Wednesday, March 29, 2006

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா! சரி. பாக்கலாம்." நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.

நாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.

போன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.

திட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.

கன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.

இதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.

நாங்க ஆறு பேரும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.

வண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.

ஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். "நிங்ஙள் எவிடே போகுன்னு?"

அவரும் ஒடனே சொன்னாரு...."ஞங்ஙள்.....திருவனந்தபுரம்....."

என்னது திருவனந்தபுரமா! எனக்குத் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்!

பிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா? நண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

தொடரும்...

Thursday, March 02, 2006

சுபா

இப்ப என்னோட கைல இருக்குறது சுபா கொடுத்த கிரீட்டிங் கார்டு. அது மேலதான் இப்ப என்னொட வெரலு ஓடுது. மெத்துன்னு அதுல ஒரு சின்னப் பூ. வெரல் வழியா அப்படியே கரண்ட்டு பாஞ்ச மாதிரி இருக்கு. சுபா கொடுத்த எதத் தொட்டாலும் கரண்டு பாயுது. அதுவும் சந்தோஷம்.

அடடா! சுபா யாருன்னே ஒங்ககிட்ட சொல்லலையே! சுபா என்னோட காதலி. ஐயோ! உங்க கிட்ட சொல்லும் போதே எனக்கு லேசா வெக்கம் வருது.

காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி. இந்தப் புன்னகையக் கூட என்னால அடக்க முடியல. சுபா பத்தி பேசுனாலே நா வெக்கப்படுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த வெக்கத்தக் கொறைக்கனும். சரி. இப்பிடி வெக்கப் பட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? என்னோட காதல ஓங்ககிட்டச் சொல்ல வேண்டாமா!

கொஞ்சம்....ம்ஹூம்...ரொம்பவே பெரிய இடத்துப் பொண்ணு அவ. ரொம்பச் செல்லம் வீட்டுல. நானோ நடுத்தரக் குடும்பம். ஆனாலும் பாருங்க காதல் வந்துருச்சி. தெனமும் கார்லதான் வருவா. அதே காரு சாந்தரமும் வந்து அவளக் கூட்டீட்டுப் போகும். அப்பிடி ஒரு சொகுசு. நமக்கெல்லாம் பஸ்தான். ஆனாலும் அந்தப் பணக்காரத்தனமெல்லாம் அவளுக்குக் கிடையாது. எல்லார் கிட்டயும் நல்லாப் பழகுவா. அதே மாதிரி எல்லாரும் அவகிட்ட நல்லாப் பழகுவாங்க. அவ்ளோ நல்ல கொணம்.

அவ பாட்டுத் தெறமையப் பத்திச் சொல்லாம விட முடியுமா! அடேங்கப்பா! என்ன உணர்ச்சிப்பூர்வமாப் பாடுவா தெரியுமா! பழைய பாட்டு, புதுப்பாட்டு அத்தனையும் பாடுவா. நாள் பூராவும் அலுக்காம கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அப்பிடி ஒரு பாவம். எல்லாங் கேள்வி ஞானந்தான். இருந்தாலும் அப்பிடி அமைஞ்ச குரல்.

எனக்குப் பி.சுசீலா பாடுன பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் சுபா பாடுனா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பெஸ்ட் ஆஃப் சுபான்னு என்கிட்ட கேட்டா படகோட்டிப் பாட்டத்தான் சொல்வேன்.
"பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்பாயோ!
துள்ளி வரும் வெள்ளலையே நீ தூது செல்ல மாட்டாயோ!"
இந்தப் பாட்ட பி.சுசீலா பாடுன அதே பாவமும் ராகமும் மாறாமப் பாடுவா. ஆனாலும் அதுல சுபாவோட டச் இருக்கும். எது எப்பிடியோ! கடைசில இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு பைத்தியமா இருக்குறது நாந்தான்.

காலேஜ்ல தொடங்கி வளந்ததுதான் எங்க காதல். பலாப்பழத்தை மூடி வெக்க முடியுமா? ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் தெரிஞ்சி போச்சு. சினிமாவுல நாவல்ல பல பேரோட நெஜ வாழ்க்கைல நடக்குற மாதிரி இல்லாம ரெண்டு வீட்டுலயும் எங்க காதல மறுப்பு சொல்லாம ஏத்துக்கிட்டாங்க. கல்யாணமும் முடிவு பண்ணீட்டாங்க. நிச்சயமும் ஆகி தேதியும் குறிச்சாச்சு. ஆச்சரியமா இருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை. இன்னும் ஆறு மாசம் இருக்கு.

ஆஆஆஆஆஆஆறு மாசம். அதுக்குப் பெறகு சுபாவுக்கு நான். எனக்குச் சுபா. அதுவும் எல்லாரும் ஒத்துக்கிட்டு. பட்டுன்னு ஆறு மாசமும் ஆறு நொடியாப் பறந்துறக் கூடாதான்னு ஆசையா இருக்கு. ஆனா அது நடக்காதில்லயா! சரி. காத்திருக்க வேண்டியதுதான்.

அடடா! பேச்சு மும்மூரத்துல ஒங்ககிட்ட இன்னொரு விஷயத்தச் சொல்லவே மறந்துட்டேன். இன்னைக்கு எங்க வாழ்க்கைல மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். ஆமா. ஏ.ஆர்.ரகுமான் இசைல பாடுறதுக்கு சுபாவுக்கு வாய்ப்புக் கெடச்சிருக்கு. அவ குரலுக்குத் தகுதியான வாய்ப்புதான் அது.

எந்த நாட்டு இசையா இருக்கட்டுமே. ஒரு வாட்டிக் கேட்டாப் போதும். அப்பிடியே அச்சுப் பெசகாமப் பாடுவா. அன்னைக்கு இப்பிடித்தான் எங்க காலேஜுக்கு அயர்லாண்டுல இருந்து ஒரு பாடகரு வந்தாரு. அவங்க நாட்டுப் பாரம்பரியப் பாட்டு ஒன்ன ஆலாபனை பண்ணுற மாதிரி பாடுனாரு. அத அப்பிடியே ஜம்முன்னு பாடிக் காட்டி அசத்தீட்டா சுபா. அவரும் பிரமிச்சுப் போயிட்டாரு. அவள இன்னும் ரெண்டு மூனு மெட்டு பாடச் சொல்லி சாம்பிள் மாதிரி ரெக்கார்டு பண்ணிக்கிட்டாரு. அவரு என்னவோ ஆல்பம் போடப் போறாராம். அதுக்குத் தேவப்பட்டா இவளும் போக வேண்டியிருக்குமாம்.

சுபா கொஞ்சம் அசடு. நானுங் கூட வந்தாத்தான் வெளிநாடு போவாளாம். வீட்டுல ஒத்துக்குவாங்களா? கல்யாணம் முடிஞ்சிட்டாலும் போகலாம். அதுக்கு முன்னாடியே வரச்சொல்லிக் கூப்புட்டா? நல்லவேளை. இதுவரைக்கும் அந்தாளு கூப்புடலை. அவரு என்னவோ இசையாராய்ச்சி செய்றாராம். அந்த ஆராய்ச்சி முடிவுகள வெச்சித்தான் ஆல்பமோ ஆப்பமோ போடப் போறாராம். ஆராய்ச்சிதான் மொதல்ல முடியனுமாம். மெதுவா முடியட்டுமே. எனக்கொன்னும் அவசரமில்ல.

அட! ஒன்னச் சொல்லும் போதே இன்னொன்னுக்குத் தாவுறேன். ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் பத்தித்தான சொல்லிக்கிட்டு இருந்தேன். நேத்து ராத்திரி பத்து மணிக்கெல்லாம் பொறப்பட்டுப் போனவா இன்னைக்குக் காலைலதான் திரும்ப வந்தாளாம். என்னையும் ரெக்கார்டிங்குக்கு கூப்புட்டா. நாந்தான் போக முடியல. வீட்டுல சின்ன விசேஷம். அதான்.

ரெக்கார்டிங் முடிச்சுக் காலைல திரும்ப வந்ததும் எனக்குப் ஃபோன் பண்ணீட்டா. அங்க நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்ன பெறகுதான் அவளுக்கு நிம்மதி. இப்பிடித்தான் எதையெடுத்தாலும் எங்கிட்ட வந்து ஒப்பிச்சிருவா. மண்டு மண்டுன்னு எத்தன தடவ திட்டுனாலும் கேக்க மாட்டா.

இப்பக் காலேஜ்ல அவளுக்காக காத்திருக்கேன். வந்ததும் அங்க என்ன பாடுனாளோ அதப் பாடச் சொல்லனும். ஊருல ஒலகத்துல எல்லாரும் கேக்குறதுக்கு முன்னாடியே அவ பாட்ட நான் கேக்கனும். கேக்கக் கூடாதா? அந்த ஆசை எனக்கிருக்கக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

சரி. அத விடுங்க. இந்த வாய்ப்பு எப்படிக் கெடச்சதுன்னு சொல்லவே இல்லையே. அவளோட அண்ணனுக்கு வேண்டப்பட்டவங்க வழியாக் கெடச்ச வாய்ப்பு. யார் வழியா வந்தா என்ன! கடவுள் வழியா வந்ததுதான். சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். நீங்களும் அதப் பாக்கத்தான் போறீங்க.

அது கெடக்கட்டும். இந்த கிரீட்டிங் கார்டு எப்படி வந்துச்சுன்னு சொல்லவேயில்லையே! நேத்து எனக்குப் பொறந்த நாளு. அதுக்கு சுபா தந்ததுதான் இந்தக் கார்டு. அதத்தான் இப்ப கைல கதை பேசிக்கிட்டு இருக்குறது. என்னோட பொறந்த நாளன்னைக்கு அவளுக்கு ரெக்கார்டிங் இருந்தது அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

"சுந்தர்........................." வேற யாரு? சுபாதான். என்னோட பேரக் கத்திக் கிட்டேதான் வருவா. போகும் போதும் அப்பிடித்தான். பேரச் சொல்லிக் கத்தக் கூடாதுன்னு எத்தன வாட்டி திட்டினாலும் கேக்க மாட்டா. அதுவுமில்லாம அந்தக் கத்தல் எனக்கும் பிடிக்கும். என்னோட பேரச் சொல்லிக் கத்துறதே ஒரு பாட்டாக் கேக்கும்.

பாருங்க....இப்பிடித்தான் வந்ததும் என்னோட கையப் பிடிச்சுக்குவா! இப்பிடியெல்லாம் நடந்துதான் எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் சீக்கிரமே தெரிஞ்சு போச்சு. அப்புறம் நடந்ததெல்லாம் ஒங்களுக்குச் சொன்னேன்.

"என்னடா! நான் கொடுத்த கார்டத் தடவிப் பாத்துக்கிட்டு இருக்க! நானும் தடவிப் பாக்குறேன்!" அவதான் கேக்குறது.

"அட மண்டு. கார்ட நம்மால தடவத்தான முடியும். பாக்க முடியாதுல்ல." நான் சொல்லி வாய மூடல. என்னோட கன்னத்தத் தடிவித் தேடி முத்தம் குடுத்தா சுபா.

அன்புடன்,
கோ.இராகவன்

(இது கதைதான். கதைதான். கதைதான்.)