Saturday, May 17, 2008

சு-வா? ஜா-வா?

போட்டீன்னு வந்துருச்சுய்யா.... நல்லதோ கெட்டதோ... வந்தாச்சு... அப்ப என்ன செய்யனும்? ரெண்டு பேருக்கு ஒரு வேலையக் குடுத்து யாரு நல்லா செஞ்சாங்கன்னு பாக்கனும். அப்பத்தான ஒரு முடிவுக்கு வர முடியும்? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

இசையரசிக்கு வலைப்பூ வெச்சிருக்குறதால நான் பி.சுசீலா பாடுன பாட்டு மட்டுந்தான் கேப்பேன்னு நீங்க நெனச்சா அது தப்பு. எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரின்னு தொடங்கி இப்ப இருக்குற ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்னும் கேப்பேன். பிடிக்கனும். அவ்வளவுதான்.

ஆனா இங்க சர்வேசன் கெளப்புன பிரச்சனை பி.சுசீலாவா எஸ்.ஜானகியான்னுதான். ஆகையால மத்தவங்கள விட்டுருவோம். இவங்க ரெண்டு பேரோட நேரம்... நம்மளப் போல ஞானசூனியங்க கிட்டயும் கேள்வி ஞானங்க கிட்டயும் மாட்டனும்னு இருக்கு. என்ன செய்றது.

எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு. அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதோன்னு சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஐயப்பாடு கிடையாது. அவங்க பாடுன பல பாட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒன்னா ரெண்டா...நெறைய இருக்கு. ஆனா இசையரசியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். முதலிடம் அவங்களுக்கு. அவ்வளவுதான். அதுனால எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன்.

சரி. பதிவோட மையக்கருத்துக்கு வருவோம். எஸ்.ஜானகியா பி.சுசீலாவான்னு போட்டி வைக்கனும்ல. ரெண்டு பேத்துக்கும் ஒரே பாட்டைக் குடுத்துப் பாட வைப்போமா?

வைதேகி காத்திருந்தாள் படத்துல பி.சுசீலா பாடுன ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாட்டு இங்க இருக்கு.


அதே பாட்டைத் தெலுங்குல எஸ்.ஜானகி பாடியிருக்காங்க. ஜாபில்லிக்கோசம் ஜாபில்லிக்கோசம்னு. அந்தப் பாட்டு இங்க.



ரெண்டையும் கேட்டுப் பாருங்க. உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க.

இப்ப ஒரே பாட்டை ரெண்டு பேரையும் பாட விட்டுக் கேட்டோம். ரெண்டு பேரும் ஒரே பாட்டுல பாடுனா? அதுக்கும் இளையராஜா கிட்டயும் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டயும் பேசி ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு ஒரு பாட்டு கச்சிதமா போட்டுக் குடுத்துட்டாங்க.

கற்பூர தீபம் படத்துல காலம் காலமாய் பெண்தானே கற்பூர தீபம்னு ரெண்டு பேரும் சேந்து பாடுறாங்க. கேளுங்க. கேட்டுட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க.



அடுத்து யாருய்யா.. ஓ.. எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ன படங்க? சொல்லத்தான் நினைக்கிறேனா? நினைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? சொல்லுங்க. ஓ! படத்தோட பேரே அதானா? அந்தப் படத்துல பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடின்னு ரெண்டு பேரும் பாடுறாங்க. கேளுங்க. கேளுங்க.




அட... ஒரு டூயட் பாட்டு வேற இருக்கா. சூப்பர். யாரு கூட டூயட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூடயா. அப்பச் சரி. என்ன படம்? கண்ணில் தெரியும் கதைகளா? என்ன பாட்டு? நான் ஒரு பொன்னோவியம் கண்டேன். நல்ல பாட்டு. இந்தப் படத்துல இந்தப் பாட்டுக்கு மட்டும் இளையராஜா இசை. சரி. அந்தப் பாட்டையும் கேட்டுருவோம்.



என்னது கன்னடப் பாட்டு விட்டுப் போயிருச்சா? என்ன பாட்டு? பிரியாங்குற படமா? ஸ்ரீதேவி நடிச்சாங்களே.. ரஜினிகாந்த். ஆமா.. அந்தப் படத்துல டார்லிங் டார்லிங்குன்னு ஒரு பாட்டு பி.சுசீலா பாடியிருக்காங்க. அதுக்கென்ன? ஓ! அந்தப் படத்த கன்னடத்துல டப்பிங் பண்றப்போ அதே பாட்டை எஸ்.ஜானகி பாடியிருக்காங்களா? அப்பச் சரி. அதையும் கேட்டுருவோம்.

எஸ்.ஜானகி பாடியது



பி.சுசீலா பாடியது





என்ன மக்களே...எங்க ஓட்டுப் போடுறதுன்னு பாக்குறீங்களா? இங்க ஓட்டெல்லாம் போட வேண்டாம். கருத்து சொன்னாப் போதும். ஏன்னா இவங்க ரெண்டு பேருமே இசைத்துறையில் நிறைய சாதிச்சவங்க. நம்ம ரசிகர்கள். ஆகையால நம்ம கருத்துகளை மட்டும் சொல்லலாம். அந்த உரிமை நமக்கு இருக்கும். மக்களே ஸ்டார்ட் தி மூசிக் :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பிரியாணி - 1

அதாவதுங்க.. பிரியாணின்னா நமக்கு ... அதாவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா இந்தியாவுல சாப்ட பிரியாணி இன்னும் மறக்க முடியாம இருக்கு. அதுவும் காரசாரமான ஐதராபாத் பிரியாணி. ருசி நாக்குலயே இருக்கு.

சரி கதைக்கு வருவோம்...

கியோக்கன்ஹாஃப் (Keukenhof) அப்படீங்குற ஊர் பேர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா அங்க என்ன இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். டூலிப் (tulips) மலர்த் தோட்டங்களை அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே... அந்தத் தோட்டங்கள்தான்.

போன வருசம் நான் இங்க நெதர்லாந்து வந்தப்பவே போயிருக்க வேண்டியது. ஆனா பாருங்க இந்தத் தோட்டங்கள் மூனு மாசத்துக்குத்தான் இருக்கும். அப்புறம் பூவே இருக்காது. மார்ச்சுல இருந்து மே மாசத்துக்குள்ளதான் பாக்க முடியும்.

நான் இங்க வந்தது ஏப்ரல் கடைசி. வந்து ஒரு வாரத்துலயே அம்மை போட்டுருச்சு. அதுல இருந்து எந்திரிச்சு தெளிவாகுறதுக்குள்ள தோட்டங்கள் காஞ்சு போச்சு. இந்த வருசம் எப்பிடியாச்சும் போயிருனுமப்போய்னு இருந்தப்பதான் அம்மாவும் அப்பாவும் ரெண்டு மாசத்துக்கு இங்க வந்தாங்க. இப்ப இங்கதான் இருக்காங்க.

சரீன்னு அவங்களையும் கூட்டீட்டு போனேன். அவங்க ஐரோப்பாவுல மொதல்ல போன சுற்றுலா கியோக்கன்ஹாஃப்க்குத்தான். ரொம்பவே ரசிச்சாங்க. ஒரு மாதிரி மூடுன மேகங்கள். அப்பப்போ தெறிச்ச தூறல்கள். ஒன்றா ரெண்டா என்று கூட்டிப் பாக்க நமக்கு 20 வெரல்களுக்கு மேல இல்லையேன்னு வருத்தப்பட வைக்கிற பலப்பல வண்ணங்களில் மலர்கள். காதலர்களுக்காகவே உண்டான தோட்டம் அது. கண்டிப்பா அவங்களுக்குப் பிடிச்சதுல வியப்பில்லை.

கீழ இருக்குற படங்களைப் பாருங்க. நீங்களே சொல்வீங்க.































அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.

************************************************************

அப்புறம் நெதர்லாந்துலயும் அரிசி வெலை ஏறுது. ஆமா. இங்க நான் இருக்குற எடத்துல இந்திய உணவுப் பொருட்கள் வாங்கனும்னா ஒரே வழி பக்கத்துல இருக்குற ஒரு காஷ்மீரி கடைதான். ஆம்ஸ்டர்டாம்ல இன்னோரு ஓரத்துல ஒரு இலங்கைத் தமிழர் கடை இருக்கு. ஆனா அங்க போயிட்டு வர்ரதுக்கே பாதி நாளுக்கு மேலயே போயிரும். ஆகையால இங்க காஷ்மீரிக்காரங்க கடையிலேயே வாங்குறது வழக்கம்.

தஞ்சாவூர் பொன்னி அரிசி, நல்ல இட்டிலி அரிசி, உழுந்து, பருப்பு எல்லாமே கெடைக்கும். அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு. எனக்கு அரிசி இல்லைன்னா ஒன்னுமில்லை. ஆனா அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வாங்குறது. அதுவுமில்லாம எனக்குத் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும். மிக்சியில அப்பப்ப மாவரைச்சுச் சுட்டுக்குறது.

*************************************************************

ஆங்கிலப் படங்கள்னாவே பிரம்மாண்டமும் கிராபிக்சும்னு பெரும்பாலும் ஒரு எண்ணம் இருக்குது. ஆனா பாருங்க....தமிழ்ப் படங்களை விட சிறப்பான கதையம்சங்களோடவும் நடிப்போடயும் ஆங்கிலப் படங்கள் நிறையவே வருது. சமீபத்துல அப்படிப் பாத்த இரண்டு படங்கள் 27 Dresses மற்றும் Nanny's Diaries. இரண்டுமே புதுமையான கதைக்களன். இந்த பிரியாணியில 27 Dresses படத்தப் பத்திப் பாப்போம்.

இது ஆனா ஃபிளெச்சர் (Anne Fltecher) அப்படீங்குற பெண் இயக்குனர் இயக்கிய படம். 27 முறை மணப்பெண்களின் தோழியா அலங்கார உடையணிந்த ஒரு பெண் 28வது முறை தனக்காகவே திருமண உடை அணியிறதுதான் கதை. சொல்லறப்பவே வித்தியாசமா இருக்குல்ல.

ஜேன், அவதான் அந்தப் பொண்ணு. ரொம்பவும் சுறுசுறுப்பு. நல்ல பொண்ணு. வேலை பாக்குற எடத்துல அவ பாஸ் மேல ஆசைப்படுறா. ஆனா அவரோட பாசும் ஜேனோட தங்கச்சியும் விரும்புறாங்க. பாஸ் இருக்காரே... அவரு மரக்கறி சாப்புடுறவரு. இயற்கையை ரசிக்கிறவரு. நல்லவரு. வல்லவரு. இப்பிடி பலப்பல. ஆனா ஜேனோட தங்கச்சி அதுக்கெல்லாம் நேர்மாறு. ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிக்கிறா. அவ கிட்ட ஜேன் சொல்லிப் பாத்தாலும் கேக்கலை. உண்மையச் சொல்லீட்டா ஒப்புக்கிறவர்தான் அந்த பாஸ். ஆனா இவ சொல்லனுமே.

நம்ம கதாநாயகி ஒரே நாள்ள ரெண்டு கல்யாணத்துல தோழியா இருக்க வேண்டி வருது. ஒன்னு அமெரிக்கக் கல்யாணம். இன்னொன்னு இந்தியக் கல்யாணம். இங்கயும் அங்கயும் மாறி மாறி ஓடி...உடைய மாத்தி...அத இதன்னு மாத்தி.. ரெண்டு எடத்துலயும் நல்ல பேரு வாங்குற. அந்த சமயத்துலதான் கெவினைச் சந்திக்கிறா. அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஆனா வேற பேர்ல எழுதுறான். அவனோட எழுத்து மேல ஜேனுக்கு ரொம்ப விருப்பம்.

ரெண்டு பேரும் நட்பா பழகுறாங்க. 27 உடைகளையும் வெச்சு ஜேனை கெவின் படங்கள் எடுக்குறான். ஒரு கட்டுரை எழுதுறான். அத அவனுக்குத் தெரியாமலேயே பத்திரிக்கைல போட்டுர்ராங்க. அப்பத்தான் கெவின் யாருன்னு ஜேனுக்குத் தெரிய வருது. அவன் மேல கோவிச்சிக்கிட்டு பேசாம இருந்துர்ரா.

ஜேனோட தங்காச்சீ பாஸை டாவடிச்சாளே.. அவங்க திருமணம் செஞ்சுக்கிறதா முடிவெடுக்குறாங்க. அக்காக்கு முன்னாடி தங்காச்சீ கல்யாணம். அதுனால அவங்க அம்மாவோட கல்யாண உடையை இளையமகளுக்குக் குடுக்குறாரு அப்பா. ஆனா அந்த மரமண்டை அந்த உடையை வெட்டித் தச்சு வேற உடையா மாத்தீர்ரா. ஜேனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம். தன்னோட கல்யாணத்துக்குப் போட வெச்சிருந்த உடையை... அதுவும் இறந்து போன அம்மாவோட கல்யாண உடையை கிழிச்சிட்டாளேன்னு ஆத்திரப் பட்டு பாஸ் கிட்ட தங்காச்சீ பத்தி உண்மையைச் சொல்லீர்ரா. நடக்க இருந்த திருமணம் நின்னு போகுது.

இந்தக் கெவின் பயலும் அப்பப்பா அம்மா தாயே நானும் இருக்கேன்னு பின்னாடியே வர்ரான். ஆனா இவதான் கோவிச்சிக்கிட்டாளே. அதுனால ஒதுங்கிப் போறா.

அப்ப ஆபீஸ்ல இருக்குற பாசு... இவகிட்ட புதுசா ஏற்படுற பிடிப்பைச் சொல்றாரு. ஆனா அவளுக்கு இப்ப அவர் மேல இருந்த ஆசை போயிருச்சு. எங்க போயிருச்சு? அதான். அந்தக் கெவின் பய இருக்கானே...அவன் கிட்ட போயிருச்சு. ஆனாலும் முந்தி தான் விரும்புனதையும்....தங்காச்சீ மேல பொறாமை இருந்ததையும் ஒத்துக்கிறா. ஒத்துக்கிட்டு ஓடுறா. எங்க? அந்தக் கெவின் கிட்டதான். அப்புறமென்ன முடிவு சுபமோ சுபம். கெவினும் ஜேனும் சேர்ந்துர்ராங்க. பின்னாடி பாசும் தங்காச்சீயும் கூட புரிஞ்சிக்கிட்டு சேந்துர்ராங்க. இதாங்க கதை. ஆனா... படத்தப் பாக்கனுமே... ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை. அவ்ளோ நேர்த்தி.

அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. வாய்ப்புக் கெடைச்சா படத்தக் கண்டிப்பா பாருங்க. உண்மையிலேயே பார்த்து மனசுக்குத் திருப்தியான படம். அதுலயும் ஜேனுக்கும் கெவினுக்கும் திருமணம் நடக்குறப்போ ஜேனின் தோழிகள் 27 பேரும், அவள் அவங்கவங்க கல்யாணத்துக்குப் போட்ட உடையோட வரிசையா நிப்பாங்க. பாக்கவே நல்லா இருக்கும்.



பிரியாணிகள் தொடரும்.....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 12, 2008

தங்க மரம் - 13

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 13

பறக்க முடியாமல் தடுமாறிய பிடிமா கீழே இறங்க நினைத்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. அப்பொழுதுதான் அந்த பெருத்த சிரிப்போசை கேட்டது.

"ஆகா.. ஆகா... அழகான பொம்மைகள். பறக்கும் யானைப் பொம்மை. அதன் மேல் ரெண்டு மனிதப் பொம்மைகள். ஹா ஹா ஹா"

குரல் வந்த திசையில் பார்த்த பொழுதுதான் அவர்கள் கண்ணில் பட்டாள் அந்த அரக்கி. பத்தாள் உயரம். அந்த அளவிற்குத் தண்டி. பத்து ஆளை விழுங்கினாற் போல் வயிறு. விரிந்து சிக்கு விழுந்த தலைமுடி. கள்ளு குடித்துச் சிவந்த முண்டக்கண்கள். ஆனால் மூஞ்சியில் ஏதோ ஒரு கண்ணாடி முகமூடி மாட்டியிருந்தாள். நல்லவேளையாக அவளது அதியழகான முகத்தைக் கொஞ்சம் மறைத்தது.

அவளைப் பார்த்ததும் சித்திரை கேட்டான்.

"யாரடா இவள். நம்மைப் பொம்மை என்கிறாளே. இவளைப் போன்ற அரக்கிகள் எல்லாம் நம்மளைப் போன்றவர்களைப் பிடித்து விழுங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவள் நம்மைச் சொப்பாக வைத்து விளையாடப் போகின்றாளோ."

கதிரவனிடம் சித்திரை சொன்னது லேசுமாசாக அவள் காதுகளில் விழுந்து விட்டது.

"ஏஏஏஏ பொம்மைகளே! உங்களுக்குப் பறக்க மட்டுமே தெரியும் என்று நினைத்தேன். பேசவும் தெரிந்திருக்கிறதே. நீங்கள் பேசியது என் காதில் விழுந்து விட்டது."

சித்திரையின் வாயால் சும்மாயிருக்க முடியவில்லை. இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்.

"அம்மா அழகரசி. உன் காதில் தடுமாறி ஆனையே விழுமே...நான் பேசியது விழாமல் போகுமா? உன் பேர் என்ன? எங்களை எதற்காக நிறுத்தி வைத்திருக்கின்றாய்?

சித்திரை பேசப்பேச அவளுக்கு மகிழ்ச்சி கூடிக் கொண்டே போனது.

"ஆகா ஆகா.. அழகாகப் பேசுகிறாய். என்னுடைய பெயர் அண்டி. நீங்கள் என்னுடைய இடத்திற்கு மேல் பறந்தீர்கள். மிகவும் அழகான பொம்மைகளான உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்களை என்னுடைய வீட்டில் வைத்து அழகு பார்க்கப் போகின்றேன். என்னிடம் இருக்கும் மற்ற பொம்மைகள் உணர்ச்சியே இல்லாமல் பேசாமல் இருப்பவை. ஆனால் நீங்கள் எனக்குப் பொழுது போகும் வகையில் நன்றாகப் பேசுகின்றீர்கள்."

"அண்டிதான் உன் பெயரா! நல்ல பெயர். அண்டியாம் அண்டி. வேண்டாம். எதையாவது சொல்லி விடப் போகிறேன். சரி. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா?"

என்னுடைய வீடு இந்த மலைக்குகையில் இருக்கிறது. உங்களுக்குச் சாப்பிடுவதற்கு வேண்டியன கிடைக்கும். நன்கு உருண்டு திரண்ட...பார்த்தாலே நாவூறும் எட்டு எருமைகளை இப்பொழுதுதான் அடித்துப் போட்டிருக்கிறேன். மாலைச் சிற்றுண்டிக்காக. நீங்கள் ஒரு பக்கமாகச் சாப்பிடுங்கள். நான் ஒரு பக்கமாகச் சாப்பிடுகிறேன். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகின்றீர்கள். ஹா ஹா ஹா.. சாப்பிடும் பொம்மைகள். சாப்பிடும் பொம்மைகள்."

"ஆகா...எட்டு எருமைகளை அடித்துப் போட்டிருக்கிறாளா... அது சரி. இவள் அடித்துப் போட்டிருக்கும் எட்டுக்கு முன்னால் நாம் சிறிதுதானே. நாம் வாயில் நுழைந்தால் போனதும் தெரியாது. வந்ததும் தெரியாது. ஆனாலும் எதற்கு வம்பு. இவள் எப்படியும் நம்மை விடமாட்டாள். இங்கே இறங்கித்தான் நாம் தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நீ சற்று அமைதியாக இரு. நான் பேசுகிறேன்." முணுமுணுப்பாக சித்திரையிடம் சொன்ன கதிரவன் அண்டியைப் பார்த்துச் சொன்னான்.

"எட்டு எருமை தின்னும் அண்டியே... உன்னுடைய வீட்டில் பொம்மைகளாக இருக்க நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். இப்பொழுது எங்களை இறக்கி விடு."

கதிரவன் ஒப்புக்கொண்டவுடன் தனது மண்டையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த அண்டி மூவரையும் கீழே இறக்கியது.

"அதோ என்னுடைய வீடு. வாருங்கள்." என்று ஒரு பெரிய குகைக்குள் அழைத்துச் சென்றது. அந்தக் குகையை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பெரிய குகைக்குள் சின்னச் சின்ன குகைகள் இருந்தன. சூரிய வெளிச்சம் வருவதற்கும் வழிகள் இருந்தன. அந்த வழிகளில் ஒளிக்கதிர் வருவது பார்வைக்கு மிக அழகாக இருந்தது.

வழியில் அண்டி சொன்னது போலவே எட்டு எருமைகள் கிடந்தன. அண்டி அடித்த அடியில் குருதி கசிந்து பார்ப்பதற்குச் செக்கச் செவேல் என்று இருந்தன. அதைப் பார்த்ததும் அண்டியின் பசி குத்தாட்டம் போட்டது. பொம்மைகளை ஒரு நொடி மறந்து விட்டாள். கண்ணாடி முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் திணித்துக் கொண்டாள். அவள் வாய்க்குள் திணித்துக் கொண்ட அழகைப் பார்த்த மூவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

"ஸ்ஸ்லபஷ்" என்று உதடுகளை நக்கிக் கொண்டவள்.. திரும்பவும் கண்ணாடி முகமூடியைப் போட்டுக் கொண்டாள். சற்றுத் திரும்பித் தேடிப் பார்த்து இவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டாள். "வாருங்கள் பொம்மைகளே. உங்களை பொம்மை அறைக்குள் அழைத்துச் செல்கிறேன்."

சற்றுத் தள்ளி உள்ளேயிருந்த அறைக்குள் (குகைதான்) அழைத்துச் சென்றாள். அந்த அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன. கற்சிலைகளிலிருந்து உலோகம்..மரம் என்று பல வகைகள் வேறு. எங்கிருந்து எடுத்து வந்தாளோ!

"இங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்."

மூவருக்கும் அடிவயிற்றை அமிலம் அரித்தது. கதிரவன் கேட்டு விட்டான். "அண்டி..எங்களுக்கு என்ன உணவு கொண்டு வரப் போகிறாய்?"

"ஹா ஹா ஹா உங்களுக்கா...நீங்கள் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பொம்மைகள். ஆகையால் எட்டு எருமைகளை அடிக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குத்தான்" அவள் சொல்லும் போதே நிம்மதி வந்ததும் மூவருக்கு.

"உங்களுக்கு ஒரேயொரு மலைப்பாம்பு மட்டும் போதுமே. இருங்கள் உடனே சென்று பிடித்து..அதன் கழுத்தைத் திருகிக் கிழித்துத் தருகிறேன். நீங்கள் சுவைத்துச் சுவைத்து உண்ணலாம்."

வயிறு என்று ஒன்று இருப்பதே மூவருக்கும் மறந்து போனது.

"தாயே அண்டி. மலையும் வேண்டாம். பாம்பும் வேண்டாம். நாங்கள் பொம்மைகள். அதையெல்லாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு மரங்களில் பழுக்கும் கனிகள்தான் உணவு. அவைகளைக் கொண்டு வந்தாலே போதும். புரிந்தது."

"ம்ம்ம்ம்ம்... புரிந்தது புரிந்தது. நீங்கள் பொம்மைகள். உங்களால் நல்ல உணவைச் சாப்பிட முடியாது. மரங்களில் இருக்கும் கனிகளைத்தான் சாப்பிட வேண்டும். இதோ விரைவில் வருகிறேன்." என்று சொல்லிவிட்டுத் தடதடவென ஓடினாள். மூவரும் நிற்க முடியாமல் தடுமாறினார்கள்.

அவள் போனதும் குகையை ஆராய்ந்தார்கள். ஏதாவது வழி தென்படுகிறதா என்று அவர்கள் உள்ளே வந்த வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் தென்படவில்லை. அந்த வாயில் வழியே வெளியே போகவும் முடியவில்லை. ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதற்குள் அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் உள்ளே பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள்.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 05, 2008

தங்க மரம் - 12

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 12

தனிமா பிடிமாவை விட்டு வந்தது போல நாமும் விட்டுவிட்டோம். பிடிமாவின் நிலையை என்னவென்று பார்க்கலாம்.

கதிரவனும் சித்திரையும் பிடிமாவின் மீது பரிவு காட்டியது அதன் கலக்கத்தைக் குறைத்து ஆசுவாசப்படுத்தியது. அதுவுமில்லாமல் சுடர்மகள் லிக்திமாவின் படத்தைப் பார்த்ததும் அவர்கள் மேல் நம்பிக்கையும் பிடிமாவிற்கு உண்டானது. நம்பிக்கை வந்தாலே தன்னைப் பற்றிச் சொல்லத்தானே விருப்பம் வரும். அதற்காகத் தன்னிடமிருந்த நாவிலூறியை வாயில் போட்டுக் கொண்டது பிடிமா. ஆலோரில் மனதினாலேயே அங்குள்ளவர்களிடம் தகவலைப் பரிமாற முடியும். ஆனால் பூமி மனிதர்கள் மனது தகவல்களைப் பெறும் திறனை காலவோட்டத்தில் இழந்து விட்டதால் அவர்களிடம் பேசுவதற்கு இந்த நாவிலூறி தேவைப்படுகிறது. அதை வாயில் போட்டுக் கொண்டால் அவர்களுக்குப் புரியும் மொழியில் தகவலைச் சொல்லலாம்.

பிடிமாவைப் பற்றியும் தனிமாவைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்ட கதிரவனுக்கு வந்திருப்பவர்கள் நண்பர்கள் என்றும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் மிக எளிதில் புரிந்து போனது. இந்த விஷயத்தை முதலில் அன்னையிடம் சொல்லி விட்டு காரியத்தில் இறங்க நினைத்தான்.

பிடிமாவிற்கு உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லி சித்திரையிடம் சொல்லி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த நிலவரம் கலவரத்தையே உண்டாக்கியது. என்ன நடந்ததென்றே புரியவில்லை. அம்மாவைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வீட்டுக்குள் மட்டும் அலங்கோலமாக இருந்தது அவன் ஐயத்தை அதிகப் படுத்தியது. நிலமையைக் கண்டதும் ஊழிவாயன் மேல்தான் சந்தேகம் வந்தது. ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

அதற்கு மேல் சற்றும் தாமதிக்க விரும்பாமல் மீண்டும் சித்திரையிடமும் பிடிமாவிடமும் ஓடினான். அதற்குள் சூரிய வெளிச்சத்தாலும் சித்திரை ஒடித்துப் போட்ட நல்ல தென்னங்குறுத்துகளாலும் வயிறு நிரம்பி மிகவும் தெளிவாக இருந்தாள் பிடிமா. வீட்டில் கண்டதை இருவருக்கும் விளக்கினான் கதிரவன்.
மூன்று பேரும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்கள்.

முதலில் கதிரவனின் அன்னை அமுதம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

பிடிமாவோடு வந்த தனிமாவையும் காணவில்லை. அவளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஊழிவாயன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து லிக்திமா, கதிரவனின் தந்தை, சித்திரையின் தந்தை...ஒருவேளை அமுதத்தையும் பிடித்துக் கொண்டு போயிருந்தால் அவரையும் சேர்த்து விடுவிக்க வேண்டும்.

இந்தச் செயல்களை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தார்கள் நண்பர்கள் இருவரும். ஏதேனும் சின்னக் குறிப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்குமே என்ற இருவரின் கவலையையும் பிடிமா குடுத்த தகவல் போக்கியது.

ஊழிவாயன் இருக்குமிடத்தை அடைய முதலில் தங்கமரத்தை அடைய வேண்டும் என்றும்... அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. அந்த ஏறாத மண்மலையோ தணலேரிக்கு அருகில் இருப்பதாகவும் லிக்திமா ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதை பிடிமா சொன்னது. (லிக்திமாவிற்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.)

ஆக இப்பொழுது தணலேரியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏரியில் நீரிருக்கும். தணலிருக்குமா? அல்லது வெறும் பெயரா? மண்ணிலே மலையிருக்கும். மலையே மண்ணாயிருக்குமா? தங்கத்தில் மரம் முளைக்குமா? ஒருவேளை தங்குவதற்கான மரமா?

இந்தச் சந்தேகங்கள் மூவரின் உள்ளத்திலும் எழுந்தன. அப்பொழுது பிடிமா சொன்னாள்.

"நண்பர்களே என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களைச் சுமந்து என்னால் பறக்க முடியும். என்னுடைய இறக்கைகள் மிகவும் வலுவானவை. இந்தச் சூரியவொளி மிகுந்த ஆற்றலைக் கொடுக்கிறது எனக்கு. ஆகையால் பறந்து சென்று தேடுவதே வசதியாக இருக்கும். மேலும் என்னோடு வந்த தனிமாவும் அருகில் எங்கேயாவது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்"

பிடிமாவின் அழைப்பை இருவராலும் மறுக்க முடியவில்லை. விண்ணிலிருந்து பார்த்தால் விசாலமான காட்சி கிடைக்கும். அது தேடுதலை எளிமையாக்கும் என்றும் புரிந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு பிடிமாவின் மேல் ஏறினார்கள். இருவரையும் சுமந்து கொண்டு ஜிவ்வென்று வானில் ஏறிப் பறந்தது பிடிமா.

விண்ணிலிருந்து அழகான பூமியைக் காணும் காட்சி மூவரையும் பரவசப்படுத்தியது. களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த பிடிமாவும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்கள் பறந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதியை அடைந்தார்கள். அங்கு இறங்கி களைப்பாறி உணவு தேடலாம் என்று கதிரவனுக்குத் தோன்றியது.

தோன்றியதைச் சொல்லும் முன்னமே பிடிமா விண்ணிலேயே நின்றது. அதனால் சிறிதும் நகரமுடியவில்லை. முழு ஆற்றலையும் பயன்படுத்தினாலும் அசையக் கூட முடியவில்லை. கீழேயும் விழவில்லை. என்னடா அதியம் என்று அசந்து போகும் வேளையில் கேட்டது இடியோசை போன்ற சிரிப்போசை.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, May 01, 2008

தங்கமரம் - 11

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 11

தங்கக்கத்தி தனிமாவின் கைகளில் சேர்ந்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன. தனிமா அவசரப்பட்டு பூகனைக் கொல்லவில்லை. சற்றுப் பொறுமையாக இருந்தாள். ஆனாலும் பூகன் அவள் மேல் பாய்ந்ததினால் ஆத்திரத்தோடே இருந்தாள்.

"ஹே... யார் நீ?" அதட்டலோடு கேட்டாள்.

"பார்த்தால் எப்படித் தெரிகிறது? உனக்குக் கண்கள் உண்டுதானே?" திமிராகக் கேட்டது அந்த பூகன்.

"அடி வாங்கிப் பிடி பட்ட பிறகும் பேச்சு பெரும் பேச்சு."

"அது சரி... வந்திருப்பது பூகனூருக்கு.... பிடித்து வைத்திருப்பதோ பூகனை.... வெளியிலிருந்து வந்திருக்கும் நீ இவ்வளவு பேசும் பொழுது என் பேச்சு பெரும் பேச்சாவதில் வியப்பில்லையே." பூகனின் பேச்சில் ஆத்திரமும் எரிச்சலும் வெடித்துச் சிதறின.

மெல்லச் சிரித்தாள் தனிமா. "பூகனாக மட்டுமே இருந்தால் பேசலாம். ஆனால் மானம் மரியாதை அனைத்தும் ஊழிவாயனிடம் அடகு வைத்து விட்டு வாயினை உண்ண மட்டுமே திறக்கின்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பேசவும் திறப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்."

"ஆஆஆ அவமானம். பூகன்கள் அந்த ஊழிவாயனிடம் விரும்பியா வேலை செய்கின்றன? வேறு வழியில்லாமல் அந்த வெளியண்டத்து ஊழிவாயனிடம் அடங்கி நடக்கின்றார்கள். என்னைத் தவிர. நான் ஒருவன் இருப்பதையே அறியான் அந்த ஊழிவாயன். உன்னைப் பார்த்தால் கூட அந்த ஊழிவாயனின் முகச்சாயல் தெரிகின்றது. நீயும் அவனைப் போல மாயாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால்தான் மனிதர்களே நுழைய முடியாத இந்தப் பூகனூருக்குள் நுழைந்து...என்னையும் பிடித்து....என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்." ஆத்திரத்தில் பொறுமினான் அந்த பூகன்.

தனிமாவிற்கு நிலமை சட்டென்று புரிந்து போனது. ஆலோரில் இருக்கும் பொழுதே ஊழிவாயன் பூகன்களின் தலைவனை ஏமாற்றி மந்திரக்கோலை அபகரித்துக் கொண்டதை அறிவாள். ஆனால் அனைத்து பூகன்களும் அடிமையாகியிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு பூகம் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பைய அந்த பூகனைக் கீழே இறக்கினாள். தங்கக் கத்தியையும் அந்தரத்திலேயே நகட்டி அந்த பூகன் கையில் வைத்தாள். அதற்கோ வியப்பு. தரையில் ஒரு நிலையில் இறங்கிய பிறகு கேட்டது. "நீ யார்?"

"பூகனே. ஊழிவாயன் என்று நீங்கள் சொல்லும் நபரின் மகள் நான். என்னுடைய பெயர் தனிமா. ஊழிவாயனிடமிருந்து என்னுடைய தாயை விடுவிக்க வந்திருக்கிறேன்."

பூகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளக் பளக் என்று முதலில் முழித்தது.

"சரி. என்னுடைய பெயர் ககன். நீ அப்படியானால் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் என்று நான் நம்புவதற்குக் காரணம் இல்லையல்லவா!"

ககன் சொன்னது எடுத்ததும் தனிமாவிற்குப் புரியாவிட்டாலும் தான் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் இல்லை என்பதைத்தான் அப்படிக் கேட்கிறான் ககன் என்று உணர்ந்தாள்.

"சரி தனிமா. அப்படியானால் நீ இங்கே வந்ததற்கான காரணத்தின் மேலதிகத் தகவல்களை நான் அறிந்து கொள்வதில் உனக்குத் தயக்கம் இருக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்."

சிரித்து விட்டாள். "ஹா ஹா ஹா.. இல்லை இல்லை. தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் ஆலோரிகள். நானும் என்னுடைய ஆனையான பிடிமாவும் பூமிக்கு வந்தோம். பூமியின் எல்லைக்குள் நுழையும் பொழுது தடுமாறினோம். அப்படிக் கீழே விழுகையில் பிடிமா ஒருபுறம் போனாள். நான் இங்கு தவறி தண்ணீருக்குள் விழுந்து இங்கு வந்திருக்கிறேன்."

தனிமா சொன்னது பூகனை யோசிக்க வைத்தது. "தனிமா...இப்பொழுது நீ எப்படி இங்கே வந்ததாகச் சொன்னாயோ அப்படித்தான் முன்னம் ஒருவன் உள்ளே வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. யாரை நீ உன்னுடைய தந்தை என்று கூறிக்கொண்டு..அவனையே எதிர்க்க வந்திருப்பதாகக் கூறுகின்றாயோ...அந்த ஊழிவாயந்தான். நீயும் அதை வழியில் இங்கு வந்திருப்பதிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னுடைய யோசனைக்கு வருவதால் அவைகளை உன்னிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று இப்பொழுது தோன்றுகிறது. கேள்."

கூர்ந்து கேட்கத் தொடங்கினாள் தனிமா.

"முதலாவது. ஊழிவாயன் என்னதான் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவன் ஆற்றலிலும் அறிவிலும் குறையுள்ளவன் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவன்.

இரண்டாவது. ஊழிவாயன் வந்திறங்கிய பொழுது அவனிடமிருந்த சக்தியனைத்தும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை வந்தது. அதாவது சுருங்கச் சொன்னால்...இந்த பூமிக்கு வெளியே சிறந்து பணியாற்றிய அவனது ஆற்றலனைத்தும் பூமிக்குள் வந்ததும் சிறிது சிறிதாக தன்னை இழந்தது. அதாவது என்னை அந்தரத்தில் தொடாமல் நிறுத்தி வைத்திருக்க உன்னால் தொடர்ந்து செய்ய முடியாது போகும்."

ககன் சொன்ன இரண்டு தகவல்களில் இரண்டாவது தகவல் தனிமாவை யோசிக்க வைத்தது. ஒரு பிரச்சனையை தீர்க்க வந்த அவளுக்குப் பிடிமாவை இழந்தது இன்னொரு பிரச்சனையாக வந்து நிற்கிறது. அவளை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் தன்னுடைய ஆற்றலை விரைவில் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வேறு சலனப்படுத்தியது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக ககனின் நட்பு வேறு கிடைத்திருக்கிறது. ஆனால் எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாத ககனால் எவ்வளவு நன்மை என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் ஆற்றல் குறையும் முன்னமே விரைந்து செயல்படுவது நன்று என்று அவளுக்குத் தோன்றியது.

"ககன். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது நான் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது புரிகிறது. முதலில்....எனக்கு ஒன்று புரிய வேண்டும். ஆற்றலை அனைத்தும் இழந்தார் ஊழிவாயன் என்றால்....எப்படி பூகன்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஏன் எந்த பூகனும் எதிர்க்கவில்லை. நீ ஊழிவாயனை எதிர்ப்பதாகச் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லையே! ஏன்?"

ககன் சொல்லத் தொடங்கினான்.

தொடரும்...

Monday, April 21, 2008

தங்க மரம் - 10

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்

பாகம் - 10

கஜன் ஆலோரின் அரச ஆனை. அறிவிலும் செயலிலும் மற்ற ஆனைகளையெல்லாம் கட்டிக்காக்கும் சிறந்த ஆனை. ஆகையால்தான் அதை பூமிக்கு அனுப்ப முடிவெடுத்தாள் லிக்திமா. மாயப்பெட்டியிலும் மாயக்கோலிலும் இதுவரை நடந்தவைகளை ஒலியொளிப்படமாகப் பதிவு செய்து, கஜனுக்கு உதவுமாறு வேண்டுகோள் வைத்தாள். அந்த வேண்டுகோள் வைத்த கடைசிப் பகுதியைத்தான் கதிரவனும் சித்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதையைப் படிக்கின்ற அனைவருக்கும் வரும் ஐயம் இவர்கள் இருவருக்கும் வந்தது. இவையெப்படி அவர்கள் தந்தையார்களிடம் கிடைத்தனவென்று! தந்தையோ ஆனைப்பிரியர் என்று தெரியும். அதனால் எப்படியோ கஜன் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நினைத்தார்களே தவிர..அவர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

ஆனால் ஒன்று. அவர்களுக்குக் கடமை புரிந்து போனது. முத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆலோருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழம்பித்தான் போனார்கள்.

திடீரென்று சடசடவென்று பேரோசை எழுந்தது. என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன்னரே ஏதோவொன்று மரத்தில் விழுந்து...கிளைகளையெல்லாம் ஒடித்துக் கொண்டு பொத்தடீர் என்று மண்ணில் விழுந்தது. பாஆஆஆஆஆம் என்ற பிளிறல் வேறு கேட்டது. ஆம் பிடிமாதான் அங்கு வந்து விழுந்திருந்தாள். ( பூமியின் சுற்றுவட்டத்திற்குள் நுழைந்ததும் தனிமாவும் பிடிமாவும் கீழே விழுந்ததை நினைவில் கொள்க)

ஆலமரத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தார்கள். ஒலியொளிக்காட்சியும் கீழே விழுந்து லிக்திமா வேண்டுகோள் விடுக்கும் காட்சி அதில் தெரிந்தது.
பிடிமாவின் இறக்கையைக் கண்டதும் அது ஆலோரின் ஆனையாகத்தான் இருக்க வேண்டும் என்று நண்பர்களுக்குப் புரிந்தது. ஒருவேளை கஜனாகவே இருக்குமோ என்று நினைத்தார்கள். ஆனால் விழுந்த ஆனை மிகவும் இளமையாக இருப்பதால் குழம்பினார்கள்.

தட்டுத்தடுமாறிக் கிடந்த பிடிமாவைக் கதிரவனும் சித்திரையும் எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால் பிடிமாவே இறக்கைகளை விரித்து எழுந்து விட்டது. அடி சறுக்கிய ஆனை எழாது என்ற தமிழ்ப் பழமொழியைப் பிடிமா பொய்யாக்கி விட்டதே என்று இருவருக்கும் திகைப்பு. எழுந்ததும் நன்றி சொல்ல முனைந்த பிடிமாவின் கண்களில் முதலில் பட்டது வட்டவடிவமான திரையில் தெரிந்த லிக்திமாதான். பிடிமாவின் மகிழ்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆமாம். தனிமாவைக் காணவில்லை. தனிமா இல்லாத தனிமை பிடிமாவைக் கலவரப்படுத்தியது.

நிலமையை ஓரளவு புரிந்து கொண்டார்கள் நண்பர்கள் இருவரும். ஆகையால் பிடிமாவைச் சமாதானப் படுத்த முனைந்தார்கள். அதே நேரத்தில் தனிமா வேறொரு இடத்தில் வேறொரு சந்திப்பில் இருந்தாள். ஆம். ஒரு பூகனுடன்.

காற்று மண்டலத்தில் சர்ரென்று இழுக்கப்பட்ட தனிமா எங்கு விழுகிறோம் என்று தெரியாமலே ஒரு குளத்தில் விழுந்தாள். விழுந்தவள் எந்தத் தரையையும் தட்டாமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் போய்க்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரம் கழித்து அடித்தரையைத் தட்டினாள். அந்த இடத்தில் சின்னச்சின்ன மலைகள் இருந்தன. மலை என்பதை விட பெரிய பெரிய மேடுகள் என்று சொல்லலாம்.

என்ன செய்வது என்று எழுந்து நின்ற தனிமாவிற்கு அந்த மேட்டில் இருந்த ஒரு பொந்து தெரிந்தது. சற்றுக் குனிந்து நிமிர்ந்து பொந்துக்குள் நுழைந்தவளுக்கு பெரும் வியப்பு. பொந்துக்கு வெளியிலோ நிறைய நீர். பொந்துக்கு உள்ளேயோ ஒரு சொட்டு நீர் இல்லை. அழகிய சிறிய அரண்மனை போல இருந்தது. உள்ளே பிடிமா இருக்கிறாளா என்றுதான் முதலில் பார்க்கத் தோன்றியது. ஆனால் பிடிமாவோ கண்ணில் படவில்லை. வேறு யாரும் இருப்பது போலக்கூடத் தெரியவில்லை. இந்த இடத்தைப் பற்றி எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பொந்து அரண்மனைக்குள் நுழைந்தாள். ஓரிடத்தில் நிறைய நாற்காலிகள் கற்களில் செதுக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பார்த்தால் பொழுது போக்கும் இடம் போல இருந்தது. ஆனால் போக்கத்தான் யாரும் இல்லை. சரியென்று களைப்பினால் அங்கிருந்த நாற்காலியொன்றில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே கண்கள் செருகின.

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்" என்ற ஓசையைக் கேட்டுப் படக்கென்று விழித்தவள் கண்முன்னே நின்று கொண்டிருந்தது ஒரு பூகன். கையில் பளபளப்பான வேலைப்பாடமைந்த தங்கக்கத்தியை வைத்து தனிமாவைக் குறி பார்த்துக்கொண்டிருந்தது.

ஏதோ சொல்வதற்காக தனிமா வாயைத் திறந்தாள். அதற்குள் அந்த பூகன் அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளி கத்தியை அவள் கழுத்துக்குக் குறி வைத்தது. தனிமா சுதாரித்துக் கொண்டாள். மனதினாலேயே அந்த பூகனைக் கீழே பிடித்துத் தள்ளினாள். துள்ளிப் போய் தொலைவில் விழுந்தது அந்தப் பூகன். படக்கென்று கத்தியை அவள் மேல் வீசி விட்டு..தானும் பாய்ந்தது. ஆனால் தனிமா மனதினாலேயே அந்தக் கத்தியைப் பாதி வழியில் நிறுத்தினாள். பாய்ந்த பூகனையும் வழியிலேயே நிப்பாட்டினாள். தப்பிக்க முடியாத பூகன் அந்தரத்தில் தத்தளித்தது. அந்தரத்தில் நின்று கொண்டிருந்த தங்கக் கத்தியை தன்னிடம் வரவழைத்தாள் தனிமா. அதைப் பார்த்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக





அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Sunday, April 13, 2008

தங்க மரம் - 9

நண்பர்களே இந்தியப் பயணம் மற்றும் பல காரணங்களால் இந்தத் தொடர் சற்றுத் தடைபட்டுப் போனது. இனிமேல் தொடர்ந்து ஓடும். :) சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 9

ஆலோரின் அரண்மனையில் அவசரக்கூட்டம். ஆலோரின் அரசி, லிக்திமா, விண்டா மற்றும் மெரிமா ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர். அனைவருக்கும் நிலமையின் தீவிரம் புரிந்திருந்ததால் ஒருவித அமைதியில் இருந்தனர். அரசிதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். தேவதைகள் அமைதியாக இருக்குமானால் மக்களைக் காப்பாற்ற அரசியே பேச்சைத் தொடங்கினாள்.

"ஆலோரின் தேவதைகளே... ஆதிதான் ஆலோரைப் படைத்த தெய்வம் என்று அனைவரும் அறிவோம். அப்படியிருந்தும் தேவதைகளாகிய உங்களை வணங்கி வாழ்ந்து வந்தோம். இன்று உங்களுக்குள்ளேயே பிரச்சனை. ஒன்று முத்தைக் காப்பாற்ற முடியாமல் மூன்று தேவதைகள் இருந்தும் தொலைத்தது. இரண்டாவது நிலமகனாகிய சாண்டாவிற்கு மாற்றாக யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்பது."

குறுகுறுத்து லிக்திமா அமைதியாக இருக்கையில் பொங்கினாள் மெரிமா. "அரசி. இந்த நாற்காலியில் வெறும் அறுபது ஆண்டுகள் இருந்து விட்டு அனைத்தும் அறிந்தவர் போல் பேச வேண்டாம். தேவதைகளானாலும் ஆலோரின் மூத்த மக்கள் நாங்கள். எங்களில் மிகப் பெரியவர் சாண்டா. அவருடைய வலையில் வீழ்ந்த காரணத்தினால் எங்களை அவமதித்துப் பேச வேண்டாம். சாண்டாவைப் போல நாங்களும் விலகிப் போனால் ஆலோர் என்னாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடமையையும் பொறுப்பையும் அறிந்தே இங்கு இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்."

பேச்சு வேறுவிதமாகப் போவதைக் கண்டு அதைத் தடுக்க விரும்பினாள் லிக்திமா. "மெரிமா.. அமைதி கொள். நீயின்றி அமையாது உலகு. உனது சினம் அழிவையே உண்டாக்கும். அது நன்றன்று." அரசியை நோக்கிச் சொன்னாள். "அரசி. பொறுமை. இங்கு அனைவருமே ஆலோரின் நலம் விரும்புகின்றவர்களே. நமக்குள்ளே பிளவு உண்டாக வேண்டிய நேரமல்ல இது. எதிர் வரும் சோதனை தரப்போகும் வேதனையிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனையை யோசிப்போம். என்னிடம் ஒரு வழி இருக்கிறது. அனைவரும் சற்றுக் கவனமாகக் கேளுங்கள்."

அனைவரிடம் ஒரு பரபரப்பும் அதை மீறிய ஆர்வமும் எழுந்தது. ஆற்றலரசியின் திட்டம் என்னவென்று ஊன்றிக் கேட்டார்கள்.

"முத்தைக் கண்டுபிடிப்பது அவசியமே என்றாலும் முதலில் ஆலோரின் பொறுப்பு பெரியது. மண்மகன் என்று சாண்டாவிற்கு மட்டுமே பெயர். ஆனால் இப்பொழுது அது தனிமாவிற்கும் பொருந்தும். உண்மையிலேயே மண்ணின் மகள் அவள். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பு அவளது பிஞ்சுத் தோள்களில். அதை அவள் செய்ய வேண்டியதற்கான ஆற்றலை என்னிடமிருந்தே பெறுவாள். அத்தோடு மெரிமாவும் விண்டாவும் சிறுது ஆற்றலை வழங்கினால் அனைத்தும் நலமாகவே நடக்கும்.

இரண்டாவது பிரச்சனை முத்து. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கொண்டு சென்றது சாண்டா. சாண்டாவை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. அரசி என்ற முறையில் நீயோ அல்லது கடவுள் என்ற வகையில் ஆதியோதான் குற்றத்திற்குத் தண்டனை வழங்க முடியும். முத்தைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மட்டுமே நாம் இப்பொழுது பார்க்க முடியும். அதற்கு முதலில் முத்து எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும்."

இரண்டு கைகளையும் பாத்திரம் ஏந்துவது போலப் பிடித்தாள் லிக்திமா. உள்ளங்கையில் ஒளிப்பந்து ஒன்று தோன்றியது. மெல்லிய வெள்ளொளியாக இருந்தது அடர்ந்து பொன்னொளியானது. அது சுழன்று சுழன்று ஒரு பாத்திரமாகி ஒளி வீசியது. லிக்திமா கையை எடுத்த பிறகும் அந்தப் பொற்பாத்திரம் அந்தரத்தில் சுழன்று கொண்டேயிருந்தது."

லிக்திமா மெரிமாவைப் பார்த்துச் சொன்னாள். "நீர்மகளே.... இளநீரை அதில் நிரப்பு."

மெரியா தனது இரண்டு கைகளையும் சேர்த்து பாத்திரத்தில் காட்டினாள். மெழுகு இளகுவது போல இளகி அவள் கையிலிருந்து பாத்திரத்தில் நீரொழுகியது. தூய கண்ணாடி நீர் மிக மெலிதாக அழகாக பாத்திரத்தில் நிரம்பியது. ஆனாலும் வெற்றுப் பாத்திரமாகவே தெரிந்தது.

தன்னுடைய தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தாள் லிக்திமா. பொறிப்பொறியாக வண்ண நெருப்புத் துகள்கள் தெறித்தன. பிடுங்கப்பட்ட முடி நெருப்பு இழையாக ஜொலித்தது. அதை பாத்திரத்தில் போட்டாள் லிக்திமா. விண்டாவைப் பார்த்து, "விண்டா, வழி-வளியை பாத்திரத்தில் விடுக" என்றாள்.

ஹம்ம்ம்ம்ம்ம்மென்று மூச்சுக்காற்றை பாத்திரத்தில் விட்டான் விண்டா. நீரும் அதில் ஜொலிக்கும் இழையும் பாத்திரத்தின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுழன்றன. பாத்திரத்திலிருந்து ஒரு மெல்லிய நீர்த்திரை கிளம்பி விரிந்தது. அதில் பலப்பல அண்டங்கள் வரைபடமாகத் தெரிந்தன. லிக்திமா இட்ட நெருப்பு இழை ஒவ்வொரு அண்டமாக அதன் மீது நகண்டது.

"மூவரும் நன்றாகக் கேளுங்கள். இந்த இழையானது உலகம் முழுவதும் உள்ள அண்டங்களைத் தேடும். முத்தில் என்னுடைய ஆற்றல் இருப்பதால் அது எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும். ஆனால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சற்று நாளாகும். கண்டுபிடித்த உடன் அந்த அண்டமும் அதிலுள்ள கிரகமும் இந்தத் திரையில் ஒளிரும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்கலாம்."

லிக்திமா சொல்லி நாட்கள் வாரங்களாயின..வாரங்கள் மாதங்கள் ஆன ஒரு சமயத்தில் இழை ஒரு கிரகத்தைத் தொட்டு ஒளிர்ந்தது. அது பூமி. அங்கு அனுப்புவதற்கு லிக்திமா தேர்ந்தெடுத்தாள் கஜனை. அவனோடு ஒரு சிறிய மாயப்பெட்டியையும் மாயக்கோலையும் கொடுத்தனுப்பினாள். (இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).

தொடரும்...

Tuesday, March 25, 2008

பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு

சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை. கிடைத்தால் கொடுக்கவும்.

ஆனால் இன்னொரு பாடலின் வீடியோவே கிடைத்து விட்டது. ஹிட்லர் உமாநாத் படத்தில் இடம் பெற்ற இந்த வில்லுப்பாட்டுதான். இதிலும் சுருளிக்கு மலேசியா வாசுதேவனே பாடியிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. மிகவும் அருமையான நகைச்சுவை வில்லுப்பாட்டு. கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 03, 2008

தங்க மரம் - 8

முன்கதைச் சுருக்கம்

ஆலோரின் சுடர்மகளான லிக்திமாவிற்கு ஆதி முத்தைப் பரிசளித்தது அவளது கணவன் சாண்டாவிற்குப் பொறாமையை உண்டாக்கியது. எப்படியாவது முத்தைக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6
பாகம் - 7

பாகம் - 8

அந்தப் பளபளக்கும் முத்தின் மேல் சாண்டாவிற்கு ஆசை கூடிக்கொண்டே போனது. இப்படியெல்லாம் ஆசை உண்டாவது சாண்டாவிற்கும் புதிது. தானுண்டு தன் வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்தான். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே வேலை என்று வந்து அதில் ஒருவருக்கு மட்டும் உயர்வு என்று எண்ணம் தோன்றுமானால் குழப்பம்தான் உண்டாகும். அதிலும் கணவனை விட மனைவி உயர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

பகலில் ஓளிர்ந்தும் இரவில் அடர்ந்தும் இருக்கும் முத்து அவன் கண்களிலேயே இருந்தது. அதை எப்படி அடைவது என்று மட்டுமே அவன் யோசித்தான். தன்னுடைய கோபுரத்திற்குப் போகாமல் நேராக மெரிமாவைப் பார்க்கச் சென்றான். விண்டாவும் அங்குதான் இருந்தான் அப்பொழுது. அவர்களிடம் தன்னுடைய பஞ்சாயத்தைத் தொடங்கினான். நால்வரில் முதல்வன் அவன் என்பதால் அவனே முத்தை வைத்திருக்க உரியவன் என்று பேசி... அவர்கள் இருவரையும் லிக்திமாவிடம் சமாதானம் பேசி முத்தை வாங்கி வர அனுப்பினான்.

முத்தை வாங்கி சாண்டாவிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ இல்லாவிட்டாலும் குழப்பம் வளர்ந்து கொண்டே போகிறதே என்ற எண்ணத்தில் லிக்திமாவிடம் பேசச் சென்றார்கள். என்ன இருந்தாலும் நீர்மகள் அல்லவா மெரிமா. குழப்பம் என்றதும் உருகித்தான் போனாள். விண்டாதான் அவளைச் சமாதானப்படுத்தி லிக்திமாவிடம் தள்ளிக் கொண்டு சென்றான்.

தன்னைப் பார்க்க வந்த மெரிமாவிற்கும் விண்டாவிற்கும் பானிகா குடிக்கக் கொடுத்து வரவேற்றாள். வந்தவர்கள் குழந்தை தனிமாவிற்கு பரிசுகள் கொடுத்தார்கள். வேலைப்பாடமைந்த ஒரு கண்டாடிப் புட்டியில் தன்னுடைய நீராதாரத்திலிருந்து எடுத்து வந்த தூநீரைக் கொடுத்தாள் மெரிமா. தங்கப் பெட்டி ஒன்றில் வளியை அடைத்துக் கொடுத்தான் விண்டா. இந்தப் பரிசுகளை யாருக்கும் இவர்கள் கொடுப்பதில்லை. அபூர்வப் பரிசுகளைப் பெறும் முதல் குழந்தை தனிமாதான்.

பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் மெரிமா முசுமுசுவென்று அழுதுகொண்டிருந்ததால் விண்டாதான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

"லிக்திமா, நீ சுடர்மகள். ஆற்றலரசி. குழப்பம் இவ்வளவு பெரிதாக விட்டிருக்கலாமா?"

மெல்லச் சிரித்தாள் லிக்திமா. "விண்டா...குழப்பம் என்று நீ சொல்வது என்ன? முத்து என்னிடம் இருப்பதுதானே. சாண்டா கேட்டும் நான் கொடுக்காமல் இருப்பதுதானே. உன்னுடைய உள்ளங்கைகள் இரண்டிலும் மரகதங்கள் பதிந்திருக்கின்றனவே...அவற்றை மெரிமா கேட்டால் கொடுப்பாயா? அல்லது மெரிமாவின் நாவை அலங்கரிக்கும் நீலக்கல்லை நீ கேட்டால் மெரிமா தருவாளா?"

சுடர்மகள் இப்படிக் கேட்டதும் மெரிமாவின் விசும்பல் கூடியது. தென்றலாக அவளை அணைத்துக் கொண்டு விண்டா பேசினான். "புரிகிறது லிக்திமா. ஆனால் ஆளுக்கொரு கல் இருக்க உனக்கு அதிகப்படியாக ஒரு முத்து கிடைத்திருபப்துதான் சாண்டாவிற்கு உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கொடுப்பதாக நீயும் இல்லை. விடுவதாக அவனும் இல்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?நால்வரில் முதல்வர் அவர்."

"விண்டா.. நால்வர் நாம். அதில் முதல்வர் இரண்டாமவர் என்ற பேதம் ஏது? நால்வரில் ஒருவர் கடமை பிழைத்தாலும் அனைவருக்கும் கேடுதானே. நீயும் மெரிமாவும் இல்லாவிட்டால்... .காற்றும் நீருமில்லாத இந்த நிலம் மட்டும் இருந்து என்ன பயன்? நீங்கள் அனைவரும் இல்லாமல் வெறும் ஆற்றலை வைத்துக் கொண்டு நான் மட்டும் என்ன செய்ய முடியும்? நால்வரும் இணைந்து இயைந்து பணியாற்றுவதாலே ஆலோர் செழித்திருக்கிறது. அப்படியானால் நாம் அனைவரும் சமம். அதைக் காட்டத்தானோ என்னவோ ஆதி நான்கு கோபுரங்களையும் ஒரே அளவில் அமைத்து நடுவில் இருக்கும் அரச கோபுரத்தை மட்டும் பெரிதாக அமைத்திருக்கிறார்."

கழுத்தில் இருந்த முத்துக் கோர்த்த சங்கிலியைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் காட்டினாள். "பார் விண்டா..இந்த முத்தை வைத்துக் கொண்டுதான் என்னுடைய ஒளியையும் ஆற்றலையும் நான் கட்டுப்படுத்துகிறேன். முத்து கிடைப்பதற்கு முன்பும் செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் முத்து வேலையை எளிமையாக்குகிறது. இதென்ன அழகு பொருளா? அப்படியானால் கொடுத்திருப்பேனே!"

விண்டாவும் யோசனையில் இருந்தான். லிக்திமா முத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது. அதே நேரத்தில் சாண்டாவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எதற்கும் சாண்டாவிடம் ஒருமுறை பேசுவதென்றும்... அது உதவாவிட்டால் அடுத்து ஆதிதான் மீதியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விண்டா.

எதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தான் விண்டா. ஆனால் ஏதோ ஒரு அதிர்வினால் தொடர்ந்து பேச முடியவில்லை. முதலில் கால்கள் நடுங்குவதாக அனைவரும் உணர்ந்தார்கள். ஆனால் அது கூடிக்கொண்டே போனது. லிக்திமாவும் விண்டாவும் ஓரளவு சுதாரித்துக் கொண்டாலும் தளும்பினாள் மெரிமா. நீர்மகள் அல்லவா.

படக்கென்று மெரிமாவின் காலுக்கடியில் நிலம் பிளந்தது. நீரென்றால் பள்ளத்தில் பாய்வதுதானே. ஆவென இரைச்சலோடு பள்ளத்தில் வீழ்ந்தாள். மளுக்கென்று வெள்ளம் பெருக்கெடுத்து அறையெங்கும் தெறித்தது. லிக்திமாவில் நீர் பட்டதும் சுர்ரென்று கொதித்து ஆவியானது. அந்த நடுக்கத்திலும் நடந்ததைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்ட விண்டா சூறாவளியானான். விர்ரென்று சுழன்று பள்ளத்தில் பாய்ந்து மெரிமாவை வெளியே இழுத்தான். ஒரு அறைக்குள்ளேயே நிலநடுக்கம்...வெள்ளம்..சூறாவளி...ஒரே களேபரம். தொடர் தடுமாற்றத்தில் கையிலிருந்த முத்தைத் தவறவிட்டாள் லிக்திமா.

அந்தச் சங்கிலிக்காகவே காத்திருந்தது போலத் தரை திறந்தது. திறந்த பிளவில் முத்துக் கோர்த்த சங்கிலி விழவும் மீண்டும் தரை மூடவும் சரியாக இருந்தது. நொடிப்பொழுது கூட ஆகியிருக்குமா என்பதே ஐயம். அனைத்தும் பட்டென்று நடந்து முடிந்து. முத்துச் சங்கிலியைத் தொலைத்த அதிர்ச்சியில் வெளுத்து ஒளிர்ந்தாள் லிக்திமா.


அந்நேரத்தில் விண்டாவும் மெரிமாவைப் பற்றியிழுத்துக் காப்பாற்றினான். முத்து விழுந்ததையோ தரைக்குள் மறைந்ததையோ அவன் கவனிக்கவேயில்லை. மெரிமாவோ தொப்பலாக நனைந்து அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளைச் சிதறிவிடாமல் காற்றால் அணைத்துத் தேற்றினான் விண்டா. தன்னுடைய கோபுரத்திற்கு வந்தவர்களுக்கு இப்படியாகி விட்டதே என்று வருந்துவதா...இல்லை முத்தைத் தொலைத்து விட்டோமே என்று பதறுவதா என்று தெரியாமல் திகைத்தாள் சுடர்மகள்.

இத்தனைக்கும் காரணம் யார் என்பதை ஊகிப்பதில் கதையைப் படிப்பவர்களுக்குச் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். மண்ணின் மகனான சாண்டாதான் இப்படிச் செய்தது. முத்து அவன் கைக்குக் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டு குற்றங்களைச் செய்துவிட்டான் அவன். ஒன்று... லிக்திமாவிற்கு ஆதி கொடுத்த பரிசைத் திருடியது. இரண்டு...தெய்வங்கள் நால்வரில் ஒருவரைத் தாக்கியது. தெய்வங்கள் நான்கும் ஒருவருக்கொருவர் துணை நின்று ஆலோரைக் காக்க வேண்டும் என்பது ஆதி இட்ட கட்டளை. அதை மீறித் தாக்குகின்றவர்கள் ஆதியைத் தாக்குகின்றவர்களாவர்.

இந்த இரண்டு குற்றங்களையும் செய்து விட்டு ஆலோரில் இருக்க சாண்டா விரும்பவில்லை. ஆதிக்கு எட்டாத இடமென்று அவன் தேர்ந்தெடுத்து பூமியை. நிலத்தைக் காக்கும் கடவுளாகிய தான் இல்லாவிட்டால் ஆலோர் வீழ்ந்து விடும். அப்படி வீழாமல் இருக்க வேண்டுமெனில் தன்னுடைய காலில்தான் வந்து விழுவார்கள் என்ற மமதையோடு பூமிக்குச் சென்று விட்டான்.

தொடரும்..

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 25, 2008

தங்க மரம் - 7

முன்கதைச் சுருக்கம்

கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6


பாகம் - 7

கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அப்படி ஒட்டிக்கொண்டதும் பளீர் என்று ஒளிக்கீற்று செங்கோலில் இருந்து புறப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியாத வட்டவடிமான மாயத்திரையில் பட்டு காட்சிகள் தெரிந்தன. வியப்பின் உச்சியில் இருவரும் காட்சிகளைக் காணத் தொடங்கினர்.

காட்சியில் முதலில் ஆலோர் வந்தது. அந்தப் பின்னணியில் அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கையில் பொலிவும் அறிவும் அருளும் அன்பும் நிரம்பிய தெய்வீகம் தெளிந்தது. ஒளிவீசும் செந்நிறக் கண்களும் சுற்றியும் ஜொலிக்கும் பொன்னிற ஒளியும் பார்த்த பொழுதிலேயே கதிரவனின் உள்ளத்திலும் சித்திரையின் உள்ளத்திலும் ஒரு மதிப்பை எழுப்பின. அந்த அருளுடைப் பெண்ணே பேசினார்.

"வணக்கம். நான் லிக்திமா. ஆலோர் கிரகத்து ஒளியரசி. சுடர்மகள் என்றும் என்னைச் சிறப்பித்து அழைப்பார்கள். உங்களுக்கு இந்தப் ஒளிப்படக் கருவியை அனுப்பியிருப்பது ஒரு உதவியை வேண்டித்தான். என்ன உதவி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆலோரின் தோற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். பிறகு உதவியைச் சொல்கின்றேன்.''

இப்பொழுது காட்சி மாறியது. ஆலோரின் சுவற்றில் இருக்கும் ஒரு கோபுரத்தின் உள்ளிருந்த அறை தோன்றியது. அந்த அறையின் ஒரு தங்கத் தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஒளியின் பிறப்பிடம் போலச் சுடர் விட்டுக்கொண்டிருந்த லிக்திமா உலகின் எந்த இசைக்கருவியும் இசைக்கலைஞரும் தோற்றுப் போகும் இனிமையுடன் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய மாணிக்கக் கண்களும் கழுத்துச் சங்கியில் தொங்கிக் கொண்டிருந்த முத்தும் ஆனந்த ஜோதியை வீசிக் கொண்டிருந்தன. சட்டென்று உள்ளே நுழைந்தார் சாண்டா. பொன்னாடை இடுப்பில் மினுக்க வைரம் நெஞ்சில் மினுக்க நுழைந்தார். கதையைப் படிக்கின்றவர்களுக்கு அவர்தான் ஊழிவாயன் என்று அழைக்கப்பட்டவர் என்பது இப்பொழுதே புரிந்திருக்கும்.

"லிக்திமா........ ஒரு வாரமாக நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த முத்தைக் கொடுப்பதில் உனக்கென்ன குறைந்து விடப் போகின்றது? நான் யார் என்பது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது தானே?"

"கணவனே..நீ யார்? சாண்டா. மண்ணின் மகன் என்று ஆலோர் போற்றும் மேலோன். ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆதியின் சோதியால்தான் எல்லாம் உண்டானது. அதாவது ஆதியே அனைத்துமாய் ஆனது. அந்த எல்லாவற்றிலும் ஆலோர் கிரகமும் ஒன்று. உலகின் மற்ற கிரகங்களைப் போலில்லாமல் தட்டைக் கிரகமாக ஆலோரை உண்டாக்கினார் ஆதி.

ஆலோரைப் பார்த்துக் கொள்ள தன்னிலிருந்தே நான்கு ஆற்றல்களை உண்டாக்கி அற்புத சக்திகளையும் கொடுத்தார். முதலில் மண்ணைப் பார்த்துக்கொள்ள உன்னை உருவாக்கினார். சாண்டா என்று பெயரும் இட்டு...உறுதியில் சிறந்து மக்களையும் மற்ற உயிர்களையும் தாங்கும் வலிமையைக் குறிக்க உனது நெஞ்சில் வைரம் பதித்தார். அடுத்து என்னை உண்டாக்கினார். ஒளியும் ஆற்றலும் என்னிடம் இருந்து நீங்கள் பொறுப்பேற்றுள்ள மண்ணின் உயிர்களுக்கு உண்டாகட்டும் என்று பணியும் கொடுத்தார். என்னைச் சிறப்பிக்க செவ்வொளி பரப்பும் மாணிக்கக் கண்களைக் கொடுத்தார். எனது ஒளியைக் கூட்டிக் குறைத்து இரவையும் பகலையும் உண்டாக்கினார். அதே போல நீருக்கு மெரிமாவையும் காற்றுக்கு விண்டாவையும் உருவாக்கினார். மெரிமாவிற்கு நீலக் கல்லை நாவில் பதித்தார். விண்டாவிற்கு மரகதத்தைக் இரண்டு உள்ளங்கைகளிலும் பதித்தார். நீரின்றி அமையாது உலகு என்பதால் மெரிமாவிற்கு நீர்மகள் என்ற சிறப்புப் பெயர். காற்றின்றி எதுவும் வாழாது என்பதால் விண்டாவிற்கு தென்றலன் என்ற சிறப்புப் பெயர்.

ஆலோர் சுற்றுச் சுவற்றில் நான்கு கோபுரங்கள் அமைத்து நம் நால்வருக்கும் கொடுத்தார். அங்கிருந்து நாம் ஆலோரைக் காத்து வருகையில் உனக்கு என்னையும் விண்டாவிற்கு மெரிமாவையும் மணம் செய்து வைத்து வாழ்வளித்தார். அன்றிலிருந்து நாம் ஆலோரைக் காத்துப் பராமரித்துக் கொண்டு வருகின்றோம். சரிதானே!"

"கேட்ட கேள்வி என்ன? சொல்லும் விடை என்ன? நான் யார் என்று கேட்டால் ஆலோரின் வரலாற்றையும் ஆதியின் பெயரையும் சொல்லி நானும் நீயும் ஒன்று என்று கதையளக்கின்றாயா?"

"குடும்பம் என்று வந்தால் கணவனும் மனைவியும் ஒன்றுதானே? இதில் பெரியோர் சிறியோர் என்ற பேதம் ஏது?"

"ஆகா...அழகான பேச்சு...ஆனால் அது மறக்கடிப்பது உன்னுடைய ஆணவத்தை. சுடர்மகள் அல்லவா...அதனால் என்னுடைய சிறப்பை இருளில் தள்ளவும் உன்னுடைய பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தெரிந்திருக்கிறது."

"சாண்டா! என்ன பேசுகின்றாய்? எனக்கு ஆணவமா? உன்னை விட என் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேனா? சுடர்மகளாக என்னுடைய கடமையையும் மனைவியாக என்னுடைய வாழ்க்கையையும் ஒழுங்காக நடத்தியதால்தானே இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன."

"அந்த இரண்டு பரிசுகளை நீ பெற்றதால் என்னிலும் பெரியவள் நீ என்ன மமதையில் பேசுகின்றாய். கணவன் மனைவிக்குள் பெரியவர் இல்லையென்று சொல்லி விட்டு உன்னை உயர்த்திக் காட்டும் அந்த முத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறாய். அதன் மூலம் நால்வரில் பெரியவள் நீ என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறாய். நீ ஒரு புகழ் விரும்பி."

ஆட்டிக் கொண்டிருந்த தொட்டிலை நிறுத்தி விட்டு எழுந்தார் லிக்திமா. அவருடைய பேரொளி சற்றுக் குன்றியது போலத் தோன்றியது. ஆனாலும் மிடுக்கிற்குக் குறைவில்லை.

"நானா புகழ் விரும்பி? சாண்டா..... இந்த முத்து ஆதி பரிசளித்தது. நமது மகள் தனிமா பிறந்த பொழுது கிடைத்த பரிசு. பகலில் நான் ஒளிரும் பொழுது இந்த முத்து வெள்ளொளி வீசும். மாலை வரவர நீலமாகி இரவிலோ அடர்ந்து ஒளிவீசும். ஆற்றலை நான் வெளிப்படுத்துகையில் அதைச் சீர்மை செய்யவும் உதவுகிறது இந்த முத்து. அதைக் கேட்டால் எப்படித் தருவது? உனது நெஞ்சிலே பதித்திருக்கும் பெரிய வைரத்தை யாரேனும் கேட்டால் தர முடியுமா?"

லிக்திமாவின் பேச்சு சாண்டாவிற்கு ஆத்திரத்தையே கூட்டியது. "நான்கு தெய்வங்களும் ஆளுக்கு ஒன்று என்று கற்களை வைத்திருக்கையில்...உனக்கு மட்டும் ஏன் இரண்டு? நமக்குள்ளே பாகுபாடு காட்டத்தானே?"

"சாண்டா... கொடுத்தது ஆதி. நாளையே உனக்கும் ஒரு பரிசு கிடைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் பொறாமைப் பட வேண்டுமா? பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் நாம். வெறும் வெறுப்பில் இருந்தால் சரியாகுமா?"

"லிக்திமா. பேச்சைக் குறை. உனக்கான ஒன்று என்னிடம் இருந்தால் என்ன? என்னுடைய கழுத்தை இந்த முத்து அலங்கரித்தால் என்ன வந்துவிடப் போகிறது?"

"ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்?"

சாண்டாவின் ஆத்திரம் வைரத்தில் தெரிந்தது. செக்கச்செவேல் என்று நெருப்பாய் ஜொலித்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னுடைய கோபுரத்திற்குச் சென்று விட்டான். மெரிமாவும் விண்டாவும் நிகழ்ச்சிகளைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெய்வங்களுக்குள்ளே சண்டை எழுந்தால் ஆலோரை யார் காப்பாற்றுவது. ஆதியே வந்துதான் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரச்சனைக்குள் தலையிடாவிட்டாலும் தொடர்ந்து மெரிமாவும் விண்டாவும் நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தன்னுடைய கோபுரத்திற்குச் சென்ற சாண்டாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக தான் மாறப்போவது தெரியாமல் திட்டம் தீட்டினான் சாண்டா.

தொடரும்

பி.கு - படம் வரைந்து தரும் கிரண் பணிப்பளுவினால் இந்த வாரம் திட்டமிட்ட படி படம் தரமுடியவில்லை என்றும் அடுத்த வாரம் கண்டிப்பாக செய்து தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 18, 2008

தங்க மரம் - 6

முன்கதைச் சுருக்கம்

இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5

தங்க மரம் - 6

ஆலோரின் நடுக்கோபுர உச்சியிலிருந்து ஜிவ்வென எழும்பிப் பறந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். ம்ம். இல்லையில்லை. பிடிமாதான் இறக்கைகளை விரித்துப் பறந்தாள். தனிமா பிடிமாவின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

பழுப்பு நிறம்...மரகதத் தந்தம்..இரண்டு அழகிய இறக்கைகள் கொண்ட பெண்யானைதான் பிடிமா. அவள் மீது ஏறித்தான் பறந்து கொண்டிருந்தாள் தனிமா. அதுவும் பூமியை நோக்கி. அவ்வப்பொழுது திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே.

முதன்முதலாக தன்னுடைய கிரகத்தை விட்டுத் தெரியவே தெரியாத இடத்திற்குப் போகிறாள். அதுவும் போரிடுவதற்கு. எப்படிப் போரிடப் போகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றினாலும் உள்ளத்தில் உறுதி குறையவேயில்லை. அதுவுமில்லாமல் பறக்கும் பொழுது காணும் காட்சிகள் அவளுக்கும் பிடிமாவிற்கும் புதுமகிழ்ச்சியை உண்டாக்கின. பலப்பல சிறிய நட்சத்திரங்கள்..எரிகற்கள்..கிரகங்கள்..தொலைவில் மினுக்கும் தாரகைகள்...என்று நவரத்தினங்களைக் கொட்டி வைத்த சாலையில் செல்வது போல இருந்தது. தேவையான ஆற்றல் இருந்ததால் பறப்பது பிடிமாவிற்கு எளிதாகவே இருந்தது.
அவ்வப்பொழுது ஒளித்தாரகைகளுக்குள் புகுந்து வெளிவருவதும் இருவருக்கும் சுகமாக இருந்தது. அந்தத் தாரகைகளில் இருந்து ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர்தானே பேச்சுத்துணை.

"நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது. புறப்படும் பொழுது கட்டிக் கொடுத்த காரிசுகள் நிறைய இருக்கின்றன. ஆளுக்கொன்று கொறிப்போமா?"

தலையை ஆட்டி மறுத்தாள் பிடிமா. "வேண்டாம் தனிமா. சற்று நேரம் போகட்டும். இப்பொழுது பசியில்லை." பேசிக்கொண்டே வந்த பிடிமா படக்கென்று நின்று விட்டாள்.

ஏன் என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தாள் தனிமா. ஆனால் முடியவில்லை. அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. பிடிமாவாலும்தான். ஆகையால்தான் படக்கென்று நின்று விட்டாள். ஒரு நொடி இருவருமே திகைத்துப் போனார்கள். இப்பிடி அசையாமல் தொடர்ந்து நின்று விட்டால் ஆற்றல் வீணாகிவிடுமே. பிறகெப்படி பூமிக்குப் பறப்பது?

அப்பொழுதுதான் அவர்களுக்கு நேர்ந்தது சற்றுப் புரியத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஒருவிதக் கண்ணாடிக் கயிற்றால் இருவரும் கட்டப்பட்டிருந்தார்கள். மிகமிக மென்மையான அந்தக் கயிற்றின் அழுத்தம் புரியவில்லை. ஆனால் இறுக்கம் புரிந்தது.

ஒரு பயங்கரம் அவர்களது கண்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆம். அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய சிலந்தி. பக்கவாட்டில் இருந்து நகர்ந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. அதன் வலையில்தான் தனிமாவும் பிடிமாவும் சிக்கியிருந்தார்கள். பார்க்கவே அருவெறுப்பாக இருந்த அந்தச் சிலந்தி எச்சில் ஒழுகும் கோரவாயின் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்தது.

கைகால்களை அசைக்க முடியாவிட்டாலும் மனத்தால் எதையும் செய்யும் திறமையுள்ளவர்கள் ஆலோரிகள். மனதால் முறுக்கிக் கண்ணாடிக் கயிறுகளை நெகிழ்த்தினார்கள் தனிமாவும் பிடிமாவும். கயிறு அறுபடுவதைக் கண்டதும் சிலந்து மறுபடியும் கண்ணாடிக்கயிறுகளைக் கக்கியது. இவர்கள் அறுக்க அறுக்க சிலந்தியும் கயிறுகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் வேலைக்காகது என்பதைத் தனிமா புரிந்து கொண்டாள். மனதிற்குள்ளேயே பிடிமாவுக்குச் செய்தி அனுப்பினாள்.

"பிடிமா.. இந்தச் சிலந்தியை நாம் மனதால் தாக்குவோம். நீ அதன் எட்டு கால்களையும் ஒவ்வொன்றாய் மனதால் உடை. நான் அந்தக் கண்ணாடி கக்கும் வாயைக் கிழிக்கிறேன். இல்லையென்றால் தொடர்ந்து நாம் கட்டப்பட்டுக்கொண்டேயிருப்போம்."

பிடிமாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. மனதால் சிலந்தியின் ஒரு காலைத் தும்பிக்கையால் பிடித்து இழுப்பது போல இழுத்தது. யாருமே இல்லாமல் தன்னுடைய கால் இழுபடுவதை உணர்ந்த சிலந்தி ஆத்திரத்தோடு திரும்பியது. அதே நேரத்தில் சரியாக அதன் வாயில் குத்தினாள் தனிமா.

தன்னுடைய உணவு/எதிரிகள் கண் முன்னே கட்டுப்பட்டுக் கிடக்க தன்னைத் தாக்குவது யாரென்று தெரியாமல் தடுமாறியது சிலந்தி. காய் காய் என்று கத்திக் கொண்டு தன் காலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று நினைத்து....தன் காலைத் தானே கடித்தது. பிடிமாவும் விடாமல் காலைப் பிடித்து முறுக்க முறுக்க சிலந்தியில் அலறல் கூடியது. ஆனால் தொடர்ந்து அலறவும் விடாமல் தனிமா அதன் தாடையிலேயே குத்தினாள். தாடையும் உடைந்து கிழிந்து எச்சிலும் கண்ணாடியிழைக் கூழும் ஒழுகின. யாரும் இல்லாமல் தானே தாக்கப்பட்டுக் கொள்ளும் காட்சி மிகக்கொடூரமாக இருந்தது.

அதற்குள் ஒரு காலை உடைத்து விட்ட பிடிமா அடுத்த காலுக்குத் தாவியது. மிகவிரைவிலேயே இரண்டு மூன்று கால்கள் நொறுங்கின. சிலந்தி நேராக நிற்க முடியாமல் லம்பி ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. வாய் கிழிந்து போனதால் கண்ணாடிக் கயிறுகளை அதனால் பீய்ச்சியடிக்கவும் முடியவில்லை. வலியும் வேதனையும் தாளாமல் தானே விழுந்து புரண்டது. அதுதான் சரியான நேரம் என்று தனிமாவும் பிடிமாவும் தங்களைக் கட்டியிருந்த கண்ணாடிக்கயிறுகளை அறுத்துக் கொண்டார்கள்.

மனதினாலேயே இருவரும் வழிந்திருந்த கண்ணாடியிழைக் கூழால் சிலந்தியை இறுக்கக் கட்டினார்கள். நகரவும் முடியாமல் மூச்சு விடவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே சிலந்தி விறைத்தது.

பெருமூச்சு விட்டபடியே தங்களைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் தனிமாவும் பிடிமாவும். ஆளுக்கு இரண்டு காரிசுகளைக் கடித்துத் தின்றார்கள். களைப்பு சற்று நீங்கியது. அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள். நா வறட்சியைப் போக்கியதுடன் சிறிது தெம்பும் வந்தது.

நேரம் கடத்த விரும்பாமல் உடனே புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு பெரிய உண்மை இருவருக்குமே புரிந்தது. ஆம். இருவரின் ஆற்றலிலும் பெருமளவு சிலந்திச் சண்டையிலேயே வீணாகிப் போனது. மிச்சமிருக்கும் ஆற்றல் அவர்களை பூமியில் கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னேறுவது என்ற முடிவோடு தொடர்ந்தார்கள். விரைந்து செல்ல முடியாத வகைக்கு ஆற்றல் பெருமளவில் குறைந்து வேகம் மட்டுப்பட்டது. வழியில் அங்காங்குள்ள ஒளிப்பொட்டுகளிலிருந்தும் தொலைதூரத் தாரகைகளில் இருந்தும் ஆற்றலைக் கொஞ்சம் பெற்றுக்கொண்டாலும்....அவையெல்லாம் போதவில்லை. ஒருவழியாக இருவரும் குற்றுயிரோடு தங்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குச் சென்றார்கள்.

பால்வெளி மண்டலத்தில் நுழையும் பொழுதுதான் ஆற்றல் முழுவதும் தீர்ந்து மயங்கத் தொடங்கினார்கள். அந்த மயக்கம் தீர வரவேற்றான் கதிரவன். உலகையெல்லாம் தனது ஒளிக்கற்றைகளால் காக்கும் கதிரவனைச் சொல்கிறேன். அந்தக் கதிரவனின் வெள்ளொளியானது தெம்பைக் கொடுத்தாலும் ஏற்கனவே இருந்த ஆற்றலையெல்லாம் வீணடித்து விட்டதால்....இப்பொழுது கிடைக்கும் ஆற்றல் அவர்களை நகர்த்தவும் உயிரோடு வைத்திருக்கவும் மட்டுமே முடிந்தது. பூமியை நெருங்க நெருங்க களைப்புதான் இருவரையும் வாட்டியது.

சரியாகக் காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததுமே புவியீர்ப்புவிசை அவர்களைப் பற்றி இழுத்தது. ஆனால் அதைத் எதிர்த்துப் பறக்கும் ஆற்றல் இல்லாமலையால் பிடிமா பிடிமானம் இழந்தது. நிலை குலைந்து கீழே விழுந்தாள் தனிமா. இருவரும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையை நோக்கி இழுக்கப்பட்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பி.கு - வழக்கமாக படம் வரைந்து தரும் கிரண் விடுமுறை முடிந்து திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து படங்கள் வரும்.

Monday, February 11, 2008

தங்க மரம் - 5

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். மற்றும் பாகம்-3 பாகம்-4

பாகம் - 5

உருளைப் பெண்ணின் மிரட்டலைக் கேட்டு ஆத்திரத்தோடு இருந்த ஊழிவாயனின் எரிகின்ற சினத்தில் எண்ணெய் ஊற்றியது தேலி. அது ஊழிவாயனுக்கு ஏதும் கெட்டது நல்லது நடக்குமானால் முன்னால் எச்சரிக்கும் பறவை. காய் காய் என்று கத்தியது. அந்தக் கத்தலைக் கேட்டு தேலியிடன் சென்றால் ஊழிவாயன்.

"ஊழிவாயா.... நீ விரைந்து செயல் முடிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நீ பிடித்து வைத்திருக்கும் செங்கோமானின் மனைவி தன்னுடைய மகன் கதிரவனிடம் உன்னை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவன் வெற்றி பெறுவானோ! தோல்வி பெறுவானோ! ஆனால் உனக்கு ஒரு எதிரி உண்டாகி விட்டான்."

ஊழிவாயனின் நெஞ்சிலிருந்த வைரம் செவேலென்று ஒளிர்ந்தது. "தேலி... இப்பொழுது அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான்? உடனே சொல்...நான் சென்று கொன்று வருகிறேன்."

தேலி கிக்கித்தது. "ஹா ஹா எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. அது என்னுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று அவனுடைய பிறந்தநாள். ஆகையால் இல்லத்தில் இருப்பான் என்றுதான் தோன்றுகிறது."

அடுத்த நொடியிலேயே அந்த இடத்திலிருந்து மறைந்தான் ஊழிவாயன். மிக விரைவில் கதிரவனின் இல்லத்தில் தோன்றினான். "கதிரவா....வா இங்கே?"

ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கேட்டு வெளியே வந்தார் அமுதம். வந்திருப்பவன் கொடியவன் என்று மட்டும் உடனே புரிந்தது. "யார் நீர்? என்ன வேண்டி உள்ளே வந்தீர்?" சற்று அதட்டலோடுதான் கேட்டார்.

"ஓ நீதான் அமுதமா? கதிரவனின் தாய்தானே? என்னைக் கண்டு அச்சப்படாமல் என்னையே அதட்டத் துணிந்த உம்மைச் சும்மா விடமாட்டேன். மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்.

"தமிழைக் கற்றவர்கள் நாங்கள். தமிழ்வேளை உற்றவர்கள் நாங்கள். உன்னுடைய மந்திரங்களும் தந்திரங்களும் எங்கள் உண்மைச் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் அற்றுப் போகும். அதைப் புரிக முதலில்." மறமும் அறமும் பொலிந்து சினந்தது அமுதத்தின் முகத்தில்.

அது ஊழிவாயனின் சீற்றத்தை ஏற்றத்தில் வைத்தது. "பெண்ணே... உனது கணவனைப் பிடித்து வைத்திருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாக. அப்படியிருக்கையில் நீ என்ன செய்து விட முடியும்? உன்னுடைய மகன் என்ன செய்து விட முடியும்? உங்களைப் பொடியாக்கி மண்ணில் முளைக்கும் செடியாக்க நொடி கூடப் பிடிக்காது."

தன்னுடைய கணவனைப் பிடித்து வைத்திருப்பவன் வந்திருப்பவன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலிருந்த அன்பையெல்லாம் கிளறி ஆத்திரமாக்கி ஊழிவாயன் மேல் பாய்ச்சியது. "கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."

"மடப் பெண்ணே...பேச்சைக் குறை. உன் தமிழறிவை பள்ளியில் காட்டு. இந்தக் காட்டுக்கள்ளியிடம் காட்டாதே. இது பார் ஏவி விடுகிறேன் நெருப்பை."

சிரித்து விட்டார் அமுதம். "நெருப்பா? ஒவ்வொரு நாளும் எங்கள் அடுக்களையில் அதில்தான் வேகிறது பருப்பு. நீ ஏவி விடு. அதைச் சாம்பலாக்கி நான் காற்றில் தூவி விடுகிறேன்."

கையிலிருந்த மந்திரத்தண்டை எடுத்துத் திருகினான் ஊழிவாயன். தண்டிலிருந்து கபகபவென நெருப்புக் கொப்புளங்கள் பொங்கிப் பரவின. அந்தக் கொப்புளங்கள் அமுதத்தைச் சுற்றி வளைத்தன.

"உணவு என்பது உயிருக்கு அடிப்படை. அதை உண்டாக்கத் தேவை தீயெனும் படை. பசிப்போரை எதிர்க்கும் நெருப்பே நீ இப்போர் மறந்து சமைப்போர் அடுப்பில் புகுக. உணவு உண்டாக்குக. மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக." அமுதம் சொல்லச் சொல்ல நெருப்புக் கொப்புளங்கள் அவரிடமிருந்து விலகி அடுப்பறைக்குள் சென்று அடுப்புக்குள் புகுந்தது.

ஒன்றும் அறியாத பெண் தான் ஏவிய நெருப்பை அணைத்ததை ஊழிவாயனால் ஏற்க முடியவில்லை. உடனே ஒரு மாயப்பேயை உருவாக்கி ஏவினான். அந்தப் பேயும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு முண்டக்கண்டை விழித்துக் கொண்டும்....பார்க்கச் சகிக்காத உருவத்தோடு சிவந்த நாக்கை நீட்டி மிரட்டியது. கூ கூ ஹிஹ் ஹிஹ் என்று ஓலமிட்டது. பேய்க்கு மிரளாதார் உண்டோ. ஆனால் அமுதம் மிரளவில்லை. "சீச்சீ...பேயே...போயேன். ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். உன்னைக் கண்டு அஞ்சினால்....அந்த இறைவனுக்குத்தான் இழுக்கு. மறைந்து தொலைந்து போ..." அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். அதுதான் அங்கும் நடந்தது. மாயப்பேய் மாயமாய்ப் போனது.

தன்னுடைய முந்தைய சாதனைகள் அத்தனையும் அமுதம் அழித்து அவமானப்படுத்திவிட்டதாகவே கருதினான். அதே நேரத்தில் அவரிடம் இருக்கும் சக்தி என்னதென்றும் அதன் அளவு எவ்வளவென்றும் கருதிட முடியாமல் தவித்தான். வலிமை தெரியாமல் அடுத்த படையை ஏவுவது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. அந்த நொடியில் ஒரு திட்டம் தோன்றியது.

அமுதம் என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்னமே ஒரு மயக்கக் குளிகையை தரையில் உருட்டினான். அதிலிருந்து மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்.

மந்திரத்தண்டை மீண்டும் திருகினான். அதிலிருந்து சிறிய குமிழ் வெளிவந்தது. அந்தக் குமிழைப் பார்த்துச் சொன்னான். "கண்ணாடிக்குமிழே...இதோ இங்கே மயங்கிக் கிடக்கும் பெண்ணை சிறைப்படுத்திக் கொண்டு கூம்புமலைக்குச் செல்."

அவன் கட்டளையைப் புரிந்து கொண்ட குமிழ் சிறிது சிறிதாக காற்றடைக்கப்படுவது போலப் பெரிதானது. அப்படியே மிதந்து சென்று அமுதம் மீது அமர்ந்து அப்படியே அவரை தனக்குள் அடைத்துக் கொண்டது.

"ம்ம்ம்ம்...கூம்புமலைக்குச் செல்... வெளியிலிருந்து எந்தச் சத்தமும் உள்ளே வரக்கூடாது. உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக்கூடாது. இந்தப் பெண் பேசியே கூம்புமலையைச் சிதைத்து விடக்கூடும். ஆகையால் குரல் வெளியே வரவே கூடாது. செல்" உறுமினான் ஊழிவாயன்.

அந்தக் குமிழ்..அப்படியே அந்தரத்தில் எழும்பிப் பறந்தது.... சட்டென்று மறைந்தது. ஊழிவாயனும்தான். அந்த பொழுதில்தான் காட்டிற்குள் கதிரவனும் சித்திரையும் ஒரு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 04, 2008

தங்க மரம் - 4

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். பாகம்-2 மற்றும் பாகம்-3

பாகம் - 4

தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில் கட்டிக் கொண்டு ஓடினான் கதிரவன். எங்கே? அங்கேதான். வழக்கமாக சித்திரையைச் சந்திக்கும் இடத்திற்குத்தான். கதிரவனின் பாட்டனார் உயிர்தொடு செங்கையார் ஒரு மருத்துவர் என்று நாம் அறிவோம். அவரது மருத்துவச்சாலையைக் கோயிலாகவே கட்டியிருந்தார். வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்.

இன்றும் அந்தக் கோயிலும் மருத்துவத்துறையும் கதிரவனின் அன்னையின் பொறுப்பில் சிறப்பாக இருக்கின்றன. செங்கையாரிடம் கற்ற மாணாக்கர்கள் அங்கு மருத்துவம் செய்து வந்தால் நாட்டிலுள்ளோருக்கு அது பயனுள்ளதாகவே இருந்தது. கதிரவனும் அங்கு மருத்துவம் கற்றிருந்ததால் அவனும் ஒவ்வொரு பொழுது மருத்துவம் பார்த்தான்.

அந்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தின் வில்வமரம்தான் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மரம். அங்கு கதிரவன் சென்ற பொழுது சித்திரை மருத்துவத்துறையில்தான் இருந்தான். மூலிகைத் தோட்டப் பராமரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொறுப்பு. சித்திரையின் தந்தை இளங்கோவின் காலத்திலிருந்து பொறுப்பாகச் செய்து வருகின்றார்கள்.


கதிரவனை விடச் சித்திரை ஓராண்டு மூப்பு. வந்த நண்பனைக் கட்டியணைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். உற்ற நண்பர்களின் அணைப்பும் வாழ்த்தும் யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெட்டியும் பொறுப்பும் கைவந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டிருந்த கதிரவனின் பரபரப்பு நண்பனைக் கண்டதும் குறைந்தது. பொன்னவிரிலையைப் பதப்படுத்திக் கொண்டிருந்த சித்திரையின் கையைப் பிடித்து வில்வமரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.

மடியில் முடிந்து வைத்திருந்த பெட்டியை எடுத்து நண்பனின் கையில் வைத்தான். "சித்திரை, இன்று அம்மா இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்கள். இது அப்பா கொடுத்துச் சென்ற பெட்டியாம். அவர்..." கதிரவன் முடிக்கும் முன்னமே சித்திரை தொடர்ந்தான். "அவர் ஒரு கடமையை கொடுத்துச் சென்றிருக்கிறார். அது என்ன எதுவென்று அம்மாவிற்குத் தெரியாது. ஆனால் நீ ஆற்றல் மிக்கவனாக இருந்தால் கண்டு பிடித்துச் செய்து முடிப்பாய். சரிதானே?" சொல்லி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.

வியப்பில் வாயடைத்துப் போனான். "டேய்...இதை நீ எப்படி அறிவாய்?" சின்னக் கோவத்தில் நண்பனின் தோளில் குத்தினான்.

குத்தை வாங்கிக் கொண்டு சிரித்தபடியே சொன்னான் சித்திரை. "எட்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய அன்னை எனக்குச் சொன்னது. உனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது உன்னிடம் உன் அம்மா சொல்வார் என்றும் அதுவரையில் உன்னிடத்தில் இதைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என் அம்மா கட்டளையிட்டிருந்தார்கள். ஆகையால்தான் உன்னிடம் சொல்லவில்லை."

இதுவரைக்கும் எதிலும் ஒளிவு மறைவு என்று வைக்காத நண்பன் இப்படியொரு செய்தியை எட்டு மாதங்களாகச் சொல்லாமல் வைத்திருக்கிறானே என்ற ஆத்திரம் லேசாக இருந்தாலும் அம்மாவின் கட்டளை என்று சொன்னதும் அமைதியானான் கதிரவன். அதுவுமில்லாமல் தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது. மறுபடியும் நண்பனைக் கட்டிக் கொண்டான்.

முதுகில் தட்டிக் கொடுத்த சித்திரை, கதிரவனைத் துறைக்குள் அழைத்துச் சென்றான். மூலிகை விதைகளையும் நாற்றுகளையும் அவை தொடர்பான மற்ற பொருட்களையும் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். பலப்பல மூலிகை விதைகளில் கிளம்பும் கும்மென்ற மணத்தை முகர்ந்ததும் இருவருக்கும் உடலில் புத்துணர்ச்சி பரவியது. அங்கேயிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்தான் சித்திரை. பெரிய வெள்ளைத்துணிப் பொட்டலம். அதைக் கதிரவனையே பிரிக்கச் சொன்னான்.

வெண்ணெயை நெய்த துணி போல வாங்கிய கையில் ஒரு வழுவழுப்பை உணர்ந்தான். ஈரமில்லாமல் இருந்தாலும் குளிர்ச்சி உள்ளங்கையைக் குத்தியது. பிரிக்கப் பிரிக்க வெள்ளையாக இருந்த துணிப்பொட்டலாம் வெளிர் மஞ்சளானது. இன்னும் இரண்டு சுற்று பிரிந்ததும் அப்படியே அடர் மஞ்சளாகியது. நிறம் அடர்ந்து கொண்டே போய் துணி செக்கச் செவேல் என்று ஆனது. மொத்தத் துணியையும் பிரித்ததும் உள்ளே அரையடி நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் பட்டையாக உள்ள செக்கச் சிவந்த உருளை கதிரவனின் கைப்பிடியில் சிக்கியது.

கீழே விழுந்திருந்த பொட்டலத் துணி இப்பொழுது வெளுத்திருந்தாலும் உருளையைப் பிடித்திருந்த கதிரவனின் கை, கட்டியிருந்த வேட்டி, அவனது உடம்பு...என்று சிவப்பாகத் தெரிந்தது. மாயம் போல மயங்கியது கதிரவனின் மனது. வியப்பில் கேட்டான். "என்னடா இது? இப்படியொரு உருளைக் குச்சியை நான் பார்த்ததேயில்லையே. அனலில் இட்ட இருப்புக் கம்பி போல் ஒளிர்கிறது. ஆனால் தொட்டால் குளுமையாக இருக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?"

பெருமூச்சு விட்டான் சித்திரை. "தெரியவில்லையே. பெட்டியை வைத்துக் கொண்டு நீ இன்றைக்குத்தானே முழிக்கத் தொடங்கியிருக்கிறாய். நான் எட்டு மாதங்களாக முழித்துக் கொண்டிருக்கிறேன். சரி. முதலில் பொட்டலத்தைத் திரும்பக் கட்டு. இங்கு மருத்துவர்களும் நோயாளிகளும் வருவார்கள். நாம் வேறொரு இடத்தில் இதைப் பற்றிப் பேசலாம். நடுப்பகலுக்கு மேல்தான் ஓய்வுப் பொழுது."

தான் கொண்டு வந்த பெட்டியையும் செங்கோலையும் ஒன்றாக வைத்து வெள்ளைத் துணியில் திருப்பக் கட்டினான். அப்படி அழுத்திக் கட்டும் பொழுது கிணுங்கிணுங்கென்று வெள்ளிமணியொலி கேட்டது. உடனே பொட்டலத்தைப் பிரித்து பெட்டியைக் கையிலெடுத்துக் குலுக்கினான். ஒன்றும் கேட்கவில்லை. செங்கோலையும் குலுக்கினான். எந்த ஓசையுமில்லை. யோசித்தபடியே மீண்டும் இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். மறுபடியும் கிலுங்கிலுங்கென்ற் ஒலி கேட்டது. பெட்டியும் செங்கோலும் உரசும் பொழுது அந்த ஒலியெழுகிறதோ என்று இருவரும் நினைத்தார்கள். ஆனாலும் அங்கே வைத்து அதைப் பரிசோதிக்க அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

நடுப்பகல் வரும் வரையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினார்கள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறிக் கொண்டார்கள். பொட்டலத்தைப் பிரித்து பெட்டியையும் செங்கோலையும் உரசினார்கள். கிலுங்கிலுங்கென்று ஒலியெழுந்தது. வெள்ளி மணியை காதோரம் வைத்து ஆட்டுவது போல.

மணியோசை நல்லிசையாக இருவரின் மனதையும் மெல்ல மயக்கியது. அப்படியே தொடர்ந்து உரசுகையில் "ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி...." என்று சொற்கள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, January 28, 2008

தங்க மரம் - 3

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். அதே நேரத்தில்......

பாகம் - 3

ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.

ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.

அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.

ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.

சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!

குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.

அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.

பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண். அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.

"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."

தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."

தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"

"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"

தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.

என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, January 21, 2008

தங்க மரம் - 2

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

ஆளரவமில்லாக் காட்டில் வட்ட வடிவத்தில் ஒரு ஏரி. தளும்பித் தளும்பி நீர் தத்தளிக்கும் மிகப்பெரிய ஏரி. இருந்தாலும் எந்த ஒரு விலங்கும் அந்த ஏரியில் நீர் பருகவோ....அருகில் செல்லவோ இல்லை. ஏரியின் நட்டநடுவில் கூர்மையான உச்சியுடன் கடும்பாறைகளால் ஆன ஒரு கூம்புமலை.

அந்த ஏரிக்கு மேலே மலையைச் சுற்றி நிறைய குண்டரப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பொழுதே வாயைத் திறந்து குரல் வெளியே கேட்காமல் தொடர்ந்து கத்தின. மற்றபடி வேறு எந்தப் பறவையும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.

குண்டரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பார்க்க எப்படியிருக்குமென்று சொல்கிறேன். கால்கள் இல்லாத பறவை அது. இறக்கைகளும் கிடையாது. பளபளக்கும் பொன்மஞ்சள் நிறம். மற்றபடி பார்க்க வாத்து போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மூன்று நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இது உட்கார்ந்த இடத்திலிருந்து இறக்கையில்லாமலே அப்படியே மேலே எழும்பிப் பறக்கும். இந்தப் பறவைகளுக்கு உணவு நெருப்புக் குழம்பு. அந்தக் குழம்பின் ஆற்றலால் இவை பறக்கின்றன. அப்படிப் பறக்கையில் அவைகளின் பின்னால் சிறிது புகையெழும்பும். இதனுடைய மற்றைய சிறப்புகளைப் பிறகு பார்ப்போம். முதலில் கூம்புமலைக்குள் நுழைவோம். அங்கு என்ன நடக்கிறதென்று தெரிய வேண்டாமா!


இந்த மலை யாருக்குச் சொந்தமானது தெரியுமா? ஊழிவாயனுக்குச் சொந்தமானது. ஊழிவாயன் கதையைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவன் கோட்டைக்குள் நுழைவோம். கூம்புமலைக்குள் நுழைய இரகசிய வழி மட்டுமே உண்டு. ஆனால் பார்க்கும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது.

அந்த மலைக்குள் நிறைய பூகன்களும் பூகிகளும் ஊழிவாயனிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவைகள் பூதங்கள். ஆனால் குள்ள பூதங்கள். ஆண் பூதங்களுகுப் பூகன்கள் என்றும் பெண் பூதங்களுக்குப் பூகிகள் என்றும் பெயர். குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும். ஆனால் அபார சக்தி பெற்றவை. ஊழிவாயனால்தான் அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிந்தது. நிலத்தைக் குடைந்து சென்று பூமியின் நடுவில் இருக்கும் நெருப்புக் குழம்புகளை குண்டரப் பட்சிகளுக்கு உணவாகக் கொண்டு வருவதும் பூகன்களின் வேலைகளில் ஒன்று.

சரி. அந்த மலைக்குகைக்குள்ளே போவோம். அதுவும் ஊழிவாயனின் அறைக்குள்ளே. வட்டமாக இருந்த அறையின் சுவற்றில் மாயத்தீவட்டிகள் எரிந்தன. நெருப்பு எரிகையில் சுடுமல்லவா. அப்படிச் சுடாமல் இருக்கத்தான் இந்த மாயத்தீவட்டிகள். வேறொரு அறையில் பூகிகள் நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால் தந்திரமாக அந்த நெருப்பின் ஒளியை மட்டும் மந்திரக்கயறுகளின் வழியாக மாயத்தீவட்டிக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஊழிவாயன். அந்த அறையிலேயே குமிழ் பொறிகளும் வைத்திருக்கிறான். அவைகளைத் திருகி வெளிச்சத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் கூட அவனால் முடியும்.

அப்படிப் பட்ட ஊழிவாயன் எப்படியிருப்பான் தெரியுமா? ஏழு அடி உயரம். பரந்து விரிந்த உடற்கட்டு. இடுப்பில் ஒரு ஆடை. அது குண்டரப்பறவைகளின் தோலால் ஆனது. பொன்னிறத்தில் பளபளத்தது. தலைமுடி வளர்ந்து இடுப்புவரை தொங்கியது. அதே நேரத்தில் உச்சந்தலையில் கூம்புக்குடுமி ஒன்று. நெஞ்சில் உள்ளங்கையளவு பெரிய வைரம் பதித்திருந்தான். அமைதி காணாத முகமும் உள்ளமும். தேவையில்லாத பரபரப்பும் வெறுப்பும் முகத்தில்.

அறைக்குள் நுழைந்தவன் முதலில் மாயத்தீவட்டிகளின் ஒளியைக் குறைத்து இருட்டாக்கினான். ஆனாலும் அவன் அந்த அறைக்குள் அவனால் மிக எளிதாக நடமாட முடிந்தது. கையில் வைத்திருந்த தடியால் தரையில் ஒரு இடத்தில் மூன்று முறை தட்டினான். உடனே தரை திறந்து உள்ளிருந்து ஏழு ஆளுயர கருப்பு உருளைகள் மேலே வந்தன. முதல் உருளையின் முன் சென்று கைத்தடியை நீட்டினான். உருளையின் மேல் பகுதியில் சிறிய செவ்வகம் திறந்தது. அதன் வழியாக ஊதாநிறத்தில் வெளிச்சம் வந்தது. செவ்வகச் சன்னலில் ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. ஊதா நிறத்திலுள்ள அவளுடைய மேனியிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. அவள் வாய் திறந்து பேசினாள்.

"ஊழிவாயா...ஆழி போல் ஏரிசூழ் கூம்புமலைத் தலைவா...வைர நெஞ்சம் என்று ஊரார் சொல்வர். அந்த வைரத்தையே நெஞ்சில் பதித்தவா...என்னைப் பாரு...என்னைச் சேரு. நீயின்றி வாழ்க்கை சேறு. நல்ல மறுமொழி ஒன்று கூறு." கேட்ட குரலில் தாபமும் மோகமும் பொங்கிப் பெருகின.

கேட்கும் பொழுதே ஊழிவாயன் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்றான். படக்கென்று தடியைக் காட்டி உருளையை மூடினான். அடுத்த உருளைக்குச் சென்று அதே போலத் திறந்தான். இந்த முறை கருநீலநிற ஒளி வந்தது. மீண்டும் பெண்ணின் முகம். ஆனால் அதே முகம். ஆனால் மேனி கருநீலநிறத்தில் இருந்தது. வாய் திறந்து பேசினாள்.

"தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.

மேலே பேச்சைக் கேட்காமல் மூடினான். அடுத்த உருளையைத் திறந்தான். அதே முகம். ஆனால் நீலநிறம். அந்த அறை முழுவதும் நீலம் பரவியது. "தலைவன் ஒருவன் இருந்தால் தலைவி ஒருத்தி வேண்டும். இந்தக் கூம்புமலை தலைவியைக் காண்பது எப்பொழுது? உனது அரியணையிலே நானும் அமர்ந்து தலைவியாகி உன்னுடைய கூம்புமலையை ஆள்வது எப்பொழுது?" கேட்கும் பொழுதே நெஞ்சில் நஞ்சு சேர்வது போல இருந்தது ஊழிவாயனுக்கு. படக்கென்று மூடிவிட்டு அடுத்த உருளையைத் திறந்தான்.

ஆம். அதே பெண். ஆனால் பசுமை நிறம். அந்த அறை அழகிய வசந்தகாலப் புல்தரைபோலத் தோன்றியது. "ஊழிவாயா, நீ வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொல்கிறேன். இந்த வையகம் புகழும்படி நீ மெச்சப்படும் நிலையை அடைவதற்கான வழிமுறை நான் அறிவேன். நீ அதைக் கேள்." மோகம் காணமல் போய்....காதல் கறைந்து போய்....ஆசை அற்றுப்போய்...ஆனால் நல்லது சொல்லும் திறம் மட்டுமே பேச்சில் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்காமல் உருளையை மூடிவிட்டு அடுத்த உருளைக்குச் சென்றான்.

மஞ்சள் பளபளக்க அதே பெண்ணின் முகம் மீண்டும் தோன்றியது. அந்த அறையே பொன்னறையாக மிளிர்ந்தது. அவள் பேசினாள். நல்ல பொன்மொழிகளைச் சொன்னாள். அவைகளைக் கேட்டும் மனநிலை அவனுக்கு இருக்கவில்லை. அடுத்த உருளைக்குச் சென்றான். இந்த முறை ஒளிர்காவி நிறம். பொன்மொழிகள் மறைந்து குரலில் சீற்றம் தெரிந்தது. "ஊழிவாயா...என்னை அடைத்து வைத்திருப்பது உனக்கு நல்லதைத் தராது. அழிவையே தரும். ஆகையால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னை விடுவிப்பாய்." அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் கதவை மூடிவிட்டு கடைசி உருளைக்குச் சென்றான்.

செக்கச் செவேல் என்ற ஒளி அறையை நிறைத்தது. குருதி பெருகிய போர்க்களத்தில் இருப்பது போல உணர்ந்தான் ஊழிவாயன். "மூடனே. என்னைப் பிடித்து வைத்திருப்பதனால் நீ உன்னுடைய இறுதி முடிவுக்கு அழைப்பிதழ் விடுத்திருக்கிறாய். வீணாய் மண்ணோடு மண்ணாகும் முன்னே என்னை விடுதலை செய்து பிழைத்துப் போவாய். இல்லையேல் உனது அறிவிழந்து ஆற்றலிழந்து....உனக்காக வேலை செய்யும் பூகன்களையும் பூகிகளையும் இழந்து குண்டரப் பறவைகளையும் கூம்புமலையையும் சுற்றியுள்ள ஏரியையும் இழந்து பிண்டமாகத் திரிவாய்."

தொடரும்....

அன்புடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்

Monday, January 14, 2008

தங்க மரம் - 1

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் அன்று இந்தப் புதிய தொடரை இடுகிறேன். இது காதல், ஆன்மீகம் என்றில்லாமல் விட்டலாச்சார்யா படம் போலச் செல்லும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரி கதைக்குப் போகலாம்.

---------------------------------------------------------

"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை உனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பொறுப்பை உன்னிடம் இந்த நாளில் ஒப்படைக்கச் சொன்னார்."

கதிரவனிடம் சொன்னது அவனது அன்னை அமுதம். பொறுப்பு என்று முதன்முதலாகக் கேட்டதும் திகைத்தான் மகன். "என்னம்மா பொறுப்பு? தந்தை எனக்கிட்ட கட்டளைதான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?"

அவனுடைய தலையைக் கோதியவர், கையைப் பிடித்து மச்சு வீட்டிற்குள் அழைத்துச் சென்றால். பட்டிக்காடுகளில் பெரிய வீடுகளில் மச்சு வீடு என்று உள்ளறை இருக்கும். உள்ளே முக்கியமான பொருட்கள் பல இருக்கும். கதிரவன் பலமுறை சென்ற அதே அறைதான். சுவற்றின் ஒரு பக்கம் மஞ்சளும் குங்குமமும் இட்ட வேல்கள். ஒரு பக்கம் பல பெட்டிகள். அவைகளுக்குள் மதிப்புள்ள பல பொருட்கள். ஒருபுறம் பெரிய குலுக்கை. அந்தக் குலுக்கை நிறைய கம்பு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மணம் மச்சுவீடு முழுவதும் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தை அனுபவித்தவாரே இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றிலிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்தார் அமுதம். அந்தப் பெட்டிக்குப் பூட்டே இல்லாமல் இருந்தது. பார்த்தால் எல்லாப்புறமும் மூடியிருந்தது போல இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ரம்பப்பல் போல வரிசையாகச் செதுக்கியிருந்தது. அதை மகனிடம் கொடுத்தார். "இந்தாப்பா. உன்னிடம் அவர் கொடுக்கச் சொன்ன பெட்டி."


பெட்டியை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். எப்படித் திறப்பதென்றே தெரியவில்லை. "என்னம்மா இது? இதை எப்படித் திறப்பதென்றே தெரியவில்லையே. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?"

மகனின் கேள்வியைக் கேட்டு சிறிதாகச் சிரித்தார். "கதிரவா, அது எனக்குத் தெரியாதே. உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இதைப் பொறுப்பு என்றுதான் சொன்னார். நீ அறிவுள்ளவனாக இருந்தால் இதைச் செய்து முடிப்பாய் என்று அவர் நம்புவதாகச் சொன்னார்."

கேட்கக் கேட்க கதிரவனின் படபடப்புக் கூடியது. "அம்மா....வணிகம் செய்யச் சென்ற தந்தை ஆண்டு பலவாகியும் நாடு திரும்பவில்லை. அப்படியிருக்க இது எப்பொழுதம்மா நடந்தது?"

கவலைப்பனி அமுதத்தின் முகத்தை மூடியது. "ம்ம்ம்ம்....என்னை மன்னித்து விடப்பா. வணிகம் சென்ற தந்தை திரும்பவில்லை என்று உன்னிடம் பொய் சொன்னேன். உன்னுடைய பாட்டனார் செங்கையார் ஒரு மருத்துவர். உயிர்தொடுச் செங்கையார் என்று ஊர் புகழ்ந்தது. அவர் தொட்ட இலை மூலிகை. மிதித்த வேர் சஞ்சீவி என்று சொல்வார்கள். அத்தோடு விவசாயமும் செய்து வந்த குடும்பம். அப்படியிருக்க உன்னுடைய தந்தை செங்கோமான் மட்டும் ஆனைகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். பெருஞ் செல்வந்தர்கள் வீடுகளிலும் அரண்மனைக் கொட்டடியிலும் இருக்கும் ஆனைகளோடு பழகினார்.

ஆனாலும் அவருக்கு மருத்துவப் பயிற்சியை உனது பாட்டனார் முறையாகக் குடுத்தார். பொருத்தமான சமயத்தில் என்னையும் திருமணம் செய்து வைத்தார். முருகன் அருளால் நீயும் பிறந்தாய். மருத்துவத்தில் உன் தந்தை சிறப்பாக தேர்ந்திருந்தாலும் ஆனைப் பழக்கம் அவரை விடவில்லை. அவரும் அவருடைய உற்ற தோழர் இளங்கோவும் ஆனைப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் கூட ஈடுபட்டிருந்தார்கள்."

இடைமறித்தான் மகன். "இளங்கோ என்றால் சித்திரையின் தந்தைதானே அம்மா?" சித்திரை என்பவன் கதிரவனின் தோழன். வயதொத்தவன்.

"ஆம். சித்திரையின் தந்தையேதான். இந்தப் பெட்டியை என்னிடம் கொடுக்கும் பொழுது உனக்கு வயது மூன்று. அப்பொழுது உன் தந்தை தோழருடன் ஆனை வணிகம் நடந்த களிற்றூருக்குச் சென்றார். அதாவது அப்படித்தான் ஊரிலும் வீட்டிலும் சொன்னார். என்னிடம் மட்டும் இந்தப் பெட்டியைக் கொடுத்து, ஏதோ கடமை இருப்பதாகவும் அதை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், எவ்வளவு நாளானாலும் மாதங்களானாலும் ஆண்டுகளானாலும் அவர் வருகைக்காக் காத்திருக்குமாறும் சொல்லிச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். இன்னும் வரவில்லை. இதைத்தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதப்பா. அவருக்காகவும் அவர் கொடுத்த பொறுப்பு உன்னால் முடிக்கப் படவும்தான் காத்திருக்கிறேன்." சொல்லும் பொழுதே விசும்பினார் அமுதம்.

தாயின் பழைய நினைவுகளைக் கண்ணீரில் காணச் சகிக்காத கதிரவன் அவரது கண்களைத் துடைத்தான். "வருந்தாதீர்கள் அம்மா. தந்தை கொடுத்த கடமையையும் நிறைவேற்றி...அப்பா எங்கிருந்தாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேனம்மா. நீங்கள் அழாதீர்கள். உங்கள் வருத்தம் என்னையும் துன்புறுத்துகிறதம்மா."

மகனின் உறுதிமொழி அவரின் உள்ளத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும். "கதிரவா, உன் மீது நம்பிக்கை இருக்கிறதப்பா. தாத்தா இருக்கும் வரை அவரிடம் மருத்துவமும் ஓரளவு கற்றிருக்கிறாய். பாட்டியும் நானும் கற்றுக் கொடுத்த உழவும் உனக்குத் தெரியும். ஊரில் அனைவரும் உன்னைப் புகழ்கின்றனர். நீ தந்தை கொடுத்த பொறுப்பைச் சிறப்பாக முடிப்பாய் என்று நம்புகிறேன். சரி...முதலில் உணவு. உனக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது."

பிறந்த நாளன்று நல்ல உணவு உண்டு திண்ணையில் வந்தமர்ந்தான். உண்ட சுவையுணவும் அணிந்திருந்த புது வேண்டியும் தோளில் போட்டிருந்த புதுத்துண்டும் அவனுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கவில்லை. தந்தை கொடுத்த பொறுப்பும் தாயார் கொடுத்த பெட்டியும் அவன் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு தோழன் சித்திரையைப் பார்க்கலாம் என்று குதித்துக் கிளம்பினான். சித்திரையிடம் அவனுக்கு இன்னொரு வியப்பான செய்தியை காத்துக் கொண்டிருந்தது.

தொடரும்....