Sunday, January 15, 2006

டாவின்சி கிரெய்ல்

இந்த டாவின்சி கோடு புக்கப் படிச்சாலும் படிச்சேன். ஒரே குழப்பம். எத நம்புறது எத நம்பக்கூடாதுன்னே தெரியலை. ஆனா கத படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு. ரெண்டு மூனு மூச்சுகள்ல படிச்சு முடிச்சிட்டேன். (ஒரே மூச்சுல படிக்க முடியலை. நேரமில்லாமத்தான்.)

இப்ப இந்தக் கதையப் பத்தித் தோண்டித் துருவிப் படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் மாட்டுச்சு. அத உங்ககிட்டப் பகுந்துக்கனுமுன்னு விஷயத்தைச் சொன்ன வெப்சைட் சொன்னதால இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போச்சு.

கடைசி விருந்து (The Last Supper) அப்படீங்குற ஓவியத்த லியனார்டோ டாவின்சி வரைஞ்சிருக்காராம். (லியனார்டோன்னாலே அடுத்து டிக்காப்ரியோதான் வருது. எல்லாம் சினிமா பண்ற வேலை.) அந்தப் ஓவியத்துல ஏசுநாதர் தன்னோட சிஷ்யர்களோட கடைசியா விருந்து சாப்பிடுறத படமா போட்டிருக்காராம் டாவின்சி.

அதுல பயண்படுத்துன குவளை (grail) ரொம்பவே பிரபலமானது. புனிதமா கிருஸ்துவர்கள் நினைக்கிறதுதான் இந்தக் கிரெயில் குவளை.Indiana Jones படத்துல கண்டுபிடிக்கிறதா வருமே அந்தக் குவளைதான் இந்தக் குவளை.

டாவின்சி கோடு புத்தகம் பத்தி எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க. அது ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் உண்டுன்னு சொல்ற புத்தகம். அதுக்கு ஆதாரமாத்தான் டாவின்சியோட படங்களை ஆதாரமாக் காட்டுது. இன்னும் நெறைய விஷயங்களையும் சொல்லுது. புத்தகத்துல சொல்றது உண்மையோ பொய்யோ....ஆனா புத்தகத்தப் படிச்சப்புறம் ஏசுநாதர் மேல எனக்கு அன்பு கூடீருச்சுங்குறத ஒத்துக்கத்தான் வேணும்.

ஏசுநாதருடைய மனைவியின் பேரு மேரி மகதலின் (Mary Magdaline) அப்படீன்னு இந்தப் புத்தகம் சொல்லுது. அவங்களை ஒரு விபச்சாரின்னு தேவாலயங்கள் சொல்லுதாம். அவங்களோட புகழை மறைச்சு தேவாலயங்கள் புகழ் பெற அப்படிச் செஞ்சுட்டாங்கன்னு இந்தப் புத்தகம் சொல்லுது.

அப்படி மேரி மகதலினோட புகழ தேவாலயங்கள் மறைச்சாலும் ஒரு குழுவினர் அந்த ரகசியத்தைக் காப்பாத்தி இன்னமும் வெச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி ரகசியம் தெரிஞ்ச ஒருத்தர்தான் டாவின்சின்னு இந்தப் புத்தகம் சொல்லுது. தனக்குத் தெரிஞ்ச ரகசியத்த தன்னோட ஓவியங்களில் இலைமறை காயா வெச்சுட்டுப் போயிருக்காருன்னும் பலர் நம்புறாங்களாம்.

அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா கடைசி விருந்து ஓவியத்தைச் சொல்றாங்க. கடைசி விருந்து ஓவியத்துல ஏசுநாதர் நடுவுல இருக்க, மொத்தம் பதிமூனு பேரு இருப்பாங்க. ஏசுநாதரோட கடைசி விருந்துல கலந்துகிட்டவங்களோட எண்ணிக்கை பதிமூனாம். அதுனாலதான் 13ங்குற எண் கிருஸ்துவர்களுக்கு நல்லதில்லைன்னும் ஒரு நம்பிக்கையாம். கடைசி விருந்து படத்தைக் கீழ குடுத்திருக்கேன். ஒரு வாட்டி நல்லா பாத்துக்கோங்க.



ஆனால் டாவின்சி வரைஞ்ச கடைசி விருந்து ஓவியத்துல ஹோலி கிரெய்ல் குவளையே இல்லை. அப்ப கிரெயில்னா என்னன்னும் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்புது. விடையும் சொல்லுது. கிரெயில் அப்படீங்குறது ஏசுநாதரின் ரத்தத்தைத் தாங்கும் குவளை அல்ல. மாறாக ஏசுநாதரின் இரத்தத்தை வயிற்றில் சுமந்த மேரி மகதலின் அப்படீன்னு விளக்குது. ஏசுநாதருக்கு வலப்பக்கம் உக்காந்திருக்குறது ஆண் இல்லை. ஒரு பெண் அப்படீன்னும் இந்தப் புத்தகத்துல சொல்லீருக்கு. படத்த நானும் பாத்தேன். எனக்கும் அந்த உருவம் பொண்ணு மாதிரிதான் தெரியுது. குறிப்பா நெளிவு சுளிவுகள். இந்த ஓவியத்த லூவர் மியூசியத்துல நான் நேருலயே பாத்திருக்கேன். பெருசா....அப்பக் கூட இருந்த ஒரு நண்பன் ஏசுநாதர் பக்கத்துல இருக்குறது பொண்ணுன்னு சொன்னது சரியா மனசுல பதியல. ச்சே...தெரிஞ்சிருந்தா நல்லா பாத்திருப்பேனே. சரி. அடுத்த வாட்டி பாத்துக்கலாம். (எப்ப போகக் கெடைக்குதோ!)

எழுத்தாளர் டான் பிரவுன் (Dan Brown) இந்தப் புத்தகத்துல சொல்லீருக்குற கருத்துக்கு ஆதரவு இருக்குற அளவுக்கு எதிர்ப்பும் இருக்கு. அதே சமயத்துல அவரும் டாவின்சியோட குறிப்புகளைச் சரியா கவனிக்கலைன்னும் சொல்லிக்கிட்டு இருக்குது ஒரு கூட்டம். அவரால கண்டு பிடிக்க முடியாததை நாங்க கண்டுபிடிச்சிருக்கோமுன்னும் சொல்லிப் பெருமைப் பட்டுக்குறாங்க. அதுவும் கடைசி விருந்து ஓவியத்துல.

"அந்த ஓவியத்துல குவளை இல்லைன்னுதான டான் பிரவுன் சொல்றாரு. ஆனா எங்களுக்குக் குவளை தெரியுது. அத நிரூபிக்கிறோம்"னு மார் தட்டுது ஒரு கூட்டம்.

அந்த ஓவியத்த கம்ப்யூட்டருல போட்டு கசக்கிப் பிழிஞ்சி ஏதாவது தேருமான்னு தேடிப் பாத்திருக்காங்க. அவங்க கண்ணுல மாட்டீருக்கு ஒரு குவளை. அதத்தான் இவங்க ஹோலி கிரெயில் (புனிதக் குவளை)ன்னு சொல்றாங்க. கீழ இருக்குறது கம்ப்யூட்டர்ல புராசஸ் பண்ணுன படம். அதுல ஏசுநாதருக்கு வலது கோடீல இருக்குறவரு தலைக்கு மேல பாருங்க. ஒரு குவளை தெரியுதா? அதுதான் டாவின்சி சொல்ற ஹோலி கிரெயிலாம்.



அதத் தெளிவாக் காட்ட அந்தக் குவளையத் தவிர ஓவியத்துல இருக்குற எல்லாத்தையும் கருப்பு-வெள்ளைக்கு மாத்தீருக்காங்க. கீழ இருக்குற படத்தப் பாருங்க.



இப்ப இந்தப் படத்துல அந்த புனிதக் குவளை தெளிவாத் தெரியுதா? அப்படியே கொஞ்சம் மேல போய் உண்மையான ஓவியத்தைப் பாருங்க. உங்க கண்ணுக்குக் குவளை தெரியுமுன்னு இந்த இணையதளம் சொல்லுது.

ஆமா. என்னோட கண்ணுக்கும் தெரியுது. தெள்ளத் தெளிவா ஒரு குவளை. ஆனா அந்தத் தூணுக்குப் பின்னாடியிருக்குற ஒவ்வொரு தூண்லயும் ஏதோ மங்கலா தெரியுற மாதிரி இருக்கு. சரி. தெளிவாத் தெரியலையே.........அதுனால இந்தக் குவளை தெளிவாத் தெரியுதுன்னு விட்டுருவோம். ஆனா இன்னொரு கேள்வி தோணுதே. குவளையத் தெளிவாக் காட்டனுமுன்னு டாவின்சி முடிவு செஞ்சிருந்தா அத ஏன் தூண்ல காட்டனும். ஏசுநாதருக்கு முன்னாடியே காட்டீருக்கலாமே. என்னவோ ஒன்னுமே புரியலை. புத்தகம் படிக்க விறுவிறுப்பாப் போச்சு. அத வெச்சு நமக்கும் நல்லாப் பொழுது போகுது. இன்னும் இது மாதிரி விறுவிறுப்பான சமாச்சாரங்கள் இருந்தா சொல்லுங்க....

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 12, 2006

போகியிலேயே பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுன்னா பொங்கல் அன்னைக்குக் குடுப்பாங்க. ஆனா பாருங்க...தினமலர் பத்திரிகைல பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடி வர்ர போகிப் பண்டிகை அன்னைக்கே குடுத்துட்டாங்க.

அதாங்க. நம்ம வலைப்பூ முகவரியக் கொடுத்து, கூடவே கண்டு பிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசு மாதிரி இருக்குற நம்ம போட்டவப் போட்டு (நம்ம முழியோ ஒரு மாதிரி!) அறிமுகம் கொடுத்திருக்காங்க.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி தினமலர்.

வலைப்பூவத் தொடங்கிய பெறகு, அதுக்குத் தமிழ்மணம் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய வலைப்பூவ எல்லாருக்கும் எடுத்துட்டுப் போய் உதவி செஞ்சு...நட்சத்திரமாக்கி...இன்னும் பிரபலப்படுத்தி...என்ன சொல்றது. ரொம்ப நன்றி தமிழ்மணம். (இப்போ நந்தவனம்). ரொம்ப ரொம்ப நன்றி.

வலைப்பூவுல பல விஷயங்கள எழுதீருக்கேன். கத, கவித, கட்டுர, தமிழ் இலக்கியம், ஆன்மீகமுன்னு. கந்தர் அலங்காரங்கத்து விளக்கம் எழுதுனதுண்டு. திருப்பாவைக்கு அடுத்து. கதைகளும் ஒரு ஏழெட்டு இருக்குமே. ஆனா பாருங்க.......நமக்குப் பொழப்பக் கொடுத்து உப்புப் போட்ட பெங்களூருதான் இந்த வாட்டியும் பரிசக் குடுத்திருக்கு. பெங்களூரு ஒரு நன்றி.

என்னதான் எழுதுனாலும் யாருமே கண்டுக்காமப் போனா நல்லாவா இருக்கும்? நம்ம எழுத்துல இருக்க நல்லது கெட்டது நமக்குத் தெரிய வேண்டாமா? அதுக்கெல்லாம் நீங்க எல்லாரும் போட்ட பின்னூட்டங்களும் கருத்துகளும் பலவிதங்களில் உதவியிருக்கு. இப்பவும் என்னுடைய பேரு வந்திருக்குன்னு மொதல்ல ஃபோன் பண்ணிச் சொன்ன தி.ரா.ச, அப்புறம் வலைப்பூவுல அத மகிழ்ச்சியா வந்து சொன்ன மாயவரத்தான், சிங்.செயகுமார், துளசி கோபால், குமரன், அப்புறம் இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்ட வாழ்த்து போடப் போற உங்கள் எல்லாருக்கும் என்ன சொல்றது? நன்றிதான். ரொம்ப நன்றி நண்பர்களே!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு. நான் ஒரு வாட்டி நன்றி மறந்தேன். அது என் மனசுல இன்னும் இருக்குது. முள்ளாக் குத்துது. அதுனால இப்ப எல்லாருக்கும் நன்றி சொல்றேன். விட்டுப் போனவங்க. சொல்ல மறந்தவங்க. எல்லாருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

வழக்கமா நான் அன்புடன்னு முடிப்பேன். இந்த வாட்டி........

நன்றியுடன்,
கோ.இராகவன்

ஒன்னு அஞ்சு வாடு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கன்னட நண்பனோடையும் பெங்களூருலயே பொறந்து வளந்த தமிழ் நண்பனோடையும் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு பிரச்சனை வந்தது.

தமிழ் நண்பனுக்குத் தமிழ் சரியாப் படிக்க வராது. அவனுடைய அக்காவுக்கும் அப்படித்தான். அவங்க எனக்கும் அக்காதான். ஆனா அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா தமிழ் படிக்க வரும். தினமும் பேப்பர் வாங்கிப் படிப்பாங்க.

அன்னைக்கு வந்த பேப்பர்ல ஒரு சமையல் குறிப்பு. அது என்னன்னு அக்காவுக்குத் தெரிஞ்சே ஆகனும். ஆனா அப்பாவும் வீட்டுல இல்ல. அம்மாவோ வேலையா இருக்காங்க. நானும் மத்த ரெண்டு நண்பர்களும் உக்காந்து கதை பேசீட்டு இருந்தோம்.

அப்ப எங்கிட்ட வந்து அந்தப் பேப்பரக் குடுத்து அதப் படிக்கச் சொன்னாங்க. நானும் படிச்சுச் சொன்னேன். அப்ப கூட இருந்த கன்னட நண்பன் ஆர்வத்துல பேப்பரப் பாத்தான். பாத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா அதுல நம்பரெல்லாம் இங்கிலீஷ் நம்பரா இருந்தது. நெய்க்கு நேரா 1 கப்புன்னு எழுதீருந்தது. அப்படித்தான் மத்த பொருட்களுக்கும்.

இதுல ஆச்சரியப் பட என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? கன்னடத்துல எழுதும் போது நம்பரும் கன்னடத்துலயே எழுதுவாங்களாம். ஆனா நம்ம தமிழ்ப் பேப்பர்ல இங்கிலீஷ் நம்பர் இருக்கேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டான்.

அப்பப் பாத்து குண்டத் தூக்கிப் போட்டான் தமிழ் நண்பன். அதாவது கன்னட நண்பனுக்கு விளக்கம் சொல்றானாம். "தமிழ்ல நம்பரே கிடையாதே. அதுனாலதான் இங்கிலீஷ் நம்பரப் போடுறாங்க...."

அட ஆண்டவா! இப்பிடிக் கேக்க வேண்டிய நெலம எனக்கு வந்துருச்சேன்னு வருத்தப்பட்டேன். ரெண்டு பேருக்கும் குறுக்க விழுந்து தமிழ்லயும் நம்பர் இருக்குன்னு அழுத்திச் சொன்னேன். ஆனா கொடுமைக்கு ரெண்டு பேருமே நம்பலை. அப்படி இருந்துச்சுன்னா அத ஒடனே நிரூபிக்கனுமாம். எனக்குத் தமிழ் தெரியுமில்லையா...அதுனால நான் ஒடனே எழுதிக் காட்டனுமாம்.

அவமானம். அவமானம். ரொம்பவே அவமானம். தெரியாதுன்னு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. தெரியாததைத் தெரியாதுன்னுதான சொல்லனும். அதுல அவமானம் இல்லை. ஆனா தெரியாத நிலமை அவமானம்தானே. தமிழ் எழுத்துகள இவ்வளவு படிக்கிறோம். ஆனா எண்கள விட்டுட்டோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். சரிதான். இப்ப ஒரு கண்ணுல பாக்குறோமா? இல்லை. இங்கிலீஷ் நம்பர்கள் பயன்படுத்துறோமே. ஆனா நம்ம எண்கள ஏன் தொலச்சிட்டோம்?

வங்க நண்பர்கள் எனக்குண்டு. அவங்களும் நெறைய படிப்பாங்க. அவங்க புத்தகத்துல எல்லாமே வங்காளத்துல இருக்கும். பக்க எண். விலை. முகவரில வர்ர எண். எங்கெல்லாம் நம்ம 123 போடுறோமோ....அங்கயெல்லாம் நம்பர் இருக்கும். கன்னடத்துலயும் அப்படித்தான். பஸ்சு நம்பர் கூட இப்பல்லாம் கன்னடத்துல அங்கங்க தென்படுது. ஹிந்திக்காரங்களும் ஹிந்தி நம்பரத்தான பயன்படுத்துறாங்க. என்னவோ போங்க!

ஆனாலும் கொஞ்சம் லேசா சமாளிக்க முடிஞ்சது. அதுகூட எங்க பட்டிக்காட்டு வழக்கால. எல்லாம் பட்டிக்காட்டுல படிச்ச சில பேச்சு வழக்குகலால.

விளாத்திகுளம் பக்கத்துல இருக்குற புதூர்தான் எங்க மூதாதையார் ஊர். தூத்துக்குடீல நான் இருந்தப்ப் அடிக்கடி போயிருக்கேன். அப்புறமா பண்டிக்கைக்கும் விசேசத்துக்கும் மட்டுமுன்னு கொறஞ்சு போச்சு.

நான் போறப்பல்லாம் எனக்கு கருவாடு செஞ்சித் தருவாங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுனால போகும் போதெல்லாம் கேக்குறது வழக்கமாப் போச்சு. பட்டிக்காட்டுப் பக்குவம் பிரமாதமா இருக்கும். அதுனால என்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு கிண்டலாக் கூப்புடுவாங்க.

அதென்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு பாக்குறீங்களா! தமிழ்ல ஒன்னுங்குறதக் குறிக்க க-ன்னு எழுதுவாங்களாம். ரு போட்டா அது அஞ்சு. கரு-ன்னா ஒன்னு அஞ்சு தான. அப்ப ஒன்னு அஞ்சு வாடுன்னா கருவாடு. இப்பப் புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். (கரு-ன்னா பதினைஞ்சுதானன்னு இப்ப நீங்க கேக்கலாம். ஆனா அது இத்தன வெளக்குனப்புறந்தானே. வெளக்காமலேயே அவங்க சொன்னதால ஒன்னு அஞ்சு சரீன்னே வெச்சுக்கலாம்.)

இந்த ரெண்டு எழுத்தையும் சொல்லித் தமிழோட மானத்தையும் என்னோட மானத்தையும் கொஞ்சம் காப்பாத்துனேன்.

அந்தப் பட்டிக்காட்டுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது படிச்சுப் பரதேசமெல்லாம் பாத்த படைப்பாளிகளான நமக்குத் தெரியாமப் போச்சே!

நம்ம நண்பன் சண்முகம் பழைய தமிழ் எழுத்துகளை அவனோட வலைப்பூவுல போட்டிருக்கான். இங்க கண்டிப்பாப் போய்ப் பாருங்க. படிச்சுக்குங்க. தமிழ் எழுத்துகளைத் தெரிஞ்சுக்குங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 09, 2006

பகலில் வந்த பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 03, 2006

மயிலார் போன ஃபோரம்

இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, December 31, 2005

2006லாவது இலங்கைக்குப் போவோம்

வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2006 உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

புத்தாண்டில் ஒரு புதிய பதிவு போட எண்ணியிருந்த வேளையில் கிடைத்ததுதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பில் எழுத வேண்டுமென்று இன்றைக்குத் தோன்றவில்லை. நான்கைந்து ஆண்டுகளாகவே உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும் ஆசையைத்தான் இன்று எப்படியாவது எழுதியே தீருவது என்று முடிவு கட்டி உட்கார்ந்து விட்டேன்.

தலைப்பு என்ன? 2006லாவது இலங்கைக்குப் போவோம். இந்த ஆண்டாவது நாம் இலங்கைக்குப் போக வேண்டிய ஒரு கட்டாயத்தை எனது மனம் உணர்த்தியதை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தலைப்பிற்குப் போவதற்கு முன்னர் கொஞ்சம் பாகிஸ்தானைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நான் தவறாகப் பேசப் போகிறேன் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அது என்னுடைய தலைப்பிற்குப் பொருந்தாது.

பாகிஸ்தானுடன் நல்லுறவு என்று இந்தியா எவ்வளவு மெனக்கெடுகின்றது. நாளொரு ஊரும் பொழுதொரு இடமுமாக குண்டுகள் வெடித்தாலும் இந்தியர்கள் மாண்டாலும் பாகிஸ்தானுடன் எப்பாடு பட்டாவது நல்லுறவு வேண்டும் என்று எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றது இந்திய அரசாங்கம். பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நிலைப்பாடுகளையும் மீறி எடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள். பாதி காஷ்மீர் போய் விட்டது. நிறைய அகதிகள் காஷ்மீரிலிருந்து வந்தாகி விட்டது. இன்னும் பிரச்சனைகள். கார்கில் போர். பாராளுமன்றக் கட்டிடத் தாக்குதல். கோயிலில் தாக்குதல். அங்கு இங்கு என்று இன்று பெங்களூரிலும் விஞ்ஞானிகளின் மீது தாக்குதல். மென்பொருள் நிறுவனங்களின் மீது குறிவைப்பு என்று பல தகவல்கள் உள்ளன. இவைகளுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் பெயர்களும் அவைகளோடு சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களும் படங்களும் கூட பத்திரிகைகளில் வருகின்றன.

இவையனைத்தையும் மீறி இந்திய அரசாங்கம் நல்லுறவுக்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றது. பஸ் விடுகின்றார்கள். திரைப்படக் கலைஞர்கள் போகின்றார்கள். கிரிக்கெட் வீரர்களின் பயணம். போர்க்கைதிகள் விடுதலை. இன்னும் பல. இவைகளை நம்மில் பலரும் ஆதரித்து பாகிஸ்தானுடம் நல்லுறவு கண்டிப்பாக வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமிழர்களிலும் அப்படி விரும்புகின்றவர்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். சில அரசியல் தலைவர்களின் பிறந்த ஊர்களே இன்றைய பாகிஸ்தானில்தான். பாதி பஞ்சாப் அங்குதான் இருக்கின்றது. ஆக பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

இதையெல்லாம் சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி நம்மிடம் வேறொரு காரணம் இருக்கின்றது. போக வேண்டிய வேறொரு இடம் இருக்கின்றது. அது ஏன் யாருக்கும் நினைவிற்கு வரவில்லை? தமிழ் மொழியைத்தான் காரணமென்று நான் குறிப்பிடுகின்றேன். இலங்கைத் தீவைத்தான் போக வேண்டிய இடமென்று குறிப்பிடுகின்றேன்.

இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. ராஜீவ் கொலையைக் காரணம் சொல்லலாம். அது தவறுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட குற்றங்களைப் பாருங்கள். பாராளுமன்றத்திலேயே தாக்குதல் நடந்திருக்கின்றது. இதெற்கெல்லாம் இடம் கொடுக்கின்றவர்கள் யாரென்று தெரிந்தும் நாம் பாகிஸ்தான் போகவில்லையா? போக விரும்பவில்லையா?

அப்படியிருக்க இலங்கையின் மீது மட்டும் என்ன பாரபட்சம்? அங்கு அடிபடுகின்றவன் தமிழன் என்பதலா? இலங்கைப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எடுக்க வேண்டிய முயற்சிகளை மத்திய அரசு நிச்சயமாக இப்பொழுது எடுக்காது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் மத்திய அரசிற்குப் பாகிஸ்தானைத் தெரிந்த அளவிற்கு ஈழத்தைத் தெரியாது. மேலும் அங்குள்ள தமிழன் தீவிரவாதியாத் தெரிகின்றான். அவன் போராடவில்லையென்றால் மாண்டு போவான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரிகின்றது! மத்திய அரசுக்கு நேரடியாக இன்னொரு நாட்டு அரசாங்கத்தை எதிர்ப்பது தர்மசங்கடமாகவே இருக்கும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவுறுத்தலாம் அல்லவா? அதுவும் செய்ய முடியாதா? ஐயோ! அங்கே நமது சகோதரன் உயிருக்கும் மானத்திற்கும் போராடிக் கொண்டிருக்கின்றானே!

இந்தியாவிற்கு எத்தனையோ நட்டங்களை உண்டாக்கிய காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தும் அதற்காகப் போராடும் பாகிஸ்தானுக்கு நட்புறவும் கொடுத்து வருகின்ற மத்திய அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் தமிழனின் தேவையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு இருக்கின்றது? நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு அதைச் செய்வதில் உள்ள தயக்கமும் வெறுப்பும் தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.

அவ்வப்பொழுது வைகோ பேசினால் அவருக்கும் ஐநூறு நாட்கள் சிறைத்தண்டனை. வைகோவின் கருத்துகள் மூடத்தனமானது என்று கெக்கெலி. தன் வாயாலேயே தனக்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றார் என்று குத்தல் பேச்சுகள்.

இந்தத் தமிழக அரசியல் கட்சிகளின் தயக்கமும் வெறுப்பும் தமிழக மக்களின் மனப் போக்கையே பிரதிபலிக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. தமிழகத் தமிழனுக்கே என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.

நான் எந்த ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகப் பேசவில்லை. பேச விரும்பவுமில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கேட்கின்றேன். இந்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசியல்வாதிகளிடமும் தமிழர்களிடமும் கேட்கின்றேன். உங்கள் கவனத்தைக் கொஞ்சம் தெற்கே திருப்புங்கள். நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்தால் அங்கு பிரச்சனை தீரும் என்று சொல்ல நான் அறிவாளியோ அரசியல் நிபுணனோ இல்லை. ஆனால் என் தமிழர் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னிடம் உண்டு.

நாமெல்லாம் அந்த வகையில் சிந்திக்கத் துவங்கினால் அரசியல்வாதிகளும் சிந்திப்பார்கள் என்று நம்புவோம். அவர்களால் கொஞ்சமாவது உந்தப்பட்டு இந்திய அரசாங்கமும் சிந்திக்கும் என்று விரும்புவோம். நல்ல வழி புலப்படும் என்று நம்புவோம். 2006லாவது இலங்கைக்குப் போவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ்மண நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.


வரப்புயர்ந்தாலே நல்லன அனைத்தும் உயரும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வரப்பு உயர்வதற்கும் நீர் வளம் வேண்டுமே. நீரின்றி அமையாது உலகு அல்லவா! அந்த நீரும் கரைக்குட்பட்டு சிறந்து செழிக்க வேண்டும். அதற்கும் ஒரு படம்.


அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 30, 2005

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

அவசர அவசரமாகப் பதிவு போட வேண்டியதாப் போச்சு. அதான் நம்ம குமரன் இப்படி ஒரு பதிவு போட்டாரு, அதுக்குப் பின்னூட்டம் கூடிப் போச்சு. அதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டம் எழுதுனா ரொம்ப இருக்கு....சரி பேசாம ஒரு பதிவாப் போட்டுரலாமுன்னு போட்டுட்டேன். படிச்சுட்டு சொல்லுங்க.

// சிவனுக்கு மூத்தவள் என்பதையும் a > b; b > c அதனால் a > c சூத்திரத்துக்குள் அடக்கலாமா தெரியவில்லை. //

குமரன், சூத்திரத்துக்குள் அடங்குகின்றவனா சூத்திரதாரி? இப்படிச் சூத்திரம் போட்டு இறைவனை முடிவு செய்ய முடியுமானால் விஞ்ஞானத்தால் இறைவனை எப்பொழுதோ நிரூபித்திருக்கலாம். ஆனால் இந்த அறிவை விட இறைவனை அறிய மெய்யறிவே தேவை. அதையும் அவந்தான் தர வேண்டும். தந்திருந்தாலும் நமக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது.

சமயங்கள் ஆறும் தனித்தனியாக எழுந்தவையே. ஆனால் இந்த ஆறில் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. சைவம், சாக்தம் கௌமாரம் ஆகிய மூன்றும் எனக்குத் தெரிந்த பழம் இலக்கியங்களில் இருந்தே வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, சங்க இலக்கியங்களி பார்த்தால் இதற்குச் சான்று கிட்டும். காணாபத்தியத்தைப் பழைய நூல்களில் காணவேயில்லை.

ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுந்து பிறகு ஒன்றானவை. அப்பொழுதுதான் இந்த உறவு முறைகள் உண்டாயின. ஆதித் தமிழ் மதத்தில் முருகக் கடவுளுக்கும் வள்ளிக்குமே தொடர்பில்லை என்று சொல்லவும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பிறகு அந்த இரண்டும் தமிழர் கலப்பால் இணைந்தன. தெய்வயானை ஆரியக் கலப்பில் இணைந்தார். இப்படி செறிவூட்டப் பட்டுக்கொண்டே இருந்தன. இது சாதகங்கள் மட்டுமின்றி பாதகங்களையும் உண்டாக்கியது உண்மைதான். ஆகையால்தான் ஆதி நூல்களைப் பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டுமே புகழ்ந்திருக்கும்.

பின்னாளில் செறிவூட்டப்பட்ட காலத்தில்தான் யார் பெரியவர் என்ற வீண் விவாதங்கள் நடை பெற்றன. சிவனே பெரியவர் என்றோ திருமாலே பெரியவர் என்றோ யாரேனும் வாதிட்டிருந்தால் அவர்கள் உண்மையிலேயே இறையருளைப் பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.

மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்று சொன்ன அருணகிரிதான் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" என்று குழப்பிமில்லாமல் கூறியிருக்கின்றார். கந்தரநுபூதியில் ஆங்காங்கு இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்". அதாவது அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் மெய்ஞான தெய்வத்தைக் குறிகளைக் குறியாது குறித்து அறியும் மெய்யறிவை வேல் (ஞானத்தின் வடிவம்) தர வேண்டும் என்பதே. ஆழப் போனவர் கண்டது இதுதான்.

அதையும் முழுதாகச் சொல்ல வந்து சொல்ல முடியாமல் முடியவில்லை என்று முக்கி விடுகின்றார் அருணகிரி. "அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" கண்டவர் விண்டிலர் என்பது உறுதியாகின்றது.

உண்மையான இந்திய நாட்டு மதவியல் கோட்பாடுகளின் படி நூறு பேரைச் சொன்னாலும் நூறு விதமாய் வணங்கினாலும் நூறூ இடங்களுக்குப் போனாலும் எல்லாம் ஒன்றே. ஒன்றே. ஒன்றே. அதை மறுத்து உரைப்பவரை ஏற்பது கடினம்.

சரி. அபிராமி பட்டருக்கு வருவோம்.
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

இது அம்பிகையைப் பற்றிச் சொல்லியது. பொதுவாக எந்தச் செய்யுளுக்கும் பொருள் கொள்ளும் பொழுது நேரடியாகப் பொருள் கொள்வது உண்டு. கடலையைப் பார்த்து கடலை உருண்டை என்று சொல்வது போல. உடைத்துப் பார்த்தால் உள்ளே பருப்பிருக்கும். உள்ளே இருப்பது பருப்பா வெறுப்பா என்பது உடைத்தால்தானே தெரியும். ஆகையால் சொற்களை முறையாகப் பகுத்துப் பொருள் கொள்ள முயல வேண்டும்.

அப்படி நானும் முயன்றதாக நம்பிக் கொண்ட பொருளை இப்பொழுது விளக்குகின்றேன்.

நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆகையால் கெட்டவனை விட நல்லவன் குறைந்தவன் என்று பொருள் கொள்ள முடியுமா? இது தனி. அது தனி. இந்த முறையைத்தான் மேற்கூறிய அபிராமி பட்டரின் வரிகளுக்கும் கொள்ள வேண்டும்.

ஆதிநாதன் சிவபெருமான். ஆகையால் அது முன்னது. அந்த முன்னதுக்கும் முன்னது முன்னதாகத்தானே இருக்க வேண்டும். வீரனை வீரனே வெல்ல முடியும். ஆக சிவத்தைச் சிவமே வெல்லும். அப்படி முந்தி வெல்வது சிவசக்தியே. அதுதான் கறைகண்டனுக்கு மூத்தவளே.

பின்னைப் புதுமைக்கும் புதுமை என்பார்கள் அல்லவா. அதுதான் இங்கும். முன்னைக்கும் முன்னை என்றால் கிழவியா? இல்லை என்றும் குமரிதான் என்று சொல்லத்தான் மூவா முகுந்தற்கு இளையவளேன்னு அபிராமி பட்டர் சொல்லியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

இதில் முன்னைக்கு முன்னை. பின்னைக்குப் பின்னை என்றும் பொருள் கொள்ளலாம். ஐ என்றால் கடவுள். முன்னை என்றா முதற் கடவுள். முதற் கடவுளுக்கும் முதற் கடவுள். பின்னைக்குப் பின்னை...பின்னால் வந்த கடவுளுக்கும் பின்னால் என்றும் புதுமையாக இருப்பது.

சரிதானா நண்பர்களே!

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, December 14, 2005

பெங்களூர் பெயர்க்காரணம்

பெங்களூர் இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெயர் பெற்றுள்ள ஊர். உச்சரிப்பதற்கு கொஞ்சம் புதுமையான பெயரும் கூட. ஆனால் இதன் உண்மையான பெயர் என்ன?

இப்பொழுது அந்த உண்மையான பெயரைத் தேடி எடுத்துதான் பெங்களூருக்குச் சூட்டப் போகின்றார்களாம். ஆம். பெங்களூரு என்ற பெயரைச் சூட்டப் போகின்றார்களாம்.

சரி. அது அரசியல். நம்மூரிலும் வடக்கிலும் கேரளாவிலும் நடந்ததுதானே. கர்நாடகா மட்டும் விதிவிலக்கா என்ன! ஆகையால் அந்த விஷயங்களை விட்டு விட்டு இந்தப் பெயரின் மூலகாரணத்தைப் பார்ப்போமா!

பெங்களூரு என்பதை விட பெந்தகாளூரு என்பதே மிகச்சரியான பழைய பெயர். தமிழில் வகரம் வரும் இடங்களில் பகரம் (ba) போட்டு விட்டால் அது கன்னடமாகி விடும். பெரும்பாலான சமயங்களில் இது நடக்கும். வா என்றால் பா. வந்து என்றால் பந்து. வண்டி என்றால் பண்டி. அது போலத்தான் வெந்த என்றால் பெந்த.

பெந்த என்றால் வெந்ததைக் குறிக்கும். காளு என்றால் பயறு. பெந்த காளு என்றால் வெந்த பயறு.

கெம்ப்பே கௌடா என்பவர்தான் பெங்களூரின் தந்தை. அதாவது சிறுசிறு ஊர்களைச் சேர்த்துக் கொஞ்சம் பெரிய ஊராக்கி ஆண்டவர். பெரிய கோட்டை என்று எதுவும் கட்டி விடவில்லை.

எல்லையில் மண்சுவர்களை பெரிதாக எழுப்பிப் பாதுகாப்புத் தூண்களையும் நிறுவியிருக்கின்றார். அங்கு ஆட்கள் காவலுக்கு நிற்பார்களாம். இந்து நடந்தது 1537ல். அதற்குப் பிறகு நூற்றுச் சொச்ச வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் பிஜாப்பூர் சுல்தான்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றது.

ஆனால் பிஜாப்பூரில் உட்கார்ந்து கொண்டு பெங்களூரைச் சமாளிக்க முடியவில்லை. (இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.)
எதற்கு வம்பென்று பிஜாப்பூர் சுல்தான் பெங்களூரை மைசூர் மகாராஜாவிற்கு குத்தகைக்கு விட்டு விட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திப்பு சுல்தான், ஆங்கிலேயர் எனப் பல கைகள் மாறி இன்றைக்கு இந்த அளவிற்குப் புகழோடு இருக்கின்றது.

சரி. நாம் பெயர்க் காரணத்திற்கே வரவில்லை. தனக்கென்று ஒரு சிறிய நாட்டை உருவாக்கிக் கொண்டிருந்த கெம்ப்பே கௌடா இன்றைய பெங்களூரின் அன்றைய பகுதிக்கு வந்த பொழுது அங்கிருந்தவர்கள் அவருக்குச் சாப்பிட வேகவைத்த பயறுகளைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதாவது மொச்சைப் பயறு. பெங்களூரில் மொச்சை என்றால் எல்லாருக்கும் இச்சை. அந்த அளவிற்கு விரும்பப் படுகிறது. உப்புமாவிலும், சோற்றிலும், அனைத்திலும் கலந்து உண்ண விரும்புவார்கள். கன்னடத்தில் அவரேக்காயி என்பார்கள். இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். அப்படிப் பிதுக்கி எடுத்த தோலை வீட்டு வாசலில் போட்டு விடுவார்கள். அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.

அப்படிச் சாப்பிட்ட மொச்சை நன்றாக வெந்திருந்ததால் அந்த இடத்திற்கு பெந்தகாளூரு என்று பெயரிட்டார் கெம்ப்பே கௌடா. பிறகு அங்கே இருப்பவர்களுக்குக் காவலாக இருந்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.

அந்த பெந்தகாளூருதான் மருவி இன்று பெங்களூர் என்று வழங்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பேங்களூர். ஒவ்வொரு மாநிலமாக பெயர்கள் மாறி வருகின்ற வேளையில் பெங்களூர் அரசியல்வாதிகள் மட்டும் சும்மாயிருக்கலாமா? மண்ணின் மணம் வீசும் பெயர் இருக்க வேண்டும் என்று பெங்களூரு என்று பெயரை மாற்றுகின்றார்கள்.

அதற்கு வழக்கம் போல பலர் எதிர்த்தும் பாராட்டியும் கருத்துகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் பேசிய வரையில் என்னுடைய கன்னட நண்பர்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தில் வருத்தத்தை விட மகிழ்ச்சியே மேலோங்கியிருந்தது தெரிந்தது. எல்லாம் மொழி செய்யும் வேலைதானே.

வடக்கத்தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இந்தப் பெயர் மாற்றத்தை மறைமுகமாகக் கிண்டலடித்தாலும் மும்பை முகவரியில் பாம்பே என்று எழுதாமல் மும்பை என்றே குறிப்பிடுகிறது. நம்ம கதை நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நமது கன்னட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் பெங்களூரின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 09, 2005

பழம் தின்னு கொட்டை போட்டவன்

பழம் தின்னு கொட்டை போட்டவன்

கீழ்க்கண்ட பதிவில் தருமி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். பாண்டியனுக்கு மட்டுந்தான் ஐயம் வரவேண்டுமா? தருமிக்கு வரக்கூடாதா? வந்து விட்டதே!
தருமிக்கு வந்த சந்தேகம்

இந்தப் பழமொழி மிகவும் பிரபலம். யாரைக் கேட்டாலும் ஒரு முறையாவது சொல்லியிருப்பார்கள். அந்த அளவிற்குப் பிரபலம். ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்ன? யாரைக் கேட்டாலும் முழிப்பார்கள். ஆனால் பாருங்கள். நமது நண்பர் குமரன் அழகான ஒரு தமிழ்ப் பாடலைத் தேடி நமக்காகத் தந்து விளங்காததை விளங்க வைத்திருக்கின்றார். அந்தப் பாடல் கீழே இருக்கிறது.

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்

ஆதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? சிவபெருமானைத்தான். அனாதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? முருகப் பெருமானைத்தான்.

ஆதிநாதன் என்றால் அவனே அனைத்திற்கும் ஆதி. அதாவது தொடக்கம். அப்படி ஆதியாக நிற்பவன் என்கின்ற விரிசடைக்கடவுளே அனைவருக்கும் மூத்தவர் அல்லவா!

அனாதிநாதனுக்கு வருவோம். ஆதி என்றாலே ஒரு தொடக்கம் இருக்கிறது அல்லவா. ஆனால் இறைவன் அப்படியா? தொடக்கமும் முடிவும் உள்ளவனா இறைவன்? அனாதி என்றால் தொடக்கம் இல்லாதவன். தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்க வேண்டுமே!

பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. ஆனால் முருகப் பெருமான் பிறக்கவில்லை. உதித்தார். "ஒரு திரு முருகன் உதித்தனன்." உதிப்பது என்பது ஏற்கனவே இருப்பது. காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கின்றது. அந்தச் சூரியன் நேற்றும் இருந்தது. அருணகிரியும் இதைத்தான் "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார்.

அப்படியென்றால் முருகப்பெருமான் சிவனை விடப் பெரியவரா? அப்படியெல்லாம் நாம் முடிவு கட்ட முடியாது. ஏன் தெரியுமா? எல்லாம் ஒன்றுதான். தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர். இதற்கும் தமிழ் விளக்கம் சொல்லியிருக்கிறது.

சிவனைப் பார்வதியோடு சேர்த்துப் புகழ்வது எங்கும் நடக்கும். சிவன் பகல் என்றால் பார்வதி இரவு. அப்படியானால் முருகன்? பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட இதமான மாலை நேரம் போலவாம்.

"ஞாலமேவுறும் பகலொடு இரவுக்கும் நடுவாய் மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்"

ஆக எல்லாம் ஒன்றுதான். இங்கே ஆதிதான் அனாதி. அனாதிதான் ஆதி. மொத்தத்தில் எல்லாம் ஒன்றுதான். இறைவன் ஆதியும் அனாதியுமாய் இருப்பவன் என்று இதனால்தான் சொல்கின்றோம்.

அப்படி மூத்தவனை (இறைவனை) முழுதும் அறிந்தவனை (மூத்தவன் என்றால் நடந்தது நடப்பது நடக்கப் போவது எல்லாம் அறிந்தவந்தானே) பக்தியுடன் கொண்டாட வேண்டும்.

அவன் கூத்தன். ஏன் தெரியுமா? உலகமே நாடகமேடை. அந்த நாடக மேடையில் நாளும் ஒரு நாடகம். பொழுதும் ஒரு காட்சி. அத்தனையையும் ஆட்டி வைக்கின்ற கழைக் கூத்தாடிதான் இறைவன்.

அவனைக் கொண்டாடி ஞானப் பழம் திங்க வேண்டுமாம். ஞானப்பழம் என்றால் முருகன். ஞானம் என்றால் அறிவு. எல்லா அறிவும் அறிவல்ல சான்றோர்க்கு மெய்யான அறிவே அறிவு. அதென்ன மெய்யறிவு? பொய்யான அறிவு என்றும் ஒன்று உண்டோ!

கண்டிப்பாக உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அணுவின் பகுப்பு வடிவம் என்று முதலில் வந்தது. நிரூபிக்கவும் பட்டது. அதை நம்பினோம். பின்னால் அதை விடச் சரியான இன்னொரு வடிவம் வந்து நிரூபிக்கப் பட்டது. அதையும் நம்பினோம். இப்பொழுது முதலில் நம்பியது பொய்யானது. ஆனால் முதலில் நாம் அதை நம்பும் பொழுது உண்மையாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே இப்பொழுது பொய்யானது. இந்த அறிவினைத்தான் மெய்யறிவு என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் மெய்யறிவு என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில் கிடைக்கும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கிடைத்திருக்கிறது. புத்தருக்கு மரத்தடியில். முகமது நபிக்கு இறையருளில். அருணகிரிக்கு திருவண்ணாமலையில். அப்பருக்கு வயிற்று வலியில். ஆகத் தெரிவதென்ன? இறையருள் இன்றி மெய்யறிவும் கிட்டாது.

அதைத் தேடிச் சென்றால் கண்டிப்பாகக் கிடைக்கும். தண்ணீருக்குள் தவிக்கின்றவன் மூச்சுக்கு எப்படித் தவிப்பானோ அப்படித் தவித்தால் மெய்யறிவு கிட்டும். அதுதான் ஞானப் பழம்.

பொதுவாக பொன்னகைகளையே மணிகளையே அணிவது வழக்கம். ஆனால் உருத்திராட்சம் அணிவது சிவனடியார் வழக்கம். வெறும் கொட்டையைக் கழுத்தில் கட்டினால் சரியா என்று கேட்கலாம். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கொட்டைக்குள்தான் பெரிய மரம் ஒளிந்திருக்கின்றது. அது போல இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத காற்றை விசிறியைக் கொண்டு உணர்கின்றோம் அல்லவா. அதுபோல எங்கும் நிறைந்த இறைவனை உருத்திராட்சக் கொட்டையில் காண்பது. உண்மையிலே இறைவனை உணர்ந்தவருக்கு உருத்திராட்சமும் ஒன்றே. இலந்தைக் கொட்டையும் ஒன்றே.

இப்பொழுது புரிந்திருக்கும் பழம் தின்று கொட்டை போடுவது என்றால் என்னவென்று! இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 06, 2005

பெங்களூரில் ஒரு பெர்ஷியா

பெர்ஷியா என்ற பெயரை எல்லாரும் பாடத்தில் படித்திருப்போம். நானும்தான். ஆனால் எப்பொழுது என் மனதில் அழுத்தமாக பதிந்தது தெரியுமா? நான் அஜந்தா-எல்லோரா சுற்றுலா சென்றிருந்த பொழுதுதான். 2003ல் அஜந்தாவிற்கும் எல்லோராவிற்கும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அஜந்தாவின் குகை ஓவியங்களைப் பார்த்து மயங்கியிருந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் அழுத்தமாக பதிந்தது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அந்த ஓவியங்கள், உலகின் இன்றைய வளமான பல பகுதிகளில் நாகரீகம் என்பது தொடங்கும் முன்பே வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பல நிறத்தில் இருந்தன. அதில் வண்ணமயமான அழகான பூக்குவியல் ஓவியமும் ஒன்று. கூரை மேல் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் பயன்படுத்தியிருந்த ஊதா நிறம் பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருவித பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். அவ்வளவு தொலைவிலிருந்து வந்ததாலோ என்னவோ, அந்த ஊதா நிறம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சரியான இடத்தில் பூசப்பட்டு மற்ற நிறங்களை மங்கடிக்கச் செய்திருந்தது. அப்படிப் பயன்படுத்திய அந்த பழைய இந்தியத் துறவிகளின் அறிவை வியந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் மனதில் பதிந்தது. பிற்பாடு அந்த ஊதா நிறத்தை பல பழைய தமிழக ஓவியங்களில் எக்கச்சக்கமாக பார்த்திருக்கிறேன் என்பதும் உண்மை. குறிப்பாக தஞ்சையில் பெரிய கோயில் நந்தியின் கூரையில் இருக்கும் ஓவியம்.

அதற்குப் பிறகு பெர்ஷியா மீண்டும் என் காதில் விழுந்தது அலெக்சாண்டர் படம் பார்க்கும் பொழுதுதான். கோலின் ·பேரல் நடித்த அந்தப் படத்தில் அலெக்சாண்டர் பெர்ஷியாவை வென்ற முறையைக் காட்டுவார்கள்.

அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் மீண்டும் பெர்ஷியா என்னை அழைத்தது. அதுவும் பெங்களூரிலேயே. சு·பி தத்துவங்கள் என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது குறித்து ஆழமாக எதுவும் தெரியாவிட்டாலும் பெயரளவில் கேட்டதுண்டு. ஆனால் பெங்களூரில் ஒரு சு·பி உண்டு. இது ஆன்மீக சு·பி அல்ல. சாப்பாட்டு சு·பி.

ஏர்போர்ட் ரோடிற்கு அருகில் உள்ள முருகேஷ் பாளையாவில் உள்ள விண்ட் டனல் ரோடில் (wind tunnel road) உள்ளது. சு·பி என்று பெரிய அளவில் வாயிலில் எழுதி வைத்திருப்பார்கள். உள்ளே போனால் பெர்ஷியாவை முடிந்த வரைக்கும் நமக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பெர்ஷிய கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் வைத்துள்ளார்கள். உள்ளே நுழைந்ததுமே நான்கு பெரிய ஹ¥க்காக்கள் நம்மை வரவேற்கின்றன. அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு அங்குள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். நானும் சரி. என்னுடைய நண்பனும் சரி. இருவருவே புகைப்பிடிப்பதில்லை. ஆகையால் வந்த வேலையைப் பார்க்கப் போனோம்.

சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் பெர்ஷியப் பாரம்பரியப்படியே இருந்தன. உட்காருவதற்கு உயரமான மெத்தென்ற திண்டுகள். சரியாக உட்காராவிட்டால் கீழே விழுந்து விடுவோம். அதாவது மூட்டை மேலே உட்காருவது போல இருக்கும். ஆனால் இது கலையலங்கார மூட்டை. அந்த உட்காரும் மூட்டையை அங்கு விற்கிறார்கள். ஏழாயிரம் ரூயாய்க்கு. மறுபேச்சு பேசாமல் சாப்பிட உட்கார்ந்தோம்.

கையில் குடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் முதலில் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக பெயருக்குக் கீழே குறிப்பும் கொடுத்திருந்தார்கள். வசதியாகப் போனது. வழக்கமாக சூப்பில்தான் தொடங்குவோம். ஆனால் இந்த முறை சூப்பைத் தவிர்த்தோம். ஏனென்றால் சூப் பார்லியில் செய்யப்பட்டிருந்தது. பிறகு ஒழுங்காக சாப்பிட முடியாது என்பதால் அப்படி.

கபாப் என்பது பெர்ஷியர்கள் விரும்பி உண்ணும் பக்குவம் என்று நினைக்கிறேன். எந்தப் பெயரைப் பார்த்தாலும் கபாப் என்றே முடிந்தது. கபாப் என்றாலே நெருப்பில் வாட்டுவதுதானே. ஆனால் வட இந்திய கபாப்களுக்கும் பெர்ஷிய கபாபிற்கும் வேறுபாடு உண்டு. மசாலா மிகக்குறைவு. கபாப் மெத்தென்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு முழம் நீளத்தில் இருக்கிறது கபாப்.

யோயே (Joojeh) கபாப் என்பது கோழியை வாட்டியது. யோயே என்பது ஒருவகையாக பிராய்லர் கோழி. இளங்கோழியின் கறித்துண்டுகளை நெருப்பிலேயே வாட்டி வேகவைத்துத் தருவார்கள். பொன்னிறமாக சுவையாக இருக்கும்.

அப்பொழுது பரிமாறுகிறவர் வந்து, "சார்! தூக் (doogh) என்ற பெர்ஷியன் பானம் இருக்கிறது. முயற்சி செய்கின்றீர்களா?" என்று கேட்டார். அது என்னவென்று கேட்டோம். கெட்டி மோரில் மிண்ட்டும் (புதினா பொடி) உப்பும் கலந்ததுதான் தூக். "அட! கடஞ்ச மோரு" என்று நாங்கள் கொண்டு வரச் சொன்னோம்.

அதோடு சொன்ன இன்னொரு கபாப் kabab-e-chenjeh. தமிழில் சொன்னால் சென்யே கபாப். சென்யே என்றால் எலும்பில்லாத கறி. அதாவது தனிக்கறி. தனிக்கறியை நெருப்பில் வாட்டி காய்கறிகளோடு தருவார்கள். இதுவும் முழ நீளம்தான். ஆட்டிறைச்சியை நெருப்பில் வாட்டும் பொழுது பெரிய தக்காளி ஒன்றையும் வாட்டுகிறார்கள். அந்த வாட்டப்பட்ட தக்காளியோடும் கொஞ்சம் காரட்டோடும் சென்யே கபாப் பரிமாறப்பட்டது. மிகவும் சுவையாக இருந்தது. சில சமயங்களில் அரக்க பறக்க அள்ளிப் போட்டுக் கொள்வோம். அப்படி இல்லாமல் ஆற அமர சாப்பிட வேண்டியது இந்தக் கபாப்.

அதே நேரத்தில் தூக் வந்தது. குடித்தால் ஒரே உப்பு. புதினாத்தூள் வேறு போடப்பட்டிருந்தது. கடைஞ்ச மோரு என்று எண்ணிய மனம் உடைஞ்சு போனது. அப்படி இப்படி பாதி குடித்தோம். ஆனால் முடியவில்லை. தூகை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுச் சுவையான சென்யே கபாபை இரண்டு கைகள் பார்த்தோம்.

மெயின் கோர்ஸ் என்று செலோ (chelo) கபாபைக் கேட்டோம். என்னடா மீண்டும் கபாபா என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்தப் பெயரின் விளக்கம் சொல்கிறேன் முதலில். செலோ என்றால் வேகவைக்கப்பட்ட அரிசியும் இறைச்சியும். பாசுமதி அரிசியை குங்குமப் பூவோடு சேர்த்து மெத்தென்று வேகைவைத்து அதை ஒரு சட்டியில் போட்டு கொண்டு வந்தார்கள். சிறிய எலுமிச்சை அளவு வெண்ணெய் அந்தச் சூடான சோற்றில் லேசாக இளகிக் கொண்டிருந்தது. சோறு சரி. கறி? இன்னொரு முழ நீள கபாப். ஆட்டிறைச்சிதான். ஆனால் மெத்தென்று. மெத்துமெத்தென்று. வெளியே சாப்பிட்டதால் ஸ்பூனும் ·போர்க்கும் வைத்துச் சாப்பிட்டோம். அந்தக் கபாபைச் சோற்றோடு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு கரண்டி கறியும் ஒரு கரண்டி சோறுமாக மெதுவாக சாப்பிட்டோம். குங்குமப்பூவும் உருகிய வெண்ணெய்யும் கலந்த நெய்ச்சோற்றைக் கறியோடு சாப்பிட கசக்குமா என்ன!

இந்த செலோ கபாப் என்பது பெர்ஷியாவின் தேசிய உணவு என்ற அளவிற்கு பிரபலம். தமிழர்களுக்கு சாம்பாரைப் போல. மலையாளிகளுக்கு புட்டைப் போல. ஆந்திரர்களுக்கு ஆவக்காயைப் போல. பஞ்சாபிகளுக்கு சர்சோங்கி சாக் போல. பெர்ஷியர்களுக்கு செலோ கபாப். பெர்ஷிய அடுக்களையில் கபாப்களின் அரசி என்று செலோ கபாப் அழைக்கப்படுகிறது.

பெர்ஷிய உணவுகள் பெரும்பாலும் வாட்டப்பட்ட இறைச்சியாக இருக்கின்றன. அத்தோடு அரிசி அல்லது கோதுமையைச் சாப்பிடுகிறார்கள். நாம் வைப்பது போல அவர்களும் ஒருவகையான கறிக்குழம்பு செய்கின்றார்கள். கொஞ்சம் புளிப்புச் சுவையோடு இருக்கிறது. அதற்கு அவர்கள் புளி பயன்படுத்துவதில்லை. வேறொரு காயைப் பொடி செய்து பயன்படுத்துகின்றார்கள். இன்னொரு புளிப்பூட்டி என்ன தெரியுமா? காய்ந்த முழு எலுமிச்சம்பழம். குழம்பில் முழு எலுமிச்சம்பழம் உருண்டையாக இருக்கும். அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். இந்தியர்கள் கறிக்குழம்புகளில் பருப்பு பயன்படுத்துவதில்லை. ஆனால் பெர்ஷியர்கள் பயன்படுத்துகிறார்கள். கடலைப்பருப்பைப் போட்டு கறிக்குழம்பு வைக்கின்றார்கள்.

சு·பி அங்காடியில் பெர்ஷிய நாட்டு பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்த்தோம். உட்காரும் மூட்டையின் விலை ஏழாயிரம் ரூபாய் என்று பார்த்ததும் இங்குதான். அங்கு அழகான தரை விரிப்புகள் நிறைய இருந்தன. கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாயிலிருந்து இருக்கிறது. ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் ஒரு விரிப்பு. அப்படியென்ன அதிலென்று வாய்விட்டே கேட்டு விட்டேன். முழுக்க முழுக்க கையாலேயே நெய்யப்பட்ட அந்த விரிப்பின் வயது ஐம்பதாம். அட!

நிறைய பீங்கான் சாடிகள். பல நிறங்களில். பல சித்திரங்களுடன். பளபளப்புடன். மிகுந்த அழகுடன். விலையும் கொள்ளை அழகு. மது அருந்துகின்றவர்களுக்காகவே ஒரு கண்ணாடி சீசா. செக்கச் செவேலென்று. அழுத்தி மூடும் மூடியுடன். அதே சிவந்த நிறத்தில் சின்னச் சின்னதாய்க் கோப்பைகள். பார்களில் Irish Cream பரிமாறுவார்களே, அந்த அளவு சிறிய கோப்பைகள். பயன்படுத்தாவிட்டாலும் வீட்டில் அழகிற்கு வைக்கலாம். நமக்கெதுக்கு என்று வந்து விட்டேன்.

அதே போல கடிகாரங்களிலும் பலவிதங்கள். சுவர்கடிகாரத்தின் ஒரு இணுக்கு இடத்தைக் கூட சும்மா விடாமல் ஓவிய வேலைப்பாடு செய்திருந்தார்கள். அதனுடைய விளைவு விலையில் தெரிந்தது. இன்னும் நிறைய கலைப்பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. வெறும் கலைப் பொருட்களாக மட்டும் இல்லாமல் மிகுந்த விலைப் பொருட்களாகவும் இருந்ததால் கண்களுக்கு மட்டுமே அன்றைக்கு விருந்து.

மொத்தத்தில் வெளியே வருகையில் பெர்ஷியாவிற்குச் சுற்றுலா போய் வந்த உணர்வு. பாஸ்போர்ட் இல்லை. விசா இல்லை. ஆனாலும் பெர்ஷியா போய் வந்தோம். சுவையான விருந்துண்டு வந்தோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 28, 2005

நான் நன்றி சொல்வேன்

நான் நன்றி சொல்வேன்

ஆச்சு. ஒரு வாரம் போச்சு. நட்சத்திர வாரம். தெரிஞ்சத எழுதிப் போட்டாச்சு. அதுக்கு நெறைய பின்னூட்டங்களும் பாத்தாச்சு.

சரி. நட்சத்திர வாரம் எப்படிப் போச்சுன்னு நான் சொல்ல வேண்டாமா? சொல்றேன். சொல்றேன்.

ரொம்ப நல்லபடியாவே போச்சு. மொதல் ரெண்டு நாளும் கொஞ்சம் சோர்வா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன். உண்மைதான். டெலிபோன எடுத்தப்புறந்தான ராங் நம்பருன்னு தெரியுது.

எல்லாருக்கும் இருந்த சந்தேகம், நான் சுஜாதா போல எழுதுறேனான்னு. உண்மை அது இல்லை. மொதல்ல வந்த வாடைக் கதை ஒரு ஜாலி கலந்துரையாடலா ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது. அத எங்கயும் போடாம வெச்சிருந்தேன். நட்சத்திர வாரத்துல சரியா போட்டாச்சு.

ரெண்டாவது கதைல ஒரு புதுமையப் புகுத்தப் பாத்தேன். அது சரியில்லாமப் போயிருச்சு. அத யாருமே கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கதை சோர்வாப் போயிருச்சு. அதனால நானே சொல்லீர்ரேன். கதாபாத்திரமே இல்லாம கதை எழுத முடியுமான்னு முயற்சி செஞ்சதுதான் அந்தக் கதை. நிலா நிலா ஓடி வா. ஆனா கட்டுரை மாதிரி ஆயிருச்சி. அடுத்த வாட்டி சிறப்பா செஞ்சிக்கலாம்.

கவிதைகள் ரெண்டையும் மக்கள் ரசிச்சிருக்காங்கன்னு தெரியுது. ஆனா திருச்செந்தூரின் கடலோரத்தில் கதைக்கு இருந்த வரவேற்பே தனிதான். மொதல் மொதலா ஐம்பது பின்னூட்டம் விழுந்த என்னுடைய பதிப்பு அதுதான்னு நினைக்கிறேன். முருகக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ரசித்துப் படித்துப் பாராட்டியிருந்தார்கள். அவர்களின் நல்ல பண்பிற்கு மிக்க நன்றி.
இதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. கருத்து வேறுபாடு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு. கருத்து வேறுபாடு வேறு நட்புணர்வு வேறு என்ற நடுநிலைமையை உணர்ந்தால் நாம் மற்றவர்களை மதிக்கின்றவர்களாவோம். அருட்பெருங்கோ உங்களுக்கு எனது நன்றி பல.

இந்த வலைத்தளத்தில் ஊடாடுகின்றவர்கள் அனைவருமே படித்தவர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாமே உணர்ச்சியின் வசப்பட்டு தனிநபர், மத, மொழி, இனத் தாக்குதல்களில் ஈடுபட்டால் நம்மளவுக்குக் கல்வியறிவு கிடைக்காதவர்களை என்ன சொல்வது? தவறு நேர்வது இயல்பு. ஆனால் அதை நீக்க நேர்மையான வழிமுறைகளைக் கையாளுங்கள். உங்களால் முடியாயது இல்லை. இந்த வேண்டுகோளை நான் இந்த பொழுதில் உங்களுக்கு வைக்கிறேன். குழலி இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறார். குழலி உங்களுக்கும் எனது நன்றி பல.

அடுத்து பெங்களூரில் ஒரு நாள். தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டுமே இரண்டு விதங்களில் மக்களுக்குப் பிடித்திருந்தன என்றே சொல்ல வேண்டும். அந்தச் சூழலில் தங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அடுத்தது கனவுகள் பற்றிய பதிவு. இதற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. வாரயிறுதி வேறு. ஞாயிறு போட வேண்டிய பதிவைத் திங்கள் அன்று காலையில் போட்டேன். அதற்கும் பின்னூட்டங்கள் விழுந்தன என்றால் பாருங்களேன். நன்றி மக்களே.

மொத்தத்தில் அன்போடும் பரிவோடும் என்னை ஆதரித்து, எனது பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இட்ட தமிழ்மண நண்பர்களுக்கு எனது நன்றி. வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, November 27, 2005

அரசனும் நானும்

அரசனும் நானும்

நான் பார்த்து ரசித்த திரைப்படங்களில் ஒன்றை உங்களுக்காக விமர்சிக்கிறேன்.

தி கிங் அண்ட் ஐ

ஆயிரத்துத் தொள்ளாயிரது ஐம்பத்தாறில் வந்த திரைப்படம் இது. ஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் கொண்ட அற்புதப் படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கலைப்படம்.

யூல் பிரைனர் எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர் என்று சொன்னால் மிகையில்லை. அற்புதமான நடிப்பாலும் உடலசைவுகளாலும் முகபாவங்களலாலும் பாத்திரமாகவே மாறிவிடும் சிறப்பான கலைஞர். டென் கமேண்ட்மென்ட்ஸ் பார்த்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். ராம்சிஸ் எனப்படும் வில்லனாக வந்து சிறப்பாகச் செய்திருப்பார். இந்தப் படத்தில் அவர் கதாநாயகன்.

ராட்ஜர்ஸ் அண்ட் ஹேமெர்ஸ்டெய் என்பவர்கள் நம்ம ஊர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி போல. தொட்டதெல்லாம் சிறக்கும் சிறந்த இசையமைப்பாளர்கள். தி சவுண்ட் ஆ·ப் ம்யூசிங் என்பது இவர்களது சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்று. இந்தப் படத்திற்கும் இவர்கள்தான் இசை.

ஒரு மேடை நாடகம்தான் திரைப்படமாகியிருக்கிறது. கதை ஆயிரத்து எண்ணூறில் நடப்பதாக வருகிறது. யூரோசெண்ட்ரிக் உலகம். அதாவது ஐரோப்பாவை மையமாக வைத்து உலகம் இயங்கி வந்த காலகட்டத்தில் நடந்த கதை.

இங்கிலாந்திலிருந்து கணவனை இழந்த பெண் தனது மகனுடன் சயாமிற்கு வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கு மாதம் இருபது பவுண்டு சம்பளம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பவுண்டு). அப்படியென்ன வேலை? சயாம் அரசரின் பிள்ளைகளுக்கும் ராணிகளுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து உலக அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வேலை.

சயாம் ஒரு கட்டுப்பாடான தேசம். அரசரை அங்கு தெய்வத்திற்கு சமமாக மதிக்கிறார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும் நாடு. அரசரின் தலைக்கு மேல் யார் தலையும் இருக்கக் கூடாதென்று எழுதாத சட்டம். அவர் உட்கார்ந்தால் எல்லாரும் உட்கார வேண்டும். அவர் படுத்துவிட்டால் எல்லாரும் படுத்துவிட வேண்டும்.

வேலைக்கு வந்த அந்தப் பெண் ஆனா (டெபரா கெர் - ஜூஹி சாவ்லா பார்பதற்கு இவரைப் போல இருப்பார்) அரண்மனையிலேயே தங்க நேரிடுகிறது. அவருக்கும் மதகுருவிற்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகிறது.

சரி....அரசரின் பிள்ளைகளுக்குத்தானே பாடம்....எத்தனை பிள்ளைகள்? மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருபத்தாறு பிள்ளைகள். அடுத்த மாதம் இன்னமும் ஐந்து பிறக்க இருக்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட ராணிகள். மூத்த ராணியின் மூத்த பிள்ளை அடுத்த பட்டத்து இளவரசன்.

சயாமே உலகம் என்றிருந்த அனைவருக்கும் உலகத்தில் சயாம் என்ற உண்மையை போதிக்கிறாள். அவளது சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனையில் பரவுகின்றன. மன்னனும் அவைகளிலிருந்து தப்ப முடியவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்கார மன்னன் (யூல் பிரைனர்) சண்டை போட்டாலும் ஆனாவிடம் மதிப்பாகவே நடக்கிறார். எடுத்துச் சொல்லும் சீர்திருத்தங்களை முடிந்த வரை ஏற்றுக் கொள்கிறார். மன்னனின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருவருக்கும் உண்மையான நட்பு மிளரத் தொடங்குகிறது.

பிரச்சனை என்று ஒன்று வந்தால்தானே கதை நகரும். அந்த அரண்மனையில் பர்மாவிலிருந்து வந்த ராணி ஒருத்தி இருக்கிறாள். காதலனைப் பிரிந்து அரண்மனையில் வாழ்கிறவள். அவளுக்கு மகிழ்ச்சியேயில்லை. ஒருமுறை ஒரு நாடகம் நடத்தி நாடகத்தின் முடிவில் காதலனுடன் ஓடிப் போகிறாள்.

ஆனால் பாவம் பிடிபட்டு விடுகிறாள். காதலன் தண்ணீரில் விழுந்து இறந்து போகிறான். அவளை இழுத்து வந்து அரசன் முன் நிறுத்துகிறார்கள். அவளைக் கீழே படுக்க வைத்து பெரிய சவுக்கால் அடிக்கப் போகிறான் மன்னன். அப்பொழுது தடுக்கிறாள் ஆனா. இருவருக்கும் பெரிய வாக்குவாதம். ஆனால் சீர்திருத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்ட மன்னனால் அவளை அடிக்க முடியவில்லை. சவுக்கைக் கீழே போட்டு விட்டு போய் விடுகிறான்.

மதகுரு ஆனாவைத் திட்டுகிறார். ஆனா சயாமிற்கு வராமலேயிருந்திருக்கலாம் என்று சொல்கிறார். "நானும் அதையேதான் விரும்புகிறேன்" என்று ஆனாவும் பதிலுக்குச் சொல்கிறாள். அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் உடனே ஊருக்குப் புறப்பட அனைத்து ஆயத்தங்களையும் செய்கிறாள்.

சவுக்கை கீழே போட்டது ஆனைக்கு அடி சறுக்குவது போல ஆயிற்று மன்னனுக்கு. படுக்கையில் வீழ்ந்து விடுகிறான். சறுக்கி விழுந்த ஆனையால் எழுந்திருக்க முடியாது. எழுப்பவும் முடியாது. அதே நிலைதான் மன்னனுக்கும்.

சொல்லிக் கொள்ளாமல் இங்கிலாந்திற்குக் கிளம்புகிறாள் ஆனா. ஆனால் மூத்த ராணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆனா படுக்கையில் வீழ்ந்த மன்னனைக் பார்க்கப் போகிறாள்.

அவளை பத்திரமாக ஊருக்குப் போகச் சொல்கிறான் மன்னன். பிள்ளைகள் எல்லாம் கதறுகின்றன. குழந்தைகளின் பாசமும் மன்னனின் நிலமையும் ஆனாவின் மனதை மாற்றுகின்றன. கடைசியில் ஊருக்குப் போவதை கைவிடுகிறாள் ஆனா. அதற்காக நன்றி கூறுகிறான் மன்னன். அப்படியே அவளது சம்பளத்தை மாதத்திற்கு இருபத்தைந்து பவுண்டுகளாக கூட்டுகிறான். அந்தோ பாவம்! நன்றி சொல்லி முடித்து விட்டு இறந்து போகிறான் மன்னன்.

உடனேயே அடுத்த இளவரசன் பட்டத்திற்கு வருகிறான். அவனால் கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தங்கள் உள்ளே நுழையத் தொடங்குகின்றன.

இதுதான் கதை. ஆனால் படத்தைப் பார்க்க வேண்டுமே........அடடா! என்ன வகையான அரங்கமைப்புகள். சயாமிலேயே இருப்பது போலத் தோன்றும். அரங்கமைப்பிற்கும் உடையலங்காரத்திற்கும் கூட ஆஸ்கார் கிடைத்தது என நினைக்கிறேன்.

இசையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் சிறப்பாக இருக்கும். அருமையான பாடல்கள்.

ஆனால் படம் முழுக்க நிறைந்திருப்பது யூல் பிரைனர்தான். அமெரிக்கராகிய அவர் சயாமியர் போல உருவத்தை மாற்றிக் கொண்டு....அடடா! (யூல் பிரைனரின் தாய் ரஷ்யர் என்று நினைக்கிறேன். விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.)

ஆனாக வரும் டெபரா கெர்ரும் மிகவும் அருமையாக செய்திருப்பார்.

இங்கிலாந்துதான் உலகம் என்றும் எலிசபெத் அரசிதான் பெரியவர் என்று வரும் ஒன்றிரண்டு வசனங்களை விட்டு விட்டால் மிகவும் அருமையான படம். கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் The King and I.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, November 25, 2005

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவு யாருக்குதான் இல்லை? விலங்குகளுக்கும் கனவு வருகிறது என்று இப்பொழுது சொல்கின்றார்கள். மனிதனும் ஒரு விலங்குதானே. அப்படி நான் கண்ட சில கனவுகளைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

கனவு எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் இடமில்லை. கனவோடு எனக்கிருக்கும் அனுபவங்களை மற்றும் பகிர்ந்து கொள்கிறேன்.

கனவு என்பது கனவில் புரிவதில்லை. நினைவு என்பது நினைவில் புரியவில்லை என்று சொல்வார்கள். அதாவது நாம் நினைவுலகத்தில் இருக்கும் பொழுது நாம் நினைவுலகத்தில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மிடம் இருப்பதில்லை. அந்த நினைப்பேயில்லாமல் இயல்பாய் இருப்போம். அதுபோல கனவு காணும் பொழுது கனவு காண்கிறோம் என்ற உணர்வு இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால் பாருங்கள். என்னுடைய கதையே வேறு. நினைவுலகத்தில் எல்லாரையும் போல இருந்தாலும் என்னுடைய கனவுலகமே வேறு. கனவு காணும் பொழுது எனது மனம் எனக்குச் சொல்லும். என்ன சொல்லும்? "இப்பொழுது கண்டுகொண்டிருப்பது கனவு". அதாவது நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு பெரும்பாலான கனவு வேளைகளில் எனக்கு இருக்கும்.

பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். சின்ன வயதில் பெரியவர்கள் பேசும் பொழுது கனவில் பாம்பு வந்தால் கெட்டது என்றும் ஆனால் வந்த பாம்பு நம்மைக் கடித்து விட்டால் நல்லது என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அப்படிக் கேட்டது ஆழ்மனதில் எப்படியோ பதிந்து விட்டது. எப்படியோ! அதற்குப் பிறகு நடந்தது, நடப்பதுதான் பெருங்கூத்து.

கனவில் பாம்பு வரும். நமக்குதான் கனவு காண்கிறோம் என்று அப்பொழுது தெரியுமே. உடனே என்னுடைய மனம் அந்தப் பாம்பு என்ன செய்கிறது என்று பார்க்கும். பேசாமல் இருந்தால் என்னுடைய மனம் ஒன்று செய்யும். "பாம்பே நீ கனவில் வந்திருக்கிறாய். நீ கடித்தால்தான் எனக்கு நல்லது. ஆகவே கடிப்பாய்." என்று சொல்லி அந்தப் பாம்பை என்னைக் கடிக்க வைக்கும். அத்தோடு கனவு முடிந்துவிடும்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது? கனவையே கட்டுப்படுத்த முடியும் தன்மை என்றா? இல்லை. கனவு காண்கின்ற உணர்வு கனவு காணும் பொழுது இருக்கிறது என்றா?

ஏன் கேட்கின்றேன் என்றால் பொதுவாகவே கனவு காணும் பொழுது அந்த உணர்ச்சி இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த நாள் இந்தக் கனவில் நடதவைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று முடிவும் செய்யப்படும்.

இந்தக் கனவு இப்படி என்றால் மற்றொரு கனவு இன்னும் வித்தியாசமானது. குறைந்த பட்சம். என்னைப் பொருத்தவரை. என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பொருத்த வரை.

அன்றைக்குக் கனவில் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்திருந்த தோற்றத்தில் இருந்தார். பேசினார். பேசினார். பேசிக்கொண்டே போனார். அவர் பேசியதை அடிப்படையாக வைத்து (கொஞ்சம் மாற்றியும் சேர்த்தும்) எழுதியதுதான் பெண்ணைப் பெற்றவன் என்ற சிறுகதை.

இன்னொரு நாள். அரைத்தூக்கம் என்று நினைக்கிறேன். அந்தத் தூக்கத்தில் ஒரு விருப்பம். மனம் கதைக்கருவைத் தேடி அலைகிறது. எங்கெங்கோ கிடைக்குமா என்று அலைபாய்வது எனக்குத் தெரிகிறது. திடீரென ஒரு வெளிச்சம். படக்கென்று எழுந்து உட்காருகிறேன். விளக்கைப் போட்டு விட்டு கணிப்பொறியைத் துவக்கி எழுதத் துவங்குகிறேன். கிட்டத்தட்ட ஒருமணியாகியிருக்கும். கதையைத் தட்டெழுதிவிட்டுப் போய் உடனே தூங்கி விடுகிறேன். இந்தக் கதை இதுவரை நான் இங்கு பதியவில்லை. ஏன் தெரியுமா? அதைத்தான் நான் நாளைக்குப் பதியப் போகிறேன்.

இன்னும் நிறைய நிறைய. இதெல்லாம் ஏனென்று ஆராய்ந்து அறியும் அறிவு எனக்கு இல்லை. இந்தக் கனவுகளால் எனக்கு பயனா என்றால் ஆம் என்பதே விடை. பின்னே. கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கற்பனை வருகையில் ஏன் விட வேண்டும்!

என்னுடைய கனவுகளை விடுங்கள். கனவுகள் பற்றி யாரிடமோ எப்பொழுதே பேசிய பொழுது கிடைத்த ஒரு செய்தி. நாம் வாழும் வாழ்க்கை என்பதே ஒருவருடைய கனவாம். அந்தக் கனவு முடியும் பொழுது நமது வாழ்க்கையும் முடிந்து போகுமாம். அவ்வளவு பெரிய கனவு யார் காண்கிறார்களாம்? நிச்சயமாக நம்மைப் போன்ற மண்ணுலகவாசிகள் இல்லையாம். நம்மை விட நிலையில் உயர்ந்தவர்களாம். அதுபோல நாம் காணும் கனவும் அதில் வருகின்றவர்களின் வாழ்க்கையாம். நம் கனவு முடியும் பொழுது அவர்களின் வாழ்க்கை முடியுமாம். இது எப்படி இருக்கு!

அப்படியே உங்கள் கனவுலக வாழ்க்கையைப் பற்றியும் எடுத்து விடுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, November 24, 2005

தூத்துக்குடியில் ஒரு நாள்

தூத்துக்குடியில் ஒரு நாள்

"என்னடா பாட்டு நினைவிருக்கா? ஒருவாட்டி பாடிப் பாத்துக்க!" அக்கறையோடு அத்தை சொன்னார்கள். வாய் விட்டு ஒருமுறை பாடிப் பார்த்துக் கொண்டேன். மேடையில் மறந்து போனால்?

தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்கள் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேநிலைப்பள்ளியை அறிவார்கள். அதில் ஆண்டு விழா நடக்கும். ஆண்டு தோறுந்தான். அந்த ஆண்டு விழாவில் புதுக்கிராமத்தில் இருக்கும் மகளிர் சங்கத்தவரும் பங்கு கொள்வார்கள். நான் சொல்வது கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்.

இப்பொழுது சொல்லும் விஷயங்கள் தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்களுக்குப் புரியும். புதுக்கிராமத்தில் இருக்கும் பழைய பெரிய வீடுகள் மூன்று. ஒன்று பல் டாக்டர் ஸ்டீபன் அவர்களின் வீடு. இப்பொழுது அவரில்லை. தந்தையின் இடத்தில் குறைவின்றி மகன் செய்து வருகிறார். இருவருமே மிகக் கனிவானவர்கள். இன்னொன்று அக்சார் வீடு என்பார்கள். அக்சார் பெயிண்ட் வியாபாரம் செய்தவர்கள் என்று கேள்விப்பட்டதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. மற்றொரு வீடு மிகப் பெரியது. தமயந்தி அம்மா வீடு என்பார்கள். எங்களுக்கெல்லாம் அது சங்கத்தம்மா வீடு.

அவர்கள் வீடே ஒரு சிறிய கோட்டை போல இருக்கும். காம்பவுண்டுக்குள் பலமுறை சென்றிருக்கின்றேன். மிகப் பெரிய கூண்டில் முயல்களும் ஆமைகளும் இருக்கும். வாட்ச் மேனிடம் உத்தரவு வாங்கி கூண்டுக்குள் சென்று முயல்களோடும் ஆமைகளோடும் விளையாடியிருக்கிறோம். இந்த மூன்று வீடுகளுக்கும் அருகில் இருந்த சிறிய வீடுகளில் ஒன்று நாங்கள் இருந்த வீடு. என்னுடைய இரண்டாம் கருவறை என்றே சொல்வேன். எங்கள் வீட்டுக்கு நேரெதிராக ஒரு சாலை செல்லும். அந்தச் சாலையில்தான் ஏ.எஸ்.கே.ஆர் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு எனக்கு விவரம் தெரியாத வயதில் சீர்காழி கோவிந்தராஜன், நாட்டியத் தாரகை சொர்ணமுகி ஆகியோர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்.

தமயந்தியம்மாவின் சங்கம் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு வகிக்கும். என்னுடைய அத்தையும் சனிக்கிழமை தோறும் கூடிடும் சங்கத்தில் ஒரு உறுப்பினர். அதனால் எனக்கும் அந்தப் பள்ளி ஆண்டு விழாவில் பாட வாய்ப்பு. அதற்குதான் பாடல் ஒத்திகை. எனது பக்கத்து வீட்டு நண்பன் தேன்ராஜ். அவனும் சொல்வதற்கு ஒரு பொன்மொழியைப் பயிற்சி செய்தான். ராமகிருஷ்ணரின் பொன்மொழி என்று நினைக்கிறேன். இதையெல்லாம் சொன்னால் சின்னதாகப் பரிசு கொடுப்பார்கள். அதிலொரு சந்தோஷம்.

சரி. நமது கதைக்கு வரலாம். பாடலை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆண்டு விழா தொடங்கியது. முதலில் யார் யாரோ பேசினார்கள். நாங்கள் எல்லாரும் பவுடர் பூசிக் கொண்டும், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டும் மேடைக்குப் பக்கத்திலிருந்த அறையில் இருந்தோம். பலரும் பலவித அலங்காரத்தில். மான் போல. மயில் போல. போலீஸ் போல. சாமியார் போல. நாடகத்திற்கும் ஆட்டத்திற்கும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் உண்டாகும் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவராக சென்று எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்ற வேண்டும். அதை ஒரு டீச்சர் நிரல் படுத்திக் கொண்டிருந்தார். ஒரு சில நிகச்சிகளுக்குப் பின்னால் தேன்ராஜை அழைத்தார் அந்த டீச்சர். மேடையின் நடுவின் நின்றான். மைக் அவனது உயரத்திற்கு இறக்கப்பட்டது. சொல்ல வந்த பொன்மொழியைச் சொன்னான். எல்லாரும் கை தட்டினார்கள். நானும்தான்.

அடுத்து சில நிகழ்ச்சிகள். எனக்கான இடைவெளி வந்தது. டீச்சர் என்னை அழைத்தார். மேடையில் திரை போட்டிருந்தது. நான் போனதும் திறப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் டீச்சர் என்னை மேடையின் ஓரத்திலேயே நிறுத்தினார். அங்கு ஒரு மைக் இருந்தது. அதன் வழியாகத்தான் டீச்சர் நாடகத்திற்கு நடுவில் வசனங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மைக்கில் நிற்க வைத்தார்கள். "பாடு ராகவன்" என்றார்கள்.

"என்ன பாட வேண்டுமா? மேடைக்கு நான் போக வேண்டாமா? ஏன் இங்கே பாட வேண்டும்? திரையைத் திறக்க மாட்டார்களா?" உள்ளம் தவித்தது. சட்டென்று ஒரு அவமான உணர்ச்சி வந்து பிஞ்சு மனதில் நஞ்சு போல விழுந்தது. எப்படி அழாமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் டீச்சரிடம் என்ன சொல்வது? மைக்கில் பாடினேன்.

"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ"

ஆயர்பாடியில் ஆனந்தமாகத் துயிலப் பாடும் பாடலில் எனது சோகந்தான் தெரிந்தது. கடனுக்குப் பாடினேன். கொஞ்சப் பட வேண்டியது மிஞ்சப் பட்டதால் தஞ்சப் படத் தவித்தது நெஞ்சப் படம். ஆயிரம் கேள்விகள் அந்த வயதில். சீவிச் சிங்காரித்து மூக்கறுத்த நிலை என்பார்கள். அந்த வயதில் அது ரொம்ப வலித்தது. நிகழ்ச்சி முடிந்து கொடுத்த சிறிய எவர்சில்வர் கோப்பையை விட உள்ளக் கோப்பை கனமாக இருந்தது.

அந்த டீச்சர் ஏனப்படிச் செய்தார்கள் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்வு ஆழ்மனதில் வடுவாக நிலைத்து இன்று பதிவு போடுகின்ற வரைக்கும் வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு வருமோ! சத்தியமாகச் சொல்கிறேன். அதற்குப் பிறகு நான் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு பெற்றதே இல்லை. என்னுடைய அத்தையும் என்னை பங்கு பெறச் சொல்லிக் கேட்டதுமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

பெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்கு......

இது நடந்து ஆறு வருஷம் இருக்கும். இப்ப நெனச்சாலும் கொஞ்சம் திக்கு இருக்கும்.

ஒரு பிரச்சனை. பெங்களூர் சிட்டி பஸ் டிரைவர் ஒருத்தன ஏத்திக் கொன்னுட்டான். விபத்துதான். அதுக்கு அந்த டிரைவருக்கு கோர்ட் தண்டனை கொடுத்திருச்சு. அத எதுத்துதான் போராட்டம். எல்லா பஸ் டிரைவர்களும் கண்டெக்டர்களும்.

எந்த பஸ்சும் ஓடல. எல்லாம் அப்படியே நிக்குது. அப்போ ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரனும். சிவாஜி நகர் பஸ்டாண்ட் வரைக்கும் நடந்து வந்தாச்சு. அங்கயிருந்து சஞ்ஜய நகருக்குப் பஸ் பிடிக்கனும். ஆனா பஸ் இல்லை. ஒரே கூட்டம். கொஞ்ச நேரங்கழிச்சி பஸ் கிளம்புமுன்னு பெருங் கூட்டம் காத்திருக்குது.

ஆட்டோக்கள்ல ஏறிப் போறவங்க போய்க்கிட்டே இருக்காங்க. கையில இருந்தது கொஞ்சப் பணம்தான். மீட்டர் போட்டுப் போனா போயிறலாம். ஆனா யாருமே அன்னைக்கு மீட்டர் போட மாட்டேங்குறாங்க. அதுனால ரெண்டு மூனு பேரு சேந்து ஆட்டோல போறாங்க.

ஒவ்வொரு ஆட்டோக்காரனும் ஏரியா பேரச் சொல்லிக் கத்துறான். ஆனா சஞ்ஜய நகருக்கு எவனும் கத்த மாட்டேங்குறான். எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு சஞ்ஜய நகரு போகனுமுன்னு சொன்னேன். டிரைவரு முடியாதுன்னு சொல்லீட்டாரு. கங்கா நகர் வரைக்கும் போனா அங்கிருந்து நடந்துரலாமுன்னு கங்கா நகருக்குக் கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா குடுக்கனுமுன்னு சொன்னாரு. அதுக்கு நானும் ஒத்துக்கிட்டேன்.

வண்டி என்னைய ஏத்திக்கிட்டு கொஞ்சம் முன்னாடி போச்சு. அப்ப இன்னொருத்தன் வண்டிய நிறுத்தி சுல்தான்பாளையான்னு கேக்குறான். போறவழிதான். ஆனா கொஞ்சம் விலகனும். ஆட்டோ டிரைவர் ஒத்துக்கிட்டு அவனையும் ஏத்தியாச்சு.

ஏறுனதுக்குப் பெறகுதான் தெரிஞ்சது அவன் தண்ணி போட்டிருக்குற விஷயமே. அப்பவே எனக்குக் கொஞ்சம் பயம். ஒருவேளை ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்ட ஆளுங்களோன்னு. அடிச்சுப் போட்டுட்டா? கடத்தீட்டுப் போயிட்டா! எதுக்கு வம்புன்னு நான் பேசாம வெளிய பாத்துக்கிட்டு வந்தேன். மழை வேற தூறிக்கிட்டேயிருந்தது.

பக்கத்துல உக்காந்திருந்தவன் பேச்சத் தொடங்கினான். கன்னடத்துலதான். கர்நாடகா போனதுமே வெளியில கன்னடம் பேசனுமுன்னு முடிவு செஞ்சி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டிருந்தேன். அதுனால அரைகொற கன்னடத்தில் நானும் ரெண்டொரு பேச்சு பேசினேன்.

ஆட்டோக்காரர் ஒரு இஸ்லாமியர். ஏறுனவன் குடிவெறியில தாறுமாறா அவரப் பேசுறான். மொதல்ல ஒருத்தர தாறுமாறா பேசுறதே பிடிக்காது. அதுல இப்படி ஒரு பேச்சு தேவையா.

"பாயினு மூச்சுகொண்டு சும்னே பன்னீ"ன்னு சொன்னேன். (வாய வெச்சுக்கிட்டு சும்மா வாங்க)

"ஹே! ஏனு மாடு பிடுத்தானே? பாம் ஹாக்தானா! நாவு சும்னே இரல்லா. கொத்தா?" (ஹே! என்ன செஞ்சிருவான்? குண்டு போடுவானா? நாங்க சும்மா இருக்க மாட்டோம். தெரியுமா?)

நா முடிவே பண்ணீட்டேன். வீட்டுக்கு ஒழுங்கா முழுசா போய்ச் சேந்தா போதுமுன்னு. அதுலயும் வழியில இருக்குற ஆர்.டீ.நகரும், அந்த ஆள் போக வேண்டிய சுல்தான் பாளையாவும் இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் இடங்கள். இவன் எக்கச்சக்கமா பேசி ஏதாவது ஒரு பிரச்சனையானா என்ன பண்றதுன்னு பயந்துகிட்டு இருந்தேன். ஏன்னா! கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கிரிக்கட் விவகாரத்துல இந்து-முஸ்லீம் பிரச்சனையாயிருச்சு. அந்த ஏரியா வழியாத்தான இப்பப் போகனும்.

ஆனா அந்த ஆட்டோ டிரைவர் பொறுமையா வந்தாரு. நான் பேசாம இருந்தேன். கொஞ்ச நேரங் கழிச்சு பேச்ச எங்கிட்ட திருப்புனான் அந்த குடிகாரன்.

"நீவு யாவூரு சார்? தெலுகா?" (நீங்க எந்த ஊரு சார்? தெலுங்கா?) என்னையப் பாத்து தெலுங்கான்னு கேட்ட மொத ஆளு இவந்தான். என்னையப் பாத்ததுமே டிபிக்கல் தமிழியன்னு எல்லாரும் சொல்லீருவாங்க. நெத்தீல எழுதியிருக்கும் போல.

அந்தக் குடிகாரன் கேட்டதும் தமிழ்நாடுன்னு துணிச்சலா சொல்லீருப்பேன்னு நெனைக்கிறீங்க? ஏற்கனவே காவிரி பிரச்சனை. அதுல இப்படி ஒரு ஆளு. நானும் ஊருக்குப் புதுசு. ஒரு பயந்தான். பொய்யச் சொன்னேன்.

"நாவு பெளகாமு." (எனக்கு பெளகாம்.)

"ஒள்ளேதாயுத்து சார். ஈக எல்லாக்கடேயிந்தனும் பர்த்தாரே. அதுக்கே கேளிதே!" (நல்லதாச்சு சார். இப்ப எல்லாப் பக்கத்துலயிருந்தும் வர்ராங்க. அதுக்குதான் கேட்டேன்.)

எப்படியோ ஒரு அஞ்சு நிமிசம் பொழுத ஓட்டுனேன். அதுக்குள்ள சுல்தான் பாளையா வந்துருச்சு. ஆட்டோவ விட்டு எறங்குன குடிகாரன் டாடா சொல்லீட்டு போய்க்கிட்டேயிருக்கான். ஆட்டோ டிரைவர் எறங்கி அவனப் பிடிச்சுக் காசு கேக்குறாரு. அவன் நடுரோட்டுல நின்னுகிட்டு கத்துறான். அவனோட ஏரியான்னு சொல்லி மெரட்டுறான்.

நான் ஒடுங்கிப் போயிருந்தேங்குறது உண்மைதான். பைய மடியில வெச்சுக்கிட்டு கம்முன்னு உக்காந்திருந்தேன். இறங்கிப் போயிறலாமுன்னும் நெனச்சேன். ஆனா முடியலை. ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கனுமே.

குடிகாரங் கிட்ட என்ன நியாயம் எதிர் பார்க்க முடியும். ஆட்டோ டிரைவர் வெறுத்துப் போய் வந்தாரு. அவன திட்டிக்கிட்டே ஆட்டோவ ஓட்டுனாரு. நான் கங்கா நகருல எறங்கிக்கிட்டு பேசுன காசக் குடுத்துட்டு நடந்தே வீடு வந்து சேந்தேன்.

இப்ப இத்தன வருசம் இங்க இருந்தப்புறம் துணிச்சலும் இருக்கு. கன்னடப் பழக்கமும் நல்லாயிருக்கு. ஆனா அந்த சமயத்துல புதுசா அப்படி ஒரு அனுபவம். இன்னைக்கு நெனச்சாலும்....சும்மா திக்குன்னு இருக்கு......

இப்ப நான் கேக்க வர்ரது என்னன்னா? நான் செஞ்சது சரியா? நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவ்வளவுதான் கேள்வி. விடைகள அள்ளி வீசுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 23, 2005

திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.

சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.

நாளிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?

கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.

கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.

அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.

வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"

"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."

நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.

கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.

"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.

கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"

சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"

"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."

அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."

"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"

அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.

அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."

"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."

"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"

"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."

"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"

"எம்பேரு முருகன்."

பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.

திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 22, 2005

கிழவியின் கவிதை

நண்பர்களே. இந்த நட்சத்திர வாரத்தில் இரண்டு கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒன்று கிழவியின் கவிதை. இது நான் பெங்களூர் தமிழ்ச் சங்க மேடையில் சொல்லியது. மற்றொன்று தினம் ஒரு கவிதை குழுவில் இட்டது. இரண்டையும் உங்களுக்குக் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாவது ஒரு முறை படியுங்கள். (குறிப்பாக துளசி டீச்சர்).

கிழவியின் கவிதை

படிப்பு
(படிப்பதற்காக விடுதிக்குச் செல்லும் பேரனிடம் கிழவி சொல்கிறாள்.)

குச்சிகள அடுக்கி வெச்சி
கூடு ஒன்னு கெட்டி வாழ
குருவிக் கூட்டம் படிச்சதாக
கதையேயில்ல!

ஒத்தக் காலில் நின்னுக்கிட்டு
ஒத்த மணி காத்திருந்து
வந்த மீன கொத்தித் திங்க
கொக்குகளும் படிச்சதாக
கேட்டதேயில்ல!

மண்ணுலதாம் பொறந்த பின்னே
கண்ணு ரெண்டும் தெறந்த பின்னே
நிக்க நடக்க ஓட செய்ய
மாட்டுக் கன்னு படிச்சதாக
ஏட்டுல இல்ல!

பசிச்சி சாகக் கெடந்தாலும்
திங்காத பச்சப் புல்ல
நோவு நொடி வந்து நொந்தா
மருந்தாகத் திங்கனுன்னு
புலிகளுமே படிச்சதாக
படிச்சதுமில்ல!

பாழும் மனுசப் பொறப்ப எடுத்தோம்
வாழும் வகைக்கு படிக்கனுமே!
நிமிந்து நிக்க உட்கார,
சோத்தப் பெணஞ்சு வாயில் வெக்க,
காலக் கழுவ, குளிச்சி மொழுக,
காசு பணஞ் சேகரிக்க,
சேத்ததையுங் கட்டிக் காக்க,
வீடு மாடு காடு வாங்க,
வாங்குனத வெச்சி வாழ,
காச்ச கீச்ச வந்தா மீள,
அத்தனைக்கும் படிக்கனுமே
பருவம் இருக்கையிலே!

காமனாரு பூசையால
பருவத்துல ஆச வரும்
ஆசையோட ஆளும் வரும்
அது நெருங்கி நேசம் வரும்
அப்படியே போனாலோ மோசம் வரும்
மாட்டிக்கிறாத!
மாணவப் பருவத்துல
வீணாத் தாம் போனா,
மானத்தோடு வாழுறது
ரொம்பவுஞ் செரமம்!

சேக்காளி சரியில்லாட்டி
போக்கிடமுந் தப்பாகும்!
தப்பான எடம் போனா,
சரசுவதி வரமாட்டா
அறிவ அவளுந் தரமாட்டா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!

இதையெல்லாஞ் செஞ்சாலே,
உத்தமமாய் இருந்தாலே,
நியாயப்படி நடந்தாலே,
ஊரு உலகம் மதிச்சி நிக்கும்!
உறவெல்லாந் தேடி வரும்!
லட்சுமியும் வருவா! பொருளெல்லாந் தருவா!
மீனாட்சி வருவா! நெஞ்சுல ஒரந் தருவா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!


கரை

இக்கரையில்
இவர்கள் இருவரும்
அல்லாடும் தடுமாற்றம்
அக்கரையில்
அவர்கள் அனைவரும்
ஆனந்தக் கொண்டாட்டம்

அக்கரைக்குப் போவதில்
இவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
அவர்களுக்கு
அக்கறையில்லை
இக்கரைக்கு வருவதில்
அவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
இவர்களாசைக்குக்
குறைவேயில்லை

ஆண்டவன் பழநி முருகன்
டாலர்தான்
இவர்களுக்குப் பெருஞ் சொத்து
ஆள்பவன் அமெரிக்கன்
டாலர்தான்
அவர்களுக்குப் பெருஞ் சொத்து

அத்தகையச்
சொத்தைத் தேடியே
சொத்தைகளான
அக்கரைவாசிகளின்
வித்தைகளுக்குக்
கத்தை கத்தையாகக்
கொட்டிக் கொடுத்த
இக்கரைவாசித்
தந்தைகளும் தாயார்களும்
கந்தைகளாகக் கசங்கி
இப்போது தனிமையில்

இக்கரையில்
செக்கு மாடுகளாய்ச்
சுற்றுகின்றவர்களுக்கு
அக்கரையின்
செக்குத் தாள்கள்
சுற்றமாகுமா சுகமாகுமா

இவர்களுக்கு
வாரத் தொலைபேசிகளே
வரமாய் இருந்தன
அவர்களுக்குப்
பாரமாய்க் கட்டணங்கள்
மின்னஞ்சல் வசதிகள்
இருபுறத்திலும்
வாராத் தொலைபேசிகள்
ஊமைகளாயின

நோவையுஞ் சொல்லாது
நோக்கங் குழம்பிப்
பாவைகளாய்க் கிடக்கும்
இவர்களின் தலையெழுத்திற்கும்
அவைகளை உணராது
ஆக்கங் கெட்டக்
கூவைகளாய் வாழும்
அவர்களின் தலையெழுத்திற்கும்
ஒன்றே காரணம்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

அன்புடன்,
கோ.இராகவன்

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

உலகெங்கும் ஒரே பதட்டம். மனித முயற்சிகள் அத்தனையும் இயற்கையின் முன்னே ஒன்றுமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை இயற்கை நிரூபிக்கிறது. கி.பி.2505. உலகத்தின் தட்பவெட்ப நிலையே மாறிப் போயிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் மழை. எங்கு பார்த்தாலும் மழை. எல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான். உலகில் சுற்றுப்புறச் சூழல் மிகவும் கெட்டு பூமிப்பந்தே கொதித்துக் கிடந்தது. பனிமலைகள் எல்லாம் உருகத் தொடங்கின. உலகெங்கும் நீர்மட்டங்கள் உயர்ந்தன.

அப்படி நீர்மட்டம் உயர்ந்ததால் பல இடங்கள் நீரில் போயின. அங்கிருந்த மக்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிப் போயினர். யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனாலும் பல இடங்கள் தப்பிப் பிழைத்தன. சில இடங்களில் கடல் உள்ளே போய் நிலம் வந்தது. கடுமையான தட்பவெட்ப நிலையைச் சமாளிக்க மாட்டாமல் மக்கள்தொகை குறைந்து கொண்டே வந்தது. இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தைந்து கோடியாகக் குறைந்தது. அறிவியல் ஆராச்சிகள் பல செய்து இன்னும் ஐம்பதாண்டுகளில் உலகெங்குமே நீருக்கடியில் போய் விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

உலக மக்கள் பயந்து போனார்கள். எப்படித் தப்பிப் பிழைப்பது என்று யோசித்தார்கள். ஒருவழியும் உருப்படியாகப் பிடிபடவில்லை. நிலாவிற்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் போய்ப் பிழைக்க முடியுமா என்று யோசித்தார்கள். அதுவும் முடியுமென்று முடிவு கட்டி சோதனை முயற்சிகள் பல செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலிருந்தே நிலாவிற்கு மனிதர்கள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் அங்கு மானிடர்கள் வாழத் தேவையான அடிப்படை வசதிகளை விதைக்கத் தொடங்கினார்கள். நீர் வளத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். முதலில் செயற்கை மேகங்களை உருவாக்கினார்கள். அதில் மழையைப் பொழிய வைத்தார்கள். ஒரு ஐம்பதாண்டு காலம் அப்படியே போனது. பிறகு ஒரு கட்டத்தில் தானாகவே மேகங்கள் உருவாகத் தொடங்கின. மழையும் பொழியத் துவங்கின. அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்பொழுது பெய்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழிந்த பின்னே தாமாகவே மழை பொழியத் தொடங்கின.

மழை அடிக்கடிப் பெய்யத் தொடங்கியதால் மண் பக்குவப் பட்டது. அது விவசாயத்திற்குத் தக்கதானது. அனைத்தும் அறிவியலாளர்களின் உழைப்பு. அமெரிக்கா இதில் முன்னிலை வகித்தது. ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவும் இந்தியாவும் சைனாவும் சில அரபு நாடுகளும் தங்களது கனிசமாக உழைப்பைக் கொட்டியிருந்தன.

இத்தனை முன்னேற்றங்கள் நடந்ததால் மண்ணில் இருந்து பார்க்கும் பொழுது நிலாவின் தோற்றம் மாறிப் போயிருந்தது. பால் வெண்ணிலா என்று கவிஞர்கள் புகழ முடியாமல் போயிற்று. மேகங்கள் சூழும் போது நிலா கருஞ்சாம்பல் நிறத்தில் தெரிந்தது. மேகங்கள் விலகிய பொழுதுகளில் பச்சை வெளிகளால் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் சில வேளைகளில் ஒளி வெள்ளங்களை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்ததால் அம்மாவாசைகளில் கூட நிலாவில் ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன.

ஆனாலும் கவிஞர்கள் விட்டுக் கொடுக்காமல் புதுப்புது விதங்களில் நிலவைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மனித வாழ்க்கையைக் காப்பாற்றப் போகிறது என்பதால் அதைக் காதலியாகப் பார்ப்பதை விடுத்து தாயாகப் பார்த்தார்கள். தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் மிகப்பெரிய சந்திராலயம் கட்டினார்கள். அங்கு கூட்டம் குவியத் தொடங்கியது. சந்திரனிலிருந்து பார்த்தாலும் தெரிகிறது என்று அங்கிருந்து புகைப்படங்களை வேறு எடுத்து அனுப்பினார்கள். அந்தப் படங்களை தங்கள் உடைகளில் அச்சிட்டுக் கொள்வது பிரபலமானது.

கிட்டத்தட்ட முந்நூறு வருட கடின உழைப்பிற்குப் பின்னர் நிலா என்பது மற்றொரு பூமி என்றாகி விட்டது. மனிதகுலம் காப்பாற்றப் படுமென்று உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் அதுவும் நீண்டு நிலைக்கவில்லை. காரணம்? அடிக்கடி நிலாவிற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்த அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியையும் கொடுத்து, ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தனர். இது மிகவும் ரகசியமாக நடந்தது.

கிட்டத்தட்ட முக்கால்வாசி நிலவை அவர்கள் வளைத்திருந்தனர். கடுமையான காவல் போடப் பட்டது. அங்கிருந்த மற்ற நாட்டு விஞ்ஞானிகளையும் வழிக்குக் கொண்டு வந்திருந்தனர். ஆகையால் விஷயம் மற்ற நாடுகளை அடையவில்லை. மொத்தமாக மூன்று கோடிப் பேர்கள் அங்கு போக முடியும் என்று உலக விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். எந்தெந்த நாடுகளிலிருந்து எத்தனை பேர்களை அனுப்புவது என்று முடிவு செய்ய ஐக்கிய நாட்டுச் சபையைக் கூட்டினர்.

அப்பொழுதுதான் பிரச்சனைகள் வெடித்தன. இரண்டு கோடிப் பேர்களை அனுப்பவும் பாதுகாக்கவும் அமெரிக்கா அங்கு ஏற்பாடு செய்திருப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிற்கு இரண்டு கோடிப் பேர். மற்ற அனைத்து நாடுகளுக்கும் சேர்த்தே ஒரு கோடிப் பேரா! ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விடவும் தான் செலவழித்திருப்பதை ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னது அமெரிக்கா. இத்தனை காலம் அமெரிக்காவின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பல நாடுகள் தங்கள் பங்கு வெறும் உடல் உழைப்பு என்றாகிப் போனதைக் கண்டு நொந்தன.

இரண்டு கோடி அமெரிக்கர்களை இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா அனுப்பும் என்று தன்னிச்சையாக அறிவித்தது. அப்படி அனுப்பப் பட வேண்டியவர்களை அமெரிக்கா பட்டியலிடத் தொடங்கியது. அறிஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக முப்பதிலிருந்து நாற்பது வரை வயதுள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. அவர்களுக்காக அங்கே ஒரு நாடாளுமன்றத்தைக் முன்னேற்பாடாக அமைத்தனர். அந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற அமெரிக்க அதிபர் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். அவருக்காக அங்கே ஒரு வெள்ளை மாளிகை உண்டாகப்பட்டது.

பல ஏற்பாடுகள் நடந்தன. கடைசியாக முதற்கட்டமாக ஆள் அனுப்பும் நாளும் நெருங்கியது. அமெரிக்காவில் இதற்காகவே ஒரு நிலா நிலையம் கட்டப்பட்டது. ஐநூறு பயணிகள் செல்லும் வகையில் மூன்று நிலாக் கப்பல்கள் கட்டப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கவும் பட்டன. அடிக்கடி மழை பெய்து கொண்டிருந்த போதிலும் நிலாக் கப்பலின் பயணத்தைப் பார்க்கப் பலர் குவிந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும் ஆயத்தங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பலத்த பாதுகாப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து ஐநூறு பேர்களுக்கு மக்கள் ஆராவார விடை கொடுத்தனர். ஷாம்பெயின் பாட்டில் உடைக்கப்பட்டு நிலாக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பின. எந்தத் திசையிலும் திரும்பும் வகையில் அமைந்தவை அந்தக் கப்பல்கள். மொத்தக் கப்பலும் தலைகீழாகத் திரும்பினாலும் கூட உள்ளே அமர்ந்திருப்பவர்கள் நேராகவே உட்கார்ந்திருப்பார்கள். அத்தனை வசதிகள் நிறைந்தவை. நெருப்பை உமிழும் பழைய ராக்கெட்டுகளைப் போன்றவை அல்ல இந்தக் கப்பல்கள். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு விமானங்கள் போல பார்வைக்கு இருக்கும்.

பிரச்சனை என்னவென்றால் மற்ற நாடுகளின் நிலாக் கப்பல் சோதனை இன்னும் முழுமையாக வெற்றியடையவில்லை. அமெரிக்காவிடம் மட்டுமே ஒழுங்கான நிலாக் கப்பலின் தயாரிப்புத் திட்டங்கள் இருந்தன. ஆனால் அந்தத் திட்டங்களை வைத்துக் கப்பல்களைச் செய்ய வேண்டுமென்றாலும் மற்ற நாடுகளுக்குப் பத்து வருடங்கள் ஆகும். மேலும் முதலில் நிலா நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். அதற்கே ஐந்து வருடங்களுக்கு மேலாகும். அதோடோ அல்லது அதன் பின்னரோ நிலாக் கப்பல் செய்ய வேண்டும். எவ்வளவு செலவு பிடிக்கும்! எவ்வளவு அறிவியல் மூளை வேண்டும்!

அமெரிக்க அதிபர் நிலாவிலுள்ள வெள்ளை மாளிகையில் இவர்களை வரவேற்கக் காத்திருந்தார். ஏழு நாட்களில் அவர்கள் நிலவை அடைந்து விடுவார்கள் அல்லவா. நிலாக் கப்பல்கள் மேலெழும்பும் காட்சியை அவரது கணினியில் பார்த்தார். ஒவ்வொன்றாக மேலெழும்பும் காட்சி மிக அழகாக இருந்தது. பெருமை மிக்க அமெரிக்கர்களுக்கு அவர் உரையாற்றினார்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. மேலெலும்பிய மூன்று கப்பல்களும் திசைமாறி நிலா நிலையத்தை நோக்கியே திரும்பின. நேரிலும் தொலைக்காட்சியிலுமாகப் பார்த்துக் கொண்டிருந்த மொத்த உலகமும் ஸ்தம்பித்தது. நிலா நிலையம் மூன்று பகுதிகளை உடையது. பயணியர் பகுதி. கட்டுப்பாட்டுப் பகுதி. நிலாத் தொடர்புப் பகுதி. ஒவ்வொரு கப்பலும் ஒவ்வொரு பகுதியை நோக்கித் திரும்பியது. மிகுந்த வேகத்தில் வந்து மூன்று பகுதிகள் மேலும் மோதின.

பெருத்த ஓசை. பயங்கர ஓலம். ஒவ்வொரு பகுதியின் கட்டிடங்களும் பொலபொலவென உதிர்ந்தன. ஏன் அப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் பாதுகாப்பாகத்தானே இருந்தது. பிறகெப்படி. கட்டிடங்களிலிருந்து பலர் தப்பிப்பதற்காகக் கீழே குதித்தனர். அந்தோ பரிதாபம்! அந்த உயரத்திலிருந்து குதித்தால் எதுவும் மிஞ்சுமா! பேரிழப்பு! மிகப் பெரிய இழப்பு! மொத்தத்தில் நிலாக் கனவு நிலாச்சோறானது.

பி.கு : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே. எந்த நாட்டையும் இனத்தையும் மட்டம் தட்டுவதற்காக எழுதப் பட்டது அல்ல.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 21, 2005

வாடை எனை வாட்டுது!

இன்றைக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டு இளம் பெண்களின் பேச்சு எப்படியிருக்கும் என்று ஒரு நகைச்சுவையான கற்பனை. கற்பனையில் உலகம் நிறையவே மாறிவிட்டது. அதனால் படிக்கிறவர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்.

ரமாவும் சுமாவும் கல்லூரி மாணவிகள். கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏய் சுமா? மல்லிகை மொட்டு சிடி வாங்கினியா? நான் நேத்துதான் வாங்கினேன். ராத்திரி கண்ண மூடிப் படுத்துக்கிட்டு அதக் கேட்டுட்டும் மோந்து பாத்துகிட்டும் தூங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது."

"அடடா! நான் இனிமேதான் வாங்கனும். எத்தனை பாட்டு இருக்கு? எல்லாம் நல்லாயிருக்கா? ஆமா வாடையமைப்பாளர் யாரு?"

"இசை ஏ.ஆர்.ரகுமான் போட்டிருக்கார். பாட்டெல்லாம் நல்லாயிருக்கு. வாடையமைப்பாளர் சசி. ரொம்பப் புதுமையா இருக்குடி. மல்லிகைக் கொடின்னு ஒரு பாட்டு. அதுல ஒரு மாதிரி மல்லிகை மணம் வருது. அடடா! என்னமா இருக்கு தெரியுமா? அதே மாதிரி பீச்சுக்குப் போனேன் பாட்டுல பீச்சுல வருமே....அதே மாதிரி உப்புக்காத்து வாடைய ரொம்ப நேச்சுரலா போட்டிருக்காரு. அப்பப்ப பானீபூரி வாடையும் லேசான கருவாட்டு வாடையும் ரொம்ப நேச்சுரலா இருக்கு."

"ஐயோ! ரமா! நீ வேற ஏத்தி விடுறயே! சசி ஒவ்வொரு வாடையும் கம்யூட்டர்ல போடுறாராமே. நல்லா இருக்கா?"

"சூப்பராயிருக்கு சுமா. கதிரவன் மாதிரி வாடையமைப்பாளர்கள் இயற்கையாவே வாடைய ரெக்கார்ட் பண்ணுவாங்களாம். ஆனா சசிதான் கம்யூட்டர் வெச்சி வாடையமைக்கிறார். அதுவும் எல்லாருக்கும் பிடிச்சுதான் இருக்கு. என்ன இருந்தாலும் டிஜிட்டல் ரெக்கார்டிங் ஆச்சே!"

"தியேட்டர்ல போய் பாக்கனும் நீ. திருச்சி எக்ஸ்பிரஸ் படத்த தியேட்டர்ல பாக்கும் போது கும்முன்னு இருந்துச்சே. நல்ல டால்பி ஸ்மெல்லர்ஸ். ஒவ்வொரு வாசனையும் தெளிவா இருந்ததே. நீயுந்தான வந்த?"

"ஆமாமா. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல.....ஒரு நாத்தம் வருமே. தியேட்டர்ல இருக்கோமான்னு எனக்கே டவுட் வந்துருச்சி. ஆனா ஒன்னுப்பா....பழநி பஞ்சாமிர்தத்த கமல் நக்கும் போது எனக்கு வாயில எச்சி ஊறிடிச்சி."

"அதெல்லாம் கம்யூட்டர்ல போட்டதுதானே. நல்லாதான் இருந்தது. பழைய ஆளுங்கதாம்ப்பா இன்னமும் நேச்சுரலா ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்வாங்க. பழைய படமெல்லாம் அப்படிதான வந்தது."

"ஆமாம் சுமா. நம்ம சின்னக் குழந்தையா இருந்தப்போ வாசனைய ரெக்கார்டே பண்ண முடியாதாமே. வெறும் ஒலியும் ஒளியும்தானாம்."

அப்பொழுது ரமாவிற்கு ·போன் வருகிறது. ரமாவின் தாயார் வீட்டிலிருந்து கூப்பிடுகிறார். ரமா கொஞ்ச நேரம் பேசிவிட்டு ·போனை வைத்து விடுகிறாள். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கம்மென்று பாயாச வாடை.

"ரமா...இன்னைக்கு வீட்டுல என்ன விசேஷம்? பாயாச வாடை பலமா இருக்கு."

"ஊருல இருந்து சித்தி சித்தப்பால்லாம் வந்துருக்காங்க. அதான். இந்த மொபைல் ·போனால இதுதான் பிரச்சனை. அன்னைக்கு நம்ம காலேஜ் போகாம ஹோட்டலுக்குப் போனோமே. கரெக்ட்டா அப்பதான் வீட்லருந்து போன். டேபிள்ள என்னடான்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு ஆர்டர் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த வாடையெல்லாம் போகாம நான் ·போன பொத்தி வெச்சுக்கிட்டு பேச வேண்டியிருந்தது. நல்ல வேள என்கிட்ட கேமராவை ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இல்லைன்னா நான் இருக்குற எடம் தெரிஞ்சி போயிருக்கும்."

"ஆமா. நல்ல வேள. தப்பிச்சோம். இல்லைன்னா உங்க வீட்லருந்து எங்க வீட்டுக்கும் விஷயம் போயி ஒரே பிரச்சனையாப் போயிருக்கும்."

சுமாவுக்கு ஒரு சந்தேகம். "ஏய்! அன்னைக்கு உன்னோட பாய் பிரண்ட் ஏதோ பெர்பியூம் போட்டுட்டு வந்தான்னு மொபைல்ல ரெக்கார்டு பண்ணியே. அதக் கொஞ்சம் போடுடி. நல்ல ஸ்மெல்."

"சுமா! இதெல்லாம் வேண்டாம். அந்த வாடையத்தான் ஒரு வாட்டி போட்டேன்ல. அப்புறம் என்ன அடிக்கடி. ரொம்ப அலையாத!"

"சரிம்மா. விட்டுத்தள்ளு. என்னவோ மேன்லியா நல்லா இருந்ததேன்னு கேட்டேன். சரி. சரி. அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா. நான் கம்ப்யூட்டர்ல போட்டு காப்பி பண்ணிக்கிறேன்."

இருவரும் ஒருவருக்கொருவர் டாட்டா சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்.


அவ்வளவுதான். கதை முடிந்தது. மக்களே! இந்தக் கற்பனையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இப்படியும் நடக்குமா?

அன்புடன்,
கோ.இராகவன்

பட்டியல் போடுவோமா?

பட்டியல் போடுவோமா?

நட்சத்திர வாரம் தொடங்கியாச்சு. மொத நாள் எல்லாரையும் போல அறிமுகம் போட்டாச்சு. வேறென்ன போடலாம்? ஒரு பட்டியல்? அதுவும் இந்த வாரம் என்னென்ன போடலாமுன்னு ஒரு பட்டியல் போட்டா எல்லாருக்கும் வசதியா இருக்குமில்லையா! ஹோட்டல்ல மெனு குடுக்குற மாதிரி. நமக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா அன்னைக்கு மட்டும் பிளாக் வந்து படிச்சிக்கலாம். இல்லையா!

சரி. பட்டியலைப் பாப்போமா!

திங்கள் - 21 நவம்பர் - என்னைத் தெரியுமா போட்டாச்சு. பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கோம். அதுனால இன்னைக்கு இதுக்கு மேல ஒங்கள தொந்தரவு செய்யல.

செவ்வாய் - 22 நவம்பர் - ஒரு நகைச்சுவைக் கதை. படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது. கொஞ்சம் கேணத்தனமா இருக்கும். ஒருவேளை ஒங்களுக்குப் பிடிச்சுப் போனா, புதுமையா இருந்ததுன்னு சொல்லீரலாம். சரியா?

புதன் - 23 நவம்பர் - ஒரு கதை. இதுவும் கற்பனைக் கதைதான். காலைல கதை. மாலைல கவிதை. இரண்டு கவிதைகள். இரண்டும் நான் ஏற்கனவே எழுதியவை. இருந்தாலும் அத இன்னைக்குப் போடனுமுன்னு ஒரு ஆசை. கவிதைக்குக் கீழ, அந்தக் கவிதையை எப்போ எதுக்கு எழுதினேன்னு ஒரு சின்ன குறிப்பு குடுத்திரலாம்.

வியாழன் - 24 நவம்பர் - ஒரு கதை. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இந்தக் கதை போதும்.

வெள்ளி - 25 நவம்பர் - பெங்களூரில் ஒரு நாள். பெங்களூருக்கு நான் வந்தப்ப நடந்த ஒரு அனுபவம். அப்புறம் மாலையில் தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டு ஒரு நாளுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம்.

சனி - 26 நவம்பர் - கனவுகளே! ஆயிரம் கனவுகளே! எனக்கு வந்த கனவுகளைப் பத்தி ஒரு பதிவு. பகல்ல கனவு.

ஞாயிறு - 27 நவம்பர் - ஒரு திரைப்பட விமர்சனம். நான் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்பட விமர்சனம். இந்தப் பதிவைப் போடும் முன்னாடி எந்தப் படமுன்னு சரியா ஊகிச்சா பரிசு காத்திருக்கு. ஊகிங்க ஊகிங்க.

என்ன நண்பர்களே.....பட்டியலைப் பாத்தீங்களா? என்ன நினைக்கிறீங்க பட்டியலைப் பத்தி! எதையாவது மாத்தனுமா? பட்டியல் பற்றிய ஒங்க கருத்துகளை அள்ளி விடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்குஉண்மையைச் சொல்லட்டுமா......வருடம் தவறாமல் செல்கின்றவன் நான். இந்த ஆண்டு பல காரணங்களால்..நேரமின்மை என்பதே உண்மையான நியாயமான காரணம்...செல்ல முடியவில்லை. நடந்ததைப் பார்த்தால் அடுத்த ஆண்டு இன்னும் கூட்டம் குறையுமென்று தெரிகிறது. இது எனக்கு வருத்தம்தான்.

Sunday, November 20, 2005

என்னைத் தெரியுமா!

என்னைத் தெரியுமா!

அன்பு நண்பர்களே, என்னைத் தெரியுமா? என்னுடைய பெயர் இராகவன் என்பதைத் தவிர, இந்த வார தமிழ்மண நட்சத்திரம் என்பதைத் தவிர. தெரியாவிட்டால் உங்களுக்கு என்னை முறையாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.

உலகத்திலேயே மிகவும் புண்ணியப்பட்ட பூமி என்று என்னைக் கேட்டால் தூத்துக்குடி என்று சொல்வேன். நான் பிறந்த ஊராயிற்றே. எனது ஆரம்பகால நினைவுகளை முழுமையாகக் கொண்ட ஊராயிற்றே. ஆகையால் தூத்துக்குடியை நினைக்கும் பொழுது மட்டும் ஒரு ரெட்டிப்பு சந்தோஷம்.

அப்புறம் மதுரை, கரூர், கோவில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று பல சுற்றுகள் சுற்றியாகி விட்டது. இப்பொழுது இருப்பு பெங்களூரில். பொறுப்பு மென்பொருளில். ஆகையால் இப்பொழுது நான் பெங்களூரியன். ஆனால் ஆழத்தில் தோண்டித் தூர் வாரிப் பார்த்தால் ஒரு தூத்துக்குடிச் சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாத ஒரு ஒட்டுதல் தூத்துக்குடிக்கு மட்டும்.

எழுத்து என்பது எனக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சின்ன வயதில் படிக்கும் வழக்கம் நிறைய உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பது கனவாக இருந்த அளவுக்கு நடுத்தரக் குடும்பம்.

ஆகையால் லெண்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களே பெரும்பாலும் வரும். எனக்கு? அதற்கும் ஒரு வழியை ஆண்டவன் காட்டத்தான் செய்தார். என்னுடைய நண்பன் ராஜேஷின் தந்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். அவர்கள் வீட்டில் அம்புலிமாமா, ரத்னபாலா, பொம்மை, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். ராணி காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அங்குதான் தவமாய்த் தவமிருப்பேன்.

அதே நேரத்தில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் படிக்காமல் விட்டதில்லை. அவைகளையும் புரட்டாமல் விட மாட்டேன். படிப்பது என்பது அவ்வளவு சுகம். படைப்பது?

அப்படியாக நான் படிக்கையில் எழுதும் ஆர்வமும் வந்தது. மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுதத் தொடங்கிய கதை ராமாயணம். ஒரு ஊரில் ஒரு தந்தை. அவருக்கு நான்கு மகன்கள் என்று போகும். தப்பும் தவறுமாக ஒரு பக்கம் எழுதியிருப்பேன். ஆனால் ஊக்கமில்லாமையால் அது தொடராமல் போனது.

பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ அங்கும் இங்குமாய் எழுதி இப்பொழுது தமிழ்மணத்திற்கும் வந்தாயிற்று. வந்ததோடு இல்லாமல் நட்சத்திரம் என்ற புதிய பட்டம் கிடைத்த கௌரவம். வரும்பொழுது வாங்கிக் கொள்வது சரிதானே.

இத்தனைக்கும் யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பலர் நினைவிற்கு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட என்னுடைய ஆழ்மன ஆசையையும் சொல்லியே ஆகவேண்டுமல்லவா.

சின்ன வயதில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள். ஏன் தெரியுமா? என் வயதொத்தவர்களும் குறைந்தவர்களும் என்னைச் சுற்றித்தான் உட்கார்ந்திருப்பார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்வேன். கருத்தும் இருக்காது. திருத்தும் இருக்காது. ஆனாலும் கதை. காலில்லாக் கதை. அவர்களும் ஆவென வாய் திறந்து கேட்பார்கள். அதனால் வீட்டில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள்.

அதாவது கதை சொல்லும் ஆர்வம். நாலு பேருக்கு நாம் சொல்லி அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த வயதில் நான் சொன்ன கதைகள் எனக்கு இந்த வயதில் நினைவில்லை. ஆனால் கதை சொன்னது நினைவிருக்கிறது.

இந்த கதை சொல்லும் அடையாளம் வயது வளர வளர குறைந்து போனது. படிப்பும் ஒரு காரணம். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நான் எதையாவது எழுதிப் படித்தால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடமா அல்லது தமிழில் எழுதப்படும் கதையா என்று என் தந்தை ஐயப்பட்டு எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.

ஆனால் முழுமையான எழுத்துப் பயிற்சி இல்லை. தினமும் ஒரு கவிதை என்று ஒரு குழு இருந்தது. அங்கு சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது அந்தக் குழு இல்லை என்பது வருத்தமான விஷயம். அந்தக் குழுவினர் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இங்கிருக்கும் தமிழறிஞர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஒரு பட்டிமன்றம். அதற்கு என்னை நடுவராக உட்கார வைத்து விட்டார்கள். எப்படியோ நடத்தி முடித்து கொஞ்சம் பாராட்டுகளையும் பெற்றேன்.

மறுபடியும் ஒரு பட்டி மன்றம். மகேந்திரன் என்ற நண்பர் வழியாக. பெங்களூர் டவுன் ஹாலில் நடந்தது. இந்த முறை அணித்தலைவர் பதவி. பாரதியின் படைப்புகளில் விஞ்சியது நாட்டுக்காகவா? வீட்டுக்காகவா? எனக்கு வீடு பேறு கிடைத்தது. பேசும் பொழுது மற்றவர்களை விட கைதட்டல் நிறைய கிடைத்தது. ஆனால் வெற்றி அடுத்த அணிக்கு. அதனால் என்ன. செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்தோமே என்ற மகிழ்ச்சி.

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. நான் எழுதும் கவிதைகள் செய்யுள் போல இருப்பதாக என்னுடைய நண்பர் பிரதீப் கருத்துக் கூறினார். அவர் சொன்னதிலும் காரணமில்லாமல் இல்லை. அப்பொழுது ஆசிரியப்பாவைக் கொஞ்சம் பழகத் தொடங்கியிருந்தேன்.

ஃபோரம் ஹப்பில் கொஞ்சம் கதைகள் எழுதினேன். வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்திருந்த நேரம். விக்கிரமாதித்தன் கதையையும் வீரப்பன் கதையையும் குழப்பி ஒரு நகைச்சுவைத் தொடர்கதை எழுதினேன். அது கொஞ்சம் நன்றாக ரசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு சிறு கதைகளும் எழுதினேன். பக்குவமில்லாத எழுத்து நடையில் (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு நீங்க சொல்றது புரியுது. ஹி ஹி)

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. இந்த முறை வேலையால். கிட்டத்தட்ட ஒரு வருடம். பிறகு தமிழ் மன்றத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு முத்தமிழ் மன்றத்தின் அறிமுகமும் கிடைத்தது. கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். நடை கொஞ்சம் கை வந்தது. அதே நேரத்தில் மீண்டும் ஃபோரம் ஹப். அங்கு கவிதைகள் பகுதிக்கு நடத்துனராகப் பதவி. எனக்கென்ன தெரியும் கவிதையைப் பத்தி என்று சொன்னாலும் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கொடுத்ததை நம்பிக் கையோடு பெற்று முடிந்தவரை சிறப்பாகச் செய்து வருகிறேன்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து கைவந்து கொண்டிருந்த வேளையில்தான் தமிழ் மணத்தின் அறிமுகம். ஒரு பெரிய வட்டத்தில் கலந்த உணர்வு. இங்கும் நல்ல நண்பர்கள். நல்ல பதிவுகள். படிக்க நிறைய அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கும் இடம். அருவியிலிருந்து நேரே வாயைப் பிளந்து தண்ணீர் குடிக்கும் நிலை. எவ்வளவு தண்ணீர்! ச்சேசே...ஒரே ஒரு வாயைப் படைத்தானே பிரம்மன் என்று நினைக்கும் நிலை. அவ்வளவு விஷயக் கடல். அதை விட தாங்கள் நினைப்பதைச் சொல்ல மக்களுக்கு ஒரு இடம்.

அப்படிப்பட்ட இனிய தமிழ் மணத்தில் இப்பொழுது எழுதி உங்களுக்கெல்லாம் பதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிறைய. இறைவன் அருளால் அனைத்தும் நடக்கும்.

ஆகையால் முதலில் அனைவருக்கும், வாய்ப்பளித்த மதி கந்தசாமி மற்றும் காசி ஆறுமுகத்திற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக நன்றி சொல்லி விட்டு இந்த ஒருவாரப் பயணத்தைத் துவக்குகிறேன். வழக்கம் போல உங்களோடு கை கோர்த்துக் கொண்டு.

அன்புடன்,
கோ.இராகவன்