Monday, November 14, 2005

கந்தனும் ஸ்கந்தனும்

கந்தனும் ஸ்கந்தனும்

(இந்தப் பதிவு இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க.....)

இவங்க ரெண்டு பேரும் ஒன்னா? வெவ்வேறயா? பல கோயில்கள்ள ஸ்கந்தன்னு எழுதீருக்கே. புத்தகத்துல போட்டிருக்கேன்னு சொல்றது தெரியுது. ஆனா ரெண்டு பேரும் வேறவேறங்குறதுதான் உண்மை.

இன்னைக்கு இந்த ரெண்டும் ஒரே சாமியத்தான் குறிக்குது. அதுனால பலபேரு ஸ்கந்தன் அப்படீங்குற வடமொழிப் பெயருல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுதான் கந்தன் அப்படீங்குற பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா ஒத்துக்காதீங்க.

பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. தமிழனோட முதற்கடவுள் முருகன். அந்தப் பேரையும் எப்படி யோசிச்சு வெச்சிருக்காங்க தெரியுமா?

அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.

இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)

உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)

மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)

இதெல்லாம் அன்னைக்கே நம்மாளுங்க யோசிச்சு வெச்சிருக்காங்க. மத்த நாடுகள்ல எல்லாம் இதெல்லாம் யோசிக்கும் முன்னாடியே இந்த மாதிரி யோசிச்சிருக்காங்க.

இதுல முருகுங்குற பேரப் பாருங்க. மு+ரு+கு = முருகு. இந்த மூனு எழுத்துகள்ளயும் உகரம் வருது பாத்தீங்களா? முருகனைப் பணிந்தால் காக்கப்படலாமுன்னு சொல்றதுக்காக அப்படி. அதுவுமில்லாம முருகன் என்ன செய்தாலும் அது காத்தல்தான்னு சொல்றதுக்குதான் அப்படிப் பேரு. பேர் வைக்கிறதுல கூட ஒரு சூச்சுமம்.

இப்படி முருகுன்னு யோசிச்சுப் பேரு வெச்சவனா, ஸ்கந்தன்ல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுக் கூப்பிடுவான்?

ஸ்கந்தன்னு சொல்ற பேருக்கும் கந்தன்னு சொல்ற பேருக்கும் பொருள் வேறுபாடு ரொம்ப இருக்கு. பொருளில் ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாதது.

மொதல்ல ஸ்கந்தனப் பாப்போம். ஸ்கந்தன்னா என்ன பொருள்? வடமொழியில் இதுக்கு ரெண்டு பொருளாம்.

சத்ரூன் சோஷயதீதீ ஸ்கந்தகா - பகைவர்களுடைய வலிமையை குறைக்கின்றவன் என்று பொருள்.

ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலீ கல்மஷ நாசீனீம் - கலியுகத்தின் கொடுமைகளில் இருந்து நீக்க வல்லது ஸ்கந்தனின் கீர்த்தி.

(வடமொழி எனக்குத் தெரியாது. ஆகையால நான் எழுதுனதுல எழுத்துப் பொருட் பிழை இருந்தா மன்னிச்சுக்கிருங்க.)

இந்த ரெண்டு வெளக்கமுமே மேம்போக்கான வெளக்கமே தவிர ஸ்கந்தன்னா என்னன்னு ஆழமா விளக்கலை.

ஆனால் கந்தன் என்கிற பேரப் பாருங்க. அதுக்கு ஆழமான விளக்கம் இருக்கு.

"கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" அப்படீங்குற சங்கத் தமிழ் வரிகள் எதைச் சொல்லுது தெரியுமா? கந்துன்னா என்னன்னு சொல்லுது.

சரி. கந்துன்னா என்ன? ஆனை பார்த்திருப்பீங்க. அந்த ஆனைய அந்தக்காலத்துல தமிழர்கள் நெறையப் பயன்படுத்துனாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போவாங்க. போருக்காக இருக்கலாம். கட்டிடம் கட்ட இருக்கலாம். வேறு எதுக்கும் இருக்கலாம். (மதுரைல ஆனையக் கட்டிப் போரடிச்சாங்களாம் அந்தக் காலத்துல. அதுக்காகக் கூட இருக்கலாம்.)

அப்ப ஒரு இடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போறப்போ எங்க கட்டிப் போடுறது? போற எடத்துல எல்லாம் கொட்டாரம் இருக்குமா?

அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான். ஆனையோட கழுத்துல ஒரு சங்கிலியக் கெட்டி (இல்லைன்னா கயத்தக் கட்டி), அந்தச் சங்கிலிய ஒரு பெரிய கட்டைல கட்டீருவாங்க. ஆன போற எடத்துக்கெல்லாம் அந்தக் கட்டைய இழுத்துக்கிட்டே போகும். எங்க தங்கனுமுன்னு முடிவு செய்யுறாங்களோ அங்க ஒரு பெரிய குழியத் தோண்டி அந்தக் கட்டைய அதுல பொதைச்சிருவாங்க. இப்ப ஆனையக் கட்டிப் போட்டாச்சு இல்லையா.

சரி. கந்துன்னா என்னன்னு இன்னமும் சொல்லலையே. ஆன இழுத்துக்கிட்டே திரியுற அந்தக் கட்டைக்குத்தான் கந்துன்னு பேரு.

அப்புறம் கந்தனுக்கும் அதுக்கும் உள்ள தொடர்பு? அந்த கந்துங்குற கட்ட எப்பவுமே ஆனை கூடவே இருக்கு. ஆனா தேவையானப்போ அந்த ஆனையைக் கட்டுப்படுத்துது பாத்தீங்களா!

அது போல முருகக் கடவுள் எப்பவுமே நம்ம கூடயே இருந்து தேவையான பொழுதுகளில் நம்மளக் கட்டுப்படுத்திக் காப்பாத்துவாருன்னு சொல்லி அவருக்குக் கந்தன்னு பேரு வெச்சாங்க. புரிஞ்சதா?

அன்புடன்,
கோ.இராகவன்

33 comments:

said...

நன்றி சதயம். என்னுடைய இனியது கேட்கின் பிளாகை பாருங்கள். அங்கே கந்தர் அலங்காரத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

http://iniyathu.blogspot.com

said...

நன்றி ஏலியன். முருகன்.org என்பது நான் நன்கு புழங்கும் தளம். எனக்கு மிகவும் பிடித்த தளம். அதை இங்கே நாங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி.

said...

ராகவன் !!!

நல்ல தகவல்கள்.

//பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. //
இதில வேற பொருள் ஒன்றும் இல்லையே. நேரடியாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள் :-)

//http://iniyathu.blogspot.com//
ராகவன் எனக்கு இன்று தான் இந்த விஷயம் தெரியும்... gragavan.blogspot.com மனதில் நின்று விட்டது...

ராகவன் !! சொல்ல மறந்திட்டேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.

said...

அன்பின் ராகவன்,

ஆன்மீகப் பதிவுகள் உங்களுக்கு மிகவும் நன்றாக வருகின்றன. வாழ்த்துக்கள்.

கந்தன், ஸ்கந்தன் விளக்கம் அருமை.

"கந்து" வட்டி என்பார்களே, அந்தச் சொல் எப்படி வந்தது என்பதுதான் புரியவில்லை.

said...

மிக அழகான விளக்கங்கள். ஸ்கந்தன் என்பது (ஒட்டுதலைக் குறித்து), ஆறுகுழந்தைகள் ஒட்டியதால் ஏற்பட்டதென்று யாருடைய சொற்பொழிவிலோ கேட்டிருக்கிறேன்.

said...

// //பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. //
இதில வேற பொருள் ஒன்றும் இல்லையே. நேரடியாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள் :-) //

கணேஷு....என்னய வம்புல மாட்டி விட்டுறாதீங்க. நான் நேரடியாத்தான் சொன்னேன்.

// ராகவன் எனக்கு இன்று தான் இந்த விஷயம் தெரியும்... gragavan.blogspot.com மனதில் நின்று விட்டது... //

அப்பப்ப இனியது கேட்கின் பக்கத்துக்கும் வாங்க. வந்து ஒங்க கருத்துகளைத் தாங்க.

// ராகவன் !! சொல்ல மறந்திட்டேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். //

நன்றி கணேஷ். இந்தப் புகைப்படத்தில் நான் மிகவும் களைப்பாகத் தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் உண்மைதான். அலைச்சலுக்குப் பிறகு எடுத்த புகைப்படம் இது.

said...

// "கந்து" வட்டி என்பார்களே, அந்தச் சொல் எப்படி வந்தது என்பதுதான் புரியவில்லை. //

இந்த கந்து தமிழ்ச் சொல்லேயில்லை என்று நினைக்கிறேன். லஞ்சத்தைப் போல இதுவும் ஆந்திராவிலிருந்து கடன் வாங்கியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

said...

// மிக அழகான விளக்கங்கள். ஸ்கந்தன் என்பது (ஒட்டுதலைக் குறித்து), ஆறுகுழந்தைகள் ஒட்டியதால் ஏற்பட்டதென்று யாருடைய சொற்பொழிவிலோ கேட்டிருக்கிறேன். //

நன்றி மணியன். அந்த வடமொழிப் பெயருக்கான முறையான பொருள் எனக்கும் தெரியவில்லை. வடமொழி தெரிந்தவர்கள் அதைப் பிரித்தாய்ந்து விளக்கலாம்.

said...

இராகவன், முருகனின் பெயர் விளக்கம் மிக அருமை. இதுவரை முருகன் என்றால் அழகன் என்ற பொருளைத்தான் கேட்டும் சொல்லியும் வந்திருக்கிறேன். காத்தலைச் சொல்லும் உகரம் முருகனின் பெயரில் எப்படிப் பயின்று வருகிறது என்று அழகாக விளக்கிவிட்டீர்கள்.

//பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்// இதை நானும் கவனித்திருக்கிறேன். 'உலகெலாம்' 'உலகம் யாவையும்' 'உயர்வற உயர்நலம்' 'உதிக்கின்ற செங்கதிர்' என்று அகரத்தில் தொடங்காவிட்டால் உகரத்தில் தான் தொடங்கியிருக்கிறார்கள்.

சத்ரூன் சோஷயதீ ஸ்கந்த: என்னும் வாசகத்தை நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஸ்கந்த என்னும் சொல்லுக்கு 'குறைப்பவன்' என்று பொருள். பகைவர்களை மட்டும் அல்ல. பாவங்களையும் குறைப்பவன் அவன்.

மணியன் சொன்னது போல் 'பார்வதி தேவியால் ஆறு குழந்தைகள் ஒரு குழந்தையாக இணைக்கப் பட்டவன்' என்ற பொருளில் தான் ஸ்கந்தன் என்ற பெயர் பிரசித்தம்.

நீங்கள் கந்தன் என்பதற்கு 'கந்தைப் போன்றவன்' என்ற பொருளில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். 'கந்தை உடையவன்' என்ற பொருள் விளக்கம் பார்த்தால் என்ன? யானை எப்படி தன்னைக் கட்டுவதற்காக கந்தினை எப்போதும் சுமந்து செல்கிறதோ அது போல் இறைவனாகியத் தன்னை அடியவர்கள் கட்டுவதற்காக இவனும் 'பக்தி'யாகிய கந்தினை எப்போதும் சுமந்து கொண்டு இருக்கிறான்.

சதயம் சொன்ன மாதிரி கார்த்திகை தொடங்கும் நல்ல நேரத்தில் ஒரு நல்ல பதிவு.

//ராகவன் !! சொல்ல மறந்திட்டேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்// வழிமொழிகிறேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே இருக்கிறீர்கள்.

//இந்தப் புகைப்படத்தில் நான் மிகவும் களைப்பாகத் தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள்// வழிமொழிகிறேன்.

said...

// மணியன் சொன்னது போல் 'பார்வதி தேவியால் ஆறு குழந்தைகள் ஒரு குழந்தையாக இணைக்கப் பட்டவன்' என்ற பொருளில் தான் ஸ்கந்தன் என்ற பெயர் பிரசித்தம். //

உண்மைதான். வாரியார் சுவாமிகளும் புலவர் கீரணும் இதை அடிக்கடி சொல்லியிருக்கின்றார்கள்.

// //ராகவன் !! சொல்ல மறந்திட்டேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்// வழிமொழிகிறேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே இருக்கிறீர்கள்.

//இந்தப் புகைப்படத்தில் நான் மிகவும் களைப்பாகத் தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள்// வழிமொழிகிறேன். //

என்னங்க ரெண்டு வாட்டி வழி மொழிஞ்சிருக்கீங்க.....சரி. குமரன் சொன்னா சரிதான். :-)

said...

அருமையான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.

குமரன்,
//யானை எப்படி தன்னைக் கட்டுவதற்காக கந்தினை எப்போதும் சுமந்து செல்கிறதோ அது போல் இறைவனாகியத் தன்னை அடியவர்கள் கட்டுவதற்காக இவனும் 'பக்தி'யாகிய கந்தினை எப்போதும் சுமந்து கொண்டு இருக்கிறான்.
//
புரியலையே..

//**// //ராகவன் !! சொல்ல மறந்திட்டேன். புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்// வழிமொழிகிறேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே இருக்கிறீர்கள்.

//இந்தப் புகைப்படத்தில் நான் மிகவும் களைப்பாகத் தெரிவதாக நண்பர்கள் சொன்னார்கள்// வழிமொழிகிறேன். //
**//
நானும் வழிமொழிகிறேன்.

said...

இராமநாதன், உங்க நட்சத்திர வார பிஸியிலயும் இங்க திரும்பிவந்து பார்ப்பீங்கங்கற நம்பிக்கையில விளக்கம் எழுதுறேன். இறைவனை பக்தி எனும் கயிற்றால் மட்டுமே கட்டமுடியும். ஆனால் அந்த பக்தி இறைவன் அருளினால் மட்டுமே கிடைக்கும் - 'உன் அருளாலே உன் தாள் வணங்கி'ன்னு சொன்ன மாதிரி. யானை எப்படி தன்னைக் கட்டப் பயன்படும் கந்தினைத் தானே சுமந்து செல்கிறதோ, அதுபோல கந்தனும் தன்னைக் கட்டும்படியான 'பக்தி'யை அடியவர்க்குத் தானே வழங்குகிறான்.

said...

Dear Raghavan,
Wonderful naration.puthiyathagavum payanullathagavum ullathu.Karthigai matha thuvakathil athuvum karthikayel thodangum pothu muruganai partri vilakkuthuku nanadri.Kumaranukkum nandri ungalai arimuga paduthiyatharkku.en karuthugalai pathivu seiya ungal anumathy thevai TRC

said...

நமக்கும் வடமொழி தெரியாது. ஆனால், ஸ்கந்த என்பதன் மருவுஉ கந்தன் என்றே எண்ணம் கொண்டிருக்கிறேன். நீங்கள் இன்னொரு வழி விளக்கம் தந்திருக்கின்றீர்கள். நன்றி

said...

அட! இராமநாதனும் ரெண்டு வாட்டி வழி மொழிஞ்சிட்டீங்களா! அப்பச் சரிதான்.

// Wonderful naration.puthiyathagavum payanullathagavum ullathu.Karthigai matha thuvakathil athuvum karthikayel thodangum pothu muruganai partri vilakkuthuku nanadri.Kumaranukkum nandri ungalai arimuga paduthiyatharkku.en karuthugalai pathivu seiya ungal anumathy thevai TRC //

TRC, நன்றி. என்னுடய அனுமதி ஏன்? கந்தனைப் பற்றிய திரியில், கந்தனைப் பற்றிச் சொல்ல என் அனுமதி தேவையில்லை. நீங்கள் இங்கு கருத்துகளைப் பதிவு செய்வது எனக்கு மெத்த மகிழ்ச்சியையே தரும். காத்துக் கொண்டிருக்கிறேன்.

// நீங்கள் இன்னொரு வழி விளக்கம் தந்திருக்கின்றீர்கள். நன்றி //
நன்றி பெயரிலி. இந்த விளக்கம் என்னுடையது அல்ல. இதுதான் உண்மையான விளக்கம். பழைய நூல்களில் இருந்து பெறப்பட்ட விளக்கம்.

said...

//கந்துவட்டி//

கந்து ( அதான் யானை கழுத்துலே சங்கிலிலே தொங்கர மரக்கட்டை) போலவே வட்டி கூடவே வளர்ந்து வளர்ந்துக்கிட்டே இருக்கறதாலே கந்துவட்டி:-))))

கூடவே வரும் . எப்பவும் ஒழியாது.

said...

// கந்து ( அதான் யானை கழுத்துலே சங்கிலிலே தொங்கர மரக்கட்டை) போலவே வட்டி கூடவே வளர்ந்து வளர்ந்துக்கிட்டே இருக்கறதாலே கந்துவட்டி:-))))

கூடவே வரும் . எப்பவும் ஒழியாது. //

ஆகா! நீங்க டீச்சருன்னு இன்னோரு வாட்டி நிரூபிச்சிட்டீங்க. ஒங்க விளக்கமும் உண்மைதான்.

said...

அருமையான விளக்கம்.

said...

கந்தன்ல இவ்ளோ மேட்டர் இருக்குதா...

சரி..எங்க பிடிச்சீங்க இந்த கந்து விளக்கத்தை.. (ஒரு கன்பர்மேசன் தான் :-)

எல்லோரும் என்னைக்கேட்குறாங்க செந்தில்-னா என்ன அர்த்தம்னு... அதுக்கு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்க ;-)

-
செந்தில்/Senthil

said...

இது புறநாநூற்று விளக்கங்கள் யாத்திரீகன்.

உங்க பேரு செந்திலா......செந்திலப் பத்தியே ஒரு பதிவு போடலாமே! பதிவாவே போட்டுறவா? தமிழ்ப் பெயர்களில் மிகவும் ஆழமான பெயர்களில் ஒன்று செந்தில். உங்களுக்காக ஒரு பதிவு...கூடிய விரைவில் போடுறேன். (குமரன் எனக்கு முந்திக்கிட்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.)

said...

இல்லை நான் உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன். (வெளியே சொல்லிடாதீங்க. எனக்கு செந்தில் என்னும் பெயருக்கு ஆழமான விளக்கம் தெரியல) :-)

said...

// (வெளியே சொல்லிடாதீங்க. எனக்கு செந்தில் என்னும் பெயருக்கு ஆழமான விளக்கம் தெரியல) :-) //

அட! அத இவ்வளவு சத்தம் போட்டா சொல்றது.

said...

//அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)

உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)

மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)//

அ - சூரியன் - பருவுடல் (ஸ்தூலம்) - பெண் - இருக்கு வேதம் - கார்ஹபத்யாக்கினி - ஹரஸ்வம் - பாதம் - புத்தி - ரஜோ குணம் - சிவப்பு நிறம் - பூரகம் - நாதம் - கிரியா சக்தி - பிராஹ்மணி - பிரம்மா - சென்றகாலம் - ஜீவாத்மா - விராடபுருடன்

உ - சந்திரன் - நுண்ணுடல்(சூட்சுமம்) - ஆண் - யஜுர் வேதம் - தக்ஷிணாக்கினி - தீர்க்கம் - நாபி - மனம் - சத்வ குணம் - கபில நிறம் - கும்பகம் - பிந்து - இச்சா சக்தி - வைஷ்ணவி - விட்டுணு - நிகழ் காலம் - அந்தராத்மா - ஹிரண்யகர்ப்பன்

ம - அக்கினி - காரண உடல் (இலிங்க உடல்)- அலி - சாம வேதம் - ஆகவனீயாக்கினி - ப்லுதம் - சிரம் - அகங்காரம் - தமோ குணம் - கருப்பு - இரேசகம் - கலை - ஞான சக்தி - ரெளவுத்திரீ - உருத்திரன் - வருங்காலம் - கூடஸ்தன் - ஈசுவரன்

இதில் படைத்தல், காத்தல், அழித்தல் வரவில்லை. ஏதேனும் நூலாதாரம் உளதோ?

said...

// இதில் படைத்தல், காத்தல், அழித்தல் வரவில்லை. ஏதேனும் நூலாதாரம் உளதோ? //

போச்சு. போச்சு. மாட்டிக்கிட்டான் ராகவன்.

ஞானவெட்டியான்....நூலாதாரம் என்று என்னிடம் கேட்டால் என்னுடைய கருத்துகளுக்கு மூலாதாரம் வாரியார் சுவாமிகள் என்றுதான் சொல்வேன். அவருடைய நூல்களில் படித்த கருத்துகள்தான் மனதுக்குள் தங்கியிருக்கின்றன. அவைகள்தான் இந்த மாதிரி பதிவுகளில் வெளிவருகின்றன. நீங்கள் என்னிடம் கேட்டு விட்டீர்கள். வாரியாரிடம் நான் கேட்க முடியவில்லையே........உங்களைப் போன்ற படித்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

said...

ஒன்றும் மாட்டிக்கவில்லை, இராகவன்.

ஒப்பிட்டுப் பார்க்கையில்(applied sense)

அ - பிரமன். ஆகவே ஆக்கல்.

உ - விட்டுணு. ஆகவே காத்தல்.

ம - உருத்திரன். ஆகவே அழித்தல்.

இப்பொருளில் வாரியார் சுவாமிகள் சொல்லியிருக்கலாமென எண்ணுகிறேன்.

said...

ஐயா சொன்னதைத் தான் சொல்வதாய் இருந்தேன். அதற்குள் ஐயாவே விளக்கம் கொடுத்துவிட்டார். :-)

ஆனால் இந்த தமிழ் எழுத்துகள் அடிப்படையில் (அகரம் முதல் - படைத்தல்; உகரம் உலகு - காத்தல்; மகரம் கடைசி - அழித்தல்) என்னும் இராகவனின் விளக்கம் இதுவரை கேட்காதது. மிக்க அருமை.

said...

// ஆனால் இந்த தமிழ் எழுத்துகள் அடிப்படையில் (அகரம் முதல் - படைத்தல்; உகரம் உலகு - காத்தல்; மகரம் கடைசி - அழித்தல்) என்னும் இராகவனின் விளக்கம் இதுவரை கேட்காதது. மிக்க அருமை. //

நன்றி குமரன், அது அப்படியோ என்று தோன்றியது. பொருந்தியும் வந்தது. எழுதி விட்டேன். ஒரு கருத்தை நான் ஏற்க எனக்கு வேண்டிய தகவல்களைச் சிந்திப்பது வழக்கம். ஏன் அப்படிச் சொல்கிறோம் என்று சிந்தித்த பொழுது தோன்றியது இது.

said...

ஸ்கந்தன் என்றால் கந்தன்தான்
ஸ்ரீரங்கம் என்றால் திருவரங்கம்

இவ்வாறு தான் இருக்க வேண்டும்

said...

அன்புடையீர்,
அ - அமைதல், ஆக்கம்
உ - உவத்தல், உலகம், காத்தல்
ம - மறைதல், முடிவு

வாரியார் விருந்து எனும் வாரியார் சுவாமிகளின் கட்டுரைத் தொகுப்பில் இப்படி உள்ளது காண்பீர்.
அன்புடன்
ரர். ராதாகிருஷ்ணன்

said...

ராகவன்,

மணியன் சொன்னது போல 6 குழந்தைகள் ஒட்டிய ஒன்றாக மாறியது வைத்து தான் ஸ்கந்தன் , என்று பெயர் வந்தது, ஆனால் அதில் ஒரு திருத்தம், ஸ்கந்தன் என்றால் இடை, இடுப்பு,

பார்வதி 6 ஆறுகுழந்தைகளையும் ஒரு சேர வாரி எடுத்த போது இடையுடன் ஒன்றாக உடல் இணைந்து ஆறு புஜங்கள், முகங்கள் கொண்டவராக முருகன் மாறியதாக சொல்வார்கள், இடையுடன் இணைந்தவன், ஒன்றிணைந்தவன் என்ற அர்த்தத்தில் அப்படி சொல்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.

கந்து என்பதற்கு குறிப்பிட்ட தவணையில் , காலக்கெடுவில் நடப்பது (periodic) என்று ஒரு பொருள் உண்டு, கந்து வட்டி என்று அதனால் தான் பெயர் வந்தது, தமிழ் சொல் தான் அது.

தண்டல் என்பதும் தண்டு, தண்டுதல் என்பதில் இருந்து வந்தது, வசூலித்தல் என்று பொருள்.

உண்மையில் அக்காலத்தில் அரசு வரி வசூலிப்பவரே தண்டல்காரர் எனப்பட்டார்.மாதண்டநாயகன் என்று சொல்வதை படித்து இருப்பீர்கள்.

கார்த்திகேயன்= கார்த்திகை பெண்களின் மகன் ,
காங்கேயன் = கங்கையின் மகன், தீப்பொறிகளாக தோன்றிய முருகனை கங்கை தான் சுமந்து வந்து சரவணப்பொய்கையில் சேர்த்தவள்.

ஸரவணன்= கோரைப்புல் இருக்கும் இடத்தில் உதித்தவன், ஸரவண பொய்கையில் பிறந்ததால் என்று சொன்னாலும், அப்பொய்கைக்கு பெயர் வரக்காரணம் , ஸரம் = கோரைப்புல் , வனம் என்றால் காடு, கோரைக்காட்டில் இருக்கும் பொய்கை.

இன்னும் பலப்பெயர்களுக்கும் காரணம் மறந்து விட்டது எப்போதோ கேட்டது, படித்தது.

//எல்லோரும் என்னைக்கேட்குறாங்க செந்தில்-னா என்ன அர்த்தம்னு... அதுக்கு கொஞ்சம் விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்க ;-)//

திருச்செந்தூர் என்பதில் உள்ள செந்தூர் தான் மருவி செந்தில் எனப்படுகிறது, திருச்செந்தூருக்கு இன்னொரு பெயர் , திருச்சீரலைவாய்!

said...

//அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.//

இது முதல் நகைச்சுவை. தமிழில் உயிரும் மெய்யும் சேரும். இரண்டு உயிர்கள் சேரவேண்டுமானால் இடையில் உடம்படுமெய் என்ற மூன்றாவது எழுத்து வேண்டும். ஓ என்பது ஒரு தனி உயிர் எழுத்து. அ+உ சேர்ந்து உருவான எழுத்து அல்ல.

//இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)//

இது அடுத்த நகைச்சுவை. அகரம் முதல் எழுத்து அவ்வளவே.

//உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)//

இது மூன்றாவது நகைச்சுவை. உகரம் காத்தலைக் குறிப்பதாக எந்தத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் குறிக்கப்படவில்லை. உகரம் ஒரு எழுத்து அவ்வளவே.

//மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)//

இது நகைச்சுவையின் உச்சம். மகரம் தமிழ் நெடுங்கணக்கின் கடைசி எழுத்து அல்ல. இதற்கு அழித்தல் என்று பொருள் எதுவும் இல்லை.

கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டால் இன்னும் என்னென்னவோ `உண்மைகளை` யார் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம்.

முருகன் தமிழ்க்கடவுள். வழக்கம்போல் அவனையும் சமக்கிருதமயமாக்கல் செய்தவர்கள் வைத்த பெயர் ஸ்கந்தன் என்பதாகும்.
நீரை ஜலம் என்று சொல்வது போன்றது இது.

said...

ஜிரா,

கந்தன் வடமொழி பெயர் என்று நினைத்திருந்தேன். ஸ்கந்தன் என்பது திரித்தல், கந்தன் தான் ஒரிஜினல் என்று நன்றாக சொல்லி இருக்கிங்க.

:)

உங்க விளக்கப்படி, முன்று தொழில்களையும் செய்யும் பெயராக இருப்பதால், கந்தனில் எல்லாம் அடக்கம் !
:)

said...

விளக்கவும். ஸ்கந்தம் என்றால் விந்து அல்லவா? அதிலிருந்து வந்தது தான் ஸ்கந்தன் என்று எங்கோ படித்த நினைவு. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.