Tuesday, March 25, 2008

பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு

சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை. கிடைத்தால் கொடுக்கவும்.

ஆனால் இன்னொரு பாடலின் வீடியோவே கிடைத்து விட்டது. ஹிட்லர் உமாநாத் படத்தில் இடம் பெற்ற இந்த வில்லுப்பாட்டுதான். இதிலும் சுருளிக்கு மலேசியா வாசுதேவனே பாடியிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. மிகவும் அருமையான நகைச்சுவை வில்லுப்பாட்டு. கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 03, 2008

தங்க மரம் - 8

முன்கதைச் சுருக்கம்

ஆலோரின் சுடர்மகளான லிக்திமாவிற்கு ஆதி முத்தைப் பரிசளித்தது அவளது கணவன் சாண்டாவிற்குப் பொறாமையை உண்டாக்கியது. எப்படியாவது முத்தைக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6
பாகம் - 7

பாகம் - 8

அந்தப் பளபளக்கும் முத்தின் மேல் சாண்டாவிற்கு ஆசை கூடிக்கொண்டே போனது. இப்படியெல்லாம் ஆசை உண்டாவது சாண்டாவிற்கும் புதிது. தானுண்டு தன் வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்தான். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே வேலை என்று வந்து அதில் ஒருவருக்கு மட்டும் உயர்வு என்று எண்ணம் தோன்றுமானால் குழப்பம்தான் உண்டாகும். அதிலும் கணவனை விட மனைவி உயர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

பகலில் ஓளிர்ந்தும் இரவில் அடர்ந்தும் இருக்கும் முத்து அவன் கண்களிலேயே இருந்தது. அதை எப்படி அடைவது என்று மட்டுமே அவன் யோசித்தான். தன்னுடைய கோபுரத்திற்குப் போகாமல் நேராக மெரிமாவைப் பார்க்கச் சென்றான். விண்டாவும் அங்குதான் இருந்தான் அப்பொழுது. அவர்களிடம் தன்னுடைய பஞ்சாயத்தைத் தொடங்கினான். நால்வரில் முதல்வன் அவன் என்பதால் அவனே முத்தை வைத்திருக்க உரியவன் என்று பேசி... அவர்கள் இருவரையும் லிக்திமாவிடம் சமாதானம் பேசி முத்தை வாங்கி வர அனுப்பினான்.

முத்தை வாங்கி சாண்டாவிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ இல்லாவிட்டாலும் குழப்பம் வளர்ந்து கொண்டே போகிறதே என்ற எண்ணத்தில் லிக்திமாவிடம் பேசச் சென்றார்கள். என்ன இருந்தாலும் நீர்மகள் அல்லவா மெரிமா. குழப்பம் என்றதும் உருகித்தான் போனாள். விண்டாதான் அவளைச் சமாதானப்படுத்தி லிக்திமாவிடம் தள்ளிக் கொண்டு சென்றான்.

தன்னைப் பார்க்க வந்த மெரிமாவிற்கும் விண்டாவிற்கும் பானிகா குடிக்கக் கொடுத்து வரவேற்றாள். வந்தவர்கள் குழந்தை தனிமாவிற்கு பரிசுகள் கொடுத்தார்கள். வேலைப்பாடமைந்த ஒரு கண்டாடிப் புட்டியில் தன்னுடைய நீராதாரத்திலிருந்து எடுத்து வந்த தூநீரைக் கொடுத்தாள் மெரிமா. தங்கப் பெட்டி ஒன்றில் வளியை அடைத்துக் கொடுத்தான் விண்டா. இந்தப் பரிசுகளை யாருக்கும் இவர்கள் கொடுப்பதில்லை. அபூர்வப் பரிசுகளைப் பெறும் முதல் குழந்தை தனிமாதான்.

பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் மெரிமா முசுமுசுவென்று அழுதுகொண்டிருந்ததால் விண்டாதான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"லிக்திமா, நீ சுடர்மகள். ஆற்றலரசி. குழப்பம் இவ்வளவு பெரிதாக விட்டிருக்கலாமா?"

மெல்லச் சிரித்தாள் லிக்திமா. "விண்டா...குழப்பம் என்று நீ சொல்வது என்ன? முத்து என்னிடம் இருப்பதுதானே. சாண்டா கேட்டும் நான் கொடுக்காமல் இருப்பதுதானே. உன்னுடைய உள்ளங்கைகள் இரண்டிலும் மரகதங்கள் பதிந்திருக்கின்றனவே...அவற்றை மெரிமா கேட்டால் கொடுப்பாயா? அல்லது மெரிமாவின் நாவை அலங்கரிக்கும் நீலக்கல்லை நீ கேட்டால் மெரிமா தருவாளா?"

சுடர்மகள் இப்படிக் கேட்டதும் மெரிமாவின் விசும்பல் கூடியது. தென்றலாக அவளை அணைத்துக் கொண்டு விண்டா பேசினான். "புரிகிறது லிக்திமா. ஆனால் ஆளுக்கொரு கல் இருக்க உனக்கு அதிகப்படியாக ஒரு முத்து கிடைத்திருபப்துதான் சாண்டாவிற்கு உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கொடுப்பதாக நீயும் இல்லை. விடுவதாக அவனும் இல்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?நால்வரில் முதல்வர் அவர்."

"விண்டா.. நால்வர் நாம். அதில் முதல்வர் இரண்டாமவர் என்ற பேதம் ஏது? நால்வரில் ஒருவர் கடமை பிழைத்தாலும் அனைவருக்கும் கேடுதானே. நீயும் மெரிமாவும் இல்லாவிட்டால்... .காற்றும் நீருமில்லாத இந்த நிலம் மட்டும் இருந்து என்ன பயன்? நீங்கள் அனைவரும் இல்லாமல் வெறும் ஆற்றலை வைத்துக் கொண்டு நான் மட்டும் என்ன செய்ய முடியும்? நால்வரும் இணைந்து இயைந்து பணியாற்றுவதாலே ஆலோர் செழித்திருக்கிறது. அப்படியானால் நாம் அனைவரும் சமம். அதைக் காட்டத்தானோ என்னவோ ஆதி நான்கு கோபுரங்களையும் ஒரே அளவில் அமைத்து நடுவில் இருக்கும் அரச கோபுரத்தை மட்டும் பெரிதாக அமைத்திருக்கிறார்."

கழுத்தில் இருந்த முத்துக் கோர்த்த சங்கிலியைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் காட்டினாள். "பார் விண்டா..இந்த முத்தை வைத்துக் கொண்டுதான் என்னுடைய ஒளியையும் ஆற்றலையும் நான் கட்டுப்படுத்துகிறேன். முத்து கிடைப்பதற்கு முன்பும் செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் முத்து வேலையை எளிமையாக்குகிறது. இதென்ன அழகு பொருளா? அப்படியானால் கொடுத்திருப்பேனே!"

விண்டாவும் யோசனையில் இருந்தான். லிக்திமா முத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது. அதே நேரத்தில் சாண்டாவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எதற்கும் சாண்டாவிடம் ஒருமுறை பேசுவதென்றும்... அது உதவாவிட்டால் அடுத்து ஆதிதான் மீதியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விண்டா.

எதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தான் விண்டா. ஆனால் ஏதோ ஒரு அதிர்வினால் தொடர்ந்து பேச முடியவில்லை. முதலில் கால்கள் நடுங்குவதாக அனைவரும் உணர்ந்தார்கள். ஆனால் அது கூடிக்கொண்டே போனது. லிக்திமாவும் விண்டாவும் ஓரளவு சுதாரித்துக் கொண்டாலும் தளும்பினாள் மெரிமா. நீர்மகள் அல்லவா.

படக்கென்று மெரிமாவின் காலுக்கடியில் நிலம் பிளந்தது. நீரென்றால் பள்ளத்தில் பாய்வதுதானே. ஆவென இரைச்சலோடு பள்ளத்தில் வீழ்ந்தாள். மளுக்கென்று வெள்ளம் பெருக்கெடுத்து அறையெங்கும் தெறித்தது. லிக்திமாவில் நீர் பட்டதும் சுர்ரென்று கொதித்து ஆவியானது. அந்த நடுக்கத்திலும் நடந்ததைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்ட விண்டா சூறாவளியானான். விர்ரென்று சுழன்று பள்ளத்தில் பாய்ந்து மெரிமாவை வெளியே இழுத்தான். ஒரு அறைக்குள்ளேயே நிலநடுக்கம்...வெள்ளம்..சூறாவளி...ஒரே களேபரம். தொடர் தடுமாற்றத்தில் கையிலிருந்த முத்தைத் தவறவிட்டாள் லிக்திமா.

அந்தச் சங்கிலிக்காகவே காத்திருந்தது போலத் தரை திறந்தது. திறந்த பிளவில் முத்துக் கோர்த்த சங்கிலி விழவும் மீண்டும் தரை மூடவும் சரியாக இருந்தது. நொடிப்பொழுது கூட ஆகியிருக்குமா என்பதே ஐயம். அனைத்தும் பட்டென்று நடந்து முடிந்து. முத்துச் சங்கிலியைத் தொலைத்த அதிர்ச்சியில் வெளுத்து ஒளிர்ந்தாள் லிக்திமா.


அந்நேரத்தில் விண்டாவும் மெரிமாவைப் பற்றியிழுத்துக் காப்பாற்றினான். முத்து விழுந்ததையோ தரைக்குள் மறைந்ததையோ அவன் கவனிக்கவேயில்லை. மெரிமாவோ தொப்பலாக நனைந்து அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளைச் சிதறிவிடாமல் காற்றால் அணைத்துத் தேற்றினான் விண்டா. தன்னுடைய கோபுரத்திற்கு வந்தவர்களுக்கு இப்படியாகி விட்டதே என்று வருந்துவதா...இல்லை முத்தைத் தொலைத்து விட்டோமே என்று பதறுவதா என்று தெரியாமல் திகைத்தாள் சுடர்மகள்.

இத்தனைக்கும் காரணம் யார் என்பதை ஊகிப்பதில் கதையைப் படிப்பவர்களுக்குச் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். மண்ணின் மகனான சாண்டாதான் இப்படிச் செய்தது. முத்து அவன் கைக்குக் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டு குற்றங்களைச் செய்துவிட்டான் அவன். ஒன்று... லிக்திமாவிற்கு ஆதி கொடுத்த பரிசைத் திருடியது. இரண்டு...தெய்வங்கள் நால்வரில் ஒருவரைத் தாக்கியது. தெய்வங்கள் நான்கும் ஒருவருக்கொருவர் துணை நின்று ஆலோரைக் காக்க வேண்டும் என்பது ஆதி இட்ட கட்டளை. அதை மீறித் தாக்குகின்றவர்கள் ஆதியைத் தாக்குகின்றவர்களாவர்.

இந்த இரண்டு குற்றங்களையும் செய்து விட்டு ஆலோரில் இருக்க சாண்டா விரும்பவில்லை. ஆதிக்கு எட்டாத இடமென்று அவன் தேர்ந்தெடுத்து பூமியை. நிலத்தைக் காக்கும் கடவுளாகிய தான் இல்லாவிட்டால் ஆலோர் வீழ்ந்து விடும். அப்படி வீழாமல் இருக்க வேண்டுமெனில் தன்னுடைய காலில்தான் வந்து விழுவார்கள் என்ற மமதையோடு பூமிக்குச் சென்று விட்டான்.

தொடரும்..

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்