Monday, November 06, 2006

02. மாட்டுத்தாவணி மகாத்மியம்

முதல் பாகத்தை இங்கே படிக்கவும்.

தலைப்பு வைக்கும் போது கேடிசி பிஆர்சி தூத்துக்குடீன்னு ஏன் வெச்சிருக்கேன்னு மொதல் பதிவுல சொல்லலையே. இப்பச் சொல்லீர்ரேன்.

கேடிசி = கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன். தூத்துக்குடி திருநவேலி மாவட்டத்துக்காரங்களுக்கு நல்லா நினைவிருக்கும். நாகர்கோயில்காரங்களும் கண்டிப்பா பாத்திருப்பாங்க.

பிஆர்சி = பாண்டியன் ரோட்வேஸ் கார்ப்பரேஷன். இது மதுர மாவட்டம். விருதுநகரு மாவட்டத்துக்கும் இதுதான். ஆகையால தெக்கில இருக்குறவங்களுக்கு இந்த ரெண்டுமே கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இப்பல்லாம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்தானே. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான்.

இந்த வண்டிகள்ள அவங்கவங்களுக்கு ஒரு நிறத்துல ஓட்டுன காலங்களும் உண்டு. பிஆர்சின்னா பச்ச வண்டி. கேடிசின்னா காவி வண்டி. சென்னையில பல்லவன் செவப்பு வண்டி. இப்படி இருந்தது. இப்ப எல்லாம் ஒன்னாயிருச்சு. ரொம்ப நாள் கழிச்சுத் தூத்துக்குடிக்குப் போனதால பழைய நெனைவுகளுக்குத் தக்க பழைய பேர்களப் போட்டுக்கிட்டேன். :-) அதையும் நம்ம நண்பர்கள் ஜோவும் தாணுவும் கண்டுபிடிச்சிட்டாங்களே!

சரி. நம்ம கதைக்கு வருவோம். விடியக்காலைல ரெண்டரைக்கு செல்பேசி எழுப்பி விட்டது. வாடிபட்டிய நெருங்கீருந்தோம். பேரப் பாத்ததுமே சிங்காரவேலன்ல "வாடிப்பட்டி வம்சம்"னு கமல் பாடுறது நினைவுக்கு வந்துச்சு. வெளிய நல்லா மழ பேஞ்சிருந்தது தெரிஞ்சது. அதென்னவோ தமிழ் நாட்டுல மழ பேஞ்சா ஒரு மகிழ்ச்சிதான். பஸ்சுல கூட வந்தவரும் மதுரைல எறங்கனுமாம். அவரு டிரைவர் கிட்ட போயி வண்டிய மாட்டுத்தாவணிக்கு விடச்சொல்லிக் கேட்டாரு.

நாங்க உக்காந்திருந்தது கடைசி வரிசை. இருந்தாலும் டிரைவரு சொன்னது காதுல விழுந்தது. "டிரைவருக்குப் பதிலா நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன்"னு சொன்ன கண்டெக்டருதான் அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது. ஆனா பாருங்க......டிரைவர்னா நாய் மாதிரி இருக்கனும்னு அவரு தப்பா நெனைச்சிருக்காரு போல. "நீங்க இப்பிடிக் கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒங்கள ஏத்திரூக்கவே மாட்டேன்"ங்குற கொஞ்சம் கூடுதலான மரியாதை(!)யோடு குலைச்சாரு....சேச்சே.....சொன்னாரு. கடைசியில பெரிய மனசு வெச்சி ஒருவழியா எங்களையெல்லாம் ஆரப்பாளையத்துல ரோட்டு மேலயே எறக்கி விடச் சம்மதிச்சாரு. "என்ன தாராள மனசு. இவருக்கு இருவது ரூவா குடுத்திருந்தா மாட்டுத்தாவணிக்கே போயிருப்பாருன்னு யாரோ கிண்டலடிச்சாங்க." குடுத்திருக்கலாமோ!!!!!

நான் ஆரப்பாளையத்துல எறங்காம அந்த வண்டியிலயே திருநவேலி போயிருந்தா அங்கிருந்து முக்கா மணி நேரத்துல தூத்துக்குடி போயிருந்திருக்கலாம். ஆனா விதி யார விட்டது?

ஆரப்பாளையம் மெயிண்ரோட்டுல எறங்கி அப்படியே உள்ள நடந்தா ஆரப்பாளையம் பேருந்து நெலையம். இப்பல்லாம் நாட்டுல நெறைய இலவசங்களாகிப் போச்சு. அதுலயும் நிவாரண நிதிகளப் பத்திச் சொல்லவே வேண்டாம். பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக் கூட்டம். நிக்க ஒதுங்க எடமில்லை. மாட்டுத்தாவணிக்குப் போற வண்டியோ அந்நேரத்துக்கே பொங்கலோ பொங்கல்னு பொங்கி வழியுது. தீபாவளிக்குப் பொங்கல். என்ன செய்றது? ஆட்டோக்காரனோ எம்பது ரூவா கேக்குறான். அன்னைக்குத்தான வாழ்வு. நாங்கூட போயிரலாமோன்னு நெனச்சேன். ஆனா கூட வந்தவங்க விரும்பலை. சரீன்னு திறமையெல்லாம் காட்டி நாங்களும் பஸ்சுக்குள்ள எங்களத் திணிச்சிக்கிட்டோம்.

திடீர்னு வழியில டிரைவரு "படியில இருக்குறவங்க உள்ள நெருக்கிக்கிங்க. வெளிய இருக்காதீங்க"ன்னு சொன்னாரு. காரணத்தையும் அவரே சொன்னாரு. ஒரு குறுகலான பாலம். ஒரு பஸ்தான் போக முடியும். படியில நின்னு வெளியில தொங்குனா கண்டிப்பா எங்கையாவது ஏதாவது இழுத்து வெச்சிரும். இதுக்கு முன்னாடி அப்படி ஆயிருக்கும் போல. அதான் அவரும் அறிவுருத்துனாரு. நல்லாயிருக்கனும் அந்த டிரைவரு.

ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா. அவ்வளவு கூட்டம். தூத்துக்குடி பஸ் நிக்கிற எடத்துக்குப் போனா அங்க எந்த பஸ்சும் இல்லை. நாகர்கோயில், திருநவேலி, ராசபாளையம், செங்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், தேனி, கோட்டூர் (இந்த ஊரு சாத்தூர்ல இருந்து இருக்கங்குடி வழியா போனா வர்ர ரொம்ப ரொம்ப சின்ன ஊரு) அப்படீன்னு எல்லா ஊருக்கும் வண்டிக வருது. போகுது. தூத்துக்குடி அரவத்தையே காணம்.

"ஏண்டி ஒங்கூரு வண்டி இப்பிடிக் கழுத்தறுக்குது" ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. ஒருத்தி தூத்துக்குடி. இன்னொருத்தி வேற ஊரு போல. இவள வண்டியேத்தீட்டுப் போகலாம்னு அவ காத்திருந்தான்னு நெனைக்கிறேன். "பேசாம அருப்புக்கோட்டைக்குப் போறியா?". அத விட வேற வினையே வேண்டாம்னு நெனச்சேன். நல்லவேள அந்தப் பொண்ணும் அந்த யோசனைய ஏத்துக்கலை. தூத்துக்குடி மக்கள்ளாம் இங்குட்டும் அங்குட்டும் திரும்பித் திரும்பிப் பாக்காங்க. ஒவ்வொரு பக்கமும் வர்ர வண்டியெல்லாம் எந்தூருன்னு பாக்காங்க. நானுந்தான்.

அங்க ஒரு கடைல, "அண்ணே தூத்துடி வண்டி எத்தன மணிக்கு"ன்னு கேட்டேன். அவரும் ஒடனே, "ஏழு மணிக்கு"ன்னு சொல்லீட்டு டீயாத்துறத தொடர்ந்தாரு. ஆத்துன டீயில ஜீனிக்குப் பதிலா என்னையப் போட்டு ஆத்துன நெலமை எனக்கு. ஏழு மணிக்கு இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கே. அப்ப பத்து மணிக்குத்தானா தூத்துடின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசாம கோயில்பட்டி போயிரலாம்னு நெனச்சேன். திருநவேலி நாகர்கோயில் போற வண்டியெல்லாம் கோயில்பட்டி வழியாப் போகும். கோயில்பட்டியில எறங்குனா அங்கிருந்து ஒன்னேகால் மணி நேரந்தான் தூத்துக்குடி.

அப்படியே வருத்தத்தோட அந்த வண்டிங்க வர்ர பக்கமாப் போனேன். காலை நேரம். குளிரு வேற. அவசரமா ஒன்றாம் எண்ணுக்குப் போக அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்துக்குள்ள தெரியாம நொழைஞ்சிட்டேன். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னொரு வாட்டி அதுக்குள்ள நுழையனும்னா நீல் ஆம்ஸ்ட்ராங் கிட்ட டிரஸ் வாங்கீட்டு வந்துதான் நொழையனுங்குற மாதிரி இருந்துச்சு. என்ன செய்ய...ஆத்திரத்தைத்தான அடக்கலாம்........

இப்படி செஞ்சிட்டியே முருகான்னு வெளிய வந்து பாத்தா அங்க திருச்செந்தூர் வண்டி நின்னது. ஆனா டிரைவரும் கண்டெக்டரும் எறங்கீட்டாங்க. கண்டிப்பா வண்டி தூத்துக்குடிக்குப் போகும்ன்னு டிரைவர்கிட்ட உறுதி படுத்திக்கிட்டேன். அப்படியே முருகனே வண்டியோட நின்ன பூரிப்பு எனக்கு. உக்கார எடமில்லை. இருக்கட்டும். அதுனால என்ன. நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன். அளவுக்கு மீறி ஆசப்பட்ட ஆம்பளையும் அளவுக்கு மீறி கோவப் பட்ட பொம்பளையும் உருப்பட்டதில்லைன்னு ஏதோ சினிமாவுல எல்லாம் சொல்றாங்களாம். சினிமாவுலதான ரொம்ப வருடங்களா கதாநாயகி கையப் பிசுக்கிக்கிட்டே கதாநாயகர்கள் நல்ல கருத்தெல்லாம் சொல்றாங்க. அதுனால நானும் இந்த உதவி செஞ்சதே போதும்னு முருகனுக்கு நன்றி சொல்லீட்டு ஏறி நின்னேன்.

அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........

21 comments:

said...

அருமையா எழுதிருக்கீங்க ராகவன்!

//அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........//

போயிருந்தீங்கன்னா உங்க படம் ப்ளாக்ல வந்துருக்குமாங்குறேன்?
:)

said...

அப்ப மருத வலைப்ப்திவாளர் சந்திப்பு/ அது ரிடர்ண் வரும் போதா?

said...

படிச்ச உடனே எனக்கே கேடிசில போய்ட்டு வந்த மாதிரி இருக்கு...

தை மாசத்துல எனக்கும் இது போல அனுபவங்கள் உண்டு... திட்டீட்டே போவேன்..

said...

//தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர் அந்த கண்டெக்டர்னு அப்பதான் தெரிஞ்சது.//

ஹா ஹா ஹா :))

ரொம்ப கஷ்டப்பட்டு போயிருக்கீங்க போலருக்கு!!

அந்தளவுக்கு கஷ்ட்டப்படலன்னா எங்களுக்கு இந்த அருமையான பதிவு கிடைச்சிருக்காது!
சுவையான பதிவு :))

said...

எங்க ஏரியா எல்லாம் ஏ.டி.சி (அண்ணா டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்), டி.பி.டி.சி (தந்தை பெரியார்... ஆனா பெரியார் வண்டினுதான் சொல்லுவாங்க)...

இந்த மாதிரி பஸ் அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு... போன வருஷம் நான் விநாயகர் சதூர்த்திக்கு போனப்ப திருவண்ணாமலைல பௌர்ணமி கூட்டத்துல மாட்டிக்கிட்டேன்...

பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள் இருக்கும் ஆனா நான் போனது ராத்திரி நேரம். அதனால பஸ் அதிகம் இல்லை. போய் டிரேன்ஸ்போர்ட் காரவங்ககிட்ட சண்டை போட ஆரம்பிச்சேன். அப்பறம் சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ட்ரான்ஸ்போர்ட் ஆளுங்களை பிடிச்சிகிட்டாங்க. கூட்டம் கூடினவுடனே நான் வெளியே வந்துட்டேன்.

அப்பறம் எனக்காகவே வந்த மாதிரி திருப்பதில இருந்து வந்த வண்டி என்னை காப்பாத்தி ஊருக்கு கூப்பிட்டு போச்சு... ஆனா நான் நல்லா உக்கார்ந்து போனேன்.

திருப்பதி வண்டில பாலாஜிக்கு இடமில்லாமலானு எங்க வீட்டுக்கு போயி டயலாக் அடிச்சேன் ;)

said...

நல்ல எழுதிருக்கீங்க ராகவன்.
மகாத்மியம்-னா என்ன?

//ஆனா போனேனா?//
இன்னும் எவளோ "தொடரும்" போடலாம்னு இருக்கீங்க? :)

said...

எல்லாரும் பயணக்கட்டுரை எழுதுனா அதுல போன இடத்த பத்திதான் எழுதுவாங்க. ஆனா நீங்கதான் உண்மையான பயணக்கட்டுரை எழுதியிருக்கீங்க.

said...

மாடுகளுக்கு 'தாவணி' போட்டாச்சா இல்லியான்னு சொல்லாம
நீர்பாட்டுக்கு பஸ்ஸுலெ ஏறிக்கிட்டா இன்னா அர்த்தம்? :-)))

said...

//பெஞ்ச கொஞ்ச மழைக்கும் தலைதுவட்டும் நிவாரணநிதியா துண்டு குடுக்குறாங்களோன்னு நெனைக்க வைக்கிற அளவுக்குக்//

அச்சச்சோ! கொஞ்ச நாள் முன்னாடி இதச் சொல்லியிருந்தீகனா, எலெக்சன் டையத்துல, மக்களுக்கு மெய்யாலுமே கொடுத்திருப்பாங்களே ஜிரா; இப்படி சொந்தூரு மக்கள கைவுட்டுப்புட்டியளே!

வட்டார வாடையுடன் தூள் கிளப்புறீங்க! "தூத்துடி" ன்னு தான் செல்லமா கூப்பிடுவியளோ?

said...

மகாத்மியம் ஸ்வாரஸ்யமாக போகுது இராகவன். :-)

said...

இராகவன் சார்,

ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க.

எங்க ஊரு சங்கதின்னு இத தான் மொதல்ல படிக்க வந்தேன் பார்த்தா முதல் பதிவுன்னு போட்டத படிகலன்னா தலை - வால் புரியாதுன்னு அத படிச்சிட்டு வந்தேன் நல்ல ஓட்டம் (நடை).

//தாயுமானவர் மாதிரி டிரைவருமானவர்//

நல்ல நகைப்பு. இப்படிதான் அட்(நெருக்)கடி சமயத்தில் மாறுமோ.

//ஆனா விதி யார விட்டது?//

விதி 'வலி'யது

said...

---ஆரப்பாளையத்துல நிவாரணநிதிக் கூட்டம்னா மாட்டுத்தாவணியில நட்சத்திரக் கலைவிழா.---

: ))

ஊர்களுக்கேப் பயணப்பட்ட மாதிரி இருக்கிறது. எங்களையும் தாமதிக்கவிடாமல், கூட்டிச் செல்லவும்.

said...

// //அஞ்சு மணிக்கு வண்டிய எடுத்தாங்க. மூனு மணி நேரம்னா எட்டு மணிக்கெல்லாம் தூத்துக்குடின்னு திரும்ப ஒரு சந்தோசம் எட்டிப் பாத்தது. ஆனா போனேனா?

தொடரும்........//

போயிருந்தீங்கன்னா உங்க படம் ப்ளாக்ல வந்துருக்குமாங்குறேன்?
:) //

கைப்ஸ்...போனாலும் வந்ததே.... ;-)

// இலவசக்கொத்தனார் said...
அப்ப மருத வலைப்ப்திவாளர் சந்திப்பு/ அது ரிடர்ண் வரும் போதா? //

கொத்ஸ்...மருத வேங்க புங்கம் புளியம்னு மரம் பேராச் சொல்றீங்க :-) மருத வலைப்பதிவர் வட்டம் பத்தியும் செய்தி வரும். காத்திருங்கள்.

said...

// நிர்மல் said...
தூத்துக்குடிக்கு நீங்க போறது ஏழு கடல் ஏழு மலை தாண்டி இளவரசியை ராசகுமாரன் பார்க்க போற மாதிரி விறுவிறுப்பா இருக்கு, //

நிர்மல்...நீங்க சொல்றதப் பாக்கைல எனக்கு சின்ன வயசுல படிச்ச ஆமை இளவரசன், நத்தைக் கோட்டை இளவரசி எல்லாம் நினைவுக்கு வருது. அந்த புத்தகமெல்லாம் இப்பக் கெடைக்குமா? :-(

// மங்கை said...
படிச்ச உடனே எனக்கே கேடிசில போய்ட்டு வந்த மாதிரி இருக்கு...

தை மாசத்துல எனக்கும் இது போல அனுபவங்கள் உண்டு... திட்டீட்டே போவேன்.. //

மங்கை, எடுத்து விடுங்க...காத்துக்கிட்டு இருக்கோம்.

// தம்பி said...
ஹா ஹா ஹா :))

ரொம்ப கஷ்டப்பட்டு போயிருக்கீங்க போலருக்கு!!

அந்தளவுக்கு கஷ்ட்டப்படலன்னா எங்களுக்கு இந்த அருமையான பதிவு கிடைச்சிருக்காது!
சுவையான பதிவு :)) //

நன்றி தம்பி. வழக்கமா கண்டெக்டருங்க ஓட்ட மாட்டாங்களாம். ரெண்டு டிரைவருங்க இருப்பாங்களாம். ஆனா இந்த மாதிரி பொழுதுகள்ள கண்டெக்டரு நான் சொன்னது போல டிரைவருமானவர். பெங்களூர்ல சில பஸ்கள்ள கண்டக்டருமானாவரான டிரைவர்களும் உண்டு.

said...

// அப்பறம் எனக்காகவே வந்த மாதிரி திருப்பதில இருந்து வந்த வண்டி என்னை காப்பாத்தி ஊருக்கு கூப்பிட்டு போச்சு... ஆனா நான் நல்லா உக்கார்ந்து போனேன்.

திருப்பதி வண்டில பாலாஜிக்கு இடமில்லாமலானு எங்க வீட்டுக்கு போயி டயலாக் அடிச்சேன் ;) //

பாத்தீங்களா வெட்டி....ஒங்களுக்குத் திருப்பதியில இருந்து வண்டி வந்தா...எனக்குத் திருச்செந்தூருக்கே வண்டி வந்திருக்கு. :-)

// Arunkumar said...
நல்ல எழுதிருக்கீங்க ராகவன்.
மகாத்மியம்-னா என்ன?

//ஆனா போனேனா?//
இன்னும் எவளோ "தொடரும்" போடலாம்னு இருக்கீங்க? :) //

மகாத்மியம்னா என்ன? மகாத்மியம்னா வடமொழியில பெருமைன்னு பொருள். சரிதானான்னு தெரிஞ்சவங்க சொல்வாங்க. மானாவுக்கு மனா வருதேன்னு போட்டுட்டேன். :-)

// அனுசுயா said...
எல்லாரும் பயணக்கட்டுரை எழுதுனா அதுல போன இடத்த பத்திதான் எழுதுவாங்க. ஆனா நீங்கதான் உண்மையான பயணக்கட்டுரை எழுதியிருக்கீங்க. //

தெரிஞ்சதத்தான எழுத முடியும். நாம் பாட்டுக்கு மதுரையைப் பத்தி ஏதாவது சொல்லி வெக்க....அப்புறம் மதுரைக்காரங்கள்ளாம் பெங்களூருக்கு வண்டி கட்டீட்டு வந்து சாத்தீட்டாங்கன்னா....மொட்டைத்தலை தாங்காதம்மா...

said...

// துளசி கோபால் said...
மாடுகளுக்கு 'தாவணி' போட்டாச்சா இல்லியான்னு சொல்லாம
நீர்பாட்டுக்கு பஸ்ஸுலெ ஏறிக்கிட்டா இன்னா அர்த்தம்? :-))) //

நல்ல நியாயமான கேள்விதான் டீச்சர். ஆனா பாருங்க..வேளையோ இருட்டு வேளை...யாராவது ஓட்டிக்கிட்டு போயிட்ட்டான்னு மாட்டை உள்ள வெச்சிருந்தாங்க போலிருக்கு. அதுனால மாட்டுக்குத் தாவணி போட்டாச்ச இல்லையான்னு பார்க்க முடியலை.

// அச்சச்சோ! கொஞ்ச நாள் முன்னாடி இதச் சொல்லியிருந்தீகனா, எலெக்சன் டையத்துல, மக்களுக்கு மெய்யாலுமே கொடுத்திருப்பாங்களே ஜிரா; இப்படி சொந்தூரு மக்கள கைவுட்டுப்புட்டியளே!

வட்டார வாடையுடன் தூள் கிளப்புறீங்க! "தூத்துடி" ன்னு தான் செல்லமா கூப்பிடுவியளோ? //

நீங்க வேற ரவி....எங்கூருக்காரங்களையாவது எலவசத்துல இருந்து காப்பாத்தலாம்னு பாத்தேன். அதிர்ஷ்டப்பார்வை பட்டதால இப்ப தமிழ்மணமே இலவசமே கதீன்னு இருக்கு. :-)

// குமரன் (Kumaran) said...
மகாத்மியம் ஸ்வாரஸ்யமாக போகுது இராகவன். :-) //

நன்றி குமரன்.

// சிவமுருகன் said...
இராகவன் சார்,

ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க.

எங்க ஊரு சங்கதின்னு இத தான் மொதல்ல படிக்க வந்தேன் பார்த்தா முதல் பதிவுன்னு போட்டத படிகலன்னா தலை - வால் புரியாதுன்னு அத படிச்சிட்டு வந்தேன் நல்ல ஓட்டம் (நடை). //

சிவமுருகன்...இந்தத் தொடர்ல ஒங்க ஊரப் பத்தி நெறையச் சொல்ல வேண்டியிருக்கு. சொல்வேன். ஆகையால தொடர்ந்து வாங்க.

// ஊர்களுக்கேப் பயணப்பட்ட மாதிரி இருக்கிறது. எங்களையும் தாமதிக்கவிடாமல், கூட்டிச் செல்லவும். //

கண்டிப்பா பாபா

said...

//பாத்தீங்களா வெட்டி....ஒங்களுக்குத் திருப்பதியில இருந்து வண்டி வந்தா...எனக்குத் திருச்செந்தூருக்கே வண்டி வந்திருக்கு. :-)//

நான் எங்க போகனுமோ அங்க கூப்பிட்டு போறதுக்கு எனக்கு வண்டி வந்துச்சு பாத்தீங்களா :-)

அதுவும் அவ்வளவு கூட்டத்துல எனக்கு உக்கார இடம் கிடைச்சது ஆச்சர்யமில்லையா? ;)

அங்க ஏறனதுல மோத்தமா ஒரு 2, 3 பேருதான் உக்கார்ந்திருப்போம்... பஸ்ல தொங்கிட்டு வந்தவங்க நிறைய பேர் :-(

said...

ஆஹா எப்படி தவற விட்டேன்.

முதல்ல முதல் பாகத்தை படிச்சிட்டு வரேன்

said...

ராகவன் சார்,

ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க

"நின்னுக்கிட்டாவது போக ஒரு வண்டி அனுப்பினானே முருகன்."

பாவம் முருகன் :))

said...

ராகவா!
இந்த விடயங்கள்; அனுபவங்கள் சிறிதும் அறியாவிடினும்; உங்கள் எழுத்துச் சுவையாகவுள்ளது
யோகன் பாரிஸ்

said...
This comment has been removed by a blog administrator.