Tuesday, May 24, 2005

பொங்கிய பால் தாக்கரே

பால் பொங்கியே விட்டது. பின்னே? மராட்டியப் பத்திரிகைகள் சும்மாயிருக்க வேண்டியதுதானே! பால் தாக்கரே குடும்பத்தோடு வெளிநாடு போவார். சுற்றிப் பார்ப்பார். அதையெல்லாமா பத்திரிகையில் போடுவது. வெளிநாடு சென்று சுற்றிப் பார்ப்பது அவரவர் சொந்த விஷயம். அப்படி இவர் வெளிநாட்டுக்குப் போவதையும் சிவசேனா தொண்டர்கள் வெயிலில் களப்பணி செய்வதையும் பத்திரிகையில் போட்டால் பால் பொங்காமலா இருக்கும்?

இந்தியாவிற்கு வந்த பிறகு பத்திரிகைகளை ஒரு பிடிபிடித்து விட்டார். அதுவும் சிவசேனைக் கட்சியின் சாம்னா பத்திரிகை வழியாகவே. முள்ளைக் கொண்டு முள்ளைக் குத்துவது போல. "இளைய பத்திரிகையாளர்கள் நிறைய வந்து விட்டதால் சிவசேனை மீது தாக்குதல் அதிகரித்து விட்டது. குழந்தைகளோடு வெளிநாடு செல்வது தனிப்பட்ட விஷயம். இந்த வெளிநாட்டுப் பயணங்கள் உலக அரசியல் நிகழ்வுகளைக் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும். மற்ற தலைவர்கள் எல்லாம் வெளிநாடு போகின்றார்கள். அதனால் அவர்களுக்கும் நாட்டிற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதா என்ன?"
பால் தாக்கரேயின் நகைச்சுவை உணர்வு அவர் ஆத்திரத்தில் இருக்கையில்தான் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணங்களில் உலக அரசியலை அவர் எவ்வளவு கற்றார் என்று சொல்லும் பொழுது நமக்கு நிறுத்த முடியாத சிரிப்பும் அதனால் வயிற்று வலியும் வருகிறது.

பால் தாக்கரே புளித்த பால்.

0 comments: