Wednesday, December 14, 2005

பெங்களூர் பெயர்க்காரணம்

பெங்களூர் இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெயர் பெற்றுள்ள ஊர். உச்சரிப்பதற்கு கொஞ்சம் புதுமையான பெயரும் கூட. ஆனால் இதன் உண்மையான பெயர் என்ன?

இப்பொழுது அந்த உண்மையான பெயரைத் தேடி எடுத்துதான் பெங்களூருக்குச் சூட்டப் போகின்றார்களாம். ஆம். பெங்களூரு என்ற பெயரைச் சூட்டப் போகின்றார்களாம்.

சரி. அது அரசியல். நம்மூரிலும் வடக்கிலும் கேரளாவிலும் நடந்ததுதானே. கர்நாடகா மட்டும் விதிவிலக்கா என்ன! ஆகையால் அந்த விஷயங்களை விட்டு விட்டு இந்தப் பெயரின் மூலகாரணத்தைப் பார்ப்போமா!

பெங்களூரு என்பதை விட பெந்தகாளூரு என்பதே மிகச்சரியான பழைய பெயர். தமிழில் வகரம் வரும் இடங்களில் பகரம் (ba) போட்டு விட்டால் அது கன்னடமாகி விடும். பெரும்பாலான சமயங்களில் இது நடக்கும். வா என்றால் பா. வந்து என்றால் பந்து. வண்டி என்றால் பண்டி. அது போலத்தான் வெந்த என்றால் பெந்த.

பெந்த என்றால் வெந்ததைக் குறிக்கும். காளு என்றால் பயறு. பெந்த காளு என்றால் வெந்த பயறு.

கெம்ப்பே கௌடா என்பவர்தான் பெங்களூரின் தந்தை. அதாவது சிறுசிறு ஊர்களைச் சேர்த்துக் கொஞ்சம் பெரிய ஊராக்கி ஆண்டவர். பெரிய கோட்டை என்று எதுவும் கட்டி விடவில்லை.

எல்லையில் மண்சுவர்களை பெரிதாக எழுப்பிப் பாதுகாப்புத் தூண்களையும் நிறுவியிருக்கின்றார். அங்கு ஆட்கள் காவலுக்கு நிற்பார்களாம். இந்து நடந்தது 1537ல். அதற்குப் பிறகு நூற்றுச் சொச்ச வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் பிஜாப்பூர் சுல்தான்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றது.

ஆனால் பிஜாப்பூரில் உட்கார்ந்து கொண்டு பெங்களூரைச் சமாளிக்க முடியவில்லை. (இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.)
எதற்கு வம்பென்று பிஜாப்பூர் சுல்தான் பெங்களூரை மைசூர் மகாராஜாவிற்கு குத்தகைக்கு விட்டு விட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திப்பு சுல்தான், ஆங்கிலேயர் எனப் பல கைகள் மாறி இன்றைக்கு இந்த அளவிற்குப் புகழோடு இருக்கின்றது.

சரி. நாம் பெயர்க் காரணத்திற்கே வரவில்லை. தனக்கென்று ஒரு சிறிய நாட்டை உருவாக்கிக் கொண்டிருந்த கெம்ப்பே கௌடா இன்றைய பெங்களூரின் அன்றைய பகுதிக்கு வந்த பொழுது அங்கிருந்தவர்கள் அவருக்குச் சாப்பிட வேகவைத்த பயறுகளைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதாவது மொச்சைப் பயறு. பெங்களூரில் மொச்சை என்றால் எல்லாருக்கும் இச்சை. அந்த அளவிற்கு விரும்பப் படுகிறது. உப்புமாவிலும், சோற்றிலும், அனைத்திலும் கலந்து உண்ண விரும்புவார்கள். கன்னடத்தில் அவரேக்காயி என்பார்கள். இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். அப்படிப் பிதுக்கி எடுத்த தோலை வீட்டு வாசலில் போட்டு விடுவார்கள். அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.

அப்படிச் சாப்பிட்ட மொச்சை நன்றாக வெந்திருந்ததால் அந்த இடத்திற்கு பெந்தகாளூரு என்று பெயரிட்டார் கெம்ப்பே கௌடா. பிறகு அங்கே இருப்பவர்களுக்குக் காவலாக இருந்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.

அந்த பெந்தகாளூருதான் மருவி இன்று பெங்களூர் என்று வழங்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பேங்களூர். ஒவ்வொரு மாநிலமாக பெயர்கள் மாறி வருகின்ற வேளையில் பெங்களூர் அரசியல்வாதிகள் மட்டும் சும்மாயிருக்கலாமா? மண்ணின் மணம் வீசும் பெயர் இருக்க வேண்டும் என்று பெங்களூரு என்று பெயரை மாற்றுகின்றார்கள்.

அதற்கு வழக்கம் போல பலர் எதிர்த்தும் பாராட்டியும் கருத்துகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் பேசிய வரையில் என்னுடைய கன்னட நண்பர்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தில் வருத்தத்தை விட மகிழ்ச்சியே மேலோங்கியிருந்தது தெரிந்தது. எல்லாம் மொழி செய்யும் வேலைதானே.

வடக்கத்தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இந்தப் பெயர் மாற்றத்தை மறைமுகமாகக் கிண்டலடித்தாலும் மும்பை முகவரியில் பாம்பே என்று எழுதாமல் மும்பை என்றே குறிப்பிடுகிறது. நம்ம கதை நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நமது கன்னட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் பெங்களூரின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

36 comments:

பூனைக்குட்டி said...

//(இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.) //

puRiyalaiyE iraakavan.

G.Ragavan said...

//(இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.) //

மோகன்தாஸ், வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று நாம் சொல்வது போல. பெங்களூர் வாழ்கிறது. எங்களூர் தேய்கிறது என்று வடகர்நாடகாவினர் போராடுகின்றார்கள். இப்பொழுது கர்நாடகா என்றாலே பெங்களூர் என்ற மாதிரிதானே ஆகியிருக்கின்றது. இங்கு இருக்கும் வளர்ச்சியில் சிறிது கூட அங்கு இல்லை. ஹைகோர்ட்டுக்குக் கூட பெங்களூருக்குத்தான் வர வேண்டும் என்ற நிலமை வேறு இருந்தது. மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷங்கள் வேறு நடுநடுவே.

இப்பொழுது நிலமை கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதாவது வடகர்நாடகாவில் மட்டும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் இருப்பதா! பெங்களூரிலும் அப்படியே செய்வோம் என்று அரசாங்கம் புறப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ரோடு புராஜக்ட்டுக்கும் கோர்ட்டு தலையிட்டு வேலை நடக்கின்றது.

G.Ragavan said...

// interesting facts raghavan. //

நன்றி ஈஸ்வர். நீங்கள் உங்கள் பங்குக்கு பெங்களூர் பத்திச் சொல்லுங்களேன்.

துளசி கோபால் said...

ராகவன்,

சரித்திரம் எவ்வளவு சுவாரசியம் பார்த்தீங்களா?

ஏன் பெந்தகாளூருன்னே வச்சா இன்னும் நல்லா இருக்குமே.
எல்லாம் அரசியலாமா? போட்டும்.

மொச்சையை உரிச்சிட்டு தோலைப் போட்டு வையுங்க. மிதிக்கரதுக்கு நான் வரேன்.

G.Ragavan said...

// சரித்திரம் எவ்வளவு சுவாரசியம் பார்த்தீங்களா? //

ஆமாம் டீச்சர். பல சுவையான சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கு டீச்சர். ஆனா பாருங்க...நம்ம பாட புத்தகத்துல வருஷத்த நெனவு வெச்சுக்கிர்ரதுதான் வரலாறுன்னு வறுக்குறாங்க டீச்சர். இந்த நிலை மாறனும்.

// மொச்சையை உரிச்சிட்டு தோலைப் போட்டு வையுங்க. மிதிக்கரதுக்கு நான் வரேன். //

வாசலோடு மிதிச்சிட்டுப் போயிராம வீட்டுக்குள்ளயும் வாங்க டீச்சர்.

b said...

பெங்களூர் பற்றியும் பெயர் பற்றியும் விளக்கம் தந்த ராகவன் அவர்களுக்கு நன்றி.

தாணு said...

வரலாறு தெரியும்போது கூடுதல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கு!

G.Ragavan said...

// பெங்களூர் பற்றியும் பெயர் பற்றியும் விளக்கம் தந்த ராகவன் அவர்களுக்கு நன்றி. //

நன்றி அண்ணா. சரி. அதென்ன ராகவன் அவர்கள். தம்பீன்னுதான வழக்கமா கூப்பிடுவீங்க. அதையே கண்டிநியூ பண்ணுங்க.

G.Ragavan said...

// வரலாறு தெரியும்போது கூடுதல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கு! //

உண்மைதான் தாணு. வரலாற்றைச் சொல்வதிலும் ஒரு சுவையிருக்க வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டு மதனின் வந்தார்கள் வென்றார்கள். உண்மையிலிருந்து பிரண்டு விடாமல் விறுவிறுப்பையும் குறைத்து விடாமல் செல்லும் அந்தப் புத்தகம்.

Muthu said...

நமது கன்னட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் பெங்களூரின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துவோம்

i second this..

rv said...

sennai ஐ chennai-ஐ அழைப்பது போல பெந்த காளு ஊரை பெங்களூருன்னு மாத்தப் போறாங்களா?

brand dilute ஆகுமோன்னு சந்தேகமா இருக்கு.. பாப்போம். எப்படியும் மாறறதுக்கு முன்ன கன்னடிய சட்டசபை முதற்கொண்டு ஜனாதிபதி வரை ஒத்துக்கணுமே...

சுந்தரவடிவேல் said...

வியப்பூட்டும் பெயர்க்காரணம்.

G.Ragavan said...

// i second this.. //

நன்றி முத்து. அதுதான் நன்று என்று எனக்குப் படுகின்றது.

G.Ragavan said...

// sennai ஐ chennai-ஐ அழைப்பது போல பெந்த காளு ஊரை பெங்களூருன்னு மாத்தப் போறாங்களா? //

இராமநாதன். chennai உச்சரிப்பே சரி. தமிழ் இலக்கணப்படி. இன்னைக்கு மதுமிதாவோட உச்சரிப்பு-2 இது பத்திப் போட்டிருக்கேன். sennai உச்சரிப்பு தவறு. அதே போல ஸட்டை, ஸொல்லு எல்லாமே தப்பு.

// brand dilute ஆகுமோன்னு சந்தேகமா இருக்கு.. பாப்போம். எப்படியும் மாறறதுக்கு முன்ன கன்னடிய சட்டசபை முதற்கொண்டு ஜனாதிபதி வரை ஒத்துக்கணுமே... //
எல்லாரும் ஒத்துக்குவாங்க. இல்லைன்னா பிரச்சனையாயிருமே. brand dilution...I doubt it. chennai has nothing less than madras. moreover the phonotic difference between bangalore and bengaluru is very less.

G.Ragavan said...

அடடா phonetic phonotica வந்திருக்கு ராமநாதன். அஜ்ஜஸ் பண்ணிப் படிச்சிக்குங்க.

குமரன் (Kumaran) said...

நேற்றுதான் இந்த பெயர் மாற்றம் வரப்போவதைப் பற்றி விகடனில் படித்தேன். உங்களிடம் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். நீங்கள் ஒரு பதிவாகவே போட்டுவிட்டீர்கள். :-)

உங்கள் கருத்தினை முத்து வழிமொழிந்தார். நான் அவர் சொன்னதை வழிமொழிகிறேன்.

இராமநாதன். என்ன இன்னைக்கு வழிமொழியாம கருத்து சொல்லிட்டீங்க? :-)

தருமி said...

ராகவன்,
நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து சொன்னதைக் குமரன் வழிமொழிய, நான் குமரன் சொன்னதை வழிமொழிகிறேன். (இல்லாட்டாலும், வேற என்ன பண்ண முடியும்?)

Balloon MaMa said...

இராகவன்,
//இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. //
//சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். //

//அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.//

எது விநோதப் பழக்கம்?
மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பதா?

அல்லது
அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்கும் என்று நம்புவதா?

ஏன்னா எங்க வீட்டில் மொச்சைப்பயறு சாம்பார் இவ்வாறே பிதுக்கி எடுத்துச் சமைக்கப்படும்.

பெங்களூர் பெயருக்குப் பின்னால் மொச்சைப் பயறா? ம்...சுவராசியமான தகவல்.

rv said...

//என்ன இன்னைக்கு வழிமொழியாம கருத்து சொல்லிட்டீங்க//

குமரன்,
நான் வேலைன்னு சொன்னா யாராவது நம்பப்போறீங்களா என்ன? :))

வெளிகண்ட நாதர் said...

இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், இப்ப வடக்கத்தி ஆளுங்க கையில மாட்டிக்கிட்டு முழிக்கிது, சின்னை, சின்னையுட்டு இருப்பாங்க போங்க!

G.Ragavan said...

// ராகவன்,
நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து சொன்னதைக் குமரன் வழிமொழிய, நான் குமரன் சொன்னதை வழிமொழிகிறேன். (இல்லாட்டாலும், வேற என்ன பண்ண முடியும்?) //

வழிமொழியிறதுல புதுச் சாதனையையே பண்ணீட்டீங்க எல்லாருமா சேர்ந்து. உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள். அடுத்த வாட்டி நமது இந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

G.Ragavan said...

// எது விநோதப் பழக்கம்?
மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பதா? //
இல்லை. இல்லை. எங்கள் வீட்டிலும் இப்படிச் சமைப்பார்கள்.

// அல்லது
அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்கும் என்று நம்புவதா? //
இதைத்தான் நான் சொன்னேன். நேற்று கூட பக்கத்து வீட்டு வாசலில் பிதுக்கிய தொலிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை மிதிக்காமல் பைக் ஏற்றினால் சுவை எப்படியிருக்கும் என்று யாரும் சொல்லவில்லை.

G.Ragavan said...

// இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், இப்ப வடக்கத்தி ஆளுங்க கையில மாட்டிக்கிட்டு முழிக்கிது, சின்னை, சின்னையுட்டு இருப்பாங்க போங்க! //

அதெல்லாம் அப்படித்தான் நாதரே. அரசியல்ல இதெல்லாம் சகஜமய்யா!

பிரதீப் said...

சென்னையே ஏதோ ஒரு தமிழரல்லாத சென்னப்ப நாயக்கரைப் பின்பற்றி வைக்கப்பட்ட பெயர் என்று எங்கோ படித்தேன்.

பெங்களூரை பெங்களூரு என்று சொல்வதில் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் என்று ஏதேனும் பெயர்க்குறி சோதிடர்களைக் கேட்டால் தெரிஞ்சிரும்.

நல்லா வெளக்கீருக்கீகய்யா.

Desikan said...

இராகவன்,

சில 'பெண்களூர்' பதிவுகள் எழுதினேன் அப்போது இந்த டாபிக்கை கொஞ்சம் டச் செய்தேன்.
அது: http://www.desikan.com/blogcms/?item=0-5-46

மற்ற பெண்களூர் பதிவுகள்
1.http://www.desikan.com/blogcms/?item=29
2.http://www.desikan.com/blogcms/?item=0-2-30
3.http://www.desikan.com/blogcms/?item=0-3-39
4.http://www.desikan.com/blogcms/?item=0-4-42
5.http://www.desikan.com/blogcms/?item=0-5-46

எனக்கு உங்கள் தொலைபோசி எண்ணை desikan at gmail முகவரிக்கு அனுப்ப முடியுமா ?

Maravandu - Ganesh said...

அன்புள்ள ராகவன்

பதிவுக்கு நன்றி.

FYI - சித்தாமுரளியின் வலைப்பதிவில் படித்தது

Bangalored" is a verb! Did u know that?
"Bangalored" is a verb which recently got added in the dictionary. A person is said to be bangalored if he lost his job because the work got outsourced to bangalore or any other city in India.

"He got bangalored last week" is an example of its usage.

U can also type this word "bangalored" in Google search n see.

Lot of people in US got bangalored that it became an issue during the US presidential election. That’s exactly when this word was coined.

One such similar verb is "shanghaied" which means kidnapped.

Great that Bangalore has a verb in its name only that it has a negative meaning.


Source: http://www.doubletongued.org/index.php/dictionary/bangalored/

Unknown said...

சமீப வருடங்களில் வடக்கத்தியர்களின் வருகையால் பெங்களூர் (பெங்களூரு?)பழைய முகத்தைத் தொலைத்துவிட்டு, வடக்கத்திப் பண்பாட்டில் கலந்து விட்டது போல் தோன்றுகிறது!
பெயரிலாவது பழைய முகம் இருக்கட்டும்!

பூங்குழலி said...

தகவலுக்கு நன்றி.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது.
வெற்றிபெற்றவர்கள் அவர்களின் வசதிக்காகவே வெற்றிகண்ட ஊர் பெயர்களையும் எழுதிக்கொள்வார்கள்.

அதை நாம் மீட்டபிறகு,
பழைய பெயர் நாம் தோற்றதையே நினைவுப்படுத்துதலால்
இம்மாதிரி உணர்வுகள் எழுகின்றது.
இதில் தவறேதும் இருப்பதாக நினைக்கவில்லை.

புதுப்பெயருடன் பெங்களூரு பொலிவுபெற வாழ்த்துக்கள்.

பூங்குழலி.
http://kuzhappam.blogspot.com

மாயவரத்தான் said...

அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?! ;)

மணியன் said...

ஆர அமர வந்ததிற்கு மன்னிக்க. நல்ல தகவல்கள்.
ஆமாம், பெல்காம் பெயர்மாற்றத்திற்கு மொழிப்பற்றுதான் காரணமா, இல்லை மாநிலப் பற்றா ?

G.Ragavan said...

// அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?! ;) //

ஆமாய்யா தெரியாம வெச்சுட்டேன். பெங்களூருல யாருகிட்டயும் சொல்லாதீக....

G.Ragavan said...

// ராகவன்,
சுவையான தகவல்களை சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது //

நன்றி வீ.கே. அடிக்கடி நம்ம வலைப்பூக்களைப் பாக்க வாங்க.

G.Ragavan said...

// ஆமாம், பெல்காம் பெயர்மாற்றத்திற்கு மொழிப்பற்றுதான் காரணமா, இல்லை மாநிலப் பற்றா ? //

பெல்காம் இல்லை மணியன். பெங்களூரின் பெயர் மாற்றன். பெல்காம் எப்பொழுதோ பெளகாமு-வாகிவிட்டது.

பெயர் மாற்றத்திற்குக் காரணம் பதவிப்பற்றுதான். வேறென்ன?

அனுசுயா said...

மிக அருமையான பெயர் ஆராய்ச்சி. தங்கள் பணி தமிழக நகரங்களின் பெயர்களுக்கும் பரவ வாழ்த்துகிறேன்.

மாயவரத்தான் said...

About this post in today's dinamalar..(with ur foto!)

http://www.dinamalar.com/2006jan13/flash.asp

G.Ragavan said...

நன்றி மாயவரத்தான். காலையில் தி.ரா.ச எனக்கு ஃபோன் செய்து சொன்னார். இங்கு பெங்களூரில் வரும் எடிஷனில் இந்தத் தகவல் இல்லை. இண்ட்டெர்நெட்டில் பார்த்தேன். கடைசியில் பெங்களூருதான் நமக்குப் பேரு வாங்கித் தருது. :-)