Monday, December 17, 2007

நஒக - மஞ்சனத்தி

இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.

எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.

இருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.

கலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.

சாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா?

மரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழிய போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.

மஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன? மஞ்சப் பிடிச்சா சரிதான?

இப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.

இப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க?

ஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.

அப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.

இந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான். தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.

என்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க? நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா?

அன்புடன்,
கோ.இராகவன்

34 comments:

said...

இதுதான் இளா பதிவில் மஞ்சனத்தி மரத்தைப் பத்தி அம்புட்டு எழுதினீங்களா? சரி உங்க முடிவு எனக்கு என்னமோ புரியவே இல்லைங்க. மாப்புங்க. ஆனா நம்ம அறிவு அம்புட்டுதான்.

said...

அடிக்க வராதீங்க, ஆனா எனக்கு புரீலியே? :(

பொண்ணு சூஸைட் பண்ணி செத்துப்போச்சா? ஏன்?

said...

பாட்டு எழுதுனாத் தான் விளக்கம் சொல்லணும்ன்னு நினைச்சேன். இங்க என்னடான்னா கதை எழுதுனாலும் விளக்கம் சொல்லணும் போலிருக்கே. புரியலையே?! :-((

said...

பழய ஞாபகத்த எல்லாம் கிளப்பி விடுறீங்க.... :)
நானும் சின்ன வயசுல மஞ்சனத்திப் பழம் சாப்பிட்டுருக்கேன்..
:)
//
உங்க முடிவு எனக்கு என்னமோ புரியவே இல்லைங்க. மாப்புங்க. ஆனா நம்ம அறிவு அம்புட்டுதான்.
//
ரிப்பீட்டேய்ய்ய்....

//
மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக.
//
அப்ப நீங்க நம்ம ஊர்ப்பக்கமா? :))

said...

// இலவசக்கொத்தனார் said...
இதுதான் இளா பதிவில் மஞ்சனத்தி மரத்தைப் பத்தி அம்புட்டு எழுதினீங்களா? சரி உங்க முடிவு எனக்கு என்னமோ புரியவே இல்லைங்க. மாப்புங்க. ஆனா நம்ம அறிவு அம்புட்டுதான்.//

அந்தப் பின்னூட்டத்த எழுதுறப்போ இந்தக் கதைய எழுதுற எண்ணமே இல்லை. எழுதி முடிச்சப்புறம் பட்டுன்னு தட்டுனதுதான் இந்தக் கதை. யோசிச்சி எழுதுறத விட..இந்த மாதிரி பொறி வர்ரப்போ எழுதுறது ரொம்பவே லேசாயிருக்கு. அதான் எழுதுனேன்.

கதை புரியலையா? ஒரே ஒரு வரி கடைசீல சேத்திருக்கேன். அது எழுத நெனச்சு விட்டுப்போன வரி. இப்பப் புரியுதான்னு பாருங்க.

said...

அப்ப என் யூகம் ரைட்டா?

said...

மஞ்சனத்தி மரத்தினுடைய படம் இருந்தால் போடுங்களேன் ஜீரா.

கதைசொல்லியாகிற ஆர்வத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்

said...

// SurveySan said...
அப்ப என் யூகம் ரைட்டா? //

ரைட்டு ரைட்டு ரைட்டு :) சருவேசருக்குத் தெரியாம எதுவும் இருக்குமா என்ன ;)

அந்த வரி எழுத நெனச்சதுதான். ஆனா எப்படி விட்டுப் போச்சுன்னு தெரியலை.தவறு என்னோடதுதான்.

said...

நல்லாயிருக்கு ஜிரா.... இதைமாதிரி கதை ஒன்னே புனைவின் நிழல் புத்தகத்திலே படிச்சிருக்கேன்.... :)

said...

// ஜெகதீசன் said...

பழய

ஞாபகத்த எல்லாம் கிளப்பி விடுறீங்க.... :)
நானும் சின்ன வயசுல மஞ்சனத்திப் பழம் சாப்பிட்டுருக்கேன்..
:) //
ஆகா...அது ஒங்களுக்குப் பிடிச்ச பழமா...சூப்பரு


////
உங்க முடிவு எனக்கு என்னமோ புரியவே இல்லைங்க. மாப்புங்க. ஆனா நம்ம அறிவு அம்புட்டுதான்.
//
ரிப்பீட்டேய்ய்ய்....//



கடைசிப் பத்தியத் திரும்பப் படிங்களேன். புரியும்னு நெனைக்கிறேன்

////
மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக.
//
அப்ப நீங்க நம்ம ஊர்ப்பக்கமா? :))//

நீங்க எந்தூரு

? நான் தூத்துடி மாவட்டம். பொறந்ததெல்லாம் தூத்துடி . சொந்தூரு விளாத்திகுளம் நாகலாபுரம் பக்கம்.

said...

//

குமரன் (Kumaran) said...
பாட்டு

எழுதுனாத் தான் விளக்கம் சொல்லணும்ன்னு நினைச்சேன். இங்க என்னடான்னா கதை எழுதுனாலும் விளக்கம் சொல்லணும் போலிருக்கே. புரியலையே?! :-((//
அழாதீங்க குமரன்

. இதெல்லாம் ஜகஜம். :) திரும்பவும் படிச்சிப் பாருங்க புரியலாம் . நடையே புரியலைன்னா ஒன்னுஞ் செய்ய முடியாது. :)

said...

//

மதுமிதா said...
மஞ்சனத்தி

மரத்தினுடைய படம் இருந்தால் போடுங்களேன் ஜீரா. //


அதத்தான் மதுமிதா தேடுனேன் மொதல்ல. கெடைகலை. ஆங்கிலத்துல அத என்ன சொல்லுவாங்கன்னும் தெரியலை. அப்புறம் விட்டுட்டேன்.


// கதைசொல்லியாகிற ஆர்வத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள //



அப்பக் கதைல தோத்துட்டேங்குறீங்களா

? ஹி ஹி...கதை பலருக்குப் புரியலையாம். ஒங்களுக்குமா? :)

said...

//
மதுமிதா said...
மஞ்சனத்தி மரத்தினுடைய படம் இருந்தால் போடுங்களேன் ஜீரா.

கதைசொல்லியாகிற ஆர்வத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்

//
ரிப்பீட்டேய்

said...

நன்றாக சொல்லியிருக்கிங்க ஜிரா...நல்லாயிருக்கு...;)

போட்டிக்கு வாழ்த்துக்கள் ;)

said...

அழகான கதை..
supera eludhi irukeenga.
itha nijama illa kadhaiya?

said...

Ragavan, superaayirukku Natai! :)
"Ficus Racemosa" correctaannu theriyala ... oru guess ... Googlatichen ippathththaan! :) ....

said...

அந்த மரத்துலயே தூக்கு மாட்டிக்கிட்டாங்களா???
‘ஒரு மஞ்சனத்தி மரத்தின் கதை’ னு தலைப்பு வச்சிருக்கலாம்!!

said...

நடை புரிந்தது இராகவன். கடைசி பத்தி படிக்கிறப்பவும் முடிவும் புரிஞ்சது. விட்டுப் போன வரியும் இருந்திருந்தா புரிதல் சரியா இருந்திருக்கும். அது இல்லாததால கொஞ்சம் குழப்பம் இருந்தது.

said...

பின்னூட்டம் படிச்ச பிறகுதான் எனக்கு முடிவு புரிஞ்சது :(((

அதுமில்லாம நிறைய வார்த்தைகள் எனக்கு புரியலை ஜி.ரா. மொதல்ல கயிட்டம்னு இருந்தத பாத்து குழம்பினேன். அப்புறம் ரெண்டாவதா வந்த இடத்து அர்த்தம் வச்சுதான் புரிஞ்சிக்கிட்டேன்.

நல்லா சொல்லி இருக்கீங்க... :)))

said...

// இராம்/Raam said...
நல்லாயிருக்கு ஜிரா.... இதைமாதிரி கதை ஒன்னே புனைவின் நிழல் புத்தகத்திலே படிச்சிருக்கேன்.... :) //

வாப்பா ராம். இதேமாதிரி கதையா.. இல்ல இதே கதையா :) தெளிவாச் சொல்லுப்பா. அந்தப் புனைவின் நிழல் பத்திச் சொல்லேன்.

// மங்களூர் சிவா said...
//
மதுமிதா said...
மஞ்சனத்தி மரத்தினுடைய படம் இருந்தால் போடுங்களேன் ஜீரா.

கதைசொல்லியாகிற ஆர்வத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்

//
ரிப்பீட்டேய் //

நம்ம மங்களூர் சிவாவுக்கு ரெண்டு மங்களூர் போண்டா பார்சல் :)

said...

// கோபிநாத் said...
நன்றாக சொல்லியிருக்கிங்க ஜிரா...நல்லாயிருக்கு...;)

போட்டிக்கு வாழ்த்துக்கள் ;) //

கோபி, இது போட்டிக்கு இல்ல. நட்புக்கு எழுதுனது. :)

// Dreamzz said...
அழகான கதை..
supera eludhi irukeenga.
itha nijama illa kadhaiya? //

இது கதைதாங்க. கதையேதான்.

// Madura said...
Ragavan, superaayirukku Natai! :)
"Ficus Racemosa" correctaannu theriyala ... oru guess ... Googlatichen ippathththaan! :) ....//

மதுரா, நீங்க குடுத்த பேரப் போட்டு கூகிள்ள தேடுனேன். அது இல்லைங்க இது. நீங்க சொல்லீருக்குறது அத்திப்பழம். மஞ்சனத்திங்குறது வேற. பழம் கருப்பா இருக்கும். அதுல கண்ணு கண்ணா புள்ளி வெச்சிருக்கும்.

said...

கதையும், எழுத்து நடையும் நல்லா இருக்கு

said...

ராகவன் அருமை. இன்னும் செத்தநோடம் கதையைக் கூட்டி எழுதி இருந்தா நல்லாருக்குமோனு தோணுது! அப்புறம் மஞ்சனத்தியை ஆங்கிலத்தில் Nuna indica Rubiaceae குடும்பத்தைச் சேர்ந்த்தது. மேல உள்ள பேர்ல கூகிளாண்டவர்ட்ட கேட்டா படம் கொடுக்கிறார். ஆனால் கருப்பு வெள்ளைல இருக்கு. சாட்சாத் மஞ்சனத்திதான். ஆனாலும் அடர் பச்சை இலைப் பின்புலத்தில் கன்னங்கரேல்னு இருக்கும் மஞ்சனத்திப் பழம் அழகு கருப்பு வெள்ளைல தெரியலை. அதோட படத்தில் இருப்பது காய்கள்தான். எங்கூர்ல கருப்பா உள்ள ஆசாமிகளுக்கு மஞ்சனத்திப் பழம்னு பேரு!!!

said...

:)))

said...

//
நீங்க எந்தூரு

? நான் தூத்துடி மாவட்டம். பொறந்ததெல்லாம் தூத்துடி . சொந்தூரு விளாத்திகுளம் நாகலாபுரம் பக்கம்.
//
விருதுநகர் மாவட்டம்.. சிவகாசி பக்கம்...
"தீப்பட்டி ஒட்டப் போறது" பத்தி சொன்னதும் எங்க ஊர்ப்பக்கமோன்னு நினைத்தேன்.... :)

said...

ஜிரா

கதையைக் கொஞ்சம் ஒட்டிப் படிச்சாக்கா வெளங்கும்!
அந்தப் பொண்ணு மஞ்சனத்தி மரத்துல தூக்கு மாட்டிக்கிடிச்சு! அதை அங்கன இங்கன மறைவாத் தான் சொல்லி இருக்கீரு!

//அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக.//

//சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம்//

மத்தபடி பேச்சு வாடை ரொம்ப நல்லாத் தேன் இருக்கு! இதே பேச்சுல தான என்னய வாழ்த்திப்போட்டீக, சூலம் வெரட்டின பெரீம்மா வாயால?

//காதோலையாவது கருகமணியாவது//

இன்னாது காதோலை கருகமணி எல்லாம் காணாமப் போச்சா?
எங்கூருல, இன்னிக்கும் காதோலை கருகமணி இல்லாம, பச்சையாத்தாளுக்கு பொங்க வைக்க முடியாது. வச்ச பொங்க சட்டிய, காதோலை கருகமணி கொடுக்காம பூசாரி வாங்க மாட்டாரு!

மரம் மஞ்சனத்தி சரி!
அந்தப் பொண்ணு பேரும் மஞ்சனத்தியா? கதைக்குத் தலைப்பா வச்சி இருக்கீயளே! அதேன் கேட்டேன்!

said...

//மஞ்சனத்தி கொம்பு = கொப்பு
பொறுக்கீருவாக = பெறக்கீருவாக//

சும்மா கம்பேர் பண்ணி பாத்தேன், எங்கூருல எப்படிப் பேசுவோமின்னு! :-)

மஞ்சனத்தி படம் கேக்குறாகளே மக்கள்! இதுவா பாருக?
http://www.botanypictures.com/plantimages/morinda%20citrifolia%2001%20(noni%20fruit).JPG

படத்துல காய்வாட்டா இருக்கு! ஆனாப் பழுத்தா கருப்பா, கண்ணு வச்சி இருக்கும்! நீங்க சொன்னா மாதிரி வீச்சம் வீசும்! இதை எங்கூர்ல எலி அன்னாசிப் பழம் ன்னு சொல்லுவாய்ங்க! :-)

said...

// ஜி said...
:))) //

என்ன ஜி, இப்பிடிச் சிரிக்கிற? என்ன விவரம்? சொல்லீட்டா நாங்களும் சிரிப்போம்ல

// ஜெகதீசன் said...
//
நீங்க எந்தூரு

? நான் தூத்துடி மாவட்டம். பொறந்ததெல்லாம் தூத்துடி . சொந்தூரு விளாத்திகுளம் நாகலாபுரம் பக்கம்.
//
விருதுநகர் மாவட்டம்.. சிவகாசி பக்கம்...
"தீப்பட்டி ஒட்டப் போறது" பத்தி சொன்னதும் எங்க ஊர்ப்பக்கமோன்னு நினைத்தேன்.... :) //

அட என்னங்க என்னவோ விருதுநகர் தள்ளீருக்குறாப்புல சொல்றீங்க. அப்படி விளாத்திகுளத்துல இருந்து இப்பிடிப் போனா சாத்தூரு...விருதுநகர் மாவட்டம். பக்கத்தூருதானய்யா.

said...

முதல்ல படிச்சேன்... புரியல. இப்ப படிச்சேன் புரியுது :-))

இது எங்க ஊரு பக்கம் பேசற வழக்கு இல்லை. அதனால என்னுமோ கதைல மனசு ஒட்டல :-(

இந்த மாதிரி இறந்து போனவங்க கதை சொல்றது ஏற்கனவே வந்துடுச்சே :-(

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். ஏன்னா இந்த மாதிரி ட்விஸ்ட் வெச்சி எழுதறதுல நீங்க தான் எனக்கு Inspiration :-)

said...

கதெ புரிஞ்சிருச்சு, நல்லா சொல்லாடல்,நடை. வேறென்னத்த சொல்ல

said...

// அருட்பெருங்கோ said...
அந்த மரத்துலயே தூக்கு மாட்டிக்கிட்டாங்களா???
‘ஒரு மஞ்சனத்தி மரத்தின் கதை’ னு தலைப்பு வச்சிருக்கலாம்!! //

அதாவது காதல் கவிஞரே... இது கதைன்னு எல்லாருக்கும் தெரியும். அப்புறமெதுக்கு தலைப்புல கதை. அதுவுமில்லாம மஞ்சனத்தின்னு மரத்துக்குத்தான் பேரு. ஆகையால மரமும் தேவையில்லை. அதான் மஞ்சனத்தி மட்டும் மொட்டையா நிக்குது. கதை முடிவுல இருந்தாப்புல.

// இம்சை அரசி said...
பின்னூட்டம் படிச்ச பிறகுதான் எனக்கு முடிவு புரிஞ்சது :(((

அதுமில்லாம நிறைய வார்த்தைகள் எனக்கு புரியலை ஜி.ரா. மொதல்ல கயிட்டம்னு இருந்தத பாத்து குழம்பினேன். அப்புறம் ரெண்டாவதா வந்த இடத்து அர்த்தம் வச்சுதான் புரிஞ்சிக்கிட்டேன்.

நல்லா சொல்லி இருக்கீங்க... :))) //

:) இது தெக்கத்திப் பேச்சும்மா...அப்படித்தான இருக்கும். கொஞ்சம் முன்னப்பின்ன... கதை எப்படியோ புரிஞ்சதே...அதுவே சந்தோசந்தான்.

said...

நீங்க சொன்ன முடிவு கொஞ்சம் புரிந்தாலும், இன்னொரு முடிவு வழியிலும் பார்த்தால் அதுவும் சரியாகப் பட்டது!

தற்கொலைக்குப் பதிலாக, வயசான முறைமாமன் செத்துப் போக, போன சுருக்குலியே இவ திரும்பிட, மரத்தின் கூடவே இவளும் அதே இடத்தில் வளர்கிறாள், இப்போது சீண்டுவாரில்லாமல்,... வயது முத்திப் போய்விட்டதால்!

'பளம் பெறக்க' ஏன் பையன்கள் வரவில்லை என்பதில் 'அந்த' முக்கியமான காரணம் சொல்லப்படாதது குறையாகப் பட்டது. பேய் பயம் காட்டியே அந்தப் பக்கம் வரவிடாமல் தடுத்துருவாங்களே!

நடை வளமை!

said...

//
அட என்னங்க என்னவோ விருதுநகர் தள்ளீருக்குறாப்புல சொல்றீங்க. அப்படி விளாத்திகுளத்துல இருந்து இப்பிடிப் போனா சாத்தூரு...விருதுநகர் மாவட்டம். பக்கத்தூருதானய்யா.
//
:))
ஆமாங்க... பக்கத்தூருதான்...
நான் படிச்சது சாத்தூர் தானுங்க(SRN காலேஜ்)...
:))

said...

ஜிரா,

உங்க எழுத்துநடை அசத்தல். முடிவு எனக்கு புரியுது...

நல்லா எழுதி இருக்கிங்க. மஞ்சனத்தி மரம் என்றால் என்ன என்று புரியல. எங்க ஊரில் அதுக்கு வேற பெயர் இருக்குமோ ?