Monday, August 29, 2005

வாழைப்பழப் பாயாசம்

வாழைப்பழப் பாயாசம்

மிகவும் சுவையான இந்தப் பாயாசம் வெல்லத்தைக் கொண்டு செய்யப் படுவது. சீனி சேர்க்கப் படுவதில்லை. ஆகையால் தமிழ் மணம் மிகுந்த பாயாசம்.

பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - ஒன்றரை கோப்பை ( இனிப்புப் பிரியர்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளல்லாம் )
பால் - இரண்டு கோப்பை
பழுத்த வாழைப்பழம் - மூன்று அல்லது நான்கு ( பச்சைப் பழமாக இருக்க வேண்டும். மலைப்பழமும் போடலாம். ஆனால் இரண்டு மடங்காகப் போட வேண்டும். மலைப்பழம் சிறியதாக இருக்கும். நாட்டுப் பழமும் பூலாஞ்செண்டும் ஆகாது )
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு ( வெறும் வானலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் )

செய்முறை

1 . அடிகனமான பாத்திரத்தில் பாலையும் அரிசியையும் போட்டு வேக விடவும். குக்கரில் வேகவைத்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

2. அரிசி குழைய வெந்ததும் அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.

3. வெல்லமும் அரிசியும் நன்றாகக் குழைந்து வருகையில் (வெல்ல வாடை கமகமவென வரும்) வெட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்.

4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாகக் கிளறவும்.

5. எல்லாம் கலந்து பாயாசப் பதத்தில் வருகையில் ஏலக்காய்ப் பொடியும் முந்திரியும் திராட்சையும் கலக்கவும்.

6. கெட்டியான வாழைப் பழப் பாயாசம் தயார்.

இதையே மாம்பழத்தைக் கொண்டும் செய்யலாம். ஆனால் மல்கோவா போன்ற நாரில்லாத இனிப்பு மாம்பழங்களையே பயன்படுத்த வேண்டும். நன்கு கனிந்த பலாப்பழங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பலாப்பழத்தை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். வாழை விரைவில் வெந்து விடும். பலா சற்று நேரம் பிடிக்கும்.

செய்து உண்டு மகிழ்ந்து கருத்துச் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

0 comments: