. இரண்டாம் முறை பி.சுசீலா அவர்களின் கச்சேரி. காமராஜர் அரங்கத்தில். அதுவும் முதல் வரிசையில்.

நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு landmark கடையில் வாயிலில்தான் பரமார்த்த குருவுக்கான விளம்பரத்தைக் கண்டேன். இந்தக் கடைகளுக்குள் செல்லும் முன் பைகளை வெளியே ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அங்குதான் அந்த விளம்பரம் கண்டேன். பரமார்த்த குரு நாடகத்தைக் கூத்துப் பட்டறையினர் அரங்கேற்றம் செய்யப் போவதை.

சிறுவயதில் பலமுறை படித்துப் படித்து ரசித்துக் கும்மாளமும் கும்மரிச்சமும் போட்ட பரமார்த்த குருவின் கதைகளை நாடக வடிவில் பார்க்கக் கிடைக்கிறது என்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

மாலை மூன்று முப்பதுக்கும் ஏழு முப்பதுக்கும் என இரண்டு அரங்கேற்றங்கள். Alliance Francieயில் நடக்கப் போகிறது. நூறு ரூபாய்க் கட்டணம். ஆனால் நல்ல தரமான பொழுதுபோக்காக இருக்கும் என நம்புகிறேன். அதைப் பார்த்ததுமே நானும் எனது நண்பனும் அங்கு செல்வதாக முடிவு செய்து விட்டோம். ஆனால் இன்னும் நுழைவுச் சீட்டு வாங்கவில்லை. ஏனென்றால் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான். விரைவில் முடிவு செய்து நாடகம் பார்ப்போம். பார்த்து விட்டு அது பற்றி பதிவும் போடுகிறேன்.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிதான் இந்தப் பதிவு. நீங்கள் யாராவது வருகிறீர்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

ஜெயராமனுக்கு அதிமேதாவியின் பதில்

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக என்பது மாதிரி உலக வலைப்பதிவுகளில் முதன் முறையாக இந்த மாதிரி ஜி.ரா போடும் முதல் பதிவு என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

வழக்கமாக ஒருவர் பின்னூட்டம் இட்டால் அதற்கான மறுமொழியைப் பின்னூட்டமாகவே இடுவது வழக்கம். விடாது கருப்பு என்னைக் குறிப்பிட்ட இனத்தின் அடிவருடி என்று எழுதிய பொழுதும் அந்தப் பதிவுக்குத் தொடர்பான கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிச் சென்றவன் நான். போலியின் அசிங்கமான பின்னூட்டங்களைக் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் நான் ஒரு பின்னூட்டத்திற்குப் பதிவு போட வேண்டிய நிலை. புரியாதவர்கள் இங்கே சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் ஜெயராமனின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். பிறகு இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

சண்டப் பிரச்சண்டன் பத்திரிகை நிருபர் பாராமுகம் ஜி.ராவைப் பேட்டி காண வருகிறார்.

பாரா : வணக்கம் ஜி.ரா. நல்லாயிருக்கீங்களா?

ஜி.ரா : நல்லாயிருக்கேங்க. நீங்க எப்படி?

பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.

ஜி.ரா : ஹா ஹா ஹா. சரி. சொல்லுங்க.

பாரா : இல்ல. ஒங்களுக்கு நல்ல வேல இருக்கான்னு....

ஜி.ரா : இருக்குன்னு நெனைக்கிறேன். ஓரளவு படிச்சிருக்கேன். ஓரளவு பிரபலமான நிறுவனத்துல ஓரளவு நல்ல பதவியில இருக்கேன்.

பாரா : அப்புறம் ஏன் சொல் ஒரு சொல்லுன்னு பதிவு போடுறீங்க? வேலைக்கு மத்த வேலையா?

ஜி.ரா : அது வந்துங்க.....தமிழ்ல எல்லாரும் பயன்படுத்திக்கிட்டிருந்த சொற்கள் பல இன்னைக்கு விலகிப் போயிருக்கு. அதையெல்லாம் திரும்ப மக்களுக்கு ஞாபகப் படுத்தத்தான்.

பாரா : ஆனா மத்த மொழியெல்லாம் மற்ற மொழிச் சொற்களை ஏத்துக்கிட்டு நல்லா ஓடுறதாகவும்...உங்களுக்கப் போன்ற அதிமேதாவிகள் தமிழை வளர விடாம ஓட விடாம பிடிச்சு வெச்சுக்கிறதாகவும் சொல்றாங்களே!

ஜி.ரா : அடடே! அப்படியா சொல்றாங்க! நான் அதிமேதாவீங்கறத இப்பவாச்சும் கண்டு பிடிச்சாங்களே. ரொம்ப நன்றி. இந்த சமயத்துல எல்லாரும் என்னை அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.

அப்புறம் இன்னொரு தகவல். எந்த மொழியும் தன்னிடத்தில் இல்லாதத அடுத்த மொழியில் இருந்து கடன் வாங்கலாம். தப்பில்லை. நேத்து மொளச்ச மொழிகள் எல்லாம் அப்படிச் செஞ்சுதான் வளந்திருக்கு. ஆனா நம்ம கிட்ட ஏற்கனவே இருக்குறத தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கக் கூடாது. நம்ம கிட்ட என்ன இருந்ததுங்குறதயும் என்ன இருக்குங்கறதயும் நினைவு படுத்திக்கிறதுலயும் தப்பில்ல. எங்க தாத்தா முன்சீப்பு. எங்க பெரிய தாத்தா பெரிய பாகவதர்னு பெருமை பேசுறது சுகமா இருக்குது. இது தப்பாப் படுதா? கோயில்ல புதுமையப் புகுத்தனும்னா மட்டும் பழைய சம்பிரதாயம்னு சொல்லி மாறக்கூடாதுன்னு சொல்றாங்க. நீதிமன்றத் தீர்ப்புன்னு சொல்லி கொண்டாடிக்கிறாங்க. மாத்தச் சொன்னா சண்டைக்கு வாராங்க. ஆனா தமிழ்ல இருக்குற பழைய சொல்லு மட்டும் மாறனுமா?

பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....

ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?

பாரா : விட்டா கீழ வுழுந்த வடம்பீங்க போல. நான் சொல்றது வடபழநீல இருக்குதே அந்த வட.

ஜி.ரா : வடபழநீல ஓட்டல் சரவணபவன் ரொம்பப் பிரபலம். கோயிலுக்குப் போனா அங்கயும் போகாம விடுறதில்ல. அங்க தயிர் வட கிடைக்கும். அதச் சொல்றீங்களா?

பாரா : ஐயொ! அதி ஜீ.ரா. நான் சொல்றது வடக்கு. வடக்கு.

ஜி.ரா : ஓ வடக்கு மொழியா....அதாவது சமஸ்கிருதம். அதுவும் ஒரு பழைய மொழி. நிறைய இலக்கியங்களும் இருக்கு. அதுக்கென்ன?

பாரா : அதில்லைன்னா தமிழ் இல்ல.....பல தமிழ்ச் சொற்கள் அதுலருந்துதான் வந்ததுன்னு சொல்றாங்களே.....அதப் பத்தி.

ஜி.ரா : சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இன்னைக்குப் புழக்கத்துல இருக்குங்கறது உண்மைதான். ஆனா அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. நாமளும் ஆமான்னு கேட்டுக்கனும் போல. மொத்தத்துல தமிழப் பலி குடுத்தாவது சமஸ்கிருதத்தைக் காப்பாத்தனுமா! பெரிய கொடுமையா இருக்கே!

பாரா : அப்ப தமிழர்கள் தமிழ்ல மட்டுந்தான் பேசனுங்கிறீங்களா?

ஜி.ரா : இதென்ன கொடுமையா இருக்கு. கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. தமிழில் பேசுறப்போ முடிஞ்ச வரைக்கும் தப்பில்லாம தமிழ்ல பேசனும். அடுத்த மொழிகளும் தெரிஞ்சிருக்கனும். அடுத்தவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி போது தேவைப்படுமில்லையா. அந்தந்த மொழியில சிறப்பா பேச முயற்சிக்கிறதுல தப்பில்ல. தமிழ்ல அப்படி இப்பிடி பேசுனா என்னன்னு பேசுறவங்க.....அடுத்தவங்களோட அடுத்த மொழியில பேசுறப்போ அத ரொம்பச் சரியா பேச முயற்சிப்பாங்க. அவ்வளவுதான்.

பாரா : அவ்வளவுதானா?

ஜி.ரா : இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.

பாரா : அப்ப என்னதான் முடிவு? நீங்க என்ன செய்யப் போறீங்க? நல்ல வேலையப் பாக்கப் போறீங்களா? இல்ல...

ஜி.ரா : எனக்கிருக்குற நல்ல வேலையப் பாக்கப் போறேன். அத்தோட சொல் ஒரு சொல்லுல இன்னும் நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன். வடமொழிச் சொல்லப் பயன்படுத்தனும்னு ரொம்பப் பேர் விரும்பும் போது தமிழ்ச் சொல்லப் பயன்படுத்தனும்னு எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.

பாரா : இதுக்கெல்லாம் ஒங்களுக்குத் தொணையா யாரு இருக்காங்க? வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?

ஜி.ரா : எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.

பாரா : அப்பச் சரி. எல்லாம் நல்லா நடக்கட்டும். நான் பொறப்படுறேன்.

ஜி.ரா : ரொம்ப நல்லது. பலகாரத்தச் சாப்பிட்டீங்க. சரி. பலகாரத் தட்ட வெச்சுட்டுப் போங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, August 13, 2006

5. லாலி லாலி லாலி லாலி

எஸ்.பி.பீ தொடர்ந்து சொன்னார். "சான்சுக்காக விஸ்வநாதன் சார் கிட்ட போனப்போ ஒடனே என்னைய ஏத்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சுதான் வாய்ப்பு குடுத்தாரு. ஏன்? நான் ஆந்திரா கொல்ட்டி. என்னோட தமிழ் சரியாயிருக்காது. அதுனாலதான் ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நல்லா படிச்சப்புறமா வாய்ப்பு கொடுத்தார். இந்த விஷயத்துல அவரு சார் ரொம்ப ஸ்டிரிக்ட். இந்தக் கண்டிப்பு எல்லா இசையமைப்பாளர் கிட்டயும் இருக்கனும்"

இந்தக் கருத்தை அனைவருமே வலியுறுத்தினார்கள். மெல்லிசை மன்னராகட்டும். பி.சுசீலாவாகட்டும். எஸ்.ஜானகியாகட்டும். மலேசியா, எஸ்.பி.பீ, மாணிக்க விநாயகமாகட்டும், பி.பீ.ஸ்ரீநிவாஸ் ஆகட்டும். அனைவரும் வலியுறுத்தியது பாடல்களில் முறையான தமிழ் உச்சரிப்பு.

உபசரணைகளும் இடைவேளையும் முடிந்த பின் ஜானகி அவர்கள் பாடத் துவங்கினார்கள். டிக் டிக் டிக் என்ற படத்தில் வரும் "இது ஒரு நிலாக் காலம்" பாடலைப் பாடினார். திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்). அதைத் தொடர்ந்து ஜெயப்ரதாவிற்காக ஏழைஜாதி படத்தில் பாடிய "அதோ அந்த நிதியோரம்" என்ற பாடலைப் பாடினார்.

ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் திரும்பத் திரும்ப மெட்டுப் போட்டும் திருப்தி இல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து நிறைவான ஒரு மெட்டுப் போட்டாராம். அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார். ஆம். நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.

என்னுடைய நண்பன் ஒருவன் வங்காளத்தைச் சேர்ந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய அலுவலகக் கணிணியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாட்டுக் கேட்காமல் வேலை செய்ததே இல்லை. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் அவனை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை வருகையில் மட்டும் அமைதியாக வேலைகளைப் போட்டு விட்டு பாட்டு கேட்பான். பாட்டு முடிந்த பிறகே வேலையைத் தொடர்வான். இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா. கூட்டம் அமைதியாக ரசித்தது. அந்தப் பாட்டு முடிந்ததும் நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருப்பதாக அறிவித்தார்கள்.

மனதோடு மழைக்காலம் என்று திரைப்படம் வெளிவரயிருக்கிறது. அதில் கார்த்திக்ராஜாவின் இசையில் கௌசிக் என்று ஒரு பாடகர் அறிமுகமாகிறார். அவரும் ஜானகியும் சேர்ந்து அடுத்து பாடலாக "அடி ஆத்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது" என்று பாடி நம்மைப் பறக்க வைத்தார்கள். புதுப்பாடகராக இருந்தாலும் கௌசிக்கின் குரல்வளம் சிறப்பாக இருந்தது. அவர் நன்றாக வரவேண்டும் என்று ஜானகி வாழ்த்தினார்.

அமைந்த பாடல் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட பாடகருக்கென்றே அமைந்த பாடலாக இருக்கும். வரம் தந்த சாமிக்கு பாடல் பி.சுசீலாவுக்கு அமைந்த பாடல் என்றே சொல்லலாம். அதே போல ஜானகிக்கு அமைந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னர் மெட்டமைத்து இசைஞானி இசைக்கருவி கோர்த்த அருமையான பாடல் அது. ஆம். "ஊரு சனம் தூங்கிருச்சே" என்ற பாடல்தான். ஜானகிக்கென்றே அமைந்த பாடல். மெல்லிசை மன்னரின் பிரத்யேக சங்கதிகள் அமைந்த அந்தப் பாடலை ஜானகி மிகவும் லகுவாகப் பாடினார். கூட்டம் மிகவும் ரசித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

இத்தனை பாடல்கள் பாடப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜெயராம் ஒரு மலையாளப் பாடலைக் கேட்டார். உடனே ஜானகி "கானக்குயிலே" என்ற மலையாளப் பாட்டின் சிறுபகுதியைப் பாடினார்.

"முத்துமணி மால...என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட....!" சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற பாடலை பி.சுசீலாவும் சங்கரும் இணைந்து பாடினார்கள். A.M.ராஜா-ஜிக்கி கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வரான சந்திரசேகருடன் இணைந்து அடுத்த பாடலாக "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற கல்யாணப் பரிசு பாடலைப் பாடினார் சுசீலா. தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".

அடுத்த பாட்டுக்கு அரங்கத்தில் அங்கெங்கு எழுந்து ஆடினார்கள். லலிலலிலலோ என்று தொடங்கிய ஜானகி மூச்சு விடச் சிரமப் பட்டார். உடனே மைக்கை விட்டு ஓடிச் சென்று மூச்சுமருந்து எடுத்துக் கொண்டு வந்து பாடலைத் தொடர்ந்தார். "மச்சானப் பாத்தீங்களா" பாடலைத்தான். இளையராஜாவிற்கு திரைவாழ்வு தந்த பாடல். ஜானகி அவர்களுக்கும் புகழைத் தந்த பாடல். எல்லோரும் இந்தப் பாடலை ரசித்தார்கள். பலர் விசிலடித்துக் கொண்டு ஆடினார்கள். மகிழ்ச்சியோடு பாடி முடிந்ததும் அதே பாடலைச் சோகமாகப் பாடினார் ஜானகி.

அடுத்து இன்னொரு இளையராஜா பாடல். ஆனால் இந்த முறை பி.சுசீலா. வைதேகி காத்திருந்தாள் படத்திலுள்ள "ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு" பாடலைப் பாடினார். முடிந்ததும் பாடகி மஹதி மேடையேறி இசைக்குயில்கள் இருவருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். திரையிசைத் திலகம் இசையில் பாடிய "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை அடுத்து பாடினார் பி.சுசீலா. நேரம் மிகவும் ஆகியிருந்தது. பத்தரை மணி. அடுத்த நாள் திங்கள். அலுவலகம் போக வேண்டிய அவசரம். நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம். மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, August 09, 2006

தாயா தாரமா - சிறுகதை

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.

நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.

ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.

கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.

மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.

சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.

வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.

அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.

"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.

அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"

இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!

ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?

ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.

வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.

அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!

அன்புடன்,
கோ.இராகவன்