Sunday, August 27, 2006

1. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ஒன்னு

வெயிலும் வெக்கையும் கொளுத்தும் ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமையிலே சென்னையிலே பல திட்டங்கள் போட்டு ஒன்றும் நடக்காமல் என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கக் கண்டார் ஜி.ரா என்று அன்போடு(!) நண்பர்களால் அழைக்கப்படும் கோ.இராகவன். அதாவது ஆகஸ்டு 20ம் தேதி.

காலையிலிருந்து பல வேலைகளில் மாட்டிக் கொண்டு ஜிரா பிழிந்து எடுக்கப் பட்ட கரும்பு போல இருந்த ஜி.ரா பைக்கை எடுத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் விரைய வேண்டியதாயிற்று. கூடவே படபடவென றெக்கையை அடித்துக் கொண்டு தோகையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயிலாரும் பறந்தார்.

ஒன்வே டூவேக்களிலெல்லாம் நுழைந்து திருப்பங்களில் நெளிந்து பன்றிமலைச் சித்தர் ஆசிரமம் வழியாகச் சென்று சடக்கென்று நுழைந்த இடம் Alliance Francaise. தமிழை விட ஃபிரெஞ்ச்சை ஒழுங்காகத் தமிழர்கள் பலர் உச்சரிக்கும் கலைவளர்க்கும் புண்ணிய பூமி அது. தீடீரென்று பாரீசுக்குள் நுழைந்தது போல இருந்தது என்று பொய் சொல்ல மனமில்லாததால் நேரடியாக சொல்ல வந்ததிற்கு வருகிறேன்.

போண்டாவும் பாசந்தியும் இல்லாமல் வலைப்பதிவர்கள் சந்திக்க முடியுமா என்று பட்டி மன்றம் வைக்க வேண்டியிதில்லை என்று நிருபிக்கவோ என்னவோ எஸ்.பாலபாரதியும், அருளும், ப்ரியனும், ஜி.ராவும் AF வாசலில் கூடினார்கள். கூடவே சாட்சியாக மயிலார்.

யார் யார் யார் என்று தெரியாமல் அரிமுகமாக இருக்காமல் படக்கென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆடு கிடைக்குப் போகும். இல்லையென்றால் பிரியாணியாக கடைக்குப் போகும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? இதில் மாபெரும் சதி இருக்கும் என்று எல்லாரும் நினைப்பதற்கு வாய்ப்பிருப்பதால் அப்படியே அனைவரும் நினைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பின் நவீனத்துவத்திலிருந்து எக்ஸிஸ்டென்ஷியலிசம் வழியாக மரபுக்கவிதைக் காவியங்களுக்குள் நுழையும் வழிமுறைகளைப் பற்றியெல்லாம் பேசத் தெரியாயதாலோ என்னவோ நேராக அனைவரும் டீ குடிக்கப் போனார்கள். டீ என்பது தமிழா என்று கேட்கும் அறிவு அதி ஜி.ராவுக்கு அந்நேரம் இல்லாததால் அனைவரும் நிம்மதியாக டீ குடித்தார்கள்.

இவர்கள் டீ குடித்த வேளையில் மயிலார் ஜி.ராவின் காதில் போய் "நேரமாச்சு. வர்ரியா...நான் போகட்டுமா? நீ வேணா இவங்க கிட்ட வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இரு" என்று மெதுவாகக் கேட்டது எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது. பாபா(அதாங்க பாலபாரதி)வும் அப்படியே சமாளித்துக் கொண்டு "ஓ! போலாமே...நேரமாச்சு" என்று சமாளித்தார். அந்த அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒழுங்காக வரவில்லை. ஆனாலும் கொடுக்கிறேன். யாரையாவது கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே எல்லார் கையிலும் நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு நுழைய இடம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் சிகப்பு நிற போஸ்டரைப் பார்த்துக் கொண்டே இரண்டு மாடிகளைத் தாண்டி அரங்கத்துக்குள் நுழைந்தோம். நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம். ஆனால் வசதியாக இருந்தது. மேலே ஏறியிருப்பது மேடை என்பதைப் பொய்யாக்கி மேடையை கீழே வைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்ப்பது போல ஒரு அமைப்பு.

ஆளாளுக்கு இருந்த இடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் அடித்துப் பிடித்து அமர்ந்தோம். குற்றம் காணின் அதை உரக்கச் சொல்வோம் என்பது போல "எனக்கு மறைக்குது...ஒனக்கு இடிக்குது" என்று குரலெழுப்பிக் கொண்டனர் சிலர். ஆனாலும் நாகரீகத்தில் உச்சியில் இருக்கும் நாம் மறைக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர் பலர். மயிலார் தோகையை நன்றாக விரித்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் மட்டும் யாரும் மறைக்கிறது தோகையை மடக்குங்கள் என்று சொல்லவேயில்லை.

சரி. என்னதான் நடக்கப் போகிறது. நாடகம்தான். வேறென்ன. உலகமே ஒரு நாடகமேடையாம். அப்படியானால் இது நாடகத்தில் நாடகமா? கதைக்குள் கதை மாதிரி.

தொடரும்....

(படம் போடுறதுல சின்ன பிரச்சனை....சாந்தரம் வீட்டுக்குப் போயி படத்தப் போடுறேன்)

Monday, August 14, 2006

சென்னையில் பரமார்த்த குரு

பரமார்ந்த குரு சென்னைக்கு வருகிறார். ஆம். வருகின்ற ஞாயிறு, அதாவது ஆகஸ்டு மாதம் 20ம் தேதி 2006ம் ஆண்டு.

ஆமாம். நம்புங்கள். தன்னுடைய சீடர்களோடு கும்மாளம் போட்டு நம்மையும் மகிழ்விக்க வருகிறார். அதுவும் இரண்டு முறை.

கூத்துப்பட்டறை எல்லாருக்கும் தெரியும். அவர்கள் பொன்னியின் செல்வனை மேடை வடிவமாக்கியவர்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருந்து கொண்டு இதெல்லாம் பத்திரிகையில் படிப்பதோடு முடிந்து போனது. அப்படியிருக்க இந்த மூன்று மாத சென்னைப் பயணத்தில் இரண்டு முறை மேடைக் கச்சேரியில் திரையிசை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறை பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியாது. இரண்டாம் முறை பி.சுசீலா அவர்களின் கச்சேரி. காமராஜர் அரங்கத்தில். அதுவும் முதல் வரிசையில்.

நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு landmark கடையில் வாயிலில்தான் பரமார்த்த குருவுக்கான விளம்பரத்தைக் கண்டேன். இந்தக் கடைகளுக்குள் செல்லும் முன் பைகளை வெளியே ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அங்குதான் அந்த விளம்பரம் கண்டேன். பரமார்த்த குரு நாடகத்தைக் கூத்துப் பட்டறையினர் அரங்கேற்றம் செய்யப் போவதை.

சிறுவயதில் பலமுறை படித்துப் படித்து ரசித்துக் கும்மாளமும் கும்மரிச்சமும் போட்ட பரமார்த்த குருவின் கதைகளை நாடக வடிவில் பார்க்கக் கிடைக்கிறது என்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

மாலை மூன்று முப்பதுக்கும் ஏழு முப்பதுக்கும் என இரண்டு அரங்கேற்றங்கள். Alliance Francieயில் நடக்கப் போகிறது. நூறு ரூபாய்க் கட்டணம். ஆனால் நல்ல தரமான பொழுதுபோக்காக இருக்கும் என நம்புகிறேன். அதைப் பார்த்ததுமே நானும் எனது நண்பனும் அங்கு செல்வதாக முடிவு செய்து விட்டோம். ஆனால் இன்னும் நுழைவுச் சீட்டு வாங்கவில்லை. ஏனென்றால் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான். விரைவில் முடிவு செய்து நாடகம் பார்ப்போம். பார்த்து விட்டு அது பற்றி பதிவும் போடுகிறேன்.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிதான் இந்தப் பதிவு. நீங்கள் யாராவது வருகிறீர்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

ஜெயராமனுக்கு அதிமேதாவியின் பதில்

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக என்பது மாதிரி உலக வலைப்பதிவுகளில் முதன் முறையாக இந்த மாதிரி ஜி.ரா போடும் முதல் பதிவு என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

வழக்கமாக ஒருவர் பின்னூட்டம் இட்டால் அதற்கான மறுமொழியைப் பின்னூட்டமாகவே இடுவது வழக்கம். விடாது கருப்பு என்னைக் குறிப்பிட்ட இனத்தின் அடிவருடி என்று எழுதிய பொழுதும் அந்தப் பதிவுக்குத் தொடர்பான கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிச் சென்றவன் நான். போலியின் அசிங்கமான பின்னூட்டங்களைக் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் நான் ஒரு பின்னூட்டத்திற்குப் பதிவு போட வேண்டிய நிலை. புரியாதவர்கள் இங்கே சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் ஜெயராமனின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். பிறகு இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

சண்டப் பிரச்சண்டன் பத்திரிகை நிருபர் பாராமுகம் ஜி.ராவைப் பேட்டி காண வருகிறார்.

பாரா : வணக்கம் ஜி.ரா. நல்லாயிருக்கீங்களா?

ஜி.ரா : நல்லாயிருக்கேங்க. நீங்க எப்படி?

பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.

ஜி.ரா : ஹா ஹா ஹா. சரி. சொல்லுங்க.

பாரா : இல்ல. ஒங்களுக்கு நல்ல வேல இருக்கான்னு....

ஜி.ரா : இருக்குன்னு நெனைக்கிறேன். ஓரளவு படிச்சிருக்கேன். ஓரளவு பிரபலமான நிறுவனத்துல ஓரளவு நல்ல பதவியில இருக்கேன்.

பாரா : அப்புறம் ஏன் சொல் ஒரு சொல்லுன்னு பதிவு போடுறீங்க? வேலைக்கு மத்த வேலையா?

ஜி.ரா : அது வந்துங்க.....தமிழ்ல எல்லாரும் பயன்படுத்திக்கிட்டிருந்த சொற்கள் பல இன்னைக்கு விலகிப் போயிருக்கு. அதையெல்லாம் திரும்ப மக்களுக்கு ஞாபகப் படுத்தத்தான்.

பாரா : ஆனா மத்த மொழியெல்லாம் மற்ற மொழிச் சொற்களை ஏத்துக்கிட்டு நல்லா ஓடுறதாகவும்...உங்களுக்கப் போன்ற அதிமேதாவிகள் தமிழை வளர விடாம ஓட விடாம பிடிச்சு வெச்சுக்கிறதாகவும் சொல்றாங்களே!

ஜி.ரா : அடடே! அப்படியா சொல்றாங்க! நான் அதிமேதாவீங்கறத இப்பவாச்சும் கண்டு பிடிச்சாங்களே. ரொம்ப நன்றி. இந்த சமயத்துல எல்லாரும் என்னை அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.

அப்புறம் இன்னொரு தகவல். எந்த மொழியும் தன்னிடத்தில் இல்லாதத அடுத்த மொழியில் இருந்து கடன் வாங்கலாம். தப்பில்லை. நேத்து மொளச்ச மொழிகள் எல்லாம் அப்படிச் செஞ்சுதான் வளந்திருக்கு. ஆனா நம்ம கிட்ட ஏற்கனவே இருக்குறத தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கக் கூடாது. நம்ம கிட்ட என்ன இருந்ததுங்குறதயும் என்ன இருக்குங்கறதயும் நினைவு படுத்திக்கிறதுலயும் தப்பில்ல. எங்க தாத்தா முன்சீப்பு. எங்க பெரிய தாத்தா பெரிய பாகவதர்னு பெருமை பேசுறது சுகமா இருக்குது. இது தப்பாப் படுதா? கோயில்ல புதுமையப் புகுத்தனும்னா மட்டும் பழைய சம்பிரதாயம்னு சொல்லி மாறக்கூடாதுன்னு சொல்றாங்க. நீதிமன்றத் தீர்ப்புன்னு சொல்லி கொண்டாடிக்கிறாங்க. மாத்தச் சொன்னா சண்டைக்கு வாராங்க. ஆனா தமிழ்ல இருக்குற பழைய சொல்லு மட்டும் மாறனுமா?

பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....

ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?

பாரா : விட்டா கீழ வுழுந்த வடம்பீங்க போல. நான் சொல்றது வடபழநீல இருக்குதே அந்த வட.

ஜி.ரா : வடபழநீல ஓட்டல் சரவணபவன் ரொம்பப் பிரபலம். கோயிலுக்குப் போனா அங்கயும் போகாம விடுறதில்ல. அங்க தயிர் வட கிடைக்கும். அதச் சொல்றீங்களா?

பாரா : ஐயொ! அதி ஜீ.ரா. நான் சொல்றது வடக்கு. வடக்கு.

ஜி.ரா : ஓ வடக்கு மொழியா....அதாவது சமஸ்கிருதம். அதுவும் ஒரு பழைய மொழி. நிறைய இலக்கியங்களும் இருக்கு. அதுக்கென்ன?

பாரா : அதில்லைன்னா தமிழ் இல்ல.....பல தமிழ்ச் சொற்கள் அதுலருந்துதான் வந்ததுன்னு சொல்றாங்களே.....அதப் பத்தி.

ஜி.ரா : சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இன்னைக்குப் புழக்கத்துல இருக்குங்கறது உண்மைதான். ஆனா அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. நாமளும் ஆமான்னு கேட்டுக்கனும் போல. மொத்தத்துல தமிழப் பலி குடுத்தாவது சமஸ்கிருதத்தைக் காப்பாத்தனுமா! பெரிய கொடுமையா இருக்கே!

பாரா : அப்ப தமிழர்கள் தமிழ்ல மட்டுந்தான் பேசனுங்கிறீங்களா?

ஜி.ரா : இதென்ன கொடுமையா இருக்கு. கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. தமிழில் பேசுறப்போ முடிஞ்ச வரைக்கும் தப்பில்லாம தமிழ்ல பேசனும். அடுத்த மொழிகளும் தெரிஞ்சிருக்கனும். அடுத்தவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி போது தேவைப்படுமில்லையா. அந்தந்த மொழியில சிறப்பா பேச முயற்சிக்கிறதுல தப்பில்ல. தமிழ்ல அப்படி இப்பிடி பேசுனா என்னன்னு பேசுறவங்க.....அடுத்தவங்களோட அடுத்த மொழியில பேசுறப்போ அத ரொம்பச் சரியா பேச முயற்சிப்பாங்க. அவ்வளவுதான்.

பாரா : அவ்வளவுதானா?

ஜி.ரா : இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.

பாரா : அப்ப என்னதான் முடிவு? நீங்க என்ன செய்யப் போறீங்க? நல்ல வேலையப் பாக்கப் போறீங்களா? இல்ல...

ஜி.ரா : எனக்கிருக்குற நல்ல வேலையப் பாக்கப் போறேன். அத்தோட சொல் ஒரு சொல்லுல இன்னும் நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன். வடமொழிச் சொல்லப் பயன்படுத்தனும்னு ரொம்பப் பேர் விரும்பும் போது தமிழ்ச் சொல்லப் பயன்படுத்தனும்னு எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.

பாரா : இதுக்கெல்லாம் ஒங்களுக்குத் தொணையா யாரு இருக்காங்க? வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?

ஜி.ரா : எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.

பாரா : அப்பச் சரி. எல்லாம் நல்லா நடக்கட்டும். நான் பொறப்படுறேன்.

ஜி.ரா : ரொம்ப நல்லது. பலகாரத்தச் சாப்பிட்டீங்க. சரி. பலகாரத் தட்ட வெச்சுட்டுப் போங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, August 13, 2006

5. லாலி லாலி லாலி லாலி

எஸ்.பி.பீ தொடர்ந்து சொன்னார். "சான்சுக்காக விஸ்வநாதன் சார் கிட்ட போனப்போ ஒடனே என்னைய ஏத்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சுதான் வாய்ப்பு குடுத்தாரு. ஏன்? நான் ஆந்திரா கொல்ட்டி. என்னோட தமிழ் சரியாயிருக்காது. அதுனாலதான் ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நல்லா படிச்சப்புறமா வாய்ப்பு கொடுத்தார். இந்த விஷயத்துல அவரு சார் ரொம்ப ஸ்டிரிக்ட். இந்தக் கண்டிப்பு எல்லா இசையமைப்பாளர் கிட்டயும் இருக்கனும்"

இந்தக் கருத்தை அனைவருமே வலியுறுத்தினார்கள். மெல்லிசை மன்னராகட்டும். பி.சுசீலாவாகட்டும். எஸ்.ஜானகியாகட்டும். மலேசியா, எஸ்.பி.பீ, மாணிக்க விநாயகமாகட்டும், பி.பீ.ஸ்ரீநிவாஸ் ஆகட்டும். அனைவரும் வலியுறுத்தியது பாடல்களில் முறையான தமிழ் உச்சரிப்பு.

உபசரணைகளும் இடைவேளையும் முடிந்த பின் ஜானகி அவர்கள் பாடத் துவங்கினார்கள். டிக் டிக் டிக் என்ற படத்தில் வரும் "இது ஒரு நிலாக் காலம்" பாடலைப் பாடினார். திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்). அதைத் தொடர்ந்து ஜெயப்ரதாவிற்காக ஏழைஜாதி படத்தில் பாடிய "அதோ அந்த நிதியோரம்" என்ற பாடலைப் பாடினார்.

ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் திரும்பத் திரும்ப மெட்டுப் போட்டும் திருப்தி இல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து நிறைவான ஒரு மெட்டுப் போட்டாராம். அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார். ஆம். நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.

என்னுடைய நண்பன் ஒருவன் வங்காளத்தைச் சேர்ந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய அலுவலகக் கணிணியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாட்டுக் கேட்காமல் வேலை செய்ததே இல்லை. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் அவனை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை வருகையில் மட்டும் அமைதியாக வேலைகளைப் போட்டு விட்டு பாட்டு கேட்பான். பாட்டு முடிந்த பிறகே வேலையைத் தொடர்வான். இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா. கூட்டம் அமைதியாக ரசித்தது. அந்தப் பாட்டு முடிந்ததும் நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருப்பதாக அறிவித்தார்கள்.

மனதோடு மழைக்காலம் என்று திரைப்படம் வெளிவரயிருக்கிறது. அதில் கார்த்திக்ராஜாவின் இசையில் கௌசிக் என்று ஒரு பாடகர் அறிமுகமாகிறார். அவரும் ஜானகியும் சேர்ந்து அடுத்து பாடலாக "அடி ஆத்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது" என்று பாடி நம்மைப் பறக்க வைத்தார்கள். புதுப்பாடகராக இருந்தாலும் கௌசிக்கின் குரல்வளம் சிறப்பாக இருந்தது. அவர் நன்றாக வரவேண்டும் என்று ஜானகி வாழ்த்தினார்.

அமைந்த பாடல் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட பாடகருக்கென்றே அமைந்த பாடலாக இருக்கும். வரம் தந்த சாமிக்கு பாடல் பி.சுசீலாவுக்கு அமைந்த பாடல் என்றே சொல்லலாம். அதே போல ஜானகிக்கு அமைந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னர் மெட்டமைத்து இசைஞானி இசைக்கருவி கோர்த்த அருமையான பாடல் அது. ஆம். "ஊரு சனம் தூங்கிருச்சே" என்ற பாடல்தான். ஜானகிக்கென்றே அமைந்த பாடல். மெல்லிசை மன்னரின் பிரத்யேக சங்கதிகள் அமைந்த அந்தப் பாடலை ஜானகி மிகவும் லகுவாகப் பாடினார். கூட்டம் மிகவும் ரசித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

இத்தனை பாடல்கள் பாடப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜெயராம் ஒரு மலையாளப் பாடலைக் கேட்டார். உடனே ஜானகி "கானக்குயிலே" என்ற மலையாளப் பாட்டின் சிறுபகுதியைப் பாடினார்.

"முத்துமணி மால...என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட....!" சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற பாடலை பி.சுசீலாவும் சங்கரும் இணைந்து பாடினார்கள். A.M.ராஜா-ஜிக்கி கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வரான சந்திரசேகருடன் இணைந்து அடுத்த பாடலாக "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற கல்யாணப் பரிசு பாடலைப் பாடினார் சுசீலா. தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".

அடுத்த பாட்டுக்கு அரங்கத்தில் அங்கெங்கு எழுந்து ஆடினார்கள். லலிலலிலலோ என்று தொடங்கிய ஜானகி மூச்சு விடச் சிரமப் பட்டார். உடனே மைக்கை விட்டு ஓடிச் சென்று மூச்சுமருந்து எடுத்துக் கொண்டு வந்து பாடலைத் தொடர்ந்தார். "மச்சானப் பாத்தீங்களா" பாடலைத்தான். இளையராஜாவிற்கு திரைவாழ்வு தந்த பாடல். ஜானகி அவர்களுக்கும் புகழைத் தந்த பாடல். எல்லோரும் இந்தப் பாடலை ரசித்தார்கள். பலர் விசிலடித்துக் கொண்டு ஆடினார்கள். மகிழ்ச்சியோடு பாடி முடிந்ததும் அதே பாடலைச் சோகமாகப் பாடினார் ஜானகி.

அடுத்து இன்னொரு இளையராஜா பாடல். ஆனால் இந்த முறை பி.சுசீலா. வைதேகி காத்திருந்தாள் படத்திலுள்ள "ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு" பாடலைப் பாடினார். முடிந்ததும் பாடகி மஹதி மேடையேறி இசைக்குயில்கள் இருவருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். திரையிசைத் திலகம் இசையில் பாடிய "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை அடுத்து பாடினார் பி.சுசீலா. நேரம் மிகவும் ஆகியிருந்தது. பத்தரை மணி. அடுத்த நாள் திங்கள். அலுவலகம் போக வேண்டிய அவசரம். நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம். மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, August 09, 2006

தாயா தாரமா - சிறுகதை

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.

நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.

ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.

கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.

மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.

சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.

வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.

அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.

"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.

அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"

இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!

ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?

ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.

வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.

அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 07, 2006

4. மெல்லிசை மன்னரும் ஆந்திரா கொல்ட்டியும்

"இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "கொஞ்ச நேரத்துக்கு நான் பி.சுசீலாவைக் காதலிக்கப் போறேன். ஆமா. இப்போ ஒரு டூயட் பாட்டு. டீ.எம்.எஸ் பாடியது. இப்ப அவருக்குப் பதிலா நான் பாடப் போறேன். பாடலாமா?"

கேட்டு விட்டு இசைக்குழுவிற்குச் சைகை காட்டினார். பாடல் தொடங்கியது. டொக் டொக் டொக் டொக்...குதிரைக் குளம்பு ஒலிக்க....ஜானகி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று தொடங்கினார். அதுவும் கனமான ஆண் குரலில். அரங்கம் ஸ்தம்பித்தது. ஆனால் ஜானகி படக்கென்று சிரித்து விட்டார். பிறகு சமாளித்துக் கொண்டார். பாடல் மீண்டும் முதலில் இருந்து தொடங்கியது.

பாட்டில் பி.சுசீலா "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடுகையில் ஜானகியைக் கை காட்டினார். புரிகிறது அல்லவா. இப்பிடிக் குறும்பு கொப்புளிக்கும் விளையாட்டுகளாக பாடல் நகர்ந்தது. பாடல் முடிந்ததும் "தேங்க் யூ வெரி மச்" என்று டீ.எம்.எஸ் சொல்வது போலச் சொல்லி முடித்தார் எஸ்.ஜானகி. எல்லாருக்கும் கை வலித்தது. ஆமாம். அந்த அளவு தட்டியிருக்கிறோம்.

பிறகு பேசிய ஜானகி இது புதிய முயற்சி என்றார். பிறகு கீழே அமர்ந்திருந்த பி.பீ.ஸ்ரீநிவாஸ் போலப் பாடப் போவதாகச் சொல்லி அவர் பாடிய "அனுபவம் புதுமை" பாடலைக் கொஞ்சம் பாடினார். அதற்கு ஸ்ரீநிவாஸ் அவர்களும் ஒன்ஸ்மோர் கேட்டார். அடுத்து எஸ்.பீ.பாலசுப்பிரமணியம் பாடிய பனிவிழும் மலர்வனம் பாடலை முயற்சித்தார்.

முதலில் நன்றாக இருந்த இந்தச் சோதனை பிறகு கொஞ்சம் சோதனையாக இருந்தது என்பது என் கருத்து. இப்படிச் சொல்வது ஜானகியின் குரல்வளத்தைக் குறை சொல்வதாகாது.

ஆனால் அந்தச் சோதனையைச் சாதனையாக்கும் வகையில் வந்தது அடுத்த பாடல். ஆமாம். பதினாறு வயதினிலே படத்தில் உள்ள "செந்தூரப் பூவே பாடல்". எஸ்.ஜானகி முதன்முதலாக தேசிய விருது பெற்ற பாடல். அந்தப் பாடலைத் தெலுங்கில் பாடியது பி.சுசீலா. "சிறுமல்லிப் பூவா...சிறுமல்லிப் பூவா" என்று தொடங்கும் அந்தப் பாடல். ஆனால் மேடையில் தமிழில் பி.சுசீலாவும் தெலுங்கில் எஸ்.ஜானகியும் பாடினார்கள்.

அதிலும் எப்படி ஒருவர் பல்லவி பாடி முடிப்பார். உடனே அடுத்தவர் பல்லவியைப் பாடுவார். அடுத்து அனுபல்லவி...இப்படி இருவரும் மாறிமாறி பாடுவார்கள். இசைக்கருவியாளர்களுக்குக் கடினமான வேலை. ஒரு இசைக்கோர்வையை வாசித்து விட்டு உடனே அதே கோர்வையை மீண்டும் வாசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு மொழி. ஒவ்வொரு குரல். ஆனாலும் மிகச்சிறப்பாக அமைந்தது இந்தப் பாடல். நிகழ்ச்சியிலேயே மிகச்சிறப்பாகக் கையாளப்பட்ட பாடல் என்று இதைச் சொல்லலாம். ராஜாவின் பார்வைக்குக் கிடைத்த வரவேற்பைப் போல இரண்டு மடங்கு வரவேற்பை இந்தப் பாடல் அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பாடல் முடிந்தது எஸ்.ஜானகி "மன்றத்தில் ஓடி வரும்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலை நினைவு கூர்ந்து சிறிது பாடினார். அதற்குள் இடைவேளை வந்தது. ஒவ்வொரு சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பி.பீ.ஸ்ரீநிவாஸ் முதலில் மைக்கைப் பிடித்தார். இரண்டு இசைமேதைகளையும் புகழ்ந்து அவர்களுடன் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்தார். இருவரையும் பாராட்டி ஒரு பெரிய குறுங்கவிதை எழுதி வந்து படித்தார்.

எஸ்.பி.பீ, மலேசியா வாசுதேவன், ஜெயராம், மாணிக்க விநாயகம் போன்றோர் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். அடுத்து மெல்லிசை மன்னர் மேடையேறினார். மேடையில் இருந்த அனைவரும் அவரது காலில் விழுந்தார்கள். முதலில் பி.சுசீலா. பின்னர் எஸ்.ஜானகி. பிறகு பி.பீ.எஸ். பிறகு எஸ்.பி.பீ. பிறகு மலேசியா. பிறகு மாணிக்க விநாயகம். பிறகு எல்லாரும் விழுந்தார்கள். ஒரு பெரிய பட்டுத் துண்டை சுசீலாவிற்கும் ஜானகிக்கும் சேர்த்துப் போர்த்தினார்.

மைக்கைக் கையில் பிடித்தார் மெல்லிசை மன்னர். "இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்தா எல்லாரும் என்னோட கால்ல விழுந்து என்னைக் கெழவனாக்கிறாங்க. எனக்கு வயசு 22தான். நான் கலைஞன் இல்லை. முதலில் ஒரு ரசிகன். என்னவோ என்னாலதான் இவங்களுக்கு நல்ல பேர் கெடச்சதுன்னு இங்க எல்லாரும் சொன்னாங்க. ஆனா அது உண்மையில்ல. இவங்கள்ளாம் நல்லாப் பாடி எனக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் உண்மை. பி.சுசீலாவும் சரி. எஸ்.ஜானகியும் சரி. இரண்டு பேருக்கும் தமிழ் உச்சரிப்பு ரொம்பச் சுத்தமா இருக்கும். அவர்களுடைய சாதனை மிகப் பெரியது" இப்படி வஞ்சனையில்லாமல் இருவரையும் மனமாரப் பாராட்டினார். பேசி முடித்ததும் மேடையை அடைத்துக் கொண்டிருக்காமல் படபடவென சுறுசுறுப்புடன் (இந்த வயதில்) கீழிறங்கினார்.

அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மைக்கைப் பிடித்தார். அவருடைய திரையுலகப் பயணம் தொடங்கவே இவர்கள் இருவரும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். ஒரு போட்டியில் பாடிய இவரை நடுவராக இருந்து ஊக்குவித்து திரைப்படத்திற்கு முயற்சிக்கச் சொன்னவர் எஸ்.ஜானகியாம். பின்னாளில் வாய்ப்புக் கிட்டியபின் தமிழில் (மெல்லிசை மன்னரின் இசையில்) முதல் பாடல் பி.சுசீலாவுடன். தெலுங்கில் பி.சுசீலாவுடன். கன்னடத்தில் பி.சுசீலாவுடன்.

தொடர்ந்து சொன்னார். "நான் ஆந்திரா கொல்ட்டி..............."

தொடரும்....

Thursday, August 03, 2006

3. எதுவும் சொல்லனுமான்னு கேட்டேன்

தேடினேன் வந்தது பாடலைச் சிறப்பாகப் பாடி முடித்ததுமே ஜானகி அவர்கள் எழுந்து வந்து பளார் என்று சுசீலாவின் கன்னத்தில் அறைந்தார்கள். சுசீலா மட்டுமல்ல மொத்த அரங்கமும் ஒரு நொடி அமைதியானது. உடனே மைக்கைப் பிடித்த ஜானகி, "படத்துல இந்தப் பாட்டு முடிஞ்சதும் சிவாஜி கே.ஆர்.விஜயாவை அறைவாரு. அதான் நானும் அது மாதிரி செஞ்சேன். இந்தப் பாட்டு என்னோட பையனுக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு"னு சொன்னாங்க. ஆகா! பொய்யடி அடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.

பி.சுசீலாவும் கிண்டலை விடவில்லை. "என்னடா அறைஞ்சிட்டாங்களே....வயசு காலத்துல தடுமாறி விழுந்துட்டேன்னா...இன்னும் நெறையா பாட்டு இருக்கே. யார் பாடுறதுன்னு பயந்துட்டேன்." என்று சொல்லிச் சிரித்தார்.

அரங்கமே ஒரு மெல்லிய நகைச்சுவையலையில் இருக்கும் பொழுது தொடர்ந்து சொன்னார். "ஜானகி அம்மா பையன் முரளி கிருஷ்ணா இந்தப் பாட்ட மொபைல்ல விரும்பிக் கேட்டார். அதான் பாடினேன்"னு உரிமையை உவப்போடு சொன்னார்.

சுசீலாம்மா என்னென்ன பாட்டுப் பாடுவாங்கன்னு கமலாவுக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனா இந்தப் பாட்டு அதுல இல்லையேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்தப் பாட்டு உள்ளே நுழைந்த விவரம் புரிந்தது.

இந்தச் சிறிய விளையாட்டுகள் அடங்கியதும் அடுத்து ஒரு மிகக்கடினமான பாடலைப் பாடினார் சுசீலா. மெல்லிசை மன்னரின் இசையில் கனமான ராகத்தின் அடிப்படையில் எக்கச்சக்க சங்கதிகளோடு உள்ள ஒரு இனிய பாடல். கவியரசர் எழுதிய தீந்தமிழ்ப் பாடல். கர்ணன் என்ற படத்தில் இடம் பெற்ற "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? கண்ட போதே சென்றன அங்கே!" என்ற பாடல்தான் அது. பாடலைக் கேட்க இங்கே சுட்டவும்.

இந்தப் பாடலில் வீணையொலி நிறைய வரும். மெல்லிசை மன்னரின் இசையில் இசைத்தட்டில் கேட்கும் பொழுது அது பிரம்மாண்டமாக இருக்கும். அந்த உணர்வை மேடையில் இசைக்கலைஞர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதகப் பறவைகள் குழுவை நடத்தி வரும் சங்கர் அடுத்த பாடலை ஜானகியோடு பாடினார். என்ன பாடல் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இளையராஜா இசை. வைரமுத்து பாடல். பாலு மகேந்திரா படம். அர்ச்சனா அந்தப் பாட்டில் நாயகி. இன்னும் எது சொன்னாலும் பட்டென்று சொல்லி விடுவீர்கள். ஆம். பானுச்சந்தர் கதாநாயகன். இப்பொழுது பாட்டு தெரிந்து விட்டதுதானே. எஸ்.பி.பாலசுப்பிரமனியமும் எஸ்.ஜானகியும் பாடிய "ஓ! வசந்த ராஜா! தேன் சுமந்த ரோஜா!" என்ற பாடல்தான். பாடல் வரிகளும் மிகச் சிறப்பு.

"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ கண்ணே!
சூடிய பூச்சரம் வானவில் தானோ"

நல்ல பாடல். ஜானகி பாடுவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. சங்கரும் முடிந்த அளவிற்குச் சிறப்பாக பாடினார். கூட்டத்தார் மிகவும் ரசித்தார்கள்.

ஒன்று சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்கி நெடு நேரம் ஆன பிறகும் நிறைய பேர் நேரம் கழித்து வந்து அங்கும் இங்கும் நகர்ந்து மறைத்து சத்தம் கொடுத்து தொந்தரவு கொடுத்தார்கள். இல்லாத இடத்திற்கு இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி தேடினார்கள். ஒரே தொந்தரவு. நடுநடுவில் செல்போனில் வேறு...."இது என்ன பாட்டு சொல்லு.....ஒனக்குப் பிடிக்குமே...ஹி ஹி ஹி" வேறு யார்? எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள். மயிலாருக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பிக் கொத்தியிருப்பார். ஆனால் பாட்டைக் கேட்பது கெட்டு விடுமோ என்று அமைதியாக இருந்தார்.

"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே" ஆம். அதுதான் ஜானகி பாடிய அடுத்த பாடல். இந்தப் பாட்டு ஜானகிக்காகவே. வேறு யார் பாடினாலும் சிறப்பாக இருக்காது என்பது என் கருத்து. அதை மீண்டும் நிரூபித்தார் ஜானகி.

இதற்குள் சிறப்பு விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், நடிகர் ஜெயராம், நடிகை அம்பிகா ஆகியோர் அந்த பொழுதில் வந்திருந்தார்கள். அவர்கள் மேடைக்கு முன்னால் அமர்த்தப்பட்டார்கள்.

இந்த அறிவுப்புகள் முடிந்ததும் பி.சுசீலா எழுந்து மைக் முன் நின்றார். எஸ்.ஜானகியும் எழுந்து சுசீலாவின் அருகில் வந்தார். "எதுவும் சொல்லனுமா?" என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டார். "இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்......

தொடரும்.....

(பி.கு சென்ற பதிவில் கண்ணன் வந்து பாடுகிறான் பாடல் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் என்று தவறாகச் சொல்லி விட்டேன். அது ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்)

2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்?

பிரபல திரையிசைப் பாடகி பி.சுசீலா பாடத் தொடங்குகிறார் என்ற பரபரப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று கவனிக்கவில்லை. பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நானும் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பினேன்.

நிகழ்ச்சியைத் துவக்கும் பாடல் அல்லவா. பிரம்மலோகத்துக் கலைவாணியை வாழ்த்திச் சென்னைக் கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடிய பாடல். "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி! தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா! பாட வந்தேன்! அம்மா பாட வந்தேன்!"

இந்தப் பாடல் திரைப்பாடல் அல்ல. பக்தியிசைப் பாடல். சோமு-காஜா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பிலுள்ள பாடல். எல்லாப் பாடல்களுமே இனியவை.

(பக்திப் பாடல் என்பதால் மயிலார் கொஞ்சம் ஓவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாப்கார்ன்களை நான் எடுத்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.)

எழுபது வயதைக் கடந்த சுசீலா அவர்களின் குரலில் சற்று அயர்வு இருந்தது உண்மைதான். ஆனால் இனிமையும் திறமையும் வளமையும் சிறிதும் குறையவில்லை. பாடலில் வரும் வீணையொலி இனிதா! சுசீலா அவர்களின் குரலொலி இனிதா! ஒன்றுக்கொன்று சரியான இணை.

முதல் பாடலை முடித்ததும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. (மயிலார் தோகை விரித்தாடினார்.) அடுத்த பாடலை ஜானகி அவர்கள் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த பாடலும் சுசீலா அவர்களே பாடினார்கள்.

தமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்தவர் பாரதி என்றால், அவருக்குப் பிறகு மெருகேற்றிச் சிறப்பித்தவர் பாரதிதாசன். அவருடைய கவிதை ஒன்றைத்தான் அடுத்து பாடினார். "தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!"

மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வந்த சுவை மிகுந்த பாடல். தன்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் தெலுங்கும் தனது இரு கண்கள் என்று கூறிய பாடகி அல்லவா.....ஆகையால் உணர்வு ததும்பப் பாடினார்கள். "தமிழ் எங்கள் அசதிக்கு" என்று பாடுகையில் குரலில் உண்மையிலேயே அசதி தெரிந்தது. அது வயதினாலா? இல்லை பாவத்தினாலா? ஆனால் "அசதிக்குச் சுடர் தந்த தேன்" என்று பாடுகையில் அந்த அசதியெல்லாம் போய் சுடர் எழுந்து அதை உணர்த்த அவருடைய கையும் எழுந்தது. பாடுகின்றவருக்குப் பாட்டு புரிந்தால்தானே இதெல்லாம் நடக்கும்!

பழைய பாடலானாலும் மக்கள் ரசித்து ருசித்தனர் என்பது அவர்களின் கைதட்டலொலியிலிருந்தே தெரிந்தது. இரண்டு இனிய பாடல்களை சுசீலா அவர்கள் பாடி முடித்ததும் பாட வந்தார் ஜானகி அவர்கள். அவரது முதல் பாடல் என்னவாக இருக்கும் என்பது எல்லாருடைய ஆவல். எனக்கும்தான். சிங்கார வேலனே தேவா பாடல் அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த பாடல். அந்தப் பாடலையோ அல்லது அதுபோன்ற வேறு பாடலையோ பாடுவார் என நினைத்தேன்.

ஆனால் பாடல் துவங்கியது. முதலில் இசைக்கருவிகள் இசைந்தன. கேட்டதுமே இளையராஜா இசை என்று தெரிந்து விட்டது. தெரிந்த பாடல் போல இருந்தது. "மாமனுக்குப் பரமக்குடி" பாட்டு மாதிரி இருந்தது. இதையா பாடப் போகிறார் என்று நினைக்கும் பொழுதே பாட்டு தெரிந்து போனது. ஜானகி அவர்களின் குரலும் எழுந்தது. "நான் வணங்குகிறேன்! இசையிலே தமிழிலே! நான் பாடும் பாடல் தேனானது! ரசிகனை அறிவேன்!" குரு படத்தில் இருந்து இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை நானும் ரசித்தேன். (மயிலார் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் மறைக்கிறார் என்று ஒருவர் கூட குற்றம் சொல்லவில்லை.)

அடுத்து ஒரு இனிய பாடல். மிகவும் இனிய பாடல். பாட்டு தொடங்கும் பொழுதே எல்லாருக்கும் பாட்டு தெரிந்து ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் எல்லாரையும் பற்றிக் கொண்டது. ஜானகியின் குரல் தொடங்கியதுமே பாட்டுக்குள் எல்லாரும் மூழ்கி விட்டார்கள். ஆமாம். "சின்னச் சின்ன வண்ணக் குயில்...கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா" என்று ஜானகி அவர்கள் குரலால் கொஞ்சும் பொழுது யார்தான் மயங்காமல் இருக்க முடியும்! பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இசைக்குழுவினர் செய்தார்கள்.

அடுத்து பி.சுசீலா வந்தார். ஜானகி உருவாக்கி வைத்திருந்த உணர்விலிருந்து மக்களை தன்னுடைய குரலுக்கு இழுக்க வேண்டும். என்ன பாட்டை தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு அழகிய இனிய பாடல். தூங்குகிறவர்களைக் கூட தென்றலாக வருடி எழுப்பும் பாடல். இசைஞானியின் இசையில் வெளிவந்த அதியற்புதமான பாடல். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" சுசீலாவின் குரலில் வெளி வந்தது. வைரமுத்து எழுதிய ஒரு அழகிய கவிதை. உயர்ந்த உள்ளம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். கூட்டம் சொக்கிப் போனது.

இப்படி எல்லாரையும் தென்றலாய் வருடிய பாடல் முடிந்ததும்...அடுத்த பாட்டு....சற்றுத் துள்ளலாக. இந்தப் பாட்டு இசை தொடங்கும் போதும் உடனே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் இயற்றிய மிகப் பிரபலமான பாடல். "பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!" தென்றலைக் காட்டிய குரலில் இப்பொழுது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன. எப்படித்தான் அடுத்தடுத்து வெவ்வேறு பாவத்தை படக்கென்று கொண்டு வந்துவிடுகிறார்களோ! அதுவும் இவ்வளவு திறமையுள்ள பாடகிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்?

(நல்லவேளையாக மயிலார் என்னைத் தொந்தரவு செய்யவேயில்லை. வழக்கமாக வெளியில் போனால் அது இது என்று தொந்தரவு செய்வார். ஆனால் இன்று ஒன்றும் கண்டுகொள்ளவேயில்லை)

அடுத்தது ஜானகியின் வரிசை. பாடி முடித்து விட்டு சிரமப் பரிகாரம் செய்வதற்காக உள்ளே சென்றார் பி.சுசீலா. படியில் ஏறுகையிலும் இறங்குகையிலும் சற்றுப் பிடிமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் பாடுவதற்கு அவருக்கு எந்தப் பிடிமானமும் தேவையிருக்கவில்லை.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புதுக்காலை" என்ற பாடல். படத்தில் இல்லை. ஆனால் இசைத்தட்டுகளில் உண்டு. அந்தப் பாட்டைத்தான் அடுத்து பாடினார் ஜானகி. அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்" என்ற பாடல். இரண்டும் மெல்லிசையில் மனதைக் கவர்ந்தனர்.

ஆளுக்கு இரண்டு பாடல்களாகப் பாடி வருகையில் சுசீலா அவர்களின் வரிசையில் அடுத்த பாடல் "தேடினேன் வந்தது!" மீண்டும் அரங்கத்தில் ஒரு துள்ளல். இந்தப் பாடலை சுசீலா பாடி முடித்ததும் ஜானகி எழுந்து வந்து சுசீலா அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். ஏன்?

தொடரும்....

Tuesday, August 01, 2006

1. ரெட்டைக் குரல் துப்பாக்கி

சென்னைக்கு மூன்று மாதங்கள் வேலை தொடர்பாக வந்ததுமே பாட்டுக்கச்சேரியும் நாடகமும் நிறைய பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இரண்டரை மாதங்கள் கழித்தே நிறைவேறியது. ஊரெல்லாம் போஸ்டர்கள். டீவியில் விளம்பரங்கள். நாளிதழ்களில் விளம்பரங்கள். அட! அதுதான் பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள் என்று. நேரு உள்விளையாட்டரங்கத்தில் கச்சேரியாம். அது எங்க இருக்கிறதென்றே தெரியாது...இந்த நிலையில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்குப் போய்...ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. அதாவது ஜூலை முப்பதாம் தேதி 2006. வெள்ளிக்கெழமை இரவு யாஹுவில் ஆன்லைனில் இருந்தப்போது ஒரு நண்பர் வந்து வணக்கம் சொன்னார். அவர் பெயர் கமலா. அவரிடம் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி ஆசையச் சொன்னேன். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிற மாதிரி அவங்க போகிறார்களா என்று கேட்டேன். முதலில் யோசித்தார்கள்....பிறகு சனிக்கிழமை எனக்கு விவரம் சொல்வதாகச் சொன்னார்கள். நானும் சரீயென்று இருந்து விட்டேன்.

சொன்னது போலவே சனிக்கிழமை என்னைக் கூப்பிட்டு நான்கு பாஸ்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த நான்கும் யார் கொடுத்ததென்று நினைக்கிறீர்கள்? நம்பித்தான் ஆக வேண்டும். இசையரசி பி.சுசீலா அவங்களே கொடுத்தது. பழம் நழுவிப் பாலில் விழுவது பழைய பழமொழி. செர்ரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அது நழுவி வாயில விழுந்ததென்று சொல்லலாம். இல்லையென்றால் கொஞ்சம் கிக்கோடு வேண்டுமென்றால் பியர் நழுவி கோப்பையில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரியென்று சொல்லலாம். அட...அவ்வளவு மகிழ்ச்சி!

ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து ஐந்து மணிக்கு நேராக நேரு உள்விளையாட்டரங்கம். அங்கு இன்னொரு நண்பரைக் கமலா அறிமுகம் செய்து வைத்தார்கள். அவருடைய தந்தை அந்தக் காலத்தைய பெரிய பாடகர். அவருடைய மகன்களில் இரண்டு பேர் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்கள். ஆமாம். திருச்சி லோகநாதன் அவர்களைத்தான் சொல்றேன். அவருடைய இளைய மகன்தான் நான் சந்திச்சது. அவருடைய அண்ணன்களான டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சினிமாவில் பாடியிருக்கிறார்களே!

நன்றாக மேடை மறைக்காத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. நிகழ்ச்சியை ஃபோட்டோ பிடிக்க ஆசை. பதிவு போடும் பொழுது அதையும் போடலாமென்றுதான். ஆனால் டிக்கெட்டில் காமிரா கொண்டு வரக்கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். அதனால் எதற்கு வம்பு என்று கொண்டு செல்லவில்லை. வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி அனுப்பினால் எங்கு போவது?

ஆச்சி மசாலா, தினத்தந்தி விளம்பரங்கள் எல்லாம் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு திரைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நேரமும்தான். ஆறு மணி ஆகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அரங்கமும் நிறைந்திருந்தது. அப்பொழுது மேடையில வேண்டிய லைட்டப் போட்டு வெளிச்சமாக்கினார்கள். அப்பாடா! நிகழ்ச்சி தொடங்கப் போகிறதென்று ஒரு மகிழ்ச்சி. அவசர அவசரமாக உட்கார இடம் தேடினார்கள்

சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனால் அவர்கள் அணிப்பாடலாக "எந்த்தரோ மகானுபாவுலு அந்தரிகீ வந்தனம்" பாடினார்கள். ஆனால் பின்னணி இசையைப் புதுமையாச் செய்திருந்தார்கள். அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா பாட்டுக்கு ரகுமான் செய்திருந்த மாதிரி. ஆனால் அலைபாயுதே வருவதற்கு முன்பே சாதகப் பறவைகள் இசைக்குழு இருக்கிறது.

தனது இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். பிறகு நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரை கொடுத்துட்டு, பிரபல பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியை அழைத்தார். எதற்கு? இரண்டு பெரிய பாடகிகளைப் பற்றி ஒரு பாடகி அறிமுகம் கொடுத்தால் எப்படி இருக்கும்! அதற்குத்தான்.

ஆனால் இவர்களுக்கு அறிமுகம் தேவையா? அந்தக் கேள்விதான் ஸ்ரீலேகா அவர்களும் கேட்டது. ஆகையால் சுருக்கமாக இருவரும் திரையுலகத்தில் நுழைந்ததைப் பற்றிச் சொன்னார். 1952ல் பெற்ற தாய் படத்தில் எதுக்கழைத்தாய் என்று தொடங்கும் பாடலைப் பாடி இசைப் பயணத்தைத் தொடங்கினாராம் பி.சுசீலா. எதுக்கழைத்தாயா? அவருடைய இனிய பாடல்கள் நமக்கெல்லாம் கிடைக்கத்தான். 1957ல் ஜானகி அவர்கள் இசைப்பயணத்தைத் தொடங்கினார்களாம். விதியின் விளையாட்டு என்ற படத்திற்காக. ஆமாம். விதியின் விளையாட்டுதான். ஜானகி அவர்கள் 57ல் அறிமுகமானாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பிரபலமானார்கள். அதுவரை இசைச் சிம்மாசனம் பி.சுசீலா அவர்களிடமே இருந்தது. அதுதான் விதியின் விளையாட்டு.

அறிமுகம் முடிந்ததும் இசைக்குயில்கள் இருவரும் இசையாரவாரத்தோடும் அதையமுக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடும் மேடையேறினார்கள். முதன் முதலாக மேடையில் பி.சுசீலா அவர்களைப் பார்க்கும் பரவசம் எனக்கு. என்னைப் போலவே பலருக்கு. அதே போல எஸ்.ஜானகி அவர்கள் ரசிகர்களும் பரவசமடைந்தார்கள்.

இருவரும் பணிவாக ரசிகர்களை வணங்கினார்கள். முதலில் எஸ்.ஜானகி அவர்கள் பி.சுசீலா அவர்களை மகாகுயில் என விளித்து அந்த மகாகுயிலோடு பாட வந்திருப்பது பெருமகிழ்ச்சி என்றார்கள். உடனே பி.சுசீலா தடுத்து இரண்டு மகாகுயில்கள் என்று திருத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, பி.சுசீலாதான் இசையரசி. அவருக்கு இணை என்று யாருமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது எனக்கு "இசையரசி எந்நாளும் நானே" என்ற பாடல் நினைவிற்கு வந்தது. இளையராஜா இசையில் தாய் மூகாம்பிகை படத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி. தெய்வமே வந்து பாடும். "இசையரசி எந்நாளும் நானே" என்று. அதை மறுத்துப் பாடுவார் ஒருத்தி. ஆனால் பாட்டில் வெற்றி பெற பாலில் மருந்து கொடுத்து தெய்வத்தை ஊமையாக்கி விட்டதாக நினைப்பார். ஆனால் தெய்வத்தின் அருளால் ஊமை பாடி "இசையரசி எந்நாளும் நீயே! உனக்கொரு இணையாராம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா?" என்று போட்டி முடியும். இந்தப் பாட்டில் தெய்வத்திற்குப் பி.சுசீலாவும் தெய்வ அருளால் குரல் பெற்ற பெண்ணிற்கு எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இன்றல்ல அன்றே பி.சுசீலாவை இசையரசி என்று எஸ்.ஜானகி புகழ்ந்திருக்கிறார்.

அடுத்து பேசினார் பி.சுசீலா. "ஜானகி பேசீட்டாங்க. நான் என்ன பேசுறது? நேரா பாட்டுக்கே போயிர்ரேன்" என்று தனது முதல் பாடலைத் துவங்கினார். அரங்கம் அமைதியானது. அந்த முதற் பாடல்?

தொடரும்....

Wednesday, July 26, 2006

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

வலைப்பூ நண்பர்களே! சென்ற பதிவில் அவசர உதவி தேவைப்படும் இதய சிகிச்சை மையம் பற்றிச் சொல்லியிருந்தேன். அதற்கு உதவி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியும் தகவல்களும் இதோ. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

ஹேமலதா அவர்களின் மின்னஞ்சல் முகவரியை (zeushema@yahoo.com) ஏற்கனவே கொடுத்திருந்தேன்.

நீங்கள் நேரடியாகத் திரு.மூர்த்தி(mdu_khggt@sancharnet.in) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய தகவல் இங்கே.
1. Name of the receiving bank : Canara Bank,
Gandhigram - 624 302,
Dindigul District,
Tamil Nadu State,
India.
2. Bank Code No. : 0967

3. Account Name : Gandhigram Trust

4. Account No. : SB a/c. No.43

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, July 21, 2006

அவசர உதவி தேவைப்படும் அவசர உதவி மையம்

ஒரு பிரபலமான ஜவுளித் தொழிலதிபர், சொத்துகள் நிறைய இருந்தும் அன்பான மனைவி மக்கள் இருந்தும் இறக்கும் பொழுது போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கொடுமையான நிகழ்ச்சியையும் அதன் விளைவாக நடந்த நல்ல நிகழ்ச்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.

மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?

இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.

கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.

அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.

சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.

நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.

ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.

இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே.

ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.

(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )

நன்றியுடன்,
கோ.இராகவன்

Monday, July 17, 2006

சென்னை - பிளாக் ஸ்பாட் - பி.எஸ்.என்.எல் - டமால்

சென்னையில் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வைத்திருக்கும் என்னாலும் இன்று மாலை முதல் பிளாக் ஸ்பாட் பிளாகுகளைப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏன் இப்படியொரு முடிவோ! இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.

வருத்தத்துடன்,
கோ.இராகவன்

சிதம்பர சர்ச்சையும் ஒரு மீள்பதிவும்

தில்லை எனப்படும் சிதம்பரம் பற்றி எழுதிய வரலாற்றுச் சிறுகதை. முன்பே இட்டது. இப்பொழுது படித்துப் பாருங்கள்.
பொற்சிலையும் சொற்குவையும்!

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, July 07, 2006

அறுவர் தந்த ஆறு இசையாறுகள்

சும்மாயிருக்காமல் குமரன் என்னையும் ஆறு பதிவில் இழுத்து விட்டு விட்டார். எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. ஒரு இசைப் பதிவு. இசை என்றாலே தமிழில் சினிமா இசை என்று ஆகி விட்டதே. எனக்குப் பிடித்த ஆறு பாடகர்களும் அவர்கள் பாடிய ஆறு பாடல்களும் சொல்லலாம் என இருக்கிறேன். இந்த ஆறுதான் பிடிக்குமென்று இல்லை. ஆனாலும் முடிந்த வரையில் சுவையான ஆறுகள். இன்னொரு விஷயம். இந்தப் பட்டியலால் இவர்கள்தான் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாரும் பாடத் தெரியாதவர்கள்னு சொல்லலை. எனக்குப் பிடிச்ச ஆறு. அவ்வளவுதான்.

இசையரசி பி.சுசீலா

1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு - புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் - உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்

இசைக்குயில் வாணி ஜெயராம்

1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ - தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா - அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
4. மலைராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து

இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி

1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் - வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு - நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
5. வாராயென் தோழி வாராயோ - பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
6. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர் (இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )

இசைவேந்தர் டீ.எம்.எஸ்

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. முத்தைத்தரு பத்தித் திருநகை - அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் - நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம், இசைஞானி, கவியரசர் (மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள். மனமயக்கும்.)
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா - நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர் (இன்னொரு அருமையான பாடல். வாணி ஜெயராமுடன் பாடியது)
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி

இன்னிசைக் குரலோன் ஜெயச்சந்திரன்

1. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள், மெல்லிசை மன்னர், கவியரசர் என நினைவு
2. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள், இசைஞானி, பாட்டு எழுதுனது யார்னு தெரியலையே!
3. கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால், இசைப்புயல், வைரமுத்து
4. கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி - கிழக்குச் சீமையிலே, இசைப்புயல், வைரமுத்து
5. பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள், மெல்லிசை மன்னர், கவியரசர் (ஜெயச்சந்திரன் அறிமுகமாகிய பாடல். மிகவும் இனியது.)
6. புல்லைக் கூடப் பாட வைத்த புல்லாங்குழல் - என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான், இசைஞானி, வாலியா?


சிறந்தவை ஆறு

இந்த ஆறும் பல பாடகர்களும் பாடி எனக்கு மிகவும் பிடித்தவைகளில் வரும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் நான் சுவைக்கும் இனிய பாடல்கள்.

1. அழகிய கண்ணே உறவுகள் நீயே - எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள், கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு - பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன், தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே - ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்

பாடல்களில் தேர்ந்தெடுத்துக் கேட்பதுதான் வழக்கம். இந்தத் தேர்ந்தெடுத்தலில் இப்பொழுது எண்ணிக்கைகள் குறுகிக்கொண்டே வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் வந்த புதிதில் அத்தனை கேசட்டுகளும் சீடீக்களும் வாங்குவேன். கொஞ்ச நாளாகவே இசை வட்டுகள் வாங்குவது மிக மிகக் குறைந்திருக்கிறது. டீவியில் வரும் ஒன்றிரண்டு பாடல்களள மிகவும் ரசிக்கிறேன். எ.டு பொய் சொல்லப் போறேன், ரகசியமானது காதல் மிக மிக....ஆனால் அந்தப் படத்தில் மற்ற பாடல்களை ரசிக்க முடியாததால் இசைவட்டு வாங்குவதில்லை.

ஆறு பேரக் கூப்பிடனுமா? ஏற்கனவே எல்லாரும் போட்டுட்டாங்க...நான் கட்டக் கடைசீல வந்திருக்கேன். யாராவது தங்களை இன்னும் யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறீங்களா? இதோ இராகவன் அழைக்கிறான் (இதெல்லாம் ஓவராத் தெரியல!) சரி. இதுவரை அழைக்கப் படாதா ஆறு நண்பர்கள் இதை அழைப்பா எடுத்துக்கிட்டு பதிவு போடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, July 01, 2006

வாணி ஜெயராமிடம் சில கேள்விகள்

coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எனக்கும் மிகவும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.

கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?

வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.

கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?

வாணி : மூனும் பிடிக்கும்.

கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....

வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.

கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?

வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?

நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, June 30, 2006

தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை

முன்பு எப்பொழுதாவது நடக்கும். இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. அதுவும் இலங்கையில் உள்நாட்டுச் சூழ்நிலை கவலைக்கிடமாக இருக்கும் பொழுது.

இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ!

என்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.

Friday, June 23, 2006

சிறிய விபத்து

நண்பர்களே. இன்று மாலை அலுவலத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் சிறிய விபத்து. குண்டும் குழியுமான சாலையில் பைக் சறுக்கித் தடுமாறி விழுந்து விட்டேன். பெரிய அடி அதுவுமில்லை. அணிந்திருந்த ஹெல்மெட் தன்னுடைய கடமையை மிகச்சரியாகச் செய்தது என்றால் மிகையில்லை. வலது தோள்ப்பட்டையில் வலி இருக்கிறது. எலும்பு முறிவு இல்லை.ஆனாலும் ஏதோ தசை முறிவு இருக்கலாம் என்று கருதி தொட்டில் கட்டியிருக்கிறார்கள். ரெண்டு மூனு வாரம் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பகிர்ந்து கொண்டேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, June 21, 2006

மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்

"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே!!!!" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.

அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.

திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.

"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா? அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..

ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.

"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"

"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"

நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.

அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"

"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே

"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.

"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.

"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"

இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."

"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.

எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.

அதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.


பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.

அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.

"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.

"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, June 11, 2006

பராசக்தி படத்துக்கு தடை

(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)

தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.

இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.

தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.

ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.

இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.

இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.

இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.

இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.

கிண்டலுடன்,
கோ.இராகவன்

Friday, June 09, 2006

14. தூத்துக்குடி வழியா பெங்களூர்

திருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி. வழியில ஆறுமுகநேரியும் உண்டு. அதுதான் வலைப்பூ தாணு பொறந்த ஊர். அதச் சொல்லலைன்னா அவங்க கோவிச்சுக்குவாங்களே.

வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.

வெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.

அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.

அங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...

மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.

பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!

அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."

அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.

முற்றும்.

Sunday, June 04, 2006

13. எனக்கும் ஒரு கனவு உண்டு

மயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.

கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.

முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?

கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.

போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?

அப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க?

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.

இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.

ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.

இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.

சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 01, 2006

12. கடற்கரை தாகம் இதுதான்

திருநெல்வேலீல இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். எட்டேகால் இருக்கும். மணி ஐயர் ஓட்டல்ல ரூம் போட்டோம். ஓரளவுக்கு நல்லாவே இருந்துச்சு. காலைல இருந்து கசகசன்னு அலஞ்சதால குளியல் போட்டோம். அப்படியே கீழ வந்து ராச்சாப்பாட்டை முடிச்சோம். மணி ஐயர் ஓட்டல் நல்லாவே இருக்கும். தரமாவும் இருக்கும். மத்த சில ஓட்டல்களும் சுமாரா இருக்கும். அசோக் பவன்னு ஒரு ஓட்டல். அதுவும் சுமாரா இருக்கும். ஆனா பலகைல பேர் எழுதும் போது அசோக்குன்னு தமிழ்ல எழுதீட்டு இங்கிலீஷ்ல ASSHOK-ன்னு எழுதீருந்தாங்க. :-) அதையும் ஒரு படம் பிடிச்சிக்கிட்டோம். (அடுத்த நாள் காலைலதான்.)

ராச்சாப்பாடு முடிஞ்சதும் கோயிலச் சுத்தீட்டு கடலுக்குப் போனோம். திருச்செந்தூரின் கடலோரத்தின் கதையில சொல்லீருக்குற மாதிரி நேரா சின்னப்பத்தேவர் சுத்து மண்டபத்துல நொழைஞ்சி சுக்குத்தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு நடந்தோம். வழியில ரெண்டு ஆட்டுக்குட்டிங்க படுத்திருந்தது. கடக்காத்துக்கு ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு. அந்தப் பாசக் காட்சி என்ன என்னவோ பண்ணிச்சி. அந்தப் பாசத்தைப் பிடிக்க முடியாது. ஆனா படத்தைப் பிடிக்கலாம். அதுனால ஒரு படம் எடுத்துக்கிட்டோம்.

நேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து "இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.

அங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.

இதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.

மேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.

தனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.

திருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.

நாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.

நானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.

தொடரும்.

Monday, May 29, 2006

11. பட்டுச் சேலைக் காத்தாட

திருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.

அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.

சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.

மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.

ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.

வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.

இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!

காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.

ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.

முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.

திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 28, 2006

10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்

ஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.

ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.

அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.

சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.

கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.

கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.

கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.

"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.

இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"

நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"

இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.

ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.

அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.

அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 21, 2006

9. கோமதி செஞ்ச சேட்டை

சங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.

அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.

இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.

கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.

மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.

அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.

மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.

அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.

அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.

கோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.

அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.

ஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.

கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.

கோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?

தொடரும்.....

அன்புடன்,
கோ.இராகவன்