Monday, March 12, 2007

முருகனும் தெய்வயானையும்

சமீபத்தில் முருகனைப் பற்றி ஹரிஹரன் ஒரு பரபரப்புப் பதிவு போட அதற்குப் பதிலாக விடாதுகருப்பு ஒரு பதிவு போட. பிறகு முத்துக்குமரனின் வடமொழி பற்றிய ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் விழுந்தது. அதை வைத்து முத்துக்குமரன் ஒரு பதிவு போட அதில் அனானி நண்பர் ஒருவர் இந்தப் பிரச்சனை குறித்து என்னுடைய கருத்து என்ன என்று கேட்டிருந்தார்.

முருகனைப் பற்றி தகவல் பரிமாற்றம் என்ற வகையில் நடக்கும் கலந்துரையாடலில் கருத்துச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. அனைத்தும் அறிந்தவன் அல்லன் என்றாலும் தெரிந்ததைச் சொல்வது சரிதானே. அதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன். அதை ஏற்கனவே முத்துக்குமரனின் இந்தப் பதிவில் கூறியிருந்தாலும் சற்று விளக்கமாக இங்கு சொல்கிறேன். அதற்குக் காரணம் அங்கு மற்றொரு நண்பர் கேட்ட கேள்வி. முருகனை வள்ளி தெய்வயானையோடு போற்றி வணங்கும் நான் எனக்கும் முருகனுக்கும் நேர்மையாக கருத்தை எடுத்து வைக்கிறேன். அனைத்தும் முருகன் செயல். "யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

ஜிரா: "எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."

GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP

சரி. பழைய தமிழ்நூல்களைப் பார்த்தால் முருகனையும் வள்ளியையும் மட்டுமே காணமுடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமாக இருந்தாலும் வள்ளியும் முருகனும்தான் வருவார்கள். தெய்வயானையைப் பற்றிய குறிப்பு கிடையாது. தமிழில் முதலில் எழுந்த இறைநூல் திருமுருகாற்றுப்படை என்பார்கள். அதுவுமில்லாமல் ஆற்றுப்படை வீடுகளைத் தொகுத்ததும் அந்த நூல்தான். அந்த நூலில்தான் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சொல்லப்படுகிறது. பலர் பழநிதானே முதற்படை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் கனி கிடைக்காது நின்றது...பிறகு தந்தைக்கு மந்திரம் சொன்னது...பிறகு சூரனை வென்றது..பிறகு தெய்வயானையை மணந்தது...வள்ளியை மணந்தது....இரண்டு மனைவியரோடு நின்றது என்று வரிசையாக நினைப்பார்கள்.

ஆனால் நக்கீரர் மக்களை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவதறாக எடுத்துக்கொண்டது ஆறுவீடுகள். அவைகள் வரிசையாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரும். ஆகையால் இதுதான் சரியான வரிசை. இதில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இப்பொழுது தெய்வயானையை மணம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் திருமுருகாற்றுப்படையில் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே நக்கீரர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆனால் வள்ளியைப் பற்றிய குறிப்பு பெயரோடு உண்டு. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே" என்று குறிப்பிடுகிறார். அதாவது முருகப் பெருமான் குறக்கொடியாம் குலக்கொடி வள்ளியொடு மகிழ்ச்சி தரும் புன்னகை பொலிய அமர்ந்திருக்கிறாராம். வள்ளி என்று சொல்லி அவள் குறத்தி என்ற சொல்லியிருக்கிறார்.

சரி. நண்பர் குறிப்பிடும் ஆறாம் வரிக்கு வருவோம். இது திருப்பரங்குன்றத்திற்கு உரியது. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்பது அந்த வரி. இதற்குப் பொருள் என்ன?

மறு இல் கற்பின் - குற்றமற்ற பண்புடையவளின்
வாணுதல் கணவன் - ஒளிர்பொலி நெற்றி கொண்ட கணவன்

நற்பண்புடைய ஒரு பெண்ணின் கணவன் என்பது அந்த வரிக்கான பொருள். அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சரி. பெயரைக் குறிப்பிடா விட்டாலும் யாருடைய மகள் என்று சொல்லியிருக்கலாமே? வள்ளி என்பவள் குறத்தி என்று விரித்துச் சொன்ன நக்கீரருக்கு தெய்வயானை என்பவள் ஆனை வளர்த்த மகள் என்றோ தேவேந்திரன் மகளென்றோ சொல்லியிருக்கலாமே!

ஒருவேளை நக்கீரருக்குத் தேவேந்திரனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை. "யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்" என்றும் சொல்லி விடுகிறார். அதாவது ஆனை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் முருகனைப் போற்றினான் என்று சொல்ல வருகிறார்.

நண்பர் வி.ஆர்.பி சொல்லியிருப்பது போல கற்பு என்ற சொல்லாடல் தெய்வயானையைக் குறிப்பதாகக் கொண்டால்....ஏன் தெய்வயானையை மட்டும் கற்பு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும்? வள்ளிக்குக் கற்பு கிடையாதா? இவைகளே எனக்கு எழும் கேள்விகள்.

ஆனால் பிற்காலத்தைய நூல்களில் கண்டிப்பாக தெய்வயானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மறுக்க முடியாது. ஆனால் சங்க நூல்களில்? என்னறிவுக்கு எட்டி இல்லை. இன்னொரு தகவல். பிள்ளையாரின் துணையால்தான் முருகன் வள்ளியை மணந்தார் என்ற குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இல்லை.

இவையனைத்தும் எனக்குத் தெரிந்த கருத்துகள். இந்தக் கருத்துக்கு மறுப்புக் கருத்திருந்தால் தெரிந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி

அன்புடன்,
கோ.இராகவன்

43 comments:

said...

ஜிரா சார்,
அப்போ விட்டது சிGappu சொன்னது போல் முருகனின் வப்பாட்டி வள்ளி இல்லையா ?

said...

// அறியாதவன் said...
ஜிரா சார்,
அப்போ விட்டது சிGappu சொன்னது போல் முருகனின் வப்பாட்டி வள்ளி இல்லையா ? //

இல்லை. இல்லை. இல்லை.

said...

ஜிரா,

பதிவுக்கு நன்றி!

said...

அருமையான விளக்கம்.. உரையோடு கிடைக்கும் சங்க இலக்கியங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா.. எனக்கு தெரிந்த சில இணைய பக்கங்களில், மூலம் மட்டுமே உள்ளது.. உரை இல்லை.. நமக்கெல்லாம் உரை இல்லையென்றால் ஒரு வார்த்தையும் புரியாது....

said...

// சிவபாலன் said...
ஜிரா,

பதிவுக்கு நன்றி! //

நன்றி சிவபாலன்

// Nakkiran said...
அருமையான விளக்கம்.. உரையோடு கிடைக்கும் சங்க இலக்கியங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா.. எனக்கு தெரிந்த சில இணைய பக்கங்களில், மூலம் மட்டுமே உள்ளது.. உரை இல்லை.. நமக்கெல்லாம் உரை இல்லையென்றால் ஒரு வார்த்தையும் புரியாது.... //

நன்றி நக்கீரன். பார்த்தீர்களா? பொருள் சொன்னதும் நக்கீரனின் வரிகளுக்குத்தான் :-)

பழைய நூல்களுக்கான உரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது சற்றுக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். டி.நகரில் வடக்கு உஸ்மான் ரோட்டில் முருகன் இட்லிக் கடைக்குப் போகும் பொழுது அதே பக்கத்தில் ஒரு புத்தகக் கடை இருக்கிறது. பெயர் மறந்து விட்டது. அங்கு பலப்பல நூல்களும் உரைகளோடு கிடைக்கும். எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரம் என்றால் வேங்கடசாமி நாட்டார் அவரின் உரையோ, தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தொகுத்த (நச்சினாக்கினியார் உரையும், அரும்பத உரையும்) உரையும் சிறப்பு. சுஜாதாவின் உரையை வாங்கினால்..அவ்வளவுதான்.

said...

இராகவன். நான் உங்கள் கருத்துகளுக்கு மறுப்பு கூற வரவில்லை. ஆனால் இன்னொரு வகையில் இதனை நோக்கலாமோ என்று எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன்.

கற்பு மணம், களவு மணம் என்ற இரு வகையான மணங்களைப் பற்றி தொல்காப்பியரும் மற்ற சங்க நூல்களும் பேசுகின்றனவாமே. அவற்றைப் பற்றிய கருத்து என்ன? அதன் வழி தெய்வயானையை மணந்தது கற்பு மணம் என்றும் வள்ளியை மணந்தது களவு மணம் என்று சங்க கால நூலாகிய திருமுருகாற்றுப்படை குறிக்கலாமல்லவா? என்ன நினைக்கிறீர்கள்?

said...

ஜிரா,

பதிலுக்கு நன்றி.. என் தந்தை ஒரு தமிழாசிரியர்.. எல்லா சங்க இலக்கியங்களையும் வெறும் மூலத்தோடு வாங்கி வைத்து வெறுப்பேற்றுகிறார். கேட்டால் உரையோடு வாங்கி படித்தால் அவருக்கு அதில் சுவையில்லையாம்.. மூலத்தை மட்டும் வாங்கி மூளையை உடைத்துக் கொண்டு படித்தால் தான் நன்றாக இருக்குமாம்.. அதன் பிறகு நான் அந்த புத்தகங்களையே தொடுவதில்லை... :(

said...

நல்ல விளக்கம்.

உங்களை போல தமிழ் தெரியாவிட்டாலும் ஓரளவு லாஜிக்கலாக
பார்த்தால் குன்றுதோறும் குடியிருக்கும் கடவுளுக்கு மலைக்குறத்தி
மனைவி என்பது தான் பொருந்தி வருகிறது.

ஸ்கந்தன் தேவயானை என்பதெல்லாம் கிரேக்க பெயர்கள் என்று முன்பு
ஒருவர் வலை பதிந்திருந்தார்.

said...

நல்ல விளக்கம்..!

சங்க இலக்கியங்களிருந்து புரியும்படி சொன்னதிற்கு நன்றி!

said...

அன்புள்ள ராகவன்,

அருமை அருமை. இப்படித்தான் ஒரு அருமையான நடுநிலையான பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

//அதன் வழி தெய்வயானையை மணந்தது கற்பு மணம் என்றும் வள்ளியை மணந்தது களவு மணம் என்று சங்க கால நூலாகிய திருமுருகாற்றுப்படை குறிக்கலாமல்லவா? என்ன நினைக்கிறீர்கள்?
//

எது கற்பு மணம் என்று பார்ப்பன அடிவருடி நண்பர் குமரனுக்கு தெரியவில்லை போலும். குறத்தி வள்ளியுடன் நடந்தது கற்பு மணம். தெய்வானை என்ற பாப்பாத்தியுடன் நடந்தது களவு மணம். இதுகூட தெரியவில்லை நண்பருக்கு. எது எப்படியாக இருந்தாலும் திராவிடரின் கடவுள் முருகனை தவறாகச் சித்தரித்த பார்ப்புகளுக்கு இந்த பதிவு ஒரு சவுக்கடி.

said...

இந்தப் பதிவைப் படித்ததும் இல்லம் சென்று என்னிடம் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலைப் புரட்டினேன்.

நா. சந்திரசேகரன் என்பவர் திறம்பட எழுதிய நூல் இது.
கங்கை புத்தக நிலையம், வானதி பதிப்பகத்தின் துணையோடு வெளியிட்ட நூல்.

இதில் தெய்வயானை பற்றிய குறிப்புகள் கீழே!

வரி6.
"மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":
குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்.

வரி 175-176
"தா இல் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்":

இடையீடில்லாத அருட்கற்பினது கோட்பாட்டையுடைய தெய்வயானையாருடனே சின்னாள்[சித்தன் வாழ்வென்னும்] ஆவினன்குடி என்னும் திருப்பதியிலே தங்குதலும் உரியன்.

வரி 216
"மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத் தந்து":

மெல்லிய தோள்களையுடைய பலவாகிய மான்பிணைகள் போலும் மெய்தீண்டி விளையாடுதற்குரிய "தெய்வமகளிரோடு" தழுவிக்கொண்டு அவர்கள் களவறிந்து அவர்கட்கு இருப்பிடம் கொடுத்து....

இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. [வரி 100-102]
"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

ஆறுமுகங்களிலே ஒரு முகம் வள்ளியொடு மகிழ்ச்சி பொருந்த இயைந்தாலும், எனச் சொல்லி,

அடுத்து வரும் வரிகளில், பன்னிரு கைகளைப் பற்றிச் சொல்ல வருகையில்,
[வரி 116-117]
"ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட" எனச் சொல்லி
ஒரூ கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய
எனவும் உடன் வருகிறது.

இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.

வாரியார் ஸ்வாமிகள் சொல்லுவது போல, இகம் வள்ளி, பரம் தெய்வயானை.
முகம் வள்ளியைப் பார்க்க கைகள் தெய்வானைக்கு மணமாலை சூடுகிறது.
இகபர விநோதன் அவன் என உணரலாம்.

அடுத்து,
வரி 264-ல்,
"மங்கையர் கணவ"
தெய்வயானையார்க்கும், வள்ளி நாய்ச்சியாருக்கும் கணவனே!
என்னும் பொருள்படவும் பாடுகிறார்.

"யாமோதிய கல்வி அவன் தந்தது" அவன் புகழ் பாடவே!

முருகனருள் முன்னிற்கும்!

said...

//இது தவிர 'வள்ளி' பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. [வரி 100-102]
"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுகப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"//

ஆமாம்யா. வள்ளியைப் பத்தி ஒரே ஒரு இடத்தில்தான் வருது. ஆனா பாடல் முழுதும் தெய்வானை பேருதான் வருது. ஏன்னா தெய்வானை பாப்பார ஜாதி.

//இதன் மூலம், முருகனுக்கு இருமனைவியர், அவர்கள் தெய்வயானையும், வள்ளியும் என்ற கூற்றினை நக்கீரரும் சொல்லியிருக்கிறார் என்பது தெளிவாகும்.
//

எஸ்கே ஐய்யா,

முதலில் முருகனை மணந்தது வள்ளி. அதன்பிறகுதான் தெய்வானை. வரிசையை மாற்றிப்போட்டு உங்கள் பார்ப்பன குலத்துக்கு பெருமை சேர்க்க நினைக்கிறீர்கள்!!!

said...

ஜிரா,

எனக்கு தெரிந்து வள்ளி பின் தெய்வயானை என்று தான் வழக்கில் சொல்கிறோம்.

அதாவது வள்ளிதெய்வயானை என

மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் என்ற நூலிலும் வள்ளி முருகனுக்கு முதல் மனைவி என்று தான் குறிப்பு இருக்கிறது.

ஜிரா,
வள்ளித் திருமணத்தில் தெய்வயானை அருகில் இருந்ததாக குறிப்பு இருக்கிறதா ?

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். நான் உங்கள் கருத்துகளுக்கு மறுப்பு கூற வரவில்லை. ஆனால் இன்னொரு வகையில் இதனை நோக்கலாமோ என்று எனக்குத் தோன்றுவதைக் கூறுகிறேன். //

கண்டிப்பாகச் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்ததுதான் உண்மை என்று வாதிட வரவில்லை நான். இதுதான் எனக்குத் தெரிந்தது என்று சொல்ல வருகிறேன்.

// கற்பு மணம், களவு மணம் என்ற இரு வகையான மணங்களைப் பற்றி தொல்காப்பியரும் மற்ற சங்க நூல்களும் பேசுகின்றனவாமே. அவற்றைப் பற்றிய கருத்து என்ன? //

கற்பும் களவும்.....சிந்திக்க வேண்டிய கேள்வி. இலக்கியத்துக்குள் நிறைய இறங்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இப்பொழுது நேரமில்லை.

// அதன் வழி தெய்வயானையை மணந்தது கற்பு மணம் என்றும் வள்ளியை மணந்தது களவு மணம் என்று சங்க கால நூலாகிய திருமுருகாற்றுப்படை குறிக்கலாமல்லவா? என்ன நினைக்கிறீர்கள்? //

இந்த எண்ணம் முதலிலேயே எனக்கு வந்தது. ஆனால் திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்கையில் முருகனின் திருமணம் என்ற அத்தனை பெரிய நிகழ்ச்சியை இவ்வளவு சுருக்கமாகவா சொல்லியிருப்பார்? வள்ளி திருமணம் என்பது எந்த ஆற்றுப்படை வீட்டிலும் நடக்கவில்லை. கானகத்தில்தான் நடந்தது. ஆனால் கற்பு மணம் திருப்பரங்க்கிரியின் நடந்ததாகச் சொல்லப்படுவது. ஆகையால் குறிப்பிடாமல் போக வாய்ப்புக் குறைவு என நினைக்கிறேன். எஸ்.கே அவர்கள் சில வரிகளைக் கொடுத்துள்ளார்கள். அவைகளை நான் பார்க்க வேண்டும். நீங்களும் பாருங்கள்.

said...

//கற்பும் களவும்.....சிந்திக்க வேண்டிய கேள்வி. இலக்கியத்துக்குள் நிறைய இறங்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இப்பொழுது நேரமில்லை.//

ராகவன் கற்பும் களவும் இலக்கியம் அல்ல. அரசியல் :-)( சிரிப்பான் போடாமலும் இருக்கலாம்). இறைவன் என்று நோக்கினாலும், தமிழரசன் என்று நோக்கினாலும் முருகனுக்கு முதல் துணை குறவள்ளியே.

said...

// Nakkiran said...
ஜிரா,

பதிலுக்கு நன்றி.. என் தந்தை ஒரு தமிழாசிரியர்.. எல்லா சங்க இலக்கியங்களையும் வெறும் மூலத்தோடு வாங்கி வைத்து வெறுப்பேற்றுகிறார். கேட்டால் உரையோடு வாங்கி படித்தால் அவருக்கு அதில் சுவையில்லையாம்.. மூலத்தை மட்டும் வாங்கி மூளையை உடைத்துக் கொண்டு படித்தால் தான் நன்றாக இருக்குமாம்.. அதன் பிறகு நான் அந்த புத்தகங்களையே தொடுவதில்லை... :( //

:-) மூல நூல்களையும் படித்துப் பாருங்கள். கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும் கற்கண்டாக இருக்கும்.


// Anonymous said...
நல்ல விளக்கம்.

உங்களை போல தமிழ் தெரியாவிட்டாலும் ஓரளவு லாஜிக்கலாக
பார்த்தால் குன்றுதோறும் குடியிருக்கும் கடவுளுக்கு மலைக்குறத்தி
மனைவி என்பது தான் பொருந்தி வருகிறது.

ஸ்கந்தன் தேவயானை என்பதெல்லாம் கிரேக்க பெயர்கள் என்று முன்பு
ஒருவர் வலை பதிந்திருந்தார். //

கிரேக்கப் பெயர்கள் என்று சொல்லும் தகவலைப் படித்து விட்டு அது பற்றிக் கருத்து என்ன என்று கேட்டிருந்தார் இராமநாதன். அப்பொழுது கந்தனும் ஸ்கந்தனும் என்று கூட ஒரு பதிவு போட்ட நினைவு.

said...

ராகவன்,

கௌமாரம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் என அன்புடன் வேண்டிக் கோரிக்கை வைக்கிறேன்.

said...

//வள்ளி திருமணம் என்பது எந்த ஆற்றுப்படை வீட்டிலும் நடக்கவில்லை. கானகத்தில்தான் நடந்தது. //

அறுபடைவீட்டில் ஒன்றான பழமுதிர்ச்சோலை இன்றைய 2007லும் மரங்கள் அடர்ந்தும், மரங்களிலெல்லாம் குரங்குகள் துள்ளிவிளயாடும் கானகம் தாங்க!

said...

எஸ்.கே, திருமுருகாற்றுப்படையை மீண்டும் படிக்க வேண்டும். படித்து விட்டு கருத்துச் சொல்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்க. நீங்கள் குறிப்பிடும் ஒருசில கருத்துகளுக்கு விளக்கம் தோன்றியது. ஆனால் நக்கீரரையும் இளங்கோவையும் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டும்.

// தென்றல் said...
நல்ல விளக்கம்..!

சங்க இலக்கியங்களிருந்து புரியும்படி சொன்னதிற்கு நன்றி! //

தென்றல், நான் அறிந்தது மிகமிகக் குறைவு. நினைவிருந்ததைச் சொல்லி விட்டேன். இனிமேல் படித்துத் தெரிந்து கொள்வதையும் சொல்கிறேன். உங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது.

// விடாதுகருப்பு said...
அன்புள்ள ராகவன்,

அருமை அருமை. இப்படித்தான் ஒரு அருமையான நடுநிலையான பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.//

எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டேன். இதனால் எனக்கும் முருகனுக்கும் எந்த நட்டமும் இல்லை என்று நம்புகிறேன்.

said...

// கோவி.கண்ணன் said...
ஜிரா,

எனக்கு தெரிந்து வள்ளி பின் தெய்வயானை என்று தான் வழக்கில் சொல்கிறோம். அதாவது வள்ளிதெய்வயானை என மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் என்ற நூலிலும் வள்ளி முருகனுக்கு முதல் மனைவி என்று தான் குறிப்பு இருக்கிறது. //

இந்த நூலை வாங்க வேண்டுமே. இன்னொரு தகவல்...எனக்குத் தெரிந்து கோயில் ஒழுக்கின்படி திருப்பரங்குன்றம் தவிர மற்ற எல்லா ஊர்களிலும் வள்ளியின் பள்ளியறைக்குத்தான் முருகன் செல்வார்.

// ஜிரா,
வள்ளித் திருமணத்தில் தெய்வயானை அருகில் இருந்ததாக குறிப்பு இருக்கிறதா ? //

இல்லை கோவி. கச்சியப்பரும் அப்படிச் சொல்லவில்லை.

// முத்துகுமரன் said...
ராகவன் கற்பும் களவும் இலக்கியம் அல்ல. அரசியல் :-)( சிரிப்பான் போடாமலும் இருக்கலாம்). இறைவன் என்று நோக்கினாலும், தமிழரசன் என்று நோக்கினாலும் முருகனுக்கு முதல் துணை குறவள்ளியே. //

ஆண்டவன் அரசன் என்று நீங்கள் நம்பினால் அரசன். ஆண்டவன் என்றும் ஆள்பவன் என்று நம்புகிறவர்களுக்குக் கடவுள்.

இலக்கியம் என்று சொல்லக் காரணம்...இலக்கியத்தின் வழியாகத்தான் நமக்குப் பல துப்புகள் கிடைக்கின்றன. ஆகையால்தான் இலக்கியங்கள் என்று சொன்னேன். இலக்கியங்களைப் படிக்காமலேயே எதையும் சொல்ல முடியாதே!

// Hariharan # 03985177737685368452 said...
ராகவன்,

கௌமாரம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் என அன்புடன் வேண்டிக் கோரிக்கை வைக்கிறேன். //

வாங்க ஹரிஹரன் வாங்க. கௌமாரம் பற்றித் தெரிந்தவர்கள் கண்டிப்பாக பதிவு போடலாம். ஆனால் நான்? ஆட்கொண்ட முருகனைத் தெரியும். அவன் மீது பாடப்பட்ட கொஞ்சம் செய்யுட்கள் தெரியும். பிறகு நானெப்படி எழுதுவது? தெரிந்தவர்கள் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

said...

ராகவா!
அப்பனே முருகா" இது தான் என் முருகனைப் பற்றிய அறிதல்; இதற்கு மேல் எனக்குக் கூறத் தெரியாது.
எனினும் உங்கள் தேடல்களும் பரிமாறல்களும் அருமை!! இப்படி ஆரோக்கியமாக தம் தம் கருத்தை வைத்து; விருந்தாக்குங்கள் எங்களுக்கு!!
இதைத் தான் நான் ,தமிழ் மணத்தில் விரும்புகிறேன்.

said...

கற்பு மணம் இருபக்கத்துப் பெற்றோர்களும் பக்கம் இருந்து நடத்தி வைப்பது; களவு மணம் தலைவன் தலைவியை தானே விரும்பிச் சென்று கடிமணம் புரிந்து கொள்வது; இதுவே இலக்கியம் தரும் விளக்கம் - இரண்டுமே முறையான திருமணங்கள் தான். தமிழர் வாழ்வில் இரண்டு வகை திருமணங்களும் நடந்துள்ளதாகத் தான் இலக்கியம் படித்தவர் அறிவார்கள். கற்பு என்பதற்கும் களவு என்பதற்கும் தற்போது இருக்கும் பொருளினை மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு இது புரியாது. ஏதோ வள்ளியைக் குறைத்துச் சொன்னதாகப் பொருள் கொண்டு பார்ப்பனத்தி, பார்ப்பன அடிவருடி என்று திட்டுவார்கள். இந்த விளக்கத்தை இராகவன் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நானோ எஸ்.கே.யோ சொன்னால் நாங்கள் சொன்னோம் என்பதே பலரின் கண்ணை மறைத்துக் கருத்தை எடுத்துக் கொள்ள விடாமல் செய்கிறது.

மேலே சொன்ன விளக்கத்தின் படி இலக்கியம் சொன்ன கற்பு மணம் எது; களவு மணம் எது என்பது புரிந்திருக்கும். களவு மணத்தையே பெரும்பாலும் உயர்த்திப் பேசுகிறது தமிழ் இலக்கியம். என் கருத்தும் அந்த வகையைச் சார்ந்ததே. வள்ளியை எங்கேயும் குறைத்துப் பேசவில்லை. அதே போல் வள்ளி திருமணம் முன்னர் நடந்ததா; குஞ்சரி திருமணம் முதலில் நடந்ததா என்பதைப் பற்றியும் கருத்து கூறவில்லை - ஏன் என்றால் தெரியாது.

இப்போதும் திருமுருகாற்றுப்படையும் மற்ற சங்க இலக்கியங்களும் தெய்வயானையைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. திருமுருகாற்றுப்படையிலிருந்து ஒரு வரியை யாரோ ஒருவர் எடுத்துக் காட்ட அதற்கு இராகவன் அவர் கருத்தைச் சொல்லியிருந்தார்; இது 'இராகவன் பதிவு' என்ற காரணத்தால் இப்படியும் பொருள் கொள்ளலாமா என்று சொன்னேன். அதற்கு தகுந்த மரியாதை கிடைத்தது. மிக்க நன்றி.

said...

குமரன், முதற்கண் என்னை மன்னிக்கவும். அந்த வசைச்சொல் என் கண்களில் இருந்து தப்பி விட்டது. அது உங்கள் மனத்தைப் புண்படுத்தியிருப்பதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன். உங்கள் மன்னிப்பை மட்டுமே இப்பொழுது உங்களிடம் கோர முடிகிறது. இதனால் இனிமேல் என்னுடைய பதிவில் நீங்கள் பின்னூட்டமிடாமல் போவீர்களானால் ஏனென்று கூடக் கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன். :-(

இங்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு, இங்கு தகவல் பரிமாற்றம் என்ற வகையிலேயே நாம் உரையாடுவது நல்லது. தனிநபர் எப்படி என்பதை விட...கருத்தைக் கருத்தாலேயே சந்திக்கலாம். இது என்னுடைய வேண்டுகோள்.

said...

இராகவன்,

நீங்கள் தெய்வயானையைக் குறைத்துப் பேசவில்லை. நானும் எஸ்.கே.யும் வள்ளியைக் குறைத்துப் பேசவில்லை. பெற்றவள் குறமகள் பெற்றவளாமே என்று சஷ்டி கவசத்தை பலமுறை ஓதுபவர்கள் நாம். இதில் இலக்கியத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்ற கருத்துகளை நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இதனை வழக்கமான அரசியலாக மாற்றி ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வது மன வருத்தத்தைத் தருகிறது என்பது உண்மை. அந்த ஏச்சுகளை அனுமதித்த நீங்கள் அதனைக் கண்டிக்கவில்லையே என்பது தான் அப்படி ஒரு தனிமடலை உங்களுக்கு அனுப்பவைத்தது. தங்கள் விளக்கத்திற்கு நன்றி. மன்னிப்பு என்னிடம் கேட்கத் தேவையில்லை. உங்கள் பார்வையிலிருந்து அந்த வசைச்சொல் தப்பியிருக்கும் என்பதை நான் உணர்கிறேன். நீங்கள் கருத்துகளை மட்டுமே பார்க்கிறீர்கள்; அதனால் வசைச்சொல்லைக் கவனிக்கவில்லை. நன்றி.

said...

Hello young man
So you are not convinced. I like that. Young people should always be like that. Always be inquisitive. In Tiruparamkunram (where Murukans marriage with Deivayanaiyar takes place) verse, the consort mentioned is Deivayanaiyar only. As some one correctly pointed out, one for kalavu and one for karpu type of marriage. More over Deivayanaiyar is kiriyaisakthi. See two important actions namely urunar thankuththal and serunar theythal in this verse are aspects of kiriyai sakthi. It is Deivayanaiyar as per all traditional commentaries for Tirumurukatrupadai.
Sorry I don’t know how to type in Tamil.
Thanks
V.R.Palani

said...

I dont know why some people are abusing our Goddess Deivayanaiyar with caste names. Very sad. Very sad really. By the way I have never seen Deivayanaiyars name kept in that caste. But we keep. I am not a Brahmin. My mothers name is Devanai. My daughters name too.
Thanks
VRP

said...

ஜிரா,

இரண்டாவது மனைவி கலாச்சாரமே இப்போது இல்லை ! இதில் பக்தியாளர்களும் கூட முருகனின் மனைவியர் என்று கொள்ளாமல் எவர் முதல் மனைவி என்பதில் பெருமை இருப்பதாக நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நம்ம சரவனபவன் அண்ணாச்சிக்கு கூட இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள் அவருரைடைய முதல் மனைவி பெயர் நிச்சயமாக வள்ளி அம்மை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நமது தமிழ் முருகனுக்கு எந்த மனைவி மூத்தவர் என்பது எனக்கும் பிடிபடவில்லை. :)

இராமகி ஐயா இதற்கு விளக்கம் தருவாரா ? பக்தி இலக்கியம் என்ற அளவில் தெரிந்து கொள்ள ஆசை !

said...

குறமகள் என்று பல இடங்களில் வருகிறது. வள்ளி என்று
பெயரோடு வருகிறது. தெய்வயானை என்று ஏன் பெயர்
வரவில்லை.

'வானர ' மகளிர் - இதை வான் - அரம் என்று
பிரிப்பதா அல்லது குரங்கு மகள் என்று படிப்பதா. ?

:)

அர என்றால் தேவெந்திரனா?

சரி . பாடலின் வரிசையைப் பாருங்கள். வள்ளியொடு உட்கார்ந்திருக்கும்போது
தெய்வயானைக்கு மாலையிட்டாரென்றால் யார் முதல்? வள்ளிதானே?

தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும்போது வள்ளிக்கு மாலையிட்டார்
என்றா வருகிறது?

யார் முதலாக இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால்
செய்தியை திரிக்கக்கூடாது.

said...

//வரி6.
"மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":
குற்றமில்லாத அ[ற]க்கற்பையுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன். //
இந்திரன் பெயரும் இல்லை தெய்வானையின் பெயரும் இல்லை.
இது போல விளக்கம் எழுதினால் பூனையை யானையாக்கலாம்.
யானையை பூனை ஆக்கலாம்.

said...

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்":

நுதல் என்பது நெற்றி என்று பத்தாங்கிளாஸ் படித்தவனுக்கு
கூட தெரியும். மூன்று சுழி 'ண' வை தூக்கிவிட்டு
அதை 'வான்' ஆக்கி தேவேந்திரன் என்று கதை விடலாம்.


//
ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவைச் சூட்ட" எனச் சொல்லி
ஒரூ கையானது தேவருலகத்தில் தேவமகளிராகிய
தெய்வயானையர்க்கு மணமாலையைப் புனைய
எனவும் உடன் வருகிறது.//

வான் அர த்திலிருந்து 'அர' த்தை நைசாக முழுங்கிவிட்டால் இது
வான் மகள் = தேவ மகள் ஆகும்.

உதலுக்கும் அரத்துக்கும் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

இந்த விவாதம் சுவையாக உள்ளது.

said...
This comment has been removed by the author.
said...

நண்பர்களே, இந்தப் பதிவின் நோக்கம் கருத்தியல் வழியாக இலக்கியங்களின் வழியாகச் செய்யும் ஒரு கருத்துப்பரிமாற்றம். ஆகையால் இதில் தனி மனித, சாதீயத் தாக்குதல்கள் வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் பின்னூட்டங்களைத் தவிர்த்து விடுங்கள். புது பிளாகரில் கமெண்ட்டுகளைத் திருத்தும் வழிமுறை இல்லையாம். ஆகையால் உங்கள் முழுமையான ஒத்துழைப்பைக் கோருகிறேன்.

இன்னொரு செய்தி. இங்கு பழைய இலக்கியங்களில் தெய்வயானையைப் பற்றிய குறிப்புகள் உள்ளதா இல்லையா என்பது விவாதம். இதன் வழியாக வள்ளியையோ தெய்வயானையோ குறைத்துச் சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அதில் உடன்பாடும் இல்லை.

// Hariharan # 03985177737685368452 said...
//வள்ளி திருமணம் என்பது எந்த ஆற்றுப்படை வீட்டிலும் நடக்கவில்லை. கானகத்தில்தான் நடந்தது. //

அறுபடைவீட்டில் ஒன்றான பழமுதிர்ச்சோலை இன்றைய 2007லும் மரங்கள் அடர்ந்தும், மரங்களிலெல்லாம் குரங்குகள் துள்ளிவிளயாடும் கானகம் தாங்க! //

ஹரிஹரன், உண்மைதான். பழமுதிர்ச்சோலை இன்னும் கானகம்தான். ஆனால் திருமுருகாற்றுப்படை வள்ளியைப் பற்றிப் பேசுவது திருச்செந்தூரில். வள்ளிமலை இருப்பது ஆந்திர எல்லை. பழமுதிர்ச்சோலை இருப்பதோ மதுரையில்.

said...

அனானி நண்பரே, இலக்கியங்களில் மூழ்கும் பொழுது அதைப் புரிதலில் மிகுந்த கவனம் வேண்டும் என்பது என் கருத்து. அதுவுமில்லாமல் ஒரு நூலைப் படிக்கையில் அதன் காலத்தையும் தெரிந்து கொள்வது நன்று. இல்லையென்றால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து அருணகிரியைப் பார்த்து நக்கீரர் எழுதினார் என்று சொல்லவும் முடியும்.

said...

ஆம். context இல்லாமல் படித்தால் தவறான பொருளந்தான்
வரும்.

வானரர்,நாகர் ,சித்தர்,பூதர்,அசுரர்,அவுனர் இதெல்லாம் பழைய தமிழ் குடிகள்
(tribes) என்றும் சிலர் சொல்வார்கள்.

said...

//ராகவன் கற்பும் களவும் இலக்கியம் அல்ல. அரசியல் :-)( சிரிப்பான் போடாமலும் இருக்கலாம்). //

ராகவன், கற்பும் களவும் அரசியலில்லை.
முருகனே அரசியலாக்கப்பட்டிருக்கிறார். மிகவும் சிலாகிக்கப்படும் வள்ளியின் சிலைக்கு மாதவிலக்கு வருமா என்று இன்னொரு பதிவில் கேட்கப்போகிறவர்கள் செய்யும் அரசியலுக்கு தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் துணை போகிறீர்கள்.

மிகவும் வருந்துகிறேன். மிகவும் வருந்துகிறேன்.

said...

//மிகவும் சிலாகிக்கப்படும் வள்ளியின் சிலைக்கு மாதவிலக்கு வருமா என்று ''இன்னொரு'' பதிவில் கேட்கப்போகிறவர்கள் செய்யும் அரசியலுக்கு //

நல்ல கற்பனைவளம் ஓகை.வாழ்த்துகள். நல்லதொரு கருத்துப்பரிமாற்றமும் செய்திப் பகிர்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாகவே உணர்கிறேன். உணர்ச்சிவயப்பட்டு வெளிப்பட்ட வார்த்தைகளாகவே மேற்சொன்ன கற்பனையை பார்க்கிறேன்.

தமிழ் சமூக அரசியலில் தவிர்க்க இயலாதவன் முருகன்.

எப்படியோ கருத்துப்பரிமாற்றம் நிற்கப்போகிறது. வாழ்த்துக்கள்.

said...

ஒரு உருப்படியான விவாதம் வெகு அருமையாக சென்று கொண்டிருக்கீறது. ஒரு வேளை முத்துகுமரன் சொன்னது போல நின்று விடுமோ?

சக வலைப்பூ அன்பர்களே, தமிழிலக்கியங்களில் குறிப்பாக ஆன்மீக இலக்கியங்களில் கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள்தான் உண்மையை உணர உதவுகின்றன. அதனால் தயங்காமல் பாரிமாறி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அசுரன்

said...

கரிசல் காட்டு ராகவன்,

தெய்வானை குறித்து வருவதாக சொல்லப்படும் வரிகளுக்கும், தெய்வானை குறித்த கேள்விகளுக்கும் உங்களது பதில்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

அசுரன்

said...

திரு அசுரன், இந்த விவாதம் நன்கு சென்று கொண்டிருந்தது. இலக்கியத்தில் இருக்கும் கருத்துகளை வைத்துத் தான் விவாதம் சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒருவர் வழக்கம் போல் பார்ப்பனத்தி, பார்ப்பன அடிவருடி என்று திட்டத் தொடங்கியதும், இங்கே பேசப்படுவது இலக்கியம் என்று இராகவன் சொன்னதற்கு 'இல்லை. அது அரசியல்' என்று ஒருவர் திரித்தப் பின்னும் தான் விவாதம் நின்றுவிட்டது. கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது தனி மனிதத் தாக்குதல்களும் ஒருவரின் நோக்கத்தைத் திரித்தலும் தேவையில்லாதவை. அவை வரும் போது கருத்துப் பரிமாற்றம் நின்று போகும் என்பதற்கு இந்த இடுகை ஒரு சான்று.

இப்போது ஓகையார் சொன்ன கருத்தால் மட்டுமே கருத்துப் பரிமாற்றம் நின்றாற்போல ஒரு தோற்றத்தைத் தர நீங்களும் முத்துகுமரனும் விழைகிறீர்கள். ஆனால் கருத்துப் பரிமாற்றம் முன்பே நின்றுவிட்டது. அதனையும் அதன் காரணத்தையும் உணரவேண்டும். யாராவது இனி மேல் வந்து கற்பு மணத்தையும் களவு மணத்தையும் பற்றி இலக்கியம் தரும் செய்திகளைப் பேசுவார்கள் என்று எண்ணுகிறீர்களா? அவர்களும் பார்ப்பன அடிவருடிகள் என்றும் அரசியல் செய்கிறார்கள் என்றும் தான் பேசப்படுவார்கள். அதனை உணர்ந்து பேச நினைப்பவர்களும் பேச மாட்டார்கள்.

said...

இராகவன்,
நல்ல பதிவு. வாரியார் சுவாமிகள் சொன்னது போல், "கந்தக் கடவுள் எமது சொந்தக் கடவுள்". அக் கந்தக் கடவுள் பற்றிய உங்களின் பதிவு மூலமும், இங்கே பின்னூட்டம் எழுதிய நண்பர்களின் கருத்துக்கள் மூலமும் பல சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன்.

மற்றும்படி, இப் பதிவின் கரு பற்றிக் கருத்துச் சொல்லும் அளவிற்கு எனக்கு இலக்கிய அறிவோ அன்றி ஆன்மீக அறிவோ இல்லை.

said...

குமரன்,

ஓகையாரின் கருத்துக்களால் நின்றதாக எனக்கு கருத்து இல்லை. இன்னும் சொன்னால் ஓகை அவர்கள் என்ன சொன்னார்கள் என்றே இப்பொழுதுதான் போய் பார்க்கிறேன்.

அரசியல் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. இங்கும் அது உண்டு. ஆயினும் நமக்கு தெரியாத விசயம் என்கீற பட்சத்தில் தெரிந்தவரகள் விவாதம் செய்வதில் தலையிடாமல் அவதனிப்பதுதான் சரி என்று நம்புகிறேன். அல்லது விசயத்தை தெரிந்து கொண்டு விவாதத்தில் தலையிடுவதுதான் சரி என்று நம்புகிறேன்.

யாரையேனும் விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் அதை நேரடியாக செய்வதைத்தான் இது வரை செய்து வந்துள்ளேன். ஓகையின் மீது விமர்சனம் செய்வதாயிருந்தாலும் அவ்வாறே செய்வேன். எனவே ஓகை மீது மறைமுகமாக சூழ்நிலையின் சாதகத்தை பயன்படுத்தி முத்திரை குத்த முயல்வதாக கருத வேண்டாம். அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை.

இந்த விசயத்தை இத்தோட முடித்துக் கொண்டு முருகன் விவாதத்தை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் எனது ஒரே நோக்கம்.

முருகனை பருக காத்திருக்கிறேன்.

கற்பு மனம், கள்வு மனம் முதல் எந்த விசயத்தை வேண்டுமானாலும் பேசுங்கள், முழுமையாக சந்தேகத்திற்க்கு இடமின்றி ஒரு கருத்து நிலையை எட்டுங்கள். அது வரை விவாதத்தை திசை திருப்ப விழையும் பின்னூட்டங்களை கண்டு கொள்ளாதீர்கள். இங்கு தமிழ்மணத்தில் முத்திரை குத்தப்படுவதற்க்கும், விமர்சனத்திற்க்கும் பயந்தா இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்? அலல்து இது போன்றதொரு அனுகுமுறை இங்குள்ளவர்களுக்கு புதிதா? அவை சரி தவறு என்ற அம்சத்தை இங்கு முன்னணிக்கு கொண்டு வர விரும்பவில்லை. மாறாக முருகன் விவாதம் எல்லா தடைகளையும் மீறி நடந்தே தீர வேண்டும் என்ற விருப்பத்தையே முன்னிறுத்துகிறேன்.

அதனால் தயவு செய்து இந்த விவாதத்தை தொடருங்கள்.

அசுரன்

said...

http://iniyathu.blogspot.com/2006/04/13.html


இராகவன். உங்களது பழைய இடுகை ஒன்றையே எடுத்துக்காட்டாகத் தருகிறேன். அந்த இடுகையைத் தொடங்கும் போதே 'கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி' என்று சொல்லி அதற்கு விளக்கமும் தந்துள்ளீர்கள்.

இடுகையிலிருந்து...

'கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி. பெற்றோர் பார்த்து, உற்றோர் சூழ, கற்றோர் புகழச் செய்து கொண்ட திருமணம் தெய்வயானையுடன். காட்டிற்குச் சென்று, வம்பு செய்து, கையைப் பிடித்து இழுத்து, கிண்டல் பேசி, மயக்கி, ஓடிச்சென்று பிறகு நம்பிராஜன் சம்மதத்துடன் செய்து கொண்ட திருமணம் வள்ளியுடன். '

said...
This comment has been removed by a blog administrator.