Monday, August 22, 2005

சூர் கொன்ற ராவுத்தனே

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே

இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.

ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.

கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.

கண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?

வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.
மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.

ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.
இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?

முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.

சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.

கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.

இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.

மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.

3 comments:

said...

நல்ல பதிவு ராகவன்... நீங்கள் இப்பத்வை இப்பொழுது ஏன் எழுதினீர்கள் என்றும் எனக்கு தெரியும் ;-))

said...

நன்றி முகமூடி. நீங்களாவது புரிந்து கொண்டீர்களே என்று மகிழ்ச்சி.

said...

Miga nalla pathivu Raagavan.