Monday, April 10, 2006

நான் இந்து மதத்திற்கு எதிரியா?

சென்ற பதிவில் நான் தொடரும் போடவில்லை. காரணம் இந்தப் பதிவு. நான் எழுதியதை நம்பிக்கை வைத்துப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வெளிப்படையாக உரிமையோடு உங்கள் பின்னூட்டங்களை இட்டதிற்கும் நன்றி. உண்மையில் இரண்டாவதிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாம் என்று கொண்டிருக்கும் நம்பிக்கை. மிகமிக நன்றி. சரி. விஷயத்திற்கு வருவோம்.

ஒரு இந்து என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் நான் இந்து மதத்திற்கு எதிரியா? இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் இந்து மதம் என்றால் என்னவென்று நான் கொண்டிருக்கும் கருத்தினை விளக்கியே ஆக வேண்டும்.

இந்து மதம் என்று இன்றைக்கு வழங்கப்படுவது பல மதங்களின் கூட்டமைவு. பல பண்பாடுகளின் கூட்டணி. கலாச்சாரங்கள் கலந்த நிலை. இன்றைக்கு ஒவ்வொன்றிற்கும் தொடர்பு சொல்லப்பட்டு எல்லாம் ஒன்று போலக் காட்சி தந்தாலும் அதன் தனித்துவங்கள் அங்கங்கு வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவில் தங்கமணி அவர்கள் அழிக்கப்படும் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் இந்தியாவை மட்டும் குறிப்பிடாமல் உலகளாவிய வகையில் நடக்கும் இந்தப் பன்முக அழிப்பைக் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நடக்கும் இந்த ஒற்றுமைப் படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் பல குழுக்களின் இனங்களின் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம் வந்த பொழுது என்னுடைய வங்காள நண்பனுடன் அதைப் பற்றி உரையாடினேன். வங்காளத்தில் பிராமணர்கள் கடல் பூ என்று சொல்லிக் கொண்டு மீனைச் சாப்பிடுகிறார்கள் என்று எல்லாரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லையாம். ஏனென்றால் அங்கு சைவ உணவுப் பழக்கம் என்பதே பெரும்பாலும் அறியப் படாதது. கடல் பூ என்று சமாதானம் சொல்லிச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த நண்பன் சட்டோபாத்யாய் என்ற வகுப்பைச் சார்ந்தவன். அதாவது பிராமண வகுப்பு. ஆனால் அவர்கள் வீட்டில் அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். நானும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ருசித்து ரசித்திருக்கிறேன்.

அவனிடத்தில் அந்தத் தடைச் சட்டத்தைப் பற்றிச் சொன்னதும் அது சரியே என்று சொன்னான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நேரடியாகச் சொன்ன பொழுது அவன் சொன்ன காரணம் என்னைத் திகைக்க வைத்தது. அவனுடைய கருத்துப் படி பலர் வந்து போகும் இடத்தில் இப்படி கோழிகளையும் ஆடுகளையும் வெட்டினால் அது நன்றாகவா இருக்கும். அங்கு வரும் குழந்தைகளின் நிலையையும் பலவீனமான இதயமுள்ளவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டுமாம். வேண்டுமென்றால் ஒரு அறைக்குள் வெட்டிக் கொள்ளட்டுமே என்பது அவனது கருத்து. அவன் கூற்றை ஏற்றுக் கொண்ட நான் அவனிடம் சொன்னேன். "இதோ பாரப்பா ஆடு-கோழி வெட்டுகின்ற கோயில்களுக்குப் போகின்றவர்களுக்கு அங்கு ஆடும் கோழியும் வெட்டுவார்கள் என்று நன்றாகத் தெரியும். அவைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குலத்தாரால் வழங்கப்படும் திருக்கோயில்கள். அதை எப்படித் தடை செய்ய முடியும்? எல்லாரும் போகின்ற பெரிய கோயில்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அப்படியிருக்க இந்தத் தடைச்சட்டம் சரிதானா?"
அவனும் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டான்.

இதுவும் ஒருவகை பன்முக அழிப்புதான். ஆனால் இந்தத் தடைச்சட்டத்தின் மூலமாக மட்டுமே பன்முக அழிப்பு நேராது. ஒருவேளை இந்தத் தொந்திரவு தாளாமல் மதம் மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவர்கள் பண்பாடு மாறும். அவர்கள் புதிதாகப் போகின்ற கோயிலின் வாசலில் போய் கிடா வெட்டப் போவதில்லை. ஆகையால் அந்த வகையான பன்முக அழிப்பையும் நான் ஆதரிக்கப் போவதில்லை.

அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொருவனும் தன்னைப் பற்றியும் தனது முன்னோர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்தால் தன்னைக் காத்துக் கொள்ளவும் அறிவான். தன்னை அறிந்துத் தன்னை மதிக்கின்ற அதே வேளையில் அடுத்தவனையும் நிச்சயம் மதிக்க வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்பாட்டு வழக்கங்கள் கொண்டவர்கள். நான் நானாகவே இருக்க நீ நீயாகவே இருக்க நாம் நாமாகவே இருப்போம் என்று எல்லாரும் நினைக்க வேண்டும். அசைவம் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அசைவம் சாப்பிடுவது எப்படிக் குற்றமாகாதோ அப்படியே சாப்பிடாதும் குற்றமாகாது. அதது அவரவர் விருப்பம்.

இப்படிக் கலப்புகளும் பழக்க வழக்கங்களும் பல கொண்ட இந்து மதத்தின் என்ற பெயர் நிச்சயம் புதிதுதான். வெளியூர்க்காரன் கொடுத்ததுதான். அதனால் என்ன? வெளிநாட்டுப் பணம் கசக்கவா செய்கிறது? இந்தப் பெயரே இருக்கட்டும்.

நிச்சயமாக நாம் வந்த வழியில் இரத்தச் சுவடுகளும் சமூக அவலங்களும் இருக்கின்றன. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வோம். இறந்த காலத்து உண்மையை வருங்காலத்துப் பொய்யாக்குவோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் உறவோடு இனிமையோடு வாழ்வோம். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் எனக் கொள்வோம். அடுத்தவரை மதித்து வாழ்வோம். அதில் தவறினால் வீழ்ச்சிதான்.

இன்றைய இந்து மதத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. எங்குதான் இல்லை? எங்களிடம் இல்லை என்று சொல்கின்றவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் எனக்குத் தெரிந்த வரையில் உலகம் முழுவதும் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் நாம் நமது பிரச்சனைகளைக் களைவதற்கு வழி காண்போம். அடுத்தவனைச் சொல்லாமல் நமது பிரச்சனைகளை மட்டும் சொல்கிறேனே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு செய்தி. ஏதோ ஒரு வீட்டில் கொலையே விழுந்தாலும் பதறாத நாம் நமது வீட்டில் நூறு ரூபாய் களவு போனால் பதறுகிறோம் அல்லவா.

அதே நேரத்தில் மதம் எந்த அளவிற்கு அரசியலில் விலை போகிறதோ அந்த அளவிற்கு விலை போகும் இன்னுமிரண்டு சரக்குகள் மொழியும் இனமும். நமது மொழியும் இனமும் பெரிதுதான். யார் இல்லையென்றார்? ஆனால் அதை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக நேர்மையான வழிமுறையை நாட வேண்டும். குறுகிய காலப் பலனை விட நீண்ட காலப் பலனை நாடுங்கள். அதுவும் நற்பலனை. ஆகையால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்புவதை விட தமிழறிஞர்களை நம்பலாம். தங்கள் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் வங்காளிகளும் மலையாளிகளும். ஆனால் அவர்கள் மொழியை வளர்க்க அரசியல்வாதிகளை நம்புவதில்லை. பொறுப்பை அவர்கள் ஊர் எழுத்தர்களும் அறிஞர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சரி. நாம் இந்து மதத்திற்கு வருவோம். பல நம்பிக்கைகள் இருக்கும் இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அந்த ஒவ்வொரு நம்பிக்கையும் நான் மதிக்கவே விரும்புகிறேன். ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்வு செய்ய முடியாது. அதது அவரவர் வழி. வேதத்தின் வழியில் வாழ்வோம் என்று சொல்கின்றவர்களுக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. இல்லை.....தமிழ் மொழியில் இல்லாத செல்வமா என்று அதன் வழியில் வாழ விரும்புகின்றவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. சாமியாவது பூதமாவது என்று வாழ்வதற்கும் உரிமையுண்டு. ஆனால்.....எப்படி வாழ்ந்தாலும் அடுத்தவரையும் மதித்து வாழ வேண்டும். அப்படி வாழத பொழுது எப்படி வாழ்ந்தாலும் பயனில்லை. உலகம் அன்பு மயமானது. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தான். அன்பே சிவம். அதைத்தான் நான் கற்ற தமிழ் நூல்கள் கூறியுள்ளன. ஆகையால்தான் முடிந்த வரை எனக்குத் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன்.

கந்தனைத் தொழும் எனது உள்ளம் கண்ணனையும் கொண்டாடத்தான் செய்கிறது. வாடிகன் சிட்டியில் ஏசுவை மடியில் ஏந்திய அன்னை மேரியைக் கண்டதும் உள்ளம் உருகுகிறது. குரானும் சைவ சித்தாந்ததும் ஒத்துப் போகும் சில விஷயங்களில் ஈடுபாடு உண்டாகிறது. அப்படியிருக்கையில் நான் எப்படி எந்தக் குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரியாக முடியும்? ஆத்திகத்தை ஆதரிக்கும் நான் நாத்திகத்திற்கும் எதிரி இல்லை.

ஒரு இந்து என்கிறவன் இன்றைய கணக்குப் படி இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பின்பற்றுகின்றவன். தனது தாய்மொழி எதுவோ அதைக் காதலிக்கின்றவன். அதே நேரத்தில் மற்ற மொழிகளை மதிக்கின்றவன். சாதி மத வேறுபாடுகள் பார்க்காதவன். தனது கருத்துகளை நாகரீகமாக எடுத்து வைக்கத் தெரிந்தவன். குறைந்த பட்சம் முயல்கின்றவன். ஆண்-பெண் சரி நிகர் சமானம் பேணுகின்றவன். பிரச்சனைகளை ஆக்கபூர்வமாகத் தீர்க்க வேண்டும் என்று விரும்புகின்றவன். இது போக எந்தத் தெய்வத்தையும் எந்த வகையிலும் எந்த மொழியிலும் வணங்கிக் கொண்டு எந்த உணவையும் உண்டு கொள்ளட்டும். இதுதான் நான் விரும்பும் இந்து மதம். இந்த நல்ல நிலை நோக்கித்தான் எனது பயணம். என்னோடு கை கோர்த்து வருவீர்களா? இதற்கு மேலும் நான் இந்தப் பதிவின் தலைப்பில் எழுதிய கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமா?

கடைசியாக சொல்ல விரும்புவது....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, April 09, 2006

நான் இந்துவா?

இப்பொழுது தமிழ்மணத்தில் பிரபலமாக இருக்கும் சர்ச்சை இதுதான். இந்தக் கேள்வியை யாருக்கும் சொல்வதற்காக கேட்கவில்லையானாலும் நான் எனக்காகக் கேட்டுக் கொண்டேன். அப்படிக் கேட்டு எனக்குத் தோன்றியதை ஒரு பதிப்பாகப் போடுகிறேன்.

என்னைப் பொருத்த வரை என்பது இந்து என்றே என்னுடைய சான்றிதழ்கள் சொல்கின்றன. ஆனால் அந்தச் சொல்லுக்கு நான் கொண்டுள்ள பொருள் என்ன?

இந்து மதம் என்று நான் சொல்வது பல மதங்களின் பல பண்பாடுகளின் பல பழக்கவழக்கங்களின் கூட்டே. அந்த வகையில் அந்தப் பெயரை எனது அடையாளத்திற்காக பயன்படுத்துகிறேன்.

நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தத் தேடலைத் தமிழைக் கொண்டே நான் துவக்கினேன். தமிழ் நூல்கள்தான் எனக்கு வழிகாட்டி. அந்த நூல்களைப் படித்து அவற்றில் எனக்குப் பிடித்த வகையில்தான் நான் வழிபடுகிறேன். இறைவனை நம்புகிறேன்.

நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் என்னுடைய மதம் என்பது கீரனாரும் அருணகிரியாரும் அப்பரும் சம்பந்தரும் புனிதவதியாரும் வள்ளுவரும் வாழ்ந்து காட்டிய வழி. யாருக்கும் யாரும் அடிமையில்லை. எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓர் நிறை.

நான் மதம் மாற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் நான் எந்த வழியில் போனாலும் போகுமிடம் ஒன்றுதான் என்று நம்புகிறவன். முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். சிலர் அரிசையைப் பொங்கித் தின்கிறார்கள். சிலர் இட்டிலியாக்கியும் சிலர் தோசையாக்கியும் சிலர் புட்டு சுட்டும் உண்கிறார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் தின்கிறேன். நான் இப்பிடித்தான் தின்ன வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஆகையால் இறைவனை அடையவும் நல்வழி பெறவும் நான் மதம் மாறத் தேவையில்லை. ஈஷ்வரு அல்லா தேரே நாம்.

ஆகையால்தான் The Passion என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் ஏசுவைக் காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து அந்த இயக்குனர் மேல் ஆத்திரம் வருகிறது. என்னுடைய வழியில் போனால்தான் இறைவனை நீ அடைய முடியும் என்று சொல்கிறவரைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. இறைவனை என்னால்தான் அடைய முடியும் என்று சொல்கிறவர்கள் நகைச்சுவையாளர்களாகத் தெரிகின்றனர். தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் கடவுள்-மனிதர்கள் கோமாளிகளாகத் தெரிகின்றார்கள்.

கோயிலுக்குப் போவேனா? போவேன். கோயிலுக்குப் போகத்தான் வேண்டுமா என்றால் எனது விடை இல்லை என்பதே. ஆனாலும் போவது பலர் கூடும் இடத்தில் இறைவனை நினைப்பதற்கே. திருநீறு இட்டுக் கொள்வேன். குங்குமமும் இட்டுக் கொள்வேன். என்னுடைய முகத்திற்கு அது கொடுக்கும் பொலிவை உணர்கிறேன் நான்.

அசைவம் உண்பேனா? உண்பேன். கோயிலுக்குப் போகும் முன்னும் உண்டிருக்கிறேன். பின்னும் உண்டிருக்கிறேன். கிடா வெட்டப்படும் கோயில்களிலும் உண்டிருக்கிறேன். அசைவம் என்பது உணவுப் பழக்கம். அதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறவன் நான். வள்ளுவரோடு நான் வேறுபடுவது இங்கு மட்டுந்தான்.

சிலை வணக்கம் என்பது.....அடக்கடவுளே....நான் சிலையையா வணங்குகிறேன்! எங்கும் நிறைந்த இறைவன் அந்தச் சிலையில் இல்லாமல் போவானா? புல்லினும் பூண்டிலும் அனைத்திலும் இருப்பவனை எப்படியெல்லாம் உணர்ந்து வழிபட முடியுமோ அப்படியெல்லாம் வழிபடலாம். வழிபடாமலும் இருக்கலாம். ஏனென்றால் சும்மா இரு என்பதைப் போன்ற சிறந்த அறிவுரை எதுவுமில்லை.

தமிழ். தமிழ். அதுதான் எனக்கு ஆன்மிக உணர்வைத் தந்து விளக்காக என்றும் சுடர் விட்டு எரிந்து ஒளி காட்டுவது. அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் வழிபாடு செய்கிறேன். அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் இறைவன் திருவடியை அடியும் வகை கொண்டேன். இதற்கெல்லாம் தடை சொல்வார் யாராயினும் மதியேன்.

அனைவரும் எனது சகோதரர்களே. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கிலேன். இதுதான் எனது வழி. இதுதான் என்னுடைய சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் இந்து சொல்லுக்கு நான் கொண்டிருக்கும் பொருள். இதற்கு மற்றவர்கள் கொண்ட பொருள் எதுவாயினும் எனக்குக் கவலையில்லை. இந்தச் சொல் எந்த வழியில் தோன்றியது என்றாலும் எனக்குக் கவலையில்லை. இந்து என்பதற்குப் பதிலானத் தமிழ் மதம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அத்தோடு இந்து என்ற இந்தச் சொல்லோ கிருஸ்துவன், புத்தன், முஸ்லீம் என்ற வேறு எந்தச் சொல்லுமோ என்னைக் கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்தவும் விட மாட்டேன். உங்கள் வழி உங்களுக்கு. எனது வழி எனக்கு.

இவ்வளவுதானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைய கொள்கைகள் உள்ளன. இப்பொழுதைக்குத் தோன்றியவை இவ்வளவுதான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, April 06, 2006

3. படிப்படியா மலையிலேறி

ஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.

கோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.

நாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.

எங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.

நெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.

எப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப் பாத்துத் திருப்புனோம்.

போற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)

அங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.

நாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.

வந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க? ஒரு சிவலிங்கம்.

குகைக்குள்ள நேரா நுழைய முடியாது. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.

கீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.

தொடரும்...

Sunday, April 02, 2006

2. ஆனைய உரிச்சு..............

புதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரையும் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.

புதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.

அதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.

சரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.

அதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ!).

சரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.






வண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.

வெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.

கோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப் பாருங்கள்.

அதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா! இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா? கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா? இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.

அத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.

இந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா? ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.

இன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும்பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.

நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........

தொடரும்.....

Wednesday, March 29, 2006

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா! சரி. பாக்கலாம்." நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.

நாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.

போன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.

திட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.

கன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.

இதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.

நாங்க ஆறு பேரும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.

வண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.

ஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். "நிங்ஙள் எவிடே போகுன்னு?"

அவரும் ஒடனே சொன்னாரு...."ஞங்ஙள்.....திருவனந்தபுரம்....."

என்னது திருவனந்தபுரமா! எனக்குத் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்!

பிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா? நண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.

தொடரும்...

Thursday, March 02, 2006

சுபா

இப்ப என்னோட கைல இருக்குறது சுபா கொடுத்த கிரீட்டிங் கார்டு. அது மேலதான் இப்ப என்னொட வெரலு ஓடுது. மெத்துன்னு அதுல ஒரு சின்னப் பூ. வெரல் வழியா அப்படியே கரண்ட்டு பாஞ்ச மாதிரி இருக்கு. சுபா கொடுத்த எதத் தொட்டாலும் கரண்டு பாயுது. அதுவும் சந்தோஷம்.

அடடா! சுபா யாருன்னே ஒங்ககிட்ட சொல்லலையே! சுபா என்னோட காதலி. ஐயோ! உங்க கிட்ட சொல்லும் போதே எனக்கு லேசா வெக்கம் வருது.

காலேஜ்ல எங்கூட படிக்கிற பொண்ணுதான் சுபா. அப்பிடியோ இப்பிடியோ எப்பிடியோ எங்களுக்கும் காதல் வந்துருச்சி. ஐயோ! மறுபடியும் எனக்கு வெக்கம் வந்துருச்சி. இந்தப் புன்னகையக் கூட என்னால அடக்க முடியல. சுபா பத்தி பேசுனாலே நா வெக்கப்படுறேன்னு எல்லாரும் சொல்றாங்க. இந்த வெக்கத்தக் கொறைக்கனும். சரி. இப்பிடி வெக்கப் பட்டுக்கிட்டேயிருந்தா எப்படி? என்னோட காதல ஓங்ககிட்டச் சொல்ல வேண்டாமா!

கொஞ்சம்....ம்ஹூம்...ரொம்பவே பெரிய இடத்துப் பொண்ணு அவ. ரொம்பச் செல்லம் வீட்டுல. நானோ நடுத்தரக் குடும்பம். ஆனாலும் பாருங்க காதல் வந்துருச்சி. தெனமும் கார்லதான் வருவா. அதே காரு சாந்தரமும் வந்து அவளக் கூட்டீட்டுப் போகும். அப்பிடி ஒரு சொகுசு. நமக்கெல்லாம் பஸ்தான். ஆனாலும் அந்தப் பணக்காரத்தனமெல்லாம் அவளுக்குக் கிடையாது. எல்லார் கிட்டயும் நல்லாப் பழகுவா. அதே மாதிரி எல்லாரும் அவகிட்ட நல்லாப் பழகுவாங்க. அவ்ளோ நல்ல கொணம்.

அவ பாட்டுத் தெறமையப் பத்திச் சொல்லாம விட முடியுமா! அடேங்கப்பா! என்ன உணர்ச்சிப்பூர்வமாப் பாடுவா தெரியுமா! பழைய பாட்டு, புதுப்பாட்டு அத்தனையும் பாடுவா. நாள் பூராவும் அலுக்காம கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அப்பிடி ஒரு பாவம். எல்லாங் கேள்வி ஞானந்தான். இருந்தாலும் அப்பிடி அமைஞ்ச குரல்.

எனக்குப் பி.சுசீலா பாடுன பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் சுபா பாடுனா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பெஸ்ட் ஆஃப் சுபான்னு என்கிட்ட கேட்டா படகோட்டிப் பாட்டத்தான் சொல்வேன்.
"பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்பாயோ!
துள்ளி வரும் வெள்ளலையே நீ தூது செல்ல மாட்டாயோ!"
இந்தப் பாட்ட பி.சுசீலா பாடுன அதே பாவமும் ராகமும் மாறாமப் பாடுவா. ஆனாலும் அதுல சுபாவோட டச் இருக்கும். எது எப்பிடியோ! கடைசில இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு பைத்தியமா இருக்குறது நாந்தான்.

காலேஜ்ல தொடங்கி வளந்ததுதான் எங்க காதல். பலாப்பழத்தை மூடி வெக்க முடியுமா? ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் தெரிஞ்சி போச்சு. சினிமாவுல நாவல்ல பல பேரோட நெஜ வாழ்க்கைல நடக்குற மாதிரி இல்லாம ரெண்டு வீட்டுலயும் எங்க காதல மறுப்பு சொல்லாம ஏத்துக்கிட்டாங்க. கல்யாணமும் முடிவு பண்ணீட்டாங்க. நிச்சயமும் ஆகி தேதியும் குறிச்சாச்சு. ஆச்சரியமா இருக்குல்ல. ஆனா அதுதான் உண்மை. இன்னும் ஆறு மாசம் இருக்கு.

ஆஆஆஆஆஆஆறு மாசம். அதுக்குப் பெறகு சுபாவுக்கு நான். எனக்குச் சுபா. அதுவும் எல்லாரும் ஒத்துக்கிட்டு. பட்டுன்னு ஆறு மாசமும் ஆறு நொடியாப் பறந்துறக் கூடாதான்னு ஆசையா இருக்கு. ஆனா அது நடக்காதில்லயா! சரி. காத்திருக்க வேண்டியதுதான்.

அடடா! பேச்சு மும்மூரத்துல ஒங்ககிட்ட இன்னொரு விஷயத்தச் சொல்லவே மறந்துட்டேன். இன்னைக்கு எங்க வாழ்க்கைல மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். ஆமா. ஏ.ஆர்.ரகுமான் இசைல பாடுறதுக்கு சுபாவுக்கு வாய்ப்புக் கெடச்சிருக்கு. அவ குரலுக்குத் தகுதியான வாய்ப்புதான் அது.

எந்த நாட்டு இசையா இருக்கட்டுமே. ஒரு வாட்டிக் கேட்டாப் போதும். அப்பிடியே அச்சுப் பெசகாமப் பாடுவா. அன்னைக்கு இப்பிடித்தான் எங்க காலேஜுக்கு அயர்லாண்டுல இருந்து ஒரு பாடகரு வந்தாரு. அவங்க நாட்டுப் பாரம்பரியப் பாட்டு ஒன்ன ஆலாபனை பண்ணுற மாதிரி பாடுனாரு. அத அப்பிடியே ஜம்முன்னு பாடிக் காட்டி அசத்தீட்டா சுபா. அவரும் பிரமிச்சுப் போயிட்டாரு. அவள இன்னும் ரெண்டு மூனு மெட்டு பாடச் சொல்லி சாம்பிள் மாதிரி ரெக்கார்டு பண்ணிக்கிட்டாரு. அவரு என்னவோ ஆல்பம் போடப் போறாராம். அதுக்குத் தேவப்பட்டா இவளும் போக வேண்டியிருக்குமாம்.

சுபா கொஞ்சம் அசடு. நானுங் கூட வந்தாத்தான் வெளிநாடு போவாளாம். வீட்டுல ஒத்துக்குவாங்களா? கல்யாணம் முடிஞ்சிட்டாலும் போகலாம். அதுக்கு முன்னாடியே வரச்சொல்லிக் கூப்புட்டா? நல்லவேளை. இதுவரைக்கும் அந்தாளு கூப்புடலை. அவரு என்னவோ இசையாராய்ச்சி செய்றாராம். அந்த ஆராய்ச்சி முடிவுகள வெச்சித்தான் ஆல்பமோ ஆப்பமோ போடப் போறாராம். ஆராய்ச்சிதான் மொதல்ல முடியனுமாம். மெதுவா முடியட்டுமே. எனக்கொன்னும் அவசரமில்ல.

அட! ஒன்னச் சொல்லும் போதே இன்னொன்னுக்குத் தாவுறேன். ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங் பத்தித்தான சொல்லிக்கிட்டு இருந்தேன். நேத்து ராத்திரி பத்து மணிக்கெல்லாம் பொறப்பட்டுப் போனவா இன்னைக்குக் காலைலதான் திரும்ப வந்தாளாம். என்னையும் ரெக்கார்டிங்குக்கு கூப்புட்டா. நாந்தான் போக முடியல. வீட்டுல சின்ன விசேஷம். அதான்.

ரெக்கார்டிங் முடிச்சுக் காலைல திரும்ப வந்ததும் எனக்குப் ஃபோன் பண்ணீட்டா. அங்க நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்ன பெறகுதான் அவளுக்கு நிம்மதி. இப்பிடித்தான் எதையெடுத்தாலும் எங்கிட்ட வந்து ஒப்பிச்சிருவா. மண்டு மண்டுன்னு எத்தன தடவ திட்டுனாலும் கேக்க மாட்டா.

இப்பக் காலேஜ்ல அவளுக்காக காத்திருக்கேன். வந்ததும் அங்க என்ன பாடுனாளோ அதப் பாடச் சொல்லனும். ஊருல ஒலகத்துல எல்லாரும் கேக்குறதுக்கு முன்னாடியே அவ பாட்ட நான் கேக்கனும். கேக்கக் கூடாதா? அந்த ஆசை எனக்கிருக்கக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

சரி. அத விடுங்க. இந்த வாய்ப்பு எப்படிக் கெடச்சதுன்னு சொல்லவே இல்லையே. அவளோட அண்ணனுக்கு வேண்டப்பட்டவங்க வழியாக் கெடச்ச வாய்ப்பு. யார் வழியா வந்தா என்ன! கடவுள் வழியா வந்ததுதான். சுபா ஒரு பெரிய பாடகியா வரனும். அந்த வளர்ச்சிதான் எனக்கு முக்கியம். பெருமை. மேல மேல ஏத்தி விட்டு தாங்குற தூணா நா இருக்கனும். எங்க சுத்துனாலும் எங்கிட்ட வர்ரவளுக்கு இது கூடவா செய்யக் கூடாது. செய்வேன். கண்டிப்பாச் செய்வேன். நீங்களும் அதப் பாக்கத்தான் போறீங்க.

அது கெடக்கட்டும். இந்த கிரீட்டிங் கார்டு எப்படி வந்துச்சுன்னு சொல்லவேயில்லையே! நேத்து எனக்குப் பொறந்த நாளு. அதுக்கு சுபா தந்ததுதான் இந்தக் கார்டு. அதத்தான் இப்ப கைல கதை பேசிக்கிட்டு இருக்குறது. என்னோட பொறந்த நாளன்னைக்கு அவளுக்கு ரெக்கார்டிங் இருந்தது அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

"சுந்தர்........................." வேற யாரு? சுபாதான். என்னோட பேரக் கத்திக் கிட்டேதான் வருவா. போகும் போதும் அப்பிடித்தான். பேரச் சொல்லிக் கத்தக் கூடாதுன்னு எத்தன வாட்டி திட்டினாலும் கேக்க மாட்டா. அதுவுமில்லாம அந்தக் கத்தல் எனக்கும் பிடிக்கும். என்னோட பேரச் சொல்லிக் கத்துறதே ஒரு பாட்டாக் கேக்கும்.

பாருங்க....இப்பிடித்தான் வந்ததும் என்னோட கையப் பிடிச்சுக்குவா! இப்பிடியெல்லாம் நடந்துதான் எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயம் சீக்கிரமே தெரிஞ்சு போச்சு. அப்புறம் நடந்ததெல்லாம் ஒங்களுக்குச் சொன்னேன்.

"என்னடா! நான் கொடுத்த கார்டத் தடவிப் பாத்துக்கிட்டு இருக்க! நானும் தடவிப் பாக்குறேன்!" அவதான் கேக்குறது.

"அட மண்டு. கார்ட நம்மால தடவத்தான முடியும். பாக்க முடியாதுல்ல." நான் சொல்லி வாய மூடல. என்னோட கன்னத்தத் தடிவித் தேடி முத்தம் குடுத்தா சுபா.

அன்புடன்,
கோ.இராகவன்

(இது கதைதான். கதைதான். கதைதான்.)

Thursday, February 23, 2006

நாலே நாலா ஏதோ நாலா

ஜோசப் சார் என்னை இப்பிடி இழுத்து விட்டுட்டீங்களே.....நாம் பாட்டுக்குச் செவனேன்னு இருந்தேன்.....சரி....நானும் எதையாவது சொல்லி வெக்கேன். யாருஞ் சண்டைக்கு வராதீங்க...

பிடித்த நான்கு பெரியவர்கள்

1. வாரியார் சுவாமிகள் - தமிழ்ப் பெருங் கடல். நல்ல செய்தியோடு போய் நின்றால் உடனே வாழ்த்து வெண்பா பாடக் கூடிய தமிழறிவு. ஊர் ஊராக நாடு நாடகப் போய்த் தமிழ் தொண்டும் தமிழ்க் கடவுளுக்குத் தொண்டும் செய்த பெருமகனார். ஆன்மீக இலக்கியச் செம்மல். நகைச்சுவையும் தத்துவமும் கலந்து கதைக் கருத்து சொல்லும் இவரது பாங்கிற்கு இன்று வரை போட்டியில்லை.

2. காயிதே மில்லத் - ஒப்பற்ற இஸ்லாமியத் தலைவர். இஸ்லாம் எங்கள் சமயம். தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய தமிழர். ஒரு குற்றம் என்று இவரைக் கை காட்ட முடியுமா! தூயவர். அரியவர். என்றும் நினைத்துப் போற்றத் தக்கவர். அனைவருக்கும் பொதுவானவர்.

3. காமராஜர் - உண்மையிலேயே மதிய உணவுத் திட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர். கல்விக் கண் திறந்த ஞானச் சுடர். இந்த அளவிற்கு தமிழகத்தில் கல்வி உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்ட பெருமை இவரையே சேரும். இன்னொரு கர்ம வீரர் இன்னும் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

4. உ.வே.சா - கால் தேய்ந்தாலும் தேயட்டும்.....என் தமிழ் தேயக் கோடாது என்று....தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து பல அரிய தமிழ் நூல்களை நாம் அறியத் தந்த அற்புதத் தமிழர். ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையாவது நன்றி சொல்ல வேன்டிய உழைப்பாளி. தமிழ்த் தொண்டின் தலைமைப் பதவி இவருக்குப் பின்னால் இன்னமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பிடித்த நான்கு உணவு வகைகள்

1. தோசை - இதுக்குதான் முதல் இடம். எந்தக் கூட்டணியிலும் சேரக் கோடிய O-ve உணவு. சைவமா இருந்தாலும் சரி. முன்னாடி அ போட்ட சைவமா இருந்தாலும் சரி....நல்லா பொருந்தி வரும். ஒன்னுமில்லையா...கூட்டணி இல்லாமலேயே ருசிக்கும் மசால் தோசையும் உண்டு.

2. கோதுமை ரவைக் கதம்பம் - இது எனது கண்டுபிடிப்பு. இதுக்கு இங்க குறிப்பும் கொடுத்திருக்கேன். பாதி நாட்களில் இரவு உணவு இதுதான். கோதுமை ரவையில் செய்தது. ஆனால் அரிசி வகைக்கான சுவை.

3. மீன் - குழம்பு...பொரிச்சது...இல்லை பாலக்கோட போட்டு செய்றது....எதுவானலும் எனக்குப் பிடிக்கும். சீலா மீனு, வெறால் மீனு, நெத்திலி மீனு, ஜிலேபிக் கெண்டை (ரொகு) - இந்த நாலு மீன்களும் ரொம்பப் பிடிக்கும். (இதுலயும் நாலா!)

4. கீரை - இதுவும் ரொம்பப் பிடிக்கும். கீரைக் குழம்போ...மசியலோ..பொரியலோ...எப்படி இருந்தாலும் கீரை எனக்குப் பிடிக்கும். எல்லாக் கீரைகளுமே பிடிக்கும். காலி ஃபிளவர் அடியில் இருக்கும் கீரையாகட்டும் முள்ளங்கியில் மேலே இருக்கும் கீரையாகட்டும்....எதையும் விட்டு வைப்பதில்லை.

எனக்குப் பிடித்த நான்கு கலைஞர்கள்

1. நடிகர் திலகம் - பெயரைச் சொல்லவே தேவையில்லை. அந்தக் காலத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்தார். இந்தக் காலத்திற்கு வந்த பிறகு என்ன தேவையோ அதைச் செய்தார். கேட்டதைக் கொடுக்கும் நடிப்பு வள்ளல். சந்தேகமேயில்லை. இப்படி ஒரு தமிழன் இருந்தான் என்று பெருமிதம் கொள்ளலாம்.

2. அனிதா ரத்னம் - பாரம்பரியக் கலையை அப்படியே வைத்துப் பராமரிப்பவர்களுக்கு நடுவில் அதில் கூடுதல் புதுமைகளைச் சேர்க்கும் ஆடலார். நாட்டிய நிகச்சிகளில் கதை சொல்லும் விதங்களின் புதிய முறைகளைக் காட்டுகிறவர். இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

3. இளம்பிறை மணிமாறன் - தூத்துக்குடிக்காரர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கு ஒரு பெரிய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். சரி. என்ன கலை என்று கேட்கின்றீர்களா? இவர் ஒரு தமிழ் சொற்பொழிவாளர். அதுவும் ஆன்மீகத்தில். தமிழிலும் ஆன்மீகத்திலும் இவர் தொடாதது இல்லை. ஒரு விஷயம் தெரியுமா? இவர் ஒரு கிருஸ்துவர். ஆனாலும் மக்கள் இவரை ஆன்மீகச் சொற்பொழிவாளராக ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பு. உண்மையான மதச்சார்பின்மை.

4. எல்.ஆர்.ஈஸ்வரி - எனக்கு இவரை விடப் பிடித்த பாடகர்கள் இருந்தாலும் இவரையே குறிப்பிட விரும்புகிறேன். இவருக்கு முன்னும் பின்னும் பல பெரிய பாடகர்கள் பாரம்பரிய இசைப் பிண்ணனியிலிருந்தோ படித்திருந்தோ வந்தார்கள். அல்லது வெளிமாநிலத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் நான் கொண்டாடினோம். கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்த விதப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு கிருஸ்துவக் குடும்பத்திலிருந்து வந்து, எந்த இசைமுறையையும் கற்றிராமல், தன்னறிவைக் கொண்டே முன்னுக்கு வந்த தமிழச்சி. இவர் கிளப் பாடகி என்று எளிதாக கிண்டலடித்து விடலாம். ஆனால் இவர் இல்லாமல் தமிழ்நாட்டில் பல வீடுகளில் கல்யாணமும் நடப்பதில்லை. ஆடி மாதத்தில் மகமாயி கூழை ஏற்றுக் கொள்வதும் இல்லை. முதலில் சொன்னது "வாராயென் தோழி வாராயோ" பாடலைப் பற்றி. அந்தப் பாடலைப் பெரும்பான்மையான கல்யாண வீடுகளில் கேட்கலாம். லூர்து ஆர் ஈஸ்வரியாக இருந்தாலும் அம்மன் பாடல்கள் என்றால் ஈஸ்வரிதான் என்று முத்திரை கொண்ட இந்தப் பாடகியும் போற்றப்பட வேண்டியவரே.

விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்

1. கேரளா - சேர நாட்டின் அழகைச் சொல்லவும் வேண்டுமா....பச்சை வயல்களும்...உயர்ந்த மலைகளும்.....ஆறுகளும்...ஏரிகளும்....வனப்பும் வளமையும் இயற்கையும் எங்கும் நிறைந்த கேரளம். ஏற்கனவே சென்றிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டும்.

2. Valley Of Flowers - இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நண்பர்கள் சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் சென்றதில்லை. டெல்லி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். ஒரு பயணத்திட்டம் நீண்ட நாட்களாக ஊறிக்கொண்டு இருக்கிறது. என்று நடக்குமோ!

3. ஜெர்மெனி - போயிருக்க வேண்டியது. போக முடியாமல் போய் விட்டது. இன்னொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக போக விரும்பும் நாடு ஜெர்மெனி.

4. கிரீஸ் - கதைகளில் நிறைய படித்த நாடு. ஒடிசியும் பெனிலோப்பும் மகிந்திருந்த நாடு. ஹெலன் என்ற அழகு தேவதையால் நிறைய இழந்த நாடு. நிச்சயம் பார்க்க வேண்டும்.

நான் அழைக்க விரும்பும் நால்வர்

1. பரஞ்சோதி

2. இளவஞ்சி

3. சிவா

4. இராமநாதன்

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 06, 2006

ணின் பின்புறத்தில் ஓங்காரம்

என்ன தலைப்பு தப்பா இருக்குன்னு தோணுதா? அப்ப "பெண்"னுங்குற சொல்ல முன்னாடி போட்டுக்கோங்க. அதிர்ச்சியாகாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா விஷயத்துக்கு வருவோம்.

இது நடந்து சரியா அஞ்சு வருசம் ஆச்சு. நடந்தது பெல்ஜியத்துல. அப்ப பெல்ஜியத்தோட ஆண்ட்வெர்ப் நகரத்துல தங்கீருந்தோம். நான் இருந்த நகரங்கள்ளயே எனக்கு ரொம்பப் பிடிச்ச நகரம் அதுதான். வசதிக்கு வசதி. சுத்தத்துக்குச் சுத்தம்.

வார நாட்கள்ள வேல. சனி-ஞாயிறுன்னா ஊரு சுத்த வேண்டியதுதான. அப்படி அந்த வாரக்கடைசீல ஹண்சூர் லெஸ்ஸே (Han-Sur-Lese) போலான்னு முடிவு செஞ்சோம். ஊர்ப் பேரு நினைவிருக்கு. ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் இருக்கலாம்.

முதலில் ஜெமிலி என்ற இடத்துக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஹண்சூர் லெஸ்ஸேக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஹண்சூர் லெஸ்ஸேயில் அழகான சுண்ணக் குகைகள் இருக்கின்றன. உள்ளேயே படகிலும் போக முடியும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரங்களும் செய்திருப்பார்கள். ஐரோப்பாவில் இருப்பவர்கள் ஒருமுறையேனும் போக வேண்டும். மழைக் காலத்தில் போகக் கூடாது. ஏனென்றால் குகைக்குள் தண்ணீர் வரத்து அதிகாம இருக்கும். உள்ளே நுழைவதே கடினம்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஹண்சூரப் பாத்துட்டு திரும்பி வந்து ஜெமிலியில ரயிலப் பிடிக்கக் காத்திருந்தோம். இன்னும் ஒன்னர மணி நேரம் இருக்கு. ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள கதகதன்னு இருக்கு. ஜம்முன்னு உக்காந்திருந்தோம்.

அப்போ பக்கத்துல கொஞ்சம் தள்ளி உக்காந்திருந்த ஒரு பெரிய அக்காவுக்கு கோக்கு குடிக்கிற ஆச வந்து எந்திருச்சு நடந்தாங்க. கோக்கு மெஷின் எங்களுக்கு முன்னாடிதான் இருந்தது. அந்த அக்கா கோக்கு மெஷின்ல ஃபிராங்க்ஸ்கள தள்ளும் போதுதான் அதக் கவனிச்சோம்.

அந்தக்கா போட்டிருந்தது ஒரு பாவாடையும் தொளதொளன்னு ஒரு சட்டை மாதிரியும். அந்தப் பாவாடையோட டிசைன் என்ன தெரியுமா? தமிழ் எழுத்துகள். உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்துன்னு எதையும் விடலை. ஆயுத எழுத்தும் இருந்தது. எங்கன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா....நமக்கு முக்கியம் குடிலைதான்.

குடிலைன்னா ஓம். ஓங்காரத்துக்குத்தான் குடிலைன்னு பேரு. இந்தக் குடிலை அந்தப் பெண்ணோட பின்புறத்துல நட்ட நடுவுல இருந்தது.

இத மொதல்ல நான் கவனிக்கலை. அலஞ்ச அலுப்புல லேசா அசந்தாப்புல இருந்தேன். கூட இருந்த மலையாளி நண்பன் தான் இதப் பாத்து எனக்குச் சொன்னான். எனக்கு அலுப்பெல்லாம் போச்சு.

இந்தப் பாவாடைய எங்க வாங்கீருப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன். ஒன்னும் தோணலை. நம்மூர்ல நெஞ்ச பாவாடையாக்கூட இருக்கலாம். இல்லைன்ன டிசைனரு வேருன்னு யாராவது புது டிசைனரு, இந்த ஐடியா மூளைல உதிக்கவும் நெஞ்சதா இருக்கலாம்.

எதுவா இருந்தா என்ன? ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. சைவ சித்தாந்தத்துல என்னதான் முருகா சிவனேன்னு இருந்தாலும் கடைசீல எல்லாம் ஓங்காரந்தான்.

சேவல் ஓங்காரத்தோட ஒலி வடிவம். மயில் ஒளி வடிவம். அதுதான் நாத விந்து. நாதம் சேவல். விந்து மயில். மயில்தோகை விந்து வடிவத்துலதான இருக்கு. இப்பிடி இன்னும் நெறைய அதப் பத்திச் சொல்லலாம்.

எப்பிடிக் கும்பிட்டாலும் எல்லாம் கடைசீல ஓங்காரத்தான். அந்த ஓங்காரத்தைப் பாவாடைல...அதும் பின்னாடியா?

சரி. கழுத. இதென்ன வெறும் குறியீடுதான. இதப் பாவாடைல போட்டதால என்ன கொறஞ்சு போச்சு! அங்க இருக்குறதால இதோட மதிப்புக் கொறஞ்சு போகுமா! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! இப்பிடியெல்லாம் சொல்லிக் கண்டுக்காம விட்டுட்டேன்.

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.

அடுத்த வாட்டி "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது"ன்னு ஓதும் போது அந்த அக்காவோட பின்புறமோ அந்த ஓங்காரமோ நினைவுக்கு வரலை. மறந்தே போச்சு.

சரி. இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு. நேத்து ராத்திரி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது இது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, February 02, 2006

சேப்பாக்கமும் சிலப்பதிகாரமும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்கிறது. எப்படியோவது...இல்லையென்றால் சேப்பாக்கத்தைப் பற்றிச் சொல்ல வருகையில் சிலப்பதிகாரம் உள்ளே நுழையுமா?

ஜனவரி கடைசி வாரக்கடைசியில் குடியரசு தினத்தை ஒட்டி சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கு நண்பர்களோடு சந்திக்கச் சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை கிரிக்கெட் கிளப்பிற்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததுமே உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா?

என்னுடைய உடையலங்காரந்தான். வட்டக்கழுத்து டி-ஷர்ட் அணிந்திருந்தேன். இது போன்ற பெரிய கிளப்களில் உடைக்கட்டுப்பாடு உண்டு. சென்ற முறை சென்றிருந்த பொழுது ஒழுங்காக நல்லதொரு சட்டையை மாட்டிக் கொண்டு சென்றேன். இந்த முறை நாலு இடங்களில் சுற்றி விட்டுப் பிறகு கிளப்பிற்குச் சென்றதால் எனக்குத் தோன்றவேயில்லை.

பிறகு அங்கு எங்களை அழைத்துச் சென்ற நண்பர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கிளம்பிக் கொண்டிருந்த அவரது துணைவியாரை ஒரு சட்டையைக் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சட்டை வந்த பிறகு கிளப்பிற்குள் சென்றோம்.

நல்ல இடம். மாலைப் பொழுதுகளில் நண்பர்களோடு பொழுது போக்கச் சிறந்த இடம். Under-19 குழுவினர் ஒளி வெள்ளத்திலும் வியர்வை வெள்ளத்திலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் என்னென்ன கனவுகளோ. ஆசைகளோ. சிறுவயதிலேயே விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் இந்த வயதிலேயே எல்லாருக்கும் நல்ல உடல்வாகு வந்திருந்தது.

அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ஏதுவாக நாற்காலிகளை அமைத்துக் கொண்டோம். முதலில் மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும் கொண்டு வரச்சொன்னோம். போட்டி பலமாக இருக்க உருளை போண்டாவையும் கொண்டாவென்றோம்.

சொன்னவை வந்து (அல்லது வெந்து) கொண்டிருக்கும் நேரத்தில் சுற்றிப் பார்க்கையில் என் கண்களில் பட்டார் பேராசிரியர் ராஜகோபாலன். தொலைக்காட்சியில் வரும் தமிழ்ப் பட்டிமன்றங்களைப் பார்ப்பவர்களுக்குப் பேராசியர் ராஜகோபாலனைத் தெரியாமல் இருக்காது. நக்கீரன், இளங்கோ, கம்பன் என்று கரைத்துக் குடித்த கலியுக அகத்தியர். வெறும் வெற்றுப் படிப்பல்ல. ஒவ்வொரு இலக்கியத்தையும் படித்து ஆய்ந்து அதன் பாத்திரங்களைத் தெளிந்த அறிஞர்.

அவருடைய பேச்சைத் தொலைக்காட்சியில் கேட்டுதான் நான் சிலப்பதிகாரத்தில் ஈடுபாடு கொண்டேன். தென்னவன் தீதிலன் என்ற கதையை எழுதியதற்குக் காரணமே அவர் மேற்கோள் காட்டிய சிலப்பதிகார வரிகள்தான். ஆகையால் அவரிடம் நேரில் சென்று மரியாதை செய்வதே தமிழுக்கு நான் செய்யும் மரியாதை என்று எண்ணி அப்படியே செய்தேன். அவரும் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் பேசியதையும் அதிலிருந்து நான் எடுத்ததையும் சொல்லச் சொல்ல அவர் கண்களில் சில மகிழ்ச்சிப் பொறிகள் பறந்ததை என்னால் காண முடிந்தது. அவருக்கு நன்றி கூறி விட்டு அவரை அவரது நண்பர்களோடு அளவளாவ விட்டுவிட்டு நான் நமது மன்றத்தினரோடு சேர்ந்து கொண்டேன்.

சிலப்பதிகாரத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் ஒன்று உண்டென்றால் அது கண்ணகி. மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் உண்டென்றால் அது பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் மனைவி கோப்பெருந்தேவியையும் சொல்லலாம். கண்ணகி வெறும் அடங்கிக் கிடந்த மனைவி பாத்திரமல்ல என்று வாதங்களோடு நிரூபித்தவர் பேராசிரியர் ராஜகோபாலன் அவர்கள். அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியாரும் கூட கவனியாது விட்ட விஷயங்கள் இவை. நான் படித்த வேறெந்தச் சிலப்பதிகார ஆய்வு நூலிலும் இதைச் சொல்லவில்லை. நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 24, 2006

நட்சத்திரக் குமரனுக்கு ஒரு வாழ்த்து

நமது குமரன் கொடுத்த பொறுப்பு மிகப் பெரிய பொறுப்புதான். பின்னே ஒரு செய்யுளை எழுதி அதில் அவரது கதையைச் சொல்லி அதற்கு என்னையும் விளக்கம் சொல்லச் சொன்னால் அது மிகப் பெரிய பொறுப்புதானே. அதையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்ததை மயிலாரோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். மயிலார் யாரென்று எல்லாருக்கும் தெரியும்தானே! சரி. முதலில் கவிதையைப் பார்ப்போம்.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்றுத் தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினைந்து அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்

மயிலார் : இதென்ன கவிதையா செய்யுளா?

நான் : இது செய்யுள் மாதிரி இருக்குற கவிதை. தமிழ் இலக்கியத்தில் புது வடிவம் என்று சொல்லலாம். மரபுக் கவிதை மாதிரி இருக்கும். ஆனா மரபுக் கவிதை கெடையாது. கவிதை மாதிரி இருக்காது. ஆனா கவிதை.

மயிலார் : அப்ப நீ சொல்லப் போற விளக்கத்துல விஷயம் இருக்குற மாதிரி இருக்கும். ஆனா இருக்காது. ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது புரியும்.

நான் : (வழிந்த படி). சரி. சரி. குமரன் கோவிச்சுக்கப் போறாரு. நம்ம செய்யுளுக்கு வருவோம்.

மயிலார் : கவிதைக்கு வருவோம்னு சொல்லு.

நான் : (இன்னும் வழிந்தபடி) ஆமாமா. கவிதைக்கு வருவோம். இந்தக் கவிதைல மூனு பத்திகள் இருக்கு. ஒவ்வொரு பத்தியும் குமரனோட வாழ்க்கைல ஒவ்வொரு பகுதியச் சொல்லுது.

முதல் பத்தி குமரன் பிறந்ததையும் அவருக்குப் பேரு வெச்சதையும் சொல்லுது. இரண்டாவது பத்தி அவரோட திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு எல்லாம் சொல்லுது. மூன்றாம் பத்தி அவர் இப்போ இருக்குற இடத்தைப் பத்தியும் தமிழ் வாழ்த்தும் சொல்லுது.

மயிலார் : ஒவ்வொரு பத்தியும் அவரோட பொறப்பப் பத்தியும் வாழ்க்கையைப் பத்தியும் இருப்பைப் பத்தியும் சொல்லுதா! அப்ப நாலு பத்தி.

நான் : (அவசர அவசரமாக) இல்ல மூனு பத்தி.

மயிலார் : ஏற்கனவே மூனு பத்தி. அந்த மூனும் அவரப் பத்தி சொல்றதால நாலு பத்தீன்னு சொன்னேன். அவசரக்குடுக்கையா இருக்கையே! சரி ஒவ்வொரு பத்தியப் பத்தியும் சொல்லு. கேட்டுக்கிறேன்.

நான் : சரி. சரி. "நான்மாடக் கூடலாம் மதுரையம் பதியில்." அதாவது நான்கு மாடங்களை உடைய கூடங்களை உடைய மதுரையம்பதியில்....

மயிலார் : இரு இரு....ஏன் இப்படி மாடத்தையும் கூடத்தையும் உடைக்கிற?

(எனக்கு ஆத்திரத்தில் கண்ண இருட்டிக்கிட்டு வருது. அத அடக்கீட்டு தொடர்ரேன்.)

நான் : சரி. நான்கு மாடங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கூடங்கள் நிறைந்த ஊர் பாண்டி நாட்டு மதுரையம்பதி. அந்த மதுரையம்பதியில் "நாயகனின் திருவளினால் நானன்று தோன்றினேன்" என்கிறார் குமரன். இங்க நாயகன்னா முருகப் பெருமான்.

(முருகன் பெயரைச் சொன்னதுமே மயிலார் உணர்ச்சி வசப்பட்டு படக்கென்று தோகையை விரிக்கிறார். அந்தத் தோகை இடித்து மேசையிலிருந்த எவர்சில்வர் டம்ளர் தரையில் உருளுகிறது.)

நான் : நாயகன்னா இங்க முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய பங்குனி மாதத்து உத்திரத் திருநாளில் பிறந்தவர். அதுனால அவருக்கு முருகன் பெயரான குமரனையே வெச்சிட்டாங்க. இதைத்தான் சுருக்கமா "நாயகனின் திருவருளினால் நானன்று தோன்றினேன். நலமுடைக் குமரனெனும் நல்ல பெயர்தனை அருளினான்" அப்படீன்னு குமரன் சொல்லீருக்காரு.

இதுல சிறப்பம்சன் என்னன்னா....நல்ல பெயர்தனை வைத்தனர்னு சொல்லலை. அப்படிச் சொல்லீருந்த அது பெத்தவங்களும் பெரியவங்களும் வெச்சதா இருந்திருக்கும். அருளினான்னு சொல்றதால, அது முருகப் பெருமானே பெத்தவங்க வழியா வைத்து அருளினான்னு பொருள் கொள்ளனும்.

(மயிலார் ரொம்பவே பக்தியா கேட்டுக்கிட்டு இருக்காரு.)

நான் : இப்ப ரெண்டாவது பத்திக்குப் போவோம்.

மயிலார் : அது எங்க பக்கத்தூர்லயா இருக்கு?

நான் : (திடுக்கிட்டு) என்ன...பக்கத்தூரா?

மயிலார் : ஆமா. நீதான் பத்திக்குப் போவோம்னு சொன்னியே.

நான் : (எரிச்சலுடன்...ஆனால் காட்டாமல்.) அதாவது பார்ப்போமுன்னு பொருள். இப்ப குமரனுக்கு என்ன வயசுன்னு மொதல்ல சொல்றாரு. முப்பத்து மூனு வயசாகுதாம். அதை நேரடியா சொல்லாம ஒரு கணக்கு வழியா சொல்றாரு. "அகவையோ மூவாறு பதினைந்து". (மயிலாரைப் பார்த்து) மூன்று ஆறும் பதினைந்தும் சேந்தா என்ன வரும்?

மயிலார் : (நக்கலுடன்) மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.

நான் : (சற்றுக் கடுகடுப்புடன்). மயிலார். இது குமரனோட வாழ்க்கைச் செய்யுள்...இல்ல...கவிதை. இத இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது. அவரு நொந்து போயிருவாரு. அதுனால கொஞ்சம் முனைப்பா கவிதையப் பாக்கலாம்.

(கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுகிறார்.)

நான் : மூவாறு என்றால் பதினெட்டு. பதினெட்டும் பதினைந்தும் சேர்ந்தால் முப்பத்து மூன்று அதுதான் அவர் வயது. அடுத்து வீட்டுல அவரோட துணைவியார்தான் எல்லாம் பாத்துக்கிறார்னு சொல்றாரு. (மெல்லிசா மதுரைன்னு மயிலார் கமெண்ட் அடிக்கிறார்). அழகுடைய அகமுடையாள் மனைமாட்சியாம். இங்க புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தரலை. அகத்தின் அழகுதான் பெருசூன்னு சொல்றாரு. அழகும் அறிவும் உடைய திருமதி குமரன்தான் வீட்டை ஒழுங்காக பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறாராம். அடுத்து மகளப் பத்திச் சொல்றாரு.

மயிலார் : (குறுக்கிட்டு) குழந்த தேஜஸ்வினியப் பத்தியா....அடடா! அவளோட பெயர்க்காரணம் தெரியுமா ஒனக்கு. அடடா! முருகா!

நான் : (சற்றுக் கடுப்புடன்) நான் இண்டெர்நெட் படிக்கும் போது எட்டிப் பாக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லீருக்கேன்.

மயிலார் : (முணுமுணுப்புடன்) பெரிய இண்டெநெட். எட்டிப் பாத்துட்டாலும். எனக்குத் தெரியாத சமாச்சாரமா! சரஞ்சரமா எடுத்து விடுவேன்.

நான் : "மகிழ்ச்சியுறத் தேசு பெறும் மகளுடையேன்." தேசுன்னா ஒளி பொருந்திய அழகு. அதான் தேஜஸ்வினி. அதுதான் தனது மகளின் பெயர்னு சொல்றாரு. "மனைமுழுதும் மன்னன் மகள் அவளாட்சியாம்." வீடு முழுக்க குழந்தை தேஜஸ்வினியோட ஆட்சிதானாம். மண்வீடு மட்டுமல்ல மனவீடுமுன்னு சொல்றாரு குமரன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே அல்லவா.

மயிலார் : ஆமாமா. கொண்டாடும் இடத்துலதான். குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம். சரி. அடுத்த பத்தியப் படிச்சுச் சொல்லு.

நான் : இப்ப அவர் எங்க இருக்காருன்னு இங்க சொல்றாரு. அமெரிக்க நாட்டிலே மீனாசோட்டா மாகாணத்திலே....

மயிலார் : நிறுத்து நிறுத்து. அது மீனாசோட்டா இல்ல. மினசோட்டா. இதுக்கு மேல நீ விளக்கம் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். அமெரிக்க நாட்டின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான மினசோட்டா மாகாணத்திலே கணிப்பொறியில் மெலாளராகப் பணிபுரிந்து அங்கேயே குடும்பத்துடன் குமரன் இன்பமாக வசித்து வருகிறார். "வாழ்க தமிழ்! வாழ்க தமிழே! வாழ்வு பெற நானும் வந்தேனே" என்று முடித்திருக்கிறார். தமிழ் மீது அவர் கொண்ட அன்பு தெரிகிறது. அந்தத் தமிழும் நீடு வாழ்ந்து அந்தத் தமிழால் தானும் நீடு வாழ விரும்புவதை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்க்கடவுளின் சார்பாக குமரனையும் அவர்தம் குடும்பத்தாரையும் நீடு நிலைத்து இன்புற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.

நான் : நானும் வாழ்த்துகிறேன். (கூட்டத்தோட கோவிந்தா.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 19, 2006

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி

போன வாரம் மயிலாரைக் கூட்டிக் கொண்டு மீண்டும் forum mallக்குப் போனேன். அப்போது landmark கடையில் ஒரு ஒரிஜினல் தமிழ்க் குறுந்தட்டு வாங்கினேன். மயிலார் வம்பு செய்யாமல் இருக்க அவருக்குக் கந்தன் கருணைக் குறுந்தட்டும் வாங்கிக் கொடுத்தேன். நான் வாங்கியது டௌரி கல்யாணம் என்ற திரைப்படம். மிகச்சிறு வயதில் மதுரைக்கு விடுமுறையில் சென்றிருந்த பொழுது விஜயலட்சுமி திரையரங்கில் பார்த்தது. அப்பொழுது புரியாமலேயே படம் ஏனோ பிடித்திருந்தது. அந்த நினைப்பில் குறுந்தட்டை வாங்கி விட்டேன்.

விசு நடித்து இயக்கிய படம். சென்னைப் புறநகர்க் கிராமங்களான தின்னனூர் எனப்படும் திருநின்றவூரை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். விசு, விஜயகாந்த், ஸ்ரீவித்யா, விஜி மற்றும் எஸ்.வீ.சேகர் நடித்தது. எளிமையான கதை. எளிமையான பின்புலம். அழகான வசனங்கள். தேவையான அளவு நடிப்பு. படமும் வெற்றி அடைந்ததில் வியப்பில்லை. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

சரி. கதைக்கு வருவோம். அந்தப் படத்தில் விசுவின் சகோதரி விஜி. விசுவின் குடும்ப நண்பர் விஜயகாந்த். விஜயகாந்த் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள். விஜியைத் தங்கை போல நினைப்பவர். விஜிக்கும் அவர் அண்ணனைப் போல. அடிக்கடி வீட்டுக்கு வந்து விஜயகாந்தின் மகளைப் பார்த்துக் கொள்வார். இதைப் பார்த்த விஜயகாந்தின் மாமியார் விஜயகாந்தின் அம்மாவிடம் சொல்லி விஜியை விஜயகாந்திற்குக் கட்டி வைக்கச் சொல்வர். இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எல்லாரும் ஒரு திருமணத்திற்குப் போக வேண்டி வரும்.

திருமணத்தைப் பார்த்ததும் விஜயகாந்திற்குக் கற்பனை பிறக்கும். தங்கை விஜிக்குத் திருமணம் செய்து வைக்கும் அண்ணனாகக் கனவு காண்பார். காட்சி ஊட்டிக்குத் தாவும். விஜி பட்டுச் சேலையில் இருப்பார். இவர் சட்டையும் பேண்ட்டும் அணிந்து பாடுவார். மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே என்று தொடங்கும் பாடல். நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பேன் என்று பாடுவார்.

அடுத்து விஜியின் கற்பனை. அண்ணன் விஜயகாந்த்திற்கு நல்ல அண்ணியைக் கொண்டு வருவதாக கற்பனை செய்து பாடுவார். இப்பொழுதும் கற்பனையில் ஊட்டி. ஆனால் விஜயகாந்த் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு துண்டும் தோளில் போட்டுக் கொண்டு வருவார். பாவாடை தாவணி அணிந்து கொண்டு விஜயகாந்தின் மகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடுவார். இப்பொழுது வாணி ஜெயராமின் முறை.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே
ரம்பைகளைச் சபைக்களைத்து கண்ணகியைக் கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பிஞ்சு மகள் கொஞ்சும் மொழி பஞ்சனையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓ
நெஞ்சினிலே தாலாட்டுவேன் (ஸ்ரீராமன் ஸ்ரீதேவி...

அடுத்த காட்சியில் விஜயகாந்தின் தாயார் யோசிப்பார். விஜயகாந்தின் மாமியார் என்னவென்று கேட்க. இருவரையும் ஜோடியாக வைத்துப் பார்ப்பதாகச் சொல்வார். இப்பொழுது மறுபடியும் பாடலின் தொடர்ச்சி ஊட்டியில். விஜயகாந்தும் விஜியும் மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பாடுவார்கள். இந்த முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் இணைந்து பாடுவார்கள்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே....

சரி. சரி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கின்றீர்களா? ஒரு குறைந்த செலவுப் படத்தில் வருகின்ற ஒரு பாடல் காட்சியை இப்பொழுது சொன்னேன். அந்த ஒரு பாடலில் எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்த்தீர்களா? இந்தக் காட்சியை மெல்லிசை மன்னருக்கும் ஆலங்குடி சோமுவிற்கும் விசு விளக்கமாகச் சொல்லியிருப்பார். அவர்களும் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதை இசையிலும் பாடலிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலைக் பார்த்தால் ஒவ்வொரு பகுதிக்கும் வித்தியாசங்கள் காட்டியிருப்பது தெளிவாகவும் அழகாகவும் தெரியும்.

என்னதான் சொல்ல வருகிறேன்? இன்றைக்குத் திரைப்படங்களில் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை எப்படி இயக்குனர்கள் விளக்குவார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆறு சூழ்நிலைகளுக்குள் பெரும்பாலான பாட்டுகளை அடக்கி விடலாம்.
1. கதாநாயகன் அறிமுகப் பாட்டு
2. கதாநாயகி தனியாக ஆடும் பாட்டு
3. காதல் பாட்டு
4. குத்துப் பாட்டு
5. Western Style பாட்டு
6. நகைச்சுவை நடிகர்/நடிகை பாட்டு

இதற்கு மேலும் காட்சிகள் வெகுசில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே வருகின்றன. சேரன், பாலா, தங்கர் என்று ஒரு சிலரே. ஏனிப்படி? பாடல்கள் என்பவையே இயல்புக்கு அப்பாற்பட்டவைதான். ஆனால் அதிலும் எத்தனை வகையான சூழ்நிலைகளைக் காட்டியிருக்கிறார்கள். இது மாதிரி புதுமாதிரி சூழ்நிலைகள் ஏன் இன்றைக்கு நமக்குக் கிடைப்பதில்லை. இன்றைய பாடல்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன். தாளம் போடுகிறேன். ஆனாலும் கதைகளில் மாறுபட்ட சூழ்நிலைப் பாடல்களுக்கான தேறுதல் இல்லை என்பதும் உண்மைதான். சேரனின் பொற்காலம் படத்தில் வரும் "கருவேலங் காட்டுக்குள்ள" பாடலும் எவ்வளவு உணர்வுப் பூர்வமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இன்னும் நிறைய அடுக்கலாம்.

நல்ல கதைகளுக்குத் திரைப்படத்தில் இடமில்லாமல் போனது வருத்தம்தான். வித்தியாசமான கதைகளைப் படமாக எடுத்தால் பார்க்க மாட்டர்கள் என்று இல்லை. அதை எடுக்கும் துணிவு பலருக்கும் இல்லை என்பதே உண்மை. பணமும் குறிக்கோள் என்றிருந்த நிலையிலிருந்து பணம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்? என் காதில் இன்னமும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் பாடுவது கேட்கிறது. பழையதோ புதியதோ இது போன்று வித்தியாசமான சூழ்நிலைப் பாடல்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 15, 2006

டாவின்சி கிரெய்ல்

இந்த டாவின்சி கோடு புக்கப் படிச்சாலும் படிச்சேன். ஒரே குழப்பம். எத நம்புறது எத நம்பக்கூடாதுன்னே தெரியலை. ஆனா கத படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு. ரெண்டு மூனு மூச்சுகள்ல படிச்சு முடிச்சிட்டேன். (ஒரே மூச்சுல படிக்க முடியலை. நேரமில்லாமத்தான்.)

இப்ப இந்தக் கதையப் பத்தித் தோண்டித் துருவிப் படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் மாட்டுச்சு. அத உங்ககிட்டப் பகுந்துக்கனுமுன்னு விஷயத்தைச் சொன்ன வெப்சைட் சொன்னதால இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போச்சு.

கடைசி விருந்து (The Last Supper) அப்படீங்குற ஓவியத்த லியனார்டோ டாவின்சி வரைஞ்சிருக்காராம். (லியனார்டோன்னாலே அடுத்து டிக்காப்ரியோதான் வருது. எல்லாம் சினிமா பண்ற வேலை.) அந்தப் ஓவியத்துல ஏசுநாதர் தன்னோட சிஷ்யர்களோட கடைசியா விருந்து சாப்பிடுறத படமா போட்டிருக்காராம் டாவின்சி.

அதுல பயண்படுத்துன குவளை (grail) ரொம்பவே பிரபலமானது. புனிதமா கிருஸ்துவர்கள் நினைக்கிறதுதான் இந்தக் கிரெயில் குவளை.Indiana Jones படத்துல கண்டுபிடிக்கிறதா வருமே அந்தக் குவளைதான் இந்தக் குவளை.

டாவின்சி கோடு புத்தகம் பத்தி எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க. அது ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் உண்டுன்னு சொல்ற புத்தகம். அதுக்கு ஆதாரமாத்தான் டாவின்சியோட படங்களை ஆதாரமாக் காட்டுது. இன்னும் நெறைய விஷயங்களையும் சொல்லுது. புத்தகத்துல சொல்றது உண்மையோ பொய்யோ....ஆனா புத்தகத்தப் படிச்சப்புறம் ஏசுநாதர் மேல எனக்கு அன்பு கூடீருச்சுங்குறத ஒத்துக்கத்தான் வேணும்.

ஏசுநாதருடைய மனைவியின் பேரு மேரி மகதலின் (Mary Magdaline) அப்படீன்னு இந்தப் புத்தகம் சொல்லுது. அவங்களை ஒரு விபச்சாரின்னு தேவாலயங்கள் சொல்லுதாம். அவங்களோட புகழை மறைச்சு தேவாலயங்கள் புகழ் பெற அப்படிச் செஞ்சுட்டாங்கன்னு இந்தப் புத்தகம் சொல்லுது.

அப்படி மேரி மகதலினோட புகழ தேவாலயங்கள் மறைச்சாலும் ஒரு குழுவினர் அந்த ரகசியத்தைக் காப்பாத்தி இன்னமும் வெச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி ரகசியம் தெரிஞ்ச ஒருத்தர்தான் டாவின்சின்னு இந்தப் புத்தகம் சொல்லுது. தனக்குத் தெரிஞ்ச ரகசியத்த தன்னோட ஓவியங்களில் இலைமறை காயா வெச்சுட்டுப் போயிருக்காருன்னும் பலர் நம்புறாங்களாம்.

அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா கடைசி விருந்து ஓவியத்தைச் சொல்றாங்க. கடைசி விருந்து ஓவியத்துல ஏசுநாதர் நடுவுல இருக்க, மொத்தம் பதிமூனு பேரு இருப்பாங்க. ஏசுநாதரோட கடைசி விருந்துல கலந்துகிட்டவங்களோட எண்ணிக்கை பதிமூனாம். அதுனாலதான் 13ங்குற எண் கிருஸ்துவர்களுக்கு நல்லதில்லைன்னும் ஒரு நம்பிக்கையாம். கடைசி விருந்து படத்தைக் கீழ குடுத்திருக்கேன். ஒரு வாட்டி நல்லா பாத்துக்கோங்க.



ஆனால் டாவின்சி வரைஞ்ச கடைசி விருந்து ஓவியத்துல ஹோலி கிரெய்ல் குவளையே இல்லை. அப்ப கிரெயில்னா என்னன்னும் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்புது. விடையும் சொல்லுது. கிரெயில் அப்படீங்குறது ஏசுநாதரின் ரத்தத்தைத் தாங்கும் குவளை அல்ல. மாறாக ஏசுநாதரின் இரத்தத்தை வயிற்றில் சுமந்த மேரி மகதலின் அப்படீன்னு விளக்குது. ஏசுநாதருக்கு வலப்பக்கம் உக்காந்திருக்குறது ஆண் இல்லை. ஒரு பெண் அப்படீன்னும் இந்தப் புத்தகத்துல சொல்லீருக்கு. படத்த நானும் பாத்தேன். எனக்கும் அந்த உருவம் பொண்ணு மாதிரிதான் தெரியுது. குறிப்பா நெளிவு சுளிவுகள். இந்த ஓவியத்த லூவர் மியூசியத்துல நான் நேருலயே பாத்திருக்கேன். பெருசா....அப்பக் கூட இருந்த ஒரு நண்பன் ஏசுநாதர் பக்கத்துல இருக்குறது பொண்ணுன்னு சொன்னது சரியா மனசுல பதியல. ச்சே...தெரிஞ்சிருந்தா நல்லா பாத்திருப்பேனே. சரி. அடுத்த வாட்டி பாத்துக்கலாம். (எப்ப போகக் கெடைக்குதோ!)

எழுத்தாளர் டான் பிரவுன் (Dan Brown) இந்தப் புத்தகத்துல சொல்லீருக்குற கருத்துக்கு ஆதரவு இருக்குற அளவுக்கு எதிர்ப்பும் இருக்கு. அதே சமயத்துல அவரும் டாவின்சியோட குறிப்புகளைச் சரியா கவனிக்கலைன்னும் சொல்லிக்கிட்டு இருக்குது ஒரு கூட்டம். அவரால கண்டு பிடிக்க முடியாததை நாங்க கண்டுபிடிச்சிருக்கோமுன்னும் சொல்லிப் பெருமைப் பட்டுக்குறாங்க. அதுவும் கடைசி விருந்து ஓவியத்துல.

"அந்த ஓவியத்துல குவளை இல்லைன்னுதான டான் பிரவுன் சொல்றாரு. ஆனா எங்களுக்குக் குவளை தெரியுது. அத நிரூபிக்கிறோம்"னு மார் தட்டுது ஒரு கூட்டம்.

அந்த ஓவியத்த கம்ப்யூட்டருல போட்டு கசக்கிப் பிழிஞ்சி ஏதாவது தேருமான்னு தேடிப் பாத்திருக்காங்க. அவங்க கண்ணுல மாட்டீருக்கு ஒரு குவளை. அதத்தான் இவங்க ஹோலி கிரெயில் (புனிதக் குவளை)ன்னு சொல்றாங்க. கீழ இருக்குறது கம்ப்யூட்டர்ல புராசஸ் பண்ணுன படம். அதுல ஏசுநாதருக்கு வலது கோடீல இருக்குறவரு தலைக்கு மேல பாருங்க. ஒரு குவளை தெரியுதா? அதுதான் டாவின்சி சொல்ற ஹோலி கிரெயிலாம்.



அதத் தெளிவாக் காட்ட அந்தக் குவளையத் தவிர ஓவியத்துல இருக்குற எல்லாத்தையும் கருப்பு-வெள்ளைக்கு மாத்தீருக்காங்க. கீழ இருக்குற படத்தப் பாருங்க.



இப்ப இந்தப் படத்துல அந்த புனிதக் குவளை தெளிவாத் தெரியுதா? அப்படியே கொஞ்சம் மேல போய் உண்மையான ஓவியத்தைப் பாருங்க. உங்க கண்ணுக்குக் குவளை தெரியுமுன்னு இந்த இணையதளம் சொல்லுது.

ஆமா. என்னோட கண்ணுக்கும் தெரியுது. தெள்ளத் தெளிவா ஒரு குவளை. ஆனா அந்தத் தூணுக்குப் பின்னாடியிருக்குற ஒவ்வொரு தூண்லயும் ஏதோ மங்கலா தெரியுற மாதிரி இருக்கு. சரி. தெளிவாத் தெரியலையே.........அதுனால இந்தக் குவளை தெளிவாத் தெரியுதுன்னு விட்டுருவோம். ஆனா இன்னொரு கேள்வி தோணுதே. குவளையத் தெளிவாக் காட்டனுமுன்னு டாவின்சி முடிவு செஞ்சிருந்தா அத ஏன் தூண்ல காட்டனும். ஏசுநாதருக்கு முன்னாடியே காட்டீருக்கலாமே. என்னவோ ஒன்னுமே புரியலை. புத்தகம் படிக்க விறுவிறுப்பாப் போச்சு. அத வெச்சு நமக்கும் நல்லாப் பொழுது போகுது. இன்னும் இது மாதிரி விறுவிறுப்பான சமாச்சாரங்கள் இருந்தா சொல்லுங்க....

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 12, 2006

போகியிலேயே பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுன்னா பொங்கல் அன்னைக்குக் குடுப்பாங்க. ஆனா பாருங்க...தினமலர் பத்திரிகைல பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடி வர்ர போகிப் பண்டிகை அன்னைக்கே குடுத்துட்டாங்க.

அதாங்க. நம்ம வலைப்பூ முகவரியக் கொடுத்து, கூடவே கண்டு பிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசு மாதிரி இருக்குற நம்ம போட்டவப் போட்டு (நம்ம முழியோ ஒரு மாதிரி!) அறிமுகம் கொடுத்திருக்காங்க.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி தினமலர்.

வலைப்பூவத் தொடங்கிய பெறகு, அதுக்குத் தமிழ்மணம் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய வலைப்பூவ எல்லாருக்கும் எடுத்துட்டுப் போய் உதவி செஞ்சு...நட்சத்திரமாக்கி...இன்னும் பிரபலப்படுத்தி...என்ன சொல்றது. ரொம்ப நன்றி தமிழ்மணம். (இப்போ நந்தவனம்). ரொம்ப ரொம்ப நன்றி.

வலைப்பூவுல பல விஷயங்கள எழுதீருக்கேன். கத, கவித, கட்டுர, தமிழ் இலக்கியம், ஆன்மீகமுன்னு. கந்தர் அலங்காரங்கத்து விளக்கம் எழுதுனதுண்டு. திருப்பாவைக்கு அடுத்து. கதைகளும் ஒரு ஏழெட்டு இருக்குமே. ஆனா பாருங்க.......நமக்குப் பொழப்பக் கொடுத்து உப்புப் போட்ட பெங்களூருதான் இந்த வாட்டியும் பரிசக் குடுத்திருக்கு. பெங்களூரு ஒரு நன்றி.

என்னதான் எழுதுனாலும் யாருமே கண்டுக்காமப் போனா நல்லாவா இருக்கும்? நம்ம எழுத்துல இருக்க நல்லது கெட்டது நமக்குத் தெரிய வேண்டாமா? அதுக்கெல்லாம் நீங்க எல்லாரும் போட்ட பின்னூட்டங்களும் கருத்துகளும் பலவிதங்களில் உதவியிருக்கு. இப்பவும் என்னுடைய பேரு வந்திருக்குன்னு மொதல்ல ஃபோன் பண்ணிச் சொன்ன தி.ரா.ச, அப்புறம் வலைப்பூவுல அத மகிழ்ச்சியா வந்து சொன்ன மாயவரத்தான், சிங்.செயகுமார், துளசி கோபால், குமரன், அப்புறம் இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்ட வாழ்த்து போடப் போற உங்கள் எல்லாருக்கும் என்ன சொல்றது? நன்றிதான். ரொம்ப நன்றி நண்பர்களே!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு. நான் ஒரு வாட்டி நன்றி மறந்தேன். அது என் மனசுல இன்னும் இருக்குது. முள்ளாக் குத்துது. அதுனால இப்ப எல்லாருக்கும் நன்றி சொல்றேன். விட்டுப் போனவங்க. சொல்ல மறந்தவங்க. எல்லாருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

வழக்கமா நான் அன்புடன்னு முடிப்பேன். இந்த வாட்டி........

நன்றியுடன்,
கோ.இராகவன்

ஒன்னு அஞ்சு வாடு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கன்னட நண்பனோடையும் பெங்களூருலயே பொறந்து வளந்த தமிழ் நண்பனோடையும் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு பிரச்சனை வந்தது.

தமிழ் நண்பனுக்குத் தமிழ் சரியாப் படிக்க வராது. அவனுடைய அக்காவுக்கும் அப்படித்தான். அவங்க எனக்கும் அக்காதான். ஆனா அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா தமிழ் படிக்க வரும். தினமும் பேப்பர் வாங்கிப் படிப்பாங்க.

அன்னைக்கு வந்த பேப்பர்ல ஒரு சமையல் குறிப்பு. அது என்னன்னு அக்காவுக்குத் தெரிஞ்சே ஆகனும். ஆனா அப்பாவும் வீட்டுல இல்ல. அம்மாவோ வேலையா இருக்காங்க. நானும் மத்த ரெண்டு நண்பர்களும் உக்காந்து கதை பேசீட்டு இருந்தோம்.

அப்ப எங்கிட்ட வந்து அந்தப் பேப்பரக் குடுத்து அதப் படிக்கச் சொன்னாங்க. நானும் படிச்சுச் சொன்னேன். அப்ப கூட இருந்த கன்னட நண்பன் ஆர்வத்துல பேப்பரப் பாத்தான். பாத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா அதுல நம்பரெல்லாம் இங்கிலீஷ் நம்பரா இருந்தது. நெய்க்கு நேரா 1 கப்புன்னு எழுதீருந்தது. அப்படித்தான் மத்த பொருட்களுக்கும்.

இதுல ஆச்சரியப் பட என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? கன்னடத்துல எழுதும் போது நம்பரும் கன்னடத்துலயே எழுதுவாங்களாம். ஆனா நம்ம தமிழ்ப் பேப்பர்ல இங்கிலீஷ் நம்பர் இருக்கேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டான்.

அப்பப் பாத்து குண்டத் தூக்கிப் போட்டான் தமிழ் நண்பன். அதாவது கன்னட நண்பனுக்கு விளக்கம் சொல்றானாம். "தமிழ்ல நம்பரே கிடையாதே. அதுனாலதான் இங்கிலீஷ் நம்பரப் போடுறாங்க...."

அட ஆண்டவா! இப்பிடிக் கேக்க வேண்டிய நெலம எனக்கு வந்துருச்சேன்னு வருத்தப்பட்டேன். ரெண்டு பேருக்கும் குறுக்க விழுந்து தமிழ்லயும் நம்பர் இருக்குன்னு அழுத்திச் சொன்னேன். ஆனா கொடுமைக்கு ரெண்டு பேருமே நம்பலை. அப்படி இருந்துச்சுன்னா அத ஒடனே நிரூபிக்கனுமாம். எனக்குத் தமிழ் தெரியுமில்லையா...அதுனால நான் ஒடனே எழுதிக் காட்டனுமாம்.

அவமானம். அவமானம். ரொம்பவே அவமானம். தெரியாதுன்னு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. தெரியாததைத் தெரியாதுன்னுதான சொல்லனும். அதுல அவமானம் இல்லை. ஆனா தெரியாத நிலமை அவமானம்தானே. தமிழ் எழுத்துகள இவ்வளவு படிக்கிறோம். ஆனா எண்கள விட்டுட்டோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். சரிதான். இப்ப ஒரு கண்ணுல பாக்குறோமா? இல்லை. இங்கிலீஷ் நம்பர்கள் பயன்படுத்துறோமே. ஆனா நம்ம எண்கள ஏன் தொலச்சிட்டோம்?

வங்க நண்பர்கள் எனக்குண்டு. அவங்களும் நெறைய படிப்பாங்க. அவங்க புத்தகத்துல எல்லாமே வங்காளத்துல இருக்கும். பக்க எண். விலை. முகவரில வர்ர எண். எங்கெல்லாம் நம்ம 123 போடுறோமோ....அங்கயெல்லாம் நம்பர் இருக்கும். கன்னடத்துலயும் அப்படித்தான். பஸ்சு நம்பர் கூட இப்பல்லாம் கன்னடத்துல அங்கங்க தென்படுது. ஹிந்திக்காரங்களும் ஹிந்தி நம்பரத்தான பயன்படுத்துறாங்க. என்னவோ போங்க!

ஆனாலும் கொஞ்சம் லேசா சமாளிக்க முடிஞ்சது. அதுகூட எங்க பட்டிக்காட்டு வழக்கால. எல்லாம் பட்டிக்காட்டுல படிச்ச சில பேச்சு வழக்குகலால.

விளாத்திகுளம் பக்கத்துல இருக்குற புதூர்தான் எங்க மூதாதையார் ஊர். தூத்துக்குடீல நான் இருந்தப்ப் அடிக்கடி போயிருக்கேன். அப்புறமா பண்டிக்கைக்கும் விசேசத்துக்கும் மட்டுமுன்னு கொறஞ்சு போச்சு.

நான் போறப்பல்லாம் எனக்கு கருவாடு செஞ்சித் தருவாங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுனால போகும் போதெல்லாம் கேக்குறது வழக்கமாப் போச்சு. பட்டிக்காட்டுப் பக்குவம் பிரமாதமா இருக்கும். அதுனால என்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு கிண்டலாக் கூப்புடுவாங்க.

அதென்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு பாக்குறீங்களா! தமிழ்ல ஒன்னுங்குறதக் குறிக்க க-ன்னு எழுதுவாங்களாம். ரு போட்டா அது அஞ்சு. கரு-ன்னா ஒன்னு அஞ்சு தான. அப்ப ஒன்னு அஞ்சு வாடுன்னா கருவாடு. இப்பப் புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். (கரு-ன்னா பதினைஞ்சுதானன்னு இப்ப நீங்க கேக்கலாம். ஆனா அது இத்தன வெளக்குனப்புறந்தானே. வெளக்காமலேயே அவங்க சொன்னதால ஒன்னு அஞ்சு சரீன்னே வெச்சுக்கலாம்.)

இந்த ரெண்டு எழுத்தையும் சொல்லித் தமிழோட மானத்தையும் என்னோட மானத்தையும் கொஞ்சம் காப்பாத்துனேன்.

அந்தப் பட்டிக்காட்டுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது படிச்சுப் பரதேசமெல்லாம் பாத்த படைப்பாளிகளான நமக்குத் தெரியாமப் போச்சே!

நம்ம நண்பன் சண்முகம் பழைய தமிழ் எழுத்துகளை அவனோட வலைப்பூவுல போட்டிருக்கான். இங்க கண்டிப்பாப் போய்ப் பாருங்க. படிச்சுக்குங்க. தமிழ் எழுத்துகளைத் தெரிஞ்சுக்குங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 09, 2006

பகலில் வந்த பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 03, 2006

மயிலார் போன ஃபோரம்

இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, December 31, 2005

2006லாவது இலங்கைக்குப் போவோம்

வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2006 உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

புத்தாண்டில் ஒரு புதிய பதிவு போட எண்ணியிருந்த வேளையில் கிடைத்ததுதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பில் எழுத வேண்டுமென்று இன்றைக்குத் தோன்றவில்லை. நான்கைந்து ஆண்டுகளாகவே உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும் ஆசையைத்தான் இன்று எப்படியாவது எழுதியே தீருவது என்று முடிவு கட்டி உட்கார்ந்து விட்டேன்.

தலைப்பு என்ன? 2006லாவது இலங்கைக்குப் போவோம். இந்த ஆண்டாவது நாம் இலங்கைக்குப் போக வேண்டிய ஒரு கட்டாயத்தை எனது மனம் உணர்த்தியதை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தலைப்பிற்குப் போவதற்கு முன்னர் கொஞ்சம் பாகிஸ்தானைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நான் தவறாகப் பேசப் போகிறேன் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அது என்னுடைய தலைப்பிற்குப் பொருந்தாது.

பாகிஸ்தானுடன் நல்லுறவு என்று இந்தியா எவ்வளவு மெனக்கெடுகின்றது. நாளொரு ஊரும் பொழுதொரு இடமுமாக குண்டுகள் வெடித்தாலும் இந்தியர்கள் மாண்டாலும் பாகிஸ்தானுடன் எப்பாடு பட்டாவது நல்லுறவு வேண்டும் என்று எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றது இந்திய அரசாங்கம். பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நிலைப்பாடுகளையும் மீறி எடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள். பாதி காஷ்மீர் போய் விட்டது. நிறைய அகதிகள் காஷ்மீரிலிருந்து வந்தாகி விட்டது. இன்னும் பிரச்சனைகள். கார்கில் போர். பாராளுமன்றக் கட்டிடத் தாக்குதல். கோயிலில் தாக்குதல். அங்கு இங்கு என்று இன்று பெங்களூரிலும் விஞ்ஞானிகளின் மீது தாக்குதல். மென்பொருள் நிறுவனங்களின் மீது குறிவைப்பு என்று பல தகவல்கள் உள்ளன. இவைகளுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் பெயர்களும் அவைகளோடு சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களும் படங்களும் கூட பத்திரிகைகளில் வருகின்றன.

இவையனைத்தையும் மீறி இந்திய அரசாங்கம் நல்லுறவுக்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றது. பஸ் விடுகின்றார்கள். திரைப்படக் கலைஞர்கள் போகின்றார்கள். கிரிக்கெட் வீரர்களின் பயணம். போர்க்கைதிகள் விடுதலை. இன்னும் பல. இவைகளை நம்மில் பலரும் ஆதரித்து பாகிஸ்தானுடம் நல்லுறவு கண்டிப்பாக வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமிழர்களிலும் அப்படி விரும்புகின்றவர்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். சில அரசியல் தலைவர்களின் பிறந்த ஊர்களே இன்றைய பாகிஸ்தானில்தான். பாதி பஞ்சாப் அங்குதான் இருக்கின்றது. ஆக பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

இதையெல்லாம் சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி நம்மிடம் வேறொரு காரணம் இருக்கின்றது. போக வேண்டிய வேறொரு இடம் இருக்கின்றது. அது ஏன் யாருக்கும் நினைவிற்கு வரவில்லை? தமிழ் மொழியைத்தான் காரணமென்று நான் குறிப்பிடுகின்றேன். இலங்கைத் தீவைத்தான் போக வேண்டிய இடமென்று குறிப்பிடுகின்றேன்.

இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. ராஜீவ் கொலையைக் காரணம் சொல்லலாம். அது தவறுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட குற்றங்களைப் பாருங்கள். பாராளுமன்றத்திலேயே தாக்குதல் நடந்திருக்கின்றது. இதெற்கெல்லாம் இடம் கொடுக்கின்றவர்கள் யாரென்று தெரிந்தும் நாம் பாகிஸ்தான் போகவில்லையா? போக விரும்பவில்லையா?

அப்படியிருக்க இலங்கையின் மீது மட்டும் என்ன பாரபட்சம்? அங்கு அடிபடுகின்றவன் தமிழன் என்பதலா? இலங்கைப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எடுக்க வேண்டிய முயற்சிகளை மத்திய அரசு நிச்சயமாக இப்பொழுது எடுக்காது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் மத்திய அரசிற்குப் பாகிஸ்தானைத் தெரிந்த அளவிற்கு ஈழத்தைத் தெரியாது. மேலும் அங்குள்ள தமிழன் தீவிரவாதியாத் தெரிகின்றான். அவன் போராடவில்லையென்றால் மாண்டு போவான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரிகின்றது! மத்திய அரசுக்கு நேரடியாக இன்னொரு நாட்டு அரசாங்கத்தை எதிர்ப்பது தர்மசங்கடமாகவே இருக்கும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவுறுத்தலாம் அல்லவா? அதுவும் செய்ய முடியாதா? ஐயோ! அங்கே நமது சகோதரன் உயிருக்கும் மானத்திற்கும் போராடிக் கொண்டிருக்கின்றானே!

இந்தியாவிற்கு எத்தனையோ நட்டங்களை உண்டாக்கிய காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தும் அதற்காகப் போராடும் பாகிஸ்தானுக்கு நட்புறவும் கொடுத்து வருகின்ற மத்திய அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் தமிழனின் தேவையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு இருக்கின்றது? நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு அதைச் செய்வதில் உள்ள தயக்கமும் வெறுப்பும் தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.

அவ்வப்பொழுது வைகோ பேசினால் அவருக்கும் ஐநூறு நாட்கள் சிறைத்தண்டனை. வைகோவின் கருத்துகள் மூடத்தனமானது என்று கெக்கெலி. தன் வாயாலேயே தனக்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றார் என்று குத்தல் பேச்சுகள்.

இந்தத் தமிழக அரசியல் கட்சிகளின் தயக்கமும் வெறுப்பும் தமிழக மக்களின் மனப் போக்கையே பிரதிபலிக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. தமிழகத் தமிழனுக்கே என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.

நான் எந்த ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகப் பேசவில்லை. பேச விரும்பவுமில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கேட்கின்றேன். இந்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசியல்வாதிகளிடமும் தமிழர்களிடமும் கேட்கின்றேன். உங்கள் கவனத்தைக் கொஞ்சம் தெற்கே திருப்புங்கள். நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்தால் அங்கு பிரச்சனை தீரும் என்று சொல்ல நான் அறிவாளியோ அரசியல் நிபுணனோ இல்லை. ஆனால் என் தமிழர் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னிடம் உண்டு.

நாமெல்லாம் அந்த வகையில் சிந்திக்கத் துவங்கினால் அரசியல்வாதிகளும் சிந்திப்பார்கள் என்று நம்புவோம். அவர்களால் கொஞ்சமாவது உந்தப்பட்டு இந்திய அரசாங்கமும் சிந்திக்கும் என்று விரும்புவோம். நல்ல வழி புலப்படும் என்று நம்புவோம். 2006லாவது இலங்கைக்குப் போவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ்மண நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.


வரப்புயர்ந்தாலே நல்லன அனைத்தும் உயரும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வரப்பு உயர்வதற்கும் நீர் வளம் வேண்டுமே. நீரின்றி அமையாது உலகு அல்லவா! அந்த நீரும் கரைக்குட்பட்டு சிறந்து செழிக்க வேண்டும். அதற்கும் ஒரு படம்.


அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 30, 2005

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

அவசர அவசரமாகப் பதிவு போட வேண்டியதாப் போச்சு. அதான் நம்ம குமரன் இப்படி ஒரு பதிவு போட்டாரு, அதுக்குப் பின்னூட்டம் கூடிப் போச்சு. அதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டம் எழுதுனா ரொம்ப இருக்கு....சரி பேசாம ஒரு பதிவாப் போட்டுரலாமுன்னு போட்டுட்டேன். படிச்சுட்டு சொல்லுங்க.

// சிவனுக்கு மூத்தவள் என்பதையும் a > b; b > c அதனால் a > c சூத்திரத்துக்குள் அடக்கலாமா தெரியவில்லை. //

குமரன், சூத்திரத்துக்குள் அடங்குகின்றவனா சூத்திரதாரி? இப்படிச் சூத்திரம் போட்டு இறைவனை முடிவு செய்ய முடியுமானால் விஞ்ஞானத்தால் இறைவனை எப்பொழுதோ நிரூபித்திருக்கலாம். ஆனால் இந்த அறிவை விட இறைவனை அறிய மெய்யறிவே தேவை. அதையும் அவந்தான் தர வேண்டும். தந்திருந்தாலும் நமக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது.

சமயங்கள் ஆறும் தனித்தனியாக எழுந்தவையே. ஆனால் இந்த ஆறில் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. சைவம், சாக்தம் கௌமாரம் ஆகிய மூன்றும் எனக்குத் தெரிந்த பழம் இலக்கியங்களில் இருந்தே வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, சங்க இலக்கியங்களி பார்த்தால் இதற்குச் சான்று கிட்டும். காணாபத்தியத்தைப் பழைய நூல்களில் காணவேயில்லை.

ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுந்து பிறகு ஒன்றானவை. அப்பொழுதுதான் இந்த உறவு முறைகள் உண்டாயின. ஆதித் தமிழ் மதத்தில் முருகக் கடவுளுக்கும் வள்ளிக்குமே தொடர்பில்லை என்று சொல்லவும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பிறகு அந்த இரண்டும் தமிழர் கலப்பால் இணைந்தன. தெய்வயானை ஆரியக் கலப்பில் இணைந்தார். இப்படி செறிவூட்டப் பட்டுக்கொண்டே இருந்தன. இது சாதகங்கள் மட்டுமின்றி பாதகங்களையும் உண்டாக்கியது உண்மைதான். ஆகையால்தான் ஆதி நூல்களைப் பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டுமே புகழ்ந்திருக்கும்.

பின்னாளில் செறிவூட்டப்பட்ட காலத்தில்தான் யார் பெரியவர் என்ற வீண் விவாதங்கள் நடை பெற்றன. சிவனே பெரியவர் என்றோ திருமாலே பெரியவர் என்றோ யாரேனும் வாதிட்டிருந்தால் அவர்கள் உண்மையிலேயே இறையருளைப் பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.

மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்று சொன்ன அருணகிரிதான் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" என்று குழப்பிமில்லாமல் கூறியிருக்கின்றார். கந்தரநுபூதியில் ஆங்காங்கு இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்". அதாவது அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் மெய்ஞான தெய்வத்தைக் குறிகளைக் குறியாது குறித்து அறியும் மெய்யறிவை வேல் (ஞானத்தின் வடிவம்) தர வேண்டும் என்பதே. ஆழப் போனவர் கண்டது இதுதான்.

அதையும் முழுதாகச் சொல்ல வந்து சொல்ல முடியாமல் முடியவில்லை என்று முக்கி விடுகின்றார் அருணகிரி. "அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" கண்டவர் விண்டிலர் என்பது உறுதியாகின்றது.

உண்மையான இந்திய நாட்டு மதவியல் கோட்பாடுகளின் படி நூறு பேரைச் சொன்னாலும் நூறு விதமாய் வணங்கினாலும் நூறூ இடங்களுக்குப் போனாலும் எல்லாம் ஒன்றே. ஒன்றே. ஒன்றே. அதை மறுத்து உரைப்பவரை ஏற்பது கடினம்.

சரி. அபிராமி பட்டருக்கு வருவோம்.
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

இது அம்பிகையைப் பற்றிச் சொல்லியது. பொதுவாக எந்தச் செய்யுளுக்கும் பொருள் கொள்ளும் பொழுது நேரடியாகப் பொருள் கொள்வது உண்டு. கடலையைப் பார்த்து கடலை உருண்டை என்று சொல்வது போல. உடைத்துப் பார்த்தால் உள்ளே பருப்பிருக்கும். உள்ளே இருப்பது பருப்பா வெறுப்பா என்பது உடைத்தால்தானே தெரியும். ஆகையால் சொற்களை முறையாகப் பகுத்துப் பொருள் கொள்ள முயல வேண்டும்.

அப்படி நானும் முயன்றதாக நம்பிக் கொண்ட பொருளை இப்பொழுது விளக்குகின்றேன்.

நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆகையால் கெட்டவனை விட நல்லவன் குறைந்தவன் என்று பொருள் கொள்ள முடியுமா? இது தனி. அது தனி. இந்த முறையைத்தான் மேற்கூறிய அபிராமி பட்டரின் வரிகளுக்கும் கொள்ள வேண்டும்.

ஆதிநாதன் சிவபெருமான். ஆகையால் அது முன்னது. அந்த முன்னதுக்கும் முன்னது முன்னதாகத்தானே இருக்க வேண்டும். வீரனை வீரனே வெல்ல முடியும். ஆக சிவத்தைச் சிவமே வெல்லும். அப்படி முந்தி வெல்வது சிவசக்தியே. அதுதான் கறைகண்டனுக்கு மூத்தவளே.

பின்னைப் புதுமைக்கும் புதுமை என்பார்கள் அல்லவா. அதுதான் இங்கும். முன்னைக்கும் முன்னை என்றால் கிழவியா? இல்லை என்றும் குமரிதான் என்று சொல்லத்தான் மூவா முகுந்தற்கு இளையவளேன்னு அபிராமி பட்டர் சொல்லியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

இதில் முன்னைக்கு முன்னை. பின்னைக்குப் பின்னை என்றும் பொருள் கொள்ளலாம். ஐ என்றால் கடவுள். முன்னை என்றா முதற் கடவுள். முதற் கடவுளுக்கும் முதற் கடவுள். பின்னைக்குப் பின்னை...பின்னால் வந்த கடவுளுக்கும் பின்னால் என்றும் புதுமையாக இருப்பது.

சரிதானா நண்பர்களே!

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, December 14, 2005

பெங்களூர் பெயர்க்காரணம்

பெங்களூர் இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெயர் பெற்றுள்ள ஊர். உச்சரிப்பதற்கு கொஞ்சம் புதுமையான பெயரும் கூட. ஆனால் இதன் உண்மையான பெயர் என்ன?

இப்பொழுது அந்த உண்மையான பெயரைத் தேடி எடுத்துதான் பெங்களூருக்குச் சூட்டப் போகின்றார்களாம். ஆம். பெங்களூரு என்ற பெயரைச் சூட்டப் போகின்றார்களாம்.

சரி. அது அரசியல். நம்மூரிலும் வடக்கிலும் கேரளாவிலும் நடந்ததுதானே. கர்நாடகா மட்டும் விதிவிலக்கா என்ன! ஆகையால் அந்த விஷயங்களை விட்டு விட்டு இந்தப் பெயரின் மூலகாரணத்தைப் பார்ப்போமா!

பெங்களூரு என்பதை விட பெந்தகாளூரு என்பதே மிகச்சரியான பழைய பெயர். தமிழில் வகரம் வரும் இடங்களில் பகரம் (ba) போட்டு விட்டால் அது கன்னடமாகி விடும். பெரும்பாலான சமயங்களில் இது நடக்கும். வா என்றால் பா. வந்து என்றால் பந்து. வண்டி என்றால் பண்டி. அது போலத்தான் வெந்த என்றால் பெந்த.

பெந்த என்றால் வெந்ததைக் குறிக்கும். காளு என்றால் பயறு. பெந்த காளு என்றால் வெந்த பயறு.

கெம்ப்பே கௌடா என்பவர்தான் பெங்களூரின் தந்தை. அதாவது சிறுசிறு ஊர்களைச் சேர்த்துக் கொஞ்சம் பெரிய ஊராக்கி ஆண்டவர். பெரிய கோட்டை என்று எதுவும் கட்டி விடவில்லை.

எல்லையில் மண்சுவர்களை பெரிதாக எழுப்பிப் பாதுகாப்புத் தூண்களையும் நிறுவியிருக்கின்றார். அங்கு ஆட்கள் காவலுக்கு நிற்பார்களாம். இந்து நடந்தது 1537ல். அதற்குப் பிறகு நூற்றுச் சொச்ச வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் பிஜாப்பூர் சுல்தான்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றது.

ஆனால் பிஜாப்பூரில் உட்கார்ந்து கொண்டு பெங்களூரைச் சமாளிக்க முடியவில்லை. (இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.)
எதற்கு வம்பென்று பிஜாப்பூர் சுல்தான் பெங்களூரை மைசூர் மகாராஜாவிற்கு குத்தகைக்கு விட்டு விட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திப்பு சுல்தான், ஆங்கிலேயர் எனப் பல கைகள் மாறி இன்றைக்கு இந்த அளவிற்குப் புகழோடு இருக்கின்றது.

சரி. நாம் பெயர்க் காரணத்திற்கே வரவில்லை. தனக்கென்று ஒரு சிறிய நாட்டை உருவாக்கிக் கொண்டிருந்த கெம்ப்பே கௌடா இன்றைய பெங்களூரின் அன்றைய பகுதிக்கு வந்த பொழுது அங்கிருந்தவர்கள் அவருக்குச் சாப்பிட வேகவைத்த பயறுகளைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதாவது மொச்சைப் பயறு. பெங்களூரில் மொச்சை என்றால் எல்லாருக்கும் இச்சை. அந்த அளவிற்கு விரும்பப் படுகிறது. உப்புமாவிலும், சோற்றிலும், அனைத்திலும் கலந்து உண்ண விரும்புவார்கள். கன்னடத்தில் அவரேக்காயி என்பார்கள். இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். அப்படிப் பிதுக்கி எடுத்த தோலை வீட்டு வாசலில் போட்டு விடுவார்கள். அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.

அப்படிச் சாப்பிட்ட மொச்சை நன்றாக வெந்திருந்ததால் அந்த இடத்திற்கு பெந்தகாளூரு என்று பெயரிட்டார் கெம்ப்பே கௌடா. பிறகு அங்கே இருப்பவர்களுக்குக் காவலாக இருந்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.

அந்த பெந்தகாளூருதான் மருவி இன்று பெங்களூர் என்று வழங்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பேங்களூர். ஒவ்வொரு மாநிலமாக பெயர்கள் மாறி வருகின்ற வேளையில் பெங்களூர் அரசியல்வாதிகள் மட்டும் சும்மாயிருக்கலாமா? மண்ணின் மணம் வீசும் பெயர் இருக்க வேண்டும் என்று பெங்களூரு என்று பெயரை மாற்றுகின்றார்கள்.

அதற்கு வழக்கம் போல பலர் எதிர்த்தும் பாராட்டியும் கருத்துகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் பேசிய வரையில் என்னுடைய கன்னட நண்பர்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தில் வருத்தத்தை விட மகிழ்ச்சியே மேலோங்கியிருந்தது தெரிந்தது. எல்லாம் மொழி செய்யும் வேலைதானே.

வடக்கத்தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இந்தப் பெயர் மாற்றத்தை மறைமுகமாகக் கிண்டலடித்தாலும் மும்பை முகவரியில் பாம்பே என்று எழுதாமல் மும்பை என்றே குறிப்பிடுகிறது. நம்ம கதை நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நமது கன்னட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் பெங்களூரின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 09, 2005

பழம் தின்னு கொட்டை போட்டவன்

பழம் தின்னு கொட்டை போட்டவன்

கீழ்க்கண்ட பதிவில் தருமி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். பாண்டியனுக்கு மட்டுந்தான் ஐயம் வரவேண்டுமா? தருமிக்கு வரக்கூடாதா? வந்து விட்டதே!
தருமிக்கு வந்த சந்தேகம்

இந்தப் பழமொழி மிகவும் பிரபலம். யாரைக் கேட்டாலும் ஒரு முறையாவது சொல்லியிருப்பார்கள். அந்த அளவிற்குப் பிரபலம். ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்ன? யாரைக் கேட்டாலும் முழிப்பார்கள். ஆனால் பாருங்கள். நமது நண்பர் குமரன் அழகான ஒரு தமிழ்ப் பாடலைத் தேடி நமக்காகத் தந்து விளங்காததை விளங்க வைத்திருக்கின்றார். அந்தப் பாடல் கீழே இருக்கிறது.

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்

ஆதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? சிவபெருமானைத்தான். அனாதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? முருகப் பெருமானைத்தான்.

ஆதிநாதன் என்றால் அவனே அனைத்திற்கும் ஆதி. அதாவது தொடக்கம். அப்படி ஆதியாக நிற்பவன் என்கின்ற விரிசடைக்கடவுளே அனைவருக்கும் மூத்தவர் அல்லவா!

அனாதிநாதனுக்கு வருவோம். ஆதி என்றாலே ஒரு தொடக்கம் இருக்கிறது அல்லவா. ஆனால் இறைவன் அப்படியா? தொடக்கமும் முடிவும் உள்ளவனா இறைவன்? அனாதி என்றால் தொடக்கம் இல்லாதவன். தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்க வேண்டுமே!

பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. ஆனால் முருகப் பெருமான் பிறக்கவில்லை. உதித்தார். "ஒரு திரு முருகன் உதித்தனன்." உதிப்பது என்பது ஏற்கனவே இருப்பது. காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கின்றது. அந்தச் சூரியன் நேற்றும் இருந்தது. அருணகிரியும் இதைத்தான் "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார்.

அப்படியென்றால் முருகப்பெருமான் சிவனை விடப் பெரியவரா? அப்படியெல்லாம் நாம் முடிவு கட்ட முடியாது. ஏன் தெரியுமா? எல்லாம் ஒன்றுதான். தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர். இதற்கும் தமிழ் விளக்கம் சொல்லியிருக்கிறது.

சிவனைப் பார்வதியோடு சேர்த்துப் புகழ்வது எங்கும் நடக்கும். சிவன் பகல் என்றால் பார்வதி இரவு. அப்படியானால் முருகன்? பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட இதமான மாலை நேரம் போலவாம்.

"ஞாலமேவுறும் பகலொடு இரவுக்கும் நடுவாய் மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்"

ஆக எல்லாம் ஒன்றுதான். இங்கே ஆதிதான் அனாதி. அனாதிதான் ஆதி. மொத்தத்தில் எல்லாம் ஒன்றுதான். இறைவன் ஆதியும் அனாதியுமாய் இருப்பவன் என்று இதனால்தான் சொல்கின்றோம்.

அப்படி மூத்தவனை (இறைவனை) முழுதும் அறிந்தவனை (மூத்தவன் என்றால் நடந்தது நடப்பது நடக்கப் போவது எல்லாம் அறிந்தவந்தானே) பக்தியுடன் கொண்டாட வேண்டும்.

அவன் கூத்தன். ஏன் தெரியுமா? உலகமே நாடகமேடை. அந்த நாடக மேடையில் நாளும் ஒரு நாடகம். பொழுதும் ஒரு காட்சி. அத்தனையையும் ஆட்டி வைக்கின்ற கழைக் கூத்தாடிதான் இறைவன்.

அவனைக் கொண்டாடி ஞானப் பழம் திங்க வேண்டுமாம். ஞானப்பழம் என்றால் முருகன். ஞானம் என்றால் அறிவு. எல்லா அறிவும் அறிவல்ல சான்றோர்க்கு மெய்யான அறிவே அறிவு. அதென்ன மெய்யறிவு? பொய்யான அறிவு என்றும் ஒன்று உண்டோ!

கண்டிப்பாக உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அணுவின் பகுப்பு வடிவம் என்று முதலில் வந்தது. நிரூபிக்கவும் பட்டது. அதை நம்பினோம். பின்னால் அதை விடச் சரியான இன்னொரு வடிவம் வந்து நிரூபிக்கப் பட்டது. அதையும் நம்பினோம். இப்பொழுது முதலில் நம்பியது பொய்யானது. ஆனால் முதலில் நாம் அதை நம்பும் பொழுது உண்மையாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே இப்பொழுது பொய்யானது. இந்த அறிவினைத்தான் மெய்யறிவு என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் மெய்யறிவு என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில் கிடைக்கும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கிடைத்திருக்கிறது. புத்தருக்கு மரத்தடியில். முகமது நபிக்கு இறையருளில். அருணகிரிக்கு திருவண்ணாமலையில். அப்பருக்கு வயிற்று வலியில். ஆகத் தெரிவதென்ன? இறையருள் இன்றி மெய்யறிவும் கிட்டாது.

அதைத் தேடிச் சென்றால் கண்டிப்பாகக் கிடைக்கும். தண்ணீருக்குள் தவிக்கின்றவன் மூச்சுக்கு எப்படித் தவிப்பானோ அப்படித் தவித்தால் மெய்யறிவு கிட்டும். அதுதான் ஞானப் பழம்.

பொதுவாக பொன்னகைகளையே மணிகளையே அணிவது வழக்கம். ஆனால் உருத்திராட்சம் அணிவது சிவனடியார் வழக்கம். வெறும் கொட்டையைக் கழுத்தில் கட்டினால் சரியா என்று கேட்கலாம். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கொட்டைக்குள்தான் பெரிய மரம் ஒளிந்திருக்கின்றது. அது போல இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத காற்றை விசிறியைக் கொண்டு உணர்கின்றோம் அல்லவா. அதுபோல எங்கும் நிறைந்த இறைவனை உருத்திராட்சக் கொட்டையில் காண்பது. உண்மையிலே இறைவனை உணர்ந்தவருக்கு உருத்திராட்சமும் ஒன்றே. இலந்தைக் கொட்டையும் ஒன்றே.

இப்பொழுது புரிந்திருக்கும் பழம் தின்று கொட்டை போடுவது என்றால் என்னவென்று! இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?

அன்புடன்,
கோ.இராகவன்