Monday, May 21, 2007

பெரியார் - திரைப்படம்



பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்ததுண்டு. அதற்குப் பிறகு பலர் சொல்லித் தெரிந்து கொண்டதுண்டு. வலைப்பூக்களிலும் கொஞ்சம் படித்ததுண்டு. அவ்வளவுதான். ஆகையால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். அந்த வகையில் படத்தைப் பற்றியும் அதில் சொல்லப்படும் பெரியார் பற்றியும் என்னுடைய கருத்துகளை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன்.

வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது எளிதன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. திரைக்கதையில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும்.....இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை. பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜைப் பொருத்த வரையில் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகர்தான். சமீப காலத்தில் நடிக்கும் குத்தாட்டப் படங்களால் எரிச்சல் உண்டாக்கியவர் இந்தப் படத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். நடிகர் திலகம் நடிக்க விரும்பிய பாத்திரம் இவருக்கு. அந்த அளவுக்கு நடிப்பு இல்லையானாலும்...இரண்டாவது பாதியில் நல்ல நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

ஜோதிர்மயி.....இவ்வளவு நல்ல நடிகையா நீங்கள்? தெரியாமல் போய் விட்டதே. இப்படியெல்லாம் நடித்தால் தமிழில் வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். உங்கள் நடிப்பைப் பாராட்டுகிறேன். குஷ்பூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பெரியாரின் தாயாக வரும் மனோரமாவும் அவரது கணவனாக நடித்த அந்தத் தெலுங்கு நடிகரும். நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு கலந்த தமிழில் புலம்பும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு. மகனை நினைத்துப் புலம்பும் கட்டங்களில் காட்டப்பட வேண்டிய எரிச்சலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். அந்தத் தெலுங்கு நடிகர்....பெரியாரின் தந்தையாக நடித்தவர்....பெயர் என்னங்க? நல்லா நடிச்சிருக்கீங்க. தெலுங்கு கலந்த தமிழ் பேச மனோரமா பட்ட சிரமம் இவருக்கு இல்லை.

ராஜாஜி, காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி என்று எல்லாரும் வருகிறார்கள். ஆனால் அளவான பாத்திரங்கள். அந்த அளவோடு அவர்கள் நடித்துள்ளார்கள். சரி. ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அலுப்புத் தட்டும். படம் சொல்லும் கருத்துகளுக்கு வருவோம். இந்தப் படத்தில் சொல்லப்படுவது உண்மையான நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டே தொடர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் பெரியார் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் என்றும் சிந்தித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியது. தாசி வீட்டுக்குப் போனவர் என்பதால் அவர் எதிர்த்த குழந்தைத் திருமணங்கள் ஆதரிக்கபடலாகாது. அந்த எதிர்ப்பு சரியானதே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. கைம்பெண் மறுமணமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.

படத்திற்கு வருவோம். பெரியார் பிறந்தது ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பில். அந்த வகுப்பிற்காக ஏதாவது போராட்டம் நடத்தி சாதித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் ஆகவில்லை. சாதீய வேறுபாடுகளைக் களைவதுதான் அவருக்குக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சாதி பார்ப்பது இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. இது இன்னும் குறையும் என்று நம்புவோம். குறைய வேண்டும் என்று விரும்புவோம்.

வளர்ந்து திருமணம் செய்த மகனாக இருக்கையில் அப்பாவிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார். அதுவும் மிகச்சரியான காரியத்தைச் செய்ததற்கு. அப்பொழுதுதான் காசிக்குப் போகிறார். அங்கே பிராமணர்களுக்குச் சோறு போட்டால்தான் புண்ணியம் என்று சொல்கிறார்கள். பசித்த எவருக்கு அன்னமிட்டாலும் அது புண்ணியம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். வறியார்க்கொன்று ஈவதே ஈகை. எச்சில் சோற்றைச் சாப்பிடும் நிலை. அடக்கொடுமையே.

காசியை விட்டு வந்த பிறகுதான் காங்கிரசில் சேருகிறார். ஆனாலும் அவரது குறிக்கோள் சமூக சீர்திருத்தம் என்பதாகவே இருந்திருக்கிறது. அது நடக்காது என்று தெரிந்து கொண்ட நிலையில்தான் காங்கிரசை விட்டு விலகியிருக்கிறார்.

வைக்கம். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய போராட்டம். ஈழவர் என்றால் இத்தனை தூரமும்...ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நம்பூதிரிகள் சொல்லியிருப்பது மிகக்கொடுமை. அப்பொழுது ஒரு சிறுவன்...அந்த நாய் எவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல். ஆனால் வேதனை தரக்கூடிய கேள்வி. நல்லவேளையாக இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது. பெரியாருக்கு நன்றி.

ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள் பலவேசம் என்று வாழவில்லை அவர். போராட்டங்களுக்கு வீட்டுப் பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார். கள்ளுக்கடை மறியல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது மனைவியும் தங்கையும்தான் முன்னின்று போராடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. அதில் குறுக்கிட எந்த அரசியல்வாதிக்கும்.....அட...எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. பொருட்டாக மதிக்கவும் தேவையில்லை. "ஐம்பதிலும் ஆசை வரும்" என்று டி.எம்.எஸ் பாடலை எல்லாரும் ரசித்துதானே கேட்டோம். ஐம்பது வயதானவர்கள் எல்லாரும் விரதம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? என்னைப் பொருத்த வரையில் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரியார்...இது தொடர்பாக உங்களையும் மணியம்மையையும் நான் புரிந்து கொள்கிறேன்.

அதே போல இன்னொரு கட்டம். ஒரு மாநாடு நடக்கிறது. அதில் சமைக்க ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களை அழைத்துச் சமைக்க வைக்கிறார். அதுவரையில் பிராமணர்கள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறுகிறது. நான் என்னுடைய நினைவு செல்லும் வழியில் சென்று யோசித்துப் பார்க்கிறேன்.

என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம். சாதி..கீதியெல்லாம் பார்க்கவில்லை. உடனே எல்லாரும் கேட்பார்கள். சமையலுக்குச் சாதி பார்க்கவில்லை..மாப்பிள்ளைக்கு எப்படி என்று...உண்மைதான். நல்ல கேள்வி. கண்டிப்பாகப் பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் சென்ற தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் மாநிலம் தாண்டிய காதற் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இட்ட தீபாவளிப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் இது அதற்கு முந்தைய தலைமுறைகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆக..ஒரு முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரவேற்கத்தக்கதே.

பொதுவில் சாதீய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பெரியாரின் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்.

"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. அது நம்ம இயக்கத்துல இருக்குற மைனர்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்குத் தெரியலைங்க. மணியம்மை ஒன்னும் சின்னக் கொழந்தை இல்லங்க. அவங்களுக்கு முப்பது வயசாகுது. அவங்க சம்மதத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடந்துருக்குது. நம்ம இயக்கத்துல எனக்கு நம்பிக்கையானவங்க ஒருத்தருமில்லைன்னு சொன்னா அது ஒங்களுக்கெல்லாம் உறுத்தலா இருக்குதுங்க." - மணியம்மையோடு திருமணம் முடித்து விட்டு பெரியார் சொன்னது. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவர் சொன்ன இந்தக் கருத்தைக் கூட அவர் பெயரைச் சொல்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே நினைக்கின்றேன். பெரியார் மட்டுமல்ல பல பெரியவர்களுக்கு இந்த நிலைதான்.

எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 17, 2007

தெலுங்குல கற்றாரைக் கற்றாரே

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு கேள்விப்பட்டிருப்பீங்க. உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருப்பாங்க. அவரு சவுண்டு இஞ்சினியரு...இவரு சுக்குநீருன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.

இதுல பாருங்க...நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு...தெலுங்குல காமுறுறாங்க. அட...இங்க போய்ப் பாருங்க. இது பத்தி ஒங்க கருத்து என்னன்னு எழுதுங்க.




இதுல மெல்லிசை மன்னரும்..இசைஞானியும் தமிழத்தான் தெலுங்கு மாதிரி பேசுறாங்க. இருந்தாலும் அது புரியாதவங்களுக்காக...கீழ கொடுத்திருக்கிறேன்.

மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.
(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)

இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.

மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.

அனைவரும் சிரிக்கின்றார்கள்.


அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 14, 2007

இதப் பாத்தா கேட்டா என்ன தோணுது?

இந்தச் சுட்டிக்குப் போங்க. அங்க ஒரு வீடியோ இருக்கும். அதப் பாருங்க. ஒரு மலையாளப் பாட்டு. பாத்துட்டு....தமிழ்ல்ல அது என்ன படம் என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பாக்கலாம். இது பத்தி நெறைய தகவல் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். இந்தப் பாட்டு ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 07, 2007

குற்றப்பத்திரிக்கை - விமர்சனம்

இந்தப் படத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? 1994லயோ என்னவோ எடுத்த படம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட இருட்டறை வாசத்திற்குப் பிறகு வெள்ளித்திரையைத் தொட்டு அதே வேகத்தில் மீண்டும் உறக்கத்திற்குச் சென்ற படம். இத்தனை வருடமாக ஒரு படத்தை ஏன் விடாமல் தடுத்திருக்க வேண்டும்? இப்பொழுது ஏன் திடீரென்று விட்டிருக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளும் உந்தத்தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்கள். ராம்கி மற்றும் ரகு. அவர்களைச் சுற்றித்தான் கதை. ராம்கிக்கு ரம்யா கிருஷ்ணன். ரகுவிற்கு ரோஜா. இவர்கள் வாழ்க்கையில் ராஜீவ்காந்தியின் கொலை எப்படி வருகிறது என்பதுதான் கதை. அதான் இரண்டு கதாநாயகர்களுமே அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் என்று சொல்லி விட்டோமே. பிறகென்ன? அவர்களே ஓடித் தேடிக் குற்றவாளிகளைப் பிடித்துவிட மாட்டார்களா? நடுநடுவில் நம்பியார் வந்து "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உங்க உதவி வேணும்"னு வழக்கமா விஜயகாந்த் கிட்ட கேட்டத இதுல இவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறாரு.

சினிமாவுல வில்லன் மன்சூர் அலிகான். அவரோட பேரு சிவா. அவரு படக்குன்னு ஒரு கண்ண அடிக்கடி மாட்டுறாரு. முடியுமா என்ன? அட. அவரு ஒற்றைக்கண் சிவராசன்னு சொல்றாங்களாம். அவரோட தலைமைல ஒரு பெரிய கூட்டம் இந்தியாவுக்கு வருது. எங்க இருந்துன்னு சொல்ல மாட்டாங்களாம். ஆனா வர்ரவங்க பேசுறத வெச்சு நம்ம கண்டுபிடிச்சிரலாமாம். நல்ல நாள்ளயே மன்சூரலிகானுக்குத் தமிழ் தகராறு. இதுல! அந்தக் கூட்டத்துல ராஜேஷும் ஒருத்தரு. பெண்களும் இருக்காங்க. எல்லாருடைய முகச்சாடை உடலமைப்பு எல்லாம் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் என்று கருதப்படுகிறவர்களை ஒத்தே இருக்கின்றன.

சரி. கதைக்கு வருவோம். இவங்கள்ள ஒருசிலர் வேன் எடுத்துட்டுப் போய் ஒரு அப்பார்ட்மெண்ட்டுல தங்கியிருந்த ஒரு சிலரைக் கொலை செஞ்சிர்ராங்க. அதுல ஒருத்தர் பத்மனாபா மாதிரி எனக்குத் தெரிஞ்சதுக்குக் கண்ணாடியைத் தொடைக்காதது கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். அப்படியே தப்பிச்சுப் போயிர்ராங்களாம். அதுக்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தர் உதவுறாரு. இவரு எந்தக் கட்சின்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்க. அதுவுமில்லாம ஒருத்தர் மட்டும்தான் உதவி பண்றாரு கடைசி வரைக்கும். தேவையில்லாம இங்க வைகோவைப் பத்திப் பேச வேண்டாமே.

நம்பியார் குளோசப்ல வந்து, "ஆட்சியைக் கலைக்கப்போறாங்க. அதுனால சட்டம் ஒழுங்கை நீங்கதான் சரியாப் பராமரிக்கனும்"னு பொறுப்பை கதாநாயகர்கள் கைல ஒப்படைக்கிறாரு. ஆட்சியையும் கலைச்சிர்ராங்க. அட. திமுக ஆட்சியைத்தான் 1990ல கலைச்சாங்கள்ள. அப்பக் கொஞ்சம் கலவரம் நடக்குது. கதாநாயகர்கள் நல்லா சண்டை போட்டுத் தடுக்குறாங்க. அப்பத்தான் தேர்தல் வருது. அதே தேர்தல்தான். 1991.

நம்பியார் திரும்பவும் குளோசப்ல வந்து, "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர்ரதால பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பா இருக்கனும்"னு கேட்டுக்கிறாரு. ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்பு ரகு கைக்கு வருது. ராஜீவ்காந்தி என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்வார்கள் என்று நினைத்தேன். அதே நேரத்தில் எதிர்த்தரப்பின் மைய அடையாளத்தைப் பத்தி ஒன்றும் பேசாத நிலையில் இவரது பெயரைப் பயன்படுத்தியிருப்பது சற்று உறுத்தலாகத்தான் தெரிந்தது.

மன்சூரார் கூட்டணி ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அவர்களோடு படமெடுக்க அழைத்துச் செல்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ராஜீவ்காந்தி வருகிறார். இந்தி நடிகர் அனுபம்கெர் வெள்ளை ஜுப்பா பைஜாமாவில் ராஜீவ்காந்தியாக வருகிறார். போட்டோக்காரர் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கிறார். அப்பொழுது மன்சூராருடன் வந்த பெண் கையில் மாலையோடு அனுமதி கேட்கிறார். கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. வேறு எந்தப் பெரிய தலைவர்களும் அங்கு இல்லை. அதற்குள் அந்தப் பெண் மாலையைப் போட்டு காலைத் தொடக் குனிகிறாள். குனிந்தவள் குண்டை இயக்கிவிடுகிறாள். முடிந்தது. அதற்குப் பிறகு இவர்கள் தப்பிக்க முயற்சிப்பதும்...அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் பிடிக்க முயல்வதும் கதை.

இதில் பிரச்சனை என்னவென்றால் மன்சூரார் கூட்டத்தார் எல்லாரும் கொடியவர்கள் (வழக்கமான தமிழ்சினிமா வில்லன்களைப் போல) என்ற மனநிலைக்குப் படம் பார்க்கிறவர்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களது நடையும். அதற்கான பின்னணி இசையும். இளையராஜாவாமே! அதுவுமில்லாமல் மன்சூராரின் கூட்டணித்தற்கொலைக்குப் பிறகும் சிலர் தப்பித்து....அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் மனைவியரைத் துன்புறுத்துகிறார்கள். பிறகு அசிஸ்டெண்ட் கமிஷனர்களால் சுடுபட்டுச் செத்துப் போகிறார்கள். அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது? சரக்கு மட்டும் நல்லா கலக்கத் தெரியும் போல இருக்கு. இதில் சிவராசன் தற்கொலை காட்சியை அளவுக்கு மீறி வளர்த்து......சிவபூஜை செய்து விட்டு அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெளியில் அந்த வீட்டிற்குள் நுழைய அசிஸ்டண்ட் கமிஷனர் பயங்கரமாக சண்டை போடுகிறார். நன்றாகச் சண்டை போட்டு....எல்லாரும் இறந்ததும் வீட்டிற்குள் நுழைகிறார்.

அத்தோட முடிஞ்சதா? படம் முடியும் போது ரெண்டு கமிஷனர் குடும்பமும் குழந்தையோடு கடற்கரையில் இருக்கும் பொழுது தப்பித்தவர்களில் இன்னும் ஒருவன் துப்பாக்கியோடு எழுந்து நிற்கிறான். அவன் வானத்தைப் பார்த்துச் சுட்டதும் திரையில் "No More Violence" என்று ரத்தச்சிவப்பில் வருகிறது. படம் பார்த்த நம் வாயில் வராததுதான் மிச்சம்.

படத்தில் இன்னொரு காட்சி. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக கொடிக்கம்பத்தை வெட்டப்போகின்றார்கள். சந்திரசேகர் தடுக்கிறார். அவரையும் வெட்டப் போகிறார்கள். அப்பொழுதும் அசிஸ்டெண்ட் கமிஷனர் வந்து காப்பாற்றுகிறார். அப்போது சந்திரசேகர் சிறிது உணர்ச்சிபூர்வமாக கட்சிக் கொடியைப் பற்றிப் பேசுகிறார். திமுக பிரச்சாரம் என்ற உணர்வு அந்நேரம் வராமல் இல்லை.

இன்னொரு காட்சி. எல்லார் மனதிலும் இன்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும் பதிலில்லாத கேள்வி. காங்கிரஸ்காரர் என்று மார்தட்டுகிறவர் அனைவருக்கும் இன்றும் கேட்கப்படும் கேள்வி. இப்படி ஒரு காட்சியில் வருகிறது. ரகுவை சஸ்பென்ஷன் செய்து விடுகிறார்கள். அவர் பொறுப்பில்தானே ராஜீவ்காந்தி பாதுகாப்பு இருந்தது. சஸ்பென்ஷனுக்கு நியாயம் கேட்க கமிஷனரைப் பார்க்க ராம்கியோடு போகிறார். அங்கு ஒரு (காங்கிரஸ்) தலைவர் வந்து கமிஷனரிடம் அவரது கட்சிக்காரர்களையும் சேர்த்துக் கைது செய்திருப்பதைப் பற்றி பேச வருகிறார். அவர் துன்பியல் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்றும் பேசிவிடுகிறார். உடனே ரகு வெகுண்டெழுந்து சொல்கிறார். "அவரு கூடச் சேந்து செத்தது யார் சார்? பொதுமக்களும் போலீஸ்காரங்களுந்தான். ஒங்க கட்சிக்காரங்க யாராவது ஒருத்தர் செத்தாங்களா? குண்டு வெடிக்கிற வரைக்கும் கூடவேயிருந்த நீங்க...குண்டு வெடிக்கிறப்போ எங்க சார் போனீங்க? அப்போ குண்டு வெடிக்கப் போகுதுன்னு தெரியுமா?"

மொத்தத்தில் இந்திய அரசியல்சட்டத்திற்கு முடிக்கப்பட்ட வழக்காக இருக்கும் ராஜீவ்காந்தி கொலையை வைத்து சின்னப்பிள்ளைத்தனமாய் ஒரு படம். இந்தப் படம் பார்த்த பிறகு வழக்கின் தீர்ப்பு நகலைக்கூடப் படித்துப் பார்த்தேன். பல ஐயங்கள் எழாமல் இல்லை. கூகிளாண்டவர் உதவியை நாடினால் பலப்பலச் சந்தேகங்கள். அவைகளை வெளிப்படையாக விளக்காமல் வழக்கு முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இன்னமும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு சற்று விரைவில் முடிக்கப்பட்டு விட்டதோ என்றும் கூடத் தோன்றுகிறது. முதலில் எல்லாருக்கும் தூக்கு என்றார்கள். கைது செய்யப்படும் பொழுது ஆதிரையின் வயது 17. பிறகு தீர்ப்புகள் மாறின. நடுவில் திமுகவின் பெயரும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் ஜெயின் கமிஷனில் வந்து மத்திய அரசைப் பிரசாதமாக உருட்டி விழுங்கியது.

ஆனால் ஒன்று ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பெல்லாம் மத்திய ஆட்சி நினைத்தால் மாநிலத்தைக் கலைக்கும். உலைக்கும். குலைக்கும். இப்பொழுது மாநில ஆட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்தியில் ஆட்சி செய்வதால் அது குறைந்து போயிற்று. குறிப்பாக உத்திரப்பிரதேசதமே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்ற கேடுகெட்ட நிலையையும் ஒரு வழியும் பின்னாளில் மாறிப்போனது. நேருவின் வாரிசு அரசியல் இன்னும் நேரடியாக பதவிக்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையோ ஸ்பெயினுக்கும் பதவிக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. என்னவோ நடக்குது. நடக்கட்டும்.

மொத்தத்தில் குற்றப் பத்திரிக்கை குற்றமுள்ள பத்திரிக்கை.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, April 20, 2007

அழகிய தமிழ்மகள் இவள்

கண்ணுக்கு மையழகுன்னு கவிஞர்கள் பாடியிருக்காங்க. அதே மாதிரி வலைப்பூக்கள்ள நண்பர்கள் எல்லாரும் அழகு பத்தி ஏற்கனவே பதிவு போட்டாச்சு. நம்மள குமரனும் அனுசுயாவும் (இங்க பேர மொதல்ல அநுசுயான்னு எழுதினேன். அவங்க கோவிச்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் மரியாதையா அனுசுயான்னுதான் கூப்பிடுறது.) கூப்பிட்டிருக்காங்க. பதிவு போட முடியாத அளவுக்கு நேரமின்மை. ஆனாலும் அழகைப் பத்திச் சொல்லக் கொஞ்ச நேரம் ஒதுக்கியாச்சு. அதான் இந்தப் பதிவு.

"அழகிய தமிழ்மகள் இவள்" அப்படீன்னு தலைப்பு வெச்சாச்சு. ஏன்? நம்முடைய தாய்மொழியாகிய தமிழ் அழகுன்னு சொல்லத்தான். அப்ப கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளமெல்லாம்? அவைகளும் அழகுதான். எல்லா மொழியும் அழகுதான். பொதுவாவே மொழின்னாலே அழகுதான். அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய்மொழி அழகு. அதான் அழகிய தமிழ்மகள்னு நான் தலைப்பு வெச்சேன்.

ஏன் மொழி அழகு? யோசிச்சுப் பாருங்க. ஒருத்தர் கிட்ட இனிப்புன்னு சொல்லனும். மொழியே இல்லை. வெறும் சைகைதான். சேட்டாயிருந்தா வாயில லட்டத் திணிக்கலாம். நம்மூரு ஆளுங்கன்னா அதிரசத்தத் திணிக்கலாம். சரியய்யா. இதோவது திங்கிறது. வலிக்குதுன்னு எப்படிச் சொல்றது? எதுக்க நிக்குறவர கட்டயக் கொண்டு சாத்த வேண்டியதுதான். இப்படி ஒவ்வொன்னுக்கும் நெனைச்சுப் பாருங்க. கண்ணுல மண்ணு விழுந்திருச்சு, கீழ விழுந்து இடுப்பு பிடிச்சிக்கிச்சு, வெந்நிய கொதிக்கக் கொதிக்கக் கால்ல ஊத்திக்கிட்டேன்...இதையெல்லாம் சொல்லனும்னா....சரி. அத விடுங்க. ரசங்கள் ஒம்போதையும் எப்படிக் காட்டுறது? புரிய வைக்கிறது? பத்மினி இருந்திருந்தாங்கன்னா "மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசத்தையும் செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசத்தையும்" அபிநயத்துலயே காட்டீருப்பாங்க. ஆனா நம்ம எப்படி? அதுக்குத்தான் உண்டானது மொழி.

இப்ப....ஒருத்தர் வந்து ஒங்ககிட்ட "பால் பொங்கீருச்சு"ன்னு சொன்னதும் ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். ஒரு சட்டியில வெள்ளவெளேர்னு பால் காஞ்சி பொங்கி வழியிறதெல்லாம் ஒரு நொடிக்குள்ள ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். இத எங்க வெச்சு எத்தன மணிக்குச் சொன்னாலும் புரிஞ்சு போகும். எலுமிச்சை ரசம்னோ எலும்பு சூப்புன்னோ படிக்கும் போதே நெறையப் பேருக்கு எச்சி ஊறுதே! இப்படி எளிமையா தகவல்களைப் பரிமாறிக்கிறதுக்காக பிறந்த மொழிகள் வளர்ச்சியடைந்து இலக்கணங்களையெல்லாம் வகுத்துக்கொண்டு வளர்ந்த பின்னால அந்த இலக்கியங்கள்ள இந்தச் சுவையெல்லாம் எப்படியிருக்குன்னு படிச்சுப் பாத்தா மொழி ஏன் அழகுன்னு தெரியும்? ஏன் நம்ம அதத் தமிழ்க் கடவுளின் வடிவமாகவே வாழ்த்திப் போற்றுகிறோம்னு தெரியும். அந்த அருமையான தமிழ் மொழியில சில அழகான பகுதிகளை நாம பாப்போமா? மூனு பகுதிகதான். அறம் பொருள் இன்பம்னே பாப்போம். அறத்துல ஆன்மீகம். அனாவுக்கு ஆனா. பொருள்ள கொடுக்கல் வாங்கல். இன்பத்துல காதல். இந்த மூனையும் பாப்போம். மூனுக்குப் போகலாம் வாங்க.

மொதல்ல ஆன்மீகம். திருவள்ளுவரே இறைவணக்கத்தோடதான தொடங்கீருக்காரு. நம்ம மொதல்ல கச்சியப்பர எடுத்துக்குவோமா? அட...அழகென்ற சொல்லுக்கு முருகான்னு தமிழ் எப்பயோ ஒத்துக்கிட்டாச்சு. ஆகையால நாம அங்கயிருந்தே தொடங்குவோம். பரமசிவம் பரமசிவம்னு (ரெண்டு பேரு இல்லங்க) ஒருத்தர் இருந்தாரு. அவரு கடவுள். சரி. கும்புடு. அவரு சமாச்சாரம்..இல்லல்ல சம்சாரம் பார்வதி. சரி கும்புடு. அவருக்கு முருகன்னு ஒரு பையன். நிறுத்தேய். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரு இருக்காங்கள்ள. அப்புறம் இவரு யாரு? அவங்க ரெண்டு பேரும் பாத்துக்க மாட்டாங்களா? பாத்துக்குவாங்க. ஆனாலும் இவரும் பாத்துக்குவாரு. எப்படி? நாளை எப்படிப் பிரிக்கலாம்? இரவு பகல். சரி. இந்த இரவையும் பகலையும் இணைக்குதே மாலை. அந்த மாலை மாதிரி முருகன்.

புரியலையா? மொதல்ல இரவு பகல் ரெண்டும் வெவ்வேறன்னு நெனைக்கிறதே தப்பு. நாள் ஒன்னுதான். அத நம்ம இரவாகவும் பகலாகவும் உணர்ரோம். சரியா? வெளிச்சமே இல்லாத இருட்டறையில இருக்குறவனுக்கும் நாள் ஒன்னுதான். ஆனா அவன் உணர மாட்டான். வெளியில இருக்குறவன் நாளை இரவாகவும் பகலாகவும் உணர்ரான். பகல்லா வெளிச்சம். இரவுன்னா இருட்டு. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு பிரச்சனை. ஆனா இரண்டையும் இணைக்குதே மாலை. அதுல? லேசான வெளிச்சமும் இருக்கும். ஆனா சுடாது. மெல்லிய இருட்டும் இருக்கும். ஆனா மருட்டாது. ஒரு மாதிரி சிலுசிலுன்னு இருக்கும்ல. அப்படித்தான் முருகன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல பகலையும் இரவையும் இணைக்கும் மாலையாக நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறார். இதத்தான் கச்சியப்பர் கந்தபுராணத்துல இப்படிச் சொல்றாரு.

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தமக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேவுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

அதுல பாருங்க...இரவும் பகலும் இருக்குற வரைக்கும் மாலை இருக்கும். அதத்தான் அழிவின்றி வைகுமாறு ஒக்கும்னு சொல்றாரு. நான் ரெண்டு பத்தி எழுதி விளக்குனத இவரு நாலே வரியில எவ்வளவு அழகாச் சொல்லீட்டாரு பாத்தீங்களா. இதுக்கு இன்னும் ரெண்டு பக்கத்துக்கு வெளக்கம் எழுதலாம்.

அடுத்தது பொருளுக்குப் போவோம். புறநானூற எடுத்துக்குவோமா? அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இதாங்க.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனிலும் உயர்ந்தன்று


அடடா! என்ன அனுபவிச்சுச் சொல்லீருக்காங்க. ஒருத்தர் கிட்ட போய் இன்னது வேணும்னு கேக்கனும். அப்படிக் கேக்க எவ்வளவு வெக்கமா இருக்கும். என்ன செய்ய....வயித்துப்பாடாச்சே..கேட்டாச்சு. அப்ப அவரு குடுத்துட்டா நல்லது. இல்லைன்னு சொல்லீட்டா? அது இன்னமும் அசிங்கம். வெக்கத்த மானத்த விட்டுக் கேட்டதுக்கு நல்ல பலன். இன்னுஞ் சிலர் இருப்பாங்க. நம்ம படுற பாட்டப் பாத்ததுமே அவங்களே வந்து உதவுவாங்க. இந்தாடா வெச்சுக்கோன்னு அவங்க குடுத்தா அது எவ்வளவு நல்லாயிருக்கும். அப்படி அவங்க குடுக்கைல..."இருக்கட்டுண்டா...சாமாளிச்சுக்குவேன். இப்ப வேண்டாம். வேணுங்குறப்ப நானே கேட்டு வாங்கிக்கிறேன்" அப்படீன்னு மனவுறுதியோட சொல்ல முடிஞ்சா? அது இன்னமும் இனிமைதான? அதத்தாங்க இந்தப் புலவர் சொல்லீருக்காரு. இவரு பேரு மறந்து போச்சு. நினைவிருக்குறவங்க சொல்லுங்க. இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க. நாலு வரிக்குள்ள நானூறு பொருள் இருக்கும். அதுனாலயும் புறநானூறுன்னு பேரு வெச்சாங்களோ! கொடுக்கல் வாங்கலையும் எவ்வளவு அழகாச் சொல்ல முடியுது தமிழ்ல!

அறமும் பொருளும் முடிஞ்சது. அடுத்தது இன்பம். இந்த இன்பம் இருக்குதே. இது பலவகைப்படும். சில குடும்பங்களப் பாத்தீங்கன்னா சாப்பாட்டு வேளையில பூட்டு தொங்கும். ஆனா உள்ள ஆளிருக்கும். உள்ள இருந்தே பூட்டிக்கிட்டு பெருச்சாளி மாதிரி பொந்துக்குள்ள உக்காந்து திம்பாங்க. இன்னுஞ் சிலரு...தண்ணியப் போட்டாத்தான் நாளே தொடங்கும். இப்பிடி பலவகையான இன்பங்கள் இருக்கு. ஆனா எல்லாருக்கும் பொதுவான இன்பம் காதல். காதலிக்கலைன்னு யாராவது சொன்னா அது பொய். ஒருதலையாகவாவது எல்லாரும் காதலிச்சிருப்பாங்க. அதே மாதிரி இன்னும் சில பொய்கள் இருக்கு. நான் சரோஜாதேவி டைப் புத்தகங்கள் படிச்சதே இல்லப்பா...நீலப்படம் பாத்ததே இல்லப்பா....மக்களே...இப்பிடி யாரவது சொன்னா (குறிப்பா பசங்க) அவங்க கிட்ட இருந்து எதுக்கும் தள்ளியே இருங்க. சரி. நம்ம அழகுக்கு வருவோம். காதல்....ஆணைக் கேட்டா பெண்ணும்பான். பெண்ணைக் கேட்டா ஆணும்பான். இப்பல்லாம் மாத்தியும் சொல்றாங்க. எப்படியோ ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான் விஷயம்.

இந்தக் காதல் உணர்வோட காதலி பந்து விளையாடுறதப் பாத்தா? தக்கு தக்குன்னு மனசுக்குள்ள நூறு கவிதை பிறக்காதா? நம்ம ராசப்பரு மட்டும் என்ன விதிவிலக்கா? அதாங்க...திரிகூட ராசப்பக் கவிராயரு. சந்தத்த அள்ளிச் சூரை விடுறாரு. அப்படியே பிடிச்சுக்கோங்க.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாட
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு
மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே


ஒவ்வொரு வரிக்கும் எதுகையும் மோனையும் தாராளமா விட்டுப் பிசைஞ்ச பாட்டு இது. படிக்கும் போதே பந்து எம்பிக் குதிக்கிற மாதிரி இருக்கும். இதுல ஒரு வரி. "இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட". இத எப்படிப் படிக்கனும் தெரியுமா? "இனி இங்கு இது கண்டு உலகு என்படும் (என்று) மென்படும் மெல்லிய இடை திண்டாட". இப்ப லேசாப் புரிஞ்சிருக்குமே. இப்பிடி அழகழகா பிரிச்சி மேஞ்சிருக்காரு திரிகூட ராசப்பரு. திருக்குறாலக்குறவஞ்சி படிங்க. பிரமாதமா இருக்கும். இன்னொரு பந்தாட்டப் பாட்டு கீழ இருக்கு.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!


இந்த வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் ஆதிபராசக்தி படத்துல ரொம்ப அழகா பயன்படுத்தியிருந்தாரு. இதே நூல்ல இருந்து ஒரு பாட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்து இசையமைச்சிருக்காரு. காதலன் படத்துக்கு.

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே......


மனம் நெனைக்குது.....அந்த நெனப்புலதான் காதலன் முன்னாடி வர்ரானான்னு கண்ணு பாக்குது...அவனப் பாத்ததும் காதல் உணர்ச்சி தலைக்கேற கை அவனைத் தொடுது (அந்தக் காலத்துல காதலந்தான் மொதல்ல தொடனும்...காதலி தொட்டா அசிங்கம்னு தமிழர்கள் நெனைக்கலை). அப்படி மனசு நெனச்சு முடிக்கு முன்னாடியே கண் பார்த்து...கண் பார்த்து முடிக்கும் முன்னாடியே கை தொட்டிருச்சாம். ஆக..கை தொடும் போது மனம் இன்னும் நெனச்சு முடிக்கலை. அந்த ஒரு நொடியில நெனைச்சுக்கிட்டே பாத்துக்கிட்டே தொட்டுக்கிட்டாளாம் காதலி. அடடா!

ஒன்ன நெனச்சுக்கிடே ஏஏஏஏ
ஒன்ன பாத்துக்கிட்டே ஏஏஏஏ
ஒன்ன தொட்டுக்கிட்டேன் மாமாஆஆஆஆ
ன்னு இன்னைக்கு சினிமாவுல எழுதுனா அது எங்கயோ போயிரும்.

இப்பிடித்தாங்க அழகழகா நம்ம தமிழ் மொழியில சொல்லீருக்காங்க. அதுல கொஞ்சத்த ஒங்களுக்குச் சொல்லீருக்கேன். என்ன நெனச்சு என்னைய அழகெழுதக் கூப்பிட்டாங்களோ! ஏதோ நமக்குத் தெரிஞ்சதச் சொல்லியாச்சு! அடுத்து மூனு பேரைக் கூப்பிடனுமாமே! முருகா! முருகா! முருகா! கூப்பிட்டாச்சு. இனிமே தமிழ்ல யார் பதிவு போட்டாலும் அவன் போட்ட பதிவுதானே! :-) (அட...நமக்கு முன்னாடியே எல்லாரும் பதிவு போட்டாச்சு. இப்ப யாரக் கூப்புடுறது?)

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, March 20, 2007

நான் கொஞ்சம் weird

இப்ப வலைப்பூக்கள்ள எல்லாரும் அஞ்சு அஞ்சுன்னு சொல்றாங்களே. அதுக்காக அஞ்சாமலும் இருக்க முடியுமா? அஞ்சுவது அஞ்சாமை பேதமையாச்சே. நம்ம கோபிநாத்தும் சிறிலும் அவங்க எந்த வகையில வித்தியாசமானவங்கன்னு பதிவு போட்டுட்டு...அதுல நம்மளையும் கோத்து விட்டுட்டாங்க. நன்றி நண்பர்களே. ஆகையால என்னைப் பத்திய அஞ்சு குண்டக்க மண்டக்க தகவல்களைச் சொல்லியிருக்கேன். அஞ்சீராதீக.

1. எதையோ நெனச்சிக்கிட்டிருந்தா அதுவாவே ஆயிருவோமாமே! அது மாதிரி...சமயங்கள்ள சில நெனைப்புகள் வரும். ஏதோ ஒரு பாட்டு திடீர்னு நெனைவுக்கு வரும். பாத்தா ரெண்டொரு நாள்ள அதே பாட்டு பாக்கக் கிடைக்கும். இதே மாதிரி ஏதோ படத்தப் பத்தித் தோணும். கொஞ்ச நாள்ளயே அந்தப் படமும் பாக்கக் கிடைக்கும். பாட்டு படம்னு மட்டுமல்ல....பல விஷயங்கள்ள இப்பிடி நடக்குது. என்னோட வாழ்க்கைல நெறைய நிகழ்ச்சிகள். இது வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனா அடிக்கடி நடக்குது. நல்லதுகளும் எக்கச்சக்கமா நடந்திருக்கு. பல கெட்டதுகளும் நடந்தது. அதெல்லாம் மத்தவங்க தொடர்பான செய்திகள். ஆகையால எல்லாத்தையும் விவரமாச் சொல்ல விரும்பல.

2. சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச் சட்டினியும் மொச்சைக் கொழம்பும் முயற்சி செஞ்சிருக்கீங்களா? சரி. அத விடுங்க....மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? இத கோழிக்கும் செய்யலாம். ஆரஞ்சு சிக்கன் தெரியுமா? ஓட்ஸ்ல பிஸி-ஓட்ஸ்பாத் செஞ்சு சாப்புடுறதும்....கோதுமை ரவை தோசை சுடுறதும்....பூசணியையும் கோழியையும் சேத்துச் சமைக்கிறதும்..மீனைப் பொரிச்சிக் கொத்துமல்லி+புதினா+பச்சை மிளகாய்க் கூழ்ல சமைக்கிறதும்..இப்பிடி பல கண்டுபிடிப்புகள். இப்பிடி எதையாவது செஞ்சு சாப்பிட்டாத்தான் நாக்கு ஒத்துக்குது. முந்தியெல்லாம் புளி+மிளகாய்+உப்பு மட்டும் வெச்சு அரைச்சச் சண்டாளத் தொவையல பிடிபிடிச்ச நாக்கு இப்பல்லாம் ஒறைப்பையே ஏத்துக்குறதில்லை. எனக்குப் பிடிச்ச மாதிரி ரெண்டு பேராலதான் தொடர்ந்து வகைவகையா சமைக்க முடியும். ஒன்னு அம்மா. இன்னொன்னு நானு.

3. பொதுவா எல்லாரும் வேலைய நல்லா செஞ்சிக்கிட்டிருக்கும் பொழுது நான் அமைதியா இருப்பேன். ஏதோன்னு செஞ்சிக்கிட்டிருப்பேன். ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். உக்காந்து தெளிவா யோசிக்கும். இத ஒரு வாட்டி...ரெண்டு வாட்டி இல்ல...பல வாட்டி பாத்திருக்கேன். என்னவோ போங்க...ஊரோட ஒத்து வேலை செய்ற தெறமை இல்லையோன்னு நெனைச்சுக்குவேன். ஆனாலும் பிரச்சனை வந்தாலாவது மூளை வேலை செய்யுதேன்னு திருப்தி பட்டுக்கிறுவேன். அத்தோட சொல் பேச்சுக் கேளாமை வேற. பொதுவா யாராவது சொன்னா...அதக் கேட்டு நடக்கிறதில்லை. சொல் பேச்சுக் கேளாதவன் அப்படீங்குற பேர் எனக்கு வீட்டுல ரொம்ப உண்டு. அது உண்மையும் கூட.

4. கனவுகள். அதுல என்ன weirdனு கேக்குறீங்களா? முந்தியெல்லாம் பல கனவுகள் நெனைவுல இருக்கும். என்ன வந்ததுன்னு அடுத்த நாள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். ஒரு கட்டத்துல என்ன ஆச்சுன்னா...கனவு கண்டுக்கிட்டிருக்கும் போதே "இது கனவு..இத நாளைக்கு நெனைவு வெச்சிருந்து மெயில் அனுப்பனும்னு தோணும்". பல சமயங்கள்ள கதைகள் கனவுல வந்திருக்கு. ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கனவில் வந்து சொல்லியதுதான் பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதை.

5. இது காலேஜ்ல படிக்கைல நடந்தது. ஒரு குறிப்பிட்ட பேண்டும் சட்டையும் போட்டுட்டுப் போனா நல்லா எழுதி நல்ல மதிப்பெண் கிடைக்குங்குற நம்பிக்கை. அதுலயும் தேர்வு நாள்கள்ள மஞ்சப்பைதான். துணிக்கடைகள்ள முந்தி குடுத்துக்கிட்டிருந்தாங்களே! அந்த மஞ்சப்பைதான். அதுவுமில்லாமா ஒரு குறிப்பிட்ட எடம் இருக்கு. அந்த எடத்துல போய்தான் மொதல்ல உக்காருவேன். அங்க உக்காந்திருந்துட்டு சரியா தேர்வு நேரத்துல மட்டுந்தான் தேர்வறைக்குள்ள போவேன். ஆனா இதெல்லாம் வேலை செஞ்சிருக்கு. யார் கண்டா நானே ஒரளவுக்குப் படிச்சிருக்கலாம். ஆனால் இன்னமும் அந்த சட்டை இன்னும் இருக்கு. அது எனக்கு ரொம்பவும் பிடிச்ச சட்டை. ஒரு மாதிரி கருப்புச் சட்டை. லேசா ஊதா நிறத்துலயும் பழுப்பு நிறத்திலயும் பளபளன்னும் கொசகொசன்னு ஓவியங்கள் உள்ள சட்டை.

இப்ப நம்ம அஞ்சு பேரக் கூப்பிடனும்ல. விட முடியுமா? மாட்டிக்கிட்டீங்களா?
1. காபி
2. தேவ்
3. வல்லிசிம்ஹன்
4. ஓமப்பொடியார்
5. கோவி.கண்ணன்

அன்புடன்,
கோ.இராகவன்

12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.

"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."

"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.

"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."

"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"

"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."

"அதுனால?"

"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"

அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.

"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"

ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"

"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."

ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"

அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.

சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"

"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."

"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"

"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."

"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."

அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.

"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக். குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"

"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.

"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.

"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.

"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, March 15, 2007

11ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு ஆச்சரியமாகத்தான் யாரும் கேட்பார்கள். சரவணனின் கேள்விக்கு ஆமாம் என்ற ஒரு சொல் விடைதான் சந்தியாவிடம் இருந்து கிடைத்தது.

"சரி. சந்தியா. நீ சொல்றத நம்புறேன். ஆனா இப்ப என்னால எதையும் யோசிக்க முடியல. நாளைக்குக் காலைல இதப் பத்திப் பேசிக்கலாம். Good Night" சரவணனால் பேச முடியவில்லை. எதையாவது யோசிக்க முடிந்தால்தானே அதைப் பேச முடியும். அப்படி யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடக்கூடாதே என்றுதான் காலையில் பேசுவதாகச் சொன்னான்.

திடீரென பெரிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் மீன் போல உணர்ந்தான். என்னவோ ஊர் உலகத்தில் எல்லாரும் அவனையே பார்த்துக்கொண்டிப்பது போல. எதையோ சாதித்த பெருமை. ஆனாலும் என்னவோ சோகம் கலந்த ஆத்திரம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் மறந்து போனது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு சந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்பினான். "GM Sandhy. Dont go to office. I'm coming 2 ur house 2 c u and sundar. wanna talk 2 u"

சொன்னது போலச் சரியாக பத்து மணிக்கு சந்தியாவின் வீட்டில் இருந்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு அங்கு சிவகாமி காபி போட்டுக் கொடுத்தார். சுந்தர் சரவணனிடம் எளிதாகச் சேர்ந்து கொண்டான். அவர்கள் கொஞ்சிக் கொண்டதையெல்லாம் விலாவாரியாக விவரிப்பதை விட ஒரு பாடலைச் சொல்லி எளிதாக விளக்கி விடுகிறேன்.

கவியரசரின் ஒரு பாடல். கவியரசர் என்றால் கண்ணதாசந்தான். வேறு யாரையும் நினைக்க வேண்டாம். ரிஷிமூலம் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியது. "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத" என்று தொடங்கும் பாடலில் இப்படி வரும்.

மனைவி: திங்கள் ஒளி திங்களைப் போல்
உங்கள் பிள்ளை உங்களைப் போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை
கணவன்: நீ பெற்ற பிள்ளையின்
கோபமும் வேகமும்
உன்னைப் போலத் தோன்றுதே

அப்படித்தான் சுந்தரும் எளிதாக சரவணனுடன் சேர்ந்து கொண்டான் என்று நினைக்கிறேன். அந்தப் புதுமையான குடும்பத்திற்கும் கொஞ்சம் தனி நேரமும் இடமும் கிடைத்தது. அப்பொழுது சரவணனுன் சந்தியாவும் மனம் விட்டுப் பேசி சில முடிவுகள் எடுக்க முடிந்தது.

முதலில் சரவணன் இப்படிக் கேட்டான். "சந்தி, சுந்தர் எனக்கும் மகன். அப்ப அவன் எனக்கும் சொந்தம். அதுனால இவனோட அப்பா நாந்தானு மொதல்ல ரெக்கார்ட் பண்ணனும்."

"சரி. Thatz easy. செஞ்சிரலாம்."

"அப்புறம் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன?"

"என்னது கல்யாணமா? அப்படி வா வழிக்கு! ஒன்னோட கொழந்தைய பெத்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும்....கல்யாணம்னு என்னைய அடிமைப்படுத்தப் பாக்குறியா? நீ ஏன்டா இப்பிடி? இந்த ஒலகத்துல பெண்கள லேசா எப்படி அடிமைப் படுத்தலாம் தெரியுமா? கொழந்தைங்கள வெச்சு. குழந்தைங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாட்டுல நெறையாப் பொம்பளைங்க என்னைக்கோ புருஷங்களைத் தொரத்தீருப்பாங்க. நான் ஒன்னய கல்யாணம் செஞ்சுக்கனும். காலெமெல்லாம் ஒன்னையையும் ஒன்னோட கொழந்தையையும் பாத்துக்கிட்டு உன்னோட பேர எனக்கு இன்ஷியலா போடனும். அதான ஒனக்கு வேண்டியது?" சட்டென்று கேட்டாள் சந்தியா.

"Oh my god! ஒன்னோட சொற்பொழிவு முடிஞ்சதா? மண்டு. நீ எப்படி இருந்தாலும் S.Sandhyaதான். அத மொதல்ல தெரிஞ்சிக்க. இனிஷியலுக்காக சொல்லலை. சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"

சரவணன் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று நினைத்தாள். ஆகையால் கொஞ்சம் யோசித்தாள். யோசனையெல்லாம் முடிந்த பிறகு அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் அவளாகவும் அவன் அவனாகவும் இருந்து கொள்ள முடியும் என்றால் அவளுக்குச் சரி என்று தோன்றியது. ஒரு வேளை நாளை அவன் முருங்கை மரத்தில் ஏறினால்? சரி. வேப்பிலை அடித்துத் துரத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். அவள் மனம் இந்த பொம்மைத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் அவளுடைய தன்மானத்தை இழக்க விரும்பாமல் ஒரு பிரச்சனையை எழுப்பினாள்.

"சரவணா, எல்லாம் சரிதான். ஆனா artificial inseminationனு எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். இப்பப் போயி எப்படி மாத்திச் சொல்றது? அப்ப நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடும். அப்புறம் எனக்குக் கண்டிப்பா கெட்ட பேர்தான் கிடைக்கும். you know how hypocrats think. இதுக்கு என்ன வழி?"

சரவணன் யோசித்தான். சந்தியாவும் தோற்கக் கூடாது. உண்மையும் வெளியே தெரிய வேண்டும். "Dont worry Sandhy. உனக்குக் குழந்தை பிறக்க நாந்தான் donorஆ இருந்தேன்னு சொல்லீர்ரேன். சுந்தர் பொறந்ததுக்குப் பிறகு யோசிச்சுப் பாக்கும் போது இந்த முடிவுக்கு வந்தோம்னு சொல்லீரலாம். அதெல்லாம் நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்த எல்லாம் யாரும் துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க. சரி. நான் இப்பவே ஒங்க அப்பா கிட்ட பேசுறேன். அப்படியே வீட்டுக்குப் போய் என்னோட அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிச் சம்மதம் வாங்கீர்ரேன்."

சொன்னபடி சுந்தரராஜனிடமும் சிவகாமியுடனும் பேசினார். அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். ஆனால் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொண்டார்கள். நல்லவேளை என்று நினைத்திருப்பார்கள். அதே போல அவனுடைய வீட்டிலும் பேசிச் சம்மதமும் வாங்கி விட்டான். மாடு வாங்கப் போனால் கன்றோடு கூட்டிக் கொண்டு வருகிறானே என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தை சரவணனுடையதுதான் என்று உறுதியாக அவன் அடித்துச் சொன்னதும் அவர்களும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள்.

கண்ணனுக்கும் தகவல் போனது. வாணியும் மிகவும் மகிழ்ந்தாள். ராஜம்மாள் இதையும் நாலைந்து விதமாகப் பேசினாலும் அவரால் என்ன செய்ய முடியும்? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தார். மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நடந்தது. தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மறுத்து விட்டாள் சந்தியா. சரவணனும் அதில் விருப்பமில்லாமல் இருந்தான். மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். அது கூட மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான். அவர்களின் முதலிரவும்(!) நல்லபடியாக நடந்தது.

தன்னுடைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள் சந்தியா. அவளுடைய பெற்றோர்களும் இருக்கிறார்களே. அவர்கள் டி.நகர் வீட்டில் கண்ணனோடு இருக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் சந்தியா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்? சரவணன் அவனது பெற்றோர்களை விட்டு வருகிறானானா என்ன? பிறகு அவள் மட்டும் ஏன் என்று கேட்டு எல்லார் வாயையும் அடைத்து விட்டாள். சரவணன் விரைவிலேயே நெதர்லாண்டு திரும்ப வேண்டும் என்பதால் இங்கு கொஞ்ச நாளும் அவன் வீட்டில் கொஞ்ச நாளுமாகக் களி(ழி)த்தான்.

(அடுத்த பகுதியில் இந்தக் கதை முடியும்.)

தொடரும்.....

Tuesday, March 13, 2007

10ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.

1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.

2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.

3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.

4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.

5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.

6. ஏற்கனவே சுந்தர் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.

அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.

சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.

இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.

பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.

மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.

உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.

சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.

"ஹே சந்தி, என்ன பண்ற?"

"ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."

"சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.

"மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.

"சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.

"உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"

"என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.

"ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.

"எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.

"இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."

தொடரும்.....

Monday, March 12, 2007

முருகனும் தெய்வயானையும்

சமீபத்தில் முருகனைப் பற்றி ஹரிஹரன் ஒரு பரபரப்புப் பதிவு போட அதற்குப் பதிலாக விடாதுகருப்பு ஒரு பதிவு போட. பிறகு முத்துக்குமரனின் வடமொழி பற்றிய ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் விழுந்தது. அதை வைத்து முத்துக்குமரன் ஒரு பதிவு போட அதில் அனானி நண்பர் ஒருவர் இந்தப் பிரச்சனை குறித்து என்னுடைய கருத்து என்ன என்று கேட்டிருந்தார்.

முருகனைப் பற்றி தகவல் பரிமாற்றம் என்ற வகையில் நடக்கும் கலந்துரையாடலில் கருத்துச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. அனைத்தும் அறிந்தவன் அல்லன் என்றாலும் தெரிந்ததைச் சொல்வது சரிதானே. அதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன். அதை ஏற்கனவே முத்துக்குமரனின் இந்தப் பதிவில் கூறியிருந்தாலும் சற்று விளக்கமாக இங்கு சொல்கிறேன். அதற்குக் காரணம் அங்கு மற்றொரு நண்பர் கேட்ட கேள்வி. முருகனை வள்ளி தெய்வயானையோடு போற்றி வணங்கும் நான் எனக்கும் முருகனுக்கும் நேர்மையாக கருத்தை எடுத்து வைக்கிறேன். அனைத்தும் முருகன் செயல். "யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

ஜிரா: "எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."

GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP

சரி. பழைய தமிழ்நூல்களைப் பார்த்தால் முருகனையும் வள்ளியையும் மட்டுமே காணமுடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமாக இருந்தாலும் வள்ளியும் முருகனும்தான் வருவார்கள். தெய்வயானையைப் பற்றிய குறிப்பு கிடையாது. தமிழில் முதலில் எழுந்த இறைநூல் திருமுருகாற்றுப்படை என்பார்கள். அதுவுமில்லாமல் ஆற்றுப்படை வீடுகளைத் தொகுத்ததும் அந்த நூல்தான். அந்த நூலில்தான் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சொல்லப்படுகிறது. பலர் பழநிதானே முதற்படை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் கனி கிடைக்காது நின்றது...பிறகு தந்தைக்கு மந்திரம் சொன்னது...பிறகு சூரனை வென்றது..பிறகு தெய்வயானையை மணந்தது...வள்ளியை மணந்தது....இரண்டு மனைவியரோடு நின்றது என்று வரிசையாக நினைப்பார்கள்.

ஆனால் நக்கீரர் மக்களை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவதறாக எடுத்துக்கொண்டது ஆறுவீடுகள். அவைகள் வரிசையாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரும். ஆகையால் இதுதான் சரியான வரிசை. இதில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இப்பொழுது தெய்வயானையை மணம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் திருமுருகாற்றுப்படையில் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே நக்கீரர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆனால் வள்ளியைப் பற்றிய குறிப்பு பெயரோடு உண்டு. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே" என்று குறிப்பிடுகிறார். அதாவது முருகப் பெருமான் குறக்கொடியாம் குலக்கொடி வள்ளியொடு மகிழ்ச்சி தரும் புன்னகை பொலிய அமர்ந்திருக்கிறாராம். வள்ளி என்று சொல்லி அவள் குறத்தி என்ற சொல்லியிருக்கிறார்.

சரி. நண்பர் குறிப்பிடும் ஆறாம் வரிக்கு வருவோம். இது திருப்பரங்குன்றத்திற்கு உரியது. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்பது அந்த வரி. இதற்குப் பொருள் என்ன?

மறு இல் கற்பின் - குற்றமற்ற பண்புடையவளின்
வாணுதல் கணவன் - ஒளிர்பொலி நெற்றி கொண்ட கணவன்

நற்பண்புடைய ஒரு பெண்ணின் கணவன் என்பது அந்த வரிக்கான பொருள். அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சரி. பெயரைக் குறிப்பிடா விட்டாலும் யாருடைய மகள் என்று சொல்லியிருக்கலாமே? வள்ளி என்பவள் குறத்தி என்று விரித்துச் சொன்ன நக்கீரருக்கு தெய்வயானை என்பவள் ஆனை வளர்த்த மகள் என்றோ தேவேந்திரன் மகளென்றோ சொல்லியிருக்கலாமே!

ஒருவேளை நக்கீரருக்குத் தேவேந்திரனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை. "யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்" என்றும் சொல்லி விடுகிறார். அதாவது ஆனை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் முருகனைப் போற்றினான் என்று சொல்ல வருகிறார்.

நண்பர் வி.ஆர்.பி சொல்லியிருப்பது போல கற்பு என்ற சொல்லாடல் தெய்வயானையைக் குறிப்பதாகக் கொண்டால்....ஏன் தெய்வயானையை மட்டும் கற்பு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும்? வள்ளிக்குக் கற்பு கிடையாதா? இவைகளே எனக்கு எழும் கேள்விகள்.

ஆனால் பிற்காலத்தைய நூல்களில் கண்டிப்பாக தெய்வயானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மறுக்க முடியாது. ஆனால் சங்க நூல்களில்? என்னறிவுக்கு எட்டி இல்லை. இன்னொரு தகவல். பிள்ளையாரின் துணையால்தான் முருகன் வள்ளியை மணந்தார் என்ற குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இல்லை.

இவையனைத்தும் எனக்குத் தெரிந்த கருத்துகள். இந்தக் கருத்துக்கு மறுப்புக் கருத்திருந்தால் தெரிந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி

அன்புடன்,
கோ.இராகவன்

தூத்துக்குடியை ஆண்டவந்தான் காப்பாத்தனும்

உண்மை அதுதாங்க. போன வாரம் தூத்துக்குடிக்கு அவசர வேலையாப் போக வேண்டியிருந்தது. அப்பப் பாத்ததையும் கேட்டதையும் வெச்சுத்தான் சொல்றேன் தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

மதுரைப் பக்கத்தில இருந்து தூத்துக்குடிக்குப் போறவங்க பாஞ்சாலங்குறிச்சிக்கான குறுக்குச்சாலை வழியாகப் போகனும். அப்படித் தூத்துக்குடிக்குள்ள நொழையும் போது மொதல்ல புதிய பேருந்து நிலையம் வரும். அது நான் சின்னப்பிள்ளையிலேயே பழைய பேருந்து நிலையமாயிருச்சு. இருந்தாலும் அது ரெண்டாவது வந்ததால இன்னைக்கும் புதிய பேருந்து நிலையந்தான். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில்வே தண்டவாளம் ஓடும். அதுதான் தூத்துக்குடியப் பிரிக்கிறது.

அந்த ரயில்வே தண்டவாளத்துல ஒன்னாங் கேட்டு, ரெண்டாங் கேட்டு, மூனாங்கேட்டுன்னு மூனு கதவுகள். ரயில் போறப்ப மட்டும் மூடுவாங்க. அதுல மூனாங்கேட்டுங்குறது புதிய பேருந்து நிலையம் பக்கத்துல இருக்கு. அது வழியாத்தான் பழைய பேருந்து நிலையத்துக்கும் ஊருக்குள்ளயும் போயாகனும். ஆனா பாருங்க...அங்க எப்பவுமே ஒரே நெரிசல். கூட்டம். போக்குவரத்துக் குழப்பம்னு எக்கச்சக்க பிரச்சனைகள்.

சரி...இந்த மாதிரிப் பிரச்சனைகளை ஒரு மேம்பாலம் தீத்துருதே. அதுனால ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாலம் கெட்டத் தொடங்குனாங்க. அதுக்கேத்த மாதிரி பெரிய தூண்களை எழுப்பியும் சாரச்சுவரு கட்டியும்னு வேலை தொடங்குச்சு. ஆனா இன்னைக்கும் அது அப்படியே இருக்கு. வேலை அதுக்கப்புறம் நடக்கலை.

ஏன்னா அதுக்குக் காரணம் தூத்துக்குடி பெரியசாமிதான்னு ஊருக்குள்ள பேச்சு. இவரு பலமுறை சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. கட்சித் தலைமையிடம் நல்ல செல்வாக்கு. ஊருக்குள்ளயும் வெளியயும் நல்ல சொத்து. அவருதான் பாலங்கட்ட விடாம தடுக்கிறது. அதுக்கு வெளிப்படையா சொல்ற காரணம்...பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.

அத்தோட விட்டாரா? இன்னொரு புதுத்திட்டத்தையும் கொண்டு வந்துருக்காரு. அதாவது தூத்துக்குடி வளர்ந்துக்கிட்டே போகுதாம். அதுனால ரயில் நிலையத்த ஏற்கனவே இருக்குற எடத்துல இருந்து நகட்டி ஊருக்கு வெளிய இருக்குற மீளவட்டானுக்குக் (பக்கத்துச் சிற்றூர்) கொண்டு போயிரனுமாம். அப்படிக் கொண்டு போயிட்டா...பழைய தண்டவாளங்க தேவையில்லையே. கேட்டப் பூட்ட வேண்டிய அவசியமில்லையே. அப்ப மேம்பாலம் வேணும்னு கேக்க மாட்டாங்கள்ள. அதுவுமில்லாம மீளவட்டான் வட்டாராத்துல இவரு நெலம் வாங்கிப் போட்டிருக்காருன்னு சொல்றாங்க. ரயில் நிலையம் அங்க போயிட்டா? நெலத்தோட மதிப்பு எங்கயோ போயிரும்ல. அடேங்கப்பா! ஒரே கல்லுல ரெண்டு மாந்தோப்பு.

இதுல இன்னொரு நகைச்சுவை என்னன்னா....முந்தி தூத்துக்குடிக் கலெக்டரா இருந்த ஹேமந்த்குமார் சின்ஹாங்குறவரு ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொன்னூறுகள்ளயே தூத்துக்குடிக்கான ரயில்வே நிலையத்தை மீளவட்டானுக்கு மாத்தனும்னு சொன்னாரு. அப்ப அதக் குறுக்க விழுந்து தடுத்தது இவர்தானாம்.

இப்படி ஒரு மக்ரூன் மாதிரி (தூத்துக்குடிக்காரங்களுக்கு லட்ட விட மக்ரூன் பெருசு) பிரச்சனை இருக்கும் போது எதிர்க்கட்சி புகுந்து விளையாடியிருக்க வேண்டாமோ? ஆனா முக்கிய எதிர்க்கட்டிகளான அதிமுகவும் மதிமுகவும் சத்தமே காட்டலை. ஆனா பாருங்க திமுகவோட கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கி. முனிசிபல் ஆபீஸ் முன்னாடி மிகப் பெரிய தட்டி வெச்சிருக்காங்க. அதுலதான் நான் சொன்ன தகவல்களைக் கிண்டலாச் சொல்லியிருக்காங்க. அதுல காங்கிரஸ் கட்சியோட உள்ளூரு, மாநில, அகில இந்தியப் புள்ளிகளோட அத்தன பேரோட படங்களும் இருக்கு. இருந்தாலும் இன்னும் ஒரு முடிவும் தெரியல. வேலை நடக்குற அடையாளமே காணோம். அதிகுமவுக்கும் மதிமுகவுக்கும் கிடைச்ச எதோ ஒன்னு காங்கிரசுக்குக் கிடைக்கலையோ என்னவோ!

அதுவுமில்லாம ஊருக்குள்ள சாலைகளைப் பாக்கனுமே.....பிறந்தநாள் கொண்டாடுவாங்களே அது மாதிரி சாலைல போறவங்க வர்ரவங்க அந்தக் குழிக்கு மூனு வயசு. இந்தக் குண்டுக்கு நாலு வயசுன்னு பேசுறாங்க. ஆனாலும் குழிங்களும் குண்டுங்களும் நாளொரு குட்டியா போட்டு வம்ச விருத்தி செய்றாங்க. அதுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் வழியக் காணோம். இது எந்தக் கட்சியில இருந்து சட்டமன்ற உறுப்பினர் வந்தாலும் இந்த நெலமைதான். அதான் சொன்னேன்....தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

(இந்தப் பதிவிற்கான தகவல்கள் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலரிடம் இருந்தும் தூத்துக்குடிச் சுவரொட்டிகளில் இருந்தும் ரோடுகள், பாலங்கள் ஆகியவற்றின் நிலமைகளை நேரில் பார்த்ததில் இருந்தும் பெறப்பட்டன.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, March 08, 2007

9ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

சந்தியாவைப் பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். ஆனால் சரவணனைப் பற்றி? சரவணன் பல பெண்களோடு பழக்கம் உள்ளவன். புகை அவனுக்கும் பகை. குடிப்பழக்கம்......தொடர் குடியன் அல்ல. ஆனால் தேவைப்பட்டால் அவனால் சிறிது குடிக்க முடியும். மற்ற படி அதன் மேல் அவனுக்கு விருப்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் சொல்லி சரவணனை உத்தமன் என்று சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவன் சாதாரண மனிதன். சந்தியாவிற்குச் சொன்னது இவனுக்கும் ஆகும். ஏமாற்று வேலை, அரசியல், திருட்டு, கொள்ளை, பொறாமை ஆகிய பழக்கங்கள் எல்லாம் நல்ல பழக்கம்....பலருடன் படுப்பது மட்டும் கெட்ட பழக்கம் என்றால் அவன் கெட்டவந்தான்.

சரவணனுக்குச் சந்தியா மிக முக்கியமான உறவு. நட்புறவுதான். அவன் மனதில் நினைப்பதையெல்லாம் அவனது மற்ற நண்பர்களை விட அவளிடம் மிகவும் வெளிப்படையாகப் பேச முடியும். அப்படிப் பட்ட நெருக்கமே அவர்கள் இருவரையும் முதன்முதலில் நெருங்க வைத்தது. ஆனால் இருவரும் அதைக் கை குலுக்குவது போலத்தான் ஆரம்ப காலங்களில்....ஏன் இப்பொழுதும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நெதர்லாண்டில் வேலை கிடைத்ததும் முதலில் அவனை யோசிக்க வைத்தது சந்தியாதான். அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியுமா என்றுதான். ஆனால் பக்கத்தில் இருந்தால்தான் உறவா என்று படக்கென்று நெதர்லாண்டு போய் விட்டான். தொடக்கத்தில் அடிக்கடி மெயிலிலும் தொலைபேசியிலும் தொடர்பு வைத்திருந்தான். நாள்பட நாள்பட மெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் குறைந்து கொண்டேயிருந்தன. இருவரின் பணிப்பளுதான் அதற்குக் காரணம். இந்தியாவிற்கு வருவதே அவளுக்காகத்தான். சந்தியாவிற்கும் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்தான். ஆனால் சந்தியா மறுத்து விட்டாள். அதில் அவனுக்கும் வருத்தந்தான். ஆனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

அது சரியா தவறா என்று விவாதம் செய்து கொண்டேயிருந்தால் அடுத்து என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியாது. ஆகையால் கதைக்குப் போகலாம்.

சந்தியாவின் வீட்டிற்குப் போவதற்காகவே நன்றாக உடையணிந்து கொண்டு கும்மென்று வந்தான். சுந்தரராஜனுக்கு ஒரு நல்ல தங்கப்பேனாவும் சிவகாமிக்கு ஒரு அழகான கிச்சன் செட்டும் கொண்டு வந்திருந்தான். அவனை வரவேற்றுக் கதவைத் திறந்தது சந்தியாதான். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து விட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். அவள் செல்லமாக முறைத்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள்.

"என்னம்மா...வீட்டுல யாரையும் காணோம்?" அமைதியான வீடு அவனைக் கேட்க வைத்தது.

தலையைச் சாய்த்துச் சாய்த்து சந்தியா சொன்னாள். "சொல்லவே மறந்துட்டேன் டா. இன்னைக்குக் கண்ணன் புதுக்கார் எடுக்குறான். அதுக்குதான் அம்மாவும் அப்பாவும் போயிருக்காங்க. இப்பதான் கெளம்பிப் போனாங்க." முதலில் சரவணனை வீட்டிற்கு அவசரப்பட்டு வரச்சொல்லி விட்டோமே என்று சந்தியாவும் அஞ்சினாள். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் வாணி சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆகையால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி சுந்தரையும் அப்பாவோடும் அம்மாவோடும் அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் வெளியே போவதைப் பற்றிச் சரவணனிடம் சொல்லாமல் மறைத்தாள். சொல்லி விட்டால் பிறகு வருகிறேன் என்பானே! அதே போலச் சரவணன் வருகிறான் என்று வீட்டிலும் சொல்லவில்லை.

பொத்தென்று சோஃபாவில் விழுந்தான். சந்தியாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு. "எனக்குச் சொல்லீருக்கலாமே. நான் நாளைக்கு வந்திருப்பேனே! ம்ம்ம்....நீ போகலையா? உன்னோட தம்பிதான கண்ணன்?"

"ஆமா. என்னோட தம்பிதான். போயிருக்கலாம்தான். ஆனா நானும் போயிட்டா வீட்டுல உன்னை யார் வரவேற்குறது." சமாளித்தாள். சரவணனுக்கு லெதர் சோஃபா. சந்தியாவிற்கு சரவணன் சோஃபா.

"ஆகா....என்னோட செல்லம். சரி. இப்ப எனக்குப் பசிக்குதே. காபியாவது போட்டுக் கொடு. டின்னருக்கு என்ன பண்றது?"

அவனது மடியிலிருந்து எழுந்தாள். "இரு காபி போட்டுத் தாரேன். அம்மா டிபன் ஒன்னும் செய்யலை. மேரி ப்ரவுன்ல ஆர்டர் பண்ணீறலாம். சரியா?"

"ஓகே. எதையாவது செய். மொதல்ல ஒரு காபி குடு." பிறகு சந்தியா காபி கொடுத்ததையும் மேரி பிரவுனில் ஆர்டர் கொடுத்ததையும் தன்னைக் கொடுத்ததையும் இப்பொழுது கண்டு கொள்ள வேண்டாம். அடுத்து மேலே போகலாம்.

சுந்தரையும் தூக்கிக் கொண்டு போனது நல்லதாகவே இருந்தது. சிவகாமியும் வாணியும் இருந்ததால் அவனைப் பார்த்துக் கொள்வது எளிதாயிற்று. கண்ணனுடனும் அவன் நன்றாக ஒட்டிக் கொண்டான். கண்ணனுக்கும் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி. ஒரு மகிழ்ச்சி. காரை எடுத்து பூஜை போட்ட கையோடு தங்கமாளிகைக்குச் சென்று சின்னதாக ஒரு தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தான். வாணிக்கும் நிம்மதி. நினைத்தபடியே எல்லாம் நடக்கிறதே. நல்ல வேளையாக ராஜம்மாளை வீட்டிலேயே விட்டுச் சென்றனர். அப்படியே இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் சுந்தரைத் தூக்கிக் கொண்டு பெசண்ட் நகர் திரும்பினர். சந்தியா சொல்லிச் சரவணன் வந்து சென்றதை தெரிந்து கொண்டனர்.

கண்ணன் தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தது சந்தியாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தருக்கு மொட்டை எடுப்பதற்குக் கண்ணனை அழைப்பதில் சிரமம் இருக்காது என்ற முடிவுக்கு அவளால் எளிதாக வரமுடிந்தது. பிரச்சனையிருந்தாலும் வாணி சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நிம்மதியும் சரவணனுடனான பிரியாணியும் அவளை ஒரு மகிழ்சி மேகத்தில் மிதக்க வைத்தது.

அடுத்து வந்த சனி ஞாயிறு சரவணனுக்குப் பரபரப்பாகவே இருந்தது. இந்தியாவிற்கு வரும் முன்பே சாட்டிங்கில் ஒரு கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அவளோடு பொழுது போனது. நிறைய காபி குடித்தாலும் சுவையில்லையென்றால் நாவில் நிற்காது. அந்த நிலையில்தான் கிளிக்கு டாடா காட்டினான் சரவணன். கிளியும் எண்ணிக்கைக் கணக்கை எண்ணிக் கை தட்டிச் சென்றது.

ஆனால் சந்தியா எங்கும் போகவில்லை. எதனாலோ தேவையிருக்கவில்லை. அவளுடைய வாரயிறுதியும் மகிழ்ச்சியாகவே கழிந்தது. அதற்கு அடுத்த வாரம் இருவருக்கும் மிக வேகமாகச் சென்றது. சரவணனுக்குத் தெரிந்தவர்களைச் சென்று பார்க்க வேண்டியிருந்தாலும் செவ்வாய்க் கிழமை மாலை சந்தியாவோடு fishermen's cove போகத் தயங்கவில்லை. அதற்கு நேரம் கிடைத்த அவனுக்குப் பெசண்ட் நகர் செல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை. :-)

அத்தோடு வியாழக்கிழமை லேண்ட்மார்க்கிற்கு கள்ளியிலும் பால் கவிதைத் தொகுப்பின் கையெழுத்து நிகழ்ச்சிக்காக தேன்மொழி சந்தியாவையும் குடும்பத்தாரையும் அழைத்தாள். சந்தியாவும் ஒப்புக் கொண்டாள். அதுவும் அங்கு வரும் நெரிசலைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல்! ம்ம்ம்...என்ன செய்வது? அவளா இந்தக் கதையை எழுதுகிறாள்? நானல்லவா. எத்தனை முறைதான் அவளைத் தப்பிக்க முடியும்?

தொடரும்....

Tuesday, March 06, 2007

8ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பாகம் இங்கே.

அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நேராக அலுவலகத்திற்கு எதிலும் மோதாமல் அவள் வந்து சேர்ந்ததே அதிசயந்தான். பெருமாள்சாமி அவளை வீட்டிற்கு அழைத்ததற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு அவள் அலுவலகம் புறப்பட்டாள். சரவணன் அவளுக்கு விடை கொடுத்து விட்டு பிறகு ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான்.

அதெல்லாம் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் சரவணனுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகச் சொன்னதுதான் அவளைக் காக்கை போல கொத்திக் கொண்டிருந்தது. ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். அது இனிமேல் இல்லாமல் போகுமென்றால்? ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகி விட்டால்? அவளது நிலை? அவளும் திருமணம் செய்து கொள்வதா? அது நடக்குமா? அவன் ஆண். இவளோ பெண். அதிலும் குழந்தை பெற்றவள்? அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்ததையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

தேன்மொழியைத் தொலைபேசியில் அழைத்தாள். ஆனால் அடுத்த வாரம் இருக்கும் புத்தக வெளியீட்டு வேலையாக அவள் இருப்பதால் இரவில் அழைப்பதாகச் சொல்லி விட்டாள். அடுத்த வார புதனன்று சென்னையில் காமராஜ் மெமோரியல் ஹாலில் வெளீயீடு. பிரபல திரைப்படப் பாடலாசிரியர் என்பதால் பல பிரபலமானவர்கள் வருவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் இருப்பதால் அவரும் வருகிறார். அதுவுமில்லாமல் தேன்மொழியின் ரசிகர்கள் வேறு. அதற்கு அடுத்த நாள் லேண்ட்மார்க்கில் ரசிகர் சந்திப்பு. புத்தகம் வாங்குகின்றவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுக்கும் விழா. அத்தனைக்குமான ஏற்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் சந்தியாவுடன் சரியாகப் பேச முடியவில்லை.

தேன் மட்டுமா? சரவணனும்தான். ஃபோன் செய்வதாகச் சொன்னவன்...காலையரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்த மலர் இரவில் வாடிய பின்னும் அழைக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவனை அழைக்கவும் செய்தி அனுப்பவும் சந்தியாவின் மனநிலையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் என்ன மிதமா? அதே போலத் தேன்மொழியும் சொன்னபடி இரவில் அழைக்கவில்லை. காத்திருந்த சந்தியா எப்படியோ ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.

ஆனால் விடியல் அவளுக்கு விடியலாகத்தான் இருந்தது. அவளை எழுப்பியதே சரவணனின் குறுஞ்செய்திதான். "de word sweet is obsolete 4m now and further sandhya is what we have to use :-) good morning. vil cal at 10. hv a gud day" படித்ததும் சந்தியாவின் முகத்தில் புன்னகை. படபடவென அவள் கிளம்பி அலுவலகம் வந்து விட்டாள். ஆனால் பத்து மணிதான் வழக்கம் போல வந்தது. அதுவும் சரவணனின் தொலைபேசி அழைப்போடு.

"ஏ! சந்தி! சாரிடா. நேத்து பயங்கர பிசி." மொபைல் வழியாக தேவனின் திருச்சபைச் செய்தி கேட்டுப் பரவசமடைந்தாள்.

"நல்லாயிருக்கேன். இன்னைக்கு நீ என்ன பண்ற? லஞ்சுக்கு இங்க வர்ரியா?"

"லஞ்சுக்கு முடியாது. ஆனா நாலு மணிக்கு மேல ஒன்னால முடியும்னா ஈ.சி.ஆர் ரிசார்ட் போலாம். சரியா?" உண்மையிலேயே சந்தியாவிற்கு அது திருச்செய்திதான். ஒப்புக்கொண்டாள். அதே போல நாலு மணிக்கு இருவரும் சென்றார்கள். Fishermen's Cove என்ற அந்த நட்சத்திர விடுதியின் கடலைப் பார்த்த ஃபிரெஞ்சு ஜன்னல் அறை அவர்களுக்கு உதவியது.

வழியெல்லாம் வெட்டிக் கதை பேசிக் கொண்டு வந்தவர்கள். அறைக்குள் வந்ததும்...கதவை மூடியதும்....ஒருவரையொருவர் மூடிக் கொண்டனர். ஏதோ கின்னசில் முத்த சாதனையெல்லாம் இருக்கிறதாமே...அவையெல்லாம் புறமுதுகிட்டு ஓடின. "பொருத்தம் உடலிலும் வேண்டும். புரிந்தவன் துணையாக வேண்டும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கின்றாரே. அதுதான் அங்கு நடந்தது. எல்லா விரல்களுக்கும் வீணை நாதம் கொடுக்காது. வீணையின் நெளிவு சுளிவுகள் விரலுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்டும் விரலுக்குத் தக்க ஒலியை வீணையும் கொடுக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது. எத்தனையோ விரல் மீட்டிய வீணைதான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஓசையை உண்டாக்கியது இப்பொழுது இசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அந்த இசைதான் விரலுக்குள் ஒளிந்திருக்கும் திறமையையெல்லாம் வெளிக்கொண்டு வந்தது.

இருவரையும் ஒன்றாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஷவரும் அந்தக் குளியலறையும் அதிலிருந்த பெரிய கண்ணாடியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தன.

"சந்தி....இதெப்படிடா?"

"எது?"

"உங்கிட்ட மட்டும் ஒன்னு இருக்கே"

"உங்கிட்டயும்தான் ஒன்னு இருக்கு"

"ஏய்ய்ய்ய்ய்ய்ய்...."

"பின்னே என்னவாம்....i love u soooooooooooooooooooo much!" பச்.

"i too da sandhy. நான் முழுமையான நானா இருந்ததும் இருக்குறதும் ஒங்கிட்ட மட்டுந்தான். தெரியுமா?"

"சரி. இருக்கப் போறது?"

"அதுவும் அப்படித்தான். no change at any circumstance." பச்.

"உனக்குக் கல்யாணம் ஆனாக் கூடவா? ம்ம்ம்..."

"எனக்கா? என்ன சந்தி? நீயா இப்பிடிக் கேக்குற?"

"இல்லடா. ஏதோ வரனெல்லாம் வந்திருக்காமே."

"oh myyyyy god. அதையேங் கேக்குற? எல்லாத்தையும் ஒதுக்கியாச்சு. அதுனாலதான் நேத்து ஒனக்கு ஃபோன் பண்ண முடியலை."

"நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா? promise?"

"bra miss...oooopppps...promise" பச்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சொன்னால் இந்தக் கதையை மஞ்சள் பத்திரிகையில்தான் போட வேண்டும். ஏழு மணிக்கு இருவரும் கடற்கரை ஓரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசியதைக் கவனிப்போம்.

"அம்மா அப்பா நல்லாயிருக்காங்களா சந்தி? போன தடவ வந்தப்போ பாத்தது. கண்ணனுக்குக் கல்யாணம் ஆயிருச்சுல்ல. எதுவும் விசேஷம்?"

"எல்லாரும் நல்லாயிருக்காங்க. கண்ணனும் நல்லாயிருக்கான். ஒரு பையன் அவனுக்கு. அரவிந்துன்னு பேரு. ஆனா இப்போ டி.நகர் வீட்டுல இருக்கான். அவனோட மாமியார் இப்ப கூடதான் இருக்காங்க. அதுனாலயும் அவங்க வீட்டுக்காரங்க வரப்போக இருக்குறதால டி.நகர் வீடுதான் சரீன்னு முடிவு செஞ்சோம்."

"அதுவும் நல்லதுதான். அவனையும் ஒரு வாட்டி பாக்கனும். போன வாட்டி எப்படியோ முடியாமப் போயிருச்சு. சரி. ஒன்னோட சினிமா ஃபிரண்டு எப்படியிருக்கா?"

"ஹலோ...அதென்ன சினிமாக்கார ஃபிரண்டு. தேன்மொழி ஒனக்கும் தெரியுந்தானே. அவளைப் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடுறதில்லை. கவிப்பூ தேன்மொழின்னுதான் கூப்புடுறாங்க. அதுவுமில்லாம அவ கள்ளியிலும் பால்னு ஒரு கவிதைத் தொகுப்பு போடுறா. புதங்கிழமை புத்தகவெளியீடு. அதுக்காகக் குழந்தையத் தூங்க வெச்சிட்டு அவளும் அவ வீட்டுக்காரனும் வேலை பாக்குறாங்க." சொல்லி விட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.

போலியாகக் கெஞ்சினான் சரவணன். "ஆத்தா! மகமாயி. மன்னிசுரும்மா...அவ உன்னோட ஃபிரண்டாவே இருக்கட்டும். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத்த்த்த்தூரம். அது இருக்கட்டும். அப்பா அம்மாவைப் பாக்க எப்ப வீட்டுக்கு வரட்டும்?"

"வீட்டுக்கா? நாளைக்கு வாடா. ஆறு மணிக்கு மேல வா. அப்பத்தான் நானும் ஆபீஸ் முடிச்சிட்டு வரச் சரியா இருக்கும். ஒன்னு பண்ணு. நைட் சாப்பாடு வீட்டுலதான். சரியா?"

"நீ சொன்னா சரிதான்."

"அடடே! நான் என்ன சொன்னாலும் சரியா?"

"ஆமாம் மேடம். நீங்க என்ன சொன்னாலும் அது சரியில்லை. ஹா ஹா ஹா"

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள். வந்து சுந்தரைப் பார்த்ததும்தான் அவளுக்குப் பக்கென்றது. நாளை இரவு உணவிற்கு அவனை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கின்றாளே!!!!!!!!!!!

தொடரும்.....

Monday, March 05, 2007

காலபைரவன் - விமர்சனம்

இவருதாங்க காகாகாகாலபைரவன்
தூத்துக்குடியில் ஒரு பொழுது போகாத சனிக்கிழமை மதியம் பார்த்த படம்தான் காலபைரவன். நிக்கோலஸ் கேஜ் நடித்த காலபைரவன். அட...அதாங்க...Ghost Rider. தூத்துக்குடி மக்களோட மக்களா உக்காந்து அவங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு ரசிச்சுப் பாத்த படம் காலபைரவன்.

ரெண்டு மணிக்குப் படம்னு சொன்னாங்க. ஒன்னே முக்காலுக்குப் போய் நின்னப்போ தொணைக்குக் கூட யாருமேயில்லை. சரியா ரெண்டு மணிக்குத்தான் டிக்கெட் குடுத்தாங்க. படம் போடும் போது கிட்டத்தட்ட ரெண்டரை.

உக்காந்திருந்தது மின்விசிறி ஓடிக்கிட்டிருந்த ஏசி வகுப்பு. அதுனால திரைக்கு முன்னால தடுப்புக்கு ஒரு கண்ணாடி இருந்தது. அது வழியாப் பாத்தா படம் ஒழுங்காத் தெரியும்லன்னு பக்கத்துல உக்காந்திருந்த சின்னப் பயக கேட்டாங்க. மொத வாட்டி வர்ராங்க போல. தெரியும்னு சொன்னேன். அதக் கேட்ட பெறகுதான் அவங்களுக்கு நிம்மதி.

படத்தோட கதை ரொம்ப லேசு. ஒரு சாத்தான். அது தப்பு பண்ணுது. அதாவது ஒப்பந்தம் போடுது. ஒப்பந்தம் போடுறது தப்பான்னு கேக்காதீங்க. என்ன மாதிரி ஒப்பந்தங்குறதுதான் சூழ்ச்சி. படத்துல யாரெல்லாம் சாத்தான் கிட்ட ஒப்பந்தம் போடுறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஊர்ல இருக்குற மக்களெல்லார் கிட்டயும் ஒரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அவங்க வாழ்க்கைல அவங்க விரும்புனதெல்லம் செஞ்சு குடுக்குமாம்...ஆனா அவங்க ஆன்மாக்கள் எல்லாம் சாத்தானுக்கடிமைன்னு. அதுனால எல்லா ஆன்மாக்களையும் அந்த ஊர்லயே சிறை வைக்கிறான் சாத்தான். அந்த நரகத்தக் காவல் காக்க சாத்தான் உருவாக்குனதுதான் காலபைரவன். காலபைரவனோ ஆன்மாக்கள் படுற துன்பத்தப் பாத்து அந்த ஒப்பந்தத்தையே திருடிக்கிட்டு ஓடீர்ரான். இப்ப சாத்தானோட ஒப்பந்தம் சாத்தான் கைய விட்டுப் போயிருச்சு. அதுனால ஆன்மாக்கள் எல்லாம் தப்பிச்சு அந்த பாழடைஞ்சு போன ஊருக்குள்ளயே அடஞ்சு கெடக்குதுங்க.

அடுத்து என்ன செய்யனும்? இன்னொரு காலபைரவனச் செய்யனும். மிஸ்டர். சாத் கூட அதத்தான் செய்றாரு. ஒரு பைக் ஓட்டுறவனோட அப்பாவுக்கு கான்சர். அத குணப்படுத்துறதாகவும் அதுக்குப் பதிலா அந்த பைக் பையன் அவனோட ஆன்மாவை சாத்தானுக்குக் குடுத்துறனும்னும் இன்னொரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அந்தப் பையன் அந்த ஒப்பந்தத்தைத் தெறக்கும் போது கை கிழிச்சி ரத்தச் சொட்டே கையெழுத்தா விழுந்துருது. அடுத்த நாள் காலைல அவனோட அப்பா நல்லாயிர்ராரு. ஆனா அன்னைக்கு நிகழ்ச்சியில சாத்தான் அவர நெருப்புல தள்ளிக் கொன்னுருது. கேட்டதுக்கு...அவரைக் குணப்படுத்துறதப் பத்தித்தான் ஒப்பந்தம். அது நடந்ததுல்லன்னு திமிராக் கேக்குது. அத்தோட சாத்தானுக்குத் தேவை வரும் போது அவனைப் பயன்படுத்திக்கும்...இப்ப அவன் பைக் ஓட்டுறதுல சாதிக்கட்டும்னு சொல்லீட்டுப் போயிருது.

இவனும் பைக் சாதனைல பெரிய ஆளாயிர்ரான். ஆறு எலிகாப்டர வரிசையா நிக்க வெச்சு பைக்ல தாண்டுறான். விபத்து நடந்தாக் கூட அவனைச் சாத்தான் காப்பாத்துது. நாளைக்கு வேலைக்கு ஆள் வேணுமே. அப்பத்தான் சாத்தானோட மகன் அந்த ஒப்பந்தத்தத் திருட முயற்சிக்கிறான். அப்பனக் கவுத்துட்டு இவன் பெரிய ஆளாகத் திட்டம். அப்பத்தான் உலக ஆன்மாக்கள இவன் கட்டுப்படுத்தலாம்னு. ரொம்பவே அழகாகவும் கும்முன்னும் இருக்குறவரச் சாத்தானோட மகன்னு சொல்றாங்க. அந்த நடிகர் மேல நமக்குப் பரிதாபந்தான் வருது. அவருக்கு ஒதவி செய்ய மூனாளு. நிலப்பூதம். காத்துப் பூதம். நீர்ப்பூதம்னு மூனு பேரு.இவருதாங்க சாத்தாரோட மகரு...


அதுக்குள்ள அந்த பைக் பையன் வளர்ந்து நிக்கோலஸ் கேஜ் ஆயிர்ராரு. அப்பத்தான் நமக்கு ஒன்னு புரியுது. நிக்கோலஸ் கேஜுக்கு ஏஜ் ரொம்ப ஆயிருச்சுன்னு. அதுக்கு அவரு என்ன செய்ய முடியும்! சாத்தான் ஒரு பைக்கோட வந்து கேஜப் பாக்குது. "இந்தாப்பா...இந்த மாதிரி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒருத்தன் ஒப்பந்தத் திருடீட்டு ஓடீட்டான். அந்த ஒப்பந்தத்த எப்படியாவது கண்டுபிடிக்க என்னோட மகன் முயற்சி செய்றான். நீ என்னோட மகனோட கதையை முடிச்சிட்டு அந்த ஒப்பந்தத்தையும் எங்கிட்ட கொண்டாந்து தரனும்னு சொல்லுது. இவனால மறுக்க முடியலை. ஏன்னா அவனோட ஆன்மாதான் சாத்தானுக்கு அடிமையாச்சே. அதுனால ராத்திரி வந்தாலே அவன் எரியிற எலும்புக்கூடா மாறி...எரியிற பைக்குல போறான். காகாகாகாலபைரவன் பைக்ல போறாரு.

அவனை அழிக்க இந்தப் பூதங்கள் ஒன்னொன்னா முயற்சி செய்யுது. ஆனா ஒவ்வொரு பூதமா கொன்னுர்ரான். கதாநாயகன்னா ஒரு காதலி இருக்கனுமே. அவளை வில்லன் கடத்தீட்டுப் போய் மெரட்டனுமே. அது இங்கயும் நடக்குது. இப்ப ஒப்பந்ததக் கண்டு பிடிச்சி அதை சாத்தான் மகன் கிட்ட ஒப்படைக்க வேண்டிய வேலையும் கேஜுக்கு வந்துருது. ஒருவழியா பழைய காலபைரவனக் கண்டுபிடிச்சி ஒப்பந்தத்த வாங்குறாரு. புதுக் காலபைரவன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டு அவரு ரிட்டயர் ஆயிர்ராரு. அதுக்கப்புறம் என்ன? வில்லனை அழிச்சி காதலியைக் காப்பாத்துறாரு. தன்னுடைய காதலன் மனுசனே இல்லைன்னு தெரிஞ்சு காதலி மொதல்ல வருத்தப்பட்டாலும் பிறகு ஒத்துக்கிறாங்க. அப்பத்தான் சாத்தான் வந்து இன்னொரு ஒப்பந்தம் போடுது. இனிமே காலபைரவனா இருக்க வேண்டியதில்லை. அந்த வேலைய ரிசைன் பண்ணீட்டா திரும்பவும் மனுசனாக்கீர்ரேன்னு. ஆனா கேஜ் ஒத்துக்குற மாட்டேங்குறாரு. கெட்டவங்க கிட்ட இருந்து ஒலகத்தக் காப்பாத்துறதுதான் காலபைரவனோட வேலைன்னு சொல்லீட்டு எரியிற பைக்குல ஜம்முன்னு எலும்புக்கூடா போறாரு.

இதுதாங்க கதை. ஆனா அதை முழுசாப் பாக்க விடாம தேட்டர்ல வெட்டுக எக்கச்சக்கம். திடீர்னு சத்தம் ஒன்னு வரும். படம் வேற வரும். பாத்துக்கிட்டிருக்கும் போதே திரையில இருட்டு விழுந்து அப்படியே வெளிச்சம் திரும்ப வரும். நடுவுல பக்கத்துப் பயக படத்தப் பத்தி உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கிட்டிருக்காங்க. "ஏலா கோயிலுக்குள்ள போயிருவாம் பாரேன்." தூத்துக்குடி வட்டாரத்துல சர்ச்சும் கோயில்தான். "அந்தக் கெழவனும் காலபைரவன்லா...அதான் அவனுக்கு எரியுற குதிரல." "ஏலே..முத்தங் கொடுக்காம் பாரேன். வெளிநாட்டுல எங்ஙன பாத்தாலும் இப்பிடித்தாம்ல. ஒரே ஜாலியா இருக்குமாம். எல்லாமே ரொம்ப லேசு." இப்பிடி கொடுத்த காசுக்குக் கூடவே சினிமா கெடைச்சது.

படத்துல சிறப்புன்னு சொன்னா அந்த எரியிற எலும்புக்கூடு எரியிற பைக்குல சாகசங்கள் எக்கச்சக்கமா செய்றதுதான். நல்லா எடுத்திருக்காங்க. ஆனா மத்த எல்லா கிராபிக்சும்...ம்ம்ம்ம்.....ராஜகாளியம்மன்...கோட்டைப்புரத்து மாரியம்மன்....வீரகாளி வெக்காளியம்மன் படங்கள் பாத்த மாதிரி இருந்தது. இன்னொன்ன பாராட்டியே ஆகனும். ஒலிமாற்றம். அதாங்க டப்பிங்கு. ரொம்ப நல்லாவே செஞ்சிருக்காங்க. நிக்கோலஸ் கேஜோட குரல் எனக்குத் தெரியும்னாலும்...புதுக்குரல்னு உறுத்தாம நல்லாப் பேசியிருந்தாங்க. இப்பல்லாம் இந்த மாதிரி நெறையப் படங்கள் வருதே. ஹாரி பாட்டர் கூட தமிழ்ல வருது. ஆனா பாக்கத்தான் மனசில்லை. புத்தகத்த படிச்சிர்ரோம்ல. அதான்.

என்ன? படத்தப் பாக்கலாமான்னு கேக்குறீங்களா? ம்ம்ம்ம்...நேரமிருக்கு....எப்படியாவது போக்கனும்னா பாக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, February 28, 2007

7ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே.

ராஜம்மாள் அப்படிக் கேட்டதும் வாணிக்கு எரிச்சல் வந்தது. வெளியில் காட்ட விரும்பவில்லை. அத்தோடு அமைதியாக எடுத்துச் சொல்ல விரும்பி மெதுவாகவே கேட்டாள். "என்னம்மா சொல்ற?"

மகள் அப்படி மெதுவாகக் கேட்டதை தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு வாயை விட்டார் ராஜம்மாள். "அதாம்மா....சந்தியாவை வீட்டுக்குக் கூட்டீட்டு வர்ரதப் பத்திச் சொன்னியே. அதத்தான் சொல்றேன். நீ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குள்ள சந்தியாவையும் பையனையும் கூட்டீட்டு வந்தா எல்லாரும் பேசுவாங்க? அத யோசிச்சியா?"

"யோசிச்சேன். நல்லா யோசிச்சேன். ஆனா நீ ஒன்னு யோசிக்கலையேம்மா. இப்ப நம்ம இருக்குறது நம்ம வீடு கெடையாது. மாமாவோட வீடு. அவர் கட்டுன வீடு. அதுல கண்ணனுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு சந்தியாவுக்கும் உண்டு. நீயோ நம்ம சொந்தக்காரங்களோ வர்ரது எல்லாரும் பேசும்படி இருக்கும்னு சந்தியா நெனக்கக் கூட உரிமையிருக்கு. ஆனா நெனைக்க மாட்டாங்க. அதுனால நம்மளும் நெனைக்க வேண்டாம்."

"அதில்ல. சந்தியாவுக்குக் கல்யாணமே ஆகலை. அதுதான் எனக்கு நெருடல். யார் கூட எந்த மாதிரிப் பழக்கமோ? கொழந்தை பொறந்தப்புறம் செயற்கையாச் செஞ்சதுன்னு கதை சொல்றா."

வாணியின் பொறுமை எல்லை மீறியது. "நிறுத்துமா. போதும். எதையும் தெரியாமப் பேசாத. அப்படியே சந்தியா யார் கூடயும் தொடர்பு வச்சிருந்தாத்தான் என்ன? இவ்வளவு பேசுற ஒங்கிட்ட ஒரு கேள்வி. இத்தன வருஷ வாழ்க்கைல அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையும் மனசால கூட நெனைச்சதில்லையா? இல்லைன்னு என்னால பொய் சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு முன்னால அஜீத்தையும் விஜயையும் மனசுல விரும்பினேனே. இப்பக் கூட சுட்டும் விழிச் சுடரேன்னு அசின் கூட சூர்யா பாடும் போதோ விக்ரம் சதாவத் துரத்தும் போதோ என்னோட மனசு குழையும். அது மட்டும் சரியா? கண்ணனுக்குக் கூடத்தான் நயன்தாரா பிடிக்கும். பாக்கும் போது கண்டிப்பா மனசுக்குள்ள அந்த நடிகையை நெனைக்காமலா இருக்கப் போறாங்க?"

"இதென்ன கூத்து? நெனைக்கிறதும் செய்றதும் ஒன்னா? இட்லீன்னு நெனச்சா வயிறு நெறைஞ்சிருமா?"

"இட்லீன்னு நெனச்சா வயிறு நெறையாது. ஆனா மனசுக்குள்ள இட்லி சாப்பிடனும்னு ஆசய வெச்சிக்கிட்டு இட்லி சாப்புடுறது தப்புன்னு சொல்றதுதான் தப்பு. ஆகையால....அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பாக்குறத மொதல்ல விடும்மா. நம்ம செய்ய வேண்டியதே நெறைய இருக்கு. அதுகளப் பத்தி யோசிப்போம். இனிமே இதப் பத்திப் பேச வேண்டாம். பேச எனக்கும் விருப்பமில்லை." உறுதியாகச் சொல்லி விட்டாள் வாணி. ராஜம்மாள் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தார்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகி விட்டன. சந்தியா பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாள். விமான நிலையத்திற்கு. சரவணனை வரவேற்க. விடியற்காலையிலேயே மும்பை வந்து அங்கிருந்து கிங் ஃபிஷரில் சென்னை வருகிறான். ஜெல்லி ஐஸ்கிரீம் போலக் குளுகுளுவெனக் கிளம்பினாள். சரவணன் வருவதை ஏற்கனவே வீட்டில் சொல்லியிருந்தாள். சந்தியாவிற்கும் சரவணனுக்கும் உள்ள நட்பு(!) மட்டும் வீட்டில் தெரியுமாதலால் சந்தியாவின் பரபரப்பைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர். கத்திப்பாராவில் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் மேம்பாலத்தையும் அது உண்டாக்கும் நெரிசலையும் சபித்தபடி காரை ஓட்டிக் கொண்டு ஒருவழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்தவளை வரவேற்றார் பெருமாள்சாமி. சரவணனின் தந்தை.

"என்ன சந்தியா. எப்படியிருக்க? சரவணன் வந்தாத்தான் ஒன்னப் பாக்க முடியுது. இல்லைன்னா நீ இருக்கியா இல்லையான்னே தெரியாது. வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

இவர் வருவார் என்று சந்தியா எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் அவரை அடிக்கடி பார்த்துப் பேசியவள்தான். சுந்தரைச் சுமக்கத் தொடங்கியதிலிருந்து அவரைத் தவிர்த்து வந்தாள். அவர் வழியாகச் சரவணனுக்குக் குழந்தை பிறந்தது தெரிந்து விடுமோ என்ற பயந்தான். சரவணனுக்குத் தெரிந்தால் இல்லாத கேள்விகள் கேட்பானே. அதனால்தான் அவரைப் பார்த்ததும் வழிந்தாள். "நல்லாயிருக்கேன் அங்கிள். வீட்டுலயும் எல்லாரும் நல்லாயிருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க? ஆண்ட்டி எப்படி இருக்காங்க?"

"நான் நல்லாயிருக்கேன். இப்பல்லாம் கார் ஓட்டுறதில்லை. டிரைவர்தான். அதுனால ஏர்போர்ட்டுக்கு நானே வந்துட்டேன். ரிட்டையர் ஆயாச்சு வேற. வேற என்ன வேல வீட்டுல. சரியான நேரத்துக்குத்தான் நீயும் வந்திருக்க. பிளைட் வர்ர நேரந்தான்."

அறிவிப்புப் பலகையில் கம்ப்யூட்டர் கிங்பிஷர் வந்து இறங்கியதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்தியிலும் சொல்லியது. "வந்துருச்சு அங்கிள். ஃபிளைட் வந்துருச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல லக்கேஜ் எடுத்துக்கிட்டு சரவணன் சீக்கிரமா வருவான்னு நெனைக்கிறேன்." மனதிற்குள் ஒளித்துக் கொண்ட துள்ளல் குரலில் எட்டிப் பார்த்தது.

"ஆகா வந்தாச்சு. நல்லவேளை டிலே ஆகலை. உன்னோட பிரண்டு வந்ததும் சொல்லு. இந்த வாட்டி அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு. நல்ல வரனெல்லாம் வருது."

சந்தியா மனதால் உடலால் உயிரால் சடன் பிரேக் போட்டாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன அங்கிள். சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள்.

மனதுக்குள். "என்ன அங்கிள்! சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள். அதே கேள்விதான். ஆனால் தொனி மாறியிருந்தது.

"ஆமாம்மா. அவனுக்கேத்த நல்ல வரன்கள் நெறைய வருது. அதான்."

(வரும் அங்கிள் வரும். சரவணனோட மொத வரனே நாந்தான். நீங்க என்னடான்னா புதுப்புது வரனாப் பாக்குறீங்க. அவன் பாத்த வரன்களையெல்லாம் கணக்குப் பாக்க முடியுமா ஒங்களால!)

"அதுவுமில்லாம...எங்களுக்கும் பேரன் பேத்தியப் பாக்கனும்னு ஆசை இருக்காதா?"

(பேரன் பேத்தியப் பாக்கனுமா? ஏற்கனவே ஒங்களுக்குத் தெரியாம ஒரு பேரன் இருக்கான். பேரு சுந்தர். அது சரி....எனக்குத் தெரிஞ்சி ஒரு பேரந்தான். எனக்குத் தெரியாம எத்தன பேரு ஒங்களுக்குப் பேரனையோ பேத்தியையோ பெத்திருக்காங்களோ!)

"அத்தோட...அவன் வெளிநாட்டுல இருக்கான். வேண்டியத ருசியாச் செஞ்சு சாப்பிடவும் தெரியாது. கண்டதத் தின்னுக்கிட்டிருப்பான். அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னா வீட்டுச் சாப்பாடு கெடைக்கும். ஒடம்புக்கும் நல்லது."

(சரவணனே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். அங்க கெடைக்கிற விருந்துகளே எக்கச்சக்கம். அதுவுமில்லாம சரவணன் கைப்பக்குவம் எப்படீன்னு எனக்குத் தெரியும். அவனோட பிரியாணின்னா...சரி...அதெல்லாம் ஒங்களுக்கு எங்க புரியப் போகுது! சொல்லத்தான் முடியுமா!)

"அதாம்மா...நீ அவன் கிட்ட எடுத்துச் சொல்லு. அது சரி. நீயும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கமா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சவங்கதான. சரவணன் கிட்ட நான் சொல்றேன். அவன் வந்து ஒன்னைய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்வான்."

(ஆகா! சரவணன் கிட்ட நான் சொல்லனும். எங்கிட்ட சரவணன் சொல்லனும். கிழிஞ்சது போங்க! ரெக்கமெண்டேஷனுக்கு நல்ல ஆளப் பிடிக்கிறீங்களே! நான் அவன் கிட்ட முதலிரவுக்குத்தானே ரெக்கமெண்டேஷன் செய்ய முடியும்!)


"அந்தா! சரவணன் வந்துட்டாம்மா." அப்பாவைப் பார்த்துக் கையை அசைந்த சரவணனுக்குள் சந்தியாவைப் பார்த்ததும் கோக்கோகோலா பொங்குகிறது. சந்தியாவும் இன்ஸ்டண்ட் எனர்ஜியைப் புன்னகையிலும் பரவசத்திலும் காட்டி வரவேற்றாள்.

"எப்படி இருக்கீங்கப்பா?" என்று அப்பாவைக் கேட்டவன் அப்படியே திரும்பி, "ஹே சந்தி, என்னது இது? திடீர்னு அழகாயிட்ட? பியூட்டி பார்லர் போயிட்டு வந்தியா?" என்று கிண்டினான். பொய்க் கோபத்தைக் கண்களில் கொப்பளித்து விட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தாள் சந்தியா.

"என்னப்பா, அம்மாவும் நீங்களும் ஏர்ப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு சொன்னீங்க? அம்மா வரலையா?"

"இல்லப்பா. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. ஒனக்குதான். அது சம்பந்தமா பேச ஒன்னோட மாமா வந்திருக்காரு. அவரோட பேசிக்கிட்டிருக்கா. அதுனால நான் மட்டும் கெளம்பி வந்தேன். வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம். சந்தியா, நீயும் வீட்டுக்கு வர்ரியாம்மா?"

தொடரும்...

Monday, February 26, 2007

6ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பாகம் இங்கே.

அந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள். கண்ணனுக்கும் ராஜம்மாளுக்கும் மதிய உணவைக் காலையிலேயே தயாரித்து வைத்து விட்டு அரவிந்தைத் தூக்கிக் கொண்டு காரில் கிளம்பி வந்து விட்டாள்.

வாணி வந்ததும் சந்தியாவின் அப்பார்ட்மெண்ட் கலகலப்பானது. வாணிக்கு நன்றாகச் சமைக்க வரும் என்றாலும் இந்த மாதிரி பெசண்ட் நகர் வருகையில் சிவகாமியின் கைப்பக்குவத்தைத்தான் விரும்புவாள். வாரயிறுதியில்தான் பெரும்பாலும் வருவதால் மீன், கோழி என்று எதாவது எடுப்பார்கள். நிறைய செய்து வாணியிடம் கண்ணனுக்கும் கொடுத்தனுப்புவார் சிவகாமி. அன்றைக்கு வஞ்சிர மீன்.

சனிக்கிழமைக்கே உரிய சோம்பலுடன் சந்தியா மிகவும் தாமதமாக எழுந்து இன்னமும் குளிக்காமல் இருந்தாள். அரவிந்தோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரை வாணியே குளிப்பாட்டினாள். வாணியிடம் சுந்தர் நன்றாக ஒட்டிக் கொண்டான். பிறகு ஹாலில் சுந்தரராஜன், வாணி, சந்தியா உட்கார்ந்து கண்ணன் வாங்கப் போகும் காரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுக்களையில் வேலைக்கு வரும் ஜான்சி இருந்ததால் சிவகாமி உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

"ஜென் எஸ்டிலோப்பா. கருப்புதான் வாங்கனும்னு அடம் பிடிச்சாங்க. நாந்தான் குறுக்க விழுந்து தடுத்திட்டேன். அதுவும் எப்படி? எனக்குப் பிங்க் கலர்தன் வேணும்னு அடம் பிடிச்சேன். கடைசியில ரெண்டு பேருக்கும் பொதுவா முடிச்சோம். ஹா ஹா ஹா." சொல்லிச் சிரித்தாள் வாணி. கண்ணனை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவள் அவள்.

"ஆகா. ஒனக்குச் சொல்லிக் குடுக்கனுமா?" சந்தியா பாராட்டினாள். "ஒனக்கு நெனைவிருக்கா? ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே!" அவனுக்குச் சரி நீதான். வஞ்சகமில்லாமல் நாத்தனாரைப் புகழ்ந்தாள் சந்தியா.

எல்லாரும் சிரித்து மகிழ்ந்து இருக்கையில் ஒரு கொக்கியைப் போட்டாள் வாணி. "அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல கார் டெலிவரி எடுக்கச் சொல்லீருக்காங்க. அன்னைக்கு நீங்களும் வாங்கப்பா. கார் எடுத்துட்டு நேரா அகஸ்தியர் கோயிலுக்குப் போய் பூஜை போட்டுட்டு டின்னர் வெளிய போலாம். சந்தியா, நீங்களும் சுந்தரும் கண்டிப்பா வரனும்."

வாணியின் திடீர் அழைப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. வாணியே தொடர்ந்தாள். "என்ன அமைதியாயிட்டீங்க. இப்படியே இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா வரப் போக இருந்தா பழகீரும். பழையபடி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க முடியும்னு தோணலை. ஆனா வரப்போக கண்டிப்பா இருக்கனும். அதுதான் நல்லது."

சுந்தரராஜன் முதலில் பதில் சொன்னார். "வாணி, நீ சொல்றது கேக்கும் போதும் நெனைக்கும் போதும் நல்லாயிருக்கு. ஆனா வேலைக்காகுமா? பொதுவுல யாருக்கும் இதுனால பிரச்சனை வரக்கூடாது."

"அப்பா, நீங்க நெனைக்கிறது புரியுது. அன்னைக்கு அம்மா பேசுன மாதிரி யாரும் பேசுவாங்களோன்னு பயப்படுறீங்க. மொதல்ல பேசுவாங்கப்பா. ஆனா போகப் போக அமைதியாயிருவாங்க. இன்னமும் சொல்லப் போனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நா. அப்படி வந்தும் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நெனைக்கிறதாலதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரனும்னு நெனைக்கிறேன். விரும்புறேன். ஒரு வாட்டி எல்லாரும் அங்க வந்தீங்கன்னா சரியாப் போகும்." கெஞ்சும் தொணியில் முடித்தாள் வாணி.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. அதனால்தான் வாணி சொன்னதும் அந்த ஆசை இன்னமும் பெருகியது. சரி என்று சொல்லிவிட சுந்தரராஜனும் சிவகாமியும் துடித்தனர். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சந்தியா. அதனால் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தனர். பெற்றோரின் விருப்பம் சந்தியாவிற்குப் புரிந்தும் இருந்தது. அவர்கள் விருப்பத்தை மீறி பலதைச் செய்திருந்ததால் இந்த விஷயத்திலாவது அவர்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்க நினைத்தாள்.

"சரி வாணி. கண்ணன் மேல எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. ஆயிரம் இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி. அவனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அன்னைக்கு வீட்டுல எங்கிட்ட அப்படிப் பேசினாலும் ஊருக்கு முன்னாடி அவன் என்னை விட்டுக் கொடுத்ததில்லைன்னு எனக்கும் தெரியுமே. உன்னையும் எனக்கு நல்லாத் தெரியும். உன்னோட எடத்துல வேறொரு பொண்ணு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னே என்னால யோசிக்க முடியலை. கண்ணன் மட்டுமில்ல, நாங்களும் ரொம்பக் குடுத்து வெச்சவங்கதான். அப்பாம்மாவுக்காக மட்டுமில்ல உனக்காகவும் இந்த முடிவுக்கு நான் ஒத்துக்கிறேன். எடுத்த எடுப்புலயே நான் வர்ரத விட மொதல்ல சுந்தரக் கூட்டீட்டுப் போ. கண்ணனும் சுந்தரும் மொதல்ல பழகுனா அப்புறம் நான் வர்ரது லேசாயிரும். சரியா?" புன்னகையோடு கேட்டாள்.

பெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்திருந்த வாணிக்குச் சந்தியாவின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சரவணனின் வருகையை நினைத்து நினைத்து மகிழ்ச்சியாக இருந்த சந்தியாவிற்கு எல்லாமே நல்லதாகவே நடப்பது போன்ற மகிழ்ச்சி. தலைக்குக் குளித்து விட்டு வந்து அனைவரோடும் உட்கார்ந்து மதிய உணவை முடித்தாள். நன்றாக இருந்த வஞ்சிர மீனை எல்லாரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடிபிடித்தனர். வாணி மறந்தாலும் சிவகாமி கண்ணனுக்காக தனியாக ஏற்கனவே சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். சிறிய தூக்கத்திற்குப் பிறகு நான்கு மணிக்கு மேல் ஏலக்காய் டீ குடித்து விட்டு வாணியும் அரவிந்தும் டி.நகருக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாலையில் கண்ணனிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். "கார் எடுக்க அப்பாவும் அம்மாவும் வர்ரதாச் சொல்லீருக்காங்க. அப்புறம் பாருங்க...சுந்தர் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். போன வாட்டி போனப்பவே கீழ எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சான். தூக்கி வெச்சுக்கிட்டேயிருந்தேன். இந்த வாட்டி அவனை நாந்தான் குளிப்பாட்டினேன். நல்லாச் சிரிக்கிறான்." ஏதோ இயல்பாகச் சொல்வது போலச் சொன்னாள்.

கண்ணனுக்கும் சதை ஆடத்தான் செய்தது. "ஒங்கிட்ட ஒட்டிக்கிட்டானா? போன வாட்டி வாங்கீட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா? அவனுக்கு மொட்டை வேற எடுக்கனும். அதுக்கு என்ன பண்ணப் போறாங்களோ. காது வேற குத்தனும்."

தன் பங்கிற்கு வாணியும் நன்றாகவே ஊசியேற்றினாள். "ஆமாங்க. திருப்பரங்குன்றம் போகனுமே. ஒங்களுக்கும் லீவு கெடைக்கனும். ஒங்க மடியில் வெச்சுத்தான மொட்டை எடுக்கனும். அப்பா கிட்டச் சொல்லி சனி ஞாயிறுல வர்ர மாதிரி நல்லநாள் பாக்கச் சொல்லனும். கண்ணுக்குள்ளயே இருக்கான் சுந்தர். அடுத்த வாட்டி போகும் போது அவனையும் தூக்கீட்டு வந்திரப் போறேங்க." ஏதோ அப்பொழுது தோன்றுவது போலச் சொன்னாள்.

"ஏய்! நீ பாட்டுக்கத் தூக்கீட்டு வந்திராத. சந்தியாவால அவனை விட்டுட்டு இருக்க முடியுமா? அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது?"

"அதுவும் சரிதாங்க. காரெடுக்க அப்பாவும் அம்மாவும் வரும் போது அவனைத் தூக்கீட்டு வரச் சொல்வோம். அப்புறம் எப்படியும் ராத்திரி அவங்க பெசண்ட் நகர் போயிருவாங்களே. அதுனால பிரச்சனையிருக்காது. சரி. எனக்கு நேரமாகுது. நீல்கிரீஸ் போகனும். அம்மாவைக் கூட்டீட்டுப் போறேன். அவங்களுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்." கண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் அரவிந்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ராஜம்மாளோடு கிளம்பினாள். சுந்தரை மட்டும் வரச்சொல்வதை விட வாணி சந்தியாவையும் அழைத்திருக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தான் கண்ணன்.

பக்கத்துத் தெருவில்தான் நீல்கிரீஸ். வாணியும் ராஜம்மாளும் மெதுவாக நடந்தே சென்றனர். தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் ராஜம்மாள் கேட்டார். "எதுக்கு நீ வேண்டாத வேலையெல்லாம் பாக்குற?"

தொடரும்.....

Thursday, February 22, 2007

கர்நாடகத் தமிழனின் கேள்வி

கர்நாடகத் தமிழனின் கேள்வி என்றதும் அது ஜிராவின் கேள்வி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜிரா கர்நாடகாவில் ஆண்டுக்கணக்கில் இருப்பவர். இன்றைக்கு நினைத்தாலும் சென்னைக்கோ வேறு ஊருக்கோ வேலை வாங்கிக் கொண்டு ஓடிட முடியும். அதுவுமில்லாமல் தமிழகத்தில் நல்ல வலுவான குடும்ப அடிப்படை கொண்டவன். ஆனால் அப்படி எதுவும் செய்ய முடியாத...தமிழகத்தில் யாரையும் தெரியாத....கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனின் கேள்விதான் இது. இவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெங்களூர், மைசூர், குடகு சுற்றுவட்டாரங்களுக்குள்ளேயே இருப்பார்கள். தமிழ் உச்சரிப்பே காட்டிக் கொடுத்து விடும். வாங்கியிருக்கும் சொத்து சுகமெல்லாம் கர்நாடகாவிற்குள்ளேயே இருக்கும். இப்படிப் பட்ட கர்நாடகத் தமிழனின் கேள்வி இங்கே.

தமிழ்ப் படத்துல நடிச்ச சரோஜாதேவி கர்நாடகாவுல பந்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்றீங்க. சரி. அந்தம்மாவும் போக மறுத்திருச்சு. அதே மாதிரி தமிழ்ப் படத்துல நடிக்கிற கர்நாடகாவுல இருந்து வந்த நடிகர்கள் தமிழகத்திற்கு ஆதரவா இருக்கனும்னு சொல்றீங்க. சரி. நாங்க யாருக்கு ஆதரவா இருக்கனும்? பொறந்து வளர்ந்து பொழைச்சது எல்லாம் இங்கதான். சோறு போட்ட ஊருக்கு நன்றியோட நாங்க இருக்கனுமா வேண்டாமா? இல்ல இந்த விதி சினிமாக்கரங்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா? இல்ல நாங்க பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி அடி ஒத வாங்கி அகதியா வரணுமா? அப்படி வந்தா எங்களுக்கு என்ன செய்வீங்க? ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் வேற அகதியா வர்ராங்க. வந்திருக்காங்க. அவங்களுக்கு நீங்க ஆதரவு எப்படிக் கொடுக்குறீங்களோ அதே மாதிரிதான் எங்களுக்குக் குடுப்பீங்களா? பின்னாடி எங்கள்ள யாரரவது தப்பு செஞ்சா, கர்நாடகத் தமிழன்னாலே தப்பு செய்றவன், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கிறவன்னு சொல்வீங்களா? இல்ல ஒங்களுக்காக அகதியா வந்ததுக்காக எங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் குடுத்து வேலை வாய்ப்புகள்ல உதவுவீங்களா? சொல்லுங்கங்க.

புரியலைன்னா இங்க போய்ப் பாருங்க

Tuesday, February 20, 2007

கண்டுபிடிச்சுக் குடுங்களேன்

கொஞ்ச நாளுக்கு முன்னாடி திருக்கரங்குடியைப் பத்தி ஏதோ ஒரு பதிவு வந்தது. சரியாக் கவனிக்கலை. ஆனா எங்க அலுவலகத்துல உள்ள நண்பர்கிட்ட அவங்க ஊரப் பத்திய பதிவு ஒன்னு இருக்குன்னு சொல்லீட்டேன். அவரு அந்த ஊர விட்டு வந்து ரொம்ப காலம் ஆச்சு. அப்பா காலத்திலயே பெங்களூருக்கு வந்துட்டாரு. ஆனா அவரு வீட்டுல போய் அவரோட பாட்டிகிட்ட பதிவைப் பத்திச் சொல்லீட்டாரு. அவங்க அதக் கொண்டாந்து படிச்சுக் காட்டணும்னு சொல்லீட்டாங்களாம். யாராவது அந்தப் பதிவைக் கண்டுபிடிச்சுக் குடுப்பீங்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 19, 2007

5ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஹலோ தேன் தூங்கீட்டியா?"

"ஹே சந்தீ....இல்லடீ. அதுக்குள்ளயா? புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு நானும் அவரும் வேலை பாக்குறோம்."

"மகளத் தூங்க வெச்சுட்டு...நீயும் அவரும் வேல பாக்குறீங்களா! பெரிய ஆளுதான் நீ. கேட்டா புத்தக வெளியீடுன்னு சொல்வ." (குறும்புடன் சொன்னாள் சந்தியா)

(பொய்க் கோபத்துடன்) "நீ அடி வாங்கப் போற. ஒன்ன மாதிரியா நான்? அஞ்சுமாடி மகன், புதுமுக நடிகன், ஹாஸ்பிடல் ஓனர், இண்டஸ்டிரியலிஸ்ட்.....அத்தோட புதுப்புது பசங்க. வெளுத்து வாங்குற. எனக்கிருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு." (பொய்யாக அலுத்துக் கொண்டாள்)

"ஏய்! சினிமாக் கவிஞர்னு நிரூபிக்கிற பாரு. வரிசையா அடுக்குறா. ஒங்க சினிமாவுல இல்லாததா. அந்தப் புதுமுக நடிகர் திரிந்தும் திரியாமலும் ஜெய்தீப். நீ கூட இண்ட்ரோ குடுத்தியே. நியாபகம் இருக்கா? அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது! மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா? வரவர ஆம்பிளைங்களே சரியில்லை. சரி. சரி. நான் சொல்ல வந்ததையே விட்டுட்டு வேறெதையோ பேசிக்கிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். சரவணன் மெயில் அனுப்பீருக்கான். இந்தியாவுக்கு வர்ரானாம்." (கொஞ்சம் இறுகியது சந்தியாவின் குரல்)

(திடீர்க் குரலில்) "யாரு? சரவணனா? ஏண்டி...புருஷன் வர்ரான்னு சந்தோஷமாச் சொல்லாம இப்பிடிச் சோகமாச் சொல்றியே! இது ஒனக்கே நல்லாயிருக்கா?"

"ஏய்! என்ன ஒளர்ர? சரவணன் எப்படி எனக்குப் புருஷனானான்? விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல?" (சுருக்கென்று கேட்டாள் சந்தியா. சரவணன் அவளது கணவன் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.)

"நானா ஒளர்ரேன்? ஒன்னோட மகனுக்கு அவந்தான் அப்பான்னா....அவனுக்கு நீ யாரு? ஒனக்கு அவன் யாரு? அதச் சொல்லும்மா."

"சரி. இந்த கே.பாலச்சந்தர் மாதிரி கேக்குறத நீ கொஞ்சம் நிறுத்து. ஊருக்கெல்லாம் artifical inseminationன்னு சொல்லீருக்கேன். ஒன்னோட டமாரத்த இந்த விஷயத்துல அடிச்சிறாத." (கொஞ்சம் அமைதியாகக் கெஞ்சும் குரலில் சொன்னாள்.)

(தேன்மொழியும் அமைதியானாள்.) "சீச்சீ. அப்படிச் செய்வேனாடி? ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன்? சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா?"

"ஏ தேன்! ஒன்னய எனக்குத் தெரியாதா? திடீர்னு அப்படிச் சொல்லீட்டேன். சரி. நம்ம கதைக்கு வருவோம். சரவணன் சென்னைக்கு வர்ரானேடி. என்ன பண்றது? பாக்குறதா வேண்டாமா? சுந்தர அவன் கண்ணுல காட்டாம எப்படி இருக்குறது? வீட்டுக்கெல்லாம் வருவானேடி!"

"சென்னைக்கு வந்தான்னா...போய்ப் பாரு. வழக்கம் போல ...அதது..இததுன்னு...பிரியாணி போடுங்க. ஆனா வீட்டுக்கெல்லாம் அவன் வருவானே. சுந்தரப் பாத்துட்டான்னா? கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா? அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா?"

(சந்தியாவுக்கு அதில்தான் தயக்கம்) "அவன் கிட்டச் சொல்றதா? அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா? அதுக்குத்தான் artificial inseminationன்னு சொன்னேன்."

"ஏய்...கொஞ்சம் நிறுத்து. எனக்கு இப்பத்தான் இரு டவுட். இத்தன நாள் இது எனக்குத் தோணவேயில்லை. protection நீ பயன்படுத்துறேன்னு சொன்னியே. அப்போ அவன் condom போட்டுக்க மாட்டானா? இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு?"

(பெருமூச்சு விட்டாள் சந்தியா) "ம்ம்ம்....அவன் எவ கூடப் போனாலும் condom இல்லாமப் போகவே மாட்டான். ஆனா என் கிட்ட மட்டும் இல்லை. நாங்க பழகத் தொடங்குனப்போ இருந்தே அப்படித்தான். அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. ஆனாலும் இப்ப பெண்களுக்கு மட்டுமான கருத்தடைச் சாதனங்கள் எக்கச்சக்கமா இருக்கேடி. அதுனால எங்களுக்குக் குழந்தை இல்லாமப் பாத்துக்கிட்டோம். ஆனா உடலுறவுன்னு வர்ரப்போ...அது அப்படித்தான்." ( சந்தியா சொன்னதைக் கேட்ட தேன் பேச்சில்லாமல் இருந்தாள்)

"என்னடி அமைதியாயிட்ட? நாங்க நண்பர்களா? காதலர்களா? கணவன் மனைவியான்னு யோசிக்கிறையா? ரொம்ப யோசிக்காத. ஏன்னா...எங்களுக்கே தெரியாது. திரும்பவும் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் நெதர்லாந்து போனது கூட எனக்குப் பிடிக்கலை. அவனப் போகாதேன்னு சொல்லீருந்தா அவனுக்கும் அது பிடிச்சிருந்திருக்காது. அவனைப் பிரிய விரும்பாம அவன் இங்கயே இருந்தான்ன விரும்புனதும் உண்டு. ஆனா அதுக்காக என்னோட காதனாவோ கணவனாவோ என்னை அவன் dominate பண்ண விட முடியுமா? அவன் மேல இருக்குற உரிமை என்னை அவன் அடிமைப் படுத்தக் கூடாது. I miss him. But he cant mentally dominate me. I hate him because I am posessive. But I cant let him be my husband to loose even my surname."

(தேன்மொழிக்குச் சிரிப்பு வந்தது.) "நல்லா ஒளர்ர நீ. எனக்கென்னவோ நீ அவனக் காதலிக்கிறன்னுதான் நெனைக்கிறேன். ஒருவேளை அவன் தாலியோடயோ மோதிரத்தோடயோ வந்து கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டா ஒத்துக்கிருவன்னுதான் நெனைக்கிறேன்."

(சந்தியாவிற்குக் கோவம் வந்தது.) "ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! காதலா? எனக்கா? I am not so weak. ஒங்கிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு கூப்டா...இப்பிடிக் கொழப்புறயேடி. சரி. வேறெதாவது பேசலாம். என்னவோ புத்தக வெளியீட்டு விழான்னு சொன்னியே...அதப் பத்திச் சொல்லு."

(சிரித்து விட்டாள் தேன்.) "ஹாஹாஹா..நல்லா பேச்ச மாத்துற நீ. சரி. அப்படியே செய்வோம். ஏற்கனவே புதுப் புத்தகத்தைப் பத்திச் சொல்லீருக்கேன். ஒனக்கு அதுவா நெனைவுல இருக்கும்! கள்ளியிலும் பால்னு கவிதைத் தொகுப்புக்குப் பேரு. நீதான் இதுக்கு inspiration. ஒன்னய வெச்சுத்தான் இத்தன கவிதை எழுதீருக்கேன். இதுவரைக்கும் படிச்சவங்களும் நல்லாயிருக்குன்னு சொல்லீருக்காங்க. டைரக்டர் சேரன் கூட அதுல ரெண்டு கவிதைய அவரோட அடுத்த படத்துக்குன்னு சொல்லி வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு. ஒன்னையும் கூப்பிடுறேன். நீயும் வரனும்."

"என்னது? என்னைய வெச்சு..ஒரு கவிதைத் தொகுப்பே போட்டுட்டியா? நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க?" (தன்னை வைத்துக் கவிதை எழுதியிருப்பது சந்தியாவின் ஆர்வத்தைக் கிளறி விட்டது."

"உன் கிட்ட இருக்குறது அடுத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ..ஒனக்கு நல்லதுங்குறதுதாண்டி கவிதைத் தொகுப்போட கரு. இரு ஒரு கவிதை சொல்றேன் கேளு.

கள்ளிப்பால்
கள்ளிக்கு நஞ்சோ?
கிள்ளிப் பார்க்கும்
மனிதனுக்கே நஞ்சு
உதவாது என்றால்
எதையும் தீதென்பான்
கைக்குத் தோதாதானால்
அதையும் சாதென்பான்...."

"நிறுத்துடி (சொல்லிக் கொண்டிருந்த கவிதையை நிறுத்தச் சொன்னாள் சந்தியா)...எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ தமிழ் வாத்தியார் செய்யுள் நடத்துற மாதிரி இருக்கு. ஆள விடும்மா. இதுக்கு என்னதான் பொருள்?"

(டெலிபோனில் தேனின் புன்னகை சந்தியாவைச் சேரவில்லை.) "அதாவது கள்ளிக்குள்ள இருக்குற கள்ளிப்பால் நஞ்சுன்னா...அது ஏன் கள்ளியைக் கொல்லலை? அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தான நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா? கீறுனவன் கிட்ட தப்பா? இதுதாண்டி நான் கேக்குறது. புரிஞ்சதா?"

(உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு) "புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. என்னைய ஆள விடும்மா. சரி. ரொம்ப நேரமாச்சு. நீ போய் வேலையப் பாரு. நாளைக்குப் பேசுறேன்."

இருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர். சுந்தர் விஷயத்தைச் சரவணனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சந்தியா. கனவில் சரவணனோடு......சரி. சரி. புரியுது. இங்க நிறுத்திக்கிறேன்.

தொடரும்....