Thursday, August 04, 2005

கந்தனுக்கு அலங்காரம் - 1

கந்தனுக்கு அலங்காரம்

கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.

காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பாடலாக இடுகிறேன். எல்லாம் முருகன் செயல்.

காப்புச் செய்யுள்

அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.

அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?

அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.

அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.

அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.

இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!

கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.

இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.

உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.

ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

1 comments:

said...

போட்டு கலக்கிட்டீங்க தலைவா....மேலும் கந்தரலங்காரம் பத்தி எழுதியிருக்கீங்களா? இன்னும் உங்க வலைப்பதிவை முழுமையாப் பார்க்கலை. கந்தரலங்காரம் இருந்தால் படிக்க ஆசை. இல்லைன்னா சீக்கிரம் எழுத ஆரம்பீங்க...ரொம்ப நல்லா எழுதிரீங்க.

எச்சரிக்கை - நீங்க எழுதவில்லைன்னா நான் எழுத ஆரம்பிச்சிடுவேன்...ஏற்கனவே 9 blogs இருக்கு...கந்தரலங்காரத்தை சேர்த்தா 10 blogs ஆயிடும். :-)