Monday, August 08, 2005

திருவாசக இசைத்தட்டு - எனது பார்வையில்

திருவாசக இளையராஜாங்கம்

எல்லாரும் திருவாசகத்தை விமர்சித்துத் தெருவாசகமாக்கி விட்ட நிலையில் நான் மட்டும் சும்மா இருக்கலாமா? என் பங்குக்கு விமர்சித்திருக்கிறேன்.

இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால்
சிற்சில.


எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல
ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி
அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள்
திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும்
பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன்
பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய்
மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும்
வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.


இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான
இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச்
சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை
வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு
இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய
திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.


இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை
முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள்
எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப்
பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே
இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய
தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.


திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது.
வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding
என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி
அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு
வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.


தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில்
இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக்
கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில்
அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.
இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாகப் பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச்
சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக
இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.


பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும்
கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள்.
அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட
முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.


இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும்
அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு
ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள்
கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.


திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த
இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி
வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த
வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.


இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும்
பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே!
அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல்
நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு.


நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன்
இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு.
ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல்
இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும்
அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.


மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று
தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில்
ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச்
செய்திருப்பார்கள்.


ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக
இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது
கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும்
தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு
பாடல்.


"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப்
பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல்
மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.


நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக
இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று
பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி
ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.


உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன்
குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு
வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.


சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர்
முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன்.
அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.


இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும்
பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை
செய்கிறார்கள்.


பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றிலிருக்கும்
பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம்
அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு
இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே
தருகிறேன்.


புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணிமுற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்குஅற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறேஇந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க
வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.


சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன்
வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல்
இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?


இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி
பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால்
உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல்
மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.


காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை
விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி.
பிரச்சனைக்கு என்ன விளக்கம்?


அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு
மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம்.
அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும்
உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள
நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும்
போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செறிவு பற்றாமை.


இந்தப் பிரச்சனை எழுப்பியதும் வலைப்பூவில் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே
படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு
வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!"
கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.


மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும்
அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.


இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள்.
காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின்
மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!
நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன்.
மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே
செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து
முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே
இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.


அந்த அச்சமே திருவாதவூராருக்கும். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும்
செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி
நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும்
தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.


சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு
என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள்.
குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.


இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு
முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.


இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.

இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு
இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக்
கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின்
கருத்து அது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொல்லியிருக்கின்றார்.


இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ
என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச்
சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு
சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?


இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக்
கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத
ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.


தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும்
பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை.
அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.


அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற
முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச
முயன்றிருக்கின்றார்கள்.


இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி
என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும்
வேண்டும். இன்னமும் வேண்டும்.


சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.

இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா.
நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ்,
திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய
இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.


அன்புடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

உணர்ந்து, அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் ராகவன்.

//போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.//

அவர்கள் ஞானம் அவ்வளவுதான் - விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்!

said...

மகாபாரதத்தில் கர்ணனை அவை நடுவில் அவமானப் படுத்திய போல இளையராஜாவை அவமானப் படுத்துகிறார்களோ என்ற எண்ணம்.

அவருடைய இசைய விமர்சியுங்கள். அவரையல்ல.

நானும் அவரது இசையில் குறை என்று எனக்குத் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். அதே நேரத்தில் பாராட்ட வேண்டியதையும் பாராட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்.

said...

ராகவன் இன்றுதான் உங்கள் இசை விமர்சனம் காண் நேர்ந்தது. அருமையாக விமர்சித்து உள்ளீர்கள். ராகவன் விமர்சனம் ராகத்திற்கேற்ற விமர்சனம்.

said...

கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ராமா. இசைத்தட்டைக் கேட்டுத் தோன்றியதை ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கின்றேன். அவ்வளவே.

said...

உயர்திரு இராகவன்,

அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்..

இந்த அலைகள் ஓய்வதில்லை...ஓயவும் ஓயாது

அதுக்கெல்லாம் ஞானம் வேணும்.. ஞானம் வேணும்.. ஞானம் வேணும் டோய் - என்று இளயராஜாவே பாடி இருக்காரே...!

said...

"அதுக்கெல்லாம் ஞானம் வேணும்.. ஞானம் வேணும்.. ஞானம் வேணும் டோய்
- என்று இளயராஜாவே பாடி இருக்காரே...! "

மேற்படி ட்யூனிலேயே திருவாசகத்தை பாடியிருப்பதுதான் பிரச்சினை.

அம்மநாம் அஞ்சுமாறே = வாடி என் கப்பக்கிழங்கே

"பவதாரிணியால் இளையராஜாவின் ஈடு கொடுக்க முடியவில்லை."

என்னதான் இளையராஜா ரசிகராக இருந்தாலும் கொஞ்சம் மனசாட்சியை
கேட்டுட்டு சொல்லுங்க.

said...

ஆதிரை, நாள் இளையராஜா ரசிகன் அல்ல. வெறும் இசை ரசிகன் அவ்வளவே.

// நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. //
உம்பர்கட்கரசே பாடலுக்கு அடுத்து வரும் கூட்டணிப் பாடலைக் குறித்து நான் எழுதியது. குறையைக் குறையென்றுதான் சொல்லியிருக்கிறேன். மேலும் இளையராஜாவின் குரல் இந்தப் பாடலில் பொருந்தவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

"பூவேறு கோனும்" பாடலில் அவர் குரல் வித்தியாசமாக ஒலிக்கவில்லை. ஒருவேளை பவதாரணியின் குரல் பொருந்தாததால் இளையராஜாவின் குரல் பொருத்தம் சரியாகத் தெரியவில்லையோ என்னவோ!

said...

நன்றாய் ஆராய்ந்திருக்கிறீர்கள். இந்த இசைத்தட்டில் உள்ள பாடல்களுக்கு பொருள் எழுத ஆரம்பித்துள்ளேன். படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

http://oratariothiruvasagam.blogspot.com/

http://sivapuraanam.blogspot.com/2005/09/blog-post_29.html

http://sivapuraanam.blogspot.com/2005/10/blog-post_112847907394157692.html

said...

குமரன் நல்ல முயற்சி. இதுவரை உங்கள் மொழி பெயர்ப்பைப் பார்க்காமல் இருந்தேன். இனி அங்கும் வருகிறேன். சுட்டிக்காட்டி அழைத்தமைக்கு நன்றி.

said...

//இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.//

ராகவன் இந்த பாடல் 'சிவபுராணம்' தான். நீங்கள் சொன்னது போல வேறு பதிகங்களின் வரிகளை இதில் இணைக்கவில்லை.
மெட்டமைப்பதற்கு ஏதுவாக வரிகள் இடம் மாற்றப்பட்டிருக்கின்றன அவ்வளவே

மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை