Monday, August 14, 2006

சென்னையில் பரமார்த்த குரு

பரமார்ந்த குரு சென்னைக்கு வருகிறார். ஆம். வருகின்ற ஞாயிறு, அதாவது ஆகஸ்டு மாதம் 20ம் தேதி 2006ம் ஆண்டு.

ஆமாம். நம்புங்கள். தன்னுடைய சீடர்களோடு கும்மாளம் போட்டு நம்மையும் மகிழ்விக்க வருகிறார். அதுவும் இரண்டு முறை.

கூத்துப்பட்டறை எல்லாருக்கும் தெரியும். அவர்கள் பொன்னியின் செல்வனை மேடை வடிவமாக்கியவர்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருந்து கொண்டு இதெல்லாம் பத்திரிகையில் படிப்பதோடு முடிந்து போனது. அப்படியிருக்க இந்த மூன்று மாத சென்னைப் பயணத்தில் இரண்டு முறை மேடைக் கச்சேரியில் திரையிசை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறை பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியாது. இரண்டாம் முறை பி.சுசீலா அவர்களின் கச்சேரி. காமராஜர் அரங்கத்தில். அதுவும் முதல் வரிசையில்.

நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு landmark கடையில் வாயிலில்தான் பரமார்த்த குருவுக்கான விளம்பரத்தைக் கண்டேன். இந்தக் கடைகளுக்குள் செல்லும் முன் பைகளை வெளியே ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அங்குதான் அந்த விளம்பரம் கண்டேன். பரமார்த்த குரு நாடகத்தைக் கூத்துப் பட்டறையினர் அரங்கேற்றம் செய்யப் போவதை.

சிறுவயதில் பலமுறை படித்துப் படித்து ரசித்துக் கும்மாளமும் கும்மரிச்சமும் போட்ட பரமார்த்த குருவின் கதைகளை நாடக வடிவில் பார்க்கக் கிடைக்கிறது என்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

மாலை மூன்று முப்பதுக்கும் ஏழு முப்பதுக்கும் என இரண்டு அரங்கேற்றங்கள். Alliance Francieயில் நடக்கப் போகிறது. நூறு ரூபாய்க் கட்டணம். ஆனால் நல்ல தரமான பொழுதுபோக்காக இருக்கும் என நம்புகிறேன். அதைப் பார்த்ததுமே நானும் எனது நண்பனும் அங்கு செல்வதாக முடிவு செய்து விட்டோம். ஆனால் இன்னும் நுழைவுச் சீட்டு வாங்கவில்லை. ஏனென்றால் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான். விரைவில் முடிவு செய்து நாடகம் பார்ப்போம். பார்த்து விட்டு அது பற்றி பதிவும் போடுகிறேன்.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிதான் இந்தப் பதிவு. நீங்கள் யாராவது வருகிறீர்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

17 comments:

said...

பரமார்த்த குரு கதைகள் எனக்கும்பிடிக்கும். நானும் வரவா? முடிஞ்சா எனக்கு
ஒரு 'குதிரை முட்டை' எடுத்து வையுங்க:-))))

said...

// துளசி கோபால் said...
பரமார்த்த குரு கதைகள் எனக்கும்பிடிக்கும். நானும் வரவா? முடிஞ்சா எனக்கு
ஒரு 'குதிரை முட்டை' எடுத்து வையுங்க:-)))) //

வாங்க வாங்க. நேத்துதான் பாத்தேன். ஒங்களுக்கும் ஒரு டிக்கெட்டு வாங்கீரவா?

போஸ்டர்ல குதிரை படமும் அதப் பிடிச்சு தொங்குற குருவோட படமும் இருந்துச்சு. அனேகமா குதிரை முட்டைக் கதை அதுல இருக்கனும்னு நெனைக்கிறேன்.

பரமார்த்த குரு கதைகள் புத்தகம் கெடச்சா வாங்கனும்.

(i tried to edit this comment to check whether it works or not - gragavan)

said...

ஆஹா!

பரமார்த்த குரு என்றதும் எனது முந்தைய பதிவுகள் நினைவுக்கு வந்தது.

500ருபாய் இன்னும் மறந்திருக்க மாட்டீங்க தானே.

அப்புறம் என்னிடம் பரமார்த்த குரு கதை தொகுப்பு இருக்குது, அனுப்பி வைக்கிறேன்.

said...

இராகவன்,

//நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன்.//

ஈர்க்கை = ?

பரமார்ந்த குரு கதை என்பது இது வரை நான் அறியாதது. எப்படியான கதை? புராணக் கதையா? சரி எப்படியிருப்பினும், நிகழ்ச்சியை வீடியோவில் பதிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமாயின் முயற்சி செய்யுங்கள்.

said...

// பரஞ்சோதி said...
ஆஹா!

பரமார்த்த குரு என்றதும் எனது முந்தைய பதிவுகள் நினைவுக்கு வந்தது.

500ருபாய் இன்னும் மறந்திருக்க மாட்டீங்க தானே. //

இன்னமும் அந்த ஐநூறு ரூவாய மறக்கலையா! ஆகா!

// அப்புறம் என்னிடம் பரமார்த்த குரு கதை தொகுப்பு இருக்குது, அனுப்பி வைக்கிறேன். //

அனுப்பு அனுப்பு நானும் ரொம்ப நாள் கழிச்சிப் படிச்சி சந்தோசப் பட்டுக்கிறேன்.

said...

// வெற்றி said...
இராகவன்,

//நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன்.//

ஈர்க்கை = ? //

சென்னையின் புதிய ஈர்க்கைன்னா chennai's latest attraction ஹி ஹி எல்லாரையும் ஈர்க்குதுல்ல. அதான். தப்புங்களா?

// பரமார்ந்த குரு கதை என்பது இது வரை நான் அறியாதது. எப்படியான கதை? புராணக் கதையா? சரி எப்படியிருப்பினும், நிகழ்ச்சியை வீடியோவில் பதிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமாயின் முயற்சி செய்யுங்கள். //

புராணக்கதையில்லை வெற்றி. பரமார்த்த குரு என்பவரைப் பற்றியும் அவரது முட்டாள் சீடர்களைப் பற்றியும் உள்ள நகைச்சுவைக் கதைகளே பரமார்த்த குரு கதைகள். மிகவும் சுவையானவை. கிடைத்தால் படித்துப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.

said...

ராகவன் நானும் மகனும் நேற்று அங்கே தான் வந்தோம். பார்வைகள் வேற. பார்ப்பதும் வேறு.

குதிரை,வால்,குரு யாரையும் பார்க்கவில்லை.

அல்லயன்ஸ் fரான்ஸிலா.?
ஹிக்கின் பாதம்சில் பரமார்த்த குரு கதைகள் பார்த்தேன்.

said...

// valli said...
ராகவன் நானும் மகனும் நேற்று அங்கே தான் வந்தோம். பார்வைகள் வேற. பார்ப்பதும் வேறு. //

வந்திருந்தீங்களா!!!!!! கடையெல்லாம் முடிச்சிட்டு மழை கொட்டுதுன்னு அங்கதான் உக்காந்திருந்தோம்.

உண்மைதான் வள்ளி. எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை குணங்கள் உண்டு என்ற கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அதே போல எத்தனை கண்கள் உண்டோ அத்தனை பார்வைகள் உண்டு போலும்.

// குதிரை,வால்,குரு யாரையும் பார்க்கவில்லை. //

என்னங்க இது...பை வைக்கிற எடத்துல ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தாங்களே.

// அல்லயன்ஸ் fரான்ஸிலா.?
ஹிக்கின் பாதம்சில் பரமார்த்த குரு கதைகள் பார்த்தேன். //

அப்ப வாங்கீர வேண்டியதுதான். நேத்து மூனு புக் வாங்குனேன்.
1. SHE by Rider Haggard
2. Alice in wonderland and Through the looking glass by lewis carroll
3. Literary lapses and Nonsense Novels by Stephen leacock.

அப்புறம் எனக்குப் பிடிச்ச திருப்புகழ் மாலை. :-)

said...

ராகவன்,

பகல் காட்சிக்கு போயிருங்க. அன்னைக்கி சாயந்தரம் நம்ம மீட் இருக்கே.

said...

பரமார்த்த குரு பார்த்த கையோட போண்டா டிஃபனா/
நாங்களெலாம் வரணும்னா
ஒரு ப்ளேட்டுக்கு
அரைக்கிலொ பாதாம் அலவா, ஆறு மெது வடை,
நெய் ரொஸ்ட், காஷ்யூ பக்கோடா.
எல்லாம் உண்டானால் வர யோசிக்கலாம்.

said...

ஹூம்.நல்லா இருங்கைய்யா.

ஆமா..துர்தர்ஷனில் போட்ட பரமார்த்த குரு கதைகள் சீரியலைப் பார்த்திருக்கீங்களா???

பெங்களூரில உக்கார்ந்திகிட்டு இந்த மாதிரி கொசுவர்த்தி தான் பத்த வைக்க முடியும்....

said...

// ஒரு ப்ளேட்டுக்கு
அரைக்கிலொ பாதாம் அலவா, ஆறு மெது வடை,
நெய் ரொஸ்ட், காஷ்யூ பக்கோடா. //

போதுமா மனு. இத்தனையுந் தின்னா வயிறு என்னத்துக்கு ஆகுறது....

said...

// சுதர்சன்.கோபால் said...
ஹூம்.நல்லா இருங்கைய்யா. //

நன்றி நன்றி. நீங்க சொன்னது போலவே நல்லாயிருந்திருவோம்

// ஆமா..துர்தர்ஷனில் போட்ட பரமார்த்த குரு கதைகள் சீரியலைப் பார்த்திருக்கீங்களா??? //

பாத்திருக்கேனே...நல்லாப் பாத்திருக்கேனே....குண்டு கல்யாணம் கூட அதுல இருக்காரு. குதிர முட்ட பிடிப்பாரு.

// பெங்களூரில உக்கார்ந்திகிட்டு இந்த மாதிரி கொசுவர்த்தி தான் பத்த வைக்க முடியும்.... //

அடுத்த மாசத்துல இருந்து அதுதான் என்னோட நெலமையும். வருத்தப்படாதீங்க. பெங்களூருலயும் நல்ல நாடகக் குழுக்கள் இருக்கு. குறிப்பா ரங்க ஷங்கரா....அருந்ததி நாக் அவர்கள் கண்காணிப்பில் (மின்சாரக் கனவு படத்தில் nunஆக வருவாரே) உள்ளது. அவர்கள் சிறந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். கண்டிப்பாகப் போகலாம். அதே போல பெங்களூர் AF-லும் நல்ல நாடகங்கள் காணக் கிடைக்கின்றன.

said...

இராகவன். இந்தப் பதிவில் எனை ஈர்த்த ஒரு சொல் இந்த 'ஈர்க்கை'. முதலில் அந்தச் சொல்லைப் படித்தவுடன் கொஞ்சம் தடுமாறினேன். ஈர்க்கை என்றால் என்ன? இரு கையா? ஈர் கையா? என்றெல்ல்லாம் ஒரு நொடி தயங்கி பின்னர் நொடியில் புரிந்தது. ஈர்க்குமிடம். :-) நல்ல சொல். அடுத்த 'சொல் ஒரு சொல்' பதிவாய் போடலாம்.

said...

பரமார்த்த குரு கதைகளை வீரமாமுனிவர் எழுதியிருக்கிறார்.. இவர் உண்மை பெயர் 'பெஸ்கி'. ஒரு கிறித்துவ மிசனரி பாதிரியார்.

இந்து மடாதிபதிகளை முட்டாள்களாகக் காட்ட இப்படி எழுதியிருக்கிறார் என்பது சுஜாதா எழுதிய கருத்து. ஓரளவு அந்த நோக்கத்திலேயே எழுதப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இந்த அரசியலை நீக்கிவிட்டு அதிலுள்ல நகைச்சுவையை எந்நாளும் இரசிக்கலாம்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். இந்தப் பதிவில் எனை ஈர்த்த ஒரு சொல் இந்த 'ஈர்க்கை'. முதலில் அந்தச் சொல்லைப் படித்தவுடன் கொஞ்சம் தடுமாறினேன். ஈர்க்கை என்றால் என்ன? இரு கையா? ஈர் கையா? என்றெல்ல்லாம் ஒரு நொடி தயங்கி பின்னர் நொடியில் புரிந்தது. ஈர்க்குமிடம். :-) நல்ல சொல். அடுத்த 'சொல் ஒரு சொல்' பதிவாய் போடலாம். //

ஆமாம் குமரன். அந்தப் பொருளில்தான் எழுதினேன். நீங்களும் பிடித்துக் கொண்டீர்கள். அடுத்த சொல் ஒரு சொல்...ம்ம்ம்...எழுதனுமே...

said...

// சிறில் Alex said...
பரமார்த்த குரு கதைகளை வீரமாமுனிவர் எழுதியிருக்கிறார்.. இவர் உண்மை பெயர் 'பெஸ்கி'. ஒரு கிறித்துவ மிசனரி பாதிரியார். //

சிறில் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. வீரமாமுனிவரையும் தேம்பாவணியையும் இலக்கிய ஆர்வலர்கள் மறக்க முடியாது. "குகை செய் இன்பெழக் கோலமிட்டொத்ததே" என்ற வரி இன்னும் அழியாமல் பதிந்திருக்கிறது என் மனதில்.

ஆனால் தமிழாராய்ச்சியாளர்களில் பலர் தேம்பாவணியை வீரமாமுனிவர் எழுதியிருப்பாரா என்று ஐயம் எழுப்பியிருக்கிறார்கள். காரணங்களோடுதான். சுப்ரதீபக்கவிராயரிடம் தமிழ் கற்றார் பெஸ்கி. அந்தச் சுப்ரதீபக் கவிராயர் எழுதிய பிரச்சனைக்குரிய நூல் "கூளப்ப நாயக்கன் கதை". அவர்தான் தேம்பாவணியை எழுதியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். இன்னும் முடிவு செய்யவில்லை. இதே போல தமிழாராய்ச்சியாளர்கள் மறுத்துள்ள மற்றொன்று இளங்கோவடிகள் சமணர் அல்ல என்பது. சாத்தனார் பவுத்தர் என்று ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஆதாரத்தோடு இளங்கோவடிகள் சைவர் என்று நிரூபித்துள்ளனர். சிலப்பதிகாரம் குறித்து பல புத்தகங்களை வாங்கிப் படித்த பொழுது நான் தெரிந்து கொண்டது இது. அடியார்க்கு நல்லாரிடமிருந்து தொடங்குகிறது இது.

// இந்து மடாதிபதிகளை முட்டாள்களாகக் காட்ட இப்படி எழுதியிருக்கிறார் என்பது சுஜாதா எழுதிய கருத்து. ஓரளவு அந்த நோக்கத்திலேயே எழுதப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. //

இதுவும் எவ்வளவு ஏற்புடையது என்று தெரியவில்லை. சுஜாதாவின் சமீபத்திய சங்க இலக்கியப் பங்களிப்பு சிலப்பதிகாரம். அதில் அவர் குறிப்பிட்டுள்ள பல கருத்துகளோடு நான் ஒத்துப் போவதில்லை (பல தமிழறிஞர்களும் கூட. வைரமுத்து அதை விழா மேடையிலேயே சொன்னார்.)

பரமார்த்த குரு கதைகள் எழுதாக் கதைகள். அவைகளை பெஸ்கி உருவாக்கியிருப்பது ஐயம்தான் என்று எனக்குப் படுகிறது.

// இந்த அரசியலை நீக்கிவிட்டு அதிலுள்ல நகைச்சுவையை எந்நாளும் இரசிக்கலாம். //

நிச்சயமாக. பரமார்த்த குரு கதைகள் யாரையும் புண்படுத்தும் குற்றம் சொல்லும் கதைகள் அல்ல என்பது என் கருத்து. மிகவும் சுவையான அருமையான கதைகள்.