Monday, May 21, 2007

பெரியார் - திரைப்படம்



பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்ததுண்டு. அதற்குப் பிறகு பலர் சொல்லித் தெரிந்து கொண்டதுண்டு. வலைப்பூக்களிலும் கொஞ்சம் படித்ததுண்டு. அவ்வளவுதான். ஆகையால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். அந்த வகையில் படத்தைப் பற்றியும் அதில் சொல்லப்படும் பெரியார் பற்றியும் என்னுடைய கருத்துகளை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன்.

வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது எளிதன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. திரைக்கதையில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும்.....இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை. பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜைப் பொருத்த வரையில் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகர்தான். சமீப காலத்தில் நடிக்கும் குத்தாட்டப் படங்களால் எரிச்சல் உண்டாக்கியவர் இந்தப் படத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். நடிகர் திலகம் நடிக்க விரும்பிய பாத்திரம் இவருக்கு. அந்த அளவுக்கு நடிப்பு இல்லையானாலும்...இரண்டாவது பாதியில் நல்ல நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

ஜோதிர்மயி.....இவ்வளவு நல்ல நடிகையா நீங்கள்? தெரியாமல் போய் விட்டதே. இப்படியெல்லாம் நடித்தால் தமிழில் வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். உங்கள் நடிப்பைப் பாராட்டுகிறேன். குஷ்பூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பெரியாரின் தாயாக வரும் மனோரமாவும் அவரது கணவனாக நடித்த அந்தத் தெலுங்கு நடிகரும். நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு கலந்த தமிழில் புலம்பும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு. மகனை நினைத்துப் புலம்பும் கட்டங்களில் காட்டப்பட வேண்டிய எரிச்சலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். அந்தத் தெலுங்கு நடிகர்....பெரியாரின் தந்தையாக நடித்தவர்....பெயர் என்னங்க? நல்லா நடிச்சிருக்கீங்க. தெலுங்கு கலந்த தமிழ் பேச மனோரமா பட்ட சிரமம் இவருக்கு இல்லை.

ராஜாஜி, காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி என்று எல்லாரும் வருகிறார்கள். ஆனால் அளவான பாத்திரங்கள். அந்த அளவோடு அவர்கள் நடித்துள்ளார்கள். சரி. ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அலுப்புத் தட்டும். படம் சொல்லும் கருத்துகளுக்கு வருவோம். இந்தப் படத்தில் சொல்லப்படுவது உண்மையான நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டே தொடர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் பெரியார் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் என்றும் சிந்தித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியது. தாசி வீட்டுக்குப் போனவர் என்பதால் அவர் எதிர்த்த குழந்தைத் திருமணங்கள் ஆதரிக்கபடலாகாது. அந்த எதிர்ப்பு சரியானதே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. கைம்பெண் மறுமணமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.

படத்திற்கு வருவோம். பெரியார் பிறந்தது ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பில். அந்த வகுப்பிற்காக ஏதாவது போராட்டம் நடத்தி சாதித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் ஆகவில்லை. சாதீய வேறுபாடுகளைக் களைவதுதான் அவருக்குக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சாதி பார்ப்பது இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. இது இன்னும் குறையும் என்று நம்புவோம். குறைய வேண்டும் என்று விரும்புவோம்.

வளர்ந்து திருமணம் செய்த மகனாக இருக்கையில் அப்பாவிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார். அதுவும் மிகச்சரியான காரியத்தைச் செய்ததற்கு. அப்பொழுதுதான் காசிக்குப் போகிறார். அங்கே பிராமணர்களுக்குச் சோறு போட்டால்தான் புண்ணியம் என்று சொல்கிறார்கள். பசித்த எவருக்கு அன்னமிட்டாலும் அது புண்ணியம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். வறியார்க்கொன்று ஈவதே ஈகை. எச்சில் சோற்றைச் சாப்பிடும் நிலை. அடக்கொடுமையே.

காசியை விட்டு வந்த பிறகுதான் காங்கிரசில் சேருகிறார். ஆனாலும் அவரது குறிக்கோள் சமூக சீர்திருத்தம் என்பதாகவே இருந்திருக்கிறது. அது நடக்காது என்று தெரிந்து கொண்ட நிலையில்தான் காங்கிரசை விட்டு விலகியிருக்கிறார்.

வைக்கம். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய போராட்டம். ஈழவர் என்றால் இத்தனை தூரமும்...ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நம்பூதிரிகள் சொல்லியிருப்பது மிகக்கொடுமை. அப்பொழுது ஒரு சிறுவன்...அந்த நாய் எவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல். ஆனால் வேதனை தரக்கூடிய கேள்வி. நல்லவேளையாக இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது. பெரியாருக்கு நன்றி.

ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள் பலவேசம் என்று வாழவில்லை அவர். போராட்டங்களுக்கு வீட்டுப் பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார். கள்ளுக்கடை மறியல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது மனைவியும் தங்கையும்தான் முன்னின்று போராடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. அதில் குறுக்கிட எந்த அரசியல்வாதிக்கும்.....அட...எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. பொருட்டாக மதிக்கவும் தேவையில்லை. "ஐம்பதிலும் ஆசை வரும்" என்று டி.எம்.எஸ் பாடலை எல்லாரும் ரசித்துதானே கேட்டோம். ஐம்பது வயதானவர்கள் எல்லாரும் விரதம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? என்னைப் பொருத்த வரையில் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரியார்...இது தொடர்பாக உங்களையும் மணியம்மையையும் நான் புரிந்து கொள்கிறேன்.

அதே போல இன்னொரு கட்டம். ஒரு மாநாடு நடக்கிறது. அதில் சமைக்க ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களை அழைத்துச் சமைக்க வைக்கிறார். அதுவரையில் பிராமணர்கள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறுகிறது. நான் என்னுடைய நினைவு செல்லும் வழியில் சென்று யோசித்துப் பார்க்கிறேன்.

என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம். சாதி..கீதியெல்லாம் பார்க்கவில்லை. உடனே எல்லாரும் கேட்பார்கள். சமையலுக்குச் சாதி பார்க்கவில்லை..மாப்பிள்ளைக்கு எப்படி என்று...உண்மைதான். நல்ல கேள்வி. கண்டிப்பாகப் பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் சென்ற தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் மாநிலம் தாண்டிய காதற் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இட்ட தீபாவளிப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் இது அதற்கு முந்தைய தலைமுறைகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆக..ஒரு முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரவேற்கத்தக்கதே.

பொதுவில் சாதீய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பெரியாரின் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்.

"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. அது நம்ம இயக்கத்துல இருக்குற மைனர்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்குத் தெரியலைங்க. மணியம்மை ஒன்னும் சின்னக் கொழந்தை இல்லங்க. அவங்களுக்கு முப்பது வயசாகுது. அவங்க சம்மதத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடந்துருக்குது. நம்ம இயக்கத்துல எனக்கு நம்பிக்கையானவங்க ஒருத்தருமில்லைன்னு சொன்னா அது ஒங்களுக்கெல்லாம் உறுத்தலா இருக்குதுங்க." - மணியம்மையோடு திருமணம் முடித்து விட்டு பெரியார் சொன்னது. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவர் சொன்ன இந்தக் கருத்தைக் கூட அவர் பெயரைச் சொல்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே நினைக்கின்றேன். பெரியார் மட்டுமல்ல பல பெரியவர்களுக்கு இந்த நிலைதான்.

எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 17, 2007

தெலுங்குல கற்றாரைக் கற்றாரே

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு கேள்விப்பட்டிருப்பீங்க. உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருப்பாங்க. அவரு சவுண்டு இஞ்சினியரு...இவரு சுக்குநீருன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.

இதுல பாருங்க...நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு...தெலுங்குல காமுறுறாங்க. அட...இங்க போய்ப் பாருங்க. இது பத்தி ஒங்க கருத்து என்னன்னு எழுதுங்க.




இதுல மெல்லிசை மன்னரும்..இசைஞானியும் தமிழத்தான் தெலுங்கு மாதிரி பேசுறாங்க. இருந்தாலும் அது புரியாதவங்களுக்காக...கீழ கொடுத்திருக்கிறேன்.

மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.
(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)

இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.

மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.

அனைவரும் சிரிக்கின்றார்கள்.


அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 14, 2007

இதப் பாத்தா கேட்டா என்ன தோணுது?

இந்தச் சுட்டிக்குப் போங்க. அங்க ஒரு வீடியோ இருக்கும். அதப் பாருங்க. ஒரு மலையாளப் பாட்டு. பாத்துட்டு....தமிழ்ல்ல அது என்ன படம் என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பாக்கலாம். இது பத்தி நெறைய தகவல் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். இந்தப் பாட்டு ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 07, 2007

குற்றப்பத்திரிக்கை - விமர்சனம்

இந்தப் படத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? 1994லயோ என்னவோ எடுத்த படம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட இருட்டறை வாசத்திற்குப் பிறகு வெள்ளித்திரையைத் தொட்டு அதே வேகத்தில் மீண்டும் உறக்கத்திற்குச் சென்ற படம். இத்தனை வருடமாக ஒரு படத்தை ஏன் விடாமல் தடுத்திருக்க வேண்டும்? இப்பொழுது ஏன் திடீரென்று விட்டிருக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளும் உந்தத்தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்கள். ராம்கி மற்றும் ரகு. அவர்களைச் சுற்றித்தான் கதை. ராம்கிக்கு ரம்யா கிருஷ்ணன். ரகுவிற்கு ரோஜா. இவர்கள் வாழ்க்கையில் ராஜீவ்காந்தியின் கொலை எப்படி வருகிறது என்பதுதான் கதை. அதான் இரண்டு கதாநாயகர்களுமே அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் என்று சொல்லி விட்டோமே. பிறகென்ன? அவர்களே ஓடித் தேடிக் குற்றவாளிகளைப் பிடித்துவிட மாட்டார்களா? நடுநடுவில் நம்பியார் வந்து "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உங்க உதவி வேணும்"னு வழக்கமா விஜயகாந்த் கிட்ட கேட்டத இதுல இவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறாரு.

சினிமாவுல வில்லன் மன்சூர் அலிகான். அவரோட பேரு சிவா. அவரு படக்குன்னு ஒரு கண்ண அடிக்கடி மாட்டுறாரு. முடியுமா என்ன? அட. அவரு ஒற்றைக்கண் சிவராசன்னு சொல்றாங்களாம். அவரோட தலைமைல ஒரு பெரிய கூட்டம் இந்தியாவுக்கு வருது. எங்க இருந்துன்னு சொல்ல மாட்டாங்களாம். ஆனா வர்ரவங்க பேசுறத வெச்சு நம்ம கண்டுபிடிச்சிரலாமாம். நல்ல நாள்ளயே மன்சூரலிகானுக்குத் தமிழ் தகராறு. இதுல! அந்தக் கூட்டத்துல ராஜேஷும் ஒருத்தரு. பெண்களும் இருக்காங்க. எல்லாருடைய முகச்சாடை உடலமைப்பு எல்லாம் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் என்று கருதப்படுகிறவர்களை ஒத்தே இருக்கின்றன.

சரி. கதைக்கு வருவோம். இவங்கள்ள ஒருசிலர் வேன் எடுத்துட்டுப் போய் ஒரு அப்பார்ட்மெண்ட்டுல தங்கியிருந்த ஒரு சிலரைக் கொலை செஞ்சிர்ராங்க. அதுல ஒருத்தர் பத்மனாபா மாதிரி எனக்குத் தெரிஞ்சதுக்குக் கண்ணாடியைத் தொடைக்காதது கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். அப்படியே தப்பிச்சுப் போயிர்ராங்களாம். அதுக்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தர் உதவுறாரு. இவரு எந்தக் கட்சின்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்க. அதுவுமில்லாம ஒருத்தர் மட்டும்தான் உதவி பண்றாரு கடைசி வரைக்கும். தேவையில்லாம இங்க வைகோவைப் பத்திப் பேச வேண்டாமே.

நம்பியார் குளோசப்ல வந்து, "ஆட்சியைக் கலைக்கப்போறாங்க. அதுனால சட்டம் ஒழுங்கை நீங்கதான் சரியாப் பராமரிக்கனும்"னு பொறுப்பை கதாநாயகர்கள் கைல ஒப்படைக்கிறாரு. ஆட்சியையும் கலைச்சிர்ராங்க. அட. திமுக ஆட்சியைத்தான் 1990ல கலைச்சாங்கள்ள. அப்பக் கொஞ்சம் கலவரம் நடக்குது. கதாநாயகர்கள் நல்லா சண்டை போட்டுத் தடுக்குறாங்க. அப்பத்தான் தேர்தல் வருது. அதே தேர்தல்தான். 1991.

நம்பியார் திரும்பவும் குளோசப்ல வந்து, "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர்ரதால பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பா இருக்கனும்"னு கேட்டுக்கிறாரு. ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்பு ரகு கைக்கு வருது. ராஜீவ்காந்தி என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்வார்கள் என்று நினைத்தேன். அதே நேரத்தில் எதிர்த்தரப்பின் மைய அடையாளத்தைப் பத்தி ஒன்றும் பேசாத நிலையில் இவரது பெயரைப் பயன்படுத்தியிருப்பது சற்று உறுத்தலாகத்தான் தெரிந்தது.

மன்சூரார் கூட்டணி ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அவர்களோடு படமெடுக்க அழைத்துச் செல்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ராஜீவ்காந்தி வருகிறார். இந்தி நடிகர் அனுபம்கெர் வெள்ளை ஜுப்பா பைஜாமாவில் ராஜீவ்காந்தியாக வருகிறார். போட்டோக்காரர் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கிறார். அப்பொழுது மன்சூராருடன் வந்த பெண் கையில் மாலையோடு அனுமதி கேட்கிறார். கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. வேறு எந்தப் பெரிய தலைவர்களும் அங்கு இல்லை. அதற்குள் அந்தப் பெண் மாலையைப் போட்டு காலைத் தொடக் குனிகிறாள். குனிந்தவள் குண்டை இயக்கிவிடுகிறாள். முடிந்தது. அதற்குப் பிறகு இவர்கள் தப்பிக்க முயற்சிப்பதும்...அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் பிடிக்க முயல்வதும் கதை.

இதில் பிரச்சனை என்னவென்றால் மன்சூரார் கூட்டத்தார் எல்லாரும் கொடியவர்கள் (வழக்கமான தமிழ்சினிமா வில்லன்களைப் போல) என்ற மனநிலைக்குப் படம் பார்க்கிறவர்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களது நடையும். அதற்கான பின்னணி இசையும். இளையராஜாவாமே! அதுவுமில்லாமல் மன்சூராரின் கூட்டணித்தற்கொலைக்குப் பிறகும் சிலர் தப்பித்து....அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் மனைவியரைத் துன்புறுத்துகிறார்கள். பிறகு அசிஸ்டெண்ட் கமிஷனர்களால் சுடுபட்டுச் செத்துப் போகிறார்கள். அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது? சரக்கு மட்டும் நல்லா கலக்கத் தெரியும் போல இருக்கு. இதில் சிவராசன் தற்கொலை காட்சியை அளவுக்கு மீறி வளர்த்து......சிவபூஜை செய்து விட்டு அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெளியில் அந்த வீட்டிற்குள் நுழைய அசிஸ்டண்ட் கமிஷனர் பயங்கரமாக சண்டை போடுகிறார். நன்றாகச் சண்டை போட்டு....எல்லாரும் இறந்ததும் வீட்டிற்குள் நுழைகிறார்.

அத்தோட முடிஞ்சதா? படம் முடியும் போது ரெண்டு கமிஷனர் குடும்பமும் குழந்தையோடு கடற்கரையில் இருக்கும் பொழுது தப்பித்தவர்களில் இன்னும் ஒருவன் துப்பாக்கியோடு எழுந்து நிற்கிறான். அவன் வானத்தைப் பார்த்துச் சுட்டதும் திரையில் "No More Violence" என்று ரத்தச்சிவப்பில் வருகிறது. படம் பார்த்த நம் வாயில் வராததுதான் மிச்சம்.

படத்தில் இன்னொரு காட்சி. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக கொடிக்கம்பத்தை வெட்டப்போகின்றார்கள். சந்திரசேகர் தடுக்கிறார். அவரையும் வெட்டப் போகிறார்கள். அப்பொழுதும் அசிஸ்டெண்ட் கமிஷனர் வந்து காப்பாற்றுகிறார். அப்போது சந்திரசேகர் சிறிது உணர்ச்சிபூர்வமாக கட்சிக் கொடியைப் பற்றிப் பேசுகிறார். திமுக பிரச்சாரம் என்ற உணர்வு அந்நேரம் வராமல் இல்லை.

இன்னொரு காட்சி. எல்லார் மனதிலும் இன்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும் பதிலில்லாத கேள்வி. காங்கிரஸ்காரர் என்று மார்தட்டுகிறவர் அனைவருக்கும் இன்றும் கேட்கப்படும் கேள்வி. இப்படி ஒரு காட்சியில் வருகிறது. ரகுவை சஸ்பென்ஷன் செய்து விடுகிறார்கள். அவர் பொறுப்பில்தானே ராஜீவ்காந்தி பாதுகாப்பு இருந்தது. சஸ்பென்ஷனுக்கு நியாயம் கேட்க கமிஷனரைப் பார்க்க ராம்கியோடு போகிறார். அங்கு ஒரு (காங்கிரஸ்) தலைவர் வந்து கமிஷனரிடம் அவரது கட்சிக்காரர்களையும் சேர்த்துக் கைது செய்திருப்பதைப் பற்றி பேச வருகிறார். அவர் துன்பியல் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்றும் பேசிவிடுகிறார். உடனே ரகு வெகுண்டெழுந்து சொல்கிறார். "அவரு கூடச் சேந்து செத்தது யார் சார்? பொதுமக்களும் போலீஸ்காரங்களுந்தான். ஒங்க கட்சிக்காரங்க யாராவது ஒருத்தர் செத்தாங்களா? குண்டு வெடிக்கிற வரைக்கும் கூடவேயிருந்த நீங்க...குண்டு வெடிக்கிறப்போ எங்க சார் போனீங்க? அப்போ குண்டு வெடிக்கப் போகுதுன்னு தெரியுமா?"

மொத்தத்தில் இந்திய அரசியல்சட்டத்திற்கு முடிக்கப்பட்ட வழக்காக இருக்கும் ராஜீவ்காந்தி கொலையை வைத்து சின்னப்பிள்ளைத்தனமாய் ஒரு படம். இந்தப் படம் பார்த்த பிறகு வழக்கின் தீர்ப்பு நகலைக்கூடப் படித்துப் பார்த்தேன். பல ஐயங்கள் எழாமல் இல்லை. கூகிளாண்டவர் உதவியை நாடினால் பலப்பலச் சந்தேகங்கள். அவைகளை வெளிப்படையாக விளக்காமல் வழக்கு முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இன்னமும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு சற்று விரைவில் முடிக்கப்பட்டு விட்டதோ என்றும் கூடத் தோன்றுகிறது. முதலில் எல்லாருக்கும் தூக்கு என்றார்கள். கைது செய்யப்படும் பொழுது ஆதிரையின் வயது 17. பிறகு தீர்ப்புகள் மாறின. நடுவில் திமுகவின் பெயரும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் ஜெயின் கமிஷனில் வந்து மத்திய அரசைப் பிரசாதமாக உருட்டி விழுங்கியது.

ஆனால் ஒன்று ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பெல்லாம் மத்திய ஆட்சி நினைத்தால் மாநிலத்தைக் கலைக்கும். உலைக்கும். குலைக்கும். இப்பொழுது மாநில ஆட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்தியில் ஆட்சி செய்வதால் அது குறைந்து போயிற்று. குறிப்பாக உத்திரப்பிரதேசதமே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்ற கேடுகெட்ட நிலையையும் ஒரு வழியும் பின்னாளில் மாறிப்போனது. நேருவின் வாரிசு அரசியல் இன்னும் நேரடியாக பதவிக்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையோ ஸ்பெயினுக்கும் பதவிக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. என்னவோ நடக்குது. நடக்கட்டும்.

மொத்தத்தில் குற்றப் பத்திரிக்கை குற்றமுள்ள பத்திரிக்கை.

அன்புடன்,
கோ.இராகவன்