Monday, February 26, 2007

6ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பாகம் இங்கே.

அந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள். கண்ணனுக்கும் ராஜம்மாளுக்கும் மதிய உணவைக் காலையிலேயே தயாரித்து வைத்து விட்டு அரவிந்தைத் தூக்கிக் கொண்டு காரில் கிளம்பி வந்து விட்டாள்.

வாணி வந்ததும் சந்தியாவின் அப்பார்ட்மெண்ட் கலகலப்பானது. வாணிக்கு நன்றாகச் சமைக்க வரும் என்றாலும் இந்த மாதிரி பெசண்ட் நகர் வருகையில் சிவகாமியின் கைப்பக்குவத்தைத்தான் விரும்புவாள். வாரயிறுதியில்தான் பெரும்பாலும் வருவதால் மீன், கோழி என்று எதாவது எடுப்பார்கள். நிறைய செய்து வாணியிடம் கண்ணனுக்கும் கொடுத்தனுப்புவார் சிவகாமி. அன்றைக்கு வஞ்சிர மீன்.

சனிக்கிழமைக்கே உரிய சோம்பலுடன் சந்தியா மிகவும் தாமதமாக எழுந்து இன்னமும் குளிக்காமல் இருந்தாள். அரவிந்தோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரை வாணியே குளிப்பாட்டினாள். வாணியிடம் சுந்தர் நன்றாக ஒட்டிக் கொண்டான். பிறகு ஹாலில் சுந்தரராஜன், வாணி, சந்தியா உட்கார்ந்து கண்ணன் வாங்கப் போகும் காரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுக்களையில் வேலைக்கு வரும் ஜான்சி இருந்ததால் சிவகாமி உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

"ஜென் எஸ்டிலோப்பா. கருப்புதான் வாங்கனும்னு அடம் பிடிச்சாங்க. நாந்தான் குறுக்க விழுந்து தடுத்திட்டேன். அதுவும் எப்படி? எனக்குப் பிங்க் கலர்தன் வேணும்னு அடம் பிடிச்சேன். கடைசியில ரெண்டு பேருக்கும் பொதுவா முடிச்சோம். ஹா ஹா ஹா." சொல்லிச் சிரித்தாள் வாணி. கண்ணனை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவள் அவள்.

"ஆகா. ஒனக்குச் சொல்லிக் குடுக்கனுமா?" சந்தியா பாராட்டினாள். "ஒனக்கு நெனைவிருக்கா? ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே!" அவனுக்குச் சரி நீதான். வஞ்சகமில்லாமல் நாத்தனாரைப் புகழ்ந்தாள் சந்தியா.

எல்லாரும் சிரித்து மகிழ்ந்து இருக்கையில் ஒரு கொக்கியைப் போட்டாள் வாணி. "அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல கார் டெலிவரி எடுக்கச் சொல்லீருக்காங்க. அன்னைக்கு நீங்களும் வாங்கப்பா. கார் எடுத்துட்டு நேரா அகஸ்தியர் கோயிலுக்குப் போய் பூஜை போட்டுட்டு டின்னர் வெளிய போலாம். சந்தியா, நீங்களும் சுந்தரும் கண்டிப்பா வரனும்."

வாணியின் திடீர் அழைப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. வாணியே தொடர்ந்தாள். "என்ன அமைதியாயிட்டீங்க. இப்படியே இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா வரப் போக இருந்தா பழகீரும். பழையபடி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க முடியும்னு தோணலை. ஆனா வரப்போக கண்டிப்பா இருக்கனும். அதுதான் நல்லது."

சுந்தரராஜன் முதலில் பதில் சொன்னார். "வாணி, நீ சொல்றது கேக்கும் போதும் நெனைக்கும் போதும் நல்லாயிருக்கு. ஆனா வேலைக்காகுமா? பொதுவுல யாருக்கும் இதுனால பிரச்சனை வரக்கூடாது."

"அப்பா, நீங்க நெனைக்கிறது புரியுது. அன்னைக்கு அம்மா பேசுன மாதிரி யாரும் பேசுவாங்களோன்னு பயப்படுறீங்க. மொதல்ல பேசுவாங்கப்பா. ஆனா போகப் போக அமைதியாயிருவாங்க. இன்னமும் சொல்லப் போனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நா. அப்படி வந்தும் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நெனைக்கிறதாலதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரனும்னு நெனைக்கிறேன். விரும்புறேன். ஒரு வாட்டி எல்லாரும் அங்க வந்தீங்கன்னா சரியாப் போகும்." கெஞ்சும் தொணியில் முடித்தாள் வாணி.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. அதனால்தான் வாணி சொன்னதும் அந்த ஆசை இன்னமும் பெருகியது. சரி என்று சொல்லிவிட சுந்தரராஜனும் சிவகாமியும் துடித்தனர். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சந்தியா. அதனால் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தனர். பெற்றோரின் விருப்பம் சந்தியாவிற்குப் புரிந்தும் இருந்தது. அவர்கள் விருப்பத்தை மீறி பலதைச் செய்திருந்ததால் இந்த விஷயத்திலாவது அவர்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்க நினைத்தாள்.

"சரி வாணி. கண்ணன் மேல எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. ஆயிரம் இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி. அவனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அன்னைக்கு வீட்டுல எங்கிட்ட அப்படிப் பேசினாலும் ஊருக்கு முன்னாடி அவன் என்னை விட்டுக் கொடுத்ததில்லைன்னு எனக்கும் தெரியுமே. உன்னையும் எனக்கு நல்லாத் தெரியும். உன்னோட எடத்துல வேறொரு பொண்ணு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னே என்னால யோசிக்க முடியலை. கண்ணன் மட்டுமில்ல, நாங்களும் ரொம்பக் குடுத்து வெச்சவங்கதான். அப்பாம்மாவுக்காக மட்டுமில்ல உனக்காகவும் இந்த முடிவுக்கு நான் ஒத்துக்கிறேன். எடுத்த எடுப்புலயே நான் வர்ரத விட மொதல்ல சுந்தரக் கூட்டீட்டுப் போ. கண்ணனும் சுந்தரும் மொதல்ல பழகுனா அப்புறம் நான் வர்ரது லேசாயிரும். சரியா?" புன்னகையோடு கேட்டாள்.

பெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்திருந்த வாணிக்குச் சந்தியாவின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சரவணனின் வருகையை நினைத்து நினைத்து மகிழ்ச்சியாக இருந்த சந்தியாவிற்கு எல்லாமே நல்லதாகவே நடப்பது போன்ற மகிழ்ச்சி. தலைக்குக் குளித்து விட்டு வந்து அனைவரோடும் உட்கார்ந்து மதிய உணவை முடித்தாள். நன்றாக இருந்த வஞ்சிர மீனை எல்லாரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடிபிடித்தனர். வாணி மறந்தாலும் சிவகாமி கண்ணனுக்காக தனியாக ஏற்கனவே சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். சிறிய தூக்கத்திற்குப் பிறகு நான்கு மணிக்கு மேல் ஏலக்காய் டீ குடித்து விட்டு வாணியும் அரவிந்தும் டி.நகருக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாலையில் கண்ணனிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். "கார் எடுக்க அப்பாவும் அம்மாவும் வர்ரதாச் சொல்லீருக்காங்க. அப்புறம் பாருங்க...சுந்தர் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். போன வாட்டி போனப்பவே கீழ எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சான். தூக்கி வெச்சுக்கிட்டேயிருந்தேன். இந்த வாட்டி அவனை நாந்தான் குளிப்பாட்டினேன். நல்லாச் சிரிக்கிறான்." ஏதோ இயல்பாகச் சொல்வது போலச் சொன்னாள்.

கண்ணனுக்கும் சதை ஆடத்தான் செய்தது. "ஒங்கிட்ட ஒட்டிக்கிட்டானா? போன வாட்டி வாங்கீட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா? அவனுக்கு மொட்டை வேற எடுக்கனும். அதுக்கு என்ன பண்ணப் போறாங்களோ. காது வேற குத்தனும்."

தன் பங்கிற்கு வாணியும் நன்றாகவே ஊசியேற்றினாள். "ஆமாங்க. திருப்பரங்குன்றம் போகனுமே. ஒங்களுக்கும் லீவு கெடைக்கனும். ஒங்க மடியில் வெச்சுத்தான மொட்டை எடுக்கனும். அப்பா கிட்டச் சொல்லி சனி ஞாயிறுல வர்ர மாதிரி நல்லநாள் பாக்கச் சொல்லனும். கண்ணுக்குள்ளயே இருக்கான் சுந்தர். அடுத்த வாட்டி போகும் போது அவனையும் தூக்கீட்டு வந்திரப் போறேங்க." ஏதோ அப்பொழுது தோன்றுவது போலச் சொன்னாள்.

"ஏய்! நீ பாட்டுக்கத் தூக்கீட்டு வந்திராத. சந்தியாவால அவனை விட்டுட்டு இருக்க முடியுமா? அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது?"

"அதுவும் சரிதாங்க. காரெடுக்க அப்பாவும் அம்மாவும் வரும் போது அவனைத் தூக்கீட்டு வரச் சொல்வோம். அப்புறம் எப்படியும் ராத்திரி அவங்க பெசண்ட் நகர் போயிருவாங்களே. அதுனால பிரச்சனையிருக்காது. சரி. எனக்கு நேரமாகுது. நீல்கிரீஸ் போகனும். அம்மாவைக் கூட்டீட்டுப் போறேன். அவங்களுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்." கண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் அரவிந்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ராஜம்மாளோடு கிளம்பினாள். சுந்தரை மட்டும் வரச்சொல்வதை விட வாணி சந்தியாவையும் அழைத்திருக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தான் கண்ணன்.

பக்கத்துத் தெருவில்தான் நீல்கிரீஸ். வாணியும் ராஜம்மாளும் மெதுவாக நடந்தே சென்றனர். தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் ராஜம்மாள் கேட்டார். "எதுக்கு நீ வேண்டாத வேலையெல்லாம் பாக்குற?"

தொடரும்.....

18 comments:

said...

ஆஹா, இந்த ராஜம்மாள்தான் டேஞ்சர் பார்ட்டி போல தெரியுதே..சீக்கிரம் அடுத்த வாரத்தை வரச் சொல்லுங்க ஜிரா...

said...

ஹிம்... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

said...

தலைவா லைட்டா தமிழ் சேனல்களில் வரும் மெகா சிரீயல்களின் வாடை அடிக்கிற மாதிரி தெரியுதே உஷார்..

said...

உள்ளேன் அய்யா :)

இந்த கதை கருவில் உள்ள பிரச்சனையில, குடும்பத்தில் சப்போட் வருவது முதல் படின்னு கொண்டு போறீங்களோ? சமூகம் குடும்பங்களால் ஆனது, இங்க சம்மதம் வந்தால் அங்கேயும் வரும் என்ற நம்பிக்கை கருத்து நல்லாருக்கு. சமூகத்திலுள்ள ராஜம்மாக்களை கவனிக்க வாணிகள் இருக்கிறார்கள், சந்தியாவிற்காகன்ற கருத்து அழகா இருக்கு. சந்தியாவே எல்லாரோடையும் போராடாம, படி படியா மனித சங்கிலி வழியா ஒரு குட்டி புரட்சியா? அழகா இருக்கு.

ரஜினி ஸ்டன்ட் மாதிரியோ, ராதிகா சீரியல் மாதிரியோ, சந்தியாவே எல்லாரையும் அடிச்சு நொறுக்காம, தான் பாட்டுக்கு இருக்கிறது மிகவும் நல்ல யதார்த்தமா இருக்கு.

நான் நிறைய சந்தியாக்கள் பார்த்ததில்லை, நிறைய வாணிகள் பார்த்திருக்கேன்! :) உண்மையில் சமுதாய மாற்ற புரட்சி செய்வது வாணிகளா, சந்தியாக்களான்னு டிபேட் வைக்கலாம் ;) ...

said...

Hi Ragav,

Senthil from chennai da. i hope u got me. chumma enkitta katha viduvee anna ivalavuu nalla katha solluvennu naan etir parkalla da, very nice keep going da..

senthil

said...

ஜி ரா..

ஏனோ இந்த வாரம் அவ்வளவாக எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லையே.. அதிரடித் திருப்பங்களும் இல்லை...

ஒருவேளை மாநகராட்சி தன் பணியைச் செவ்வனே செய்யவில்லையோ? ;-)

மதுரா சொன்னபடி வாணி Vs சந்தியா நல்ல Debateஆக இருக்கும்!

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது நடைமுறையில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளக் கூடிய செய்தி.. உங்கள் கருவுக்கும் நிச்சயம் ஒத்துவரும்!

அடுத்த தொடருக்காக நானும் வெயிட்டிங்க்க்க்க்க்க்க்க்க்க்.....

said...

// இலவசக்கொத்தனார் said...
ஆஹா, இந்த ராஜம்மாள்தான் டேஞ்சர் பார்ட்டி போல தெரியுதே..சீக்கிரம் அடுத்த வாரத்தை வரச் சொல்லுங்க ஜிரா... //

டேஞ்சரா? என்னங்க செய்றது? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து. வாணி எப்படிச் சமாளிக்கப் போறாளோ?

said...

// வெட்டிப்பயல் said...
ஹிம்... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;) //

நானுந்தான் வெட்டி :)

// தேவ் | Dev said...
தலைவா லைட்டா தமிழ் சேனல்களில் வரும் மெகா சிரீயல்களின் வாடை அடிக்கிற மாதிரி தெரியுதே உஷார்.. //

தேவ், இது தவிர்க்க முடியாதது. இந்தப் பகுதியில கண்டிப்பா தேவையிருந்தது. ஏன்னா பிரச்சனைகளைக் கூட்டிக்கிட்டே போனா விறுவிறுப்பாத்தான் இருக்கும். ஆனா சரி செய்யனுமே. அதான் இந்த வாரம் இப்பிடி.

said...

// Madura said...
உள்ளேன் அய்யா :) //

நன்றிங்க :)

// இந்த கதை கருவில் உள்ள பிரச்சனையில, குடும்பத்தில் சப்போட் வருவது முதல் படின்னு கொண்டு போறீங்களோ? சமூகம் குடும்பங்களால் ஆனது, இங்க சம்மதம் வந்தால் அங்கேயும் வரும் என்ற நம்பிக்கை கருத்து நல்லாருக்கு.//

ஆமாங்க மொதல்ல பிரச்சனைகளை குடும்பங்கள் தீர்க்கவோ ஏத்துக்கவோ தொடங்கனும். இப்படி ஒவ்வொரு குடும்பமும் முடிவெடுக்கும் பொழுது நல்லதே நடக்கும். ஒரு நாடு மாறுதுன்னா அந்த நாட்டுல இருக்குற அத்தனை தனிநபர்களும் (அல்லது பெரும்பான்மையான) மாறுவதுதானே! அந்த அடிப்படையில வீட்டுக்குள்ள மொதல்ல பிரச்சனை தீரனும்னு நெனைச்சேன். அதுவுமில்லாம எல்லாருமே அந்த வீட்டுக்காரங்க. வாணி வெளியில இருந்து வந்த பொண்ணு. பொதுவா பெண்கள் வாணி மாதிரி நடந்துக்குவாங்களான்னா...இல்லைங்குறதுதான் என்னோட கருத்து. ஆனா வாணிகள் இல்லாம இல்லை. அதுனாலதான் வாணியை வெச்சு பிரச்சனைகளைத் தீர்க்கத் தொடங்கினேன்.

// சமூகத்திலுள்ள ராஜம்மாக்களை கவனிக்க வாணிகள் இருக்கிறார்கள், சந்தியாவிற்காகன்ற கருத்து அழகா இருக்கு. சந்தியாவே எல்லாரோடையும் போராடாம, படி படியா மனித சங்கிலி வழியா ஒரு குட்டி புரட்சியா? அழகா இருக்கு. //

அதுதான் நான் சொல்ல வந்தது. சந்தியாவால எல்லாம் செய்ய முடியாது. கண்டிப்பா உறவினர் துணை வேணும். சந்தியா தன்னுடைய வேலையப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பா. குடும்பத்துப் பிரச்சனை தீந்தாலும் தீராட்டியும் அவளுக்குப் பெரிய பிரச்சனை இல்லை. ஆனா வாணி அப்படியில்லை. அவளுக்கு அவ குடும்பம் நல்லாயிருக்கனும். அதுனாலதான் ஒரு பிரச்சனைன்னதும் தீக்கப் பாக்குறா. ஆனா சந்தியாவோட தனிப்பட்ட பிரச்சனைய அவளால தீக்க முடியும்னு தோணலை.

// ரஜினி ஸ்டன்ட் மாதிரியோ, ராதிகா சீரியல் மாதிரியோ, சந்தியாவே எல்லாரையும் அடிச்சு நொறுக்காம, தான் பாட்டுக்கு இருக்கிறது மிகவும் நல்ல யதார்த்தமா இருக்கு. //

:)

// நான் நிறைய சந்தியாக்கள் பார்த்ததில்லை, நிறைய வாணிகள் பார்த்திருக்கேன்! :) உண்மையில் சமுதாய மாற்ற புரட்சி செய்வது வாணிகளா, சந்தியாக்களான்னு டிபேட் வைக்கலாம் ;) ... //

கண்டிப்பா வைக்கலாம். கதை முழுவதும் முடியட்டும். அந்த டிபேட்டை நீங்களே துவக்குங்க. சரியா?

said...

// Anonymous said...
Hi Ragav,

Senthil from chennai da. i hope u got me. chumma enkitta katha viduvee anna ivalavuu nalla katha solluvennu naan etir parkalla da, very nice keep going da..

senthil //

உன் கிட்ட கதை விடுவேனா...ம்ம்ம்...ரீல் ரீலா ஓடீருக்குன்னு சொல்றியா :-)))

said...

//நான் நிறைய சந்தியாக்கள் பார்த்ததில்லை, நிறைய வாணிகள் பார்த்திருக்கேன்! :) உண்மையில் சமுதாய மாற்ற புரட்சி செய்வது வாணிகளா, சந்தியாக்களான்னு டிபேட் வைக்கலாம் ;) ...//
உண்மை உண்மை முக்காலும் உண்மை:)
ராஜம்மா எப்படி இருப்பாங்க?
நம்ம வெத்திலை போட்டு வாயைக் குதப்பிட்டு வருவாங்களெ அவங்களை மாதிரியா?
சந்தியாவா நடிக்கிறதுக்கு மாளவிகா அண்ணியைப் போடலாமா?

said...

ராகவன்,

கதை இன்றைக்கு ரொம்ப மெதுவாப் போன மாதிரி இருக்கு :-)

புயலுக்கு முன் அமைதியா?

வாரம் ரெண்டு பாகம் போடுறது நல்லது...
அடுத்தப் பகுதிய வியாழக்கிழமை போட்டுடுங்க நான் வீட்ல இருந்தாவது படிச்சுக்கறேன்....

said...

//தேவ் | Dev said...
தலைவா லைட்டா தமிழ் சேனல்களில் வரும் மெகா சிரீயல்களின் வாடை அடிக்கிற மாதிரி தெரியுதே உஷார்..//

ரிப்பீட்டு.....

ஜிரா... வாரம் ஒரு தடவைனா கேரக்டர் பேர மறந்து போயிடுது... யாரு வாணி, யாரு சந்தியா ன்னு கண்டுபுடிக்கிறதுக்கு பழையப் பக்கங்கள வேற பொரட்ட வேண்டி இருக்கு...

அதுனால, ரீ-கன்ஸிடர் யுவர் டியுஸ்டே ரீலீஸ்....

said...

ராகவன் சார்..

இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம். இந்த வார ஸ்டார் வாணி...கலக்குறாங்க...

ஆனா இந்த வாரம் சட்டுன்னு முடிஞ்சுட்ட மாதிரி இருக்கு...

அடுத்த வாரத்துக்கு வெயிடிங்....

said...

// வல்லிசிம்ஹன் said...
//நான் நிறைய சந்தியாக்கள் பார்த்ததில்லை, நிறைய வாணிகள் பார்த்திருக்கேன்! :) உண்மையில் சமுதாய மாற்ற புரட்சி செய்வது வாணிகளா, சந்தியாக்களான்னு டிபேட் வைக்கலாம் ;) ...//
உண்மை உண்மை முக்காலும் உண்மை:) //

ஆகா..பெண்கள்ளாம் சேந்து வர்ரீங்களே வாணிக்கு ஆதரவா. எனக்கே வாணி கதாநாயகியா சந்தியா கதாநாயகியான்னு மறந்திரும் போல இருக்கே.

// ராஜம்மா எப்படி இருப்பாங்க?
நம்ம வெத்திலை போட்டு வாயைக் குதப்பிட்டு வருவாங்களெ அவங்களை மாதிரியா? //

இல்லை. குள்ளமா குண்டா இருப்பாங்க. ஆனா வெத்தலைக் குதப்பல் இல்லை. நடிகைகள்ள யாரப் போடலாம்.....சரிதா மாதிரி இருப்பாங்க. ஆனா கொஞ்சம் செவப்பு.

// சந்தியாவா நடிக்கிறதுக்கு மாளவிகா அண்ணியைப் போடலாமா? //

மாளவிகாவோட அண்ணி யாருன்னு தெரியாதே. மாளவிகான்னா வாழ மீனுக்கும் பாட்டுல வர்ரவங்கதான. ஆனா அவங்க பொருத்தமா இருக்க மாட்டாங்க. அல்லது நான் நெனைச்சிருக்குற மாதிரி இருக்க மாட்டாங்க. போக்கிரி ராஜா ஸ்ரீதேவி மாதிரி இருப்பாங்க.

said...

// Raghs said...
ஜி ரா..

ஏனோ இந்த வாரம் அவ்வளவாக எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லையே.. அதிரடித் திருப்பங்களும் இல்லை...

ஒருவேளை மாநகராட்சி தன் பணியைச் செவ்வனே செய்யவில்லையோ? ;-) //

அதிரடித் திருப்பங்கள் நெறைய வந்திருச்சே. இனிமே ஒவ்வொன்னா சரி பண்ணனுமே. அப்படிச் சரி பண்ணும் போது என்னென்ன வரப் போகுதோ!

// மதுரா சொன்னபடி வாணி Vs சந்தியா நல்ல Debateஆக இருக்கும்! //

உண்மை. அந்த பொறுப்பை மதுராவிடமே ஒப்படைச்சாச்சு. கதை முடிஞ்சதும் செய்யலாம்னு நெனைக்கிறேன்.

// பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது நடைமுறையில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளக் கூடிய செய்தி.. உங்கள் கருவுக்கும் நிச்சயம் ஒத்துவரும்! //

உண்மைதான். ஆனா ஆறு அத்தியாயத்துலயே புளிச்சிருச்சே. :( முயற்சி பண்றேன்.

// அடுத்த தொடருக்காக நானும் வெயிட்டிங்க்க்க்க்க்க்க்க்க்க்..... //

புளிச்ச பால்ல ரசகுல்லா கிடைக்கும்னா? :-))

said...

// அருட்பெருங்கோ said...
ராகவன்,

கதை இன்றைக்கு ரொம்ப மெதுவாப் போன மாதிரி இருக்கு :-)

புயலுக்கு முன் அமைதியா?

வாரம் ரெண்டு பாகம் போடுறது நல்லது...
அடுத்தப் பகுதிய வியாழக்கிழமை போட்டுடுங்க நான் வீட்ல இருந்தாவது படிச்சுக்கறேன்.... //

// ஜி - Z said...
ஜிரா... வாரம் ஒரு தடவைனா கேரக்டர் பேர மறந்து போயிடுது... யாரு வாணி, யாரு சந்தியா ன்னு கண்டுபுடிக்கிறதுக்கு பழையப் பக்கங்கள வேற பொரட்ட வேண்டி இருக்கு...

அதுனால, ரீ-கன்ஸிடர் யுவர் டியுஸ்டே ரீலீஸ்.... //

ஜி, கோ, நான் வேணுக்கும்னு அப்படிப் போடலை. வேலைப்பளுவும் அலைச்சலும் அப்படிப் படுத்துது. முழுக்கதைக்கான ப்ளாட் இருந்தாலும் எழுதுறதுக்கும் நேரம் தேவைப்படுது. அதுனாலதான் அப்படி. அவசரமா எழுதி அறுவையாப் போயிரக் கூடாதேன்னு ஒரு எண்ணம் வேற. இருந்தாலும் என்னால முடிஞ்சதச் செய்றேன்.

// கோபிநாத் said...
ராகவன் சார்..

இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம். இந்த வார ஸ்டார் வாணி...கலக்குறாங்க...

ஆனா இந்த வாரம் சட்டுன்னு முடிஞ்சுட்ட மாதிரி இருக்கு...

அடுத்த வாரத்துக்கு வெயிடிங்.... //

உண்மைதான் கோபிநாத். இந்த வாரம் பிரச்சனைகள் தீரத் தொடங்குற சமயம். அதுனால கொஞ்சம் நிதானிக்க வேண்டியிருந்தது.

said...

ராகவன்,
இன்னிக்குத்தான் ஆறு பகுதிகளையும் ஒருசேரப் படிச்சேன்.

எந்த விஷயத்தையுமே முதலில் குடும்பம் ஒத்துக்கிச்சுன்னா மத்தவங்க
ஒண்ணும் செஞ்சுக்க முடியாது. குடும்பம் எதிர்க்குதுன்னு தெரிஞ்சவுடன்
அடுத்தவங்களுக்கு அவுல் சப்ளை தாராளமாக் கிடைக்கும்.