Wednesday, September 28, 2005

மாறிப் போன பயணங்கள்


மிகச்சிறிய வயதில் (எனக்கு வயது நினைவில்லை. நம்புங்கள். என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்துக் கொண்டு எனது அத்தை உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைக் காட்டி, "யாரு அது சொல்லு" என்று கொஞ்சியதும் நினைவில் இருக்கிறது.) தூத்துக்குடியில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இரண்டு வயதிலிருந்து எனது அத்தைதான் கொஞ்ச காலம் வளர்த்தார்கள்.

விளாத்திகுளம், நாகலாபுரம் தாண்டி இருக்கும் புதூர்தான் எங்கள் தந்தை வழி மூதாதையர்களின் சொந்த ஊர். தூத்துக்குடியிலிருந்து நேர் பஸ் உண்டு. ஆனால் அடிக்கடி இருக்காது. விளாத்திகுளம் போய் மாறுவதும் சில சமயம் செய்திருக்கிறோம்.

இரண்டு பஸ் கம்பெனிகள். பெயர்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. மீரான் டிரான்ஸ்போர்ட், லயன் டிராஸ்போர்ட். இரண்டு வண்டிகளுமே கொஞ்சம் பழைய வண்டிகள். சொல்லி வைத்தாற்போல் இரண்டிலுமே கொஞ்சம் வயதில் பெரியவர்தான் ஓட்டுனராக இருப்பார். கட்டபொம்மன் பேருந்துகளில் கொஞ்சம் இளவயது ஓட்டுனர்கள் இருப்பார்கள்.

அந்தச் சின்ன வயதில் நான் லயன் வண்டியில்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். காரணங்கள் இரண்டு.
1. அது நேராகப் புதூருக்குப் போகும்.
2. அதில் இடப்பக்க ஜன்னலை ஒட்டி ஒரே நீளமாக ஒரு சீட் இருக்கும்.

விளாத்திகுளத்திற்கு கட்டபொம்மன் வண்டிகள் நிறைய உண்டு. அங்கு போய்விட்டால் அருப்புக்கோட்டை போகும் பல வண்டிகள் கிடைக்கும். அந்தப் பேருந்துகள் புதூர் வழியாகத்தான் போகும். தூத்துக்குடியிலிருந்து புதூர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் கட்டபொம்மன் பேருந்துகளும் உண்டு. ஆனால் எனக்குப் பிடித்தது லயனும் மீரானும்தான்.

கட்டபொம்மன் வண்டிகளைக் கேடீசி (கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்) என்பார்கள். மதுரைக்குப் பாண்டியன். கோவைப் பக்கம் சேரன். சென்னையில் பல்லவன். தஞ்சைப் பக்கம் சோழன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து முதலில் இருந்த போக்குவரத்துக் கழகங்கள். இவை பல்கிப் பெருகி இன்றைக்கு எல்லாம் ஒன்றே என்று ஆகிவிட்டன.

இந்த லயன் வண்டியிலும் மீரான் வண்டியிலும் போவது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவை மெதுவாகச் செல்லும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் அவை புறப்படும். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.

அதுவுமில்லாமல் லயன் வண்டி எல்லா இடங்களிலும் நிற்குமாம். அதுவும் தாமதத்திற்குக் காரணம். நான் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டே செல்வேன். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருக்கின்றேன். அந்த வயதில் சரியான அந்தக் கேள்விகள் இந்த வயதில் கேணத்தனமாகத் தோன்றுகின்றன.

எட்டையாபுரம் போகும் வழியில் எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் உண்டு. "எப்பொதென்றான்" என்று வேகமாகச் சொல்லும் போது கேட்கும். நடத்துனர் அடிக்கடி அப்படிச் சொல்வதால் என் காதில் "எப்போண்டா" என்று விழுந்திருக்கிறது. "ஏந்த்த இந்த ஊருல போண்டா போடுவாங்களா? நம்ம புதுக்கிராமம் டீக்கட போண்டா மாதிரி இருக்குமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்போதும் வென்றானுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேணத்தனமாக ஒரு கதையை என் அத்தையிடம் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயமாக ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டிருப்பார். "ஹர்ஷா எப்ப சண்ட போட்டாலும் ஜெயிச்சாராம். அதான் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான்னு பேரு." அங்கே அதிசயமாக ஓரு இடத்தில் கொட்டியிருந்த செம்மண்ணைக் காட்டி, "ரொம்ப சண்ட போட்டப்போ...ரெத்தம் சிந்தித்தான் செக்கச் செவேல்னு இருக்கு." இதையெல்லாம் கேட்கும் பொழுது என் அத்தைக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அவர் மேல் பரிதாபப் படுகிறேன்.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் லயன் வண்டி குறுக்குச்சாலை வழியாகப் போகும். அதென்ன குறுக்குச்சாலை? அது நான்கு ஊர்ச்சாலைகள் கூடுமிடம். பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்ச்சாலைகளும் கூடும் சாலை குறுக்குச்சாலை. அந்தக் காலத்திலேயே எப்படி பெயர் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.

அதற்கப்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் யாராவது சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அடுத்து நினைவிருக்கும் ஊர் விளாத்திகுளம்தான்.

விளாத்திகுளத்திற்கு முன்னால் சிறிய பாலம் உண்டு. வழக்கமான பாலங்களைப் போல கீழே நீர் ஓடுவதும் தூண்கள் சாலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் படியும் இருக்காது. பாலம் குழிந்து தரையோடு இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி ஓடும். அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில். எனக்கு விவரம் தெரிந்து அந்தப் பாலத்தில் வெள்ளத்தைப் பார்த்ததில்லை.

விளாத்திகுளத்தை விட்டு வெளியில் செல்லும் இடத்தில் ஒரு பெரிய கண்மாய் உண்டு. அதில் நான் சிறுவயதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பால் குறுகிக் காய்ந்து வெடித்துப் போயிருக்கிறது.

அடுத்தது நாகலாபுரம். அதுவும் ஒரு சிற்றூர்தான். அங்கு கூட்டமாக இருக்கும். நாகலாபுரம் வந்தாலே புதூர் வந்து விட்டது போல இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு டெண்ட்டு கொட்டகை. அதைக் கடந்து போகையில் எந்தப் படம் அங்கே ஓடுகிறது என்று எனக்குக் கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் எட்டி எக்கிப் பார்ப்பேன்.

புதூருக்குள் நுழையும் போதே இருக்கங்குடி விலக்குக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் தெரியும். அடுத்தது முருகன் கோயில். அப்படியே புதூர் பேருந்து நிலையம். அங்கும் பெரிய தட்டி வைக்கப் பட்டிருக்கும். சினிமா போஸ்டர்களோடு. ரத்னா, சீதாராம் என்று இரண்டு டெண்ட்டு கொட்டகைகள். இவற்றில் சீதாராம் கொட்டகை எங்கள் நிலத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அங்கே வீட்டின் பெயரைச் சொன்னால் ஓசியிலேயே படம் பார்க்கலாம்.

புதூரில் இறங்கியதும் அங்கே தெரிந்தவர் கடையில் பெட்டி படுக்கைகளை வைப்போம். காரணம் ஒரு அரைக்கிலோமீட்டர் ஊருக்குள் நடக்க வேண்டும். ஒன்றும் பெரிய தொலைவு இல்லை. ஆனாலும் அப்படித்தான். பிறகு வீட்டிற்கு நடந்து போய் அங்கிருந்து யாரையாவது சைக்கிளில் அனுப்பி எடுத்து வருவோம். சுற்றி பெரும்பாலும் எப்படியாவது உறவாகத்தான் இருப்பார்கள். ஆகையால் இளம் பையன்களை சைக்கிளில் பை எடுக்க பெரியவர்கள் அனுப்புவார்கள்.

இப்பொழுது லயன் பேருந்துகள் ஓடுவதில்லை. கட்டபொம்மனைத் தூக்கிப்(ல்) போட்டாயிற்று. பெரும்பாலும் தேவைப்படுகின்ற சமயங்களில் கார் வைத்துக்கொண்டுதான் போகின்றோம். நாங்கள் பை வைத்த கடை இன்னும் இருக்கிறது. ஆனாலும் பைகள் காரில் நேராக வீட்டிற்குப் போகின்றன. நாகலாபுரம் கொட்டகையில் என்ன படமென்று கூட எட்டிப் பார்க்கவில்லை. சீதாராம் கொட்டகைக்குக் குத்தகை முடிந்தது. ஆகையால் அவர்கள் கொட்டகையைக் கலைத்து விட்டார்கள். ரத்னா மட்டும் இன்னும் இருக்கிறது. போன முறை போயிருந்த பொழுது Lord of the rings தமிழில் பார்த்ததுதான் மிச்சம்.


அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, September 25, 2005

தருமனும் தருமமும்

தருமனும் தருமமும்

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.

பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.

தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.

தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.

ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.

"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"

ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."

தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.

ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.

"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"

கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."

இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.

"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"

"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.

"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.

சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."

தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"

சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."

"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.

"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."

யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.

சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."

கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"

அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.

பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."

திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.

"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.

"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"

"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"

குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."

லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.

உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"

"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.

இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."

தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.

தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"

பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"

தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.

தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"

இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..

சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆண்டவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."

உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"

தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"

சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!

எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.

இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."

இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."

தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."

முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.

கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."

"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."

சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, September 18, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - இரண்டு

இரண்டாம் பாகம்

இத்தனை விடுதிகளா என்று மலைத்திருப்பீர்கள். இன்னும் இருக்கின்றன. குறிப்பாக இந்திரா நகரில் இருக்கும் மற்றொரு சைவ விடுதியைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். அதுதான் இட்லி பஜார். சி.எம்.ஹெய்ச் ரோடு என்பது இந்திரா நகரின் மிகவும் பிரபலமான ரோடு. பல பெரிய கடைகள் அங்கே உள்ளன. அங்கு இருப்பதுதான் இட்லி பஜார். தமிழர்களால் நடத்தப் படுவது. சுத்த சைவம். இங்கு மீல்சும் கிடைக்கிறது.

இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை என்று சமீபத்தில் பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. இங்கு இட்டியிலேயே பல வகை. தோசையில் பல வகை என்று நமது நாவிற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அனைத்திலும் கொத்துமல்லி இட்டிலி முன்னிலையில் இருக்கிறது என்று சொல்வேன். மெத்தன வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி எடுத்துத் தேங்காய்ச் சட்டினியோடும் பொடியோடும் தருவார்கள். கண் முந்தியதோ. கை முந்தியதோ. வாய் முந்தியதோ. வயிறு முந்தியதோ என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அடையும் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெல்லிசாக இருந்தாலும் சிவக்கச் சுட்டுத் தருகிறார்கள். கூட அவியலும். சொல்லவே வேண்டாம். கண்டிப்பாக ஒருமுறையேனும் போக வேண்டிய கடை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விடுதி ஹள்ளி மனே. அதாவது தமிழில் பட்டி வீடு. பட்டிக்காட்டு வீடு என்ற பெயரில் கர்நாடக உணவு வகைகள் கிடைக்கின்றன. மல்லேஷ்வரத்தில் இருக்கிறது இந்த ஹள்ளி மனே. இங்கும் மீல்ஸ் மற்றும் டிபன் வகைகள் கிடைக்கும். ஐம்பது ரூவாயில் மீல்ஸ். தக்காளி சூப் தருகிறார்கள். நானும் பனீர் பட்டர் மசாலாவும் வருகிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜி தருகிறார்கள் என நினைக்கிறேன். பிறகு புலாவும் தாலும் (அதாங்க பருப்பு). அப்புறம் வழக்கமான கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர் என்று சம்பிரதாயமாக முடியும்.

கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தமிழர்கள் எல்லாரும் பெங்களூர் வந்ததுமே கன்னட சாம்பார் எதிர்ப்புச் சங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். பருப்பிருக்கும். ஆனால் இருக்காது. காயிருக்கும். ஆனால் இருக்காது. சுவையிருக்கும். ஆனால் இருக்காது. லேசாக இனிப்பாக இருக்கும் அந்தச் செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து பரதேசம் போனவர்களைப் பட்டியல் போட முடியாது. பயமுறுத்தவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.

ரசம் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. அதே முறையான உடுப்பிக்காரர்களின் மென்சின் சாறு (மிளகாய்ச் சாறு) என்றால் விடாதீர்கள். கொஞ்சம் கிண்ணத்தில் வாங்கிச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும்.

சரி. ஹள்ளி மனேக்கு வருவோம். இங்கு வழக்கமான இட்டிலி தோசை வகைகள் எல்லாம் கிடைக்கும். கர்நாடகத்தில் அக்கி ரொட்டி என்று பிரபலம். அக்கி என்றால் அரிசி. அரிசியில் செய்த ரொட்டிதான் அக்கி ரொட்டி. செய்வது எளிதுதான். ஆனாலும் பழக்கம் வேண்டும். முடியாதவர்கள் நேராக ஹள்ளி மனேக்குச் சென்று வாங்கித் திங்கலாம். ஏற்கனவே சர்க்கரை. இதற்கு மேலே அக்கி ரொட்டியா என்று சர்க்கரை வியாதிக்காரர்கள் அலுத்துக் கொள்ள வேண்டாம். அங்கே ராகி ரொட்டியும் கிடைக்கிறது. கேழ்வரகில் செய்த ரொட்டி. சுவையாக இருக்கும். எண்ணெய் குறைவாக ஊற்றிச் செய்யச் சொல்லுங்கள். கூட தேங்காய்ச் சட்டினியும் வெங்காயச் சட்டினியும் தருகிறார்கள். ஒன்றோடு நிறுத்த மாட்டீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும். ஆகையால் நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டியிருக்கும்.

காமத் யாத்ரீ நிவாஸ் பற்றியும் சொல்ல வேண்டும். இதுவும் கன்னட ஓட்டல்தான். பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கிறது. இங்கு மீல்ஸ் என்றால் சப்பாத்தி கிடைக்காது. ஜோளத ரொட்டிதான் கிடைக்கும். அதாவது சோள ரொட்டி. சப்பாத்தி போலத்தான் இருக்கும். ஆனால் சுவையில் சின்ன மாற்றம். வடகர்நாடகாவில் சோளம் மிகப் பிரசித்தம். அத்தோடு கத்தரிக்காய்க் கூட்டு. இது போதும் அவர்களுக்கு. வெளுத்து வாங்குவார்கள்.

இப்பொழுது காமத் யாத்ரீ நிவாஸ் அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. நானும் போய் நாளாகிறது. பெங்களூரிலிருந்து மைசூர் போகும் வழியில் ஒரு காமத் யாத்ரீ நிவாஸ் இருக்கிறது. அங்கே உணவோடு வெற்றி வேரில் செய்த பொருட்களும் கிடைக்கும். நான் இரண்டு வெற்றி வேர் விசிறிகள் வாங்கினேன். வெற்றி வேர் செருப்பு, பை, பர்ஸ் என்று பல பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் அங்கு போனால் கஷாயா பேக்கு என்று கேளுங்கள். அதாவது கஷாயா வேண்டும். இது சுக்குத் தண்ணி போலத்தான். ஆனால் பாலோடு கலந்து தருவார்கள். மெல்லிய நறுமணம் கமழ சுவையாக தொண்டைக்குள் கஷாயா இறங்கும் சுகமே அலாதி. அதுவும் மாலை வேளையில் லேசாக காத்து வீசும் பொழுதென்றால் கேட்கவே வேண்டாம். இன்னொந்து கஷயா என்று நீங்கள் கேட்கா விட்டால் உணவை வாழ்வதற்காகவே சாப்பிடுகிறவர் நீங்கள். அங்கே ரவாதோசையும் நன்றாக இருக்கும்.

பெங்களூரில் நாட்பட இருப்பவர்கள் கேட்டிருக்கும் மற்றொரு உணவு ராகி மொத்தே. கேள்வரகுக் களியின் உருண்டை வடிவம். தேவே கவுடாவிற்கு மிகவும் பிடித்த உணவு. வடகன்னடட்தில் சோளம் என்றால் தெற்கில் கேப்பை. இதை எல்லாரும் விரும்பி உண்வுவது கடினந்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சைவ அசைவ முறைகளில் சாப்பிடலாம். சைவ முறையென்றால் தயிரே சிறந்தது. ராகி மொத்தேயை தட்டில் போட்டுப் பிசைந்து அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து கொண்டு, கொஞ்சம் உறைப்பாக எதையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். நான் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறேன். விதான சவுதாவை ஒட்டியிருக்கும் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குள் போக முடிந்தவர்கள் அங்கிருக்கும் விடுதியில் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

அசைவ முறைப்படி என்றால் கறிக்குழம்புதான். கருப்பாக இருக்கும் உருண்டையின் தலையில் கறிக்குழம்பை ஊற்றிச் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது விளங்கும். ஆனால் ஒன்று. ராகி மொத்தே சாப்பிட வேண்டுமானால் நல்ல விடுதியைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டுச் செல்லுங்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகையில் மற்றொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். ஆமாம். ஆந்திர ஓட்டல்களைத்தான். ஆந்திரா ஸ்டைல் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு பெங்களூரில் தெருவிற்கு ஒரு ஓட்டலாவது இருக்கிறது. அவைகள் எந்த அளவிற்கு ஆந்திர உணவுகளைக் குடுக்கின்றன என்று தெரியாது. அவைகளில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம் நானும் அங்கு போய் வெளுத்து வாங்கியிருக்கிறேன்.

நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.

இங்கு ஆந்திர மீல்ஸ் கிடைக்கும். அத்தோடு ரொட்டி, நான் போன்ற வடக்கத்தி உணவுகளும் கிடைக்கும். அத்தோடு அசைவ உணவு வகைகளும் இங்கு மிகவும் பிரசித்தம். ஐதராபாத் பிரியாணியும் இங்கு கிடைக்கும். ஆனாலும் இங்கு எனக்கு மிகவும் பிடித்தது தோசை இட்டிலி கூட்டணிதான்.

மாலை வேளைகளில் மட்டும் தோசை+கோழிக் குழம்பு, தோசை+ஆட்டுக்கறிக் குழம்பு ஆகியவை கிடைக்கும். நாட்டுக் கோடி புலுசு, மாம்ச புலுசு என்று சொல்வார்கள். சேப்பாலு புலுசு (மீன் குழம்பு)ம் கிடைக்கும். இட்டிலிப் பிரியர்கள் தோசைக்குப் பதிலாக இட்டிலி வாங்கிக் கொள்ளலாம். லேசான குளிரடிக்கும் பெங்களூரின் மாலை வேளைகளில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இந்தக் கூட்டணியை அடித்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. சைவப் பிரியர்களுக்காக கேரட் 65 கிடைக்கிறது. நன்றாகவே இருக்கிறது. சிக்கன் 65 அளவிற்கு இல்லையென்றாலும் சைவர்களுக்குச் சுவையாகவே இருக்கும்.

இத்தோடு இரண்டாம் பாகம் முடிந்தது. அடுத்த பாகத்திலும் ஆந்திரா தொடரும். அதுவும் ஒரு அருமையான ஓட்டலோடு.

Wednesday, September 14, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

கொஞ்சம் சீரியசான விஷயங்களையே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒரு மாறுதலுக்குச் சின்ன தொடர். பெங்களூரில் நான் ருசித்த ரசித்த உணவு விடுதிகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சின்ன அறிமுகமே தொடராக வருகிறது பாருங்கள்.

என்னுடைய உணவுப் பழக்கம் என்ன? மிகவும் எளிமையான சிக்கலான உணவுப் பழக்கமே என்னுடையது. காலையில் கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும். பகலில் அலுவலகத்தில் சப்பாத்தியும் கூட்டும். கூட ஒரு கப் தயிர். ஒவ்வொரு வேளை சப்பாத்தியைக் குறைத்துக் கொண்டு சோறு எடுத்துக் கொள்வதுண்டு. இரவில் பெரும்பாலும் கோதுமை ரவைதான். உடன் பாசிப்பருப்பும் காய்கறிகளும் போட்டு கதம்பமாகச் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். தயிரும் சேர்த்துக் கொள்வதுண்டு.

இரவில் தொட்டுக்கொள்ள ஏதேனும் வேண்டுமென்று தோன்றினால் ஃபிரீசரில் இருந்து இரண்டு சிக்கன் சாசேஜ்களையோ சிக்கன் ஃபிங்கர்களையோ லேசாக எண்ணெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு.
இது பெரும்பாலான வார நாட்களில் நடப்பது. வார இறுதியில் சைவமோ அசைவமோ தோன்றியதைச் செய்து சாப்பிடுவது. ஆனால் அத்தோடு முடிகிறதா பெங்களூரில். எத்தனையெத்தனையோ வகையான ஓட்டல்கள் புதிது புதிதாக வருகையில் எதைத் தேர்ந்தெடுப்பது?

எனது வயிற்றைச் சோதனைச் சாலையாக்கி ஓரளவுக்கு சிறந்த ஓட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அங்கே என்ன கிடைக்கும் என்பதையும் முடிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன்.

நான் தமிழன். தென்னிந்தியன். ஆகையால் முதலில் தமிழ் நாட்டு உணவு விடுதிகளையும் தென்னிந்திய விடுதிகளையும் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
கதம்பம் என்ற ஓட்டலைச் சொல்லியே ஆக வேண்டும். ஜெயநகரில் இருக்கிறது. முன்பு டிக்கென்சன் ரோட்டிலும் இருந்தது. இப்பொழுது அதை மூடி விட்டார்கள். மிகவும் அருமையான ஐயங்கார் உணவுகள் கிடைக்கும். அங்கு கிடைக்கும் மெது தோசை மிகவும் அருமை. மெல்லிய துணி போன்ற இரண்டு தோசைகளோடு பருப்புத் துவையலும் குருமாவும் குடுப்பார்கள். மேசையில் பொடியும் எண்ணெய்யும் இருக்கும். நான் குருமாவை தலாக்கி விட்டு பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வேன். அடடா! அனுபவிக்க வேண்டுமய்யா!

அவர்களின் அடுத்த சிறந்த படைப்பு புளியோதரை. கூட கெட்டித் தயிர் ஒரு கப் தருவார்கள். ஸ்பூனில் தயிரை எடுத்து புளியோதரையோடு கலந்து சுவைத்தால் அமுதம் என்பதற்குப் பொருள் விளங்கும். அடுத்தது வெண்பொங்கல். உதிரியாக இருக்காது. கொழகொழப்பாக இருக்கும். அதனோடு தேங்காய்ச் சட்டினியும் புளிக்கரைசலும். தேங்காய்ச் சட்டினிக்கு மங்களம் பாடி மூடி வைத்து விட்டு, தாளித்த புளிக்கரைசலை (லேசான தித்திப்பு இருக்கும்) பொங்கலோடு கலந்தடிக்க மூன்று நாட்களுக்கு நாக்கு அதை மறக்காது.

எல்லா தமிழ் உணவுகளும் கிடைக்குமென்றாலும் இவை மூன்றுமே கதம்பத்தில் எனக்குப் பிடித்தவை.

அடுத்து சொல்ல வேண்டியது எம்.டீ.ஆரைப் பற்றித்தான். அவர்களின் ரெடிமேட் உணவுகள் எங்கும் கிடைக்கின்றன. மாவள்ளி டிஃபன் ரூம் என்பதுதான் எம்.டீ.ஆர். பெங்களூரிலுள்ள பழைய ஓட்டல். இன்னும் மாறாமல் இருக்கிறது. இங்கு ஸ்பெஷல் என்றால் மீல்ஸ்தான். எழுபத்தைந்து ரூபாய். முதலிலேயே டோக்கன் வாங்கி விட்டு வரிசையில் நின்று இடத்தைப் பிடிக்க வேண்டும். அவ்வளவு கூட்டம் வரும்.

முன்பெல்லாம் வெள்ளி முலாம் பூசிய தட்டில்தான் பரிமாறினார்கள். இப்பொழுது கூட்டம் கூடக் கூட எவர்சில்வர் தட்டில்தான் பரிமாறல். ஆனால் பழச்சாறு மட்டும் வெள்ளி பூசிய டம்ளரில் வரும். மீல்ஸ் என்பது அள்வில்லாதது. தோசை/சப்பாத்தி/பூரி/ருமாலி ரொட்டி இவற்றில் ஒன்று கொடுப்பார்கள். எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
பிறகு ஒரு கலந்த சாதம் வரும். புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய்ச் சோறு என்று ஏதாவது ஒன்று இருக்கும். கூட்டுகளும் சட்டினிகளும் வரும். கூட சிப்ஸ் கொடுப்பார்கள். பாயாசம் இருக்கும். ஒரு ஸ்வீட் இருக்கும். பழச்சாறைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. அடுத்தது சாம்பார், ரசம் இரண்டும் சோற்றோடு வரும். முடிந்ததும் தயிர்ச் சாதத்தைப் பரிமாறுவார்கள். கடைசியில் ஃபுரூட் சாலட் ஐஸ்கிரீமோடு கொஞ்சிக் கொண்டு வரும். முடிக்கையில் பீடாவும் வாழைப் பழமும் கிடைக்கும். பகலில் சாப்பிட்டால் இரவு உணவு தேவையேயில்லை.

காலையிலும் மாலையிலும் டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். ரவா இட்டிலி மிகப் பிரசித்தம். கெட்டிச் சட்டினியோடு வரும். உருளைக் கிழங்கு சாகு கொடுப்பார்கள். அப்படியே இட்டிலின் தலையில் நெய்க் குளியல் நடக்கும். ஆனால் என்னுடைய ஓட்டு மீல்ஸ்க்குத்தான். ஒரு நாளைக்கு இத்தனை மீல்ஸ் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் சீக்கிரம் போவது நல்லது. ஜெயநகரில் ஊர்வசி தியேட்டருக்கும் லால்பாக் மெயின் கேட்டுக்கும் இடையில் இருக்கிறது.

இல்லை. இதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் தமிழ்க் குடிதாங்கிகளுக்கென்றே இருக்கிறது கிருஷ்ணா கஃபே. கோரமங்களாவில் இருக்கிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இங்கு நான் சாப்பிட்டதெல்லாமே நன்றாக இருந்தது. பகலில் சாப்பாட்டிற்கு அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை கூட்டிச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
இத்தனை ஓட்டல்களைச் சொன்னபின் பிருந்தாவனத்தைச் சொல்லவிட்டால் வத்தல்குழம்பு என்னை மன்னிக்கவே மன்னிக்காது. ஆமாம். அருமையான வத்தக்குழம்பு அங்கே கிடைக்கும். பெங்களூரின் மையப் பகுதியான எம்.ஜி ரோட்டில் இருக்கிறது இந்த ஓட்டல். உடுப்புக்காரரின் ஓட்டல். ஆனாலும் தமிழர்கள் மிகவும் விரும்புவது.

மீல்சில் சப்பாத்தியும் உண்டு. அப்பளம் கேட்கக் கேட்கத் தருவார்கள். அருமையான வத்தல் குழம்பும் கிடைக்கும். மீல்ஸ் சாப்பிட்டால் மறக்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புளிப்பும் உறைப்புமாய் சுர்ரென்று இருக்கும். டிபன் பிரியர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வகை வகையாய் இட்டிலிகளையும் தோசைகளையும் சுட்டுத் தாக்குகிறார்கள். எல்லாமே அருமை. பொடியை எண்ணெய்யோடு குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். வேண்டிய மட்டும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் டிபன்களில் எனக்குப் பிடித்தது நீர்தோசை. என்னடா நீர்யானை போல பெருசாக இருக்குமா என்று நினைக்காதீர்கள். மிகவும் மெல்லிய தோசையிது. அற்புதமாக இருக்கும். இத்தோடு இனிப்பான பழக்கலவையும் தருவார்கள். தோசையோடு சாப்பிட அல்ல. தோசைக்குப் பின்னே சாப்பிட. மிகவும் சுவையோ சுவை.

தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்றே ஆகவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டுப் புகழ் முருகன் இட்டிலிக் கடையையும் திறந்திருக்கிறார்கள் கோரமங்களாவில். அங்கு இதுவரை சென்றதில்லை. சென்றால் அதைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்கிறேன்.

இத்தோடு பாகம் ஒன்று முடிந்தது. இன்னும் ஒன்றிரண்டு சைவ விடுதிகளையும் மற்ற விடுதிகளையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, September 12, 2005

பன்னீர் இலையில்

பன்னீர் இலையில்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த அரசாங்கப் பேருந்து கிளம்பும் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் தனியாகப் போகிறேன். திருச்செந்தூருக்குத் தனியாகப் போகிறேன். இதுவரை அப்படிப் போனதேயில்லை.

தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவரையில் (சிறு வயதில்) பால்பண்ணை ஸ்டாப்பிலோ பீங்கான் ஆபீசு ஸ்டாப்பிலோ போய் ஏறினால் அழகான ஊர்களின் வழியே போய் திருச்செந்தூரைச் சேரலாம். அப்பொழுது கூட ஒரு கூட்டமே வரும்.

தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று வந்த பிறகும் கூட தனியாகப் போனதில்லை. இப்பொழுது போகிறேன். மனம் என்னவோ செய்தது. ஆனாலும் பெருமையாக இருந்தது. தனியாக முருகனைப் பார்க்கப் போகிறேனே.

மாலை ஏழு மணி ஆகியிருந்ததால் இருள் கவியத் துவங்கியிருந்தது. வெளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் நான் ஓடிய ஆடிய தெருக்கள் இன்னும் இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது ஏதோ ஒரு பாசம் எழுந்தது.

ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டிணம் எல்லாம் தாண்டி திருச்செந்தூருக்குள் நுழையும் பொழுதே கோபுரம் தெரிந்தது. நியான் விளக்குகளால் வேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாசமா பக்தியா என்று தெரியவில்லை. கன்னத்தில் போட்டுக் கொண்டேன். வாய் மெல்ல முருகா என்று எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்தது.

திருச்செந்தூர் பேருந்துகளில் கோயில் வாசல் என்று எழுதியிருக்கும். அதற்கு ஏற்றாற்போல கோயில் வாசலில் சென்று இறக்கி விடுவார்கள். இப்பொழுது நாழிக்கிணற்றுக்கு அருகில் புதிதாக பேருந்து நிலையம் கட்டி அங்கு இறக்கி விடுகிறார்கள். நானும் அங்கு இறங்கினேன்.

பனைமரங்கள் கண்ணில் தென்பட்டன. எனக்கு பனைமரங்களைக் கண்டாலே ஒருவித அன்பு பொங்கும். பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்றால் சொல்லவே வேண்டாம். தேவஸ்தான தங்கும் அறைகளைத் தவிர்த்து விட்டு நல்ல விடுதியைத் தேடினேன்.

ஓரளவு நன்றாக இருந்த விடுதியில் இடம் பிடித்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வாடகை. ஒத்துக்கொண்டு அந்த நூறோடு இன்னொரு நூறையும் அட்வான்ஸ் என்ற பெயரில் கொடுத்தேன். அறைக்குச் சென்று குளித்து விட்டு உடைகளை மாற்றினேன். முக்காப் பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன். நடை சாத்தியிருந்தது. அப்படியே கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கடற்கரையில் அமர்ந்தேன்.

சுனாமி வந்த ஒன்றிரண்டு மாதங்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் இருந்தது. தருமபுரி ஆதீன மடத்தில் முன்பெல்லாம் பக்தர்கள் படுத்துத் தூங்குவார்கள். இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருப்பதால் யாரையும் அங்கே படுக்க அனுமதிப்பதில்லை.

கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன். பதினோரு மணிக்கு மேல் கடற்கரையில் யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. விடுதியை நோக்கி நடந்தேன். வழியில் சுக்குத் தண்ணி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஆசை உந்த அதை வாங்கிக் குடித்தேன். எனக்குப் பிடித்த கருப்பட்டி போட்டுக் காய்ச்சிய சுக்குத் தண்ணீர். ருசித்துக் குடித்தேன்.

நான் வாங்கியதைப் பார்த்ததும் மேலும் இரண்டு மூன்று பேர் துணிந்து வாங்கிக் குடித்தார்கள். பிறகு மேலும் இருவர்.

கோயில் வாசலில் இருக்கும் கடையில் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்காக வாங்கினேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் கோபால் பல்பொடியும் வாங்கினேன். இதெல்லாம் இங்கே வாங்கினால்தானே......

விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நேராகக் கோயிலுக்குச் சென்றேன். சட்டையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக் கொண்டேன். இன்னமும் முருகனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தார்கள். கருவறைக்குள் இருக்கும் கந்தனைக் காண கூட்டமில்லை. நேராக வரிசைக்குச் சென்றேன்.

தட்டில் திருநீற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு ஐயர் தயாராக இருந்தார். ஆனால் திரைச்சீலை போட்டுக் கொண்டு முருகன் தயாராக இல்லை.

திருச்செந்தூர்த் திருநீற்றிற்குத் தனி மணம் உண்டு. மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் திருநீற்றை நெற்றி நிறைக்கப் பூசினாலெ ஒரு களை வந்துவிடும். அழகு பார்க்காமல் அங்கு எல்லாரும் பூசிக் கொள்வார்கள். பழைய வழக்கம் என்ன வென்றால் திருநீற்றை பன்னீர் இலையில் வைத்துத் தருவது.

பழைய வழக்கமது. நீளமாக அழகாக இருக்கும் பச்சைப் பன்னீர் இலையில் வெள்ளைத் திருநீற்றைத் தருவார்கள். திருநீறோடு பன்னீர் இலையின் வாடையும் கலந்து சுகமாக மூக்கில் ஏறும். முன்பு நானும் அப்படி வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு கிடைக்கப் போவதில்லை. திருநீற்றுத் தட்டில் பன்னீரிலை இல்லை.

ஒருவேளை பத்து ரூபாய் தட்டில் போட்டால் பன்னீரிலையில் திருநீறு கிடைக்குமோ என்று நினைத்தேன். அடுத்த நொடியிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். முருகன் குடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று உள்ளம் முடிவெடுத்தது.

அதற்குள் திருப்பள்ளியெழுச்சி முடிந்தது கந்தன் காட்சி தந்தான். "சீர்கெழு செந்தில்" என்று இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். எப்பொழுதும் சீர் மிகுந்த என்று பொருள். கந்தனின் கருணை மிக்க முகம் கண்டதும் கண்ணீர் பெருகியது. "முருகா! முருகா!" என்று உள்ளம் கதறியது. கையிரண்டையும் மேலே தூக்கி வணங்கினேன். அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றியது! அஞ்சேல் எனச் சொல்லி வேல் தோன்றியது! நெஞ்சில் பலகாலும் கண்டிருந்த அவனிரு கால்கள் தோன்றின. அன்போடு வணங்கி விட்டு ஐயர் எனது கையில் தள்ளிய திருநீற்றை நெற்றி நிறைய பூசிக் கொண்டு கருவறைப் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தேன்.

வெளிப்பிரகாரம் வந்ததும் அப்படியே அமைதியான காலையில் சுகமாக அந்தக் கற்கட்டிடத்தில் நடந்தேன். அங்கே ஒரு ஐயர் சந்தனத்தை ஒருவர் கையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுந்தான் சந்தனமா? எனக்குக் கிடைக்கக் கூடாதா? கிடைத்தால் நானும் பூசிக்கொள்ள மாட்டேனா?

படக்கென்று எனது கையை நீட்டினேன். தூய சந்தனம். அப்பொழுது அரைத்தது என நினைக்கிறேன். கமகமத்தது. கிண்ணத்திலிருந்து என் கையில் விழுந்தது. அத்தோடு படக்கென்று இன்னொன்றும் விழுந்தது. அட! பன்னீர் இலையில் திருநீறு.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, September 06, 2005

ராஜாவும் குட்டியும் பின்னே ஞானும்(ஞங்ஙளும்)

ஏதடா மலையாளப் படத்தலைப்பு போல இருக்கேன்னு படிக்காம விட்டுராதீங்க. படிச்சுப் பாருங்க. பிடிச்சாலும் பிடிக்கலாம். இது என்னோட நினைவுக்கடலில் எழுகின்ற ஒரு அலை. காலையாவது நனைச்சுக்குங்க.

தூத்துக்குடியில் பழைய ஹார்பருக்கு எதிர்ப்பக்கம் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் மூன்றாண்டுகள் இருந்தோம். அது தந்தையார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரம். நல்ல பெரிய காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகள். சில கெஸ்ட் ஹவுஸ்கள். நிறைய இடம். நிறைய மரங்கள்.

ஒரு நாள் பகற்பொழுதில் எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு முன்னேயும் நிறைய இடம். இங்கே எல்லாரும் என்பது நான், என்னுடைய தங்கை மற்றும் பாட்டி. அம்மா வீட்டுக்குள்ளும் அப்பா அலுவலகத்திலும் இருந்தார்கள்.

ஒரு நாட்டு நாய்க்குட்டி எப்படியோ பெரிய காம்பவுண்ட் கதவைத் தாண்டி உள்ளே வந்து விட்டது. சின்ன நாய். மெல்லிசாக இருந்தது. அழகென்று சொல்ல முடியாது. நாங்கள் மூவரும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தது. பாட்டி ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட்டார்கள். சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் சோறு. கொஞ்சம் அது. கொஞ்சம் இது என்று வீட்டில் ஒட்டிக் கொண்டது.

வந்த நாளிலேயே அதற்கு ராஜா என்று பெயரைச் சூட்டியாகி விட்டது. அதுவும் அந்தப் பெயருக்கு அன்றே பழகிக் கொண்டது.

வீட்டுக்குள் விட மாட்டோம். வெளியில் திரிய எவ்வளவு இடமிருக்கிறது. நன்றாகத் திரியும். கட்டிப் போடுவோம். குளிப்பாட்டுவோம். பேசாமல் இருக்கும். பொதுவாக நாய்கள் குளிக்க மறுக்கும் என்பார்கள். ஆனால் இந்த நாயை நானே தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் பேசாமல் இருக்கும்.

போட்டதைச் சாப்பிடும். அதே நேரத்தில் மீன் முள்ளுக்கும் அலையும். வீடு மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரில் இருந்ததால் மரத்திற்கு அடைய வரும் பறவைகள் மீன்களையும் மீன் முட்களையும் போடும். அதற்கு அலையும் ராஜா. இத்தனைக்கும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அசைவம் இருக்கும்.

வீட்டிற்கு வருகின்றவர்களிடம் மரியாதையாக இருக்கும். அதே நேரத்தில் சிலரை விடவே விடாது. அதற்கு பால்காரன் மேல் அப்படி ஒரு கோவம். அவர் வரும் பொழுதெல்லாம் குலைத்துத் தள்ளிவிடும். அவரும் குச்சியைப் பிறக்கிக் கொண்டு அடிக்க வருவார். நாங்கள் வந்து இருவரையும் சமாதானப் படுத்துவோம்.

மற்றொன்று குறிப்பிட்டே ஆக வேண்டும். மீன் முள் பொறுக்கினால் நாங்கள் அடிப்போம். நான் அல்லது என் தங்கை. அப்பொழுதெல்லாம் பேசாமல் இருக்கும். அடியை வாங்கிக் கொள்ளும். எடுத்து வந்த மீன் முள்ளைத் தொடாது. நாம் அடிப்பதை நிறுத்தியதும் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படுத்துக் கொள்ளும். வேறு யாராவது வெளியாட்கள் கையை ஓங்கினால் அவ்வளவுதான்.

நன்றாக வளர்ந்தது ராஜா. வீட்டு நாய்க்குரிய அத்தனை பண்புகளுடனும் வளர்ந்தது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே ஆனது.

ஒரு நாள் காலை வீட்டு வாசலில் நாயைக் காணவில்லை. இரவில் அவிழ்த்து விட்டிருப்பதால் எங்கேயாவது வெளியே போயிருக்கும் என்று தேடினோம். ஆனால் கிடைத்ததோ ராஜாவின் உடல்தான். வண்டி எதுவும் அடித்த மாதிரியும் தெரியவில்லை. உடம்பில் ஒரு காயமில்லை. ஆனால் இறந்திருந்தது.

தங்கையினரின் கண்ணீர் ரெண்டு நாட்களுக்கு நிற்கவில்லை. எல்லாருக்கும் ஒருவித தவிப்பும் துக்கமும் இருந்தது. யாரும் நிலையில்லை. இப்படியே எல்லாரும் இருப்பதைச் சகிக்க மாட்டாமல் அப்பா யாரிமோ இருந்து ஒரு நாயை வாங்கி வந்தார்.

மாலையில் நான் நாயை எங்கே என்று தேடிப் போனால் பாத்ரூமுக்குள் முயலைப் போல குட்டியாகப் படுத்திருந்தது. அது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. வெள்ளை வெளேரென்று.

அதற்குப் பெயரே குட்டி என்று நிலைத்து விட்டது. ராஜாவைப் பராமரித்ததிலும் குட்டியைப் பராமரித்ததிலும் வேறுபாடுகள் பல உண்டு. குட்டி எப்பொழுதும் வீட்டிற்குள்தான் இருக்கும். மெத்தை மேலெல்லாம் தேவைப்பட்டால் ஏறும். அதுவும் கூட அதற்கு எப்பொழுதாவது தோன்றினால்தான். இந்தக் களேபரத்தில் நாங்கள் ராஜாவை மறந்திருந்தோம்.

குட்டியை அடிக்க முடியாது. எல்லாரையும் கடிக்க வரும். அப்பாவிடம் மட்டும் அதற்குப் பயம். அம்மாவிடமும் அடி வாங்கும். நான் அடிப்பதேயில்லை. தங்கைகள் சில சமயம் அடிப்பார்கள். அது நான் வேலைக்கு வந்து விட்ட பொழுது. ஆகையால் எனக்கும் குட்டிக்கும் அவ்வளவு தொடர்பில்லாமல் போயிற்று.

பிறகு கோயில்பட்டிக்குக் குடி பெயர்ந்தோம். ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். குட்டி என்னிடமும் பாசமாகத்தான் பழகும். அன்றும் அப்படித்தான் பழகியது. நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அது கீழே முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது.
ஏதோ சொன்னேன். பேசாமல் இருந்ததும் அதட்டலாக ஏதோ சொன்னேன். படக்கென்று தவ்வி என் கைவிரல் நுனியைக் கடித்து விட்டது. லேசாக சதை கிழிந்து விட்டது. நான் குய்யோ முய்யோ என்று கத்தவும் எல்லாரும் ஓடி வந்தார்கள்.

பாட்டி வெங்காயத்தை இடித்து விரலில் கட்டினார்கள். குட்டிக்கு ஊசி போட்டிருந்ததால் பிரச்சனையில்லை. இருந்தும் நானும் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டேன்.

அன்றைக்குத்தான் மீண்டும் ராஜா எங்கள் நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, September 02, 2005

பெண்ணைப் பெற்றவன்

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.

இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.

சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.

என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.

அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.

சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?

பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.

"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"

பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.

"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"

இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.

"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"

கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.

"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.

"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"

அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.

ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."

உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!

அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.

ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.

"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.

சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.

"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
........ பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய ந,£ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?

எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?

உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"

கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.

பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, August 30, 2005

எனக்குதான் புரியும்

காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை

நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை

வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை

மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 29, 2005

வாழைப்பழப் பாயாசம்

வாழைப்பழப் பாயாசம்

மிகவும் சுவையான இந்தப் பாயாசம் வெல்லத்தைக் கொண்டு செய்யப் படுவது. சீனி சேர்க்கப் படுவதில்லை. ஆகையால் தமிழ் மணம் மிகுந்த பாயாசம்.

பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - ஒன்றரை கோப்பை ( இனிப்புப் பிரியர்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளல்லாம் )
பால் - இரண்டு கோப்பை
பழுத்த வாழைப்பழம் - மூன்று அல்லது நான்கு ( பச்சைப் பழமாக இருக்க வேண்டும். மலைப்பழமும் போடலாம். ஆனால் இரண்டு மடங்காகப் போட வேண்டும். மலைப்பழம் சிறியதாக இருக்கும். நாட்டுப் பழமும் பூலாஞ்செண்டும் ஆகாது )
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு ( வெறும் வானலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் )

செய்முறை

1 . அடிகனமான பாத்திரத்தில் பாலையும் அரிசியையும் போட்டு வேக விடவும். குக்கரில் வேகவைத்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

2. அரிசி குழைய வெந்ததும் அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.

3. வெல்லமும் அரிசியும் நன்றாகக் குழைந்து வருகையில் (வெல்ல வாடை கமகமவென வரும்) வெட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்.

4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாகக் கிளறவும்.

5. எல்லாம் கலந்து பாயாசப் பதத்தில் வருகையில் ஏலக்காய்ப் பொடியும் முந்திரியும் திராட்சையும் கலக்கவும்.

6. கெட்டியான வாழைப் பழப் பாயாசம் தயார்.

இதையே மாம்பழத்தைக் கொண்டும் செய்யலாம். ஆனால் மல்கோவா போன்ற நாரில்லாத இனிப்பு மாம்பழங்களையே பயன்படுத்த வேண்டும். நன்கு கனிந்த பலாப்பழங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பலாப்பழத்தை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். வாழை விரைவில் வெந்து விடும். பலா சற்று நேரம் பிடிக்கும்.

செய்து உண்டு மகிழ்ந்து கருத்துச் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 25, 2005

போனது போனாய்

போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்!

Monday, August 22, 2005

சூர் கொன்ற ராவுத்தனே

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே

இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.

ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.

கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.

கண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?

வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.
மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.

ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.
இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?

முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.

சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.

கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.

இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.

மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.

Wednesday, August 10, 2005

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?

அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.

ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.
இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.

இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.

விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.

பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.

உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.

இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.

எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.

ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.

கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.

அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.

வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.

வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 08, 2005

திருவாசக இசைத்தட்டு - எனது பார்வையில்

திருவாசக இளையராஜாங்கம்

எல்லாரும் திருவாசகத்தை விமர்சித்துத் தெருவாசகமாக்கி விட்ட நிலையில் நான் மட்டும் சும்மா இருக்கலாமா? என் பங்குக்கு விமர்சித்திருக்கிறேன்.

இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால்
சிற்சில.


எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல
ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி
அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள்
திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும்
பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன்
பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய்
மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும்
வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.


இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான
இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச்
சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை
வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு
இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய
திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.


இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை
முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள்
எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப்
பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே
இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய
தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.


திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது.
வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding
என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி
அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு
வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.


தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில்
இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக்
கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில்
அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.
இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாகப் பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச்
சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக
இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.


பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும்
கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள்.
அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட
முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.


இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும்
அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு
ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள்
கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.


திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த
இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி
வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த
வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.


இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும்
பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே!
அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல்
நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு.


நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன்
இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு.
ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல்
இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும்
அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.


மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று
தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில்
ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச்
செய்திருப்பார்கள்.


ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக
இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது
கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும்
தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு
பாடல்.


"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப்
பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல்
மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.


நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக
இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று
பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி
ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.


உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன்
குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு
வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.


சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர்
முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன்.
அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.


இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும்
பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை
செய்கிறார்கள்.


பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றிலிருக்கும்
பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம்
அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு
இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே
தருகிறேன்.


புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணிமுற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்குஅற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறேஇந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க
வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.


சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன்
வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல்
இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?


இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி
பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால்
உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல்
மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.


காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை
விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி.
பிரச்சனைக்கு என்ன விளக்கம்?


அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு
மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம்.
அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும்
உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள
நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும்
போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செறிவு பற்றாமை.


இந்தப் பிரச்சனை எழுப்பியதும் வலைப்பூவில் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே
படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு
வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!"
கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.


மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும்
அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.


இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள்.
காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின்
மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!
நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன்.
மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே
செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து
முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே
இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.


அந்த அச்சமே திருவாதவூராருக்கும். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும்
செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி
நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும்
தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.


சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு
என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள்.
குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.


இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு
முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.


இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.

இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு
இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக்
கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின்
கருத்து அது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொல்லியிருக்கின்றார்.


இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ
என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச்
சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு
சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?


இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக்
கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத
ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.


தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும்
பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை.
அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.


அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற
முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச
முயன்றிருக்கின்றார்கள்.


இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி
என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும்
வேண்டும். இன்னமும் வேண்டும்.


சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.

இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா.
நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ்,
திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய
இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.


அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 04, 2005

கந்தனுக்கு அலங்காரம் - 1

கந்தனுக்கு அலங்காரம்

கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.

காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பாடலாக இடுகிறேன். எல்லாம் முருகன் செயல்.

காப்புச் செய்யுள்

அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.

அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?

அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.

அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.

அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.

இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!

கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.

இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.

உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.

ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

Wednesday, July 20, 2005

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

நாலு வருடங்களுக்கு முன்னாலே.......தன்னாலே ஒரு நண்பர் கொடுத்த புத்தகம்........பின்னாலே இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்று தெரிந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்.......அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்கவே மாட்டேன்.

தற்செயலாக நண்பர் ஒருவரிடமிருந்து படிப்பதற்காக வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் முதல் புத்தகம். அதைப் படித்து முடிக்கும் முன்னமே அதுவரை வந்திருந்த நான்கு புத்தகங்களையும் வாங்கி நானே படிக்கத் தொடங்கினேன். ஒன்றை முடித்ததும் அடுத்தது. இப்படி நான்கு புத்தகங்களையும் நான் படித்து முடித்திருக்கையில் என்னாலும் சிலருக்கு ஹாரி பாட்டர் பைத்தியம் பிடித்திருந்தது.

அடுத்த புத்தகம் எப்பொழுது வருமென்று காத்திருந்து விழுந்தடித்து வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் ஐந்தாவது புத்தகம். இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது ஆறாவது புத்தகமும் வந்திருக்கிறது.

ஆக கடந்த நான்கு ஆண்டுகளில் ஹாரிபாட்டரில் மூழ்கி முத்தெடுத்து அதை மற்றவர்களுக்கும் காட்டிய புண்ணியம் நிறையவே கிடைத்து விட்டது.

ஆறாவது புத்தகத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதிலிருந்தே அந்தப் புத்தகத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல Strand புத்தகக் கடையில் விசாரித்து முன்பதிவிற்கு பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தேன். பின்னே முதல் நாளே வாங்கிப் படிக்க வேண்டுமே.

Strand புத்தகக் கடையில் முன்பதிவிற்கு பணம் வாங்க மறுத்து விட்டார்கள். காரணம்? சென்ற முறை எல்லாரும் ஐந்தாம் புத்தகத்தை அறுநூற்றுச் சொச்சத்திற்கு விற்றுக் கொண்திருந்த பொழுது ஐநூற்றுச் சொச்சத்திற்கு விற்றார்கள் அவர்கள். இந்த முறையும் அப்படிச் செய்ய விலையைச் சொல்லவில்லை. பெரிய கடைகளில் எழுநூறு, எண்ணூறு என்று பல விலைகளில் இலவசப் பொருட்களோடு முன்பதிவைச் செய்து கொண்டிருந்தார்கள்.

Strand புத்தகக் கடையின் ஒரு மாதம் முன்னால் ஹாரி பாட்டர் பதிவு செய்தவர்களை அழைத்து ஒரு வினாடிவினா நிகழ்ச்சியும் நடத்தி மேலும் பிரபலப் படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான் எனது வேலைப்பளு கூடி கடைப்பக்கமே போக முடியாமல் இருந்தது. அவர்களும் அறுநூற்று எழுபது ரூபாய் என்று விலை நிர்ணயித்து முன்பதிவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹாரி பாட்டர் வெறி பிடித்து தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்ல முடியாமல் இருந்த பொழுது ஒரு நண்பர் உதவிக்கு வந்தார். அவரது நண்பரின் அலுவலகம் Premire புத்தகக் கடைக்கு மிக அருவில். அவரை அனுப்பி அங்கே முன்பதிவு செய்து ரசீதை வாங்கித் தந்தார். வாழ்க அந்த நண்பர்கள்.

புத்தக வெளியீட்டுக்கு முதல்நாள் சரியான தூக்கமில்லை. பாலும் கசந்ததடி. படுக்கை நொந்ததடி கதைதான். காலையிலேயே குளித்து எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் ரசீதைக் காட்டி புத்தகத்தை கையில் வாங்கியதும் ஒரு மகிழ்ச்சி. அடடா! எப்படிச் சொல்வது அதை.

ஆனால் அன்றைக்கும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பகல் பொழுதில் படிக்க முடியவில்லை. மாலையில் கொஞ்ச நேரம் படித்தால்....திடீரென நண்பர்கள் வந்து விட்டார்கள். அன்றைய பொழுது முடிந்தது.

ஞாயிற்றுக் கிழமை புதிதாக தாயாகியிருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயே மாலை வரை பொழுது போய் விட்டது. பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்சம் படித்தேன். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக பக்கத்திலிருந்த ஜீவன் பீமா நகரிலுள்ள தோசா ஸ்டாப் என்ற கடைக்குச் சென்று சாப்பிட்டோம். கிளம்பும் பொழுது மழை பிடித்துக் கொண்டது. மழை விட்டு வீட்டுக்குப் போய் கொஞ்சம் படிக்கையிலேயே அலுப்பில் கண்ணயர்ந்து போனேன்.

அலுவலகம் வந்தால் e-copy மெயில்களில் தவழத் தொடங்கியிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு வேலையைப் பார்த்தேன். அதற்குள் வலையில் விமர்சனங்களும் கதையில் வரும் ரகசிய விவரங்களும் வந்திருந்தன. நல்ல வேளையாக அவைகளை முழுமையாக படிக்கவில்லை. மீனாக்ஸ் அவரது வலைப்பூவில் பிறகு படிக்கிறேன் என்று பதிவிட்டேன். அதற்குள் டோண்டுவின் வலைப்பூவில் முதல் வரியிலேயே மிகப் பெரிய ரகசியத்தைப் போட்டுடைத்திருந்தார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் பெரும்பாலும் விவரம் தெரிந்து போனது. இரண்டு நாட்கள் என்பது அதிகம். என்னைப் போன்ற அபாக்யவாதிகளும் இருக்கிறார்களே. திங்கள் இரவு மூன்று முப்பதுக்குத் தூங்கினேன். செவ்வாய் இரவு (புதன் காலை) ஐந்து முப்பதுக்கு புத்தகத்தை முடித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...

புத்தகம் நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு திருப்பங்களை நான் எதிர் பார்த்திருந்தேன். அவைகள் அப்படியே பலித்திருந்தன. Half-blood Prince யாரென்ற எனது ஊகம் மிகச் சரியாகவே இருந்தது. அதேபோல் இறந்து போவார் என்று நான் நினைத்திருந்த பாத்திரமே இறந்து போனது. அதைத்தான் டோண்டு சொல்லியிருந்தாலும், எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிறையவே இருந்ததால், புத்தகத்தை விறுவிறுப்பாகவே படிக்க முடிந்தது.

முடிக்கும் பொழுது மனதில் ஒரு இறுக்கம் பரவுவது உண்மைதான். ஆனால் இப்பொழுது கதை மிகச் சரியான பாதையில் போவதாகத் தோன்றுகிறது. அடுத்த புத்தகமே கடைசி புத்தகம். இப்பொழுது பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. அடுத்த புத்தகத்தில் எப்படி முடிகிறது என்று பார்க்கலாம். இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஹாரி ஓம் பாட்டராய நமஹ. கதையில் வரும் Time Turner (காலத்தின் முன்னும் பின்னும் செல்ல வைக்கும் மிகச் சிறிய கருவி ) இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் போய் அடுத்த புத்தகத்தையும் படித்திருக்கலாம். எல்லாம் வல்ல ஹாரிப் பெருமான் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, July 11, 2005

என் கொங்கை நின் அன்பர்

என் கொங்கை நின் அன்பர்


கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!

வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?

வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.

திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.

எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.

சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.

ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.

உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.

நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!

இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.

நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.

உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.

நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.

"எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க"

இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?

சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.

"எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.

இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?

சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.

அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.

அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.

பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?

நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.

எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.

அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.

வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.

புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.

சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.

"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.

அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.

பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!

அன்புடன்,
கோ.இராகவன்