Thursday, October 06, 2005

இரகசியத் தோட்டம்

Secret Garden
Author : Frances Hodgson Burnett

இரகசியத் தோட்டம்

ஒரு அழகான தோட்டத்தை மனக்கண்ணால் உருவாக்கிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் உருவாக்கிப் பாருங்கள். தோட்டத்தைச் சுற்றிச் சுவர்கள். உங்களுக்குப் பிடித்த மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், நீரோடைகள், நீரூற்றுகள், அழகான புல்தரைகள். அத்தனையும் உங்களுக்குப் பிடித்த வகையில். அழகாய் ஆடும் ஊஞ்சல். அதில் அசைந்தாடும் நினைவுகள். வண்ண வண்ணப் பறவைகள். காற்றிலிருந்து சுரங்களைப் பிரித்து பாடும் குயில்கள். ஆடும் மயில்கள். ஓடும் மான்கள். நாடும் கிளிகள். கூடும் முயல்கள். அடடா! ஆண்டுதோறும் வசந்தகாலமாக இருந்தாலும் அந்தத் தோட்டம் அலுக்காது அல்லவா! அப்படிப் பட்ட தோட்டத்தை யாரும் திருடிவிட்டால்! அப்படித் திருடியது ஒரு சிறுமியென்றால்! என்ன இது? தோட்டத்தை எப்படித் திருட முடியும்? அதுவும் ஒரு சிறுமி, என்று கேட்பது எளிது. ஆனால் அதை உண்மை என்று நிரூபிப்பது கடினம். அப்படி நிரூபிப்பதுதான் ப்ரான்ஸஸ் ஹோட்ஜ்சன் பர்னட் எழுதிய சீக்ரட் கார்டன்.

கதை பத்தொன்பதாம் நூற்றண்டு இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. வெள்ளையர்கள் ஆட்சிக்காலம். அவர்களின் கேளிக்கை மிகுந்த வாழ்க்கை முறை. அடிமை வேலைக்காரர்கள். அப்படிப்பட்ட ஒரு தம்பதியரின் குழந்தைதான் சிறுமி மேரி. முழுக்க முழுக்க ஆயா ஒருத்தியின் கவனிப்பிலேயே வளர்ந்தவள். செல்லமாக வளர்ந்ததால் அடம் பிடிக்கும் தன்மையும் பிடிவாத குணமும் சேர்ந்து கொண்ட சிறுமி. துணிச்சலும் அகம்பாவமும் வேறு. அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வருகிறது. காலரா பரவி பெற்றோர்கள் பலியாகிறார்கள். இங்கிலாந்திலுள்ள மாமாவிடம் அனுப்பப்படுகிறாள்.

க்ரேவன், ஒரு பெரிய பணக்காரர். பெரிய கோட்டை போன்ற பழைய வீட்டில் வசிக்கிறார். அழகான மலைப்பாங்கான பிரதேசம். நிலவளமும் நீர்வளமும் நிறைந்தது. அந்த வீட்டில் பல அறைகள் மூடப்பட்டுள்ளன. யாரும் புழங்குவதில்லை. அவளைப் பார்த்துக் கொள்ளும் பொருப்பு க்ரேவனின் உதவியாளராகிய மெட்லாக் (Medlock) என்ற பெண்மணியிடம் ஒப்படைக்கப் படுகிறது. மெட்லாக்கின் உதவியாளராகிய மார்த்தா, மேரியை கவனித்துக் கொள்கிறாள். சிடுசிடுவென்று எப்போதும் இருக்கும் மேரி, மார்த்தாவின் அன்பால் சிறிது மாறுகிறாள்.

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரியிடம் ஒரு சாவி கிடைக்கிறது. அது மூடப்பட்டுள்ள ஒரு தோட்டத்தின் சாவி. பத்தாண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட தோட்டம் பாழ்பட்டு கிடக்கிறது. க்ரேவனின் மனைவியின் தோட்டம் அது. ஊஞ்சலில் ஆடுகையில், மரக்கிளை ஒடிந்து இறக்கிறாள் திருமதி க்ரேவன். அப்போது மூடப்பட்டு சாவி தொலைக்கப்பட்ட தோட்டமது. இப்போது மேரியின் கைகளில். யாருக்கும் தெரியாமல் தோட்டத்தைச் சீரமைக்கிறாள். அவளுக்கு உதவுகிறான் மார்த்தாவின் தம்பி டிக்கான். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். க்ரேவன் வாழ்க்கையில் நொந்தவர். மேலும் முதுகு லேசாக வளைந்தவர். மனைவி இறந்தபின் வீட்டில் அதிகம் தங்கமால் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் இரவு வேளையில் அழுகுரல் ஒன்று மேரிக்கு கேட்கிறது. அது க்ரேவனின் மகன் காலினுடைய (Colin) அழுகுரல். மிகவும் செல்லமாக வளர்ந்த பையன். அதனால் கெட்டுப் போயிருக்கிறான். பிறந்ததில் இருந்தே தந்தையால் கைவிடப்பட்டதால் கட்டிலிலேயே வளர்கிறான். நடந்ததேயில்லை. சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போனவன். அவனை மேரி சந்திக்கிறாள். இரகசியத் தோட்டம் பற்றி அவனுக்கும் தெரிகிறது. மேரியுடனும் டிக்கானுடனும் அவனும் இரகசியத் தோட்டத்திற்குப் போகிறான். காலினுக்கு எல்லோரும் பயப்படுவதால் அவனுடைய கட்டளைக்குப் பயந்து யாரும் அவர்களைப் பின்தொடர்வதில்லை. மேலும் பெரிய தோட்டங்கள் நிரம்பிய வீடென்பதால் அவர்களை வீட்டுக்குள்ளிருந்தும் கவனிக்க முடியவில்லை.

தோட்டம் செழிக்கிறது, காலினும் நடக்கப் பழகுகிறான். அவனுடைய மனமும் மாறுகிறது. நல்ல சிறுவனாக மாறுகிறான். தந்தை வந்ததும் நடந்து காண்பிக்க விரும்புகிறான். அதனால் நடப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் மூவரும். க்ரேவன் வந்தாரா? மகன் நடப்பதைக் கண்டாரா? தோட்டம் பற்றிய இரகசியம் என்னவாயிற்று என்பதே முடிவு.

பாழ்பட்ட தோட்டம் பண்படுவது போல இரண்டு குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக திருந்துவதுதான் கதை. மிகவும் அற்புதமான இந்தக் கதையைப் படிக்கப் படிக்க இன்பம். கீழே வைக்க முடியாது. எல்லா கதைகளிலும் கெட்ட குழந்தைகள் தண்டனை பெறுவதாகத்தான் வரும். ஆனால் இந்தக் கதையில் அவர்கள் திருந்தி நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்கிறார்கள். நல்ல கதை. கண்டிப்பாகப் படியுங்கள். இந்தக் கதை internet-இல் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

http://www.americanliterature.com/CG/CGINDX.HTML

அன்புடன்,
கோ.இராகவன்

1 comments:

said...

இந்தக் கதையை திரைப்படமாக எடுத்துவிட்டார்களா? பார்த்த மாதிரி தோன்றுகிறது. படிக்கும் போது அந்த காட்சிகள் மனதில் ஓடுகிறது. ஆனால் நிச்சயமாய் தெரியவில்லை.