Monday, December 17, 2007

நஒக - மஞ்சனத்தி

இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.

எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.

இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.

கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.

சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?

மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.

மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?

இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.

இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?

ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.

அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.

இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.

என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 14, 2007

கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.




மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.



கொலுவை உன்னாடே -- தஞ்சை சரபோஜி மகாராஜா மணிபவழத் தெலுங்கில் எழுதிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் இசையரசியும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பானுப்பிரியாவின் நடனம் மிக அழகு. இதைக் கண்டிப்பாகப் பாருங்கள். இதுவும் ஸ்வர்ண கமலம் படம்தான்.


நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.



நீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.



நல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.



கர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.



அன்புடன்,
கோ.இராகவன் (ஜிரா)

Thursday, December 06, 2007

பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

நண்பர்களே, இந்தக் கதை ஒரு மீள்பதிவு. தோழர் தேவ் கேட்டுக்கொண்டதற்கிணங்க. :) படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Monday, December 03, 2007

காதல் குளிர் - 11

விமானம் வானத்தில் மிதந்தது. அதில் ரம்யாவும் ப்ரகாஷாவும் காதலில் மிதந்தார்கள். வந்த வேலையெல்லாம் (நேர்முகத் தேர்வுக்குத்தானே வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!) முடிந்து பெங்களூர் திரும்பல். ரம்யாவின் சீட் பெல்ட்டாக ப்ரகாஷாவின் கை. முன்பும் இதே நெருக்கத்தில் ப்ரகாஷாவோடு உட்கார்ந்திருக்கிறாள் ரம்யா. ஆனால் இப்போது நிலமையே வேறு.

அவளது ரோஜாக் கைகளை கைக்குள் புதைத்துக் கொண்டு கேட்டான். "ரம்யா....I love you so much. I will love you forever. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சாய்ங்காலா என் லவ்வ ரிஜெக்ட் பண்ணீட்டு.....ராத்ரி எப்படி? ஆறு மணி உளகடே என்னாச்சு?" கைக்குளிருந்த ரோஜாப்பூக்களை முத்தமிட்டான்.

ப்ரகாஷாவின் கைகளை இதழால் நனைத்தாள். "டேய். நீ காதல்னு சொல்றப்போ எனக்கு உள்ள சந்தோஷமா இருந்தாலும்.....பயம்தான் வந்துச்சு. நீ என் கூட இருக்கும் போது வர்ர சந்தோஷம்...நீ இல்லாதப்ப வருத்தமாகும்னு புரிஞ்சது. நீ இல்லாமப் போயிருவியோங்குற பயத்துல உங்கிட்ட உறுதிமொழி வாங்கனும்னுதான் தோணுச்சு. அந்த பயத்துலதான் காதலைச் சொல்லத் தோணலை. அதுக்குதான் நானும் கேட்டேன். ஆனா நீயும் சொல்லலை. அப்ப நீ முழிச்சது.......... நான் அழாம இருந்தது பெரிய விஷயம். ஆனாலும் முகத்தை மறைக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. உன் பக்கத்துல உக்காந்தா கண்டிப்பா அழுதிருப்பேன். அதுவும் உண்யைக் கட்டிப்புடிச்சிக்கிட்டே. அதுனாலதான் கார்ல முன்னாடி போய் உக்காந்தேன்."

ரம்யாவின் முகத்தில் விழுந்த முடியை விரலால் ஒதுக்கினான். அவ்வளவு மென்மையாக அவன் இதற்கு முன் எதையும் கையாண்டதில்லை. என்ன? நேற்றா? ஹி ஹி. இது மென்மைங்க. மென்மை. "ரம்யா....எனக்கும் அழுகே பந்த்து. தும்ப கஷ்டா பட்டு அழாம இருந்தேன். அது சரி. பிராமிஸ்னு சொன்னியே. நானு குடுக்கலையே? அது எப்பக் கெடைச்சது?"

"தெரியலடா. ஆக்சிடெண்ட் ஆனப்புறம் ரொம்பவே distrubed-ஆ இருந்தேன். அப்ப பயத்துல உங்கிட்டதான் ஓடனும்னு தோணிச்சு. அது ஏன்னு எனக்குத் தெரியலை. அப்புறம் ஆட்டோல போறப்போ என்னைப் பாதுகாப்பா வெச்சிருந்தியே....அப்பதான் நீ என்னை கஷ்டப்பட விடமாட்டன்னு தோணிச்சு. உன்னோட நெருக்கம்...உன்னோட வாசம்... உன்னோட சுவாசம்....எல்லாத்தையும் புதுசு புதுசா ரசிச்சேன். நீ எனக்கு வேணும்னு...எப்படியாவது வேணும்னு தோணுச்சு. ஆனா என்னோட கேள்விகளுக்கு இன்னமும் நேரடியான பதில் நீ சொல்லலை. ஆனா பிரச்சனைன்னு வந்தா அது உனக்கு மட்டுமல்ல நம்ம ரெண்டு பேருக்கும்னு காதல் சொல்லுச்சு. ஒங்கம்மா அழுதாங்கன்னா அத எப்படிச் சமாளிக்கிறதுன்னு நம்ம ரெண்டு பேரும் யோசிப்போம். ஒரு வழி கண்டுபிடிப்போம்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்பவே நீ என்னோட ப்ரகாஷாவாயிட்ட.

அப்புறம் எப்படி நீ தனியா தூங்குறது? ஆனா உண்மையச் சொல்றேன்.....உன் கிட்ட எப்படிக் காதலைச் சொல்றதுன்னு தெரியாமதான் முத்தத்தால சொன்னேன். அது...முத்தத்துக்குப் பதில் முத்தம்...அதுக்குப் பதில் முத்தம்னு நடந்து மொத்தமும் நடந்துருச்சு. Well....I liked it. I expressed my love in the best possible way and you reciprocated as a man. I am fine with it. டேய்....உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாது."

ரம்யாவின் கன்னத்தை ஒரு கையால் தாங்கிக் கொண்டு கட்டை விரலால் இதழ்களை வருடினான். அட....அதென்ன...அப்படித்தான் பூ பூக்குமா? ரம்யாவின் முகமாற்றத்தைச் சொன்னேன். படக்கென்று ப்ரகாஷாவின் விரலைக் கடித்து விட்டாள்.

"டேய்....இது பிளேன்....எத்தனை பேர் இருக்காங்க. ஒழுங்கா என்னோட கேள்விக்குப் பதில் சொல்லு. அப்புறம் மிச்சத்த வெச்சுக்கலாம். ஒங்கப்பா கிட்ட சண்ட போட்டுட்டு வந்துருவ. ஒங்கம்மா அழுதா என்னடா செய்வ?" போலி மிரட்டல் விடுத்தாள் ரம்யா.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....சொல்றேன். அம்மா அழுதா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....We are ready to accept them as they are. But why cant they accept us as we are? Just because i love you, I dont deserve to be hated. Certainly I will not be happy to start my life without her blessing. She has to understand me and accept us. If she is not understanding, I will assure her my love and affection to her. Also I will be waiting till she understands me. And I will nurture the confidence in her heart by promising the open doors for her and appa. I want them...but I cant loose you. I will gain you first and then my parents soon after that."

"இத இத இதத்தான் நான் அப்ப எதிர்பார்த்தேன். இப்ப எப்படி உனக்கு பதில் தெரிஞ்சதோ. அதே மாதிரி எனக்கும் தெரிஞ்சது மாமா."

"என்ன மாமாவா?"

"ஆமாண்டா மாமா...." முத்துக் கொட்டிச் சிரித்தாள் ரம்யா.

"மாமா எல்லா பேடா....ப்ரகாஷான்னு கூப்டு. அது போதும்."

"மாமா வேண்டாமா...சரி. பேர் சொல்லியே கூப்புடுறேன். ஆனா...அப்பா அம்மா இருக்குறப்பவும் ப்ரகாஷான்னுதான் கூப்புடுவேன்."

"சரி...சரி....கூப்டா சரிதான்." இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். சிலிர்த்தார்கள். பின்னே...ரம்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தானே.

"Execuse me sir. PDA not allowed inside the flight sir" விமானப் பணிப்பெண் பணிவுப்பெண்ணாகச் சொன்னாள்.

பொய்யாக ஆச்சரியப்பட்டாள் ரம்யா. "Sorry. I didnt know PDA is not allowed inside the flight. My husband doesnt understand all these things. He is always mischevous and playful. I will ensure he is controled at leaset inside your flight. Is that fine?"

"Thatz fine madam."

"Thank you" என்று சொல்லிவிட்டு விமானப் பணிப்பெண்ணிற்கு கோவமும் அதை மீறிய பொறாமையும் வரும் வகையில் ப்ரகாஷாவின் இதழ்களில் மெத்தென்று ஒரு முத்தமிட்டாள் ரம்யா.

தொடரும்...கதையல்ல. ரம்யா ப்ரகாஷாவின் இனிய வாழ்க்கை.

பின்குறிப்பு

எச்சில் பண்டம் விலக்கு
அதில்
முத்தம் மட்டும் விலக்கு


இதுவரை முத்தமிடாதவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ப்ரகாஷா எழுதிய தமிழ்க்கவிதை.

அன்புடன்,
கோ.இராகவன்