Wednesday, April 26, 2006

தேன்கூட்டின் தேன்மழை

இன்னைக்குக் காலைல கொஞ்சம் நேரங்கழிச்சி எந்திரிச்சேன். ஏன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது நடுநிசி. மயில்களை எல்லாம் பாக்கலாம்னு உக்காந்தா பொன்ஸ் கிட்ட இருந்து ஒரு மயில்......ராகவன்...சதி நடக்குது....ஒங்கள சாமியார் ஆக்கப் பாக்குறாங்கன்னு....தேன்கூட்ட ஒடனே பாக்கச் சொன்னாங்க....நானும் படக்குன்னு போய்ப் பாத்தேன். அட! வாசகர் பரிந்துரைன்னு மகரந்த வலைத்தளத்த இன்றைய பரிந்துரைல போட்டிருக்காங்க. அதுவும் படத்தப் போட்டு. நன்றி தேன்கூடு. தேன்மழைதான் இந்தப் பரிந்துரை. பரிந்துரை செஞ்ச அந்த நண்பருக்கும் நன்றி.

என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.

திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.

போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.

உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.

பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.

இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.

பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.

வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.

அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.


இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(

அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)

இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)

சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்

நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)


தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, April 21, 2006

5. கோவைக் குற்றாலமும் ஜான் அப்ரஹாமும்

காலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.

வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)

அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.

மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.

அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.


சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.

இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.

வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!

பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.

ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.

சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.

சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.

அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.

அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........

தொடரும்......

Sunday, April 16, 2006

4. தியானமும் கம்பங்கூழும்

ஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.



அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.

வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.

கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.

ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.

அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.

வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.

நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல். அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம். பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.

ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.

அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!

இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.

தொடரும்..............

Monday, April 10, 2006

நான் இந்து மதத்திற்கு எதிரியா?

சென்ற பதிவில் நான் தொடரும் போடவில்லை. காரணம் இந்தப் பதிவு. நான் எழுதியதை நம்பிக்கை வைத்துப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வெளிப்படையாக உரிமையோடு உங்கள் பின்னூட்டங்களை இட்டதிற்கும் நன்றி. உண்மையில் இரண்டாவதிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாம் என்று கொண்டிருக்கும் நம்பிக்கை. மிகமிக நன்றி. சரி. விஷயத்திற்கு வருவோம்.

ஒரு இந்து என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் நான் இந்து மதத்திற்கு எதிரியா? இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் இந்து மதம் என்றால் என்னவென்று நான் கொண்டிருக்கும் கருத்தினை விளக்கியே ஆக வேண்டும்.

இந்து மதம் என்று இன்றைக்கு வழங்கப்படுவது பல மதங்களின் கூட்டமைவு. பல பண்பாடுகளின் கூட்டணி. கலாச்சாரங்கள் கலந்த நிலை. இன்றைக்கு ஒவ்வொன்றிற்கும் தொடர்பு சொல்லப்பட்டு எல்லாம் ஒன்று போலக் காட்சி தந்தாலும் அதன் தனித்துவங்கள் அங்கங்கு வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவில் தங்கமணி அவர்கள் அழிக்கப்படும் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் இந்தியாவை மட்டும் குறிப்பிடாமல் உலகளாவிய வகையில் நடக்கும் இந்தப் பன்முக அழிப்பைக் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நடக்கும் இந்த ஒற்றுமைப் படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் பல குழுக்களின் இனங்களின் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம் வந்த பொழுது என்னுடைய வங்காள நண்பனுடன் அதைப் பற்றி உரையாடினேன். வங்காளத்தில் பிராமணர்கள் கடல் பூ என்று சொல்லிக் கொண்டு மீனைச் சாப்பிடுகிறார்கள் என்று எல்லாரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லையாம். ஏனென்றால் அங்கு சைவ உணவுப் பழக்கம் என்பதே பெரும்பாலும் அறியப் படாதது. கடல் பூ என்று சமாதானம் சொல்லிச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த நண்பன் சட்டோபாத்யாய் என்ற வகுப்பைச் சார்ந்தவன். அதாவது பிராமண வகுப்பு. ஆனால் அவர்கள் வீட்டில் அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். நானும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ருசித்து ரசித்திருக்கிறேன்.

அவனிடத்தில் அந்தத் தடைச் சட்டத்தைப் பற்றிச் சொன்னதும் அது சரியே என்று சொன்னான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நேரடியாகச் சொன்ன பொழுது அவன் சொன்ன காரணம் என்னைத் திகைக்க வைத்தது. அவனுடைய கருத்துப் படி பலர் வந்து போகும் இடத்தில் இப்படி கோழிகளையும் ஆடுகளையும் வெட்டினால் அது நன்றாகவா இருக்கும். அங்கு வரும் குழந்தைகளின் நிலையையும் பலவீனமான இதயமுள்ளவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டுமாம். வேண்டுமென்றால் ஒரு அறைக்குள் வெட்டிக் கொள்ளட்டுமே என்பது அவனது கருத்து. அவன் கூற்றை ஏற்றுக் கொண்ட நான் அவனிடம் சொன்னேன். "இதோ பாரப்பா ஆடு-கோழி வெட்டுகின்ற கோயில்களுக்குப் போகின்றவர்களுக்கு அங்கு ஆடும் கோழியும் வெட்டுவார்கள் என்று நன்றாகத் தெரியும். அவைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குலத்தாரால் வழங்கப்படும் திருக்கோயில்கள். அதை எப்படித் தடை செய்ய முடியும்? எல்லாரும் போகின்ற பெரிய கோயில்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அப்படியிருக்க இந்தத் தடைச்சட்டம் சரிதானா?"
அவனும் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டான்.

இதுவும் ஒருவகை பன்முக அழிப்புதான். ஆனால் இந்தத் தடைச்சட்டத்தின் மூலமாக மட்டுமே பன்முக அழிப்பு நேராது. ஒருவேளை இந்தத் தொந்திரவு தாளாமல் மதம் மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவர்கள் பண்பாடு மாறும். அவர்கள் புதிதாகப் போகின்ற கோயிலின் வாசலில் போய் கிடா வெட்டப் போவதில்லை. ஆகையால் அந்த வகையான பன்முக அழிப்பையும் நான் ஆதரிக்கப் போவதில்லை.

அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொருவனும் தன்னைப் பற்றியும் தனது முன்னோர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்தால் தன்னைக் காத்துக் கொள்ளவும் அறிவான். தன்னை அறிந்துத் தன்னை மதிக்கின்ற அதே வேளையில் அடுத்தவனையும் நிச்சயம் மதிக்க வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்பாட்டு வழக்கங்கள் கொண்டவர்கள். நான் நானாகவே இருக்க நீ நீயாகவே இருக்க நாம் நாமாகவே இருப்போம் என்று எல்லாரும் நினைக்க வேண்டும். அசைவம் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அசைவம் சாப்பிடுவது எப்படிக் குற்றமாகாதோ அப்படியே சாப்பிடாதும் குற்றமாகாது. அதது அவரவர் விருப்பம்.

இப்படிக் கலப்புகளும் பழக்க வழக்கங்களும் பல கொண்ட இந்து மதத்தின் என்ற பெயர் நிச்சயம் புதிதுதான். வெளியூர்க்காரன் கொடுத்ததுதான். அதனால் என்ன? வெளிநாட்டுப் பணம் கசக்கவா செய்கிறது? இந்தப் பெயரே இருக்கட்டும்.

நிச்சயமாக நாம் வந்த வழியில் இரத்தச் சுவடுகளும் சமூக அவலங்களும் இருக்கின்றன. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வோம். இறந்த காலத்து உண்மையை வருங்காலத்துப் பொய்யாக்குவோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் உறவோடு இனிமையோடு வாழ்வோம். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் எனக் கொள்வோம். அடுத்தவரை மதித்து வாழ்வோம். அதில் தவறினால் வீழ்ச்சிதான்.

இன்றைய இந்து மதத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. எங்குதான் இல்லை? எங்களிடம் இல்லை என்று சொல்கின்றவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் எனக்குத் தெரிந்த வரையில் உலகம் முழுவதும் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் நாம் நமது பிரச்சனைகளைக் களைவதற்கு வழி காண்போம். அடுத்தவனைச் சொல்லாமல் நமது பிரச்சனைகளை மட்டும் சொல்கிறேனே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு செய்தி. ஏதோ ஒரு வீட்டில் கொலையே விழுந்தாலும் பதறாத நாம் நமது வீட்டில் நூறு ரூபாய் களவு போனால் பதறுகிறோம் அல்லவா.

அதே நேரத்தில் மதம் எந்த அளவிற்கு அரசியலில் விலை போகிறதோ அந்த அளவிற்கு விலை போகும் இன்னுமிரண்டு சரக்குகள் மொழியும் இனமும். நமது மொழியும் இனமும் பெரிதுதான். யார் இல்லையென்றார்? ஆனால் அதை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக நேர்மையான வழிமுறையை நாட வேண்டும். குறுகிய காலப் பலனை விட நீண்ட காலப் பலனை நாடுங்கள். அதுவும் நற்பலனை. ஆகையால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்புவதை விட தமிழறிஞர்களை நம்பலாம். தங்கள் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் வங்காளிகளும் மலையாளிகளும். ஆனால் அவர்கள் மொழியை வளர்க்க அரசியல்வாதிகளை நம்புவதில்லை. பொறுப்பை அவர்கள் ஊர் எழுத்தர்களும் அறிஞர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சரி. நாம் இந்து மதத்திற்கு வருவோம். பல நம்பிக்கைகள் இருக்கும் இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அந்த ஒவ்வொரு நம்பிக்கையும் நான் மதிக்கவே விரும்புகிறேன். ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்வு செய்ய முடியாது. அதது அவரவர் வழி. வேதத்தின் வழியில் வாழ்வோம் என்று சொல்கின்றவர்களுக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. இல்லை.....தமிழ் மொழியில் இல்லாத செல்வமா என்று அதன் வழியில் வாழ விரும்புகின்றவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. சாமியாவது பூதமாவது என்று வாழ்வதற்கும் உரிமையுண்டு. ஆனால்.....எப்படி வாழ்ந்தாலும் அடுத்தவரையும் மதித்து வாழ வேண்டும். அப்படி வாழத பொழுது எப்படி வாழ்ந்தாலும் பயனில்லை. உலகம் அன்பு மயமானது. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தான். அன்பே சிவம். அதைத்தான் நான் கற்ற தமிழ் நூல்கள் கூறியுள்ளன. ஆகையால்தான் முடிந்த வரை எனக்குத் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன்.

கந்தனைத் தொழும் எனது உள்ளம் கண்ணனையும் கொண்டாடத்தான் செய்கிறது. வாடிகன் சிட்டியில் ஏசுவை மடியில் ஏந்திய அன்னை மேரியைக் கண்டதும் உள்ளம் உருகுகிறது. குரானும் சைவ சித்தாந்ததும் ஒத்துப் போகும் சில விஷயங்களில் ஈடுபாடு உண்டாகிறது. அப்படியிருக்கையில் நான் எப்படி எந்தக் குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரியாக முடியும்? ஆத்திகத்தை ஆதரிக்கும் நான் நாத்திகத்திற்கும் எதிரி இல்லை.

ஒரு இந்து என்கிறவன் இன்றைய கணக்குப் படி இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பின்பற்றுகின்றவன். தனது தாய்மொழி எதுவோ அதைக் காதலிக்கின்றவன். அதே நேரத்தில் மற்ற மொழிகளை மதிக்கின்றவன். சாதி மத வேறுபாடுகள் பார்க்காதவன். தனது கருத்துகளை நாகரீகமாக எடுத்து வைக்கத் தெரிந்தவன். குறைந்த பட்சம் முயல்கின்றவன். ஆண்-பெண் சரி நிகர் சமானம் பேணுகின்றவன். பிரச்சனைகளை ஆக்கபூர்வமாகத் தீர்க்க வேண்டும் என்று விரும்புகின்றவன். இது போக எந்தத் தெய்வத்தையும் எந்த வகையிலும் எந்த மொழியிலும் வணங்கிக் கொண்டு எந்த உணவையும் உண்டு கொள்ளட்டும். இதுதான் நான் விரும்பும் இந்து மதம். இந்த நல்ல நிலை நோக்கித்தான் எனது பயணம். என்னோடு கை கோர்த்து வருவீர்களா? இதற்கு மேலும் நான் இந்தப் பதிவின் தலைப்பில் எழுதிய கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமா?

கடைசியாக சொல்ல விரும்புவது....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, April 09, 2006

நான் இந்துவா?

இப்பொழுது தமிழ்மணத்தில் பிரபலமாக இருக்கும் சர்ச்சை இதுதான். இந்தக் கேள்வியை யாருக்கும் சொல்வதற்காக கேட்கவில்லையானாலும் நான் எனக்காகக் கேட்டுக் கொண்டேன். அப்படிக் கேட்டு எனக்குத் தோன்றியதை ஒரு பதிப்பாகப் போடுகிறேன்.

என்னைப் பொருத்த வரை என்பது இந்து என்றே என்னுடைய சான்றிதழ்கள் சொல்கின்றன. ஆனால் அந்தச் சொல்லுக்கு நான் கொண்டுள்ள பொருள் என்ன?

இந்து மதம் என்று நான் சொல்வது பல மதங்களின் பல பண்பாடுகளின் பல பழக்கவழக்கங்களின் கூட்டே. அந்த வகையில் அந்தப் பெயரை எனது அடையாளத்திற்காக பயன்படுத்துகிறேன்.

நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தத் தேடலைத் தமிழைக் கொண்டே நான் துவக்கினேன். தமிழ் நூல்கள்தான் எனக்கு வழிகாட்டி. அந்த நூல்களைப் படித்து அவற்றில் எனக்குப் பிடித்த வகையில்தான் நான் வழிபடுகிறேன். இறைவனை நம்புகிறேன்.

நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் என்னுடைய மதம் என்பது கீரனாரும் அருணகிரியாரும் அப்பரும் சம்பந்தரும் புனிதவதியாரும் வள்ளுவரும் வாழ்ந்து காட்டிய வழி. யாருக்கும் யாரும் அடிமையில்லை. எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓர் நிறை.

நான் மதம் மாற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் நான் எந்த வழியில் போனாலும் போகுமிடம் ஒன்றுதான் என்று நம்புகிறவன். முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். சிலர் அரிசையைப் பொங்கித் தின்கிறார்கள். சிலர் இட்டிலியாக்கியும் சிலர் தோசையாக்கியும் சிலர் புட்டு சுட்டும் உண்கிறார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் தின்கிறேன். நான் இப்பிடித்தான் தின்ன வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஆகையால் இறைவனை அடையவும் நல்வழி பெறவும் நான் மதம் மாறத் தேவையில்லை. ஈஷ்வரு அல்லா தேரே நாம்.

ஆகையால்தான் The Passion என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் ஏசுவைக் காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து அந்த இயக்குனர் மேல் ஆத்திரம் வருகிறது. என்னுடைய வழியில் போனால்தான் இறைவனை நீ அடைய முடியும் என்று சொல்கிறவரைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. இறைவனை என்னால்தான் அடைய முடியும் என்று சொல்கிறவர்கள் நகைச்சுவையாளர்களாகத் தெரிகின்றனர். தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் கடவுள்-மனிதர்கள் கோமாளிகளாகத் தெரிகின்றார்கள்.

கோயிலுக்குப் போவேனா? போவேன். கோயிலுக்குப் போகத்தான் வேண்டுமா என்றால் எனது விடை இல்லை என்பதே. ஆனாலும் போவது பலர் கூடும் இடத்தில் இறைவனை நினைப்பதற்கே. திருநீறு இட்டுக் கொள்வேன். குங்குமமும் இட்டுக் கொள்வேன். என்னுடைய முகத்திற்கு அது கொடுக்கும் பொலிவை உணர்கிறேன் நான்.

அசைவம் உண்பேனா? உண்பேன். கோயிலுக்குப் போகும் முன்னும் உண்டிருக்கிறேன். பின்னும் உண்டிருக்கிறேன். கிடா வெட்டப்படும் கோயில்களிலும் உண்டிருக்கிறேன். அசைவம் என்பது உணவுப் பழக்கம். அதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறவன் நான். வள்ளுவரோடு நான் வேறுபடுவது இங்கு மட்டுந்தான்.

சிலை வணக்கம் என்பது.....அடக்கடவுளே....நான் சிலையையா வணங்குகிறேன்! எங்கும் நிறைந்த இறைவன் அந்தச் சிலையில் இல்லாமல் போவானா? புல்லினும் பூண்டிலும் அனைத்திலும் இருப்பவனை எப்படியெல்லாம் உணர்ந்து வழிபட முடியுமோ அப்படியெல்லாம் வழிபடலாம். வழிபடாமலும் இருக்கலாம். ஏனென்றால் சும்மா இரு என்பதைப் போன்ற சிறந்த அறிவுரை எதுவுமில்லை.

தமிழ். தமிழ். அதுதான் எனக்கு ஆன்மிக உணர்வைத் தந்து விளக்காக என்றும் சுடர் விட்டு எரிந்து ஒளி காட்டுவது. அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் வழிபாடு செய்கிறேன். அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் இறைவன் திருவடியை அடியும் வகை கொண்டேன். இதற்கெல்லாம் தடை சொல்வார் யாராயினும் மதியேன்.

அனைவரும் எனது சகோதரர்களே. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கிலேன். இதுதான் எனது வழி. இதுதான் என்னுடைய சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் இந்து சொல்லுக்கு நான் கொண்டிருக்கும் பொருள். இதற்கு மற்றவர்கள் கொண்ட பொருள் எதுவாயினும் எனக்குக் கவலையில்லை. இந்தச் சொல் எந்த வழியில் தோன்றியது என்றாலும் எனக்குக் கவலையில்லை. இந்து என்பதற்குப் பதிலானத் தமிழ் மதம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அத்தோடு இந்து என்ற இந்தச் சொல்லோ கிருஸ்துவன், புத்தன், முஸ்லீம் என்ற வேறு எந்தச் சொல்லுமோ என்னைக் கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்தவும் விட மாட்டேன். உங்கள் வழி உங்களுக்கு. எனது வழி எனக்கு.

இவ்வளவுதானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைய கொள்கைகள் உள்ளன. இப்பொழுதைக்குத் தோன்றியவை இவ்வளவுதான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, April 06, 2006

3. படிப்படியா மலையிலேறி

ஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.

கோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.

நாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.

எங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.

நெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.

எப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப் பாத்துத் திருப்புனோம்.

போற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)

அங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.

நாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.

வந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க? ஒரு சிவலிங்கம்.

குகைக்குள்ள நேரா நுழைய முடியாது. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.

கீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.

தொடரும்...

Sunday, April 02, 2006

2. ஆனைய உரிச்சு..............

புதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரையும் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.

புதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.

அதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.

சரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.

அதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ!).

சரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.






வண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.

வெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.

கோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப் பாருங்கள்.

அதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா! இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா? கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா? இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.

அத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.

இந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா? ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.

இன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும்பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.

நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........

தொடரும்.....