Wednesday, July 20, 2005

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

நாலு வருடங்களுக்கு முன்னாலே.......தன்னாலே ஒரு நண்பர் கொடுத்த புத்தகம்........பின்னாலே இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்று தெரிந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்.......அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்கவே மாட்டேன்.

தற்செயலாக நண்பர் ஒருவரிடமிருந்து படிப்பதற்காக வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் முதல் புத்தகம். அதைப் படித்து முடிக்கும் முன்னமே அதுவரை வந்திருந்த நான்கு புத்தகங்களையும் வாங்கி நானே படிக்கத் தொடங்கினேன். ஒன்றை முடித்ததும் அடுத்தது. இப்படி நான்கு புத்தகங்களையும் நான் படித்து முடித்திருக்கையில் என்னாலும் சிலருக்கு ஹாரி பாட்டர் பைத்தியம் பிடித்திருந்தது.

அடுத்த புத்தகம் எப்பொழுது வருமென்று காத்திருந்து விழுந்தடித்து வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் ஐந்தாவது புத்தகம். இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது ஆறாவது புத்தகமும் வந்திருக்கிறது.

ஆக கடந்த நான்கு ஆண்டுகளில் ஹாரிபாட்டரில் மூழ்கி முத்தெடுத்து அதை மற்றவர்களுக்கும் காட்டிய புண்ணியம் நிறையவே கிடைத்து விட்டது.

ஆறாவது புத்தகத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதிலிருந்தே அந்தப் புத்தகத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல Strand புத்தகக் கடையில் விசாரித்து முன்பதிவிற்கு பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தேன். பின்னே முதல் நாளே வாங்கிப் படிக்க வேண்டுமே.

Strand புத்தகக் கடையில் முன்பதிவிற்கு பணம் வாங்க மறுத்து விட்டார்கள். காரணம்? சென்ற முறை எல்லாரும் ஐந்தாம் புத்தகத்தை அறுநூற்றுச் சொச்சத்திற்கு விற்றுக் கொண்திருந்த பொழுது ஐநூற்றுச் சொச்சத்திற்கு விற்றார்கள் அவர்கள். இந்த முறையும் அப்படிச் செய்ய விலையைச் சொல்லவில்லை. பெரிய கடைகளில் எழுநூறு, எண்ணூறு என்று பல விலைகளில் இலவசப் பொருட்களோடு முன்பதிவைச் செய்து கொண்டிருந்தார்கள்.

Strand புத்தகக் கடையின் ஒரு மாதம் முன்னால் ஹாரி பாட்டர் பதிவு செய்தவர்களை அழைத்து ஒரு வினாடிவினா நிகழ்ச்சியும் நடத்தி மேலும் பிரபலப் படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான் எனது வேலைப்பளு கூடி கடைப்பக்கமே போக முடியாமல் இருந்தது. அவர்களும் அறுநூற்று எழுபது ரூபாய் என்று விலை நிர்ணயித்து முன்பதிவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹாரி பாட்டர் வெறி பிடித்து தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்ல முடியாமல் இருந்த பொழுது ஒரு நண்பர் உதவிக்கு வந்தார். அவரது நண்பரின் அலுவலகம் Premire புத்தகக் கடைக்கு மிக அருவில். அவரை அனுப்பி அங்கே முன்பதிவு செய்து ரசீதை வாங்கித் தந்தார். வாழ்க அந்த நண்பர்கள்.

புத்தக வெளியீட்டுக்கு முதல்நாள் சரியான தூக்கமில்லை. பாலும் கசந்ததடி. படுக்கை நொந்ததடி கதைதான். காலையிலேயே குளித்து எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் ரசீதைக் காட்டி புத்தகத்தை கையில் வாங்கியதும் ஒரு மகிழ்ச்சி. அடடா! எப்படிச் சொல்வது அதை.

ஆனால் அன்றைக்கும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பகல் பொழுதில் படிக்க முடியவில்லை. மாலையில் கொஞ்ச நேரம் படித்தால்....திடீரென நண்பர்கள் வந்து விட்டார்கள். அன்றைய பொழுது முடிந்தது.

ஞாயிற்றுக் கிழமை புதிதாக தாயாகியிருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயே மாலை வரை பொழுது போய் விட்டது. பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்சம் படித்தேன். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக பக்கத்திலிருந்த ஜீவன் பீமா நகரிலுள்ள தோசா ஸ்டாப் என்ற கடைக்குச் சென்று சாப்பிட்டோம். கிளம்பும் பொழுது மழை பிடித்துக் கொண்டது. மழை விட்டு வீட்டுக்குப் போய் கொஞ்சம் படிக்கையிலேயே அலுப்பில் கண்ணயர்ந்து போனேன்.

அலுவலகம் வந்தால் e-copy மெயில்களில் தவழத் தொடங்கியிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு வேலையைப் பார்த்தேன். அதற்குள் வலையில் விமர்சனங்களும் கதையில் வரும் ரகசிய விவரங்களும் வந்திருந்தன. நல்ல வேளையாக அவைகளை முழுமையாக படிக்கவில்லை. மீனாக்ஸ் அவரது வலைப்பூவில் பிறகு படிக்கிறேன் என்று பதிவிட்டேன். அதற்குள் டோண்டுவின் வலைப்பூவில் முதல் வரியிலேயே மிகப் பெரிய ரகசியத்தைப் போட்டுடைத்திருந்தார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் பெரும்பாலும் விவரம் தெரிந்து போனது. இரண்டு நாட்கள் என்பது அதிகம். என்னைப் போன்ற அபாக்யவாதிகளும் இருக்கிறார்களே. திங்கள் இரவு மூன்று முப்பதுக்குத் தூங்கினேன். செவ்வாய் இரவு (புதன் காலை) ஐந்து முப்பதுக்கு புத்தகத்தை முடித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...

புத்தகம் நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு திருப்பங்களை நான் எதிர் பார்த்திருந்தேன். அவைகள் அப்படியே பலித்திருந்தன. Half-blood Prince யாரென்ற எனது ஊகம் மிகச் சரியாகவே இருந்தது. அதேபோல் இறந்து போவார் என்று நான் நினைத்திருந்த பாத்திரமே இறந்து போனது. அதைத்தான் டோண்டு சொல்லியிருந்தாலும், எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிறையவே இருந்ததால், புத்தகத்தை விறுவிறுப்பாகவே படிக்க முடிந்தது.

முடிக்கும் பொழுது மனதில் ஒரு இறுக்கம் பரவுவது உண்மைதான். ஆனால் இப்பொழுது கதை மிகச் சரியான பாதையில் போவதாகத் தோன்றுகிறது. அடுத்த புத்தகமே கடைசி புத்தகம். இப்பொழுது பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. அடுத்த புத்தகத்தில் எப்படி முடிகிறது என்று பார்க்கலாம். இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஹாரி ஓம் பாட்டராய நமஹ. கதையில் வரும் Time Turner (காலத்தின் முன்னும் பின்னும் செல்ல வைக்கும் மிகச் சிறிய கருவி ) இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் போய் அடுத்த புத்தகத்தையும் படித்திருக்கலாம். எல்லாம் வல்ல ஹாரிப் பெருமான் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, July 11, 2005

என் கொங்கை நின் அன்பர்

என் கொங்கை நின் அன்பர்


கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!

வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?

வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.

திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.

எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.

சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.

ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.

உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.

நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!

இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.

நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.

உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.

நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.

"எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க"

இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?

சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.

"எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.

இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?

சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.

அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.

அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.

பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?

நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.

எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.

அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.

வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.

புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.

சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.

"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.

அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.

பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!

அன்புடன்,
கோ.இராகவன்